Normal view

Received before yesterday

செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

whatsapp

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

The post செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப் appeared first on செல்லினம்.

கடவுச்சொல், நினைவில்கொள்

Microsoft Authenticator

கணினி, திறன்பேசிகளில் கடவுச்சொல்லைத் தானாக உள்ளிட்டுக் கொள்ளும்படி சேமித்து வைப்பது நம்மில் பலருக்கு வழக்கம். அதற்கு உதவும் மைகோசாப்ட் ஆதன்டிகேட்டர் செயலியில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.

Microsoft Authenticator

உலகில் கிட்டத்தட்ட அனைத்தும் கணினி மயமாகிவிட்ட நிலையில், வலுவான கடவுச்சொல் மிக முக்கியமானது. இணையத்தில் பாதுகாப்பான பயன்பாடு அனுபவத்தைப் பெறக், கடினமான கடவுச்சொல்லை அமைத்தல், அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றுதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி நாம் என்னதான் வலுவான கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், நம்மில் பலருக்கு இணையத்தில் தானியங்கு நிரப்பு (Autofill) அம்சத்தில் கடவுச்சொற்களைச் சேமிக்கும் வழக்கம் உண்டு. அதன்மூலம் ஒரே சொடுக்கில் நம் கணக்குகளுக்குள் நுழைய முடியும். பயன்பாட்டை எளிமையாக்கும் இந்த அம்சம் ஆபத்தானது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் தன் கடவுச்சொல் சேமிப்பு அம்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இரட்டை நிலை அங்கீகாரம் 

நமது கடவுச்சொற்களை நாம் இணைய உலவிகளில் சேமித்து வைக்கிறோம். அதிலுள்ள தானியங்கு நிரப்பு அம்சம் மூலமாக ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் உள்ளிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக கணக்குகளுக்குள் நுழைகிறோம். ஆனால் இதே எளிமையான வழியைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களும் நமது தகவல்களைத் திருடிவிட முடியும். கடவுச்சொற்கள் கசிவதால் ஏற்படும் இந்த சவால்களை இரட்டை நிலை அங்கீகாரம் (Two Fator Verification) மிகச் சிறந்த வழியில் தடுக்கிறது. புதிய கணிப்பொறியில் நமது கணக்குக்குள் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்தால், ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ரகசியக் குறியீட்டுச் சொல் கேட்கப்படும். இதை வரைமுறைப்படுத்தும் புதிய செயலியாக மைக்ரோசாப்ட், ஆதன்டிகேட்டர் (Authenticator) என்ற செயலியைக் கொண்டு வந்தது. உயர் பாதுகாப்பு கோரும் தகவல்கள் அடங்கிய பயனர்களுக்கு இந்தச் செயலி பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இதிலும் கடவுச்சொல் சேமிக்கும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஆதன்டிகேட்டரில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. 2025 ஜூலை மாதத்துடன் இந்த அம்சங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி ஜூன் மாதம் முதல் புதிய கடவுச்சொற்களை ஆதண்டிகேட்டர் செயலியில் சேமிக்க முடியாது. ஜூலை மாதம் தானியங்கு நிரப்பு அம்சம் நிறுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிய வருகிறது.

ஏன் இந்த மாற்றம்?

கடவுச்சொல் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடவுச்சொல்லுக்கு பதிலாக ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி (OTP), நுழைவுக்குறி (Passkeys), முக அடையாளம், விரல்ரேகை உள்ளிட்ட உயிரளவியல் அம்சங்கள் (biometric) பயன்படுத்தப்படும். இதன் மூலம் கடவுச்சொல் இல்லாத பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடவுச்சொல் திருட்டு தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

செய்ய வேண்டியது என்ன? 

நீங்கள் ஆதன்டிகேட்டர் செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால், விரைவில் அதில் சேமித்து வைத்திருக்கும் கடவுச்சொற்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆதன்டிகேட்டர் செயலிக்கு நிகரான கடவுச்சொல் நினைவுச் சேவையை, மைக்ரோசாப்ட் எட்ஜ் வழங்குகிறது. தரவிறக்கி வைத்திருக்கும் தகவல்களை எட்ஜுக்குள் தரவேற்றலாம். இதனால் எட்ஜ் வழங்கும் தடையற்ற கடவுச்சொல் மேலாண்மை வசதியைப் பெறலாம். அதேபோல் இணையத்தில் கடவுச்சொல் மேலாண்மைக்கு தனியார் செயலிகளும், மென்பொறிகளும் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக கடவுச்சொற்களைப் பொருத்தளவில் தானியங்கு சேமிப்பு வசதிகள் எதனிலும் சேமிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள். 

ஆதன்டிகேட்டர் என்ன ஆகும்? 

கடவுச்சொற்களைச் சேமிக்கும் வசதி மட்டும்தான் ஆதன்டிகேட்டர் செயலியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஆதன்டிகேட்டர், இரட்டை நிலை அங்கீகாரம் (Two Factor Verification), நுழைவுக் குறிகள் (Pass Key), ஒற்றைத்தொடுதல் அங்கீகாரம் (One – Tap Verification) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக வழங்கும். இதனால் அந்தச் செயலியை நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள இம்மாற்றம், கடவுச்சொல் சேமிப்பு வசதியைப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு சிரமம் ஏற்படுத்தும்போதிலும், இணையத் தரவுகளின் அடுத்தகட்ட பாதுகாப்பு நோக்கம் அவசியமானது. உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலவி உட்பட எந்த இடத்திலும் அதைச் சேமிக்காமல் இருப்பதும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் பயனளிக்கும். 

  • விவேக்பாரதி

ஆதன்டிகேட்டர் செயலியில் நீக்கம் குறித்த செய்தி

The post கடவுச்சொல், நினைவில்கொள் appeared first on செல்லினம்.

கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது

Google photos

நம்மில் பெரும்பாலானோர் படங்களைச் சேமித்து வைக்க கூகுள் போட்டோஸ் பயன்படுத்துகிறோம். அதிலிருந்து யாருக்காவது குறிப்பிட்ட படங்களை அனுப்ப நேரும்போது அவற்றைத் தேடுவதற்காகவே நீண்ட நேரம் திரையைத் துழாவி அவதிப்பட்டிருப்போம். அந்தத் தொல்லை இனி இல்லை என்கிறது கூகுள். எப்படி? 

Google photos

காலம் கடந்து நிற்கும் நினைவுப் படங்களை முன்னர் புகைப்படத் தொகுப்புகள் சேமித்து வைத்திருந்தன. இப்போது எல்லாருக்கும் கூகுள் போட்டோஸ் செயலிதான். நம் திறன்பேசியில் கிளிக் என்று எடுக்கும் ஒளிப்படம், கண்ணிமைக்கும் நேரத்தில் கூகுள் டிரைவில் சேமிக்கப்படுகிறது. பின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்க இணையத்திலேயே பத்திரமாய் இருக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கும் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது புதிய சிறப்பம்சங்களை இதில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் அடிப்படையில் படங்களைச் சேமித்தல், நினைவூட்டல், ஒரே நபர்களை அடையாளம் கண்டு தனியாக தொகுத்து வைத்தல், பின்னணி உட்பட படத்தில் எதையும் எளிதில் திருத்துதல் எனப் பல மேம்படுத்தல்கள் வந்துள்ளன. 

