Normal view

Received before yesterday

பயணம் எளிதாகும்

Google maps

பயணத் திட்டமிடலுக்காக எடுத்துவைக்கப்படும் திரைபிடிப்புப் (screenshot) படங்களை ஆய்வு செய்யும் அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் வரைபடங்கள் செயலி.

Google maps

கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, விடுமுறையைக் கழிக்க பல்வேறு சுற்றுலாத்தலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் பயணக்கட்டுரைகள், யூடியூப் காணொளிகள், இன்ஸ்ட்டாகிராம் குறுங்காணொளிகள் எனப் பல வகைகளில் நீள்கிறது. ஒவ்வொருமுறையும் நாம் பார்க்கும் இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஒருவேளை அவற்றை திரைபிடிப்பு செய்துவைத்துக்கொண்டால் இந்த வேலை எளிதாகும் வாய்ப்புள்ளது.

ஆனால் அதிகமான இடங்களை திரைபிடிப்பு செய்துவைத்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்து நமது பயணத் திட்டமிடலை எளிமைப்படுத்த புதிய அம்சம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் வரைபட செயலி. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எடுத்த திரைபிடிப்பு படங்களை ஆராய்ந்து அதில் உள்ள இடத்தை குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தக் கூகுள் வரைபட செயலிக்குள் சென்று, அதில் உள்ள “நீங்கள்” பக்கத்தைத் தொடவேண்டும். அதில் திரைப்பிடிப்புகள் என்ற பக்கம் காணப்படும். அதனைத் தொட்டால் இந்த அம்சம் செயல்படும் விதம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். அதனைப் பார்க்கும்பொழுது இந்த அம்சத்தைப் பற்றிய எளிமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

காணொளியைப் பார்த்தபிறகு கூகுள் வரைபட செயலி உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதியளித்துவிட்டால் போதும். அடுத்த முறை நீங்கள் செய்யும் பயணம் தொடர்பாக திரைபிடிப்பு செய்தால் அந்த படத்தைக் கூகுள் வரைபடங்கள் ஆராயத் தொடங்கிவிடும். அந்த படமானது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

படம் ஆராய்ந்து முடிக்கப்பட்ட பிறகு மறுபார்வை (Review) என உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைத் தொட்டால் நீங்கள் விரும்பிய இடத்தைப் பற்றிய தகவல்கள் தோன்றும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இவை அனைத்துமே தானாகவே நடக்கும். ஒருவேளை உங்கள் திரைபிடிப்பு படங்களைக் கூகுள் ஆராய்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கும் வழி இருக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் திரைப்பிடிப்புகளை மட்டும் கூகுள் வரைபட செயலியில் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம்.

இது பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

கூகுள் வலைப்பக்கம்

The post பயணம் எளிதாகும் appeared first on செல்லினம்.

யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி

Apple Emoji

ஆப்பிளின் ஐஓஎஸ் 18.4 இயங்கு தளத்தில், தெறிக்கும் ஊதா வண்ணம், யாழ், காய்ந்த மரம் என எட்டு புதிய உணர்ச்சிக்குறி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Apple Emoji

உணர்ச்சிக்குறி என்பவை மின்னணு தகவல் தொடர்பில் உணர்வுகளை, கருத்துக்களை அல்லது பொருள்களை வெளிப்படுத்தப் பயன்படும் சிறிய சின்னங்கள் ஆகும். இவை உரை அடிப்படையிலான செய்திகளை மேம்படுத்தக்கூடிய காட்சி வழித் தகவல் தொடர்பு முறையாகும். ஆரம்பக்காலத்தில் எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றி, தற்போது பல்வேறு கருத்துக்களை அடையாளப்படுத்தும் வகையில் பரிணமித்துள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது உணர்வுகளுக்கு வண்ணம் பூசும் தூரிகைகள்தாம் உணர்ச்சிக்குறிகள்.

இப்போது ஐஓஎஸ்18.4 இயங்குதளத்தில் புதிதாக எட்டு உணர்ச்சிக்குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழே பைகள் கொண்ட முகம், கைரேகை, தெறிக்கும் ஊதா வண்ணம், வேர் காய்கறி, இலையற்ற மரம், யாழ், மண்வெட்டி, சார்க் கொடி என நீள்கிறது இந்த வரிசை. முதல் உணர்ச்சிக்குறி உங்கள் சோகத்தையும், சோர்வையும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர நிச்சயம் உதவும்.

பட்டியலில், இறுதியாக உள்ள உணர்ச்சிக்குறி சார்க் நாட்டின் தேசியக்கொடியாகும். சார்க் என்பது ஒரு தீவு நாடு. இது பிரான்ஸிற்கு அருகே அமைந்துள்ளது. வெறும் ஐந்நூறு மக்கள் மட்டுமே வசிக்கும் இந்நாட்டில் பல்வேறு வித்தியாசமான விதிகள் இருக்கின்றனவாம்.‌ இன்றுவரை இந்நாட்டில் மகிழுந்து ஓட்டுவதற்கு அனுமதி இல்லையாம். மாறாக இந்நாட்டு மக்கள் மிதிவண்டி, குதிரை வண்டியையே போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் யூனிகோடின் செப்டம்பர் 2024 பரிந்துரைகளின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சில உணர்ச்சிக்குறிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நாம் அறிந்ததுதான். புதிய அரசாங்கம் பழைய தேசியக்கொடியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பின்பற்றிய ஆப்பிளும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ள கொடியைக் கொண்டுவந்துள்ளது.

பழைய கொடியில் மூன்று நிறப்பட்டைகள் இருந்தன. அவை முறையே சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகும். நடுவிலிருந்த வெள்ளை நிறப் பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. இப்போது உள்ள புதிய கொடியில் சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய உணர்ச்சிக்குறிகள் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • மு.‌இசக்கிமுத்து

The post யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி appeared first on செல்லினம்.

திறக்காத ஆண்டிராய்டு பூட்டு

30 April 2025 at 13:30
Android 16

ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தில், திறன்பேசிகளின் பூட்டுத்திரையில் யூஎஸ்பி வழியாகப் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.

Android 16

ஆண்டிராய்டு 16 இயங்குதளம் வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இதற்கான முன்னோட்டம் வெளியானதிலிருந்தே பயனர்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இதன் பீட்டா 4 இயங்குதளம், பயனர்களின் கருத்துகளைப் பெறுவதற்காகக் கூகுள் பிக்சல் திறன்பேசிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் தங்கள் பலதரப்பட்ட கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர். இவற்றையெல்லாம் கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமே அதிகாரப்பூர்வ வெளியீட்டின்போது வெளியாகும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முன்னோட்டத்தில் வெளியான அம்சங்கள் பலவும் பயனர்களுக்குக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பூட்டுத்திரையில் யூஎஸ்பி மூலம் தரவுகளைப் பரிமாற்றுவதைத் தடுக்கும் அம்சம். இது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழ வாய்ப்புள்ளது. பொதுவாகப் பலர் தங்கள் கருவிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தெரியாதவர்கள் வழங்கும் யூஎஸ்பிக்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்.

ஏனெனில் அதில் ஏதேனும் துணைபொருள்கள் இருந்தால் உங்கள் கருவியின் தரவுகள் திருடப்படும் வாய்ப்புள்ளது. ஆண்டிராய்டு திறன்பேசிகளைப் பொறுத்தவரை, பூட்டுத்திரையிலும் அதனோடு யூஎஸ்பி இணைத்துப் பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்கள் திறன்பேசி திருடப்பட்டாலோ அல்லது காணாமல்போனாலோ கூட யூஎஸ்பியோடு இணைக்க முடியும்.

