Normal view

Received before yesterday

பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

நாமக் கல்லார் நற்கவி ஆவார்
கவிமணி தமிழின் கற்கண் டாவார்
பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
அதுவே அவரின் ஆசியே ஆகும்

சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார்
வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
அடிமை என்பது அனலாய் கொதித்தது
அனலை அகற்றப் பாரதி பாடினார்
அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

பாரதி தாசனின் காலமோ வேறு
அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
தமிழே ஆட்சி தமிழே தலைமை
அதனால் தமிழை அமுதம் என்றார்

பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
பரதி வழியில் பயணந் தொடரினும்
அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
குருவின் கருவை மனத்தில் கொளினும்
அவரின் சிந்தனை அகன்றே நின்றது

பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும்
பக்தியை பாரதி பக்குவம் என்றார்
பாரதி தாசனோ பக்தியைப் பாரா
புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார்

பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்

அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா 

அம்மையே அப்பாவென் றழைத்தார் வாசகர்
அன்னையும் பிதாவும் என்றார் ஒளவையார்
அன்னையைத் தொட்டே ஆரம்பம் என்பதை
அனைவரும் அகத்தில் இருத்திடல் வேண்டும்

அன்பின் உருவாய் அன்னையே இருக்கிறாள்
அவளே பொறுமையின் இருப்பிடம் ஆகிறாள்
உண்ண மறப்பாள் உறங்க மறப்பாள்
ஒரு கணமேனும் பிரியவே மறக்காள்

பத்து மாதம் பாடாய் படுவாள்
பசியும் பார்க்காள் ருசியும் பார்க்காள்
கருவை எண்ணியே உருகியே நிற்பாள்
காத்துக் கிடப்பாள் புதுமலர் கண்டிட

பட்ட வேதனைகள் பஞ்சாய்ப் பறந்திடும்
பச்சிளம் குழந்தை முகத்தைக் கண்டதும்
கட்டித் தழுவுவாள் கண்ணீர் பெருகும்
இட்டமாய் அணைப்பாள் இன்பத்தில் மூழ்குவாள்

அன்னையே என்று ஆனந்தப் படுவாள்
அனைத்தும் கிடைத்ததாய் அகநிறை வடைவாள்
பெண்மையே முழுமை பெற்றதாய் நினைப்பாள்
பெரு வரமாகவே எண்ணியே மகிழ்வாள்

நீள நினைப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
ஆழ அறிவை ஊட்டிட விளைவாள்
வாழ்வை வளமாய் ஆக்கிட முனைவாள்
வழித் துணையாக இருப்பாள் அன்னை

நல்ல குருவை நாடியே  நிற்பாள்
வல்ல பிள்ளையாய் ஆக்கிட முனைவாள்
கற்றவர் முன்னே வந்திட வேண்டி
கைகூப்பிக் கடவுளை வேண்டியே நிற்பாள்

துன்பம் வந்தால் துடித்துப் போவாள்
அன்பைப் பொழிந்து அவளும் உருகுவாள்
சிரிப்பைக் கண்டால் சிறகை விரித்து
சிட்டுக் குருவாய் வானில் பறப்பாள்

தாழ்ந்து விடாமல் தாங்கியே நிற்பாள்
வீழ்ந்து விடாமல் வேராய் இருப்பாள்
ஏணியாய் ஆகி ஏற்றியே விடுவாள்
என்றும் அன்னை துணையே ஆவாள்

அன்னை என்பள் ஆருயிர் போல்வாள்
அவளின் உணர்வே பிள்ளையே ஆகும்
அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள்
அவளைப் போற்றுவோம் அவழடி தொழுவோம்

மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
அயனும் மாலும் ஓடினார் தேடினார்

ஆணவ நிலையில் தேடிய அவர்கள்
அடிமுடி காணா அலமந்தி நின்றனர்
தேவ தேவனாம் சிவனும் தோன்றி
தெளிவினைக் கொடுத்து தரிசனம் காட்டினர்

சிவனின் தரிசனம் தெளிவினைக் கொடுக்க
அயனும் மாலும் ஆணவம் அகன்றனர்
ஆணவம் அகன்றிட அமைந்த நன்னாளே
மாநிலம் போற்றிடும் மகத்துவம் பெற்றது

மகத்துவம் பெற்ற மகா சிவராத்திரி
மக்கள் மனத்தினைப் பக்குவம் ஆக்கிடும்
பசித்திரு என்றும் தனித்திரு என்றும்
விழித்திரு என்றும் விளம்பிடும்  ராத்திரி

சிவமே செம்பொருள் சிவமே இன்பம்
சிவமே அன்பு சிவமே கருணை
அனைத்தும் ஆகியே இருப்பது சிவமே
அகத்தில் அமர்த்தினால் அது பேரின்பம்

