Normal view

Received before yesterday

தமிழ் வாங்கிய தலை

(2024ம் ஆண்டு, ஆலன்டவுன் தமிழ்ச்சங்கம் சார்பாக நடந்த தமிழ்ப்புத்தாண்டு விழாவில் நடத்திய 'தமிழ் வாங்கிய தலை' என்ற தலைப்பில், சங்கப்பாடல்கள் வழியே வள்ளல் குமணனின் கதையை நாடகமாக நிகழ்த்தியதன் எழுத்து வடிவம்).

காட்சி 1:

(பாத்திரங்கள்: புலவர் பெருஞ்சித்திரனார், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர்)

குதிரைக்காரர்: யானைக் கொட்டடி எப்படி இருக்கிறது?

யானைக்காரர்:  காலையில் இருந்து நான்கு யானைகளை அனுப்பியாகிவிட்டது.  நீங்கள்?

குதிரைக்காரர்: ஏழு குதிரைகள்.  அதில் ஒரு புலவருக்கு செம்மண் நிறத்தில்தான் குதிரை வேண்டுமாம்.  அதுதான் அவர் ஊர் மண்ணின் நிறமாம்.

சிவிகைக்காரர்: சிவிகைகள் மட்டும் இன்று ஐந்து பரிசாக அனுப்பினேன். 

கருவூலத்தலைவர்:  அத்தனை சிவிகைகளுக்கும் கூடவே தூக்கிச் செல்ல ஆட்களும், அவர்களுக்கான பொருளும் சேர்த்துத்தான் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹ்ம்ம்ம்….

பெருஞ்சித்திரனார்: குடிமக்களே! அதிகாரிகளே! வருத்தம் கொள்ளாதீர்கள்.  அரசன் பொருளை அள்ளிச் சேர்ப்பது வலிமையின் அடையாளம்.  அவற்றை ஓரிடத்திலேயே தேக்கி வைக்காமல், வாரி வழங்குவது அவனுடைய  மாட்சிமைக்கு அடையாளம்.  புலவர்களுக்கு பரிசில் என்பது, அவர் வழியே எளிய மக்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

யானைக்காரர்: வணக்கம் பெருஞ்சித்திரனாரே! பாடுபட்டு படையும் அரசும் கொண்டு சேர்த்ததை எல்லாம் வள்ளலென இரவலர்க்கு அள்ளிக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?

பெருஞ்சித்திரனார்: முள்தோள் மூடிய பலாப்பழங்கள் நிறைந்த இந்த முதிர மலையைப் பாருங்கள்.  தோல் நீக்கி இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன் குரங்கு, அதனை தம் துணைக்கும் பகிர்ந்துண்ண அழைப்பது போலத்தான் இரவலர்க்கு புரவலராய் இருக்கும் வள்ளல்கள்.  இதோ கொடைவள்ளல் குமணன் அவைக்கு நானும் புறப்பட்டுவிட்டேன், தமிழ்ச்சுவையை பரப்புவதற்கு.

[திரை]

 

காட்சி 2:

(பாத்திரங்கள்: மன்னன் குமணன், இளவரசர் இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர்)

அமைச்சர்1: பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் ஓரி, மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி இவர்கள் வரிசையில் என்றும் இருக்கக் கூடிய முதிர மலை அரசன் குமணன் அவர்களுக்கு வணக்கம்.

குமணன்:  தமிழுக்குத் தலை வணக்கம்.  நற்றமிழில் பாடினீர் அமைச்சரே. குடிகளும் மக்களும் சுற்றமும் உறவினரும் நலம்தானே.

இளங்குமணன்: (இடைபுகுந்து) புலவர்களின் கற்பனையை அமைச்சருமா பரப்புவது?  அள்ளித் தரும் கைகள் என்றும், அரசைக் காத்திடுமா?  வருவாயைத் தாண்டி பரிசுகள் என செலவிடும்  வள்ளல்தன்மையைக் கொண்டு எப்படி அரசு புரிந்துவிட முடியும்?

குமணன்:  இளையவனே.  தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் புலவர்கள்.  நாம் அவர்களுக்கு என்ன அளித்தாலும் அது மொழிக்கும், மொழி சார்ந்த மக்களுக்குமாக பரவிச் செல்லும்.  வெகுளாதே.

படைத்தலைவர்: இளவரசரின் கவலையிலும் பொருள் உள்ளது அரசே.  கட்டுக்கோப்பான படைகளை உருவாக்கிவிட்டு, யானைகளையும் குதிரைகளையும் ஈகையென கொடுத்து விட்டால், நாளை அந்நிய படையெடுப்பை எப்படி தடுத்தாள்வது?

அமைச்சர்2: நம் அரசரின் வள்ளல் குணம் நம் நாட்டின் பெருமை.  ஈகை குணத்தால் பயன் பெறும் மக்கள் நலன் உயர உயர அரசின் கோல் உயர்கிறது.  நாடும் உயர்கிறது படைத்தலைவரே.

