ஆசையை அறுக்கும் பெருந்துன்பம்
(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'ஜெயமோகன் -100' நிகழ்ச்சியில் 8ம் அமர்வில் “போதி” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)
ஜெயமோகனின் எழுத்துலகம் என்னைப் போன்ற இணையத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், பெருநாவல்கள், காவியங்கள் என பெரும்பாலானவற்றை இணையம் வழியே வெளியான சூட்டிலே வாசித்து விடலாம். இணைய வாசகர் பரப்பை மிக அற்புதமாக தன் எழுத்திற்கு கையாண்டவர்களில் ஜெயமோகன் மிகவும் முக்கியமானவர். இத்தனைக்கும் அவர் கட்டணச் சுவர் இல்லாமல் தன் இணையதளத்தை அனைவருக்குமானதாக வைத்திருக்கிறார். இன்றைய இணைய வெளியில் இப்படியொரு தளம், இலக்கிய வெளிக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சாதனை எனலாம்.
'போதி' சிறுகதை, ஓர் ஆன்மிக மடத்தின் முழு வார்ப்பை, அவற்றின் மேன்மையுடன் விவரித்துக் காட்டுகின்றது. இடையே ஒரு சிறு முரண், அக்கதையின் இறுதி திருப்பத்தை முள்ளென பொதிந்து வைத்திருக்கிறது. புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என நம்பப்படுவது போல், இந்த திருவதிகை ஆதீனம், கதைசொல்லிக்கு ஒரு ஞானத்திறப்பை விளைவிக்கின்றது. எப்படியான ஞானத்திறப்பு என்றால், பூரண விசுவாவியாக இருந்தவன், அவிசுவாவியாகி மடத்தை விட்டு ஓடிப் போகிறான். அவிசுவாவியானவன் மீண்டும் மடத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவனைப் போன்ற எண்ணற்றோர் அந்த மடத்திற்கு வந்து தங்கிவிட்டு தொலைந்து போயிருக்கக் கூடும். கதை சொல்லியே தன் லௌகிக வாழ்க்கையில் தொலைந்து போய், அந்த மடத்தைத் தேடி வந்தவன்தான். மடத்தின் லௌகீகம் அவனை மீண்டும் புற உலகிற்கு விரட்டி விடுகிறது.
மடத்தின் வாயிலில் ஓர் ஆலமரம் இருக்கிறது. முதன்முதலாக அந்த மடத்தில் அடைக்கலம் தேடி வந்தவனுக்கு அந்த ஆலமரம் ஒரு பெரும் பிரமிப்பை அளிக்கிறது. இப்போது திரும்பி வரும்போது அந்த ஆலமரம் பிரமிப்பை அளிக்கவில்லை. ஏனென்றால், அந்த ஆல் அளித்த ஞானம் அவ்வுணர்வுகளை கடந்து செல்ல வைத்திருக்க வேண்டும். மடத்தின் முகப்பு நவீனமாகியிருந்ததும் அவனுக்கு ஏற்பட்ட அந்த பழைய பிரமிப்பைத் தணித்திருக்கலாம்.
மகா சந்நிதானத்தை மிகக் குறைந்த வரிகளில் விவரிக்கிறார். பெரும் சுமையென ஜடாமுடி. நரைகலந்த தாடி. கழுத்தில் பல்வேறு உருத்திராட்ச மாலைகள். கையில் யோகதண்டம். தழைய கட்டிய காவி வேட்டி. சிம்மம் போல் நடந்து வருகிறார். அருகில் நெஞ்சுவரை ஏற்றி கட்டிய வேட்டியுடன் காறுபாறு. கிரகஸ்தனாக வந்து சேர்ந்த இவனுக்குப் பேட்டி அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே குரு மகா சந்நிதானத்தின் யானைக்கால் வியாதியை கவனிக்கிறான் இவன். இவனுடைய மனதை குரு சந்நிதானம் துல்லியமாகவே கணித்து விடுகிறார். "என்னை பெரிய ஞாநியென நினைத்து வந்திருப்பாய். நான் ஒரு ரோகியெனத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்திருப்பாய்" என்று சொல்லி சிரிக்கிறார்.
அவன் அந்த மடத்தில் தங்கியிருந்த காலந்தொட்டும், அவனுக்கு மகா சந்நிதானத்திற்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. மடத்தின் பொக்கிஷமான ஏட்டு சுவடிகள்தான் அதற்கு பாலம். சிவஞானபோதத்துக்கு இருபத்தியேழு உரைகள் இருக்கின்றன அந்த ஏட்டுச் சுவடிகளில். சங்கீத சாஸ்திரம், வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம், இலக்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும். அவை எவற்றையும் யாரும் பொருட்படுத்தியதில்லை. கதையில் முதலில் அறிமுகமாகும் சின்ன சந்நிதானம் வரவு செலவு கணக்கில் முனைப்பாக இருக்கிறார்.
