Normal view

Received before yesterday

நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்

(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)

ன்றைய காலத்தில் இது போன்ற இலக்கிய அமர்வுகளின் தேவை நமக்கு அதிகமாகின்றது.  Literary arts எனும் படைப்பூக்க கலைகளும் சரி, Performing arts எனும் நிகழ்த்து கலைகளும் சரி, இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பெரும் மாறுதல் அலைக்கு உட்பட்டு அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனம்.  நேற்று ஒரு வேடிக்கையான நிகழ்வு நடந்தது.  ஒரு புத்தகக் குழுமத்தின் அட்மின், ஒரு கவிதைத் துணுக்கைக் குறிப்பிடு அதன் மீதான விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.  நானும் என்னுடைய பார்வையை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டேன்.  உடன் அந்த குழுமத்து நண்பர் ஒருவர், "இது ஏஐ மூலமாக பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் மிகவும் அபாரமானதொரு கருத்து" எனக் குறிப்பிட்டிருந்தார்.  அவரென்னவோ அதை ஒரு பாராட்டாக சொல்லியிருப்பார் என்றே நாம் வைத்துக் கொண்டாலும், எப்படி மனிதனின் இயல்பை நெருங்கி செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பிரதிபலிக்கின்றன என்கிற நிலையிலிருந்து, அசலானதொரு கருத்தை நாம் முன்வைக்கும் போது, அது ஏஐ-களின் பதிவிற்கு நிகராக இருப்பதாக பாராட்டும் நிலைக்கு வந்திருக்கிறோம். 

இது போன்ற காலமாற்ற சந்திவேளையில் எஸ் ரா போன்ற தேர்ந்த இலக்கிய வித்தகர்களின் படைப்புகளை இப்படியானதொரு கூட்டம் கொண்டு பகுத்தாய்வது மிகவும் வரவேற்கதக்கதொன்று.  அதிலும் இந்த கூட்டங்களில் பல பேராசிரியர்கள் அகடெமிக்கலாக தங்கள் விமர்சனப் பதிவை முன் வைத்துப் பேசப் போகிறார்கள்.  உலக இலக்கிய எழுத்துடன் தமிழ் இலக்கியம் தன்னை உரசிப்பார்த்துக் கொள்ளும் வேளை என்றோ வந்துவிட்டது. 

இன்றைக்கு எழுத்திற்கான வெளி மிகவும் எளிதாக கைக்கு வந்து விடுகின்றது.  அவை புத்தகமாவதும், (கடந்தகாலத்துடன் ஒப்பிடுகையில்) எளிதாக நிகழ்கின்றது.  ஆனால் அந்தப் புத்தகம் ஒரு கவனம் பெறுவதும், அதன் நுணுக்கங்கள் மீதான விவாதம் நிகழ்வதும் மிகவும் அரிதாகிவிட்டன.  அந்நிலையில், இது போன்ற கூடுகைகளை அமைத்துக் கொடுக்கும் அஞ்சிறைத் தும்பி போன்ற இலக்கிய அமைப்புகளும்,  பேராசிரியர் வினோத் ஐயா போன்ற ஒருங்கிணைப்பாளர்களும் மிகவும் நன்றிக்குரித்தானவர்கள்.