அவ்வாறு செய்தால் உங்கள் ஆண்டிராய்டு திறன்பேசியைத் திறக்காமலே அதன் தரவுகளை வேறொரு கருவிக்குப் பரிமாற்றம் செய்து அதனைப் பயன்படுத்த முடியும். இதனைத் தடுக்க முக்கியமான வழிகள் விரலியின் (Pen Drive) தரவு அலைகளை நிறுத்துவதும், பூட்டுத்திரையில் அதனை இணைக்க முடியாதவாறு தடுப்பதுமே ஆகும். இதற்காகத்தான் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் பூட்டுத்திரையில் யூஎஸ்பியோடு இணைக்க முடியாது. இணைக்கப்பட்ட பிறகு திரை அணைக்கப்பட்டாலும் பரிமாற்றம் தடுக்கப்படும்.

இதற்கு முன்னர் ஆண்டிராய்டு 12 இயங்குதளத்தில், யூஎஸ்பி தரவு அலைகளை முடக்கும் வகையிலான அம்சம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆனால் அது பயனர்களின் கரங்களை நேரடியாகச் சென்று சேரவில்லை. அதன்பின்னர் ஆண்டிராய்டு 15 இயங்குதளத்திலும் கூட அதன் நிலை மேம்படவில்லை. இப்போது இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்த முடியும். இதனைச் செயல்படுத்தினால் அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க முடியும். தரவுகளைப் பரிமாற்றம் செய்யும்பொழுது அதன் இயங்குநிலை தரவுகளைப் பாதுகாக்கும் நினைவக குறியிடல் நீட்டிப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இவை சிறிய மாற்றங்களாக இருந்தாலும் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

  • மு. இசக்கிமுத்து.

The post திறக்காத ஆண்டிராய்டு பூட்டு appeared first on செல்லினம்.

மொழியோடு விளையாடு

27 April 2025 at 13:30
Google Translate

கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் தேடுதலை எளிமைப்படுத்தவும் , தெரியாத மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ளவும் புதிதாக இரு அம்சங்கள் வரவுள்ளன. 

Google Translate

கூகுள் மொழிபெயர்ப்பு என்பது இலவசமாகக் கிடைக்கும் இணையதளம் மற்றும் கைப்பேசி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு சேவையாகும். இது உலகளாவிய தகவல் தொடர்பை எளிமையாக்கிவருகிறது. ஒவ்வொரு பதிப்பிலும் இதன் தரம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. கூகுளிடம் பலமான மொழிபெயர்ப்பு கட்டமைப்பு இருந்தாலும், அதன் மூலம் ஒரு தெரியாத மொழியை எளிதாகத் தெரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தித்தான் டியோலிங்கோ போன்ற செயலிகள் பயனர்களை விளையாட்டு அனுபவத்திலேயே வைத்துக்கொண்டு மொழியைக் கற்க உதவிபுரிந்தன. புரிகின்றன.

ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு அதன் எளிமைப்படுத்துதல் மிக அவசியம். அதனால் டியோலிங்கோவைப் போன்றே அம்சம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது கூகுள். பயிற்சி (Practice) என்ற பொத்தானின் மூலம் அதனைச் சாத்தியப்படுத்த விரும்புகிறது. பொதுவாக கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் நீங்கள் ஒரு சொல்லை உள்ளிட்டு அதன் பொருளை உங்களுக்குத் தேவையான மொழியில் தெரிந்துகொள்கிறீர்கள். அப்போது அந்த மொழிபெயர்ப்புப் பக்கத்தின் அருகே பயிற்சி என்ற புதிய பொத்தான் காண்பிக்கப்படும்.

அதனைத் தொட்டால் அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்கான புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் சிறு சிறு செயல்பாடுகள், சொல் விளையாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்துவதற்கு உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும். அதோடு கூகுள் மொழிபெயர்ப்பு செயலிக்கு ஒலிவாங்கிக்கான அனுமதியையும் வழங்க வேண்டும். இது மட்டுமில்லாது இன்னும் ஒரு மாற்றமும் வரவுள்ளது. 

தேடுதலை எளிமைப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இந்த அம்சம். ஒரு சொல்லைக் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் உள்ளிடுகிறீர்கள். அப்போது அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறது எனில், அதே சொல்லை மீண்டும் தேடுதல் பொறியிலும் உள்ளிடுவீர்கள். இப்போதைய புதிய அம்சத்தில் உங்கள் மொழிபெயர்ப்புப் பக்கத்திற்கு அருகிலேயே கூகுளின் குறியீடு தோன்றும். அதைத் தொட்டால், நேரடியாகத் தேடுதல் பொறி வழங்கும் முடிவுகள் தோன்றும்.

இந்த இரு புதிய அம்சங்கள் பற்றிய குறிப்புகள் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியின் புதிய பதிப்பான 9.7.102 வில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பதிப்பு பயனர்களின் கைகளை வந்து சேரும்போதுதான் இதனைப் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவரும்.

  • மு.‌இசக்கிமுத்து.

The post மொழியோடு விளையாடு appeared first on செல்லினம்.

கூகுள் வெர்டெக்ஸ் காணொளி

21 April 2025 at 13:37
Vertex AI

வெறும் உரைக் குறிப்புகளைப் பயன்படுத்தி முழு காணொளிகளை உருவாக்கக்கூடிய வெர்டெக்ஸ் ஏஐ ஸ்டுடியோ (Vertex AI Studio) என்ற செயற்கை நுண்ணறிவு கருவித்தொகுப்பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vertex AI

இது ஒரே ஒரு தொழில்நுட்பம் அல்ல. பல்வேறு தொழில்நுட்பங்களின் தொகுப்பு எனலாம். அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், படங்களை உருவாக்குவதற்கு இமேஜென் 3, காணொளிகளை உருவாக்குவதற்கு வியோ 2, அந்த காணொளிகளுக்கு ஒலி கொடுப்பதற்கு சிர்ப் செயற்கை நுண்ணறிவும், பின்னணி இசையை வழங்குவதற்கு லிரியாவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி அனைத்தையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும் என்பது புது விதமாகத்தானே இருக்கிறது.

இத்தகைய காணொளிகளை உருவாக்குவதற்கு எந்த திருத்துதலும், அதிகப்படியான உழைப்பும் தேவையில்லை. உரைக் குறிப்புகளையோ (Prompts) படங்களையோ அல்லது குறிப்புகளையோ கொடுத்து உங்கள் காணொளிகளை உருவாக்கிக்கொள்ளலாம். முதலில் காணொளியை உருவாக்குவதற்கு இமேஜென் 3 செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும். அதில் உரைக்குறிப்புகளை வழங்கி படங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு காட்சிக்குமான படங்களையும் தனித்தனியாக உருவாக்கிக்கொள்ளலாம்.

அடுத்த கட்டமாக படங்களை காணொளியாக மாற்றுவதற்கு களத்தில் இறங்குகிறது வியோ 2. இதனை பயன்படுத்துவது ஒரு திரைப்படத்தை உருவாக்குவது போன்ற அனுபவத்தைத் தருகிறது. ஏனெனில் அந்தக் காட்சிகள் டிரோனைப் பயன்படுத்தி எடுத்ததைப் போன்று இருக்க வேண்டுமா அல்லது வேறு விதமாக இருக்க வேண்டுமா என்பதைக் கூட நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் விரும்பாத எதையாவது செயற்கை நுண்ணறிவு சேர்த்துவிட்டால், அதையும் மாயத்திருத்தியைப் பயன்படுத்தி நீக்கிவிடலாம்.