கூகுள் அப்படி ஒரு சிறப்பு மேம்படுத்தலைத் தன் போட்டோ பிக்கர் அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் போட்டோஸில் இருந்து படங்களைப் பகிரும்போது குறிப்பிட்ட படத்தைத் தேர்ந்தெடுப்பது சிரமமாக இருந்தது. ஆயிரக் கணக்கில் படங்கள் இருந்தால், நீண்ட நேரம் திரையை துழாவித் துழாவிச் சென்று எடுக்க வேண்டியிருந்தது. இதை போட்டோ பிக்கரின் புதிய அம்சம் மாற்றியுள்ளது.

கூகுள் போட்டோஸ் செயலியில் பதிவேற்றப்படும் படங்களின் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் இதற்கு உதவி செய்கிறது. அதாவது, நாம் திறன்பேசியில் தட்டச்சு செய்யும் இடத்தில் எமோஜிகளைத் தேடும் தேடல் பட்டை  இருப்பதுபோல போட்டோ பிக்கர் இடத்திலும் தேடல் பட்டை அமைக்கப்பட்டுள்ளது. அதில் “கார்” “பிறந்தநாள்” என்பது போன்ற குறிப்புச் சொற்களை நாம் உள்ளிட்டுத் தேடினால் அதற்குத் தொடர்புள்ள படங்களை போட்டோ பிக்கர் தனியே பிரித்துக் காட்டிவிடுகிறது. இப்புதிய தேடுதல் அம்சம் கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது. 

இத்தேடுதல் அம்சத்தால் பயனர்கள் ஆயிரக்கணான படங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் விரைந்து எடுத்துவிட முடியும். பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளை விட்டு வெளியேறாமல் படங்களை அனுப்பிவிட முடியும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு இந்த வேலையைத் துல்லியமாகச் செய்வதால் தனிப்பயனாக்கம் சிறந்த முறையில் நிகழ்கிறது. 

தற்போது வரை கூகுள் பிளே சிஸ்டம் வழியாக கூகுள் போட்டோஸை மேம்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே இவ்வம்சம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய ஆண்டிராய்டு மேம்படுத்தலில் அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிக்ஸல் மற்றும் சாம்சங் கருவிகளில் சோதனை நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் புகைப்பட தொகுப்புகள், கோப்புகள் பகிரப்படுவது, சமூக ஊடகப் பயன்பாடுகள் போன்றவை எளிமையாகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கூகுள் இயல்பாக தரும் 15 ஜிபி நினைவகத்தையும் கடந்து பல ஜிபிகளுக்கு புகைப்படங்களைச் சேமித்து வைத்திருக்கும் பயனர்களுக்கு, இப்புதிய அறிமுகம் மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

  • விவேக்பாரதி

கூகுள் போட்டோ பிக்கரின் தேடல் குறித்த செய்தி

The post கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது appeared first on செல்லினம்.

சகலகலா சாட்ஜிபிடி

ChatGPT shopping

இணைய உலகின் அண்மைக்காலச் செல்லக்குட்டியான சாட்ஜிபிடியில் பல புதிய அம்சங்களை ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே சகலகலா வல்லவனாக இருக்கும் சாட்ஜிபிடியின் அடுத்தடுத்த புதிய அம்சங்களும், அதுகுறித்துப் பரவும் அனுமானங்களும் வியப்பூட்டுகின்றன. 

ChatGPT shopping

மனித வாழ்க்கையைக் கணினிகள் மிக நெருக்கமாக புரிந்து கொண்டு உதவத் தொடங்கிவிட்டன. நண்பனாய், நல்லாசிரியராய் பதவி வகித்துக்கொண்டிருக்கும் இணையதளம், தன் அரியாசனத்தில் அடுத்ததாக செயற்கை நுண்ணறிவை அமரச் செய்திருக்கிறது. அதன் செயல்பாடுகள், நம் பணிகளை நாளுக்கு நாள் இலகுவாக்கி வருகின்றன. கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் தொடங்கி, படம் வரைவது, வரைவுகளை உருவாக்கித் தருவது, கட்டுரைகள், கதைகள் எழுதுவது, பரிந்துரைகள் வழங்குவது என்று செயற்கை நுண்ணறிவின் மொழிமாதிரியான சாட்ஜிபிடி செய்யாத காரியமே இல்லை. அது இப்போது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

எதை வாங்கலாம்? சாட்ஜிபிடி!  

இனி நாம் பொருள்களை வாங்குவதற்கும் சிறந்த பரிந்துரைகளை சாட்ஜிபிடி தந்து உதவப்போகிறது. இணையத்தில் பொதுவாக நாம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொருளைப் பற்றி தேடுபொறிகளில் தேடுவோம். உடனே கூகுளில் விளம்பரப்படுத்தியுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னே வந்து நிற்கும். விளம்பர அடிப்படையில் இந்த உதவியைத் தேடுபொறிகள் செய்துகொண்டிருக்க, விளம்பரமில்லாப் பரிந்துரைகளை சாட்ஜிபிடி வழங்கவுள்ளது. நமக்காக இணையதளத்தைத் துழாவி, எதற்கு எது சிறந்தது என்று எடுத்து வைக்கிறது. தன் பரிந்துரைகள் மட்டுமன்றி, விலையுடன் கூடிய தகவல்கள், மதிப்பீடுகள், வாங்குவதற்கான இணையதள சுட்டிகள் என அனைத்தையும் சாட்ஜிபிடி நமக்கு வழங்கிவிடும். விரும்பிய பொருள்களில் சிறந்ததைப் பெற நாம் மதிப்பீடுகளைத் தேடி அலையத் தேவையில்லை. 

கூடுதல் அம்சமாக பயனர்களின் தனிப்பயனாக்கத்தை சாட்ஜிபிடி நினைவில் வைத்துக் கொள்வதால் பிடித்த நிறம், பிடித்த வகை போன்றவற்றுக்குப் பரிந்துரைகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். உலகப் பயனர்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தைக் கணக்கு தொடங்காமலும் யன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறுகிறது. 

வாட்சாப்-ல் பேசலாம் சாட்ஜிபிடி!

சாட்ஜிபிடியில் கொண்டு வரப்பட்டிருக்கும் முதல் அம்சமே பயனர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இந்நிலையில், அடுத்தகட்டமாக அதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்சாப் செயலிக்குள்ளும் கொண்டு வந்துவிட்டது ஓபப்ன்ஏஐ. சாட்ஜிபிடிக்கு என்று தனித்துவமான அழைப்பிலக்கம் உள்ளது. (+1-800-242-8478) அதைச் சேமித்து வைத்துக்கொண்டு, அன்றாட செய்திகள் முதல் கிரிக்கெட் ஸ்கோர் நிலவரங்கள் வரை எதை வேண்டுமானாலும் உடனுக்குடன் கேட்டுப் பெறலாம். ஒரு படத்தை அனுப்பி விளக்கம் கேட்பது, குரல் வழிப் பதிவாகத் தகவல்களைக் கேட்டுப் பெறுதல் என அனைத்திற்கும் இந்தப் புதிய அம்சம் இடமளிக்கிறது. தனிச் செயலியாக உள்ள சாட்ஜிபிடியை வாட்சாப்புக்குள் கொண்டு வந்தது, மக்கள் பயன்பாட்டில் புதிய அணுக்கத்தை உருவாக்குகிறது. 

இது எப்படிச் சாத்தியமானது? 