பற்பல கதைகள் பரவியே இருக்குது
நற்கரு உணர்த்தவே அக்கதை வந்தது
கதைகளை விமர்சனம் செய்வதை விட்டு
கருவினைத் தேடுவார் கண்களைத் திறப்பார்

சமயக் கதைகள் தத்துவம் பொதிந்தன
உள்ளே நுழைந்தால் உண்மை விளங்கும்
அறிவியல் இருக்கும் ஆன்மீகம் இருக்கும்
அகத்தில் அமர்த்தினால் வெளிச்சம் கிடைக்கும்

மாசி மாதம் மகத்தான மாதம்
மாபெரும் விரதம் அமைந்த நல்மாதம்
பூதலம் சக்தி பொலிந்திடு மாதம்
ஆதலால் விரதமாய் ஆக்கிய மாதம்

ஈதர் என்பது இயக்கிடும் சக்தி
எங்கும் நிறைந்து இருக்கும் சக்தி
பூதல மாந்தர் உள்ளே நுழைந்தால்
ஆதாரம் ஆகிடும் அனைத்தும் சிறக்கும்

மாசி மாத சிவராத்திரி வேளை
ஈதர் சக்தியின் ஈர்ப்பு பெருகிடும்
பெருகிடும் சக்தியை உடலுனுள் செலுத்திட
அமைந்த நல்லொழுங்கே விரதமாய் மலர்ந்தது

மெய்ஞ்ஞானத் துடனே விஞ்ஞானம் இணையுது
அஞ்ஞானம் அகன்றிட மெய்ஞ்ஞானம் விரியுது
அஞ்ஞானம் அகலவே ஆண்டவன் தெரிவான்
ஆண்டவன் தெரிந்திட ஆணவம் அழிந்திடும்

சிவராத்திரி என்பது சிறப்புடை விரதம்
உயர்வுடை யாவும் அளித்திடும் விரதம்
மனத்தைச் செம்மை ஆக்கிடும் விரதம்
மங்களச் செம்பொருள் சிவனார் விரதம்

எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ……. ஆஸ்திரேலியா

உள்ளத்தில் தமிழுணர்வு  ஊற்றெடுக்க உழைத்தாரே
ஊரூராய் அலைந்தாரே  உவேசா தமிழாசான்
தெள்ளுதமிழ் நூல்களைத்  தேடிநின்ற வேளை
செல்லரித்த சேதிகேட்டுத் திகைத்தவரும் நின்றாரே

ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார் அவரும்
காடுமேடு பாராமல் நடந்தலைந்தார் நாளும்
நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார் அவரும்
பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகியே விட்டார்

ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிக்க
காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தரு ஐயா
பூட்டியே வைத்தவேட்டைப் புத்தகமாக்கி வைத்த
பாட்டனே எங்களையா பணிந்துமே போற்றுவோமே

ஏடெலாம் இடைஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
புதைகுழி வெட்டியேட்டைப் புதைத்தது கண்டபோது
புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்

பைந்தமிழ் மொழியைக் தேர்ந்துமே கற்றாய்
பலருமே வியக்க தமிழாகி நின்றாய்
சொந்தமாய்ச் சேர்த்த சொத்தாய் நினைத்து
சுந்தரத் தமிழினைக் காத்துமே நின்றாய்

நந்தமிழ் சங்கநூல்கள் யாவரும் கற்றுநிற்க
வெந்தழல் புகுந்தவேட்டைப் வேகமாய் பற்றி
நொந்திடச் செய்தாரை வந்தனை செய்துநின்று
செந்தமிழ் காத்தநம் செம்மலைப் போற்றுவோமே

பல்கலைக்கழகம் செய்யும் பணியினைத் தனியேநின்று
நல்மனம் கொண்டுசெய்த நாயகன் நீயேஐயா
இன்தமிழ் சிறந்துநிற்க என்றுமே உழைத்தவையா
எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய்

வடமொழி படித்தால் வானுலகு உவந்தேற்றும்
வசதிபல கிடைப்பதற்கு ஆங்கிலமே கைகொடுக்கும்
இவையனைத்தும் புறந்தள்ளி ஏந்தினார் தமிழதனை
உலகவாழ்வில் தமிழதனை உயிராக எண்ணினரே

மேடையில் பேசுதற்கும் விதம்விதமாய் எழுதுதற்கும்
சங்கத் தமிழினைத் தன்னுழைப்பால் எமக்களித்தார்
ஊணுறக்கம் பாராமல் ஓய்வின்றி உழைத்ததனால்
ஏடிருந்த அத்தனையும் எம்சொத்தாய் ஆக்கினரே

