36 B
சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம் தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட முடியவில்லை. அது வைஷ்ணவிக்குத் தெரிந்து விடும் என்கிற அச்சம் அவனை மேலும் தொந்தரவுக்கு ஆளாக்கியது. அவனுடல் இப்படி ஒரு மரக்கட்டை போல் உணர்வற்றுக் கிடக்கும் என ஒருநாளும் அவன் நினைக்கவில்லை. வைஷ்ணவி எவ்வளவு முயன்றும் அவனால் இயல்புக்குத் திரும்பி கிளர்ச்சியுற முடியவில்லை. எத்தனை குரல்கள் அவனை ஆட்டுவித்து மகிழ்வித்திருக்கும், இன்று வைஷ்ணவி குரல் அவனுக்குக் காதுக்குள் நுழையவேயில்லை. சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன் எனும் சாக்கில் பாத்ரூமிற்கு சென்று அவனது போனை எடுத்தான். கற்பனைக்கும் நிஜத்திற்குமான பெரிய நீண்ட இடைவெளி உடைய சுவரொன்று அவன் முன் தனது உயரத்தை அதிகப்படுத்தியபடியே வளர்ந்து கொண்டே சென்றது.
**********
சித்தார்த் உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டவாறு மூக்கில் இருந்து கீழிறங்கி உதடுகளை மாறிமாறி முத்தமிட்டு முன்னேறியபடியே இருந்தாள். காதோரங்களை தனது நாவால் ஈரப்படுத்தினாள். காது நரம்புகளை லேசாகக் கடித்தாள். அவன் காதுகளில் சுருள் முடிகளால் திரண்ட அவனது மார்பை வர்ணித்தபடி அவள் ஹஸ்கி குரலில் சொன்னவை அவன் உடலின் உள் நரம்புகளில் ஆளில்லாக் காட்டில் தீடீரெனப் பற்றியெரியும் தீப்போல சரசரவென வேகமாக மேலேறின. அவள் அடுத்தடுத்ததாக தீவிரத்தன்மையோடு இடுப்பு நோக்கி இறங்க ஆரம்பித்த நொடிகளில்
‘ஏய், ஏய் நோநோ ப்ளீஸ் அங்கே போகாத?’
‘டர்ட்டி ராஸ்கல் போகாதனா போடின்னுதான் அர்த்தம். குத்துனன்னா பாரு. செம ட்ரிக்கி ஆம்பளடா நீ…நான் அப்படித்தான் போவேன்’ தலைமுடிகள் அவள் இடுப்பு வரை தொங்க அதை இழுத்துக்கட்டியவள் மல்லார்ந்த நிலையில் தன் தலையை பின்புறமாக வளைத்து அவனது தொடைகள் நடுவே இரண்டு கைகளையும் ஊன்றினாள்.
‘அடிப்பாவி, என்ன வேலையெல்லாம் பண்ற?’
ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா …உன்ன புரட்டிப் போட்டு ம்ம்ம் …ஓகேவா? என மெலிதான குரலில் சொல்லி ஹாஹாஹா எனச் சிரித்தவாறே கீழிறங்கி இதெல்லாம் சித்துக்காத்தான் எனக் கண்ணடித்து அவனுடைய பேண்ட் சிப்பைக் கழட்டினாள். வெறிகொண்ட உடலின் கிளர்ச்சி அண்டசராசரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது போல பேரதிர்வாக நடுங்கச் செய்ய அவனது மூளை வரை நரம்புகள் அதிர பேச்சற்று கண்கள் மேல்நோக்கிப்போக முனகியபடியே ‘ஏய், விட்றி விட்றி’ என செல்லமாகக் கத்திக் கொண்டிருந்தான்.
அவளின் கேசங்கள் அவன் மார்பு முழுவதும் பரவிக் கிடந்தன. மிகவும் மிருதுவாக முடிக்கற்றைகளை அவற்றிற்கு வலிக்காமல் ஒத்தியெடுத்தவாறு அவள் ரசனையோடு தன்னை ஆள்வதை நினைத்துப் பூரிப்பில் கிடந்தான். அவள் மிகத் தீவிரமாகவும், முரட்டுத் தன்மையோடும் நடந்து கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டது அவளுக்கு மேலும் கிறக்கத்தை உண்டு செய்ய முன்னிலும் தீவிரமாக அவன் மேல் முன்னும் பின்னுமாக வேகவேகமாக இயங்க ஆரம்பித்தாள். அனைத்தும் முடிந்த போது உஷ்ண மூச்சின் சப்தங்கள் அறையின் சுவர்களிலும் ஒலிக்க படுக்கையில் தளர்வான உடலோடு தனியே கிடந்தவன் சற்று நேரத்தில் எழுந்து கொண்டான்.