உலகப் பயனர்களின் அனுபவத்தை மிக எளிமை ஆக்கியிருக்கும் இவ்விரண்டு மேம்படுத்தல்களுக்கான காரணத்தையும் ஓபன் ஏஐ கூறுகிறது. கேட்கப்படும் கேள்விக்கு, கட்டளைக்கு இணையத்தில் விடை தேடும் சாட்ஜிபிடி, பொதுவாகத் தான் துழாவிய இடங்களை எல்லாம் மேற்கோள் காட்டும். தற்போது, அதிக மேற்கோள்களைக் காட்டும் வகையில், அந்தத் தொழில்நுட்பத்தை இதில் மேம்படுத்தியுள்ளனர். அந்த விரிவாக்கமே இவ்வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார்கள். இதன்மூலம் சாட்ஜிபிடி வெறும் உரையாடல் மாதிரியாக மட்டுமல்லாமல் பயனரின் உதவியாளராக, திறன்மிக்க வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள். 

கூகுள் கிரோமில் சாட் ஜிபிடி?

ஓப்பன்ஏஐ மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகள் அனைத்தும், கூகுள் குரோமை வாங்கும் நோக்கில் நிகழ்த்தப்படுவதாக கருதப்படுகிறது. கூகுள் தன் குரோம் உலவியை விற்கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஓப்பன்ஏஐ வாங்கிக் கொண்டால் எப்படி மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் உலவியில் கோபைலட் செயற்கை நுண்ணறிவைத் தகவமைத்துப் பயன்பாட்டை மேம்படுத்தியதோ அதற்கு நிகரான மாற்றங்கள் குரோமிலும் நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குரோம் பயன்பாட்டை இன்னும் எளிய தளத்திற்கு உயர்த்தும் என்றும் இணைய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • விவேக்பாரதி

ஓபன் ஏஐ நிறுவனத்தின் அறிவிப்பு

வாட்ஸ்ஆப்பில் சாட்ஜிபிடி குறித்த செய்தி

சாட்ஜிபிடியின் பரிந்துரைகள் குறித்த செய்தி

The post சகலகலா சாட்ஜிபிடி appeared first on செல்லினம்.

எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு

LG phone

திறன்பேசிகளின் தொடக்க காலத்தில், கோலோச்சியிருந்த எல்.ஜி நிறுவனம், தனது உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டது. இப்போது அதன் பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியமானபணி ஒன்று மீதம் இருக்கிறது. என்ன தெரியுமா?

LG phone

உலகளாவிய திறன்பேசி சந்தையில் ஒரு காலத்தில் எல்.ஜி நிறுவனம் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்தது. அதன் வெல்வெட், விங் போன்ற ரகங்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தன. தொழில்நுட்ப தரத்திலும், வடிவமைப்பிலும் தனித்தன்மையோடு திகழ்ந்தன. சிறப்பான காட்சித்திறன், ஒலித்திறன்களோடு இருந்தன. குறிப்பாக 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் எல்ஜியின் ஜி மற்றும் வி ரக திறன்பேசிகள் அதிகம் விற்பனையாகின. வலுவான மென்பொருள் ஆதரவுக்கு எல்ஜி புகழ்பெற்றிருந்தது. ஆனாலும் அதன் பின் நிகழ்ந்த போட்டிகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் எல்ஜி திறன்பேசிகள் திணறின. 

புதுப்புது அறிமுகங்களும், அதில் கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல்களும் எல்ஜிக்கு நெருக்கடியாக அமைந்தன. அதன் விளைவாக 2021-ம் ஆண்டு, அந்நிறுவனம் பெரும் முடிவு ஒன்றை எடுத்தது. தனது திறன்பேசிப் பிரிவை முற்றிலுமாக மூடுவதாக எல்ஜி அறிவித்தது. இனி எல்ஜி திறன்பேசிகள் உற்பத்தி ஆகாது என்ற நிலை உருவானது. குளிர்சாதனங்கள், சலவை இயந்திரம், தொலைக்காட்சி போன்ற மற்ற மின்சாதன பொருள்களின் சந்தையில் சற்றும் குறைவின்றி தன் இடத்தை வெற்றிகரமாக தக்க வைத்திருந்த எல்ஜி, திறன்பேசியில் சறுக்கியதால் இம்முடிவை எடுத்தது. ஆனால் அப்போதும் பயனர்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை எல்ஜி. 

திறன்பேசி உற்பத்தியை முற்றிலுமாக மூடிவிட்டாலும், பயனர்கள் நலன் கருதி தேவையான காலக்கெடுவினை வழங்கியது. அதாவது, 2019-க்கு பிறகு வெளியான முக்கியமான திறன்பேசிகளான எல்ஜி வெல்வெட், விங் மற்றும் ஜி, வி தொடர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்று எல்ஜி அறிவித்தது. அந்த காலக்கெடு, இந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், எல்ஜி பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பணிக்கான நேரம் நெருங்கிவிட்டது. 

பயனர்கள், ஜூன் 30 2025-க்குள் எல்ஜி திறன்பேசியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ஆண்டிராய்டு அம்சம் வரை தரவிறக்கி, உட்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் 30-க்குப் பிறகு எந்தவித மேம்படுத்தலோ, பாதுகாப்பு புதுப்பிப்புகளோ வழங்கப்பட மாட்டாது. அதேபோல், கணிப்பொறியுடன் எல்ஜி திறன்பேசிகளை இணைக்கும் தனித்துவமான மென்பொருளான எல்.ஜி பிரிஜ் சேவையையும் இதே காலக்கெடுவுடன் நிறுத்திக் கொள்ள எல்ஜி திட்டமிட்டுள்ளது.  

தனித்துவமான பயனர் இடைமுகம் (User Interface) வழங்குதல் உள்ளிட பல நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த எல்ஜி திறன்பேசி, இனி முற்றிலும் வரலாற்றின் அங்கமாகப் போகிறது.

  • விவேக்பாரதி

எல்ஜியின் மேம்படுத்தல் குறித்த உத்தரவாதம்

எல்ஜியின் அவகாசம் முடிவடைவது குறித்த செய்தி

The post எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு appeared first on செல்லினம்.

உலகின் லேசான ஐபோன்

apple air

உலகின் மிக மெல்லிய திறன்பேசியாக ஐபோன் 17 ஏர் உருவாக இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் விமர்சகர்களும் அதுகுறித்த பல்வேறு ஆரூடங்களைக் கூறி வருகின்றனர். 

apple air

ஆப்பிள் தங்கள் திறன்பேசிகளில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுமையை, மேம்படுத்தலை, அறிமுகத்தைச் செய்துகொண்டே வருகிறது. செப்டம்பர் வந்தாலே புது ஐபோன் வெளியாகும் என்ற வழக்கத்திற்கு மக்கள் பழகிவிட்டார்கள். இதுவே ஆண்டுதோறும் ஆப்பிளின் அடுத்த அறிமுகம் என்ன என்று சந்தைக்குள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் 2025-ம் ஆண்டுக்கான ஐபோன் எது என்ற விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டும் பல வதந்திகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

மிக மெல்லிய ஐபோன் 

ஆப்பிள் நிறுவனம் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் போகும் திறன்பேசி வரிசை ஐபோன் 17. அது மிக மெல்லிய திறன்பேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்.ஈ (Iphone SE) ரகங்களை விட மெல்லியதாக இருக்கும் எனப் பேசப்படுகிறது. ‘ஐபோன் 17 ஏர்’ (Iphone 17 Air) என்று அந்த மாதிரிக்கு பெயர் வைக்க வாய்ப்புள்ளதாம். வெறும் 5.5 மில்லிமீட்டர் தடிமன் மட்டுமே கொண்ட லேசான திறன்பேசியாக அதை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறதாம். 

