Normal view

Received before yesterday

புதிய வடிவில் முரசு அஞ்சல்

13 April 2025 at 15:04
DateSoftLaunch-Featured-2025-04-14

முரசு அஞ்சல், மறு உருவாக்கம் காணப்போவதாக அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறியுள்ளார். அதற்கான முன்னோட்டக் காணொளியைக் கீழே இணைத்துள்ளோம்.

DateSoftLaunch-Featured-2025-04-14

முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு முரசு அஞ்சல் அறிமுகமான எம்எஸ் டாஸ் காலம் முதலே இதைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரைத்ததும் முரசு அஞ்சல் வெற்றியின் காரணங்களில் ஒன்று.

அச்சுத் துறையில் மறுலர்ச்சியை உண்டாக்கித் தொடர்ந்து விண்டோஸ் தனிக்கணினிகள், திறன்பேசிகள் என ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றத்தின் போதும் முரசு அஞ்சல் தன்னை மேம்படுத்தி வந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இருந்த தமிழ் உள்ளீட்டு முறையின் தேவையை நிறைவு செய்து அழகான தமிழ் எழுத்துருக்களை பயனர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்தது. காலம் பல ஆனாலும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பிக்க முரசு அஞ்சல் ஒரு போதும் தவறியதில்லை. யூனிக்கோடு நடைமுறைக்கு வந்தபோது அதற்கான மேம்பாடுகளை உடனே வழங்கியது முரசு அஞ்சல். விண்டோஸ் 2000த்தில்தான் யூனிகோடு முதன்முதலில் அறிமுகம் கண்டது. அதற்கு முன்னதாகவே முரசு அஞ்சல் எழுத்துருக்கள் யூனிகோடுக்கு மாற்றம் கண்டன.

இப்படி எல்லா விதத்திலும் முன்னோடியாக இருக்கும் முரசு அஞ்சல், திறன்பேசி உலகத்திலும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கைப்பேசிகளில் தமிழைத் தட்டெழுத உதவிய செல்லினம், திறன்பேசிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது வசதிகளைச் சேர்த்துக்கொண்டே வந்தது. செல்லினத்தின் அடிப்படையும் முரசு அஞ்சலே. இந்த ஒளிமயமான வரலாற்றைப் பார்க்கும்போது, பயனர்களுக்கு புதுவித தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது முரசு அஞ்சல் என்பதை நாம் அறிய இயலும்.

இத்தகைய முரசு அஞ்சல் இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட உள்ளது. இது வெறும் மேம்பாடு அல்ல, முழுமையான மறு உருவாக்கம் என்றே கூறிவிடலாம். நீங்கள் ஆசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மாணவர், காணொளி கலைஞர், கணித்தமிழைப் பயன்படுத்தும் தமிழ் ஆர்வலர் என யாராக இருந்தாலும் இந்த வெளியீடு உங்களுக்காகத்தான்.

வெளியீட்டு நிகழ்வு வருகின்ற ஜூன் 27 இல் கோலாலம்பூரிலும், ஜூலை 5இல் சிங்கப்பூரிலும், ஜூலை 12 அன்று சென்னையிலும் நடைபெற இருக்கிறது. இந்த நாள்களை உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று முத்து நெடுமாறன் பதிவு செய்துள்ளார்.

இது பற்றிய மேலதிகத் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • இசக்கிமுத்து

The post புதிய வடிவில் முரசு அஞ்சல் appeared first on செல்லினம்.