சாமிநாத ஐயர் தமிழுக்குச் சொத்தாவார்
நாம்படிக்க நூல்களை நற்றுணையாய் ஈந்தளித்தார்
எழுதினார் பதிப்பித்தார் ஏந்தினார் தமிழை
என்றுமே தமிழுலகில் இருந்திடுவார் உவேசா

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் …. ஆஸ்திரேலியா

தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
தையில் பூசம் பற்பல சிறப்பு
கந்தனை நினைத்து வந்தனை செய்திட
வந்ததே தைப் பூசத் திருநாள்

அருவமாய் இருந்தது உருவம் ஆனது
அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

காது குத்துவார் காரியம் தொடங்குவார்
கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
தம்மை மறந்து அலகும் குந்துவார்
தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

மார்கழி மாதம் மனமுறை மாதம்
தேவர் விரும்பும் திருவுறை மாதம்
சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்

இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

நீராடி யாவரும் புத்துடை அணிவார்
மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

அப்பா அம்மா தாத்தா பாட்டி
அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
பொங்கற் பானையை அலங்காரம் செய்து
மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்
பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்

ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
உணரும் போது உள்ளம் உவக்கும்

பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
யாவரும் மகிழும் கோலமும் பெருகும்

இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை

சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள்

மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

சிலம்பின் சிறப்பு

சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும். தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்,  மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.

தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக்  காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள், நீதி நிர்வாகம், பெண்களின் சமுதாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக்காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.

இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” என்று விதந்தோதி நின்றார் போலும்! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும்! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும்!

சிலம்பின்  புதுப்பாதை

நாட்டையோ, சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம்  நடுநிலையினைப்  பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந்திருந்த வேளை – அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம். இதனை நோக்கும் பொழுது  கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது. சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும்.  சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும்.

சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத  பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார். அகவலும் வெண்பாவுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறான புதிய வடிவங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது. அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய்யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும்.

சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக  ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம், அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு  புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய்த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம். பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள்கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.

அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியினைப் பாடியே  தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப்பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள்.

     திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும். ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா!

சிலம்பின் புரட்சி

அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட்சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம்.

காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது. காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிகமிக பொருத்தமாகும். “கண்ணகி காப்பியம்” என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால்  அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் “சிலப்பதிகாரம்” என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள்.

மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறிய முடியாதிருக்கிறது. ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுத்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார்.

கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடு ம்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம்.

மூன்று நாடு, மூன்று அரசர், மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ், என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது.

     ” வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே ”  என்றும்

      “தேரா மன்னா செப்புவது உடையேன்”  என்றும்

கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து  ஒரு நாட்டின் அரசனையே  எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக

   “பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்”

என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங்கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் “பெய் என்றால் மழையும் பெய்யும்” என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற “எரி”  என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே.

பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது. இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம்.

எங்களின் சொத்து 

முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ – அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடிமக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெருமையல்லவா? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததி ல்லை”  என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா!தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும். கற்பு  என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண்கள் போற்றப்படுவர். அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா!

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்

என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்பதும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும்.

கருணையாய் நிற்கும் தெய்வம்  !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா

வேலினைக் கையில் ஏந்தி
வெற்றியைத் தந்த கந்தன்
மூலமாய் நின்ற மூர்த்தி
பொறியிலே வந்த கந்தன்
கார்த்திகைப் பெண்கள் ஏந்த
கந்தனாய் ஆன தெய்வம்
கலியுகம் காக்க என்றும்
கருணையாய் நிற்கும் தெய்வம்  !

ஆணவம் அழித்த கந்தன்
அகவிருள் அகற்றும் கந்தன்
பேணிடும் அடியார்க் கெல்லாம்
பேரருள் ஈயும் கந்தன்
நாமெலாம் விரும்பி நிற்கும்
நல்லையில் உறையும் கந்தன்
சேவடி தொழுது நின்றால்
தெரிசனம் தருவான் கந்தன் !

சூரரை வதைத்த கந்தன்
சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
மாயிருள் மாயை போக
வந்தனன் ஒளியாய் கந்தன்
ஆழமாம் பிறவி நோயை
அகற்றிட மருந்தாய் நிற்கும்
வேலுடை கந்தன் பாதம்
பற்றுவார் வீடு காண்பார் !

உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா

மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
முதல்வனாம் இறையைப் பணிந்துமே நிற்பார்

புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

இந்துக்கள் எல்லோரும் கொண்டாடி மகிழும்
இனிமைத் திருநாளாய் இத்திருநாள் அமையும்
இருப்பாரும் மகிழ்வார் இல்லாரும் மகிழ்வார்
இல்லார்க்கும் இருப்பார்க்கும் இத்திருநாள் இனிக்கும்

பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
கஷ்டமுடன் உழைத்துக் களிப்புறுவார் களிப்பே
காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே

நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
நாளும் பொழுதுமாய்ப் பலவசுரர் வருகின்றார்
அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்

கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
பகையும் பதற்றமும் பாரெல்லாம் நிறைகிறதே
அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி

இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்

அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. ஆஸ்திரேலியா

நீள் செல்வம் நிலபுலங்கள் வேண்டாம்
மாடி மனை கோடிசெல்வம் வேண்டாம்
ஆழ் மனதில் அமைதிவர எனக்கு
அருள் தருவாய் இலக்குமித் தாயே

வையத்துள் வறுமை இன்றி வாழ
மற்றவர்க்கு மனம் விரும்பி ஈய
பொய் இல்லா வழியினிலே உழைக்க
உய்யும் வழி காட்டிடுவாய் தாயே

இல்லை என்று சொல்லாமல் இருந்து
இல் அறத்தை நல்லறமாய் ஆக்க
நல்ல பாதை காட்டிடுவாய் தாயே
நா நிலத்தில் துணையாவாய் நீயே

அளவற்ற ஆசை எனக் கில்லை
அளவான பொருள் இருந்தால் போதும்
நிலையற்ற தங்கம் வைரம் வேண்டாம்
நினதருளே எனக் கிருந்தால் போதும்

செல்லும் செல்வம் வேண்டாம் தாயே
செல்லா அருளைத் தந்திடு தாயே
அல்லும் பகலும் உந்தன் நினைப்பே
அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே

கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
காலடியில் நிற்க கருணைபுரி தாயே

மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
தாயான உன்னை நானெண்ணி நிற்க
தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                            
மெல்பேண். ஆஸ்திரேலியா

நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் நாளும் பொழுதும் யாவற்றையும் செய்து வருகின்றோம். சமயத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழிந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிமாணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பன்னிரண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. 

ன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களைச் சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகிவிட்ட நிலையில், மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது!

ஆடி என்றவுடன் – ஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. திருப்பாவையும் மணிவாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய்ப் புரட்டாசி விளங்குகிறது. ஆடிபுரட்டாசிமார்கழி இறை வழிபாட்டுக்கு உரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றவை அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடிபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தைப் பித்ருக்களுக்கு வழிபாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் பொழுது வெப்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக் காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்காலத் தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி, இரவின் தொடக்கம். மார்கழி, விடியலின் தொடக்கம்.

ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால் தானோ  என்று எண்ணிட  வைக்கிறது.

அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவதும் கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய்க் கருதி, போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக் கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்கு உரியதாய் இருந்தாலும்பெரும்பாலான சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த் திருவிழாதெப்பத் திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடைபெறுவதும் நோக்கத்தக்கது.

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் தையில் வருகின்ற அமாவாசையும் கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயண புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

தையினைப் பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக் குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி” என்னும் முதுமொழி பழக்கத்தில் இருக்கிறது.

ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்திரையில் பிரசவம் நடக்கும். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதாரணமாகச் சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் கால நிலை காரணமாக, பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை, பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

ஆடி என்றவுடன் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் கட்டாயம் வந்து நிற்பார். தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டு வருவதும் நாடிவரும் ஆடி அல்லவா ! 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு, பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

நாடிவரும் ஆடி அமங்கலமான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனைப் போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழும் காலமாகும். 

மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து மேதினியில் சிறந்து விளங்குவதுதான் ஆடி மாதத்தின் சிறப்பு எனலாம். எங்கள் முன்னோர்கள் எதையும் தக்க காரண காரியத்தோடுதான் வகுத்தார்கள். அவர்களின் கணிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பது முறையானதல்ல. தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது என்பது பெரும் மேதாவித்தனம் ஆகியே விட்டது. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதுதான் மிகவும் உகந்த பண்பாடாகும்.

நம்பிக்கைகள்தான் வாழ்வின் ஆணிவேராகும். எமது முன்னோர் கொண்ட நம்பிக்கைகள், அதற்காக அவர்கள் வகுத்த அற வழிகள், ஆன்மீக வழிகள், அத்தனையும் எம்மை என்றுமே வழிநடத்திச் செல்வதற்கு அருந்துணையாக அமைகின்றன என்பதை அகமிருத்துவது அவசியம் அல்லவா!  

❌