புதிய, பலமான வடிவமைப்பு 

ஐபோன் 17 ஏர் மாதிரியில் யுஎஸ்பி சி (USB C) வசதியுடன் மின்னேற்றி வழங்கப்படுகிறது என்றும், நீடித்து உழைக்கும் மின்கலம் இதில் பொருத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். அதனால் ஐபோன் 16 வரை உள்ள மாடல்களின் அதே திறன் மற்றும் அதிகப்படியான மின்கல ஆயுளுடன் ஐபோன் 17 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய கணிப்பொறிகளின் புதிய அத்தியாயம்

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் மடிக்கணினி உலகில் மிக மெல்லியதான மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தி தனியிடம் பிடித்திருக்கிறது. இப்போது திறன்பேசியிலும் மெல்லிய மாதிரியைக் கொண்டு வந்து புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள். இந்த ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 மேக்ஸ் என 3 விதமாகஅறிமுகமாகும் என்பது வரைக்கும் இவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் தற்போதுள்ள தகவல்கள்படி இதன் விலை 900 யூரோ முதல் 1,300 யூரோ வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். அந்த உலகளவையும் கைப்பிடிக்கும் மெல்லியதாய்ச் சுருக்கப் போகும் ஐபோனின் அடுத்த படைப்புக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

  • விவேக்பாரதி

மெல்லிய ஐபோன் – தொழில்நுட்ப ஆர்வலர்களின் விமர்சனங்கள்

The post உலகின் லேசான ஐபோன் appeared first on செல்லினம்.

விளம்பரத்தை நம்பாதே! 

scam

நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் உலவும்போது அழகான பல விளம்பரங்கள் நம் கண்களைக் கவரும். குறைந்த விலை, அதிக சலுகை போன்ற சொற்றொடர்கள் கருத்தை இழுக்கும். எச்சரிக்கை! அவை இணைய மோசடிக்காரர்களின் வலையாக இருக்கலாம். சிங்கப்பூரில் அப்படி நடந்த மோசடி ஒன்றில் பல மில்லியன் டாலர்களை மக்கள் இழந்துள்ளனர்.

scam

இணைய வர்த்தகம் உலகம் முழுவதிலும் இயல்பானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆனால் அதில்தான் நம்ப முடியாத அளவு மோசடிகள் நிறைய நடக்கின்றன. சிங்கப்பூரில் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் மூலம் நடத்தப்பட்ட அப்படி ஒரு மோசடி குறித்து இதுவரை 128-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது. 

என்ன நடந்தது? 

சிங்கப்பூரில் பேஸ்புக், எக்ஸ், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில விளம்பரங்கள் அடிக்கடி தலைதூக்கியுள்ளன. அவற்றில், “செயலியில் விளையாடி பணம் பெறுங்கள்; சலுகை விலை விற்பனை, பகுதி நேர வேலை, அமேசான் டெலிவரி” போன்றவை இடம்பெற்றுள்ளன. பார்வைக்கு உண்மை போலவே அமைக்கப்பட்ட அவற்றில், மேலதிக தகவல்களுக்கு அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதை நம்பி விவரங்களைக் கொடுத்தவர்களிடம்தான் மோசடி நடந்துள்ளது.

எப்படி நடந்தது? 

விவரங்களை உள்ளிட்ட பயனர்களைத் தொடர்பு கொண்ட மோசடிக்காரர்கள், முதற்கட்டமாக சிறிய தொகையைச் செலுத்தக் கூறி, இணையதள சுட்டி ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதற்குள் சென்று பயனர்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டதும், பரிவர்த்தனை நிராகரிப்படுவது போல்  காட்டியுள்ளாது. அதைப் பற்றி புகாரளித்தால், சரி செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத, சந்தேகத்துக்கு உரிய செயலியைத் தரவிறக்கக் கூறியுள்ளனர். அதைத் தரவிறக்கியதும் அதில் உள்ள தீம்பொருள் (Malware) வழியாக, பயனர்களின் திறன்பேசிக்கு வரும் அனைத்து செய்திகள் மற்றும் ஓடிபிகளையும் (OTP) மோசடிக்காரர்களால் படித்துவிட முடிகிறது. இவற்றைக் கொண்டே மென்பொருள் தாக்கும் நிரலாளர்கள் (Hackers) இப்பெரும் மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.

பாதிப்பும் எச்சரிக்கையும்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரை இந்த மோசடியில் பலர் சிக்கி, பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை சிங்கப்பூரில் மட்டும் 750 ஆண்டிராய்டு பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சிங்கப்பூர் மதிப்பில் 2.4 மில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் 14 கோடிக்கு மேல் ஆகும். இதையடுத்து மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தீம்பொருள் மோசடி குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

நாம் என்ன செய்யலாம்? 

நம்பகரமாக இல்லாத விளம்பரங்களை அணுகாமல் இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் கண்ணில் பட்டால், குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்துள்ளதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 

சந்தேகத்துக்கு உரிய வலைதள முகவரிக்குள் நுழைவது, செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். திறன்பேசியில் உள்ள பிளே ஸ்டோரில் கூகுள் பிளே ப்ரொடக்ட் (Google Play Protect) என்ற அம்சம் உள்ளது. அதை இயக்குவதன் மூலம் சந்தேகத்துக்கு உரிய செயலிகள் நம் அனுமதியின்றி திறன்பேசியில் தரவிறக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். 

நன்றாகத் தெரிந்த, மக்கள் அதிகம் பயன்படுத்தும், அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே தரவிறக்க வேண்டும். தேவையில்லாத செயலிகளைத் திறன்பேசியிலிருந்து உடனே நீக்கிவிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • விவேக்பாரதி

சிங்கப்பூர் மோசடி குறித்த செய்தி

The post விளம்பரத்தை நம்பாதே!  appeared first on செல்லினம்.

தொல்லை இல்லை

Do Not Disturb

திறன் பேசிகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தொல்லை தாராதீர் (DND – Do Not Disturb) அம்சத்தை, மீண்டும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது. அதன் விரிவாக்க முயற்சிக்கு பயனர்களின் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do Not Disturb

என்னதான் ஆச்சு? 

‘தொந்தரவு செய்யாதே’ என்ற நேரடி மொழியாக்கம் கொண்ட ‘டு நாட் டிஸ்டர்ப்’ அம்சம், திறன்பேசிகளில் வரும் அழைப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களின் ஒலி அமைப்பைத் தானாகக் குறைத்து, அமைதியான சூழலை உருவாக்குகிறது. அன்றாடம் திறன்பேசிகளில் வந்து குவியும் நூற்றுக் கணக்கான தகவல் அறிவிப்புகளால் தொல்லை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இவ்வம்சம் வரமாகச் செயல்படுகிறது. விமானப்பயன்முறை (Airplane mode), அறிவிக்கைகளை (Notifications) அணைத்து வைப்பது, திறன்பேசியை அமைதியான நிலையில் வைப்பது (Silent mode) போன்ற வழக்கமான வழிகள் இதற்கு இருந்தாலும், தொல்லை தராதீர் (DND) என்பது எளிதில் உதவும் கண்கண்ட மருந்தாக அமைகிறது. வாகனம் ஓட்டுபவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் இவ்வம்சம், ஒரே தொடுதலில் பயனளித்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இவ்வம்சத்தை விரிவாக்க முயன்ற ஆண்டிராய்டு, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மோட்ஸ் (Modes) என்ற புதிய தொகுப்பைக் கொண்டு வந்தது. பொதுவாக அமைப்புகள் பகுதியில் ஒரே தொடுதலில் இயக்கக் கூடியதாக இருக்கும். அதில் தொல்லை தராதீர் அம்சத்தை, ஆண்டிராய்டு 15 இயங்குதளங்களில் மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் பொதுவாக இருந்த இந்த அம்சத்தை,  வாகனம் ஓட்டுதல், தூக்கம், பணிச்சூழல் எனப் பல செயல்பாடுகளுக்கு தனிப்பயனாக்கும் வசதி உருவாக்கப்பட்டது.