அவனுக்குக் கொஞ்ச நேரம் நன்கு கண்ணயர்ந்து தூங்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. பறவைகளின் க்ரீச் க்ரீச் குரல்களோடுமலைப் பிரதேசம் முழுவதும் மெல்ல மெல்ல விடிந்தது திரைச்சீலைகள் வழியாகத் தெரிந்ததும் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து சென்று பல்துலக்க ஆரம்பித்தான். அவன் காதுகளில் மட்டும் குறுகுறுவென
அவளின் குரல் ஒலித்தபடியே இருந்தது. அதை நினைத்தவுடன் அவன் பற்கள் பிரஷ்ஷை வாயில் வைத்தவாறு கிட்டிக் கொண்டது. இது அவனுக்குப் புதிதல்ல என்றாலும் நிஜத்தில் எந்தச் செயல்களும் இல்லாமலேயே சாதாரணமாக பல் துலக்குகையில் நினைக்கும் போது கூட ஒரு குரலுக்கு கிளர்ச்சியின் பேரின்பத்தை, கலவியின் முழு உச்சத்தை, தளர்ந்து கிடந்த உடலுக்குள் மேலும் ஒரு உன்மத்தத்தை வழங்க முடிகிறதை எண்ணி சிரித்துக் கொண்டான்.
தனது காமத்தின் பெருந்தீயின் முன் அவன் உடல் எரிந்தபடியே இருந்தது. போதாமைகளால் நிரம்பியிருந்த உடலின் முன் அவன் மனம் ஒரு செல்லமான நாய்க்குட்டி போல வாலாட்டிக்கொண்டு விசுவாசமாக நின்றது. தனது சக்திக்கு அப்பாற்பட்ட தனது கற்பனைகளின் வேகம் தாண்டிய ஒரு கலவியைக் கண்டடைந்துவிடவேண்டும், ஒரு பெண்ணின் உடலுக்குள் முழுவதுமாக தன் உடல் புகுந்து வெளிவந்தால்தான் அது அடங்கும்
என்கிற அவனது உடல் வேட்கையின் தீவிரம் நின்றெரியும் விளக்கினைப்போல பிரகாசமாகவும், நீண்ட வருடங்களாக தன்வயமற்றுப் பித்தேறிய சாத்தானைப் போலவும் தொடர்ந்து வந்ததை அவன் அறிந்திருந்தான். அது அவனை இரவும் பகலும் தூங்கவிடாமல் செய்தது.
மறுநாள் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். நடுரோட்டில் நின்று கொண்டிருந்த வண்டிகளில் வரிசையாக ஹாரன்கள் அடித்தன.
‘டேய் ஊட்ல சொல்ட்டு வந்துட்டியாடா மொள்ளமாரி. சாவகாசமா ஆட்டிக்கிட்டு வராம்பாரு ?’ என்று காரின் உள்ளிருந்து டிரைவர் ஒருவன் கத்தினான். டூவீலரில் வந்த ஒருவன் இறங்கி வந்து ‘என்ன ப்ரோ! கனவைக் கொஞ்சம் ஓரமாகப் போய் காணுங்க’ என்றவுடன் வெட்கமாகவும், அசிங்கமாகவும் போய்விட்டது அவனுக்கு.
முந்தைய இரவில் நடந்த கூடலில் தன்னுடலை அவள் கையாண்டது இன்னும் மிச்சமிருப்பது போல, அந்த ஸ்பரிசம் மேலே படர்ந்தும் அப்படித் தான் போவேன் என்று சொல்லும் அவள் குரலாக மாறியும் அதன் குறுகுறுத்த உணர்வு உடலில் இருந்து விலகாமல் ஒட்டியபடியே இருந்தது. காலையில் இருந்து எங்கே திரும்பினாலும் அதன் நினைவு வந்தவுடன் மனமே அந்தக்குரலை, அந்த நினைவைக்கிளறி உடலை ஒரு வித முறுக்கோடு சிலிர்க்கச்செய்தது. அந்த இடத்திலேயே நின்று சுற்றி நடக்கும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் வம்பு செய்தது.