இளங்குமணன்: இது பொருளற்ற தர்க்கம்.  நிலத்தையும், அரசையும் காப்பதற்கு உரமான படைகள் தேவை.  தமிழ் தனியே நின்று இந்த தரணியைக் காத்திடுமா.

குமணன்: அப்படியா எண்ணுகிறாய்?  (யோசித்தவாறே நடந்து) கேள் தம்பி!  இன்றிலிருந்து இந்நாட்டை நீ காப்பாயாக.  எம் தமிழ்ப் பாசம் உன்னைத் தடைப்படுத்தாது.  இதோ என் உடைவாள் இருக்கிறது.  அதோ உறைந்து வாழ காடும் இருக்கிறது.  இடறின்றி இந்நாட்டை நீயேக் காத்து இன்புற்றிரு. 

(குமணன் உடைவாளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியேறுதல்)

அமைச்சர்1:  புதிய அரசர் இளங்குமணன் நீடுழி வாழ்க.

இளங்குமணன்:  அண்ணனை திருத்தவே வாதிட்டேன்.  ஆனால் இந்த அரசினை இனி ஏற்று நடத்தும் பொறுப்பில் என்னை அர்பணிக்கின்றேன்.

படைத்தலைவர்: ஆனாலும், இன்றும் குடிமக்கள் அனைவரும் வள்ளல் குமணனையே அரசர் என பாராட்டுவர் இளவரசே.  உங்கள் ஆட்சி பலவீனமாகவே இருக்கும்.

இளங்குமணன்: அதற்கு? (குழம்பியவாறு) என்ன செய்யலாம் என்கிறீர்கள்?

[திரை]

காட்சி 3:

(பாத்திரங்கள்:  அறிவிப்பாளன், ஆவூர் பெருந்தலை சாத்தனார், வள்ளல் குமணன்)

அறிவிப்பாளன்: இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… மன்னர் இளங்குமணனுக்கு எதிராக அவரது அண்ணன் குமணன் கலகம் செய்ய முற்படுவார் என்பதால், குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்கு, நூறு இலட்சம் பொற்காசுகள் பரிசு.  (இடைவெளி விட்டு) குமணனின் தலையை கொண்டு வருபவர்க்கு மன்னரின் பரிசு நூறு இலட்சம் பொற்காசுகள்.

(சொல்லிக் கொண்டே இம்முனையிலிருந்து அம்முனைக்கு செல்ல, எதிரே ஆவூர் பெருந்தலை சாத்தனார் வருகிறார்)

சாத்தனார்: ஆகா! இதென்ன துயரம்.  வள்ளல் குமணனின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்தால், அவர் நாடிழந்து காட்டில் உறைய, இப்போது அவர் தலைக்கு விலை வேறு அறிவிக்கின்றார்களே.  பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.

(எதிரே வரும் குமணன், புலவரை நிறுத்தி)

குமணன்:  தாங்கள் யார்? அறிவுசால் பெருமை கொண்ட புலவர் பெருமான் போலிருக்கிறதே.

சாத்தனார்: வள்ளல் குமணனைக் கண்டு எம் குறையைப் போக்கிக் கொள்ள வந்த அபாக்கியசாலி.  ஆவூர் முலங்கிழாரின் மகன் பெருந்தலை சாத்தன்.

குமணன்: தமிழைக் கற்றுணர்ந்தவர் எவரும் துரதிர்ஷ்டசாலி இல்லை ஐயா.  செல்லுமிடமெங்கும் சிறப்புதான்.  இதோ உங்கள் துயர் தீர, இந்த உடைவாளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

(குமணன் நீட்டிய உடைவாளைப் பெற்ற சாத்தனார், குழப்பமாகப் பார்க்கிறார்)

குமணன்: குழப்பம் வேண்டாம் புலவரே.  இதோ என் தலை.  வாளால் கொய்து எடுத்துக் கொண்டு எம் இளவலிடம் கொண்டு சேருங்கள்.  நூறு இலட்சம் பொற்காசுகளும் உங்களுக்கே. 

(அவர் முன் மண்டியிட்டு அமர்கிறான்)

சாத்தனார்: (உடைவாளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கின்றார்) இரந்தோர் அற்றம் தீர்க்கும் வள்ளல் குமணரே! நீர் வாழ்க! மன்னா! உம் ஈகைத்திறத்தை என்னவென சொல்ல.  தமிழுக்கு தன் தலையை ஈந்த தன்னிகரில்லா கொடை வள்ளல் நீ.  (ஒரு கையை நீட்டி அவன் தலையில் கைவைத்து) உன் பரிசினை ஏற்றுக் கொண்டேன்.  இதோ தமிழ், உன் தலையை வாங்கிக் கொண்டு விட்டது.  இனி உன் தலை என் பொறுப்பு. (சிரிக்கிறார்)

[திரை]

காட்சி 4:

(பாத்திரங்கள்:  இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், ஆவூர் பெருந்தலை சாத்தனார்)

அமைச்சர்1: இளவர….. அரசே! இதோ ஒரு செய்தி.  (துயரத்துடன் நிறுத்திக் கொள்கிறார்)

அமைச்சர்2:  ஆமாம் அரசே.  ஒரு துர் செய்தி (அவரும் மேலும் சொல்லாமல் நிறுத்திக் கொள்கிறார்)

(சாத்தனார் தன் கையில் துணியால் மூடிவைத்த தட்டுடன் வருகிறார்.)

