Normal view

Received before yesterday

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

28 May 2025 at 08:07

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே…...

The post களைகட்டும் வீரபாண்டித் திருவிழா first appeared on Her Stories.

குலசாமி ஜான் பென்னிகுவிக்

14 May 2025 at 05:50

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்...

The post குலசாமி ஜான் பென்னிகுவிக் first appeared on Her Stories.

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம்: சூரியசந்திரன்)

தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் Happy pongal என்கிற வாசகம் இருந்தது.

காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்டுத் தாக்குதல்களை உணர முடியும். Happy pongal என்பதிலே உலகமயமாதலின் வெளிப்பாடு; மீண்டுமொரு பொங்கலிட கோயிலுக்கு வாருங்கள் என்ற அழைப்பிலே இந்துத்வாவின் வெளிப்பாடு. நம் முன்னால் நிற்கிற மிகப்பெரிய இரண்டு பேரழிவுகள் இவை.

எந்த வகையான பண்பாட்டுத் தாக்குதல்கள் நம் மீது தொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு பண்பாட்டின் வேர்கள் எவை என்பதை நாம் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலேதான் வரலாற்றில் வாழ்தல் என்பது உருவாகும். எனவே நாம் நமது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாறு எது?

முதலில் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ``பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தின் உறுப்பாக இருந்து கற்கும் திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதி'' என்று எட்வர்ட் பார்மன் டையர் பண்பாட்டை வரையறுக்கிறார். 1877-ல் அவர் ‘பண்பாடு என்றால் என்ன’ என்று எழுதிய நூலின் வாசகம் இது. பிறகு பண்பாடு பற்றி நிறைய விளக்கங்கள் வந்திருக்கின்றன.

அந்த வகையில் பார்க்கிறபோது இந்தப் பண்பாடு என்பதற்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் ஆய்வு தேவைப்படுகிறது. இது இரு வகையாக வெளிப்படும். 

1. ஏற்கெனவே நிலவுகிற சமுதாய அமைப்பைக் கொண்டு செலுத்துகிற அரசு அமைப்பு, அதனுடைய அதிகார உறுப்புகள் அதாவது ஆட்சி அமைப்பு, ராணுவம், காவல் என ஆயுதங்களாலே இயக்கப்படுகிற ஒரு வடிவம். 

2. பண்பாட்டு வடிவம். ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதும் வன்முறை எந்திரங்களால்தான் இயக்கப்படுகிறது என்பதை மார்க்ஸ் வரையறுத்தார். ஆனால் ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என மார்க்சியத்தை இன்னும் வளப்படுத்தினார். ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து மேட்டிமையாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. மேலாண்மை அல்லது ஆதிக்க சக்திகளுடைய ஆட்சி அதிகாரம் என்பது மக்களுடைய அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. பண்பாட்டு தளத்திலே இதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களிலே ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை ஞாபகப்படுத்துகின்றன. முற்றத்திலே புதுமணல் பரப்பி பந்தல் காலிட்டு அந்த ஊரிலே இருக்கிற பெரியவர்கள் அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒரு நபர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது அந்த சமுதாயத்திலே இருக்கிற பெரியவர் இவர்களுடைய தலைமையிலே அந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரி திருமணங்களை நானே நேரடியாக - சாட்சியாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள்கூட பக்கத்திலே இருக்கிற சிறுநகரங்களிலே பெரு நகரங்களிலே திருமண மண்டபங்களில் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொது கலாச்சாரம் என்பதற்குள்ளே வாழ்க்கையைக் கொண்டு வந்துவிடுகிறது.

மேலாண்மை செலுத்துகிற ஆதிக்க சக்திகளின் கலாச் சாரம்தான் இன்றைக்கு பொது கலாச்சாரமாக இருக்கிறது. மக்களுடைய கலாச்சாரம் என்பது பொது கலாச்சாரமாக இல்லை. ஆகவே திருமண மண்டபம் என்ற வடிவம் வந்தவுடனே திருமணம் என்பது பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாறுகிறது. ஆகவே இன்றைக்குப் பண்பாட்டு வடிவம் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. வாழ்வின் பல்வேறு வடிவங்களிலே அது வெளிப்படுகிறது.

சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். விதவை மறுமணம் என்பது ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து பால்ய விவாகம் தடுப்பு என்பதிலிருந்து தொடங்கி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே மிக வேகமான சீர்திருத்தமாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அது பேசப்படுகிறது. ஆனால் கைம்மை நோன்பு, விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடியிலே இயல்பாக இருக்கிற எதார்த்தம்.

இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. எனவே அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.

வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய இந்த மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் பிறகு நாவலிலே இது வரும்.