அவனுக்குக் குரல்தான் எல்லாம். அவனுக்குக் குரல் ஒன்றே போதும். குரல்கள் தான் அவனுக்கு உடல். குரல்களே அவனுக்குக் கிளர்ச்சி. குரல்களோடு வாழ்வது அவனைப் பொறுத்தவரை ஓர் உடலின் மொத்த இன்பத்துக்குமான தொடக்கமும் முடிவும். இந்தக் குரல்கள் அவன் அன்றாடங்களில் கலந்தவை. குளிக்கும் போது கூட சில குரல்கள் அவனை ஆட்கொண்டு பல கரங்களாக உருவெடுத்து ஒரு பெண்ணாக இல்லாது பல பெண்களாக மாறி அங்கங்களை வருடும். தன்னை இத்தனை பெண்கள் ஒரு சேர அந்தக் குரல்கள் வழி ஆள்வதில் யாருக்கும் இல்லாத பெருமிதமும், கர்வமும் அவனுக்கு உண்டு. அந்த அளவுக்கு தன் உடல் மேல் அவனுக்கே முற்றிய நிலையிலான பிரேமை இருந்தது.
அவனுக்கு நிஜத்தில் ஒருத்தி தேவையே இல்லை. அப்படிப் போனாலும் இந்தச் சுகத்தின் அதே தன்மையோ, அதே அளவோ அதற்கு மிஞ்சிய ஒன்றோ அதில் கிடைக்காது என்று தீவிரமாக அவன் மனமே நம்பத்தொடங்கியிருந்தது.
இந்தக் குரல்களால் அவற்றின் உலுக்கல்களால் ஒரு நிஜப் பெண்ணிடம் தான் தோற்றுவிடுவோமோ என்று கூட தோன்றி அது ஆழமாக மனதின் உட் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டது. அதுவுமன்றி சித்தார்த் தான் ஆள்வதைவிட பெண்கள் தன்னை ஆளவேண்டும் என்பதையே அதிகமாக விரும்பினான். ஒவ்வொரு பெண்ணும் தன் மீது இயங்கும் போது ஒரு மலை உச்சியின் உயரத்தில் நின்று அந்த உணர்வை ஆழமாக சுவாசித்து சந்தோஷமாக கத்திக் கொண்டாட வேண்டும் போலிருக்கும்.
கொடைக்கானலின் மலைக்கிராமமான பூம்பாறையில் வசித்து வந்த சித்தார்த் பூம்பாறையின் வ்யூ பாய்ண்ட்டிற்கு வந்து செல்லும் இடத்தில் கைப்பைகள், ஆண் பெண் இருபாலருக்குமான உள்ளாடைகள் என தனித்தனியே இரண்டு சிறிய கடைகளை வைத்திருந்தான். இரண்டு கடைகளுக்கும் நடுவே ஒரு சுவரைப் பிளந்து சந்து போல உருவாக்கிக் கண்ணாடி கதவு வைத்து அதன் வழியே அனைவரும் போய்க் கொள்ளும் வசதியும் இருந்தது. கைப்பைகள் வாங்க வரும் பெண்கள் அப்படியே இந்த கடையில் என்ன இருக்கிறது என்றும் பார்க்க வருவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சித்தார்த்திற்கு அவளின் அங்க அளவுகள் துல்லியமாக புலப்பட்டு விடும். தனது கடைப் பணிப்பெண்ணை விட்டு சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு இந்த அளவில் காண்பிக்குமாறு சொல்வான். அவன் அதைத்தான் சொல்கிறான் என்பது வாடிக்கையாளருக்குப் புரியாதவாறு சொல்லி அனுப்புவான். அப்படி ஒரு பெண்ணின் அளவைச் சொல்வதிலும், அவள் உடைமாற்றும் அறையில் அந்த ஆடையுடன் எப்படி இருப்பாளெனக் கற்பனை செய்து பார்ப்பதும், பில் போட வரும் போது அதன் பிராண்டைச் சொல்லி, அவள் உள்ளாடையின் அளவை அவனே சொல்லும் போது சம்பந்தப்பட்ட பெண்ணின் நாணும் முகபாவத்தை அவளறியாது காண்பதுமென அவன் எந்தெந்த வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் தனது வேட்கையை மடைமாற்றித் தாகத்தைத் தணிக்க முயன்று கொண்டே இருந்தான்.
