Normal view

Received before yesterday

சாட்ஜிபிடி மறக்காது

25 April 2025 at 16:09
chatGPT

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அரட்டைச் செயலி இனிமேல் நம்மைப் பற்றிய பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்குமாம்.

chatGPT

இந்த வசதி தற்போதைக்கு சாட்ஜிபிடி புரோ, பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வந்திருக்கிறது. படிப்படியாக அனைவருக்கும் விரைவில் கிடைக்கும். என்ன சொல்றீங்க? இதற்கு முன்புகூட நான் பேசியவற்றை சாட்ஜிபிடி நினைவில் வைத்திருக்கிறதே, திரையின் இடது பக்கத்தில் நான் முன்னர் பேசிய தகவல்கள் எல்லாம் இருக்கின்றனவே என்கிறீர்களா? இப்படிப் பட்டியலிடப்பட்டவை வெவ்வேறு நேரத்தில் நீங்கள் சாட்ஜிபிடியுடன் நடத்திய உரையாடல்கள்தாம். இதைத் திரெட் என்கிறது சாட்ஜிபிடி. அந்த உரையாடலை மீண்டும் தொடர நினைத்தால் தொடரலாம்.

சொல்லப்போனால் நீங்கள் குறைவாக இச்செயலியுடன் பேசும் நபர் எனில் சில மாதங்களுக்கு முன்பு பேசிய உரையாடல் கூட அப்படியே ஓரமாக இருக்கும். அதைச் சொடுக்கி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் உரையாடலைத் தொடர இயலும். ஒரு புதிய உரையாடலில்போது இன்னொரு பழைய உரையாடலில் பேசிய தகவல்களைக் குறிப்பிட்டுப் பேசினால் சாட்ஜிபிடிக்குத் தெரியாது. ஒவ்வொரு புதிய உரையாடலும் தனித்தனியாகத்தான் புரிந்துகொள்ளும். புது அரட்டையில் பேசும் விஷயங்கள் மட்டுமே அதன் நினைவில் இருக்கும். இப்போது அதில்தான் மாற்றம் வந்துள்ளது.

இனிமேல் பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்கும் என்கிறார்கள். பயனுள்ள தகவல், பயனில்லாத தகவல் என்றால் என்னங்கய்யா? எனச் சந்தேகம் வந்தால் சாட்ஜிபிடியிடமே கேட்கலாம். உரையாடும் நபரைப் பற்றிய தேவையான தகவல்கள். அவருடைய வேலை, பிடித்த பொழுதுபோக்கு, கலையார்வம், தற்போது செய்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் போன்றவை. அடிக்கடி சாட்ஜிபிடியிடம் என்ன கேட்கிறீர்கள்? படம் வரையச் சொல்கிறீர்களா? கவிதை எழுதி தரச் சொல்லிக் கேட்கிறீர்களா? நிரல் எழுதித் தரப் பணிக்கிறீர்களா? இத்தகவல்களை நினைவில் வைத்திருக்கும்.

இதன் மூலம் நாம் மீண்டும், மீண்டும் தகவல்களைத் தருவதைத் தவிர்க்கலாம். வழக்கமாக பென்சில் கொண்டு வரையப்படும் கருப்பு வெள்ளைப் படங்களை மட்டும்தான் சாட்ஜிபிடியிடம் கேட்பீர்கள் எனில் எந்தப் படத்தைக் கேட்டாலும் நாம் சொல்லாமலே கருப்பு வெள்ளை பென்சில் கோட்டோவியமாகக் கொடுத்துவிடும். அல்லது நாமே குறிப்பிட்டு, எனக்கு எப்போதுமே பைத்தான் மென்பொருளில்தான் நிரல் வேண்டும், இதை நினைவில் வைத்துக்கொள் எனக் கூறினாலும் போதும். அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்.

இந்தப் புதிய வசதி மூலம் பயனர்களுக்குத் தனிக்கவனம் எடுத்து பொருத்தமான பதில்களைச் சொல்ல இயலும். என்றாலும் சில பயனர்கள் இதை விரும்பவில்லை. கேட்ட கேள்விக்கு பதிலைச் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் எதை எதையோ நினைவில் வைத்திருந்தால் எனக்கு உவப்பில்லை என்போர் அதற்கேற்றவாறு செயலியை அமைத்துக் கொள்ளலாம். மருத்துவத் தகவல்கள், கடவுச்சொற்கள், அரசியல் நிலைப்பாடு, வீட்டு முகவரி போன்றவற்றையெல்லாம் பொதுவாகவே நினைவில் வைத்திருக்காது.