குரு சந்நிதானத்துடனான உரையாடல் மிகவும் லயிப்புடன் செல்கிறது. கவிதை வாசிக்கும் மனநிலையைப் பற்றி குரு சந்நிதானம் கிண்டலாக சொல்கிறார். ஆனால் அவர் கண்கள் பித்தேறி மினுக்குகின்றன. ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடிக்க வேண்டும் என்கிறார் திடமாக. சந்நியாசம் என்பதை பொறுப்பைத் துறப்பதுதானே. சொல்லப் போனால், அந்த சந்நியாச மடத்தில் இப்போது முற்றும் துறந்த சந்நியாசி கதைசொல்லிதான்.
ஒரு தீவிர சைவ சித்தாந்தவாதிக்கு அதுதான் முழுமையான வழி. வைணவத்துடன் நெருக்கமாக இருந்தாலும் அது அயல் மதம்தான். இவை இரண்ட்டையும் இணைத்து பார்க்கும் விவேகாநந்தரை அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கிறார் குரு சந்நிதானம். "“மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழுமையடையவே முடியாது" எப்பேர்ப்பட்ட ஞானம் இது. இந்தக் கதையை அப்படியே சுருக்கி இந்த இரண்டு வரிகளில் வைத்து விடுகிறார் கதாசிரியர்.
புத்தக அறிவு கொண்டவனுக்கோ ஆன்மிகப் பசி. ஆன்மிக குருவுக்கோ புத்தகப் பசி. மடத்தின் சேகரிப்பில் இருக்கும் கிரந்தங்களை படியெடுத்து புத்தகங்களாக பிரசுரிக்கும்படி குரு இவனைக் கேட்கிறார்
குரு சந்நிதானத்தின் பித்து மனம், அறிவு தீட்சண்யம், புலமை அனைத்தையும் தாண்டி அவருடைய ரோகம் இவனை அலைக்கழிக்கிறது. ரோகத்தை சமாளிக்க குரு சந்நிதானத்திற்கு அபின் கஞ்சா பெதடின் என்று போதை மருந்துகள் தேவைப்பட்டன. கட்டை விரலில் புண் உண்டான போதே வைத்தியர் அந்த விரலை எடுத்து விட வேண்டும் என பரிந்துரைக்கிறார். ஆனால் அங்கஹீணனாக மடத்து அதிபதி இருக்க முடியாது என்பதால் குரு சந்நிதானம் அந்த ஆம்புட்டேஷனை ஏற்கவில்லை. அந்த விஷம் கால் முழுவதும் பரவி சீழ்பிடித்து இருக்கிறது இப்போது.
இந்த பின்னணி புரிந்தவுடன், கதை சொல்லியால் அங்கே தங்க முடியவில்லை. இன்னொரு தளத்தில் அவன் குரு சந்நிதானத்திற்கு மிக அமைதியான இறுதி வாழ்க்கை அமைய வேண்டுமென ஆழமாக விரும்புகிறான். அருகிலிருந்து சிசுருஷைகள் செய்து அவரை கடைத்தேற்ற அவன் மனம் துடிக்கிறது.
அவனுடைய அதே ஆழ்மன பிணைப்பை குரு சந்நிதானமும் பிரதிபலிக்கின்றார். 'எங்கும் போய்விடாதே. யாருக்கும் என் மீது அன்பில்லை. என்னைத் தூக்கி சாத்தி விட துடிக்கிறார்கள்' என்று ஏதேதோ சொல்கிறார் அவனுடனான இறுதி சந்திப்பின்போது.
அவை எதுவும் அவனை பயமுறுத்தவில்லை. சொல்லப் போனால், குரு சந்நிதானத்திற்கு பணிவிடை செய்ய அவன் மனம் முழு சித்தமாகவே இருந்தது. ஆனால் அவன் மனதை புரட்டிப் போட்டது குரு சந்நிதானம் தன்னுடைய உடல் உபாதை எப்படி உண்டானது என்று விவரித்த கடைசி செய்தி.
ஆசையே துன்பங்களுக்கு காரணம். ஆனால் ஆசையற்று இருக்கும் ஆசை பெருந்துன்பத்திற்கு காரணம்.
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.