ஒருபோதும் தனக்கு இப்படி இதில் எல்லாம் ஒரு கிளர்ச்சி மனநிலை இருப்பதை காட்டிக்கொள்ளாமல் மிகச் சாதாரண மனநிலையோடு உரையாடசித்தார்த்தால் முடிந்தது. அப்படியான ஒன்றன் வசம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தள்ளி நின்று தனக்கு நடப்பதை ரசிப்பது அவனுக்கு அவன் விரும்பிய இன்பமாக இருந்தது.
காலையில் தனது கடையைத் திறந்தவுடன் முதல் போன் காலாக அவள் அழைத்திருந்தாள்.
‘டேய், சித்து எங்கடா இருக்கே?’
‘கடைல தான். வேறெங்க இருப்பேன்?’
‘இன்னர் வேர் வாங்கக்கடைக்கு வரலாம்னு இருந்தேன். அப்டியே நீ இருந்தா உன்னப் பாத்துடலாம்னு கால் பண்ணேன் டா?’
‘ஒரு ஆம்பளகிட்ட போய் இன்னர் வேர் வாங்கறதப் பத்தி சொல்ற?’
‘அதனாலென்ன நீ என் பிரண்ட். இதெல்லாம் சொல்ற அளவுக்கு இவ்வளவு க்ளோசா பிஹேவ் பண்றேன்னா நீ எவ்வளவு நல்லவனா இருக்கணும்?’
‘நான் நல்லவன்னு நீயே நம்பிடுவியா?’
‘எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் உன்னோட தனியா இருந்துருக்கேன். வண்டியில் வந்திருக்கேன். ஒரு முறை கூட நீ என்ன தப்பா பாத்ததில்ல. பேசியதில்ல. இதைவிட வேறென்ன வேணும். ஐ லவ் யுவர் ஆட்டிட்ட்யூட் சித்து.’
‘அப்படிப் பாத்திருந்தா என்ன பண்ணுவ?’
‘ஹே, உனக்கு என்னாச்சு காலைல இன்னிக்கு. உன்னால கனவுல கூட என்ன அப்படி நினைக்க முடியாது.
உன்னப் பத்தி உனக்கே தெரியாது. நீ அவ்ளோ நல்லவன். சரி வை. நான் வரேன்.’ பதிலுக்கு காத்திராமல் போனைத் துண்டித்தாள். தன் பற்றிய இப்படியான ஒரு நல்ல பிம்பமே அவனுக்கு கிறங்கும் மனநிலையை ஆரம்பமாக்கி அவனைத் தூண்டும்.
சித்தார்த்தின் மூளையில் இருக்கும் ஒரு பத்து நரம்புகள் தலையை விட்டு வெளியே வந்து பெண்களாக உருவெடுத்து, அந்தப்பெண்களின் குரலாக மாறி ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு தொங்குவது போல தரையைத் தொட்டு இழுத்துப் பிடித்தபடி நின்றன. சற்று நேரத்தில்
அந்தக் கிளைகளில் இருந்து ஒவ்வொரு குரலாக தன்னை நோக்கி வந்து தன் உடல் அங்கங்களை நீவி வருடுவது போலவும் கட்டியணைத்து முத்தங்கள் தருவது போலும் இருந்தன. திடீரென அந்தக் குரல்களில் ஒரு வித குரூரமான ஒலி ஒட்டிக்கொண்டது. அவை அவனை கழுத்துப் பகுதியை நோக்கி நெருங்கி வந்து தங்கள் கரங்களால் குரல்வளையை நெறித்து மூச்சை நிறுத்துவது போலவும் தோன்றியது.
பின்னர் ஒவ்வொரு குரலாக தன்னை விட்டு நீங்கிச் செல்வது போலவும் மீண்டும் அவை ஒவ்வொன்றும் ஒரு திசையில் நின்று இழுத்து தன்னைக் கட்டியிருப்பது போலவும் மீண்டும் தன்னை நெருங்குவது போலவும் கொஞ்சுவது போலவும் குரல் வளையைக் கவ்விக்கடிப்பது மாதிரியும் அதேபோல் தோன்றியது.
