Normal view

Received before yesterday

Annie Ernaux மற்றும் அக்னிபிரவேசம்

அன்னி எர்னோ 2022-இல் நோபல் பரிசு வென்றவர். ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். இன்னும் படிக்க கைவரவில்லை.

அக்னிபிரவேசம் பதிவைப் படித்த பிறகு நண்பர் அமர்நாத் அன்னி எர்னோவுக்கும் அக்னிபிரவேசத்துக்கும் ஒரு சுவாரசியமான முடிச்சு போட்டிருக்கிறார். அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அமர்நாத், உங்கள் புகைப்படம் ஒன்று அனுப்புங்கள்!

அமர்நாத் தன் வாசிப்பு அனுபவங்களை விளக்குகிறார்…

பதின்பருவத்தின் முன்பாதியில் அகிலன், மு. வரதராசன் இருவரின் பல புதினங்களை வாசித்தேன். முன்னவரின் ‘பாவை விளக்கு‘, பின்னவரின் ‘அகல் விளக்கு‘, அவர்களின் பிற நாவல்களில் இருந்து தனித்து நின்றன. காரணம் பிறகு தெரிய வந்தது. இரண்டும் ஆசிரியர்களின் சுயசரிதைக் கதைகள். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் பிரபலமாக இருந்த சாமர்செட் மாம் மற்றும் ஏ. ஜே. க்ரானின் அவர்களின் படைப்புகளில் ‘Of Human Bondage‘, ‘Citadel‘ இரண்டும் மனதில் தங்கின. அவையும் கதாசிரியர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டவை.

பல படைப்பாளிகள் ஆரம்பக் காலத்திலோ, தங்கள் பெயரை நிலைநாட்டிய பிறகோ சுயசரிதை நாவல்கள் எழுதி இருக்கிறார்கள். அவை வாசகர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானவையாக இருந்தால் வியப்பதற்கு இல்லை.

மற்ற இலக்கியங்களைப் போல சுயசரிதை நாவலுக்கு இலக்கணம் என்று ஒன்றும் கிடையாது. சொல்லப் போனால் கதாசிரியரின் சொந்த எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகள் பல கதைகளில் பல அளவுகளில் விரவி இருக்கும். என்னைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் கதையின் பிரதான பாத்திரத்திற்கு படைப்பாளியின் குணநலன்களில் பாதிக்கு மேல் இருந்தால் அதை அவ்வகையில் சேர்க்கலாம். அதற்காக கதையின் எல்லா நிகழ்வுகளும் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவை என்று அர்த்தமல்ல.

நிஜமான சுயசரிதைக்கும் சுயசரிதைப் புதினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மறுபடி க்ரானின். Citadel கதையின் நாயகன் ஆன்ட்ரூ மான்சன் க்ரானினைப் போலவே ஒரு மருத்துவன். நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய ஊருக்குப் பணி புரிய வருகிறான். சுரங்கத்தின் கரித்தூளை சுவாசிப்பதால் தொழிலாளர்களுக்கு ‘கறுப்பு நுரையீரல்’ (Black lung) நோய் வருவதாகக் காட்டுகிறான். இவை க்ரானின் வாழ்வில் நிகழ்ந்தவை. மற்ற விவரங்கள் கற்பனை. மருத்துவம் மற்றும் எழுத்துத் தொழில் என்று இரண்டு துறைகளில் அவருடைய சொந்த அனுபவங்களை ‘Adventure in Two Worlds‘ என்று எழுதியிருக்கிறார். அது சுயசரிதை. அதில் அவருடன் சேர்ந்து சிரிக்கலாம், கவலைப்படலாம், பெருமிதப்படலாம், ஆனந்த அதிர்ச்சி அடையலாம்.

அன்னி எர்னோவின் கதைகள் இரண்டிற்கும் இடையில். சுயசரிதை போல நிகழ்ந்த சம்பவங்கள். புதினம் போல அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய நினைவலைகள். அதற்காக அவருக்கு நோபல் பரிசு தரப்பட்டு இருக்கிறது. வாசகருக்கும் எழுத்தாளருக்கும் நடுவே எந்தத் திரையும் இல்லை. வாசிக்கும்போது எழுத்தாளரைத் தொட்டுக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்கலாம். எதுவும் மறைக்கப்படாமல் எல்லா பலவீனங்களும் வெளிப்படுகின்றன. பல நாவல்களைப் படித்ததும் அவரை உறவு கொண்டாடலாம். அந்த இலக்கிய வகையில் எழுத விரும்பும் இளம் கலைஞர்களுக்கு அவர் புத்தகங்கள் நல்ல வழிகாட்டி. அப்படி எழுதுகிற அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சுவையான, அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் நடக்கட்டும்!

எதிர்பாராத பனிப்பொழிவால் கிளம்பாத விமானத்தில் எட்டு மணி அடைபட்டுக் கிடந்தது போன்ற வாழ்க்கையின் பல நிகழ்வுகளையும், என் கற்பனைப் பிறவி சாமிநாதனை(அவன் வாழ்க்கைத் துணைவி சரவணப்ரியாவை)யும் கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன். (மிகச் சில சிறுகதைகளைத் தவிர பிற எல்லா சிறுகதைகள் நெடுங்கதைகளில் அவன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கட்டியங்காரன், இல்லை சௌகரியத்துக்காக ஒரு சில காட்சிகளில் வந்து போகும் கௌரவ நடிகன், அவ்வளவே.) ஆனாலும், எனக்கு அன்னி எர்னோவின் எழுத்து சுவைக்கவில்லை.