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

9 April 2025 at 14:00
Murasu Anjal Tamil99

இத்தொடரின் ஆதாரக் கேள்வி, எந்த உள்ளிடு முறை சிறந்தது என்பதே.  ஆரம்பத்திலேயே, தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படியாக இருப்பதையும் ஒரு கூறாகக் குறிப்பிட்டிருந்தோம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கொக்கிகள், உயிரெழுத்தின் மேல் புள்ளி (கிிி ஈ்) போன்ற பொருளற்ற சொற்களைத் தட்டெழுத அனுமதிக்காதவாறு உள்ளிடு முறையை அமைக்க முடியும். முரசு அஞ்சல், தமிழ்99 உள்ளிடு முறைகள் இம்மாதிரி தவறாகத் தட்டெழுத அனுமதிப்பதில்லை. தமிழுக்கான மென்பொருள் உருவாக்குவோர் தமிழராகவேதான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் தமிழின் தனித்தன்மைகளையும் இயல்புகளையும் அறிந்தவராக இருத்தல் அவசியம். எழுத்துரு வல்லுநரும், செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனருமான முத்து நெடுமாறன், இதை இயற்கை நுண்ணறிவு, லேங்குவேஜ் அவேர்னஸ் என்று குறிப்பிடுகிறார். எழுத்துரு, உள்ளிடு முறை உருவாக்கிய பல்லாண்டு கால அனுபவம் மட்டுமின்றி தமிழை ஆழமாக ஆய்ந்து உள்வாங்கிக் கொள்வதால் ஒருவருக்குக் கிடைக்கும் அறிவு இது.

மேலே குறிப்பிட்டபடி வெளிப்படையாகத் தெரியும் தவறு கூடப் பரவாயில்லை. கண்ணில் பார்க்கும் போதும் சரி, தேடுபொறிக்கும் சரி, பொருளற்ற ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி அல்லாத பிழைகளையும் சில உள்ளிடு முறைகள் செய்கின்றன. கொற்றவை என்ற சொல்லின் முதல் எழுத்தை, பொதுவாக க ெ ா வரிசையில் தட்டெழுதுவோம். இவ்வரிசையை மாற்றி கா எழுதி ெ சேர்த்து கூகுள் உள்ளிடு முறையில் எழுதினாலும் திரையில் சரியாகக் காட்டும். இந்தத் திருத்தத்தால் பத்து காசுக்குப் பயன் இல்லை. ஏனெனில் ஆண்டிராய்டு கருவிகளில் சரியாக இருப்பது போலத் தோன்றும் இச்சொல், ஐஓஎஸ், மேக் கணினிகளில் தவறாகத்தான் காட்டும். அட, கூகுள் தேடுபொறியிலும் இது தவறான சொல்லாகவே கருதப்படும். ஆனால் பார்வைக்கு மட்டும் சரியாக இருக்கும். இதன் காரணமாகத் தரவுகளில் பெருமளவு பிழைகளை நமக்குத் தெரியாமலே செய்கிறோம். நாம் உருவாக்கும் தரவுகளைப் படித்து அறிவை வளர்க்கும் பெரிய மொழி மாதிரிகளுக்குச் சரியான தரவுகள் இருப்பது அவசியம். செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்குத் தவறாகப் பாடம் புகட்டுகிறோம்.

முரசு அஞ்சல், தமிழ்99 பயன்படுத்துவதில் உள்ள கூடுதல் அனுகூலம் என்னவெனில் இதற்காக, கணினியிலோ, திறன்பேசியிலோ எவ்வகையான டிஜிட்டல் கருவிகளிலோ எழுத எந்தச் செயலியையும் நாம் நிறுவவேண்டியதில்லை. மேக், விண்டோஸ், ஆண்டிராய்டு, ஐஓஎஸ், போன்ற அனைத்து இயங்குதளங்களிலும் இயல்புநிலையிலேயே இவ்விரண்டு உள்ளிடு முறையும் இருக்கின்றன. லினக்ஸிலும் இயங்கும். எனவே, இரண்டில் நமக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும்.

அப்படி என்றால் அனைவரும் முரசு அஞ்சல் அல்லது தமிழ்99 கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டுமா? அவசியம் இல்லை. நெடுங்காலம் பழகிய ஒன்றில் இருந்து புதிதாக ஒன்றுக்கு மாறுவது நமது வேலையின் வேகத்தையும் தரத்தையும் குறைக்கும் எனில் அதைச் செய்ய வேண்டாம். புதிதாகக் கற்றுக்கொள்வோர், இருப்பது சரியாக இல்லை என்று உணர்வோர் மட்டும் எதைத் தேர்ந்தெடுப்பது எனச் சிந்தித்தால் போதும்.

