Normal view

Received before yesterday

இணையத் திணறல்

bandwidth throttling

உலகில் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கிறது. நம் அலைபேசி இணையத்தின் அன்றாட அளவு தீர்வதில் உண்டாகும் அழுத்தம் முதல், வீட்டு நிதிநிலை அறிக்கையில் இணைய சேவைக்கென்று தனி இடம் ஒதுக்குவதுவரை நம் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட இணையம் பல சமயங்களில் மந்தமாகச் செயல்படுவதும் உண்டு.

Internet

ஆனால், இணையம் அப்படி மந்தமாகும் காரணம் தெரியுமா? அதுவும் சில சமயங்களில் இணையச் சேவை திட்டமிட்டே மந்தப்படுத்தப்படுகிறது என்பதை அறிவீர்களா? அதை இணையச் சேவை வழங்கல் திணறல் (Internet Service Provider throttle) என்கிறார்கள். 

இணைய சேவை வழங்கல் திணறல் என்றால் என்ன?

நமக்கு இணையம் வழங்கும் நிறுவனத்தையே, இணையச் சேவை வழங்குநர் (Internet service provider) என்கிறோம். அவரிடம்தான் நாம் பணம் செலுத்தி, நமக்குத் தேவையான அளவு இணையச் சேவையைத் தேவையான வேகத்தில் பெற்றுக் கொள்கிறோம். ஒப்பந்தம் செய்துகொண்ட பயனர்களுக்குத் தரமான சேவையைத் தரவேண்டிய வழங்குநரே, சமயங்களில் இணையத்தின் வேகத்தைத் திட்டமிட்டுக் குறைக்க வேண்டி வருகிறது. அதனால் நமது இணைப்பு மந்தமாகிறது. இதுவே இணையச்சேவை வழங்கல் திணறல் எனப்படுகிறது. 

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இணையப் போக்குவரத்து நெரிசலைச் சீராக்குவதே முதன்மையானதாக உள்ளது. ஒரே சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பயனர்கள் பலர் இணையம் பயன்படுத்தும்போது நெரிசல் உண்டாகிறது. அப்போது குறிப்பிட்ட சில இணைப்புகளை மந்தப்படுத்தி, நெரிசலை சேவை வழங்குநர் நேர் செய்கிறார். இதன்மூலம் அனைவருக்கும் சீரான இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்கிறார். 

இது எப்படிச் செய்யப்படுகிறது? 

அதிக பயனர்களால் குறிப்பிட்ட பகுதியில் இணைய வழங்கலில் நெரிசல் ஏற்படும்போது, திட்டமிட்டு இந்தத் திணறல் நிகழ்த்தப்படுகிறது. அப்பகுதியில், அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் கண்டெடுக்கப்பட்டு, அவர்களது சேவை வேகம் குறைக்கப்படுகிறது. அதிகத்  தரவுப் பரிமாற்றம் நிகழும் பயனர்களின் இணைய வேகம் குறைக்கப்படும்போது, போக்குவரத்து நெரிசல் சீராகிறது. 

பயனர்கள் இணையப் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்தல், அதிக தரவு இழுக்கும் சேவைகளை மட்டும் மந்தப்படுத்துதல், சில வலைதளங்களில் நுழையும்போதே இணைய வேகம் மந்தப்படும்படி வடிமைப்பது போன்ற செயல்களின் மூலம் இணைய வழங்கல் திணறல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இணைய சேவையின் வேகத்தை அடிக்கடி கண்காணித்துக் கொள்வது, முழுமையான இணைய சேவைப் பரிசோதனை செய்துகொள்வது உள்ளிட்ட முறைகளில் நம் இணையம் மந்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

இணையத் திணறல் நல்லதா? கெட்டதா? 

இணையப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே சேவை வழங்குநர்களால் திட்டமிட்ட இணையத் திணறல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் குறைந்த அளவு இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சீரான சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. உச்ச வரம்பைக் கடக்கும் பயனர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிகிறது. பயனர்கள் அனைவருக்கும் தரமான இணைய சேவையை வழங்க உதவி செய்கிறது. 

ஆனால், அப்படி இணையம் மந்தப்படுவதால் சேவை வேகம் குறைவது, காணொளிகளின் தரம் குறைவது, வர்த்தக செயல்பாடுகளில் பாதிப்பு என்பதில் தொடங்கி, தகவல் சுதந்திரம் பறிக்கப்படும் வரை பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சில நிறுவனங்கள் இணையச் சேவை திணறலைப் பயன்படுத்தி, பயனர்களை அதிகக் கட்டணம் உள்ள திட்டங்களை வாங்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. 

இணையத் திணறலை எப்படித் தடுக்கலாம்? 

மெய்நிகர் தனியார் இணைப்பு (Virtual Private Network – VPN) என்கிற பாதுகாப்பான குறியாக்க (Encryption) முறை, இதற்கு ஒரு கண்கண்ட மருந்தாகக் கிடைக்கிறது. மெய்நிகர் தனியார் இணைப்பு, இயல்பிலேயே நம் தகவல்களை இணையத்தில் கசிய விடாத தடுப்புச்சுவராகச் செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கண்காணிப்புக்கு இடையூறு ஏற்படுவதால் இணைய சேவையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிறது. மேலும், மெய்நிகர் தனியார் இணைப்பின் மூலம் தகவல் பாதுகாப்பு, உலக இணையதளங்களுக்கு அனுமதி, பொது அருகலைகளை (Wi-Fi) பயன்படுத்தும்போது பாதுகாப்பு போன்ற பயன்களை அடைய முடிகிறது.

ஆனால், சில நாடுகள் மெய்நிகர் தனியார் இணைப்பு பயன்பாட்டிற்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத் திணறலைச் சிறிது நேரம் எதிர்கொண்டு, சேவையின் வேகத்தை மீண்டும் பெறுவதே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post இணையத் திணறல் appeared first on செல்லினம்.

❌