ஒன்று. நம் ஞாபகசக்தி கணினியின் நினைவுத் திறன் போல நிச்சயமானது அல்ல. அதை நம்ப முடியாது. உளவியலில் சொல்லப்படும் ‘Flashbulb Memory’யே ஆனாலும் காலப்போக்கில் அந்த நிகழ்வின் பிம்பம் நினைவில் மெல்ல அழிகிறது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை மனக்கண்ணில் கொண்டுவரும்போது அதன் ஒரு பங்குதான் நிஜம். மீதி மூளை அதில் சேர்த்த சொந்தச் சரக்கு. அப்படி இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து வாசிப்பதில் சுவை சேர்த்தால் என்ன?

இரண்டு. நேரில் பார்த்த சம்பவங்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதால், “அலை ஓசை” மற்றும் “Grapes of Wrath” போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதை நிஜமாகவே நடந்திருக்குமோ, அதன் மாந்தர்கள் நிஜமான மனிதர்களோ என்ற பிரமை உண்டாகிறது. அவற்றைக் கதைச் சரித்திரம் என்று வகைப்படுத்துவது என் வழக்கம். அன்னி எர்னோவின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல.

மூன்று. ஏற்கனவே தெரிந்த வேதியியல் வினைகளைப் பயன்படுத்தி பல புதிய ரசாயனப் பொருட்களை நான் தயாரித்து இருக்கிறேன். அவற்றில் சில மருந்துகளாகப் பயன்படலாம். அது போல நடைமுறை சம்பவங்களைப் புதிய இழைகளில் கோர்த்து புதிய துணி நெய்வது (new synthesis) சாதனை. கதாசிரியர் தன்னுடைய பழைய குப்பையைக் கிளறுவதால் யாருக்கு என்ன லாபம்?

நான்கு. எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் சலவைக் குறிப்பில் மட்டுமல்ல அவருடைய தலை தீபாவளியிலும் அக்கறை இல்லை. பின்னதின் அடிப்படையில் ஆத்மாவையும் நித்யாவையும் வைத்து ஒரு விஞ்ஞானக்கதை எழுதினால் (எழுதி இருக்கிறார்) அதை நிச்சயம் வாசிப்பேன். நல்ல கதையின் இலக்கணங்களில் ஒன்று: காமராவின் கோணத்தில் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைந்து இருக்க வேண்டும். வாசிக்கும்போது யார் எழுதியதாக இருந்தால் என்ன என்கிற எண்ணத்தைத் தர வேண்டும்.

ஒரு இளம்பெண்ணின் கதை” (A Girl’s Story) ஜெயகாந்தனின் அக்னிபிரவேசம் கதையை நினைவூட்டுகிறது. அச்சிறுகதையின் முடிவு வேறு விதமாக இருந்து அதை சில ஆண்டுகள் கழித்து அவள் திரும்பிப் பார்த்தால்? “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஜெயகாந்தன் அதைச் செய்திருக்கிறார். கதையில் நாம் சந்திப்பது ஜெயகாந்தனின் கங்கா. திரும்பிப் பார்த்த நிஜமான கங்கா தன் உணர்ச்சிகளையும் தாக்கத்தையும் எழுத்தில் பதித்திருந்தால் “ஒரு இளம்பெண்ணின் கதை” போல இருந்திருக்கும். எனக்கு “சில நேரங்களில்”தான் பிடித்திருக்கிறது.

அமர்நாத் சொல்வதைப் போல இந்தச் சிறுகதையும் அன்னி எர்னோவின் இளமைப்பருவ நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாம். அவர் லண்டனின் குழந்தைகளை, வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக (Au Pair) பணியாற்றி இருக்கிறார், அதுதான் இந்தச் சிறுகதைக்கு மூலமாம். 1958-இல் கன்னித்தன்மையை மேலை உலகில் இழப்பவளை தன்மானம் இல்லாத கோழை, ஊரார் வம்புப்பேச்சுக்கு தீனி என்றெல்லாம் விவரிப்பது ஆச்சரியப்படுத்தியது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டன என்று நினைத்திருந்தேன்…

அமர்நாத் உங்கள் சிறுகதைகள் ஏதாவது இணையத்தில் கிடைக்கிறதா?

ஓவர் டு அன்னி எர்னோ மற்றும் அமர்நாத்!


ஒரு இளம்பெண்ணின் கதை

அன்னி எர்னோ

  • Ernaux, Annie: A Girl’s Story, 2016
  • English translation: Alison L. Strayer
  • Seven Stories Press, 140 Watts Street, New York, NY 10013

ஒரு சிலருக்கு மற்றவர்களின் அட்டகாசப் பேச்சு, சிகரெட்டைப் பற்ற வைக்கும் அலட்சியம், கால்களை மடக்கி நிற்கும் கம்பீரம் – இவையெல்லாம் பிரமிப்பைக் கொடுக்கும். அப்போது கிணற்றில் விழுந்துவிட்டாற்போல் உடல் கூனிக் குறுகும். ஒரு நாள், சரியாகச் சொன்னால் ஓர் இரவு, யாரோ ஒருவரின் விருப்பத்துக்கு ஆளுமைக்கு அடிபணிகிறார்கள். தங்களைப் பற்றி அவர்கள் அது வரை நினைத்த எண்ணங்கள் காணாமல் போகின்றன. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இனம் தெரியாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் கரைந்துவிடுகிறார்கள். இழுத்துப் போகும் அந்த மற்றவரின் அடிச்சுவட்டில் கால் வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

அவர்களின் சம்மதத்திற்கோ வார்த்தைக்கோ அப்போது இடம் இல்லை. “எனக்கா இப்படி நிகழ்கிறது?”,  “நானா இப்படிச் செய்கிறேன்?” என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்படலாம். ஆனால் ‘நான்’,  ‘எனக்கு’ இரண்டும் எப்போதோ காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதில் அங்கே ‘அவன்’,  ‘அவனுக்கு’, ‘அவனுக்காக’.