இது நமது அடித்தள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டிலிருந்து எல்லாமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இன்னொரு பேராபத்து. ஏற்கெனவே குறிப்பிட்டது போல உலகமயமாதல். இந்த உலகமயமாதல் என்பது தனியார்மயம் தாராளமயம் - இவற்றினால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதுதான் உலகமயமாதலின் சாரம். கல்வி வியாபாரமயமாதலின் விளைவுதான் கும்பகோணத்திலே 88 குழந்தைகளின் சாவு. இதன் தொடக்கத்தினை முன்பே பலர் தொடங்கி வைத்து விட்டார்கள். குறிப்பாக கல்வி வியாபாரமாக்குதலைத் தொடங்கி வைத்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சாரும்.

1964 ல் நான் மதுரை தியாகாரய கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மதியம் வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது எல்லாப் பேருந்துகளும் ஒரு திசை நோக்கித் திருப்பப்படுகின்றன. மதுரையில் அப்போது டிவிஎஸ் என்ற பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏறிச் சென்று மதுரை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சரஸ்வதி உயர்நிலைப் பள்ளி இடிந்து 44 மாணவிகள் சவமானதைக் கண்டேன். அதைப்பற்றி தோழர் பச்சையப்பன் என்கிற நாட்டுப் புறக் கவிஞர் “படபடவென வருகுது ரயிலு கிடுகிடுவென நடுங்குது ஸ்கூலு” என்று நாட்டுப்புறப் பாடல் வடிவிலே ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்த மாணவிகளை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுகிற வேலையை டிவிஎஸ் நிறுவனத்தினுடைய தொழிலாளர்கள்தான் செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 ல் திராவிட இயக்கத்தின் ஆட்சி வந்தபோது 44 மாணவிகளின் கொலைக்குக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் அதே பள்ளிக்கூடத்தை அதே பெயரில் வேறொரு இடத்திலே புதிதாகக் கட்டி நடத்தி வருகிறார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தவுடன் சாதி பண அடிப்படையில் அய்க்கியமாகி விடுகிறார். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்கு இருக்கிறது. ஆகவே அன்றைக்கு கல்வி வணிக மயமாகி வந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

உலகமயமாதல் என்பது எல்லாவற்றிலும் ஊடுருவி வருகிறது. பொருளாதார வேட்டையின் காரணமாக உள்ளுக்குள் நுழைகிற பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் பொருளாதார வேட்டையை மட்டும் நடத்துவதில்லை. அவை பண்பாட்டுத் தளத்தையும் குறிவைக்கின்றன. மலேசிய முன்னாள் பிரதமர் சொன்னார்: ``கொக்கோ கோலா நிறுவனத்தை மலேசியாவுக்குள்ளே நுழைய விட்டதுதான் எங்களுடைய பெரிய தவறாக ஆகிவிட்டது. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சுரண்டிக் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல எங்கள் பண்பாட்டையே அவர்கள் தகர்த்து விட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். அது போலவே ஒரு கொகோ கோலா அல்லது பெப்சி நிறுவனம் நம்மூர் காளி மார்க், வின்சென்ட் சோடா, மாப்பிள்ளை விநாயகர் போன்ற வற்றை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

12,000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி விரிவுரையாளர்களை-பேராசிரியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். நிரந்தரமான, அமைதியான குடும்பம் என்ற அமைப்புக்குள்ளான இந்த வாழ்க்கையிலே இருந்து அவர்களைப் பிரித்து, அலைந்து திரியும் வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்குகிறார்கள். அலைந்து திரியும் வாழ்க்கை என்பது அலைந்து திரியும் மனநிலையை உருவாக்குவதாகவே இருக்கிறது. இதுதான் நுகர்வு கலாச்சாரத்துக்கான அடிப்படை. நடுநிலையற்ற மனம் எதன் மீதும் நம்பிக்கை இல்லாத மனம் வேறொரு பண்பாட்டுக்கு அவர்களை இழுத்துப் போகிறது. இவ்வகையான கூறுகளும் இந்த சமுதாயத்திலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே உலக அளவிலான அபாயம் உலகமயமாதல்; உள்நாட்டு அபாயம் இந்துத்வா. இந்த இரு அபாயங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இதற்கான மாற்றுத் தளங்களை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம்? இதற்காக அரசியல் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இக்கால தமிழ் இலக்கியத்தில் தகுதி திறன் மேம்பாடு உன்னதம் பற்றியெல்லாம் பேசுபவர்கள் உலக மயமாதல் இந்துத்வா ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. இலக்கியப் படைப்புகளிலே இவை பற்றிப் பேச முடியவில்லை என்றால் வேறு அரங்கிலே ஊடகங்களிலே பேச வேண்டும். அரசியல் நீக்கமற்ற இலக்கியங்களை உருவாக்குவது என்ற போராட்டத்தையும் நாம் தொடங்க வேண்டும்.