மாயத்திருத்தியைப் பற்றிய கட்டுரை ஒன்று ஏற்கனவே செல்லினத்தில் வெளியாகியிருக்கிறது. தேவைப்படுபவர்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இப்போது நமது காணொளிக்கான காட்சிகள் உருவாகிவிட்டன. அடுத்த கட்டம் ஒலியை இணைப்பதுதான். அதற்கு சிர்ப் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. உங்கள் கதாபாத்திரங்கள் பேசவேண்டிய ஒலியை அதன் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம். அடுத்து பின்னணி இசையை வழங்குவதற்காக கூகுள் டீப்மைண்ட்டின் உருவாக்கமான லிரியா பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அவற்றின் இணைப்புகளை கீழே இணைத்துள்ளோம்.

இந்த தொழில்நுட்பங்களை செயற்கை நுண்ணறிவு உலகின் மைல்கல் என்றே கூறிவிடலாம். இவற்றை நிரலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பயன்டுத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்:

இமேஜென் 3

வியோ 2

சிர்ப்

லிரியா

மாயத்திருத்தி

  • மு.‌ இசக்கிமுத்து

The post கூகுள் வெர்டெக்ஸ் காணொளி appeared first on செல்லினம்.

புதிய வடிவில் முரசு அஞ்சல்

13 April 2025 at 15:04
DateSoftLaunch-Featured-2025-04-14

முரசு அஞ்சல், மறு உருவாக்கம் காணப்போவதாக அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறியுள்ளார். அதற்கான முன்னோட்டக் காணொளியைக் கீழே இணைத்துள்ளோம்.

DateSoftLaunch-Featured-2025-04-14

முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு முரசு அஞ்சல் அறிமுகமான எம்எஸ் டாஸ் காலம் முதலே இதைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரைத்ததும் முரசு அஞ்சல் வெற்றியின் காரணங்களில் ஒன்று.

அச்சுத் துறையில் மறுலர்ச்சியை உண்டாக்கித் தொடர்ந்து விண்டோஸ் தனிக்கணினிகள், திறன்பேசிகள் என ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றத்தின் போதும் முரசு அஞ்சல் தன்னை மேம்படுத்தி வந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இருந்த தமிழ் உள்ளீட்டு முறையின் தேவையை நிறைவு செய்து அழகான தமிழ் எழுத்துருக்களை பயனர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்தது. காலம் பல ஆனாலும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பிக்க முரசு அஞ்சல் ஒரு போதும் தவறியதில்லை. யூனிக்கோடு நடைமுறைக்கு வந்தபோது அதற்கான மேம்பாடுகளை உடனே வழங்கியது முரசு அஞ்சல். விண்டோஸ் 2000த்தில்தான் யூனிகோடு முதன்முதலில் அறிமுகம் கண்டது. அதற்கு முன்னதாகவே முரசு அஞ்சல் எழுத்துருக்கள் யூனிகோடுக்கு மாற்றம் கண்டன.

இப்படி எல்லா விதத்திலும் முன்னோடியாக இருக்கும் முரசு அஞ்சல், திறன்பேசி உலகத்திலும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கைப்பேசிகளில் தமிழைத் தட்டெழுத உதவிய செல்லினம், திறன்பேசிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது வசதிகளைச் சேர்த்துக்கொண்டே வந்தது. செல்லினத்தின் அடிப்படையும் முரசு அஞ்சலே. இந்த ஒளிமயமான வரலாற்றைப் பார்க்கும்போது, பயனர்களுக்கு புதுவித தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது முரசு அஞ்சல் என்பதை நாம் அறிய இயலும்.

இத்தகைய முரசு அஞ்சல் இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட உள்ளது. இது வெறும் மேம்பாடு அல்ல, முழுமையான மறு உருவாக்கம் என்றே கூறிவிடலாம். நீங்கள் ஆசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மாணவர், காணொளி கலைஞர், கணித்தமிழைப் பயன்படுத்தும் தமிழ் ஆர்வலர் என யாராக இருந்தாலும் இந்த வெளியீடு உங்களுக்காகத்தான்.

வெளியீட்டு நிகழ்வு வருகின்ற ஜூன் 27 இல் கோலாலம்பூரிலும், ஜூலை 5இல் சிங்கப்பூரிலும், ஜூலை 12 அன்று சென்னையிலும் நடைபெற இருக்கிறது. இந்த நாள்களை உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று முத்து நெடுமாறன் பதிவு செய்துள்ளார்.

இது பற்றிய மேலதிகத் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • இசக்கிமுத்து

The post புதிய வடிவில் முரசு அஞ்சல் appeared first on செல்லினம்.

ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் சிறப்புச் செயலி

12 April 2025 at 13:30
Apple Vision Pro

ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் (Immersive Video) கையாளும் வகையிலான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Apple Vision Pro

உள்ளார்ந்த காணொளிகள் தனித்துவமான 360 பாகை ரக படக்கருவிகளைப் பயன்படுத்தி எடுக்கப்படுகின்றன. இது ஒரே நேரத்தில் பல திசைகளில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன் கொண்டவை. படக்கருவிக்குள்ளேயே அனைத்துக் காட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இது அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளார்ந்த காணொளியைத் தந்துவிடுகிறது. இது பொதுவாக மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

மெய்நிகர் கருவிகளைப் பயன்படுத்தி இந்த காணொளிகளைப் பார்க்கும்போது, பார்வையாளர்களுக்கு இது காட்சிக்குள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்குகிறது. உள்ளார்ந்த காணொளிகள் வழக்கமான காணொளிகளிலிருந்து மாறுபட்ட புதுவித அனுபவத்தை வழங்குகின்றன. திரையில் நடக்கும் ஒவ்வொன்றும், தங்கள் அருகிலேயே இருப்பது போன்ற தோற்றம் உருவாகிறது. இது புதிய கதை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன் முப்பரிமாண விளைவே இவை அனைத்திற்கும் காரணமாக உள்ளது.

இத்தகைய காணொளிகளை கையாள்வதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த செயலியைப் பயன்படுத்தி உள்ளார்ந்த காணொளிகளைக் உள்ளீடு செய்து, அவற்றை பல்வேறு தொகுப்புகளாக உருவாக்க முடியும். அதோடு முக்கியமான ஒன்றாக இவற்றின் இயங்குநிலை தரவுகளை (Meta data) பார்க்கவும், திருத்தியமைக்கவும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காணொளிக் கோப்புகளை வரிசைப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

இந்த செயலியின் முக்கியமான நோக்கம் ஆப்பிள் விஷன் புரோ கருவிகளை அனைவரும் பயன்படுத்துவதை எளிமையாக்குவதாகும். ஏற்கனவே விஷன் புரோவைப் பயன்படுத்த விஷன்ஓஎஸ் செயலி இருக்கும்போது இன்னொன்று எதற்கு என்ற சந்தேகம் எழும் வாய்ப்புள்ளது. விஷன்ஓஎஸ் செயலி விஷன் புரோவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மட்டுமே. அதில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் கையாள்வதுதான், உள்ளார்ந்த காணொளி பயன்பாட்டு செயலியின் வேலை. இதனை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விஷன் புரோ கருவிகளோடு இணைத்துப் பயன்படுத்த முடியும்.

இந்த செயலி ஆப்பிள் மேக் கணிணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் மேக் கணிணி M1 ரக நுண்சில்லைக் கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து

The post ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் சிறப்புச் செயலி appeared first on செல்லினம்.