காரியம் முடிந்து அவளை எறிந்துவிட்டு அவன் அகன்றதும் கறை படிந்த உள்ளாடையில் யதார்த்தம். அவன் அவளுக்காக ஒதுக்கிய நேரம் அவ்வளவுதான். ஆனால், அவள் கதை முடியவில்லை. ஏற்கனவே பலவீனமான அவள் இப்போது மற்றவர்களுக்குத் தடை சொல்லாமல் பணிந்து போகும் தன்மானம் இழந்த கோழை. அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு, வெறும் வாய்க்குத் தீனி. இன்னொரு தடவை இன்னொரு தடவை என்று உடலின் ஏக்கம். திரும்ப அவளைத் தேடி வருவான் என்றொரு அசட்டு நம்பிக்கை. இவைதான் அவளுக்கு மிச்சம்.

1958-ஆம் ஆண்டின் கோடை காலம்.

ஃப்ரான்ஸில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பிரமாதமாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டி கால் பதவிக்கு வந்தார். சார்லி கால் டூர் டி ஃப்ரான்ஸ் ஜெயித்தார். டலிடாவின் ‘எ லவ் ஸ்டோரி’ வெளிவந்தது. இருபத்திஐந்து வயது வரை கோடை ஒரு நீண்ட காலம். பிறகு அது சுருங்கி வேகமாக ஓடி நினைவுகளில் மங்கிக் கடைசியில் மனதில் தங்குவது வறட்சியும் பொசுக்கும் சூடும்தான்.

முந்தைய ஆண்டுகள் போல பணக்காரக் குழந்தைகள் சோம்பேறித்தனமாக நாட்களைக் கழிக்க பெற்றோர்களுடன் ஃப்ரெஞ்ச் ரிவியெராவுக்குப் போனார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அரசாங்க மற்றும் தனியார் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்கள் அரைகுறை ஆங்கிலத்தை ரிப்பேர் செய்ய சான்னலைக் கடந்தார்கள். கையில் பணம் இல்லாத கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டின் பல இடங்களில் குழந்தைகளை மேய்க்கும் வேலை. கிளம்புவதற்கு முன் இளம்பெண்கள் ஞாபகமாக மகளிர் துண்டுகளைக் கையோடு எடுத்துக்கொண்டபோது முதல் காதல் அனுபவத்தை எதிர்பார்க்கும் ஆவல், அச்சம்.

அந்தக் கோடையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்டார்கள். திரும்பி வந்தவர்களுக்கு வீட்டுச் சுழலுடன் ஒத்துப் போக பல காலம் பிடிக்கும்.

இளம் அன்னியின் புகைப்படம் இப்போது இல்லை.

அவள் கோடை முகாமில் இருந்தபோது பதினெட்டாம் பிறந்த நாள் வந்தது. அப்போது படம் எடுக்க ஏன் யாருக்கும் தோன்றவில்லை? பார்ப்பதற்கு சுமாராக, ஃபோனோக்ராஃபும் அதில் இசைக்க தட்டுகளும் கொண்டு வராத ஏழை என்பதால் அலட்சியம். அவளைப் போல அந்த முகாமுக்கு வந்த மற்ற கௌன்சிலர்கள் யாராவது அவளை இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்களா? சந்தேகம்தான்.

செப்டெம்பர் கடைசியில் முகாம் கலைக்கப்பட்டு எல்லாரும் தங்கள் இடத்துக்குத் திரும்பியதும் அவளை முற்றிலும் மறந்து போய் இருப்பார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டதில் வந்த வருமானம் அடுத்த ஆண்டுக்கு என்கிற மனக் கணக்கில் அவளைக் கேலி செய்தது எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது?

இக்காட்சியை நேரில் காண்பது போல் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆகஸ்ட் பதினான்காம் தேதி பிற்பகல் ஆரம்பத்தில் அன்னி ரயிலில் இருந்து இறங்குகிறாள். கூந்தலை உயரத் தூக்கி முடிந்திருக்கிறாள். இடுப்புடன் ஒட்டிய ட்வீட் ஸ்கர்ட்டும் கம்பிளி அங்கியும் இரண்டு வருஷப் பழையவை. மேலே ஒரு நீல கோட். அவள் கையில் சாம்பல் நிறப் பெட்டி – ஆறு ஆண்டுகளுக்கு முன் அவள் தந்தையுடன் லூர்டு போனபோது வாங்கி பிறகு உபயோகப்படுத்தாதது. நீலமும் வெள்ளையும் கலந்த பிளாஸ்டிக் பை ஒரு வாரம் முந்தி வாங்கியது.

பயணம் முழுக்க ரயில் பெட்டியின் ஜன்னல்களில் சாரல் அடித்த மழை. அது நின்று சூரியனின் வருகையால் அங்கியிலும் ஸ்கர்ட்டிலும் அவளுக்கு சூடாக இருக்கிறது. தடியான துணிகளில் கையால் தைத்த கிழியாத ஆடைகளால், நாட்டுப்புறத்தில் இருந்து வந்த மத்தியக் குடும்பப் பெண்ணின் தோற்றம். உயரமான அவளை ஒட்டி நடுவயதைத் தாண்டிய கட்டை குட்டையான பெண். மரியாதையையும் பயத்தையும் தோற்றுவிக்கும் முகம். இறுக்கப் படிய வைத்த இளம் பழுப்பு தலைமயிர். ஆதங்கம், சந்தேகம், அதிருப்தி எல்லாம் கலந்த உணர்ச்சி. பெண்ணைக் கட்டுக்குள் வைத்திருக்கும் லகான் பார்வை.