இயற்கையின் வறட்சியாலும், வெக்கையின் உக்கிரத்தாலும் பீடிக்கப்பட்ட ஒரு சிறு கிராமம்.  வளமான வாழ்விற்கான சாத்தியங்களற்ற சூழலில் காலத்தை வென்றுவிடும் மூர்க்கத்தோடு உழலும் மக்கள்.   அப்படியான வேம்பலை கிராமத்தின் ஒரு பரிமாணத்தை பிரதி எடுத்ததுதான் 'நெடுங்குருதி' நாவல்.  ஒரு கிராமத்தை எப்படி வரையறுப்பது?  அதன் நிலவியல் எல்லைகளை வைத்தா, அதன் மக்களின் குணநலன்களை வைத்தா? அதன் பாழடைந்த தெருக்கள், இடுபாடுகளிடையேயான பழமையான வீடுகளை வைத்தா, அதன் தொன்ம வரலாற்று கதைகளை வைத்தா?  காலம் ஒரு கருணையற்ற மந்திரவாதி போல் அந்த ஊரை உருமாற்றிவிடுகிறது.  ஆனாலும் அந்த வேம்பு மரம் அந்த நிலத்தின் மீது பூக்களை சொரிந்தபடி நின்று கொண்டுதானிருக்கிறது.  பொதுவாக வேம்பு இந்திய நிலத்தின் தோன்றிய மரம் என்பார்கள்.  தெற்காசிய வறண்ட பூமியின் தனித்துவ பிரதிநிதி எனச் சொல்லலாம்.  வேம்பலை எனும் கற்பனை நகரத்தின் மணம் நெடுந்தூரத்திலிருந்து தன்னை நெருங்கி வருவதைப் பற்றி எழுத்தாளர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்களும், ஒரு லட்ச சொற்களுக்குமாக இருக்கும் இந்த நீண்ட நாவல், 2003ம் ஆண்டிலே எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு வறண்ட வெயில் பிரதேச கிராமத்தின் வரலாறாக தொடங்கினாலும், நாயக பாத்திரமான நாகுவின் சரித்திரமாக, அதன் வழியே எழுத்தாளரின் தென் தமிழ்நாட்டின் நிலவியிலின் புத்திபூர்வ தகவமைப்பாக, மனித மனங்களின் சிடுக்குகளிடையே ஊடுருவிச் செல்லும் எழுத்தாக விரிந்து செல்கின்றது.

வேம்பலை போன்ற ஊர்கள் இது போன்ற புதினங்களில்தான் உறைந்து வாழ முடியும்.  நிஜத்தில் அவை காலத்தின் போக்கில் கரைந்து உருமாறி வேறோரு வடிவம் பெற்று விடுகிறது.  முன்பு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிரடி மாற்றங்கள் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப பிரவாகத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளிலே பெரு மாற்றங்களை பெற்று விடுகின்றன.   வேம்பலை ஓர் உதிரி கிராமம்.  எங்கோ இருக்கும் பெருநகரங்களின் தொடர் இயக்கத்தை நம்பி தொலைதூர விளிம்பில் உறைந்திருக்கும் கிராமம்.  காட்டு மூலிகைகளைக் கொண்டு சாயம் காய்ச்சி பெருநகரங்களின் பட்டறைகளுக்கு கொண்டு செல்லும் சாயக்கார குடும்பங்கள், சட்டி பானை செய்யும் குயவர்கள், இரண்டொரு தச்சு ஆசாரிகளின் குடும்பங்கள்,  பழமையான சுவடிகளை காத்து நிற்கும் ஒரு கோவில்மடம், ஊருக்கு ஒரு நாவிதன் என்றிருந்த சிறிய ஊரில், களவுத் தொழிலில் ஈடுபடும் வேம்பர்கள் வந்து சேர்கிறார்கள்.   பிறகு அவர்களையும் அந்த ஊரையும் பற்றி தொன்மக் கதைகள் உருவாகத் தொடங்குகின்றன.   கிழக்கிந்திய கம்பெனியர் காலத்தில் ஒரு வெள்ளைக்காரத் துரைக்கும், குரங்காட்டி வேம்பனுக்குமான ஒரு உளவியல் சண்டை பற்றிய கதை பிரசித்தமானதாக அந்த ஊரில் தற்போதும் வழங்கி வருகிறது.  