இரண்டில் எது என்றால், தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து அது மாறும் என்கிறார் முத்து நெடுமாறன். 

“இரண்டு உள்ளிடு முறையும் வெவ்வேறு வகையான பயனர்களை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகம் உள்ள அயல்நாடுவாழ் தமிழர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு அதிகம் புழங்கும் வேலையில் இருப்பவர்கள், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவதை எளிமையாகக் கருதுபவர்களுக்கு அஞ்சல் எளிதாக இருக்கிறது. எனவே விரைவாகவும் தட்டெழுத முடிகிறது. 

ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படித்தாலும் தமிழில் அதிகம் பேசி தமிழிலேயே சிந்திக்கும் ஒருவருக்கு இம்முறை சவாலானதாக இருக்கும். சிக்கலானதும் கூட. அவர்களுக்கு தமிழ்99 உள்ளிடு முறையே சிறந்தது. எளிதாகவும் விரைவாகவும் இம்முறையில் அவர்களால் தட்டெழுத இயலும். ஒருவேளை தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று அதைப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருபவர் எனில் புதிதாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எதற்குப் பழகியிருந்தாலும் அதை அப்படியே தொடரலாம். ஆனால் புதிதாகக் கற்றுக்கொள்வோர், முரசு அஞ்சல் அல்லது தமிழ்99, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்வதே நன்று.” என்பது அவர் கருத்து.

அவர் குறிப்பிட்டுள்ள இரண்டு மட்டுமின்றி, பிழைகள் தவிர்க்கும் நுண்ணறிவுடன் உருவாகும் எந்த உள்ளிடு முறையைப் பின்பற்றினாலும் வரவேற்கத்தக்கதே.

இறுதியாக ஒன்று. பெருநிறுவனங்கள், தங்கள் உள்ளிடு முறைகளில் இருக்கும் குறைகளை நீக்கி, தமிழ்99 அல்லது முரசு அஞ்சலில் இருக்கும் மாற்றங்களைப் பின்பற்றுவதும் அவசியம். அவர்களுக்குத் தெரியாது என்பதால்தான் பிழையுடன் வெளியிடுகிறார்களே ஒழியே வேண்டும் என்றே செய்வதில்லை. கூகுள், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கின்றன. நாம் கேட்பதில்லை. திரளாக யாரும் கேட்கவில்லை என்றால் அந்தத் தவறுடனே அப்படியே இருக்கிறது. 

வல்லுநர்கள் இம்மாதிரி பிழைகளைச் சுட்டிக்காட்டிப் பெருநிறுவனங்களைத் திருத்திக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். ஆனால் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்று உரக்கக் குரல் எழுப்பினால் ஒழிய பெருநிறுவனங்களில் காதுகளில் விழாது. தமிழ்ப்பற்றை சங்கப்பாடலோடு நிறுத்திக் கொள்ளலாகாது. நவீன தொழில்நுட்பங்களிலும் சரியாக வரும்படி கண்காணிப்பதும் நமது கடமையே.

(முற்றும்)

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6 appeared first on செல்லினம்.

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

8 April 2025 at 14:00
Murasu Anjal Tamil99

எழுத்தைச் சேமிக்கும் விதத்துக்கு (encoding), யூனிகோடு தகுதரம் அறிவிப்பு வருவதற்கு முன்பே உள்ளிடு முறைக்கான தகுதரத்தை தமிழ்நாடு அரசு வகுத்துவிட்டது. தனக்கு வந்த கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து ஆய்வின் அடிப்படையில் உருவான தமிழ்99 விசைப்பலகையை அறிமுகப்படுத்தியது. இதுவே அனைவரும் பயன்படுத்தவேண்டிய விசைப்பலகைத் தகுதரம் என்று அறிவித்தது. ஆனால் சட்டமியற்றிக் கட்டாயமாகப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இன்ஸ்கிரிப்ட் பயன்படுத்துவாரில்லை என்பதால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் தமிழ்99 உள்ளிடு முறையை தாமாகவே இணைத்துக் கொண்டன. சிக்கலானவை தாமாகவே வழக்கொழிந்து சில உள்ளிடு முறைகளே எஞ்சின.