மாயத் திருத்தி

11 April 2025 at 13:30
magic editor

கூகுள் புகைப்படங்கள் செயலியில் உள்ள மாயத் திருத்தி (Magic Editor) அம்சத்தில் ஏற்பட்ட சேமிப்பது தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

magic editor

ஆண்டிராய்டில் மிகவும் புகழ்வாய்ந்த புகைப்படத் தொகுப்பு செயலிகளில் ஒன்று கூகுள் புகைப்படங்கள். இது புகழடைய முக்கியமான காரணம் ஒன்றுள்ளது. அது பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கில் தேவையான புகைப்பட காப்புப்பிரதிகளைப் பதிவேற்றி வைத்துக்கொள்ள அனுமதித்ததுதான். ஒரு முறை பதிவு செய்து வைத்துக்கொண்டால் எப்போதும் அழியாது என்பது மக்களைக் கவர்ந்துவிட்டது போலும். ஆனால் அது இப்போது வரம்பிற்குள் அடங்கிப் போய்விட்டது. மக்கள் மத்தியில் கூகுள் புகைப்படங்களைக் கொண்டு சேர்க்க பல்வேறு விதமான அம்சங்கள் அறுமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று மேஜிக் எடிட்டர் என்ற மாயத் திருத்தி.

இதனைப் பயன்படுத்துவதற்குப் பெரிய அளவிலான திருத்தும் திறன்கள் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்படும் விதமும் பெயரைப் போன்றே மாயவித்தையாகத் தான் இருக்கிறது. ஏனெனில் இதன்மூலம் வானத்தின் நிறத்தையும் மேகங்களின் வடிவத்தையும் மாற்றலாம், பொருள்களையும் மக்களையும் நகர்த்தலாம், உடலுறுப்புகளின் அளவை மாற்றலாம். புகைப்படத்தில் நீங்கள் விரும்பாதவற்றை அழிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் உங்கள் புகைப்படங்களில் நீங்கள் நினைக்கும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் பயனர்கள், உண்மையான படத்தையும் திருத்தப்பட்ட படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.‌ எது உண்மையானது என்று கண்டுபிடிக்கவே முடியாது எனச் சிலாகிக்கிறார்கள். எது எப்படியோ இந்த மாயவித்தைக்கு கூகுள் ஒன் என்ற மந்திரம் தேவைப்படுகிறது. ஆம் கூகுள் ஒன் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக, இந்த மாயவித்தை திருத்தியில் திருத்திய படங்களைச் சேமிக்க முடியவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயனர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சினையை எழுப்பி வந்தனர். இப்போது இந்தக் குறைபாட்டைச் சரி செய்துவிட்டோம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.

அதில் “மாயத் திருத்தியில் சேமிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் ஒரு பிழைதிருத்தத்தை உருவாக்கியுள்ளோம்.‌ இப்போது நீங்கள் உங்கள் திருத்தங்களைத் தடையின்றி சேமிக்க முடியும். மாயத் திருத்தியைச் சிறந்ததாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், உங்கள் பங்களிப்புகள் அந்தச் செயல்பாட்டின் முக்கியமான பகுதியாகும்” எனக் கூறியுள்ளது.

இதன் செயல்படும் விதம் பற்றிய விளக்கமான கட்டுரை ஒன்று ஆண்டிராய்டு அத்தாட்டி தளத்தில் வெளியாகியுள்ளது. தேவைப்படுபவர்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

The post மாயத் திருத்தி appeared first on செல்லினம்.

யூடியூப் தரும் வசந்தகாலப் பரிசு

8 April 2025 at 13:30
Youtube

யூடியூப் செயலி குறுங்காணொளிகளை எளிதாகத் திருத்துவதற்கான ஐந்து புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

Youtube

டிக்டாக் போன்ற செயலிகள் அறிமுகமாகி குறுங்காணொளிகள் என்ற புதிய உலகத்தை உருவாக்கிவிட்டன. இந்த உலகத்தில் தாமும் எதையாவது செய்து முன்னேறிவிட வேண்டும் என எண்ணும் பலருக்கு ஏதோ ஒரு நம்பிக்கையை இவை வழங்கி வருகின்றன. தொடக்கத்தில் இத்துறையில் பெரும் வளர்ச்சியைக் கண்ட டிக்டாக், அதன்பிறகு பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டது. டிக்டாக் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க பல்வேறு செயலிகளும் போட்டி போட்டு வருகின்றன. அதே துறையில் வேறொரு பரிணாமத்தில் இருந்த யூடியூப், தன்னை வெகு சீக்கிரமாகவே இதற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டது. அதுவரை யூடியூப் பயனர்கள் பெரிய காணொளிகளுக்கு மட்டுமே பரிட்சயமாக இருந்தனர்.

அவர்களை குறுங்காணொளிகளைப் பார்க்கவும், உருவாக்கவும் பழக்கப்படுத்தியது யூடியூப். இதில் குறுங்காணொளிகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே அவ்வப்போது இதில் புதிய மேம்பாடுகள் வழங்கப்படுவது வழக்கம். இப்போது குறுங்காணொளிகளுக்கெனவே ஐந்து புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் மேம்பாடாக குறுங்காணொளிகளை எளிதாகத் திருத்துவதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இனிமேல் ஒவ்வொரு சிறிய பகுதியையும் பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ, மாற்றியமைக்கவோ முடியும். உங்கள் காணொளி நீங்கள் விரும்பியதைப் போன்று வந்திருக்கிறதா என்பதைப் தெரிந்துகொள்ள முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியும் வந்துள்ளது.

குறுங்காணொளி உருவாகிவிட்டது, அடுத்து என்ன? நீங்கள் விரும்பும் ஒலியோடு அதனைப் பொருத்துவதுதானே. அந்த வேலையை எளிமையாக்குவதுதான் இரண்டாவது அம்சம். இனிமேல் நீங்கள் தேவையான ஒலியைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும். தானாகவே அந்த ஒலியைப் பொருத்தி இறுதி காணொளியை உங்கள் கையில் தந்துவிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த அம்சம் புதுவித போகுக்குகளை (trends) உருவாக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கானது. இதற்கு வார்ப்புருக்கள் (Template) மிகவும் அவசியமானவை. இனிமேல் அவற்றை எளிதாக உங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்தே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு வார்ப்புருவை பயன்படுத்துகிறீர்கள் எனில், அதனை முதல் முறையாக உருவாக்கியது யார் என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியும்.

அடுத்த அம்சமாக ஒட்டுப்படம் (Sticker) வருகிறது. ஒட்டுப் படங்களை இனிமேல் குறுங் காணொளிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனையும் உங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம். இதே ஒட்டுப்படங்களை செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தருவதுதான் அடுத்த அம்சம். உங்கள் மனத்தில் தோன்றும் சிந்தனைகளை ஒட்டுப்படங்களாக மாற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது இந்த அம்சம். சில வரிகளில் உங்களுக்குத் தேவையான விதத்தில் விவரித்தால், உடனடியாக ஒட்டுப்படம் தயாராகிவிடும்.

இது தொடர்பான அறிவிப்பை யூடியூப் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளது.

  • மு.‌ இசக்கிமுத்து

The post யூடியூப் தரும் வசந்தகாலப் பரிசு appeared first on செல்லினம்.