அக்கணத்தில் அன்னியின் மனநிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. அவளுக்குப் பக்கத்தில் அவள் தாய் காவலாக நிற்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற அச்சம். அவள் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. முகாமின் பொறுப்புள்ள கௌன்சிலரை அதற்கு வரும் சின்னக் குழந்தையைப் போல அழைத்து வந்திருக்கிறாள். அவள் அக்கணமே அங்கிருந்து நழுவி வந்த வழியே ரயிலில் திரும்பிப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

முகாமுக்கு அழைத்துப் போகும் வேனின் டிரைவர் ஸ்டேஷன் ஓரத்தில் நிற்கிறான். அம்மாவுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்துவிட்டு, அவள் பின் தொடர்ந்து வருவாளோ என்கிற பயத்தில் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக ஓடி அன்னி வண்டியில் ஏறிக்கொள்கிறாள். பயணத்தினால் பௌடர் கலைந்த அம்மாவின் முகத்தில் மகள் காட்டும் அலட்சியத்தால் கசப்பு. அன்னிக்கு அக்கறை இல்லை. திரும்பிப் போக சரியான ரயில் இல்லாததால் அவள் தாய் விடுதியில் ஓர் இரவு தங்கினாள் என்று பிறகு தெரிய வந்தது. நன்றாக வேண்டும், அவளைத் தனியாகப் பயணம் செய்ய விடாததற்குத் தண்டனை.

பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முதல் தடவையாக அன்னி வெளியே வந்திருக்கிறாள். கூட்டில் இருந்து பறந்த பறவைக் குஞ்சு. தளை அவிழ்த்துவிட்ட பெண் குதிரைக் குட்டி. அங்கே வரும் வரை வீடு, செய்ன்ட்-மிகேல் (கத்தோலிக்க பெண் துறவிகள் நடத்திய) பள்ளிக்கூடம், இரண்டிற்கும் இடைப்பட்ட வெளி. இவைதான் அவள் உலகம். விடுமுறை நாட்களில் அவளுக்குத் துணை புத்தகங்கள்.

ஒரே பெண் என்பதால் போற்றி வளர்க்கப்பட்டவள். வீட்டுக்கு வெளியே என்ன நேருமோ என்று அவள் தந்தைக்கு அச்சம், அவள் தாய்க்கு சந்தேகம். தனியாக எங்கும் போனது இல்லை. வயதானவர்கள் யாராவது துணைக்கு வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு முன் திருவிழாவில் டான்ஸ் ஆடியபோது அவள் தாயின் கழுகுப் பார்வையில்.

அவளுடைய சமுதாயத் திறன்கள் மிகக்குறைவு. தொலைபேசியில் அழைக்கத் தெரியாது. அவள் அறிந்த மனிதர்கள் கிராமத்து கத்தோலிக்க உழைப்பாளிகள். மற்றவர்களிடம் எப்படி பேசிப் பழக வேண்டும்? தெரியாது. படிக்கத் தெரிந்தது முதல் புத்தகங்கள் அவள் பொழுது போக்கு. வெளி உலகைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம் பெண்கள் பத்திரிகைகள் வழியாக.

வீட்டிற்குள் அவள் ராணி. எதை வேண்டுமானாலும் எடுத்துத் தின்னலாம். விடுமுறை என்றால் மதியம் வரை படுக்கையில் படுத்தபடி படிக்கலாம். தட்டுகள் எடுத்து வைப்பது, தரையைச் சுத்தம் செய்வது என்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். பள்ளிக்கூடத்திலும் அவள் மற்றவர்களை விட ஒரு படி உசத்தி. லத்தீன், ஆங்கிலம், இலக்கிய விமரிசனம் போன்ற அவள் பாடங்கள் மற்றவர்கள் மூளைக்கு எட்டாது.

அன்னி முகாம் வளாகத்தில் நுழைகிறாள். கடந்த சில வாரங்களாக அவள் மனதில் வரைந்த சித்திரத்தை விட அது விசாலமாக இருக்கிறது. பருத்த தூண்களுடன் சாப்பாட்டுக் கூடம், உயரமான கூரைகளுடன் தங்கும் விடுதிகள். மேல் தளத்தின் இருண்ட நடைவழியில் ஒவ்வொரு கதவையும் கடந்து நடக்கிறாள். அவளுடைய அறை கோடியில். அவள் அறைத்தோழிக்கு நெளிநெளியான கூந்தல். ஜன்னலை ஒட்டிய பாதி இடத்தை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டாள்.

இரவில் அறைத்தோழி படுத்ததும் ஆழமாக சுவாசிக்கத் தொடங்கிவிட்டாள். அன்னிக்கு எண்ண அலைகள். அறைத்தோழிக்கு என்று இல்லை, அவள் அன்று சந்தித்த மற்ற எல்லா பெண்களுக்கும் அவர்களைச் சுற்றி தன்னம்பிக்கைக் கோளம். அவர்களை எதுவும் பாதிப்பதில்லை. அன்னிக்கு சாப்பாட்டில் இருந்து எல்லாமே புதிது, ஆச்சரியம். அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எதை எப்படிப் பேச வேண்டும்?

முதன்முதலாக பழக்கம் இல்லாத அறையில் தூக்கத்திற்குக் காத்திருந்தபோது… அன்னிக்குத் தெரியாது, இன்னும் மூன்று நாட்களில் அவள் அது வரை வாழ்ந்த வாழ்க்கை மூழ்கிவிடப் போகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், Guest Posts

தொடர்புடைய சுட்டி: அன்னி எர்னோ விக்கி குறிப்பு

Annie Ernaux மற்றும் அக்னிபிரவேசம்

அன்னி எர்னோ 2022-இல் நோபல் பரிசு வென்றவர். ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். இன்னும் படிக்க கைவரவில்லை.