- கூட்டாஞ்சோறு (அக்டோபர் 2005 - மார்ச் 2006)

அமுக்குப் பேய்

மந்தை வேம்புகளுக்கு மேலாக, கிழக்குத்‌ திசையிலிருந்து ஊருக்குள் இறங்கும்‌ நிலா. உயர்ந்த ஒற்றைத்‌ தென்னை வழியாக வெள்ளித்‌ தகடாய்‌ உருகி வழிகிறது. உயரமான ஒரு நெஞ்சுக்குள்ளிருந்து குளுமை புறப்பட்டு, ஊர்‌ முழுதையும்‌ குளிப்பாட்டி நிற்பது போல்‌ தெரிகிறது.

இருபது, முப்பது வருசங்கள்‌ முன்‌, கிராமம்‌ முன்னிருட்டி விடும்‌, ஏழு மணிக்கு ஒதுங்க வைத்து தூங்கப்‌ போய்‌ விடும்‌.

ஒரு சின்னப்‌ பிள்ளை முழித்தெழுவதைப்‌ போல்‌, வாழ்வு தொடங்கும்‌ காலை; இரவின்‌ மிச்சமான கறுப்பு படிவங்களை உடைத்துவிட்டு, மிதக்கும்‌ வெள்ளை வெயில்‌, கண்மாய்‌ ஓடுகால்‌ காலாங்கரை நெடுகிலும்‌, அந்திக்காற்றில்‌ சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு என்று ஆடுகிற மஞ்சள்‌ ஆவாரம்பூக்கள்‌. குழந்தைகளுக்கு 'சீர்‌ அடிச்சிருச்சி' என்பார்கள்‌. ஆவரம்‌ பூக்களின்‌ மொட்டையும்‌, பேர்‌ சொல்லாததையும்‌ சேர்த்து அரைத்துக்‌ கொடுத்தால்‌, அந்த நோய்க்கு சட்டென்று கேட்கும்‌. “ஆவாரை பூத்திருக்க சாவாரைக்‌ கண்டதுண்டோ” என்பது சொலவம்‌.

ஊர்‌ தலை கீழாக உருண்டிருந்தது.

ராத்திரி 10 மணிக்கு கடைசி பஸ் ஊரில் கால் வைக்கிறபோது வெளிச்சம் மூஞ்சியில் படுவதை, துடைத்துக்கொண்டே பெண்கள்‌ உட்கார்ந்து பேசிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

11 மணி வரை ஊர் இரண்டாகுகிற மாதிரி, டேப் ரெக்கார்டரில் பெருத்த சத்தம் கேட்கிறது. நாலைந்து பேர் ஆடுமாடுகள் சேகரித்து, கேரளா பக்கம் கொண்டு போய் நல்ல வியாபாரம். இன்னும்‌ சிலருக்கு ஜவுளி வியாபாரம்‌. பம்பாய்‌ வரையிலும்‌ போய்‌, சரக்‌குப்‌ போட்டு வந்து விற்கிறார்கள்‌. வியாபாரம்‌ சக்கைப்‌ போடு போட்டது. பத்து நாள்‌, பதினைந்து நாள்‌, சில பொழுது மாசககணக்கில்‌ ஊர்‌ சுற்றி விட்டு வந்து, வந்ததும்‌ பாட்டு, டி.வி, என்று கதி கலங்க அடிக்கிறார்கள்‌.

''மானுடா ஓடுது

மறியடா நல்ல தம்பி

மானோடும்‌ வீதி எல்லாம்‌

தானோடித்‌ திரிந்தாயோ"

அமிர்தப்பால் ஊட்டி, நெஞ்க்‌ கூட்டுக்குள்ளிருந்து பீறிட்டு, தொட்டில்‌ வழி வழிந்து வரும் தாலாட்டுக்கு என்‌ காதுகள்‌ தவமிருக்கின்றன.

இனியொரு வரம்‌ போல்‌, தாலாட்டு வருமா?

"கருவ மரத்தடியில்‌ - என்‌

வலையைச்‌ சொன்னமின்னா

கருவ இலை உதிரும்‌ - அந்தக்‌

கருங்கிணறு நீர் ஊரும் எந்தன் மாதாவே"

நின்று எரிகிற நெருப்பு போல்‌, மயானக்‌ கரையெங்கும்‌ பரவி நிற்கிற ஒப்பாரியை இனியொரு தடவை கேட்க முடியுமா?

இழவு விழுந்து விட்டால்‌, தூரந்‌ தொலைவிலிருந்து சொந்த பந்தங்கள்‌ வருவதற்காக, அன்று ராத்திரி கதை படிப்பார்கள்‌. சென்னப்பன்‌ தாத்தா ராக ஏற்றம்‌, இறக்கத்தோடு படிப்பார்‌. ஒரு நாடகம்‌ நடத்துற மாதிரியே இருக்கும்‌.