தரத்தை மேம்படுத்தும் நெட்பிளிக்ஸ்

7 April 2025 at 17:04
Netflix

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஒளிபரப்புத் தரத்தை மேம்படுத்துவதற்காக, ஹெச்டிஆர் 10 + தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னரே காணொளிகளை ஹெச்டிஆர் (High Dynamic Range) தரத்தில் வழங்கத் தொடங்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இது இப்போது ஹெச்டிஆர் 10+ தரத்திற்கு மேம்பாடு அடைந்துள்ளது. இந்த மேம்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ள, முதலில் ஹெச்டிஆர் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஹெச்டிஆர் என்பது உயர் இயக்க வரம்பு என விரிவாக்கம் பெறுகிறது.

Netflix

வழக்கமான காட்சித் தொழில்நுட்பங்களில் ஒரு காணொளியைப் பார்க்கும்போது, அதில் உள்ள வெளிச்சமான பொருள்கள் அதீத வெளிச்சமாகவும், இருண்ட நிலையில் உள்ள பொருள்கள் அதிகமாக இருண்ட நிலையிலும் பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியும். சில சமயங்களில் இருண்ட நிலையில் உள்ள பொருள்கள் முழுவதும் மறையும் நிலையும் ஏற்பட்டது. ஹெச்டிஆர் தொழில்நுட்பத்தின் முக்கியமான நோக்கமே இந்த ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதுதான்.

இது ஒளி மாறுபாட்டைக் குறைத்து, அதனை மனிதக் கண்களுக்கு ஏற்றார்போல் மீட்டுருவாக்கம் செய்கிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு மிகவும் ஆழ்ந்த, மறக்க முடியாத காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்த பிறகு தங்களின் ஒளிபரப்பும் நேரம் 300 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. என்னதான் அற்புதமான தொழில்நுட்பமாக இருந்தாலும் அதற்கும் மேம்பாடு வேண்டுமல்லவா.

ஆகையால் ஹெச்டிஆரின் மேம்பட்ட வடிவமான ஹெச்டிஆர் 10+ ஐ தனது ஒளிபரப்புத் தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது நெட்பிளிக்ஸ். ஹெச்டிஆர் 10 + ஐப் பற்றிப் பார்க்கும்பொழுது, அது காணொளியின் ஒவ்வொரு காட்சியையும்(Frame)ஆய்வு செய்து, அதில் ஒளி அளவு மாற்றங்களைச் செய்கிறது. இது இயங்குநிலை மெட்டா தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

இரண்டுக்குமான வித்தியாசத்தை ஓர் உவமையோடு எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஹெச்டிஆர் என்பது ஒரு சமையல் குறிப்பைப் பயன்படுத்தி, அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் உணவைத் தயாரிப்பது போன்றது. அது நன்றாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் ஹெச்டிஆர் 10 + ஐப் பொறுத்தவரை, இது அதே சமையல்குறிப்பைப் பயன்படுத்தினாலும், நமது தேவைக்கேற்ப உப்பு, மிளகு, மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது போன்றது. இந்த வித்தியாசத்தால்தான் ஹெச்டிஆர் 10+ காட்சிகள் பெரும்பாலும் மிகவும் உயிரோட்டமானதாகவும் நுண்ணிய விவரங்களுடனும் இருக்கின்றன.

இதனைப் பெற விரும்பும் பயனர்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவைப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். பயனர்களின் கருவியானது AV1 காணொளி குறியீட்டு வடிவத்தையும் ஹெச்டிஆர் 10+ ஐயும் ஒத்துழைக்க வேண்டும். நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது பற்றித் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு.‌ இசக்கிமுத்து

The post தரத்தை மேம்படுத்தும் நெட்பிளிக்ஸ் appeared first on செல்லினம்.

வண்டியோட்டு, விளையாடு

5 April 2025 at 13:30
Android Auto

வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆட்டோ செயலில், ஆங்கிரிபேட்ஸ் 2, பீச் ஃபக்கி ரேசிங், கேண்டி கிரஷ் போன்ற காணொளி விளையாட்டுகளை விளையாடும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Android Auto

ஆண்டிராய்டுஆட்டோ செயலி கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்டிராய்டு திறன்பேசியோடு இணைத்துப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது . ஆண்டிராய்டு திறன்பேசி செயலிகளை வாகனங்களின் திரை மூலமாகவே இயக்க முடியும் என்பது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அழைப்புகளை மேற்கொள்வது, வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்துவது, பிடித்த பாடல்களைக் கேட்பது என நமது பயணத்தை எளிதாக்கியுள்ளது.

ஆண்டிராய்டுஆட்டோ, திறன்பேசியுடன் வாகனத்தை இணைக்கும் பாலம் போன்றது. ஆண்டிராய்டு ஆட்டோமேட்டிவ் இயங்குதளம் என்பது மூளையைப் போன்றது. வாகனத்திலேயே நிறுவப்பட்டிருக்கும். காலநிலை, வானொலி, வழிகாட்டுதல் உடன் வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சில வசதிகளும் உண்டு. இதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காரின் திரையில் காணொளி விளையாட்டுகளை விளையாடும் அம்சம் கொண்டுவரப்பட்டது. முதற்கட்டமாக அவதார்வேல்டு, ரோப்லாக்ஸ் போன்ற விளையாட்டுகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டன.

இதைப் பார்த்த ஆண்டிராய்டு ஆட்டோ  பயனர்கள் எங்களுக்கும் விளையாட்டுகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறது கூகுள் நிறுவனம். ஆண்டிராய்டுஆட்டோ பயனர்களுக்கும் காணொளி விளையாட்டுகள் வழங்கப்படவுள்ளன. 

இதனை 9டூ5கூகுள் தளம் முதலில் கண்டறிந்துள்ளது. ஆண்டிராய்டுஆட்டோவின் புதிய 14.1 பதிப்பில் இந்த அம்சம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிரிபேட்ஸ் 2, பீச்ஃபக்கிரேசிங், கேண்டிகிரஷ், சோடா சாகா, ஃபார்ம்ஹீரோஸ் என நான்கு விளையாட்டுகள் இதில் உள்ளன. பயனர்களின் வரவேற்பைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இந்த விளையாட்டுகளை வாகனம் ஓட்டும்போது விளையாட முடியாது. மாறாக ஓய்வு நிலையில் இருக்கும்போது மட்டுமே விளையாட முடியும். வாகன ஓட்டியின் கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. வாகனம் எப்போது நகரத் தொடங்குகிறதோ, அப்போது தானாகவே விளையாட்டுகள் மூடப்படும். அதோடு அதற்கான குறியீடும் சாம்பல் நிறத்தில் திறக்க முடியாதபடி மாறிவிடும். 

கசிந்துள்ள தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பைத் தந்தாலும், இது பற்றிய எந்த அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் வெகு விரைவில் இந்த புதிய அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

  • மு.‌இசக்கிமுத்து

The post வண்டியோட்டு, விளையாடு appeared first on செல்லினம்.