தமிழ்99 விசைப்பலகை, உள்ளிடு முறையில் முக்கியமான சிறப்பு ஷிப்ட் விசை பயன்படுத்தாமல் பெரும்பாலான தமிழ்ச் சொற்களைத் தட்டெழுதிவிட முடியும். கிரந்த எழுத்துகள் போன்ற சிலவற்றுக்கே ஷிப்ட் விசையைத் தொடவேண்டி வரும். அது அரிதான பயன்பாடே.

உயிர் எழுத்துகள் ஒரு பக்கமும், மெய் எழுத்துகள் ஒரு பக்கமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விதத்தில் அப்படியே தட்டெழுதிவிடலாம். க உடன் இ சேர்ந்தால் கி. வ உடன் உ சேர்ந்தால் வு. விரல்களுக்குப் பயிற்சி தேவையே தவிர மனத்துக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. இப்படி தனித்தனிப் பக்கத்தில் உயிர், மெய் எழுத்துகளைப் பிரித்து வைப்பது, வலது, இடது கைகளுக்குச் சமமான வேலை கொடுக்கும் தட்டெழுத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கும் இது பொருந்துகிறது.

இணைந்து வரும் எழுத்துகளை அருகருகே வைத்திருப்பது தமிழ்99 உள்ளிடு முறையின் மற்றொரு சிறப்பு. இந்த வரியின் கடைசிச் சொல்லில் ப்பு வருகிறதல்லவா. சிரிப்பு, துடிப்பு, காழ்ப்பு, செருப்பு, இனிப்பு. அனைத்திலும் ப்பு எழுத்துகள் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். மண்டபம், கண்டம், தண்டம். இவற்றில் ண்ட அடுத்தடுத்து வரும். ஞ்ச, ந்த, த்த என இப்படி அடிக்கடி அடுத்தடுத்து எழுத்துகள் வரும் சொற்களை ஆய்வு செய்து, பட்டியலிட்டு அவ்வெழுத்துகளை விசைப்பலகையிலும் அருகருகே இருக்கும்படி அமைத்தனர். இதனால் தட்டெழுதும்போது விரல்கள் எம்பிக் குதித்துத் துன்புறாமல் வேகமாகத் தட்டெழுத முடியும். 

தமிழ்99 கணினி மென்பொருள் அடிப்படையில் செயல்படும் விசைப்பலகை என்பதால் எளிமைப்படுத்துவதை இன்னும் சில படிகள் மேம்படுத்தினர். தங்கம் என்பதில் தஙக என்று புள்ளி வைக்காமல் அடித்தாலும் கூட பொட்டு வைத்த தங்கக் குடம்தானே நம் மரபு என்று மென்பொருளே புள்ளி வைத்து தங்க என மாற்றிக்கொள்ளும். இவ்வெழுத்துக்கள் இப்படித்தான் வரும் என்கிற இலக்கண விதிகளை மென்பொருளில் ஏற்றியிருப்பார்கள். க்க என்பதை கக எனத் தட்டினால் க்க எனத் தானாகேவே மாறிவிடும். லல, ல்ல என்றாகும். ஏனெனில் ல்ல என்பதுதான் நாம் தட்டெழுத விரும்புவது என மென்பொருளுக்குத் தெரியும். இப்படி நுட்பமாகப் பல ஆய்வுகள் மேற்கொண்டு பல சிறப்புகளை தமிழ்99 உள்ளிடு முறையில் சேர்துள்ளனர். 

இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் தட்டெழுத முடிகிறது. இவை அனைத்தையும்விட, வேறொரு முக்கியமான பண்பும் தமிழ்99ல் உண்டு.