வேம்பலையின் கதைக்கு இணையாக நாகுவின் கதையும் நாவலின் ஓட்டத்தில் கலந்து வருகிறது.  வெக்கை நிலத்தின் விளைவாக நாகுவிற்கு அம்மை போடுவது, சமண துறவிகள் வேம்பலை கிராமத்திற்கு வந்து போவது, தொழுவத்தின் சட்டியில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும் ஆமை களவாடப்படுவது என்று கதைப் பின்னல் மாறி மாறிச் செல்கிறது.  சென்னி கிழவன் ஒரு காலத்தில் வழிபறிக் களவில் பிரசித்தமானவனாக இருந்திருக்கிறான்.  வடகுறிச்சி கோவில் பண்டாரத்தின் மகள் தேவானையுடனான சிங்கியின் காதல் ஒரு தனி கிளைக்கதையாக, சொல்லப்படாததொரு காதலைச் சொல்லிச் செல்கிறது.  மாட்டு வைத்தியம் பார்க்கும் குருவனுடன் பதினெட்டாம்புலி ஆட்டம் ஆடும் சிங்கியின் முதுமை வாழ்க்கை அந்த வற்றிப் போன வசந்தத்திற்கு மாற்றாக துயர் மிகுந்த வாழ்க்கையாக நகர்கிறது. போக்குவரத்து வண்டிகளை மறித்துக் களவாடும்போது சிறுமிகளின் கழுத்து காதில் இருக்கும் நகைகளைத் தொடாதவனாம் சிங்கி.  இந்த வேடிக்கை இயல்பை புரிந்து கொண்டு வழிபோக்கர்கள் அவனை ஏய்ப்பது ஒரு நல்ல சிறுகதைக்கான இயல்பு கொண்டது.  தென் தமிழகத்தின் குற்றப்பரம்பரைகளின் இது போன்ற பதிவுகள் சில தமிழ்த் திரைப்படங்களின் பகுதிகளாகவும் இடம்பெற்றிருந்திருக்கின்றன.  

இந்தப் பெரு நாவல் நான்கு பருவங்களாக - கோடை பருவம், காற்றடி காலம், மழைக்காலம், பனிக்காலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புத்தகத்தின்  கிட்டத்தட்ட சமபாதிக்கு கோடைப் பருவ கதைகள் வியாபித்திருக்கின்றன.  ஓரிரவில் நீலாவிற்கு உண்டாகும் மனோவியாகூலங்கள் அவளுடைய இறப்பிற்கான முன்னறிவிப்புப் போன்றொரு தோற்றத்தை அளிக்கும்படி அமைந்திருக்கிறது.  நாவலின் கதையோட்டத்துடன் ஒத்திசைந்து வரும் இது போன்ற விவரணை வடிவங்கள், புனைவெழுத்தின் மதிப்பை ஓரிரு புள்ளிகள் உயர்த்திக் கொண்டு போகின்றன.  பக்கீரின் வரவும் மறைவும், அதைத் தொடர்ந்து பக்கீரின் குடும்பம் வேம்பலையில் தங்குவது, காயாம்பூவின் கல்யாணம், , நாகுவின் தமக்கை நீலாவின் மரணம், பின்னர் வேணியின் திருமணம் என்று நாவலின் கோடைப் பருவம் முடிகிறது.  வேம்பலையை விட்டு நாகுவின் தாத்தாவுடைய ஊரான தாதன்பட்டிக்கு கிளம்புகிறார்கள். 

நாகுவிற்கு அதொரு புலம்பெயர்தல் போன்ற அனுபவம்.  வேம்பலையும், இறந்துபோன நீலா அக்காவும், அம்மாவும், வேம்பலை ஊரும் அவன் மனதில் எப்போதும் தளும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  காற்றடி பருவத்திற்கு ஏற்ப, நாகுவின் இளமைக்கால வாழ்க்கையும் அலைக்கழிகின்றன.  தாத்தாவுடன் ஊரூராக மாடுத்தரகு தொழில் செய்து வருவதற்கிடையே சாராயம், சீட்டு விளையாட்டு, திருவிழாக் கொண்டாட்டங்களில் பெண்பிள்ளைகள் சகவாசம், அடிதடி கத்திக் குத்து என பலதரப்பட்ட அனுபவங்கள் அமைகின்றன.  இடையே வேணி அக்காவின் குடும்பமும், சந்நியாசியாக அலையும் அப்பாவும் மீண்டும் வந்து சேர்கிறார்கள் நாகுவின் வாழ்க்கையில்.  சுற்றியலைந்த வாழ்க்கை வேம்பலைக்கு வந்து மீண்டும் மாட்டு களவு, துப்புக்கூலி என்று திசைமாறி நிற்கிறது.  தொடர்ச்சியாக குடிப்பழக்கம், கொலைமுயற்சி, மனச்சிதைவு என்று சுழன்றடிக்கும் சம்பவங்களிடையே, ரத்னாவதியின் வயிற்றிலே கரு உருவாகுவதும், அய்யாவு தாத்தா அவனுக்கு மல்லிகாவைத் திருமணம் செய்து வைப்பதும், போலிஸ்காரர்கள் வேம்பலையைச் சுற்றி வளைத்து, வேம்பர்க்களை தினமும் கச்சேரிக்கு ரேகை வைக்கச் செய்வதோடு, இறுதியில் போலில்ஸ் துப்பாக்கிச் சூட்டில் நாகு இறப்பதோடு காற்றடி காலம் நிறைவுடைகிறது.  ஒரு கவித்துவ முத்தாய்ப்பாக, நாகுவின் சிறுவயது தோழியான ஆதிலட்சுமி தன் மகனோடு வந்து  அவனை சந்திக்கும் காட்சி இருக்கிறது.  