சிக்கல் வந்தது

ஆண்டிராய்டு 15 மேம்படுத்தலைப் பயன்படுத்திய பயனர்களிடமிருந்து இந்தப் புதிய மாற்றம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கு முன்னர் ஒரே தொடுதலில் இயக்கும் வகையில் விரைவுச் சுட்டியாக இருந்த தொல்லை தராதீர் அம்சம், மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் வைக்கப்பட்டது. இதனால், இவ்வசதியை அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இதை இயக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிகள் தேவைப்பட்டன. இது கடினமாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்தனர். பலரிடமிருந்தும் இதே வகையான புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் கூகுள் நிறுவனம் தொல்லை தராதீர் அம்சத்தைப் பழைய நிலைக்கு மாற்றும் முடிவுக்கு வந்துள்ளது. 

மீண்டும் எளிமையாகிறது

ஆண்டிராய்டு 16 மேம்படுத்தலின் பீட்டா பதிப்புகளில், தொல்லை தராதீரு் அம்சத்தைப் பழைய படி விரைவுச் சுட்டியாக அமைத்து கூகுள் சோதித்து வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்ஸ் அம்சத்துடன் சேர்த்து பொதுவானதொரு தொல்லை தராதீர் அம்சத்தை விரைவுச் சுட்டியாக வைக்கும் முயற்சி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பயனர்கள், புதிய விரைவுச்சுட்டியை, தற்போதைய மோட்ஸ் விரைவுச்சுட்டியுடன் சேர்த்தோ தனியாகவோ இயக்க முடியும். முன்னோட்ட நிலையில் உள்ள இந்த வசதி, விரைவில் ஆண்டிராய்டு 16 இன் முதன்மை வெளியீட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கூகுள், பயனர்களின் பின்னூட்டங்களை கவனித்து, தொல்லை தராதீர் விரைவுச்சுட்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயன்பாட்டை எளிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாற்றம், ஆண்டிராய்டு பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

கூகுள் மோட்ஸ் பற்றிய செய்தி

டிஎண்டியின் புதிய மாற்றம் பற்றிய செய்தி

The post தொல்லை இல்லை appeared first on செல்லினம்.

இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி

Iphone-Tata-India

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

Iphone-Tata-India

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% முதல் 108% வரையில் வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரித் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை அதன் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால் ஐபோன்களின் விலை உயரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிளுக்கு என்ன நெருக்கடி? 

உலக திறன்பேசிச் சந்தையில் தனியிடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சீனா மட்டும் 80-90% திறன்பேசிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த இறக்குமதிகளுக்கு 108% வரை வரி விதிக்கும் புதிய சட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. இந்த வரி விகிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் ஐபோன் விலை உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள திறன்பேசி வகைகளின் விலையை விட 46% விலை உயரலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் பலர் ஐபோன்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் இருக்கும்போதே அதிக திறன்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைப்பதாக அவை தெரிவிக்கின்றன. இதுவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆப்பிள் நிறுவனத்தைத் தள்ளியுள்ளது. 

ஆப்பிளுக்கு இந்தியா உதவிக்கரம்

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 10% முதல் 15% உற்பத்தியைச் செய்து வந்தது. டாடா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் உதவியுடன் உற்பத்தியாகும் ஐபோன்கள், பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்திய உற்பத்தி ஐபோன்களுக்கு 26% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய வரித் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இந்தாண்டு இந்திய உற்பத்தியை 20% -க்கு உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து உற்பத்தி வசதி மற்றும் மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை கோருதல் உள்ளிட்ட முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரித்து, சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலியை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்மூலம் வரி தாக்கங்களிலிருந்து தப்பி, உலகளாவிய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழி வகைகளைச் செய்து வருகிறது. 

இந்தியாவுக்கு என்ன பயன்? 

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்பதன் மூலம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்திய அரசின் வருவாய் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியா உற்பத்தி மூலம் உலகளாவிய சந்தையில் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும். இதனால், இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி திறன் உலகளாவிய சந்தையில் உயர்ந்ததாக மதிக்கப்படும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித் தொழில்நுட்பம் அத்துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி appeared first on செல்லினம்.

இணையப் போலிகள்

phishing

இணையத்தில் போலிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் மிகச் சில தற்காப்பு வழிகளையேனும் தெரிந்து கொள்ளும் தேவை உள்ளது.

phishing

உலக அளவில் இணையதளங்களின் நுகர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 1996-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் வெறும் 0.85% மக்களே இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 2024-ம் ஆண்டு கணக்கின்படி 68% மக்கள் இணையப் பயன்பாடு இருக்கிறது. இந்தப் பெரும் வளர்ச்சி, போலிகளின் கூடாரத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. 

பிஷிங் (Phishing) என்பது நம்பகமான நிறுவனம் அல்லது நபரைப் போலவே போலி கணக்குகள் உருவாக்கி, மோசடியில் ஈடுபடுவதாகும். போலி மின்னஞ்சல், செய்திகளைத் தூண்டில் போல் போட்டு, ஆசைகாட்டி நம்மைச் சிக்க வைப்பதால் இப்பெயர் வந்தது. சமூக வலைதளங்களில் நமக்குத் தெரிந்தவர் பெயரிலோ, நமது பெயரிலோ கணக்கு தொடங்கி, பணப் பறிப்பில் ஈடுபடுவது பற்றி நாம் அறிவோம். அதுவும் இணையப் போலி மோசடிகளின் ஒரு வகையே. இந்தியாவில் அன்றாடம் நம் தொலைப்பேசி அழைப்பின்போது ஒலிக்கும் அறிவிப்புகூட இத்தகைய போலிகளைப் பற்றிய எச்சரிக்கைச் செய்திதான். தொடக்க காலத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் நுழையும் இணையப் போலிகள், தற்போது மிகத் தெளிவாகவும், மிகுதியாகவும் வளர்ந்திருக்கின்றன. 

முன்னர் எழுத்துப் பிழைகளுடன் வரும் மின்னஞ்சல்களைப் பார்த்தாலே நமக்குச் சந்தேகம் எழும். அலுவல் ரீதியான மின்னஞ்சல் இப்படித் தப்பும் தவறுமாக இருக்காதே எனத் தோன்றினாலே நாம் மோசடியில் இருந்து தப்பிக்க வழி இருந்தது. தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் மின்னஞ்சல்கள் அசலைப் போலவே அலுவல் ரீதியிலான சொற்களைப் பயன்படுத்திப் பிழைகள் இன்றி வருகிறன்றன. இதில் போலிகள் வந்தால் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

எழுத்துப் பிழைகள் இன்றி வரும் போலிகளைக் கண்டறிய நமக்கு வரும் மின்னஞ்சல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பழக்கம் முக்கியமானது. எதிர்பாராத நிறுவனங்களிலிருந்து வரும் விளம்பர மின்னஞ்சல்களை சந்தேகத்துடன் அணுகுதல் வேண்டும்.