அக்னிபிரவேசம் பதிவைப் படித்த பிறகு நண்பர் அமர்நாத் அன்னி எர்னோவுக்கும் அக்னிபிரவேசத்துக்கும் ஒரு சுவாரசியமான முடிச்சு போட்டிருக்கிறார். அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அமர்நாத், உங்கள் புகைப்படம் ஒன்று அனுப்புங்கள்!

அமர்நாத் தன் வாசிப்பு அனுபவங்களை விளக்குகிறார்…

பதின்பருவத்தின் முன்பாதியில் அகிலன், மு. வரதராசன் இருவரின் பல புதினங்களை வாசித்தேன். முன்னவரின் ‘பாவை விளக்கு‘, பின்னவரின் ‘அகல் விளக்கு‘, அவர்களின் பிற நாவல்களில் இருந்து தனித்து நின்றன. காரணம் பிறகு தெரிய வந்தது. இரண்டும் ஆசிரியர்களின் சுயசரிதைக் கதைகள். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் பிரபலமாக இருந்த சாமர்செட் மாம் மற்றும் ஏ. ஜே. க்ரானின் அவர்களின் படைப்புகளில் ‘Of Human Bondage‘, ‘Citadel‘ இரண்டும் மனதில் தங்கின. அவையும் கதாசிரியர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டவை.

பல படைப்பாளிகள் ஆரம்பக் காலத்திலோ, தங்கள் பெயரை நிலைநாட்டிய பிறகோ சுயசரிதை நாவல்கள் எழுதி இருக்கிறார்கள். அவை வாசகர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானவையாக இருந்தால் வியப்பதற்கு இல்லை.

மற்ற இலக்கியங்களைப் போல சுயசரிதை நாவலுக்கு இலக்கணம் என்று ஒன்றும் கிடையாது. சொல்லப் போனால் கதாசிரியரின் சொந்த எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகள் பல கதைகளில் பல அளவுகளில் விரவி இருக்கும். என்னைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் கதையின் பிரதான பாத்திரத்திற்கு படைப்பாளியின் குணநலன்களில் பாதிக்கு மேல் இருந்தால் அதை அவ்வகையில் சேர்க்கலாம். அதற்காக கதையின் எல்லா நிகழ்வுகளும் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவை என்று அர்த்தமல்ல.

நிஜமான சுயசரிதைக்கும் சுயசரிதைப் புதினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மறுபடி க்ரானின். Citadel கதையின் நாயகன் ஆன்ட்ரூ மான்சன் க்ரானினைப் போலவே ஒரு மருத்துவன். நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய ஊருக்குப் பணி புரிய வருகிறான். சுரங்கத்தின் கரித்தூளை சுவாசிப்பதால் தொழிலாளர்களுக்கு ‘கறுப்பு நுரையீரல்’ (Black lung) நோய் வருவதாகக் காட்டுகிறான். இவை க்ரானின் வாழ்வில் நிகழ்ந்தவை. மற்ற விவரங்கள் கற்பனை. மருத்துவம் மற்றும் எழுத்துத் தொழில் என்று இரண்டு துறைகளில் அவருடைய சொந்த அனுபவங்களை ‘Adventure in Two Worlds‘ என்று எழுதியிருக்கிறார். அது சுயசரிதை. அதில் அவருடன் சேர்ந்து சிரிக்கலாம், கவலைப்படலாம், பெருமிதப்படலாம், ஆனந்த அதிர்ச்சி அடையலாம்.

அன்னி எர்னோவின் கதைகள் இரண்டிற்கும் இடையில். சுயசரிதை போல நிகழ்ந்த சம்பவங்கள். புதினம் போல அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய நினைவலைகள். அதற்காக அவருக்கு நோபல் பரிசு தரப்பட்டு இருக்கிறது. வாசகருக்கும் எழுத்தாளருக்கும் நடுவே எந்தத் திரையும் இல்லை. வாசிக்கும்போது எழுத்தாளரைத் தொட்டுக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்கலாம். எதுவும் மறைக்கப்படாமல் எல்லா பலவீனங்களும் வெளிப்படுகின்றன. பல நாவல்களைப் படித்ததும் அவரை உறவு கொண்டாடலாம். அந்த இலக்கிய வகையில் எழுத விரும்பும் இளம் கலைஞர்களுக்கு அவர் புத்தகங்கள் நல்ல வழிகாட்டி. அப்படி எழுதுகிற அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சுவையான, அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் நடக்கட்டும்!

எதிர்பாராத பனிப்பொழிவால் கிளம்பாத விமானத்தில் எட்டு மணி அடைபட்டுக் கிடந்தது போன்ற வாழ்க்கையின் பல நிகழ்வுகளையும், என் கற்பனைப் பிறவி சாமிநாதனை(அவன் வாழ்க்கைத் துணைவி சரவணப்ரியாவை)யும் கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன். (மிகச் சில சிறுகதைகளைத் தவிர பிற எல்லா சிறுகதைகள் நெடுங்கதைகளில் அவன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கட்டியங்காரன், இல்லை சௌகரியத்துக்காக ஒரு சில காட்சிகளில் வந்து போகும் கௌரவ நடிகன், அவ்வளவே.) ஆனாலும், எனக்கு அன்னி எர்னோவின் எழுத்து சுவைக்கவில்லை.