வெயில் பருவத்தை விட, காற்றடி காலம் சம்பவங்களின் அடர்த்தியிலும், விவரிப்பிலும் செறிவாகவும் விறுவிறுப்பாகவும் செல்வதைப் பார்க்க முடிகிறது.  மூன்றாவது பகுதியான மழைக்காலம் முழுவதும் நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவைப் பற்றிய கதைகள் மாறிமாறி இடம்பெறுகின்றன.  முதல் பகுதியில் வீட்டில் தங்காமல் சுற்றிக் கொண்டிருந்த நாகுவின் தந்தையான முருகு, நாகுவின் மரணத்திற்குப் பின்னர் முழுவதுமாக தன்னுடைய மருமகள் மல்லிகா, பேத்தி வசந்தா எனத் தங்கிவிடுகிறார்.  ஆனாலும் வேம்பலையின் கசப்பு நாக்கு தீரா விடாயுடன் அவரையும் காவு வாங்கிவிட, மல்லிகா வேம்பலையின் நீண்ட குருதித் தடத்தைப் பற்றி மருகிக் கரைகிறாள்.  வேம்பலையை வெறுத்து வெளியேறும் மல்லிகாவின் மகளுக்கோ ஒரு வேம்பன்குடியின் மகள் உற்ற தோழியாக அமைகிறாள்.  

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும், புட்களும் சிலம்பின என ஆண்டாள் நாச்சியார் விவரிக்கும் பனிக்காலத்தில், உதிரித் திரிகளை இணைத்து இந்த பெரு நாவல் முடிவடைகின்றது.  நாகுவின் மகளான வசந்தா வேம்பலைக்கு திரும்பி வந்து வாழும் விருப்பம் கொள்கிறாள்.  புதியதாக பிறந்த குழந்தைக்கும் நாகு என்றே பெயரிட விரும்புகிறாள்.

இந்த பெருநாவலின் போக்கை மூன்றாகப் பிரிக்கலாம்.  முதல் பகுதியில் நாகுவின் பால்யப் பிராயமும், வேம்பலை கிராமத்தின் சூழலும் இயல்பாக பொருந்தி வருகின்றது.  அப்படியே நாகுவின் இளமைக்காலமும், அவன் வேம்பலையை விட்டகன்று பிறகு மீண்டு வருவதும்,  இறப்பு வரையிலுமான அவனுடைய பிற அனுபவங்களும் கோவையாக சொல்லப்படுகின்றன.  இடையே வரும் ரத்னாவதியின் பாத்திரம், பிறகு தனித் திரியாக பிரிந்து செல்கின்றது.  ரத்னாவதியின் வரலாறு, வேம்பலை கிராமத்தின் சூழலோடு இணையாது தனித்த கதையாகவே பயணிக்கிறது.  சொல்லப்போனால், ரத்னாவதியின் தொழில், அவளுடைய சுற்றம், நண்பர்கள் போன்றவை தனி நாவலாகவே கொள்ளப்பட்டிருக்கலாம்.  திருவிழாக் கொண்டாட்டங்களில் அறிமுகமாமின்ற நாகுவுடன் ஓரிரு காட்சிகள் பகிர்ந்து கொண்டாலும், ரத்னாவதியின் கதை மிகவும் சுவாரசியம் நிரம்பியதாக சொல்லப்படுகிறது.  எங்கோ சந்தித்தவனின் பிள்ளையை பெற்று வளர்க்கிறேன் என்று தீர்மாணிக்கும் ரத்னாவதிக்கு பின்னாளில் பூபாலனோடு காதல் தகைவதும், ஜெயராணியுடன் கொள்ளும் தீரா அன்பும், தன் வாழ்வின் தீராத் துயரச் சூழலை சமாளித்து வாழ்வில் தலைநிமிர்ந்தெழும் தோழியரின் வரலாறும் துலக்கமாக வந்திருக்கிறது. ரத்னாவதியின் மகன் திருமால் மிஷனரி பள்ளிகளில் பயின்று தனக்கானதொரு தனித்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ரத்னாவதியின் கதைக்கு பாந்தமான அனுபந்தம் எனலாம்.

