Normal view

Received before yesterday

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் …. ஆஸ்திரேலியா

தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
தையில் பூசம் பற்பல சிறப்பு
கந்தனை நினைத்து வந்தனை செய்திட
வந்ததே தைப் பூசத் திருநாள்

அருவமாய் இருந்தது உருவம் ஆனது
அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

காது குத்துவார் காரியம் தொடங்குவார்
கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
தம்மை மறந்து அலகும் குந்துவார்
தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

மார்கழி மாதம் மனமுறை மாதம்
தேவர் விரும்பும் திருவுறை மாதம்
சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்

இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

நீராடி யாவரும் புத்துடை அணிவார்
மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

அப்பா அம்மா தாத்தா பாட்டி
அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
பொங்கற் பானையை அலங்காரம் செய்து
மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்
பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்

ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
உணரும் போது உள்ளம் உவக்கும்

பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
யாவரும் மகிழும் கோலமும் பெருகும்

இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை

உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா

மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
முதல்வனாம் இறையைப் பணிந்துமே நிற்பார்

புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

இந்துக்கள் எல்லோரும் கொண்டாடி மகிழும்
இனிமைத் திருநாளாய் இத்திருநாள் அமையும்
இருப்பாரும் மகிழ்வார் இல்லாரும் மகிழ்வார்
இல்லார்க்கும் இருப்பார்க்கும் இத்திருநாள் இனிக்கும்

பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
கஷ்டமுடன் உழைத்துக் களிப்புறுவார் களிப்பே
காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே

நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
நாளும் பொழுதுமாய்ப் பலவசுரர் வருகின்றார்
அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்

கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
பகையும் பதற்றமும் பாரெல்லாம் நிறைகிறதே
அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி

இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்

கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
காலடியில் நிற்க கருணைபுரி தாயே

மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
தாயான உன்னை நானெண்ணி நிற்க
தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

❌