ஒன்று. நம் ஞாபகசக்தி கணினியின் நினைவுத் திறன் போல நிச்சயமானது அல்ல. அதை நம்ப முடியாது. உளவியலில் சொல்லப்படும் ‘Flashbulb Memory’யே ஆனாலும் காலப்போக்கில் அந்த நிகழ்வின் பிம்பம் நினைவில் மெல்ல அழிகிறது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை மனக்கண்ணில் கொண்டுவரும்போது அதன் ஒரு பங்குதான் நிஜம். மீதி மூளை அதில் சேர்த்த சொந்தச் சரக்கு. அப்படி இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து வாசிப்பதில் சுவை சேர்த்தால் என்ன?

இரண்டு. நேரில் பார்த்த சம்பவங்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதால், “அலை ஓசை” மற்றும் “Grapes of Wrath” போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதை நிஜமாகவே நடந்திருக்குமோ, அதன் மாந்தர்கள் நிஜமான மனிதர்களோ என்ற பிரமை உண்டாகிறது. அவற்றைக் கதைச் சரித்திரம் என்று வகைப்படுத்துவது என் வழக்கம். அன்னி எர்னோவின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல.

மூன்று. ஏற்கனவே தெரிந்த வேதியியல் வினைகளைப் பயன்படுத்தி பல புதிய ரசாயனப் பொருட்களை நான் தயாரித்து இருக்கிறேன். அவற்றில் சில மருந்துகளாகப் பயன்படலாம். அது போல நடைமுறை சம்பவங்களைப் புதிய இழைகளில் கோர்த்து புதிய துணி நெய்வது (new synthesis) சாதனை. கதாசிரியர் தன்னுடைய பழைய குப்பையைக் கிளறுவதால் யாருக்கு என்ன லாபம்?

நான்கு. எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் சலவைக் குறிப்பில் மட்டுமல்ல அவருடைய தலை தீபாவளியிலும் அக்கறை இல்லை. பின்னதின் அடிப்படையில் ஆத்மாவையும் நித்யாவையும் வைத்து ஒரு விஞ்ஞானக்கதை எழுதினால் (எழுதி இருக்கிறார்) அதை நிச்சயம் வாசிப்பேன். நல்ல கதையின் இலக்கணங்களில் ஒன்று: காமராவின் கோணத்தில் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைந்து இருக்க வேண்டும். வாசிக்கும்போது யார் எழுதியதாக இருந்தால் என்ன என்கிற எண்ணத்தைத் தர வேண்டும்.

ஒரு இளம்பெண்ணின் கதை” (A Girl’s Story) ஜெயகாந்தனின் அக்னிபிரவேசம் கதையை நினைவூட்டுகிறது. அச்சிறுகதையின் முடிவு வேறு விதமாக இருந்து அதை சில ஆண்டுகள் கழித்து அவள் திரும்பிப் பார்த்தால்? “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஜெயகாந்தன் அதைச் செய்திருக்கிறார். கதையில் நாம் சந்திப்பது ஜெயகாந்தனின் கங்கா. திரும்பிப் பார்த்த நிஜமான கங்கா தன் உணர்ச்சிகளையும் தாக்கத்தையும் எழுத்தில் பதித்திருந்தால் “ஒரு இளம்பெண்ணின் கதை” போல இருந்திருக்கும். எனக்கு “சில நேரங்களில்”தான் பிடித்திருக்கிறது.

அமர்நாத் சொல்வதைப் போல இந்தச் சிறுகதையும் அன்னி எர்னோவின் இளமைப்பருவ நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாம். அவர் லண்டனின் குழந்தைகளை, வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக (Au Pair) பணியாற்றி இருக்கிறார், அதுதான் இந்தச் சிறுகதைக்கு மூலமாம். 1958-இல் கன்னித்தன்மையை மேலை உலகில் இழப்பவளை தன்மானம் இல்லாத கோழை, ஊரார் வம்புப்பேச்சுக்கு தீனி என்றெல்லாம் விவரிப்பது ஆச்சரியப்படுத்தியது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டன என்று நினைத்திருந்தேன்…

அமர்நாத் உங்கள் சிறுகதைகள் ஏதாவது இணையத்தில் கிடைக்கிறதா?

ஓவர் டு அன்னி எர்னோ மற்றும் அமர்நாத்!


ஒரு இளம்பெண்ணின் கதை

அன்னி எர்னோ

  • Ernaux, Annie: A Girl’s Story, 2016
  • English translation: Alison L. Strayer
  • Seven Stories Press, 140 Watts Street, New York, NY 10013

ஒரு சிலருக்கு மற்றவர்களின் அட்டகாசப் பேச்சு, சிகரெட்டைப் பற்ற வைக்கும் அலட்சியம், கால்களை மடக்கி நிற்கும் கம்பீரம் – இவையெல்லாம் பிரமிப்பைக் கொடுக்கும். அப்போது கிணற்றில் விழுந்துவிட்டாற்போல் உடல் கூனிக் குறுகும். ஒரு நாள், சரியாகச் சொன்னால் ஓர் இரவு, யாரோ ஒருவரின் விருப்பத்துக்கு ஆளுமைக்கு அடிபணிகிறார்கள். தங்களைப் பற்றி அவர்கள் அது வரை நினைத்த எண்ணங்கள் காணாமல் போகின்றன. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இனம் தெரியாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் கரைந்துவிடுகிறார்கள். இழுத்துப் போகும் அந்த மற்றவரின் அடிச்சுவட்டில் கால் வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

அவர்களின் சம்மதத்திற்கோ வார்த்தைக்கோ அப்போது இடம் இல்லை. “எனக்கா இப்படி நிகழ்கிறது?”,  “நானா இப்படிச் செய்கிறேன்?” என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்படலாம். ஆனால் ‘நான்’,  ‘எனக்கு’ இரண்டும் எப்போதோ காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதில் அங்கே ‘அவன்’,  ‘அவனுக்கு’, ‘அவனுக்காக’.