ஐஓஎஸ் 18.4 தமிழ் பயனர் இடைமுகம்

3 April 2025 at 14:43
iOS18.4

ஆப்பிள் தனது ஐஓஎஸ் 18.4 புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு ஆப்பிள் நுண்ணறிவில் மாற்றங்கள், ஆப்பிள் விஷன் புரோவிற்கு புதிய செயலி, கார் பிளே மென்பொருளில் மாற்றங்கள் எனப் பல புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளன.

iOS18.4

ஆப்பிள் விஷன் புரோ போன்ற ஒரு கருவியை வெறும் காகித வழிகாட்டிகளைப் பயன்படுத்தி இயக்குவது கடினமான விஷயம்தான். இந்த புதிய பதிப்பில் ஆப்பிள் விஷன் புரோ கருவிக்கு புதிய செயலி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது விஷன் புரோவை எளிதாகவும், அதே நேரத்தில் பல்வேறு விதமாகவும் பயன்படுத்த வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வழிமுறைகளும் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. அதோடு காட்சி நுண்ணறிவு அம்சம் ஐபோன் 15 புரோ, ஐபோன் 15 புரோ மேக்ஸ் ரக திறன்பேசிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப்பிள் நுண்ணறிவு முக்கியமான அறிவிப்புகளை மட்டும் பூட்டுத்திரையில் காட்டும் அம்சம் ஒன்றை வழங்கி வருகிறது. ஆனால் நமக்கு எது முக்கியம் என்பதை நாம்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஆப்பிள் நுண்ணறிவு அதனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தது. இப்போதைய புதிய பதிப்பில் நீங்களே தேவையான செயலிகளிலிருந்து மட்டும், அறிவிப்புகளைப் பூட்டுத்திரையில் பெற முடியும்.

அதோடு ஆப்பிள் நுண்ணறிவின் ஒவ்வொரு முக்கியமான அம்சத்தையும் இனிமேல் தனியாகச் சென்று பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சிரியோடு பேசு, காட்சி நுண்ணறிவைத் திற போன்றவற்றை உள்ளடக்கிய, கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இன்னும் பல அம்சங்களுக்கான கட்டளைகள் இதில் உள்ளன. ஆப் ஸ்டோர் விமர்சனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு சுருக்கக்குறிப்பு, சிரி-க்கான புதிய இயங்கு படங்கள் என ஆப்பிள் நுண்ணறிவின் புதிய மாற்றங்கள் நீள்கின்றன.

ஆப்பிளின் மகிழுந்துகளில் தகவல்களை வழங்கும் மென்பொருளான கார் பிளேவிலும் (car play) புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பெரிய திரைகளைக்கொண்ட மகிழுந்துகளில், திரையில் மூன்று வரிசைகளாக உள்ளீட்டிற்கான குறியீடுகளைக் காண்பிக்க உள்ளது. முன்பு இது இரண்டாக இருந்தது. அதோடு மின்சார வாகனங்களில், மின்னேற்ற நிலையங்களை எளிதில் கண்டறியும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து ஆப்பிளில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது‌. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்ட்ட அம்சம் இது. உள்ளூர் மொழிகளில் தங்கள் திறன்கருவிகளைப் பயன்படுத்தக் காத்திருந்தோருக்கு நல்வாய்ப்பு. ஆனால் இந்த மாற்றத்தில் தமிழ் எழுத்துரு வடிவம் அழகாக இல்லை என்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் எழுத்துகளின் இயல்பான வளைவு நெளிவுகள், ஆப்பிளின் புதிய தமிழ் எழுத்துருவில் இல்லை. தூ, நூ போன்ற எழுத்துகள் மிகவும் நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு எழுத்துகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாததும் குறையாகவே உள்ளது. துணைக்கால், புள்ளி போன்றவற்றின் அளவு மிகவும் சிறிதாக இருக்கின்றன. எழுத்துகள் சேரும்போது வடமொழி போலத் தெரிகிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவர் சுந்தர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

எழுத்தாளர் பா.ராகவன் அவ்வப்போது ஆப்பிள் மேக் கணினியை அதன் எழுத்துரு அழகுக்காகவே பயன்படுத்துவதாகக் குறிப்பிடுவார். அவரும் தன்னுடைய அதிருப்தியை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். எழுத்துருக்கலைஞர் தாரிஸ் அஸிஸ் கூட இதுபற்றி தன்னுடைய கருத்தை ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறேன் என பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்னும் சிலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முக்கியமான வரவேற்கத்தக்க முன்னேற்றம். குறிப்பாக இந்தியாவில் மொழி தொடர்பான பேச்சுகள் அதிகம் நடக்கும் காலகட்டம் இது. செய்தித்தாளைத் திறந்தால் மொழி பற்றிய செய்தி இல்லாத நாளே இல்லை என்றாகிவிட்டது. பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்க மொழியைக் காப்பது அவசியம் என்கிற விழிப்புணர்வு ஓங்கி இருக்கும்போது பத்து இந்திய மொழிகளில் பயனர் இடைமுகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மற்ற மொழி எழுத்துருக்களில் கவனம் செலுத்தியது போல், தமிழ் எழுத்துருவில் கவனம் காட்டாமல் இருப்பது ஒரு குறையே. இருப்பினும் பயனர்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயல்படுவதில் ஆப்பிள் அக்கறை காட்டும் நிறுவனம். apple.com/feedback தளத்தின் வழி அவர்கள் பயனரின் குறைகளை பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். இந்தக் குறையை விரைவில் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  • மு. இசக்கிமுத்து

The post ஐஓஎஸ் 18.4 தமிழ் பயனர் இடைமுகம் appeared first on செல்லினம்.

நீங்களும் இசையமைப்பாளர் ஆகலாம்

2 April 2025 at 13:30
Apple Music DJ

விருந்துக் கொண்டாட்டங்களில் நேரடிப் பார்வையாளர்களுக்காக இசையைத் தேர்ந்தெடுத்து இயக்குவோர் (Disk Jackie) பயன்படுத்தும் வன்பொருள், மென்பொருள்களை ஆப்பிள் இசை செயலியோடு இணைத்து, புது இசைகளை உருவாக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Apple Music DJ

ஆப்பிள் தன் பயனர்களுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான இசைக் கோவைகளை வழங்கிவருகிறது. இசையமைப்பாளர்களுக்கு அதிகமான உரிமைத்தொகை வழங்கும் செயலி ஆப்பிள் மியூசிக் என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பாளர்களை தன் பக்கம் வைத்திருக்கிறது ஆப்பிள்.

இதே போல டிஸ்க் ஜாக்கிகளையும், ஆப்பிளைப் பயன்படுத்தவைக்க வேண்டுமென 2022 முதலே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்காக 2022 ஆம் ஆண்டில், டிஜே மிக்ஸ் எனும் அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும் பிரபல ஜெஃப் மில்ஸுடன் இணைந்து ஒன் மிக்ஸ் என்ற நிகழ்ச்சியைச் செய்தது ஆப்பிள். இவற்றின் தொடர்ச்சியாகப் பயனர்களையும், டிஸ்க் ஜாக்கிகளையும் இணைக்கும் வகையில் டிஜே கருவிகளை ஆப்பிள் இசையோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் இசை செயலியின் நடனம், டிஜே பிரிவின் உலகளாவிய தலைவர் ஸ்டீபன் கேம்ப்பெல். அவர், இந்த அம்சத்தைப் பற்றிய அறிக்கையில் “இந்த புதிய ஒருங்கிணைப்பின் மூலம், பயனர்களின் மகிழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆப்பிள் இசை செயலியை முன்னணி டிஸ்க் ஜாக்கி மென்பொருள், வன்பொருள்களுடன் தடையின்றி இணைத்துள்ளோம். இந்த புதிய அம்சம் ஆப்பிள் இசை செயலியின் முழு ஆற்றலையும் பயனர்களுக்குக் கொண்டு சேர்க்க உள்ளது. இதன்மூலம் டிஸ்க் ஜாக்கிகள், சாதாரண பயனர்கள் யாராக இருந்தாலும் புது வித இசையை உருவாக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.