சில நாட்களாகவே இது தொடர்ந்தது. முதலில் மிகச் சாதாரணமாக நினைத்தவனுக்கு பின்னர் எப்போது தூங்க நினைத்தாலும் இப்படி நிகழ்வது நடந்தது. உறக்கம் அற்ற விழிப்பு நிலையிலும், உறங்க முடியாத மாய நிலையிலும் மாறி மாறி அவதிக்குள்ளாகியிருந்தான்.
இப்படி உறக்கம் கெடுவதை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தான் சித்தார்த். தனக்கு மனப் பிறழ்வு இருக்குமோ என்கிற சந்தேகம் அவனுக்கு வந்தது. இந்த விஷயம் தவிர நாம் மற்ற நேரங்களில் சாதாரணமாகத்தானே இருக்கிறோம் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டான். ஏன் இப்படி முழு நேரமும் காமத்தால் துரத்தப்படுகிறோம், ஏன் இப்படி உணர்வுகள் கரைபுரண்டு ஓடுகின்றன? இந்த எண்ணங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை இல்லையா? இந்தக் குரல்களின் விநோத ஒலிகளை நிறுத்தவே முடியாதா? தனது மனமும் உடலும் இந்தக் குரல்களின் நீரினால் ஊறிஊறி அதனுள் அமிழ்ந்து ஒரு பந்து போலக் கிடக்கிறது. பின் உடனே அதுவே அசுரவேகமாக வெளிவந்து ஆட்டுவிக்கிறது. அதுவே தனது உடலை, மனதை சிதைத்து சிதைத்து பிய்த்துத் தூக்கி வெளியே போட்டுவிடுமா?
பத்து நரம்புகள் இப்போது எண்ணிக்கையில் அதிகமாகி தலையின் நரம்புகள் அனைத்தும் தலைக்கு வெளியே தொங்குவது போல் தோன்றியது அவனுக்கு. சடாரென்று அவனது மூளையில் இருந்த மரத்தின் கிளைகளில் ஒன்றாக அந்த முதல் நினைவு சுழன்று சுழன்று வெளியே கழண்டு வந்து விழுந்தது. சித்தார்த் ஆறாவது படிக்கும் போது ஒரு நாள் பக்கத்து வீட்டு சண்முகநாயகி அக்கா சில புத்தகங்களை பேப்பர் கடையில் வாங்கி வரச்சொன்னாள்.
வந்தவுடன் தன் குரலால் அந்த புத்தகத்தில் இருப்பதைப் படிக்கத் தொடங்குவாள். அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவற்றை அவள் படிக்கும் போது மிகவும் நீண்டு வளைந்து நெளிந்தபடி இருக்கும் பாம்பு ஒன்று விடும் மூச்சைப்போல சீறும் சப்தத்துடன் அவள் குரல் கேட்பது அவன் காதருகே கேட்கும். அது அவன் உடலின் உள்ளே இன்னதென்று சொல்லத் தெரியாத ஒரு புதுவித உணர்வைத் தோற்றுவிக்கும். அவள் அந்த புத்தகத்தை படித்துக் காண்பிப்பதோடு மட்டுமில்லாமல்
அதன்படி தன்னிடம் நடந்து கொள்ளவும் கைகளால் கைகளை அழுந்திப் பிடித்துக் கட்டளை இடுவாள். கைகள் நடுங்க பயத்துடன் அவன் அவளைத் தொட்டவுடன் அவளிடம் இருந்து கிளம்பும் குரலின் ஒலியானது ஒற்றை சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசின் ஒலி போல மெதுமெதுவாகக் கிளம்பி முழுவதும் சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசென மாறி ஜலஜலஜலவென அதிகமான சப்தத்தோடு காதுகளில் ஒலிக்கும். அந்த தாளநயத்திற்கேற்ப அவனை இயங்கப் பழக்குவாள். நாயகி அக்காவிடம் தொடங்கியது இந்தக் குரல் மயக்கம். நாயகி அக்காவின் குரல் செல்லுமிடமெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தது. அந்தக் குரலை நினைத்துக் கண்களை மூடினால் மட்டும் போதும். வானின் உச்சியில் பறந்தபடி தனது உடல் புணரப்படுவது கண்களில் ஆடும். இன்று வரை எத்தனை குரல்கள். எத்தனை கிளைகள். மரம் முழுவதும் சிறியதும் பெரியதுமாய் நீண்டு வெளியேறி விரவிக் கிடந்த கிளைகள் போல இத்தனை வருடங்களாக அதன் பொந்துகளில் பதிந்து போன நினைவுகளாக, அதன் நீட்சிகளாகவே இந்தக் குரல்கள் அவனை ஒரே நேரத்தில் மகிழ்விக்கவும், துன்பிக்கவும் ஏதுவாகக் கட்டிப்போட்டு தங்கள் கோரப்பற்களால் சிரிக்கின்றன.