காரியம் முடிந்து அவளை எறிந்துவிட்டு அவன் அகன்றதும் கறை படிந்த உள்ளாடையில் யதார்த்தம். அவன் அவளுக்காக ஒதுக்கிய நேரம் அவ்வளவுதான். ஆனால், அவள் கதை முடியவில்லை. ஏற்கனவே பலவீனமான அவள் இப்போது மற்றவர்களுக்குத் தடை சொல்லாமல் பணிந்து போகும் தன்மானம் இழந்த கோழை. அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு, வெறும் வாய்க்குத் தீனி. இன்னொரு தடவை இன்னொரு தடவை என்று உடலின் ஏக்கம். திரும்ப அவளைத் தேடி வருவான் என்றொரு அசட்டு நம்பிக்கை. இவைதான் அவளுக்கு மிச்சம்.

1958-ஆம் ஆண்டின் கோடை காலம்.

ஃப்ரான்ஸில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பிரமாதமாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டி கால் பதவிக்கு வந்தார். சார்லி கால் டூர் டி ஃப்ரான்ஸ் ஜெயித்தார். டலிடாவின் ‘எ லவ் ஸ்டோரி’ வெளிவந்தது. இருபத்திஐந்து வயது வரை கோடை ஒரு நீண்ட காலம். பிறகு அது சுருங்கி வேகமாக ஓடி நினைவுகளில் மங்கிக் கடைசியில் மனதில் தங்குவது வறட்சியும் பொசுக்கும் சூடும்தான்.

முந்தைய ஆண்டுகள் போல பணக்காரக் குழந்தைகள் சோம்பேறித்தனமாக நாட்களைக் கழிக்க பெற்றோர்களுடன் ஃப்ரெஞ்ச் ரிவியெராவுக்குப் போனார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அரசாங்க மற்றும் தனியார் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்கள் அரைகுறை ஆங்கிலத்தை ரிப்பேர் செய்ய சான்னலைக் கடந்தார்கள். கையில் பணம் இல்லாத கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டின் பல இடங்களில் குழந்தைகளை மேய்க்கும் வேலை. கிளம்புவதற்கு முன் இளம்பெண்கள் ஞாபகமாக மகளிர் துண்டுகளைக் கையோடு எடுத்துக்கொண்டபோது முதல் காதல் அனுபவத்தை எதிர்பார்க்கும் ஆவல், அச்சம்.

அந்தக் கோடையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்டார்கள். திரும்பி வந்தவர்களுக்கு வீட்டுச் சுழலுடன் ஒத்துப் போக பல காலம் பிடிக்கும்.

இளம் அன்னியின் புகைப்படம் இப்போது இல்லை.

அவள் கோடை முகாமில் இருந்தபோது பதினெட்டாம் பிறந்த நாள் வந்தது. அப்போது படம் எடுக்க ஏன் யாருக்கும் தோன்றவில்லை? பார்ப்பதற்கு சுமாராக, ஃபோனோக்ராஃபும் அதில் இசைக்க தட்டுகளும் கொண்டு வராத ஏழை என்பதால் அலட்சியம். அவளைப் போல அந்த முகாமுக்கு வந்த மற்ற கௌன்சிலர்கள் யாராவது அவளை இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்களா? சந்தேகம்தான்.

செப்டெம்பர் கடைசியில் முகாம் கலைக்கப்பட்டு எல்லாரும் தங்கள் இடத்துக்குத் திரும்பியதும் அவளை முற்றிலும் மறந்து போய் இருப்பார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டதில் வந்த வருமானம் அடுத்த ஆண்டுக்கு என்கிற மனக் கணக்கில் அவளைக் கேலி செய்தது எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது?

இக்காட்சியை நேரில் காண்பது போல் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆகஸ்ட் பதினான்காம் தேதி பிற்பகல் ஆரம்பத்தில் அன்னி ரயிலில் இருந்து இறங்குகிறாள். கூந்தலை உயரத் தூக்கி முடிந்திருக்கிறாள். இடுப்புடன் ஒட்டிய ட்வீட் ஸ்கர்ட்டும் கம்பிளி அங்கியும் இரண்டு வருஷப் பழையவை. மேலே ஒரு நீல கோட். அவள் கையில் சாம்பல் நிறப் பெட்டி – ஆறு ஆண்டுகளுக்கு முன் அவள் தந்தையுடன் லூர்டு போனபோது வாங்கி பிறகு உபயோகப்படுத்தாதது. நீலமும் வெள்ளையும் கலந்த பிளாஸ்டிக் பை ஒரு வாரம் முந்தி வாங்கியது.

பயணம் முழுக்க ரயில் பெட்டியின் ஜன்னல்களில் சாரல் அடித்த மழை. அது நின்று சூரியனின் வருகையால் அங்கியிலும் ஸ்கர்ட்டிலும் அவளுக்கு சூடாக இருக்கிறது. தடியான துணிகளில் கையால் தைத்த கிழியாத ஆடைகளால், நாட்டுப்புறத்தில் இருந்து வந்த மத்தியக் குடும்பப் பெண்ணின் தோற்றம். உயரமான அவளை ஒட்டி நடுவயதைத் தாண்டிய கட்டை குட்டையான பெண். மரியாதையையும் பயத்தையும் தோற்றுவிக்கும் முகம். இறுக்கப் படிய வைத்த இளம் பழுப்பு தலைமயிர். ஆதங்கம், சந்தேகம், அதிருப்தி எல்லாம் கலந்த உணர்ச்சி. பெண்ணைக் கட்டுக்குள் வைத்திருக்கும் லகான் பார்வை.