இப்புதிய அம்சம், நீண்ட காலமாகப் பயன்பாட்டிலிருந்த டிஜே புரோ (Djay Pro) செயலியின் கொஞ்சம் மேம்பட்ட வடிவமாகும். ஆப்பிளின் மெய்நிகர் கருவியான விஷன் புரோவிலும் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் மத்தியிலும் விஷன் புரோ பயனுள்ளதாக மாறிவரும் நிலையில், தற்போது டிஸ்க் ஜாக்கிகளையும் கவர உள்ளது.

ஆப்பிள் இசை செயலியானது முதற்கட்டமாகக் கீழ்க்கண்ட டிஸ்க் ஜாக்கி மென்பொருள் மற்றும் வன்பொருளுடன் தன் ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. ஆல்பா தீட்டா, செராடோ, இன் மியூசிக் இன்ஜின் டி.ஜே, டெனான் டி.ஜே, நுமார்க், ரானே டி.ஜே. இவைதான் அந்த வன்பொருள்கள். இந்த தொழில்முறை அமைப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், ஆப்பிள் இசையின் சந்தாதாரர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் இசைகளைக் கேட்டு மகிழலாம்.

இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அல்காரிதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரிம் மார்சி. “திறன்பேசி, கணினி, விஷன் புரோ போன்ற கருவிகளில், ஆப்பிள் இசையுடனான டிஜேவின் ஒருங்கிணைப்பு புதிய உலகை உருவாக்கியுள்ளது. இனிமேல் எந்த நேரத்திலும், எங்கும் வேண்டுமென்றாலும் புது இசையை உருவாக்கலாம். தங்களுக்குப் பிடித்த இசைகளைக் கலந்து புது விதமாக உருவாக்கிக்கொள்ளலாம்.‌ தானாக புது இசையை உருவாக்கும் தானியங்கி அம்சத்தைப் பயன்படுத்தினாலும் சரி. அல்லது டிஸ்க் ஜாக்கிகளின் சக்திவாய்ந்த கருவிகள் மூலம் தங்களின் தனித்துவமான இசையை வடிவமைத்தாலும் சரி. இசையின் உருவாக்கத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் இந்த ஒருங்கிணைப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது.” என உற்சாகமாகப் பேசியிருக்கிறார் மார்சி.

ஒவ்வொரு நண்பர் குழுவிற்கும் ஒரு குட்டி டிஸ்க் ஜாக்கி நிச்சயம் இருப்பார். அவரிடம் இதைப் பற்றிக் கூறி அவரின் பணியை எளிமையாக்குங்கள்.

  • மு.‌இசக்கிமுத்து

The post நீங்களும் இசையமைப்பாளர் ஆகலாம் appeared first on செல்லினம்.

செல்லினம் செயலி பதிப்பு 5.5

29 March 2025 at 13:30
SELLINAM

செல்லினம் செயலியில் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் பயனர்களின், வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த புதிய பதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

SELLINAM

அஞ்சல் மொபைல் என்ற பெயரோடு அறிமுகமாகி பின்னர் செல்லினம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்று, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து வருகிறது செல்லினம். தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருந்த காலத்திலேயே செல்பேசிகளில் பயனர்கள் தமிழில் தட்டெழுதும் அனுபவத்தை எளிமைப்படுத்தியது செல்லினம். அதன் பிறகும் தொடர்ந்து ஐஓஎஸ், ஆண்டிராய்டு என எல்லா இயங்குதளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு தமிழில் தட்டெழுத உதவுகிறது..

தமிழ் தட்டெழுத்துடன் நின்றுவிடாமல், உலக அரங்கில் தொழில்நுட்ப உலகில் நடக்கும் செய்திகளை பயனர்களுக்குத் தருவதையும் நோக்கமாகக் கொண்டது செல்லினம். பொதுவாகத் தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கென தனியாக தளங்களைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். அதனைக் கருத்தில் கொண்டும், பயனர்கள் பிற தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்த உதவும் வகையிலும் செல்லினம் செயலியில் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதற்குப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொரு கருத்துகளும் செல்லினம் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், அதனால் வாசிக்கச் சிரமமாக இருப்பதாகவும் பயனர்கள் தங்கள் சிக்கலைப் பகிர்ந்துள்ளனர். அதனைச் சரி செய்வதற்காக, முதற்கட்டமாக ஐபோன் மற்றும் ஐபேடில் செல்லினம் 5.5 என்ற புதிய பதிப்பைக் கொண்டுவந்துள்ளோம்.

இனிமேல் நீங்கள் கட்டுரைகளை உற்றுநோக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிளின் பிஞ்ச் சைகையைப் பயன்படுத்தி பயனர்கள் உரை அளவை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ மாற்றிக்கொள்ளும் அம்சம் புதிய பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களின் அளவைப் பெரிதாக்கிப் பார்ப்பதைப் போலவே கட்டுரைகளையும் பார்க்கலாம். நீங்கள் ஒரு முறை விரும்பிப் பயன்படுத்திய அளவை நினைவில் வைத்து, அதே அளவில் அடுத்தடுத்த கட்டுரைகளைக் காண்பிக்கும். சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காக முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள தலைப்புகளின் அளவையும் அதிகரித்துள்ளோம்.

செல்லினம் செயலியின் பயனர்கள், தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் படிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இக்கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய உள்ளடக்கங்களை தரத்துடன் வழங்குவதென உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக நம் அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் செய்திகளை உடனுக்குடன் தர முயல்கிறோம்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய அம்சம் அனைவருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறோம்.

The post செல்லினம் செயலி பதிப்பு 5.5 appeared first on செல்லினம்.

ஆப்பிள் பழமல்ல, பணம்

26 March 2025 at 14:06
Apple Pay

மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு உதவும் செயலியான ஆப்பிள் பே, அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Apple Pay

கடந்த பத்து ஆண்டுகளாக மின்னணு பணப் பரிவர்த்தனை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளிலும் இருக்கிறது. மீதி சில்லறைக்கு மிட்டாய் வாங்கியதெல்லாம் பலருக்கு மறந்தேவிட்டது எனலாம். அந்த அளவுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்களும் பணப்பரிவர்த்தனைக்காகச் செயலிகளைப் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும் தன் பங்குக்கு ஆப்பிள் பே (apple pay) செயலியை 2015ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல்வேறு நாடுகளில் இச்செயலி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வங்கி நிர்வாகங்களுடனும் தொடர்ச்சியாக உரையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2024ல் ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் வாலட்டின் துணைத் தலைவர் ஜெனிபர் பெய்லி அளித்த பேட்டியொன்றில், “ஆப்பிள் நிறுவனம் சிறந்த பயனர் அனுபவத்தைத் தர, மிகவும் ஆர்வமாக உழைத்துவருகிறது. ஆப்பிள் பே அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுமார் 3% வங்கி நிர்வாகங்கள் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டன. அந்த எண்ணிக்கை இப்போது 90% ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சந்தைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஆப்பிள் பே-ன் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.

ஆப்பிள் பே ஏறக்குறைய 90 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் உள்ள நாடுகளில் சிலவற்றில், உள்ளூர் வங்கிகள் இச்செயலியில் தங்கள் வங்கிகளை இணைப்பதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. ஆப்பிள் பே அமெரிக்காவில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்தாலும், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள மக்கள், பெரிய அமெரிக்க வங்கிகளின் கணக்குகள் மூலம் மட்டுமே ஆப்பிள் பேவை அணுகும் நிலை இருந்தது. இதுவரை எந்த உள்ளூர் வங்கியும் இந்தச் சேவைக்கான ஆதரவை வழங்கவில்லை.