கடவுச் சொல், கடன் அட்டை விவரங்களைக் கோரும் மின்னஞ்சல்களைத் தவிர்த்தல் நல்லது. நம்பகத்தன்மை அற்ற இணையதள முகவரிக்குள் நுழையாமல் இருந்தால் போலிகளின் மோசடிகளைத் தவிர்க்கலாம். 

மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள். இரண்டு நிலை அங்கீகாரத்தை (Two-Factor Authentication) செயல்படுத்துதல் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

மின்னஞ்சல் அனுப்புநர் முகவரி உண்மையான நிறுவனத்தின் முகவரியுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும். வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகிக்கவும். இவற்றின் மூலம் போலி மோசடிகளிடமிருந்து தப்பிக்கலாம். கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றுவதும் சிறப்பானது.

போலிகளின் மோசடியில் சிக்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்தால், வேறு யோசனையே வேண்டாம், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றிவிடுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள். ஆப்பிள் போன்ற சில நிறுவனங்கள் தனித்துவமாக இதற்கென்றே புகார் பெட்டிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் புகாரளிக்கலாம்.

  • விவேக்பாரதி

The post இணையப் போலிகள் appeared first on செல்லினம்.

ஐபோனில் இயல்பாகும் வாட்சாப்

whatsapp iphone

ஐபோன் பயனர்கள் இனி இயல்புநிலைச் செயலியாக வாட்சாப் மூலம் அழைப்பு விடுக்கலாம், தகவல் அனுப்பலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

whatsapp iphone

உலகம் முழுவதிலும் சுமார் நூறு கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். திறன்பேசி சந்தையில் ஐபோன்கள் உச்சத்தில் உள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளைச் சீர்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் புதிய தொழில்நுட்பச் சந்தைச் சட்டத்தை (Digital Markets Act) கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் சுதந்திரத்தோடு சந்தைப் போட்டியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமே, ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய நெருக்கடியைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. 

ஆப்பிள் ஐபோனில் இதுவரை அழைப்பு மற்றும் தகவல் பகிர்வுகளுக்கு தன் சொந்த செயலியையே இயல்புநிலைச் செயலியாக (Default Apps) பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வரும் வகையில், திறன்பேசிகளில் இயல்புநிலை செயலிகளைப் பயனர்கள் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பச் சட்டம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனால் வாட்சாப் செயலியையும் இயல்புநிலைக்குத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வாட்சாப்பின் புதுப்பிப்பு அம்சங்களில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஐஓஎஸ் 18.2 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த, வாட்சாப் செயலியை 25.8.74 பதிப்புக்குப் புதுப்பிக்க வேண்டும். பின்னர் ஐபோனின் கட்டமைப்புக்குள் நுழைந்து, இயல்புநிலை செயலியில் வாட்சாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன்மூலம் ஐபோனில் உள்ள தொடர்புகளில், யாருக்கு அழைப்பு விடுத்தாலும் அது தானாகவே வாட்சாப் அழைப்பாக நிகழும். தகவல்களைப் பகிரும்போதும் இயல்பாகவே வாட்சாப் செய்தியாக அனுப்பப்படும். 

இந்த வசதி பயனர்களுக்கு தேர்வுகளும் சுதந்திரமும் வழங்குகிறது என்று கூறப்படும் நிலையில், கலவையான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் ஐபோனின் இயல்புநிலைச் செயலியைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். வாட்சாப்பை இயல்புநிலைக்கு மாற்றுவதில் வெகுசிலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் சிலர், வாட்சாப்பை இயல்பு நிலைக்கு மாற்றுவதால் வரும் அழைப்புகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும் பதிவு செய்துள்ளனர். 

மொத்தத்தில், இந்த புதுப்பிப்பு ஐபோன் பயனர்களுக்கு அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதலில் அதிக சலுகையை வழங்குகிறது, மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை அமைக்க உதவுகிறது.​

இந்த அம்சம் முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கும் விரிவாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஐபோனில் இயல்பாகும் வாட்சாப் appeared first on செல்லினம்.

ஏஐ எழுதும் கடிதம்

gmail

ஜிமெயிலில் மின்னஞ்சல் எழுத உதவும் ஹெல்ப் மி ரைட் (Help Me Write) வசதியை மேலும் பல மொழிகளில் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இவ்வசதி தமிழுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gmail

உலகின் அதிகமான பயனர்களைக் கொண்டு மின்னஞ்சல் உலகின் அரசனாக விளங்குகிறது ஜிமெயில். கூகுள் நிறுவனம் தன் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதை எளிமையாக்கப் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மின்னஞ்சல்களுக்கு தானியங்கியாக மறுமொழிகள் அனுப்பும் வசதி, எழுதும்போது வாக்கியத்தை நிறைவு செய்யப் பரிந்துரைகள் வழங்கும் வசதி என்பது உள்ளிட்ட பல வசதிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். உலகளாவிய பயனர்களுக்கு இவ்வசதிகளின் மூலம் பல நன்மைகளை வழங்கி, தன் பரப்பை விரிவாக்கி வரும் கூகுள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை முழுவதுமாக எழுதும் ஹெல்ப் மீ ரைட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆரம்பகட்ட சோதனை முயற்சியாக சில பயனர்களுக்கு மட்டும் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் கிடைக்கும் வகை செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள்.  

நமது ஜிமெயிலில், வழக்கமாக மின்னஞ்சல் எழுதும் இடத்தில் சென்று, சுட்டியர வலதுபுறம் தட்டி ஹெல்ப் மீ ரைட் வசதியை இயக்கலாம். சிலருக்கு மின்னஞ்சல் எழுதும் பெட்டியின் கீழ்ப் பகுதியிலேயே கூட்டல் குறியுடன் பேனா அமைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதைச் சொடுக்கியும் இயக்கலாம். பின்னர் அதில் வரும் பெட்டியில், நாம் எழுத விரும்பும் பொருளின் சாரத்தை ஒரு வரியிலேயோ, சில சொற்களிலேயோ உள்ளிட வேண்டும். கொடுத்த சில நொடிகளில் மின்னல் வேகத்தில் நமக்கான மின்னஞ்சல் தயார். 

ஒருவேளை அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், கீழே காட்டப்படும் ரிவைஸ் (revise) என்பதை அழுத்தி, வேறு வடிவத்திலான இன்னொரு மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ளலாம். அலுவல் மொழியில் எழுதுவது, அன்பருக்குக் கடிதம் எழுதுவது என்று இதில் பல தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. அதில் நமக்கு விருப்பமானதைச் சொடுக்கி, அந்தத்  தன்மையில் நமக்கான மின்னஞ்சலைப் பெறலாம். புதிய மின்னஞ்சல் மட்டுமின்றி, ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களுக்கு விரைவில் மறுமொழி எழுதவும் இவ்வசதி பயன்படுகிறது. 

கடந்த மாதம் வரை ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில் மட்டும் இவ்வசதி இருந்தது. இதைத்தான் இத்தாலியன், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கும் நீட்டிப்பதாக மார்ச் 24-ம் தேதி கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.  