எல்லாம் போகட்டும். இந்தத் தூக்கத்தை இனி எப்படி வரவழைப்பது. இந்தக் குரல்களில் இருந்து எப்படி தப்புவது என யோசிக்க யோசிக்க அவனுக்கு உடல் முறுக்கி கோபம் அடைபட்ட அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரின் பாய்ச்சலோடு பாய்ந்து வெகுண்டு கிளம்பியது. அதன் வேகம் தாங்காமல் ஒரு பிரச்சினையினை சரிசெய்ய மருந்து தேடாமல் அவன் மீண்டும் உள்ளே அதன் பாதையிலேயே நடந்து நடந்து அதைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்தான். மிகமிக ஆழமாக தோண்டப்பட்ட கிணற்றின் அடியில் தவறி விழுந்துவிடும் பொருட்களாக எண்ணங்கள் வெளிவராது அவனின் உள்ளேயே கிடந்தன. அவற்றை பாதாளக்கரண்டி விட்டு எடுப்பதாய் நினைத்து இன்னும் ஆழத்தில் தோண்டிப் போட்டவாறிருந்தான்.
கடைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள்.
‘ஹே, சித்தூ என்னடா பயங்கரமான யோசனை போல?’
‘ஒண்ணுமில்ல டி. லைட்டா தலைவலிச்சுது அதான்.’
தொப்புள் தெரியும் ஷார்ட்டான கறுப்பு நிற டாப்ஸில் இருந்தாள். அவளது நெக் செய்ன் க்ளீவேஜைத் தொட்டு ஆடியபடியிருந்தது. லேயர் கட் முடிகள் அலை அலையாக மார்பில் புரண்டபடி இருந்தன. யாருடனோ போனில் பேசியபடியே போனை கட் செய்தவாறு பணிப்பெண்ணிடம் அளவுகள் சொல்லப்போனாள். பின்புற ஜீன்ஸ்க்கு மேல் அவளது பேன்ட்டிஸ் காபி பிரவுன் நிறத்தில் தெரிந்தது.
அவளின் பளீரென்ற நிறத்தில் இருந்து முழுவதுமாக விலகிய ஜீன்ஸ் வழியே காபி பிரவுன் நிறம் பளிச்சென்று தெரிந்தது அவள் கவர்ச்சியை மேலும் எடுத்துக்காட்டியது.
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தவள் பையைக் கையில் வைத்தபடியே ‘ஊய், நாலு எடுத்துருக்கேன் பில் போடு.’
‘சைஸ் பொறுத்து விலை மாறும் நீ எடுத்த சைஸ் சொல்லு.’ அவனும் பையைக் கேட்கவில்லை.
‘ஹே, மாடு மாடு! காதைக் கொண்டா என்று அடிக்குரலில் அவளுடைய அளவைச் சொன்னவள் இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…இன்னும் ஏதோ சொன்னவள்..ஷ்ஷ் பில்ல போடு போடு’ என்று அவசரப்படுத்தினாள்.
வேலை முடிந்து கடையைப் பூட்டி வீட்டுக்குச் செல்ல இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் முன் கதவைப்பூட்டி படுக்கையறைக்குள் நுழைந்து செல்லைப் படுக்கையில் பக்கத்தில் வைத்துவிட்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம் போல அவனது உடல் விழிக்க ஆரம்பித்திருந்தது. கருநிற இரவில் விழித்த உடல் நாலாபுறமும் அதே இருளில் அதன் கருநிறத்திலேயே இருக்கும் பூனையின் கண்களின் மிளிர்வோடு பிரகாசித்தது. விகசித்துக் கிளம்பிய உடலுக்குள் பல்வேறு நரம்பின் முடிச்சுகள் அவிழ்த்தும் இறுக்கியும் சுருக்குப் பையினை இழுத்து இழுத்து மூடிமூடித் திறப்பது போல ஒரு விளையாட்டை நிகழ்த்த ஆரம்பித்தது.