அப்படியான புராண வாசிப்பின்போது, என்னுடைய விதவைப்‌ பாட்டி “இப்படி நீ நல்லா வாசிப்பேன்னு தெரிஞ்சிருந்தா, சென்னப்பா, நா ஒன்னைக்‌ கல்யாணம்‌ பண்ணிக்கட்டிருப்பேன்னு” ஒரு தடவை சொன்னாள்‌.

அதற்கு சென்னப்பன்‌ பதில்‌ "ஒன்னையைக்‌ கட்டிக்கிட்டிருந்தா இந்நேரம்‌ நா செத்துப்போயிருந்திருப்பேனே''. பாட்டி கேட்டதற்கும்‌ சென்னப்பன்‌ சொன்ன பதிலுக்கும்‌ சரியாகி விட்டது.

கல்யாணம்‌ காலையில்‌ முடிந்திருந்தது. முளைவிடப்‌ போகும்‌ புது வாழ்வின்‌ அறிகுறிகளாக, திருமண அலங்காரங்கள்‌ அப்படியே நின்றன.

தங்கையின்‌ திருமண வேலைகளில்‌ களைத்து படுத்திருந்தவனை ஒரு நிழல்‌ எழுப்பியது. அந்த உருவம்‌ கொண்டு ராமு.

'“ஒன்னைய முருகேசன்‌ பையன்‌ மூத்தவன்‌ பாக்கணுமாம்‌"

"யாரு?"

"சுந்தர்"

"என்ன?"

“பாக்கணுமாம்‌. ராத்திரி வீடியோ போடறதுக்கு கோப்புக் கட்றான்னு (ஏற்பாடு செய்வது) பாக்கறேன். முதல்லே ஒந்தம்பி குருசாமியைப் போய்ப் பார்த்திருக்காங்க. அதெல்லாம் தோதுப்படாது. அப்படின்னா கூட, பெரியவர் தான் முடிவு செய்யனும்னு சொல்லிட்டாங்க, அதான்‌ பயக திக்குமுக்காடிட்டு நிக்கிறானுக''

வீடியோ டெக்‌, டிவிக்கு வாடகை நாளைக்கு 300 ரூபாய்‌, பட கேசட் 50 ரூபாய்‌, கார்‌ வாடகை எல்லாம்‌ சேர்த்து, ஒரு 500 ரூபாயைச் சுண்டு என்பதுதான்‌ சுந்தரின்‌ விண்ணப்பம்‌.

அதிலும்‌ ஒரு படம்‌, ரெண்டு படம்‌ போதாது. ராத்திரி முழுக்கப்‌பார்க்க வேண்டும்‌.

இழவு வீட்டில்‌ கூட, சடலத்தை உள்ளே வைத்துக்‌ கொண்டு வெளியே வீடியோ நடக்கிறது. “சாமி படம்‌ ஒன்னு போட்டா, ரஜனி படம்‌ ஒன்னு வாங்கிட்டு வாங்கப்பா" என்று சமரசம்‌ பேசுகிறார்கள்‌. புனிதங்களில்‌ புழு ஊருகிறது.

வாசிப்பு, அறிவைத்‌ தொந்தரவு செய்யும்‌. கேள்வி, சிந்தனையைச்‌ சிலிர்க்க வைக்கும்‌. படம்‌ பார்த்தல்‌, இந்த இரண்டையும்‌ செய்யாது. மூளையத்‌ தொந்தரவு செய்யாது தூங்க வைக்கும்‌. மூளை நிமிண்டாத களிமண்‌ உருண்டைகள்‌ பிசையப்படுகின்றன: அதிலிருந்து அவரவர்ககுத்‌ தேவைப்படுகிற உருவங்களைச்‌ செய்து கொள்ளாலாம்‌. கிராமங்களிலிருந்து சிறு அக்னியும்‌ முளைத்து திமிறிப்‌ பரவி மேலேறி வரக்கூடாது. உள்ளூர்‌ மற்றும்‌ சர்வதேச கலாச்சார வியாபாரிகளின்‌ கையாட்கள்‌ கிராமங்களையும்‌ வளைத்துப்‌ போட்டு விட்டார்கள்‌.

வீடியோ ஓடிக்‌ கொண்டிருக்கிறது.

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013

பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம்,  பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.



வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.

எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள். 

உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில்  எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.

வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு. 

பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?

சித்திரையில் இருக்கும் தமிழா

நித்திரையில் இருக்கும் தமிழா 

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் 

கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள் 

தரணி ஆண்ட தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு 

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள். 

நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று. 

அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது. 

எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம்  உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

❌