இந்த அறிவிப்பு, பல மொழிகளைப் பேசும் கூகுள் பணிதள (workspace)  பயனர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வசதி எதிர்காலத்தில் மேலும் பல மொழிகளை ஆதரிக்கும் வகையில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெல்ப் மீ ரைட் போலவே செயற்கை நுண்ணறிவு மூலம் மின்னஞ்சல் எழுதும் வசதிகள் பல இருக்கும் நிலையில், கூகுளின் அதிகாரப்பூர்வ அமைப்பு பல மொழிகளுக்கும் விரிவாக்கம் அடைவது இணைய உலகில் மிகுந்த நம்பிக்கையை உண்டாகியிருக்கிறது.

  • விவேக்பாரதி

The post ஏஐ எழுதும் கடிதம் appeared first on செல்லினம்.

யூடியூப் மங்கலாக தெரிகிறதா?

உங்கள் யூடியூப் செயலியில் காணொளிகள் குறைந்த தரத்தில் மங்கலாகத் தெரிகின்றனவா? கவலைப்படாதீர்கள் அது உங்கள் இணைப்பில் உள்ள பிரச்னை இல்லை. உலகம் முழுவதிலும் ஐபோன் பயனர்கள் பலர் இந்தக் கோளாறு ஏற்பட்டதாகப் புகார் அளித்துள்ளனர். யூடியூப் நிறுவனம் இதற்கான தீர்வை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யூடியூப்-க்கு என்னதான் ஆச்சு? 

அறிவுரை முதல் பொழுதுபோக்கு வரை அனைத்துக்கும் இப்போது உலகம் யூடியூபை நம்பி இருக்கிறது. காணொளிகள், குறுங்காணொளிகள் என யூடியூப்  ஒலிக்காத இடமே கிடையாது எனலாம். ஆனால், அண்மையில் இதன் காணொளித் தரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள், யூடியூப் காணொளிகள் மற்றும் குறுங்காணொளிகள் அனைத்தும், 144p அல்லது 360p எனப்படும் மிகக் குறைந்த தரத்திற்குத் தானாகவே மாறிக் கொண்டதாகப் புகாரளித்தனர். சிலர், உயர் தர ரகமான 720p அல்லது 1080p தரத்திற்கு மாற்றினாலும், காணொளி மீண்டும் தரம் குறைந்ததாகவும் குறிப்பிட்டனர். சில ஆண்டிராய்டு பயனர்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.

தரக் குறைவு கோளாறுக்குக் காரணம் என்ன? 

யூடியூபின் புகார் பெட்டிகள், சமூக வலைதளங்கள் என அனைத்து இடங்களிலும் இந்தப் புகார் பெரும் பேசுபொருளானது. கேள்விகளுக்குப் பதிலளித்த யூடியூப் நிறுவனம், கோளாறு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்ததுடன், தீர்வுக்கான ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான காரணம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இணைய தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து அறிவையும் கொண்டுள்ள சில செய்யறிவு செயலிகளிடம் இதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதில், இணையத்தின் வேகத்திற்கு ஏற்ப காணொளியின் தரத்தைத் தானாக மாற்றிக் கொள்ளும் யூடியூபின் தொழில்நுட்பத்தில் (Adaptive Bitrate Streaming) இடறல் ஏற்பட்டிருக்கலாம். யூடியூபின் உள்ளடக்க விநியோக இணைப்பில் (Content Delivery Network) பழுது ஏற்பட்டிருக்கலாம். செயலியின் நவீனத்துவ தொழில்நுட்பத்தில் ஏதேனும் பிரச்னை உருவாகியிருக்கலாம் என்பது போன்ற காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. காணொளித் தரத்தின் கோளாறு குறித்து யூடியூப் நிறுவனமே உறுதி செய்திருப்பதால், இது பயனரின் இணைய சேவைக் கோளாறு கிடையாது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. 

என்ன பதில் சொன்னது யூடியூப்? 

தரக்குறைவு கோளாறு பற்றிய புகார்கள் எழுந்தவுடன் யூடியூப் குழுமத்தின் நிர்வாகியான கமீலா என்பவர், சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர், சில மணி நேரங்களில் அவரே இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது, இனி எந்தவித தரக்குறைவும் நடக்காது என்று பதிலளித்தார். ஆனால், யூடியூபின் புகார் பெட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக கமீலா பதிலளித்திருக்கிறாரே அன்றி, யூடியூப் அதிகாரப்பூர்வ பதிவாக இதனை வெளியிடவில்லை. எனவே, இனிமேலும் சில பயனர்கள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

தற்காலிக தீர்வுகள் உண்டா? 

யூடியூப் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாததால் காணொளிகளின் தரம் குறையும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கூகுள் இதற்குச் சில தற்காலிகத் தீர்வுகளை வழங்குகிறது. காணொளியின் தரத்தைத் தொடர்ச்சியாக, நாமே மாற்றி அமைப்பது, யூடியூப் செயலியைப் புதுப்பிப்பது, இணைய இணைப்பை மாற்றிப் பரிசோதிப்பது, மெய்நிகர் தனியார் இணைப்பைப் (VPN) பயன்படுத்துவது, போன்றவை தற்காலிகத் தீர்வுகளாகச் சொல்லப்படுகின்றன. அப்படியும் சரியாகவில்லையெனில் தொடர்ந்து யூடியூப் புகார் பெட்டியில் புகாரளிப்பதும் நல்லது.

சில பயனர்கள் இந்த இடைஞ்சல் சீராகி விட்டதாகக் கூறியுள்ள நிலையில், யூடியூப் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காததால், இது தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post யூடியூப் மங்கலாக தெரிகிறதா? appeared first on செல்லினம்.

இணையத் திணறல்

bandwidth throttling

உலகில் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கிறது. நம் அலைபேசி இணையத்தின் அன்றாட அளவு தீர்வதில் உண்டாகும் அழுத்தம் முதல், வீட்டு நிதிநிலை அறிக்கையில் இணைய சேவைக்கென்று தனி இடம் ஒதுக்குவதுவரை நம் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட இணையம் பல சமயங்களில் மந்தமாகச் செயல்படுவதும் உண்டு.

Internet

ஆனால், இணையம் அப்படி மந்தமாகும் காரணம் தெரியுமா? அதுவும் சில சமயங்களில் இணையச் சேவை திட்டமிட்டே மந்தப்படுத்தப்படுகிறது என்பதை அறிவீர்களா? அதை இணையச் சேவை வழங்கல் திணறல் (Internet Service Provider throttle) என்கிறார்கள். 

இணைய சேவை வழங்கல் திணறல் என்றால் என்ன?

நமக்கு இணையம் வழங்கும் நிறுவனத்தையே, இணையச் சேவை வழங்குநர் (Internet service provider) என்கிறோம். அவரிடம்தான் நாம் பணம் செலுத்தி, நமக்குத் தேவையான அளவு இணையச் சேவையைத் தேவையான வேகத்தில் பெற்றுக் கொள்கிறோம். ஒப்பந்தம் செய்துகொண்ட பயனர்களுக்குத் தரமான சேவையைத் தரவேண்டிய வழங்குநரே, சமயங்களில் இணையத்தின் வேகத்தைத் திட்டமிட்டுக் குறைக்க வேண்டி வருகிறது. அதனால் நமது இணைப்பு மந்தமாகிறது. இதுவே இணையச்சேவை வழங்கல் திணறல் எனப்படுகிறது. 