ஒவ்வொரு கூடலிலும் அவன் தான் ஒரு வாளிப்பான அரசன் போல, மல்யுத்த வீரன் போல, இந்த உலகின் மிக கவர்ச்சியான ஆண் போல, திரட்சியான தோள்கள்,மார்பகங்கள் கொண்டவன் போல, அங்கம் எங்கும் முடிகள் திரண்டு கிடப்பவன் போல, வாளிப்பான பண்டைக்கால வீரன் போல, வெற்றிகளால் மிதந்து மமதையேறிய ஆண் போல இப்படி பலவாறான தோரணைகளில் தன்னை நினைத்துக் கொள்வான். தன் மமதைகளை, வீரத்தை வாளிப்பான உடலை தீவிரமாக அடக்கியாளும் பெண்கள், தன்னை வேட்டையாடி அவர்கள் முன் கிடத்தி தன் சதைகளை உண்ணும் மிருகத்தின் சாயலில் இருக்கும் பெண்களே அவனது தேர்வாக இருந்தது. அவர்களது குரலோடு, தனக்குத் தோன்றும் அத்தனை கற்பனைகளையும் ஒரு நேர்க்கோட்டில் நேர்த்தியாக இழுத்துக் கட்டிவிடுவான். கற்பனை வெளியின் கதவுகள் அவனுக்காக எப்போதும் திறந்தே இருந்தன.
வாசலில் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு குழைந்து கிடந்த உடலைத் தூக்கிக்கொண்டு எழுந்து சென்று திறந்தால் அவள் நின்றிருந்தாள்.
பாக்குக்கலரில் ‘ச்சியர்ஸ்’ என்று வாசகம் எழுதிய டி ஷர்ட் அணிந்திருந்தாள். அவள் நிறத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. வெளிர் ஊதா நிற த்ரீஃபோர்த் ஜீன்ஸ் அவளின் அழகான வழுவழுப்பான கெண்டைக்கால்களைக் காட்டியது.
முடியை நன்கு மேலே தூக்கி குதிரை வால் போட்டிருந்தாள். அதனோடு சேராத சில முடிகள் முன்புறத்தில் சுருண்டும், குட்டியாகவும், நீளமாகவும் இருந்தன. கொஞ்சம் நீளமான ஒரு முடிக்கற்றையை காதோடு இழுத்து செருகியிருந்தாள்.
அது அவள் லேசாக தலையை அசைத்தவுடன் அந்த முடியும் கூடவே முன்புறம் வந்து ஆடியது. தன்னை மறந்து அவளை ரசித்தபடி நின்றவனிடம் கண்களுக்கு இடையே சொடுக்குப் போட்டபடி கேட்டாள்.
‘உள்ள கூப்டமாட்டியா?’
‘வா வா.’
‘சும்மா தான் வந்தேன். ம்ம், அவ இல்லனு தெரியும்’ என்றாள் அவளாகவே.
ஏற்கனவே நிறைய முறை வந்து பழக்கப்பட்ட இடத்தில் இருப்பது போல மிக இயல்பாக அவன் சொல்லாமலே சோஃபாவில் அமர்ந்தாள். பேச்சு நின்று என்ன செய்ய வேண்டும் என இருவருக்கும் தோன்றாத ஒரு சூழலில் இவனைக் கவனிக்காதது போல் டைட்டாக இருந்த அவள் டிஷர்ட்டை எந்தவொரு முன்யோசனையும் இல்லாமல் தற்செயலாக கழட்டுவது போல உட்கார்ந்தபடியே கழட்டினாள்.
‘ஏய், ஏய் என்ன பண்ற?’ என்று பதறினான் சித்தார்த்.
‘ஏன் கழட்டக்கூடாதா உன் முன்னாடி?’
‘காலைல என் இன்னர் சைஸ் தெரியாதுன்னல்ல இப்ப பாத்துக்க’ என்றாள்.
‘ஏய், சீரியசாவே என்ன பிராண்ட் வாங்குன அதைப்பொறுத்தும் சைஸ் மாறும்னுதான் கேட்டேன்.’