கால், கொம்பு, கொக்கி எல்லாம் எப்படி வேண்டுமாலும் அடிக்கலாம். கொாக்கிிி போன்று பொருளற்று எழுதவும் கூகுள் உள்ளிடு முறை அனுமதிக்கிறதல்லவா. தமிழ்99 இப்படிப் பொருளின்றி தட்டெழுதுவதை அனுமதிக்காது. தமிழுக்கென்று இருக்கும் சிறப்பு இலக்கண விதிகளைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டது தமிழ்99. இதனால் தப்புத்தப்பாகத் தமிழை எழுதும் வாய்ப்பு குறைகிறது. 

கூகுள் நிறுவனம் தோன்றுவதற்கு முன்பு, 1993ல் வெளியான முரசு அஞ்சல் உள்ளிடு முறையும் தமிழ்99 போலவே மென்பொருளில் இலக்கண விதிகளைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. அ் -போன்ற தவறுகளைக்கூட அனுமதிக்காத, இன்னும் சில கூடுதல் விதிகளைத் தன் மென்பொருளில் வைத்துள்ளது.

எத்தனை வகை உள்ளிடு முறைகள் இருந்தாலும் இவை இரண்டு மட்டுமே இன்று பெரும்பான்மையினரால் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற உள்ளிடு முறையாக முரசு அஞ்சல் இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிகம் ஆங்கிலத்துடனே புழங்குகின்றனர். எனவே அஞ்சல் உள்ளிடு முறை அவர்களுக்கு ஏற்றதாகிறது. தனிப்பட்ட பயிற்சி ஏதும் தேவையில்லை என்பதால் இளைய தலைமுறையின் தேர்வாக இதுவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நகரவாசிகள் ஆங்கிலத்தோடு நெருக்கம் காட்டுவதால் அவர்களும் பெரும்பாலும் அஞ்சல் உள்ளிடு முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். அஞ்சல் அல்லாது, என்எச்எம் ரைட்டர், அழகி, கூகுள் உள்ளீட்டு முறை என எதைப் பயன்படுத்தினாலும் இதே வகைப்பாட்டில்தான் வரும். இதைத் தமிழில், ஒலிப்புமுறை உள்ளிடு முறை எனலாம். சென்னைத் தமிழில், தங்கிலிஷ் என்பர். தங்கிலிஷ் தமிழில் சொல்வதானால் டிரான்ஸ்லிட்ரேஷன், பொனடிக் டைப்பிங் எனலாம். எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் விஷயம் ஒன்றுதான். ஆங்கில ammaa, தமிழ் அம்மாவாகத் திரையில் தெரியும். 

இன்னமும் தமிழ்த் தட்டச்சு முறையில் தட்டெழுதும் அரிய வகைத் தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினரே.

தொடரும்

தமிழ்99 பயன்பாட்டு வழிமுறைகள்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5 appeared first on செல்லினம்.

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

5 April 2025 at 14:00
Murasu Anjal Tamil99

கணினித் தட்டெழுத்து உள்ளிடு முறைக்கு வரும் முன்பு கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொள்வோம். தட்டெழுதும் முறையின் வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்ப்பது நம் புரிதலைக்கூட்டும். கல்வெட்டு, பனையோலை என எதில் எழுதுகிறோமோ அதற்குத் தக்க, தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தமிழி வடிவத்துக்கும் இப்போதுள்ள தமிழ் எழுத்து வடிவுக்கும் பல நூற்றாண்டு கால இடைவெளியிருக்கிறது. 

tamil typewriter

தமிழை அச்சிட ஆரம்பித்த பிறகு எழுத்து மாற்றத்துக்கான தேவை அதிகமானது. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமாக நடைபெற்ற எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைய வடிவத்துக்கு முக்கியமான காரணமாகின்றன. வீரமாமுனிவர், சீகன்பால்கு, ஜி.பு.போப், மு.சாமிநாத மாதவராயர், குமரன் இதழின் ஆசிரியர் முருகப்பா, பெரியார் ஈ.வே.ரா. போன்ற பலர் இதற்குக் காரணமாக இருந்துள்ளனர்.