அமெரிக்காவின் புகழ் பெற்ற உள்ளூர் வங்கிகளுள் ஒன்றான பாங்கோ பாப்புலர் வங்கி இப்போது ஆப்பிள் பே செயலிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன்மூலம் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் பணப்பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல் அம்மக்கள் ஆப்பிள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

அதோடு ஆப்பிள் பே செயலியின் “டேப் டு புரோவிஷன்” அம்சமும் ஹாங்காங், மக்காவ் மற்றும் மங்கோலியாவில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் வாலட் பயன்பாட்டில் தேவையான கடன் அட்டைகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆப்பிள் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மதிப்புள்ள செய்தியைத்தான் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.

  • மு.‌இசக்கிமுத்து

The post ஆப்பிள் பழமல்ல, பணம் appeared first on செல்லினம்.

கருவியைக்கண்டுபிடி சேவை விரிகிறது

24 March 2025 at 13:30
find my device

கூகுள் தனது கருவியைன் கண்டுபிடி (Find My device) செயலியில் புதிய அம்சங்களைக் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுளின் கருவியைக் கண்டுபிடி செயலி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டிருந்தது. முன்னரே ஆப்பிள் திறன்கருவிகளில் செயல்பட்டு வந்த இந்தச் சேவையை தாமதமாகத்தான் கூகுள் அறிமுகம் செய்தது. இச்செயலி நமது கருவிகளைக் கண்டுபிடித்துத் தந்தாலும், அதில் புது மாற்றங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே புது அம்சங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.

find my device

கூகுள் பிளே சேவைகளின் v25.11.32 பீட்டா பதிப்பு இந்த கசிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்படி கருவியைக் கண்டுபிடி செயலியில், தானியங்கி பதிவுகளை விரிவுபடுத்தும் வகையிலான தரவுகள் வெளிவந்துள்ளன. இந்த புதிய பதிப்பு பற்றிய தரவுகளை ஆன்டிராய்டு அத்தாரிட்டி தளம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் பல விதமான கருவிகளுக்கும் இச்செயலியைக் கொண்டுவரும் வகையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

தற்போது உள்ள பதிப்பின்படி, உங்கள் கருவியுடன் கூகுள் கணக்கை இணைத்தவுடன் கருவிகளைக் கண்டுபிடி செயலி தானாகவே செயல்படுத்தப்படும். இருப்பினும், With network in high-traffic areas only அமைப்பில் மட்டுமே இது தானாக இயங்குகிறது. மற்றபடி ஒவ்வொரு முறையும் நீங்களே செய்துகொள்ளும் நிலைதான் உள்ளது. இந்த புதிய பதிப்பில் நீங்கள் இருப்பிட அணுகலை இயக்கிய உடனே, உங்கள் கருவியின் இருப்பிடம் தானாகவே பதிவுசெய்யப்படும். இதன்மூலம் இச்செயலியை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

அதோடு இனிமேல் ஒரு கருவியின் அண்மைய இருப்பிடத்தைக் கண்டறியக் கருவியைக் கண்டுபிடி செயலியைப் பயன்படுத்தினால், தேடவேண்டிய கருவியானது உங்கள் திறன்பேசியுடன் தடையின்றி இணைக்கப்படும். மேலும், நீங்கள் ஏற்கனவே உள்ள கருவியை அகற்றினால், இச்செயலி தானாகவே அம்சத்தை இயக்கும்.

ஏற்கனவே கருவியைக் கண்டுபிடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது கூகுள், பயனர்களுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய தெளிவான மின்னஞ்சலை அனுப்பியிருந்தது. இப்போது இந்த புதுப்பிப்புகளை விவரிக்கும் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூகுள் மின்னஞ்சலை அனுப்பும்போதுதான் இந்த புதிய பதிப்பைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

கூகுள் இந்த மேம்பாட்டை விரைவில் வெளியிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த மாற்றங்கள் எதுவும் இதுவரை பயனர்களின் கருவிளைச் சென்று சேரவில்லை. இந்த அம்சம் பற்றிய தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

கருவிகளைக் கண்டுபிடி செயலியின் செயல்படும் விதம் பற்றிய கட்டுரை ஏற்கனவே செல்லினத்தில் வெளியாகியிருக்கிறது. தேவைப்படுபவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து

The post கருவியைக்கண்டுபிடி சேவை விரிகிறது appeared first on செல்லினம்.

தரமான மொழிபெயர்ப்பு

22 March 2025 at 13:30
Meta UNESCO

மெட்டா நிறுவனம் யுனெஸ்கோ அமைப்போடு இணைந்து செயற்கை நுண்ணறிவில் அதிகம் பயன்படுத்தப்படாத மொழிகளை மேம்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Meta UNESCO

கூகுள் மொழிபெயர்ப்பானில் நமக்குத் தேவையான ஒன்றை மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இந்த இயந்திர மொழியை நமக்கேற்ற நடையில் கொண்டுவர நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்போது உள்ள ஜெமினி, கிளாட், சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற மொழிமாதிரிகளின் மொழிபெயர்ப்புச் சேவை, முந்தைய மொழிபெயர்ப்புத் தரத்தைவிடப் பல மடங்கு மேம்பட்டதாக உள்ளது. மெட்டாவின் அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி (FAIR) குழுவானது இயந்திர மொழிபெயர்ப்பை மெருகூட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இது மனிதப் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தி, மொழிபெயர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், மெட்டா அறிமுகப்படுத்திய NLLB திட்டம், பல மொழிகளுக்கான உணர்வுப்பூர்வமான இயந்திர மொழிபெயர்ப்பு மாதிரியாக இருந்தது. இது மொழிபெயர்ப்பிற்கான எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்கியது.

இந்த ஆராய்ச்சியை ஐநா அமைப்பின் யுனெஸ்கோ மற்றும் ஹக்கிங் ஃபேஸ் ஆகியவற்றோடு இணைந்து செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது மெட்டா. இப்போது பல்வேறு பேச்சுவழக்குகளைச் செயற்கை நுண்ணறிவில் இணைத்து அதனை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக பணியாற்ற மொழி தொழில்நுட்ப கூட்டாளர் திட்டம் என்பதையும் தொடங்கியுள்ளது.

இது அதிகளவில் பயன்படுத்தப்படாத, மின்னணு வடிவம் பெறாத மொழிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்டாவோடு இணைந்து பணியாற்ற விரும்பும் அமைப்புகளுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பத்துமணி நேரத்திற்கும் அதிகமான குரல் பதிவுகள் வைத்திருருந்தால் நீங்களும் இதில் பங்கேற்கலாம். அதோடு எண்ணற்ற எழுத்துப் பிரதிகளையும் எதிர்பார்க்கிறது மெட்டா.

இதில் இணைபவர்கள் கூகுளோடு இணைந்து பணியாற்ற முடியும். அதோடு மெட்டாவின் ஆராய்ச்சிக் குழுவால் நடத்தப்படும் தொழில்நுட்பப் பட்டறைகளுக்கான அனுமதியும் கிடைக்கும். அங்கு மொழித் தொழில்நுட்பங்களை உருவாக்கத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு செயற்கை நுண்ணறிவுகளின் மொழிபெயர்ப்புத் தரத்தை அளவிடும் பெஞ்ச்மார்க் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மொழியியல் வல்லுநர்களால் கவனமாக வடிவமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. பெஞ்ச்மார்க்கைப் பற்றிய மேலதிகத் தகவல்களை ஹக்கிங் ஃபேஸ் தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • மு. இசக்கிமுத்து

The post தரமான மொழிபெயர்ப்பு appeared first on செல்லினம்.

❌