‘ஓ, உனக்கு பிராண்ட் சைஸ் எதுவுமே தெரியாது…நான் தான் உன் காதுல வந்து சொல்லணும், அப்பத்தான் தெரியும்’ என்றவாறே அவனை நெருங்கி வந்தாள்.
‘ஹேய், அப்படி லாம் இல்ல’எனச் சொல்லி முடிப்பதற்குள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு உண்மையாகவே தெரியாதா என அவன் மேலுதட்டில் இருந்து கீழுதடு வரை ‘S’ வடிவத்தில் வரைந்த படி கேட்டாள். அவன் பதிலுக்குக் காத்திராமல் அவனைக் கட்டிலில் தள்ளியவள் ‘எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் சித்து. நீதான் கண்டுக்கவே மாட்ற.. நான் எப்படி உனக்கு புரியவைக்கறதுனு தெரியல..நீ எனக்கு வேணும் சித்து..அப்டியே அப்டியே வேணும்’ என்றாள்.
அவள் சொல்லச்சொல்ல அவனுக்குக் கண்கள் சுழன்று உடலின் நாளங்கள் இரத்தத்தை எல்லா இடங்களுக்கும் வேகவேகமாக அனுப்பின. அந்தக் குரலின் அதிர்வு உடல் முழுவதும் விறுவிறுவென பரவியது. குரல் அவன் உடல் முழுவதும் பரவியவுடன் ஆழமான மூச்சிழுத்துக் கஞ்சாவை உள்ளே விடுபவனின் போதையென நிலைகொள்ளாமல் தவித்தது. ஒவ்வொரு உறுப்பாக அதீதங்களால் திக்குமுக்காடி செயலற்றுப் போய் தண்ணீரின் மேல் மிதப்பது போல எடையற்றதாக மாறியது.
தனது எடையற்ற உடலை அவள் தன் மேல் இயங்க வாகாகக் கொடுத்தான். பாக்கு நிற டி ஷர்ட் மூலையில் கிடக்க அவன் தேகத்திற்கு எரிபொருளை ஊற்றியபடியே இருந்தாள். அவளின் ஒவ்வொரு தொடுகைக்கும் இவன் உடல் துள்ளித்துடித்து துள்ளித்துடித்து நின்றது.
காலையில் அவள் கடைக்கு வந்ததும், ஆடை மாற்றுவது அவன் கேமராக் கண்களில் தெரிவதும், அவள் அளவைக் கொஞ்சிய படியே சொல்லியவுடன் அந்தக்குரலால் அவன் உடலுக்கு ஒரு கிறுகிறுப்பு தட்டியதும் மனதில் வந்தவுடன் அவனும் தீவிர இயக்கத்திற்கு தயாராக ஆரம்பித்தான். நடப்பதெல்லாம் உண்மையா பொய்யா மாயையா என அவனுக்கே குழப்பம் ஆகியிருந்தது. அதற்குள் அவள் முதுகில் கடிதடம் ஏற்படுத்தி இருந்தாள்.
சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமாக மெய் மறந்து அவளிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவன் பிட்டத்தை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு அவன் காதருகே வந்தவள் காது மடல்களின் நெருக்கத்தில் வந்து
‘ஹே, மாடு மாடு நல்லா கேட்டுக்க, வேணும்னா பாத்துக்க’ என்று தன்னுடைய அளவை மீண்டும் ஒருமுறை கொஞ்சு குரலில் வெட்கம் மேலிடச் சொன்னாள். இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…கிண்ணுனு இருக்கடா. ஆனால் ஒண்ணுந்தெரியல உனக்கு!’ என்றவள் தனது உள்ளாடையின் நெருக்கத்தோடு கழுத்துப்பகுதிகளை அமிழ்த்தியபடி இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள்.
சித்தார்த்திற்கு உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. மெதுமெதுவாக நடுக்கம் குறைந்து தொடைகள் தளர்ந்து இயல்புக்குத் திரும்பி சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் படுக்கையில் பக்கத்தில் கிடந்த போனை எடுத்து அன்று காலையில் அவளின் குரலில் அவன் பதிவு செய்திருந்த ரெகார்டை ஆஃப் செய்தான்.
000

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,
கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.