யானை தூக்கிவைத்திருக்கும் துதிக்கை மாதிரி வடிவத்தில் இருந்த ஐகார மெய்யெழுத்துகள் னை, லை என மாற வலியுறுத்தப்பட்டன. ரகர எழுத்தையும் நெடில் குறியாகிய துணைக்காலையும் வேறுபடுத்த, ரகரத்திற்குக் கீழே கோடிட்டனர். இப்படிப் பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. பின்னர் தமிழ் தட்டச்சு இயந்திரத்துக்கான தேவையும் வந்தது. அதை உருவாக்கியவர் ஆர்.முத்தையா. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். தன் பதின்ம வயதில் மலேசியா (மலாயா) சென்று பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றினார். 1930வரை அங்கே பணியில் இருந்த காலகட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். 

ஆங்கிலத்துக்காக உருவான தட்டச்சு இயந்திரத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கை விசைகளில், 247 தமிழ் எழுத்துகளைத் தட்டெழுதும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைத்து உருவாக்கினார். மெய்யெழுத்தின் புள்ளி, இகர, ஈகாரக் கொக்கி, ஐகாரத் துணை எழுத்து போன்றவற்றை பிரித்து அதற்கென ஓர் இடம் கொடுத்தாலே பாதி எழுத்துகள் குறைந்துவிடுமல்லவா. க, ங, ச வரிசை எழுத்துகள் உடன் தனியாக ஒரு விசையில் வைத்திருக்கும் புள்ளி, இகர, ஈகார விசையைச் சேர்த்து அடித்தால் க் வரிசை, கி வரிசை, கீ வரிசை எழுத்துகள் எல்லாமே அடித்துவிடலாம். அதில் இயந்திரத்தின் இயல்பை ஒட்டி ஒரு சிக்கல் எழுந்தது.

தட்டச்சு இயந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு விசையில் இருக்கும். ஒன்றைத் தட்டினால் அதைத் தாளில் அச்சடித்துவிட்டு தன் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும். ஓர் எழுத்தைப் பதிந்துகொண்டு, காகிதத்தாள் கொஞ்சம் நகர்ந்து இன்னொரு எழுத்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். எழுத்து வர, வர இப்படி நகர்ந்து கொண்டே போவதுதான் தட்டச்சு இயந்திரத்தின் அடிப்படை நுட்பம். க் எழுத்தில் க தனியாக ் புள்ளி தனியாக ஒவ்வொரு விசையில் வைத்து இடப் பிரச்சினையைத் தீர்த்தாயிற்று. ஆனால் ஒரு விசையை அடித்ததும் தாள் நகர்ந்துவிட்டால் க எழுத்துக்குப் பக்கத்தில் புள்ளி வரும். இந்தச் சிக்கல், நகரா விசை (dead key) என்றொரு நுட்பத்தை அறிமுகப்படுத்தித் தீர்த்துவைக்கப்பட்டது.

மெய் எழுத்தை அடிப்பதாக இருந்தால் க விசையை முதலில் தட்டக்கூடாது. அதைத் தட்டினால் தட்டச்சு இயந்திரம் அதை அச்சிட்டதும் அடுத்த இடத்துக்குப் போய்விடும். முதலில் மெய்யெழுத்துப் புள்ளியைத்தான் தட்ட வேண்டும். புள்ளி, நகரா விசை என்பதால் தாளில் உச்சிப் புள்ளி அச்சாகி, தாள் நகராமல் அங்கேயே இருக்கும். அடுத்து க விசையைத் தட்டினால் புள்ளிக்குக் கீழே போய் க உட்கார்ந்து கொள்ளும். கி, கீ, பு, பூ போன்ற எழுத்துகளும் இவ்விதமே. கூட்டத்தோடு சேராமல், கூ போல கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் எழுத்துகளைத் தனி விசையாகவே வைத்திருந்தனர். ஆங்கிலத்தைப் போலவே இரு கைகளையும் பயன்படுத்தித் தட்டெழுதும் வகையில் விசைகள் அமைந்திருந்தது தனிச்சிறப்பு. 

