பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் – அருள்ஜோதி முரளிதரன்:
ஆசிரியர் குறிப்பு:
கோவையைச் சேர்ந்தவர். முனைவர் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது அமெரிக்கப் பல்கலையில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இலக்கியம், தமிழ்சங்கப் பணிகளுடன், அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.
பெண்ணோ, ஆணோ எதிர்பாலினத்தின் மீதான அன்பு, புறக்கணிப்பின் வலி, பிரிவு இன்னபிறவற்றைக் குறித்து எழுதாமல் இருக்க முடியாது. நம்மை அதிகம் பாதிப்பவற்றைத் தான் நம் மொழியில் எழுதுகிறோம். அருள்ஜோதி, அமெரிக்கா வரை ஜாதியைக் கொண்டு சென்றிருப்பது, பள்ளி மாணவனின் உளச்சிக்கல், போரின் குரூரம், அமெரிக்கக்கனவுக்குள் சிறைபட்ட
பெண் என்பது போல பலவற்றைக் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
முழுக்கவிதையல்ல இது. கவிதை சொல்லும் பொருளும் வேறு. ஆனால் இந்த வரிகளை மொத்தக் கவிதையில் இருந்து துண்டித்தால் இது தனியாகத் தரும் பொருள் வேறு. நிழலைச் சுமப்பதென்பது பெரும்பாரம்.
“எனக்கும் காலத்துக்குமான
இடைவெளியின் கணத்தில்
நுழைந்து கொள்கின்றன
அரூப நிழலின் கரங்கள்
சதாசர்வ காலமும் கூடவே
அலைகிறது என் நிழலின் சுமை”.
பெண்கள் வேலைக்கு சென்றால் அந்நிய ஆணால் கவரப்பட்டு விடுவார்கள் என்ற ஆதிகாலத்து பயம் அகலாமலிருக்கிறது. தன் பெண்ணில் தொலைந்து போன தன்னைத் தேடும் பெண்கள் ஏராளம்.
‘ ஊரை உறவை கனவைத்
தொலைத்த இறுக்கம்
மனநோயான பின்பு
மாடுலர் கிட்சனில்
இன்ஸ்டாரீல்களுக்குள்
அடக்கப்பட்டுவிடுகிறது
டிபன்டெண்ட் விசாவில்
வந்தவளின்
கோல்ட் மெடல்களும்
ஒரு கோப்பைக் கனவுகளும்”
வீடு, கொல்லை, புங்கைமரம் எல்லாமே போன பிறவியில் பார்த்தது போல் இருக்கிறது. இதில் வரும் பெண்ணையும் தான். முத்தத்தை எதற்குப் புதைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். மரத்தின் கீழ் புதைத்ததால் ஊதாப்பூ, வானத்தில் ஒளித்திருந்தால் நட்சத்திரம்.
“நுதல் முத்தங்கள் ஒவ்வொன்றாய்
ஒற்றியெடுத்து என்வீட்டின் கொல்லையில்
புங்கை மரத்தடியில் புதைத்து
வைத்திருந்தேன் நான்
காலத்தைக் கொஞ்சம் சிறையிலெடுத்து
நம் அந்தரங்கத்தைச் சுமந்தலைகிறது
கொல்லைப்புறத்துப் புங்கை
தனித்திருக்கும் இரவுகள்
சலனமின்றிக் கடக்க
நடுநிசியில் முளைக்கிறது
தினமொரு புங்கைமர முத்தம்”.
இந்தத் தொகுப்பின் கவிதைகளில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். காதலை வெளிச்சொல்லத்தெரியாத அப்பாவி புங்கைமரப்பெண். அந்நியமாதல் கோட்பாடு எழுதும், உணர்ச்சியை உதிர்த்து அறிவால் விடைதேடும் அடுத்த பெண். கடைசியாகத் தீராக்கோபத்தைக் கவிதையெழுதி அணைக்கும் மற்றொரு பெண்.
அருள்ஜோதியின் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன. சில எடிட்டிங்கைக் கோருபவை. எல்லாக் கவிதைகளிலும் ஒரு முதிர்ச்சியைக் காண முடிவது முக்கியமான விஷயம். சதுரங்க விளையாட்டை நிகழ்த்தும் பெண், பவளமல்லி மரம் வரைந்தவளின் பெண், என்று சில பெண்கள் கவிதைக்குள் கதைகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள். நல்ல வாசிப்பனுபவத்தை அளித்த தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அருள்ஜோதி.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல் பதிப்பு டிசம்பர் 2024
விலை ரூ. 150.