மூன்றாவதாக நாகுவின் மகளான வசந்தியின் பள்ளிப்பருவம் அருமையானதொரு நெடுங்கதையாக இடம்பெற்றிருக்கிறது.  ரத்னாவதி ஜெயராணி நட்பை விட இன்னமும் இறுக்கமானதொரு நட்பாக வசந்தி ஜெயக்கொடி நட்பு வடிவம் கொண்டு எழுகிறது.  இரண்டு தோழிகளும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் சிறுவயது அபத்த சிந்தை எழும் அளவிற்கு அப்படியொரு இறுக்கமான நட்பு.  ஆனால் காலப்போக்கில் இரு நண்பிகளும் பிரிந்து போக, வசந்தியின் திருமண வாழ்க்கையிலும் அதன் பிரதிபலிப்பாக அமைந்து போகிறது.

நாம் எண்ணிய இலக்கிற்கு செல்லாது ஓடம் வேறு திசையில் திரும்புகின்ற போது, அத்திசையைப் பற்றிக் கொள்ள வசந்திக்கு, அவள் அய்யாவின் ஊரான வேம்பலை உதவுகிறது.  தன் வாழ்வின் தொடக்கத்தை வேம்பலைக்கு குடிபெயர்வதோடு இணைத்து, தான் கண்டேயிராத தந்தையை, புதியதாக பிறந்த மகவின் தோற்றத்திலிருந்து புதுப்பித்துக் கொள்கிறாள்.

ஓரிடத்தில் வேம்பலைக்கு நூதன கடிகாரம் ஒன்றை நிர்மாணிக்க தேவிப்பட்டினத்திலிருந்து மரைக்காயர் ஒருவர் வருகிறார், ஆறு மணி ஒலிப்பதற்கு ஆறு பொம்மைக் குரங்குகள் கடிகாரத்திலிருந்து வெளிப்படுவதைப் போல நிர்மாணிக்கிறார்.  அந்தக் குரங்குகள் ஊராரின் கவனத்தைப் பெறுவதோடு, வேண்டாத சிக்கல்களையும் உண்டாக்குகின்றன என்பதுபோன்ற் மிகுகற்பனை இடம்பெற்றிருக்கும்.  பொம்மைக் குரங்குகள் அடங்கிய நூதன கடிகாரம் போல், நெடுங்குருதி புதினம் காலத்திற்கு ஒரு தோற்றம் கொண்டு வாசிப்போரை வியக்க வைக்கின்றது.   

பூக்காத ஊமை வேம்பு மரமொன்று அக்காலத்தில் வேம்பர்களை தூக்கிலிட்டதற்கு சாட்சியாக இருக்கிறது.  இன்று அதுவே ஒரு தொன்ம வழிபாட்டு சின்னமாக மாறி, அதன் பிசினை அனுமதிக் கேட்டு வெட்டி எடுக்கும் தச்சர்களுக்கு வேம்பின் மணத்தோடு அளிக்கின்றது.  கசப்பின் எல்லையில் கணிந்து வரும் அந்த இனிமையான மணம், இந்த நாவலை முழுவதும் வாசித்து முடித்ததும் நம்மையும் நிறைக்கின்றது.    



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