பதிப்பகங்கள்தாம் அச்சிடும் என்ற நிலையை தட்டச்சு இயந்திரம் மாற்றியது. சாதாரண மனிதர்களும் தட்டச்சு செய்து ஆவணங்கள் உருவாக்க முடிந்தது. தட்டச்சு செய்தே வெளியிடும்படியான செய்தி இதழ்களும், நூல்களும் உருவாயின. அடுத்தது கணினிக் காலம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2 appeared first on செல்லினம்.

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

4 April 2025 at 14:00
Murasu Anjal Tamil99

தட்டச்சுப் பயிலகங்கள் இனிமேல் தமிழ்99 விசைப்பலகையைத்தான் சொல்லித்தர வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்99 என்பது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை. இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை இன்ஸ்கிரிப்ட். மக்கள் இவை இரண்டையும் விடுத்து, முரசு அஞ்சல், அமுதம், அழகி, மயிலை, பாமினி எனப் பல விதங்களில் தமிழை உள்ளீடு செய்கிறார்கள்.

தமிழ்99 விசைப்பலகையில், 99 என்பது அது வெளியிடப்பட்ட ஆண்டைக்குறிக்கிறது. அறிவிப்பை வெளியிட்டுச் சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலமாக அதை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு எதுவும் செய்யாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இப்போது எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும் சிலருக்குச் சந்தேகம் வருகிறது. ஒன்றிய அரசின் இன்ஸ்கிரிப்டுக்கும் தமிழ99க்கும் என்ன வித்தியாசம் என்றொரு விவாதமும் தொடங்கியுள்ளது. எது சிறந்தது? எது எளிமையானது? கற்றுக்கொள்வதில் எளிமையாக இருக்கும் முறை, பயன்படுத்தும் போது விரைவாகத் தட்டெழுதவும் உதவுமா? இதுபோன்ற கருத்தாடல்கள் நடக்கின்றன.

இவை அனைத்தையும் அலசி விளக்கும் வகையில் செல்லினம் தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியிட உள்ளோம்.

தொடங்குவதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். உள்ளீடு செய்யும் விதமும் (input method), அந்த எழுத்துகள் சேமிக்கப்படும் முறையும் (encoding) வெவ்வேறு விஷயங்கள்.

நீங்கள் எந்த உள்ளிடு முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அஞ்சல், தமிழ்99, பாமினி என எந்த வழியில் தட்டெழுதி உள்ளீடு செய்தாலும் அந்த எழுத்துகள் சேமிக்கப்படுவது யூனிகோடு ஆக இருக்கும்பட்சத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. நீங்கள் உள்ளீடு செய்த அதே வழியில்தான் அந்தக் கோப்பில் திருத்தம் மேற்கொள்ளமுடியும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் முரசு அஞ்சல் பயன்படுத்தி தட்டெழுதிய கோப்பினை மற்றொருவர் தமிழ்99 பயன்படுத்தி திருத்திக்கொள்ள முடியும். எழுத்து எவ்வகையில் சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம். அது யூனிகோடு எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குறியீட்டு முறைதான். 

பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிக்கல்கள் இருந்தன. அடோப் போட்டோஷாப் போன்ற பல செயலிகள் யூனிகோடு எழுத்துருவை ஆதரிக்காத நிலை எல்லாம் கூட ஒரு காலத்தில் இருந்தது. அம்மாதிரி சிக்கல்கள் படிப்படியாகக் களையப்பட்டு தற்போது யூனிகோடு எழுத்துருக்களே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகத் திறன்பேசி பயன்படுத்துவோர் அனைவருமே அதில் உள்ள யூனிகோடு எழுத்துகளையே புழங்குகின்றனர். மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் யூனிகோடு பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது.

முரசு அஞ்சல், மருதம், தமிழ்99, என்எச்எம், கூகுள் உள்ளீட்டுக் கருவி போன்று பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் முறையும் சரி, தற்போது புதிதாக அறிமுகமாகும் உள்ளிடு முறையும் சரி, எதைப் பயன்படுத்தினாலும் தவறில்லை. அந்த உள்ளிடு முறையினால் உருவாகும் எழுத்து யூனிகோடாக இருந்தால் போதும்.