நினைவில் வைத்திருந்தால் சிறப்பான சேவை கிடைக்கும் என நினைப்போர் குறிப்பாக எந்தெந்த தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது நல்லது. அதற்கான வழிகாட்டுதல்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

சாட்ஜிபிடி நினைவகம் பற்றிய குறிப்புகள்.

The post சாட்ஜிபிடி மறக்காது appeared first on செல்லினம்.

பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ

18 April 2025 at 13:30
OpenAI

பதிப்புரிமையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் விலக்கு கோரி கடிதம் எழுதியுள்ளது ஓப்பன்ஏஐ. அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில் சீனா நம்மை இத்துறையில் முந்தாமல் இருக்க இந்த அனுமதி தேவை என்கிறது.

OpenAI

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழிமாதிரி, நாம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பளிச் பளிச்சென்று பதில் தருகிறது. தொடக்க காலத்தில் முன்பே தரவுகள் அளித்துப் பயிற்சி கொடுக்கப்பட்ட மொழிமாதிரியாகத்தான் அறிமுகமானது. மக்கள் கொடுத்த பேராதரவினால் மேம்பாடு கண்டது. தான் கொடுக்கும் பதில்களுக்கான தரவுகளை இணையம் முழுவதில் இருந்தும் சேகரிக்கிறது. அதை அப்படியே மானே, தேனே சேர்த்து நமக்கேற்றவாறு கொடுக்கிறது.

அண்மையில் ஜிப்லி வகை ஓவியம் போலவே வரைந்து கொடுத்துப் பரவலாக கண்டனம் எழுந்ததும் நினைவிருக்கும். நாங்கள் எழுதிப்போட்டிருக்கும் செய்திகளை எடுக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் சிலவற்றின் வழக்குகளையும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தளவில் காப்புரிமை, பதிப்புரிமை விதிகள் ஓரளவுக்கு வலுவாகவும் தெளிவாகவும் உள்ளன. இதை எல்லாம் தளர்த்த வேண்டும் என்கிறது ஓப்பன்ஏஐ.

இதற்குத் தலையாய காரணமாக ஓப்பன்ஏஐ சுட்டுவது சீனாவை. அவர்களுடைய செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகள் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் எல்லாத் தரவுகளையும் எடுத்துப் பயனர்களுக்குக் கொடுக்கின்றனவாம். அது தவறென்பது போலத்தான் கடிதம் இருக்கிறது. ஆனால் அந்தத் தவறை நாங்களும் செய்ய அனுமதி வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் இத்துறையில் அமெரிக்காவை சீனா முந்திவிடும் என்றும் எச்சரிக்கிறது ஓப்பன்ஏஐ. இதைத் தடுக்க எழுநூற்றுச் சொச்சம் பதிப்புரிமைச் சட்டங்களில் இருந்து உடனே விலக்கு கொடுங்கள் என்கிறது கடிதம்.

போகிற போக்கில் ஆப்பிள் நிறுவனத்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்கள். மக்களாட்சிக்கும் விதிகளுக்கும் மதிப்பு கொடுக்காத சீனா போன்ற நாடுகளில் இயங்கும் நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிக்கவேண்டுமாம். ஆப்பிள், அலிபாபா கூட்டினை முறிக்க இந்தப் பரிந்துரை. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் ஆப்பிள் நுண்ணறிவு மேம்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதுதான் தங்கள் களம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்றையும் வியாபாரத்தையும் ஒன்றாக இணைத்து ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தரவுகளையும் தனியாருக்குத் திறந்துவிட்டு செயற்கை நுண்ணறிவைப் புகுத்த வேண்டும் என்பதுதான். அரசாங்கத் தரவுகளை எண்ணிமத் தரவுகளாக (Digital Data) மாற்ற தனியார் நிறுவனங்களைத் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக இதுபற்றி பேச்சுகள் எழுந்துள்ளன.

தரவுகளின் முக்கியத்துவம் அறிந்து இரு நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் இந்தியாவும் இதுபற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி, “இந்தியாவிடம் உற்பத்தித் தரவும் இல்லை, நுகர்வுத் தரவும் இல்லை” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதம் தரவுகளின் உலகில் ஒவ்வொரு நாடும் மேம்படவேண்டியதை உணர்த்துவதாக இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்
1) கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி
2) ஆப்பிள் நுண்ணறிவு
3) ராகுல் காந்தி பேச்சு
4) ஓப்பன்ஏஐ கடிதம்

The post பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ appeared first on செல்லினம்.

❌