படைத்தலைவர்: நம் அறிவிப்பிற்கு பதிலாக இந்தப் புலவர் வந்திருக்கிறார்.  (நிறுத்தி விட்டு) தங்கள் தமையனாரின் தலையை வாங்கி விட்டாராம்.  சாட்சியாக... (மேலே எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொள்கிறார்)

(உடனே பதறிய இளங்குமணன், முன்னே வந்து, தட்டை உற்றுப் பார்க்கிறான்.  ஓரிரெண்டு நொடிகளுக்குப் பிறகும் பதற்றம் விலகாமல் தட்டின் மேலிருந்த துணியை விலக்க, உள்ளே குமணனின் உடைவாள் வைக்கப்பட்டிருக்கிறது.)

இளங்குமணன்: ஐயோ! இது என் தமையனின் உடைவாள்.  இதை அவர் பிரிந்திருந்ததே கிடையாது.  (சாத்தனாரை நிமிர்ந்து பார்த்து) யாரடா, நீ பரதேசி.  அஞ்சா நெஞ்சனும், பெரும் வீரனுமான வள்ளல் குமணனின் உடைவாள் உன்னிடம் எப்படி வந்தது?

சாத்தனார்: அவரே இந்த வாளை என்னிடம் கொடுத்து தன் தலையை வாங்கிக் கொள்ளச் சொன்னார் இளவரசே

இளங்குமணன்: அப்படியானால்… அப்படியானால்… நீ அண்ணனைக் கொன்று விட்டாயா?  (கோபமடைந்து) யாரங்கே… படைத்தலைவரே, இக்கொடுமையை நிகழ்த்திய இந்தப் பரதேசியை இப்போதே கைது செய்யுங்கள்.  இத்தகைய மாபாதகத்திற்கு உத்தரவிட்ட நானும் பெருங்குற்றவாளி.  இக்கணமே நானும் அண்ணனைத் தேடிச் செல்கிறேன்.

(தன் இடையிலிருந்த வாளை உருவ முயல, சாத்தனார் முன்னே வந்து ஒரு கையால் அவனை ஆற்றுப்படுத்துகிறார்)

சாத்தனார்:  இளவரசே! நான் பரதேசியல்ல.  பல தேசமும் சுற்றி வரும் எளிய தமிழ்ப்புலவன்.  நான் மன்னரது தலையை கொய்யவுமில்லை.  உங்கள் சகோதரப் பாசத்தை தொட்டெழுப்பும் திறவுகோலென இந்த உடைவாளை மட்டும் கொண்டு வந்தேன்.  நான் பயின்ற தமிழ் என்றும் தலையை காத்திருக்கிறதே அன்றி அழித்ததில்லை.  இதோ மன்னர் வருகிறார்.

(வள்ளல் குமணன் உள்ளே வருதல்)

குமணன்:  மன்னித்துக் கொள் இளையவனே.  [சாத்தனாரைச் சுட்டிக் காட்டி] தமிழ் என் தலையை வாங்கிக் கொண்டு விட்டதால், அது அழைக்கும் இடந்தோறும் நான் செல்ல வேண்டியிருக்கின்றது.  அதனால்தான் உன்னிடம் கொடுத்த வாக்கை மதிக்காமல் மீண்டும் நாட்டிற்கு வந்தேன். [சிரிக்கின்றான்]

இளங்குமணன்:  (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குமணன் அருகில் சென்று மண்டியிட்டு) உங்கள் மாட்சிமை புரியாமல் உங்களுக்கு எதிராக வாதிட்டேன்.  கொடும் உத்தரவு பிறப்பித்தேன்.  இப்போது அனைத்தும் புரிந்தது அண்ணா.  தங்களுக்கு என்றும் நான் தொண்டன்.

(குமணன் குனிந்து இளங்குமணனை எழுப்பி அணைத்துக் கொள்ளுதல்)

குமணன்: வருந்தாதே! நாம் இருவரும் தமிழுக்குத் தொண்டர்கள்.  தமிழ் பயின்று அதன் வழி நிற்கும் சான்றோர்க்கும் தொண்டர்கள்.  அன்னை மொழி நம்மை என்றென்றும் வாழ்த்தி நிற்கும் தம்பி.

[திரை]

இறுதிக் காட்சி:

(பாத்திரங்கள்:  குமணன், இளங்குமணன், பெருன்சித்திரனார், பெருந்தலை சாத்தனார், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர், அறிவிப்பாளர்)

(அனைவரும் ஒன்று கூடி வந்து நிற்க.  சாத்தனார் முன்னே வந்து)

சாத்தனார்: கார் கண்ட மயில் தோகை விரித்தது போல, நீர் பெற்று உயர்ந்து நிற்கும் நிறைவான நிலம் போல, முதிரமலை நாடு வள்ளல் குமணனைப் பெற்று வானுயர போற்றப்படும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