தற்போது நாம் இத்தொடர் கட்டுரைகளில் படிக்கப்போவது உள்ளிடு முறைகளைப் பற்றித்தான். யூனிகோடு பற்றி அல்ல.

இத்தனை இருக்கிறதே, எது சிறந்தது என்றொரு கேள்வி எழுவது நியாயமே. தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பயன்படுத்த எளிதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் உள்ளிடு முறைகளில் நமது பழக்கம், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

அப்படித் தேர்ந்தெடுக்க இவற்றுக்குள் என்னென்ன வித்தியாசம் இருக்கிறது என்றறியவேண்டும். அச்சிடும் வழக்கம் தோன்றிய காலத்திலிருந்து என்னவாக பரிணமித்து எப்படியெல்லாம் மாறி இன்றைய நிலையை அடைந்துள்ளது என்று தெரிந்து கொள்வதும் பயனுள்ளதே. இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் அவற்றைப் பார்ப்போம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1 appeared first on செல்லினம்.

செல்லினம் செயலி பதிப்பு 5.5

29 March 2025 at 13:30
SELLINAM

செல்லினம் செயலியில் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் பயனர்களின், வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த புதிய பதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

SELLINAM

அஞ்சல் மொபைல் என்ற பெயரோடு அறிமுகமாகி பின்னர் செல்லினம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்று, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து வருகிறது செல்லினம். தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருந்த காலத்திலேயே செல்பேசிகளில் பயனர்கள் தமிழில் தட்டெழுதும் அனுபவத்தை எளிமைப்படுத்தியது செல்லினம். அதன் பிறகும் தொடர்ந்து ஐஓஎஸ், ஆண்டிராய்டு என எல்லா இயங்குதளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு தமிழில் தட்டெழுத உதவுகிறது..

தமிழ் தட்டெழுத்துடன் நின்றுவிடாமல், உலக அரங்கில் தொழில்நுட்ப உலகில் நடக்கும் செய்திகளை பயனர்களுக்குத் தருவதையும் நோக்கமாகக் கொண்டது செல்லினம். பொதுவாகத் தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கென தனியாக தளங்களைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். அதனைக் கருத்தில் கொண்டும், பயனர்கள் பிற தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்த உதவும் வகையிலும் செல்லினம் செயலியில் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதற்குப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொரு கருத்துகளும் செல்லினம் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், அதனால் வாசிக்கச் சிரமமாக இருப்பதாகவும் பயனர்கள் தங்கள் சிக்கலைப் பகிர்ந்துள்ளனர். அதனைச் சரி செய்வதற்காக, முதற்கட்டமாக ஐபோன் மற்றும் ஐபேடில் செல்லினம் 5.5 என்ற புதிய பதிப்பைக் கொண்டுவந்துள்ளோம்.

இனிமேல் நீங்கள் கட்டுரைகளை உற்றுநோக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிளின் பிஞ்ச் சைகையைப் பயன்படுத்தி பயனர்கள் உரை அளவை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ மாற்றிக்கொள்ளும் அம்சம் புதிய பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களின் அளவைப் பெரிதாக்கிப் பார்ப்பதைப் போலவே கட்டுரைகளையும் பார்க்கலாம். நீங்கள் ஒரு முறை விரும்பிப் பயன்படுத்திய அளவை நினைவில் வைத்து, அதே அளவில் அடுத்தடுத்த கட்டுரைகளைக் காண்பிக்கும். சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காக முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள தலைப்புகளின் அளவையும் அதிகரித்துள்ளோம்.

செல்லினம் செயலியின் பயனர்கள், தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் படிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இக்கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய உள்ளடக்கங்களை தரத்துடன் வழங்குவதென உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக நம் அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் செய்திகளை உடனுக்குடன் தர முயல்கிறோம்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய அம்சம் அனைவருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறோம்.

The post செல்லினம் செயலி பதிப்பு 5.5 appeared first on செல்லினம்.

❌