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இணையப் போக்குவரத்து நெரிசலைச் சீராக்குவதே முதன்மையானதாக உள்ளது. ஒரே சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பயனர்கள் பலர் இணையம் பயன்படுத்தும்போது நெரிசல் உண்டாகிறது. அப்போது குறிப்பிட்ட சில இணைப்புகளை மந்தப்படுத்தி, நெரிசலை சேவை வழங்குநர் நேர் செய்கிறார். இதன்மூலம் அனைவருக்கும் சீரான இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்கிறார். 

இது எப்படிச் செய்யப்படுகிறது? 

அதிக பயனர்களால் குறிப்பிட்ட பகுதியில் இணைய வழங்கலில் நெரிசல் ஏற்படும்போது, திட்டமிட்டு இந்தத் திணறல் நிகழ்த்தப்படுகிறது. அப்பகுதியில், அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் கண்டெடுக்கப்பட்டு, அவர்களது சேவை வேகம் குறைக்கப்படுகிறது. அதிகத்  தரவுப் பரிமாற்றம் நிகழும் பயனர்களின் இணைய வேகம் குறைக்கப்படும்போது, போக்குவரத்து நெரிசல் சீராகிறது. 

பயனர்கள் இணையப் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்தல், அதிக தரவு இழுக்கும் சேவைகளை மட்டும் மந்தப்படுத்துதல், சில வலைதளங்களில் நுழையும்போதே இணைய வேகம் மந்தப்படும்படி வடிமைப்பது போன்ற செயல்களின் மூலம் இணைய வழங்கல் திணறல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இணைய சேவையின் வேகத்தை அடிக்கடி கண்காணித்துக் கொள்வது, முழுமையான இணைய சேவைப் பரிசோதனை செய்துகொள்வது உள்ளிட்ட முறைகளில் நம் இணையம் மந்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

இணையத் திணறல் நல்லதா? கெட்டதா? 

இணையப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே சேவை வழங்குநர்களால் திட்டமிட்ட இணையத் திணறல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் குறைந்த அளவு இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சீரான சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. உச்ச வரம்பைக் கடக்கும் பயனர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிகிறது. பயனர்கள் அனைவருக்கும் தரமான இணைய சேவையை வழங்க உதவி செய்கிறது. 

ஆனால், அப்படி இணையம் மந்தப்படுவதால் சேவை வேகம் குறைவது, காணொளிகளின் தரம் குறைவது, வர்த்தக செயல்பாடுகளில் பாதிப்பு என்பதில் தொடங்கி, தகவல் சுதந்திரம் பறிக்கப்படும் வரை பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சில நிறுவனங்கள் இணையச் சேவை திணறலைப் பயன்படுத்தி, பயனர்களை அதிகக் கட்டணம் உள்ள திட்டங்களை வாங்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. 

இணையத் திணறலை எப்படித் தடுக்கலாம்? 

மெய்நிகர் தனியார் இணைப்பு (Virtual Private Network – VPN) என்கிற பாதுகாப்பான குறியாக்க (Encryption) முறை, இதற்கு ஒரு கண்கண்ட மருந்தாகக் கிடைக்கிறது. மெய்நிகர் தனியார் இணைப்பு, இயல்பிலேயே நம் தகவல்களை இணையத்தில் கசிய விடாத தடுப்புச்சுவராகச் செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கண்காணிப்புக்கு இடையூறு ஏற்படுவதால் இணைய சேவையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிறது. மேலும், மெய்நிகர் தனியார் இணைப்பின் மூலம் தகவல் பாதுகாப்பு, உலக இணையதளங்களுக்கு அனுமதி, பொது அருகலைகளை (Wi-Fi) பயன்படுத்தும்போது பாதுகாப்பு போன்ற பயன்களை அடைய முடிகிறது.

ஆனால், சில நாடுகள் மெய்நிகர் தனியார் இணைப்பு பயன்பாட்டிற்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத் திணறலைச் சிறிது நேரம் எதிர்கொண்டு, சேவையின் வேகத்தை மீண்டும் பெறுவதே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post இணையத் திணறல் appeared first on செல்லினம்.

ஆபத்தில் கூகுள் குரோம்?

கூகுள் குரோம்

கூகுள் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம், அதன் குரோம் உலவியை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இணையதள விளம்பர சேவைகளில் ஏகபோக உரிமையை கூகுள் மீறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Google Chrome
Google Chrome

கூகுள் ஏகபோக உரிமையாளரா?

அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த 2023-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஏகபோக உரிமைச் சட்டங்களை மீறுவதாக கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. அதில் ஆப்பிள், ஆண்டிராய்டு கருவிகளின் இயல்புநிலை தேடுபொறியாக, கூகுள் குரோம் உலவியை நிறுவ, அந்நிறுவனம் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து, ஒப்பந்தங்கள் போட்டதாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விதிமீறலை மறைக்க பல்வேறு நடவடிக்கைகளை கூகுள் மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அமித் மேத்தா, 2024-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கூகுள் போட்டியாளர்களின் சந்தை அணுகுமுறையைத் தடுப்பதாகவும், பயனர்களின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்தி, கூகுளை ஓர் ஏகபோக உரிமையாளர் (Monopolist) என அறிவித்தார். வர்த்தகத்தில் ஏகபோக உரிமை நிலையைப் பெறுவது சட்டவிரோதமல்ல என்றாலும், அதைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியைக் கட்டுப்படுத்த முயல்வது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார். 

கூகுள் கருவிகளின் விற்பனை 

இந்த வழக்கில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் மேலும் ஒரு கோரிக்கையைத் விடுத்துள்ளது. அதில், கூகுள் தனது குரோம் உலவியை விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், ஆப்பிள், மொசில்லா போன்ற நிறுவனங்களுடன் கூகுள் கொண்டுள்ள இயல்புநிலைத் தேடுபொறிக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூகுளின் இந்தச் செயல் போட்டியாளர்களை விலக்கிச், சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கூகுளின் ஏகபோக உரிமைத்துவத்தை நீக்கும் வகையில், கூகுள் பிளே, கூகுள் குரோம் உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்யலாம் என்று நீதிபதி அம்த் மேத்தா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதை வலியுறுத்தி கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

குரோம் விற்பனையின் தாக்கம்

கூகுள் குரோம் உலவி விற்பனை செய்யப்பட்டுவிட்டால், அந்நிறுவனத்தின் வருமானம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிளுடன் கூகுள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கொண்டுள்ள ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், உலக அளவில் 3.69 பில்லியன் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் உலவி மற்றும் அதன் பயன்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.  ஏகபோக உரிமை நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, சந்தையில் போட்டியைத் தவிர்ப்பதுடன் பயனர்களின் விருப்பங்களையும் கூகுள் கட்டுப்படுத்துவதற்கு இப்புதிய நடவடிக்கை கடிவாளமிடுவதுடன், தொழில்நுட்ப சந்தையின் முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

கூகுளின் பதில் 

இந்நிலையில் கூகுள் நிறுவனம், நீதித்துறை அமைச்சகத்தால் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், கூகுளின் வரையறுக்கப்பட்ட அங்கீகாரத்திற்குள் அதீத தலையீடு நிகழ்வதாகவும் விமர்சித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, மேல்முறையீட்டுக்கும் தயார் நிலையில் உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. இந்த வழக்கு, இணையளத்தில் ஏகபோக உரிமைகள் மற்றும் அதற்காக நிலவும் போட்டிகள் குறித்த முக்கியமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • விவேக்பாரதி

The post ஆபத்தில் கூகுள் குரோம்? appeared first on செல்லினம்.

❌