அக்கணத்தில் அன்னியின் மனநிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. அவளுக்குப் பக்கத்தில் அவள் தாய் காவலாக நிற்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற அச்சம். அவள் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. முகாமின் பொறுப்புள்ள கௌன்சிலரை அதற்கு வரும் சின்னக் குழந்தையைப் போல அழைத்து வந்திருக்கிறாள். அவள் அக்கணமே அங்கிருந்து நழுவி வந்த வழியே ரயிலில் திரும்பிப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

முகாமுக்கு அழைத்துப் போகும் வேனின் டிரைவர் ஸ்டேஷன் ஓரத்தில் நிற்கிறான். அம்மாவுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்துவிட்டு, அவள் பின் தொடர்ந்து வருவாளோ என்கிற பயத்தில் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக ஓடி அன்னி வண்டியில் ஏறிக்கொள்கிறாள். பயணத்தினால் பௌடர் கலைந்த அம்மாவின் முகத்தில் மகள் காட்டும் அலட்சியத்தால் கசப்பு. அன்னிக்கு அக்கறை இல்லை. திரும்பிப் போக சரியான ரயில் இல்லாததால் அவள் தாய் விடுதியில் ஓர் இரவு தங்கினாள் என்று பிறகு தெரிய வந்தது. நன்றாக வேண்டும், அவளைத் தனியாகப் பயணம் செய்ய விடாததற்குத் தண்டனை.

பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முதல் தடவையாக அன்னி வெளியே வந்திருக்கிறாள். கூட்டில் இருந்து பறந்த பறவைக் குஞ்சு. தளை அவிழ்த்துவிட்ட பெண் குதிரைக் குட்டி. அங்கே வரும் வரை வீடு, செய்ன்ட்-மிகேல் (கத்தோலிக்க பெண் துறவிகள் நடத்திய) பள்ளிக்கூடம், இரண்டிற்கும் இடைப்பட்ட வெளி. இவைதான் அவள் உலகம். விடுமுறை நாட்களில் அவளுக்குத் துணை புத்தகங்கள்.

ஒரே பெண் என்பதால் போற்றி வளர்க்கப்பட்டவள். வீட்டுக்கு வெளியே என்ன நேருமோ என்று அவள் தந்தைக்கு அச்சம், அவள் தாய்க்கு சந்தேகம். தனியாக எங்கும் போனது இல்லை. வயதானவர்கள் யாராவது துணைக்கு வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு முன் திருவிழாவில் டான்ஸ் ஆடியபோது அவள் தாயின் கழுகுப் பார்வையில்.

அவளுடைய சமுதாயத் திறன்கள் மிகக்குறைவு. தொலைபேசியில் அழைக்கத் தெரியாது. அவள் அறிந்த மனிதர்கள் கிராமத்து கத்தோலிக்க உழைப்பாளிகள். மற்றவர்களிடம் எப்படி பேசிப் பழக வேண்டும்? தெரியாது. படிக்கத் தெரிந்தது முதல் புத்தகங்கள் அவள் பொழுது போக்கு. வெளி உலகைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம் பெண்கள் பத்திரிகைகள் வழியாக.

வீட்டிற்குள் அவள் ராணி. எதை வேண்டுமானாலும் எடுத்துத் தின்னலாம். விடுமுறை என்றால் மதியம் வரை படுக்கையில் படுத்தபடி படிக்கலாம். தட்டுகள் எடுத்து வைப்பது, தரையைச் சுத்தம் செய்வது என்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். பள்ளிக்கூடத்திலும் அவள் மற்றவர்களை விட ஒரு படி உசத்தி. லத்தீன், ஆங்கிலம், இலக்கிய விமரிசனம் போன்ற அவள் பாடங்கள் மற்றவர்கள் மூளைக்கு எட்டாது.

அன்னி முகாம் வளாகத்தில் நுழைகிறாள். கடந்த சில வாரங்களாக அவள் மனதில் வரைந்த சித்திரத்தை விட அது விசாலமாக இருக்கிறது. பருத்த தூண்களுடன் சாப்பாட்டுக் கூடம், உயரமான கூரைகளுடன் தங்கும் விடுதிகள். மேல் தளத்தின் இருண்ட நடைவழியில் ஒவ்வொரு கதவையும் கடந்து நடக்கிறாள். அவளுடைய அறை கோடியில். அவள் அறைத்தோழிக்கு நெளிநெளியான கூந்தல். ஜன்னலை ஒட்டிய பாதி இடத்தை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டாள்.

இரவில் அறைத்தோழி படுத்ததும் ஆழமாக சுவாசிக்கத் தொடங்கிவிட்டாள். அன்னிக்கு எண்ண அலைகள். அறைத்தோழிக்கு என்று இல்லை, அவள் அன்று சந்தித்த மற்ற எல்லா பெண்களுக்கும் அவர்களைச் சுற்றி தன்னம்பிக்கைக் கோளம். அவர்களை எதுவும் பாதிப்பதில்லை. அன்னிக்கு சாப்பாட்டில் இருந்து எல்லாமே புதிது, ஆச்சரியம். அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எதை எப்படிப் பேச வேண்டும்?

முதன்முதலாக பழக்கம் இல்லாத அறையில் தூக்கத்திற்குக் காத்திருந்தபோது… அன்னிக்குத் தெரியாது, இன்னும் மூன்று நாட்களில் அவள் அது வரை வாழ்ந்த வாழ்க்கை மூழ்கிவிடப் போகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், Guest Posts

தொடர்புடைய சுட்டி: அன்னி எர்னோ விக்கி குறிப்பு

❌