Normal view

Received before yesterday

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம் கம்பத்தில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லாமல் விட்டால் இந்தப் பகுதி நிறைவடையாது. ஏனென்றால், போன வருடம் பாந்தவ்கரில் நிகழ்ந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் நடந்த நிகழ்வுகளின் நிழல்போலவே இருந்தது.

சில வருடங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கருக்கு ஒரு யானைக் கூட்டம் இடம்பெயர்ந்தது. அதுவரை மத்திய பிரதேசத்தில் யானைகள் கிடையாது. அதுதான் முதல் நிகழ்வு. அந்த யானைக் கூட்டத்தால் ஆரம்பத்தில் பெரிய பிரச்னைகள் ஏதும் வரவில்லை. ஓரிரு இடங்களில் விவசாய நிலத்தில் சேதங்கள் ஏற்பட்டதைத் தவிர. மக்களுக்கும் அவற்றால் பெரிய தொல்லை இல்லை.

நான் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பாந்தவ்கர் போயிருந்தபோது ஒரு கொம்பனையும் சில பெண் யானைகளையும் புலிகள் சரணாலயத்தை அடுத்து பார்த்தேன். அன்று இதுபோல ஒரு சம்பவம் நிகழும் என்று நானும் எண்ணவில்லை. 2024 அக்டோபர் மாத இறுதியில், கிட்டத்தட்ட 15 யானைகள் அறுவடை செய்த வரகு போன்ற சிறுதானியத்தைத் தின்ற பின் நினைவிழந்து விழுந்து இறந்துபோயின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம், தானியத்தைத் தின்று ஒரு தாவர உண்ணி இறக்குமா என்ற கேள்விதான். யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது என்றும், அதுகுறித்து டாக்டர் கே எழுதி உள்ளார் என்றும் தெரியவந்தது. உடனே அதுபற்றி அறிய, சில வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதரைத் தொடர்புகொண்டனர். ஸ்ரீதர், டாக்டர் கேயின் மகன். அவரிடம் டாக்டர் கேயின் பழைய ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்பு கொண்டனர். அப்போதுஅவர்களுக்கு டாக்டர் கேயின் பழைய விஞ்ஞானக் கட்டுரை ஒன்று கிடைத்தது. கஜா (Gajah) என்ற விஞ்ஞான சஞ்சிகையிலும், மதராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் பிளாக் பக் (Black Buck) சஞ்சிகையிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றிருந்தது.

யானைகளுக்கு வரும் துதிக்கை வாதம் (trunk paralysis) எனும் தாற்காலிக நிலைக்கு இதுபோன்ற தாவரங்களை உண்பதும் ஒரு காரணம் என்று டாக்டர் கே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இந்தத் துதிக்கை வாதம் ஒரு அறிகுறி தானே தவிர, இறப்புக்கு காரணம் அதுவல்ல. பின் இறப்புக்குக் காரணம்தான் என்ன? வரகு (சிறுதானிய) கட்டுகள் மழையில் நனைந்து பூஞ்சணம் பிடித்துப்போனதே.

அந்தப் பூஞ்சணம் யானைகளின் வயிற்றுக்குள் சென்று பல வேதிப்பொருட்களாகி அவை இறக்க வழி செய்துவிட்டன. பூஞ்சணம், மணமில்லாமல் போனதும் ஒரு காரணம். சற்றே வாடை இருந்திருந்தால் யானைகள் அவற்றைத் தின்றிருக்காது.

1933-ம் வருடம் டிசம்பரில், கம்பம்- குமுளி வழியில் அமைந்திருக்கும் காட்டில், வண்ணாத்திப் பாறை என்ற இடத்தில் 14 யானைகள் இதேபோல வரகு பயிரைத் தின்று இறந்ததாக சி. மோரிஸ் என்ற காப்பித் தோட்ட முதலாளி, பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க குறிப்பேடுகளில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக உள்ளூர் மக்கள் இந்தப் பயிரை ‘கிறுக்கு வரகு’ என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1933-ம் ஆண்டு நிகழ்ந்த அந்த நிகழ்வு அத்துடன் நின்றுவிடவில்லை. 1970-ம் ஆண்டும் இதேபோல 17 யானைகள் கண்டமனூர் பள்ளத்தாக்கில் (கம்பத்தின் ஒரு பகுதி) மர்மமாக இறந்ததும், வழக்கம்போல டாக்டர் கே அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர அனுப்பப்பட்டார். அப்போதுதான் அவர் மேற்சொன்ன கட்டுரையை எழுதினார்.

டாக்டர் கே எழுதிய அந்தக் கட்டுரையில், ‘1970-ம் ஆண்டில், கண்டமனூர் பள்ளத்தாக்கில் ஒரு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் இறப்பு குறித்து மதுரை மாவட்ட வன அலுவலரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. பல்வேறு வயதையும் பாலினத்தையும் சேர்ந்த 17 யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தினை பயிர்களை உட்கொண்டதால் பாஸ்பால்வ்ன் ஸ்க்ரோபிகுலாட்ரான் என்ற எர்கோட் (Ergot) இன்ஃபெக்ஷன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது.

பெரும்பாலான விலங்குகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நினைவின்றி இருந்த பிறகு இறந்தன. இந்த யானைகள் பலவற்றில், (தும்பிக்கை முடக்கம்) துதிக்கை வாதம் காணப்பட்டது. 1952-ம் ஆண்டில் மதுரை மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்திற்கு அருகில் 6 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ‘வரகு’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஒரு வகையான தினை, ஆனால் எர்காட் பாதிக்கப்பட்ட தாவரத்தை உட்கொண்டதன் விளைவாக இறந்தன. இந்தப் புல்லை மொத்தமாக உட்கொள்ளும் விலங்குகள் (தண்டு முடக்கம் உட்பட) நோயுற்ற அறிகுறிகளைக் காட்டுவதால், இந்த தாவரம் உள்ளூரில் ‘கிறுக்கு வரகு’ (பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தும் தினை) என்று அழைக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வக கண்டுபிடிப்புகள் இந்த விலங்குகளின் நோய்க்கான காரணத்தை எர்காட் விஷம் (கிளாவிசெப்ஸ் பர்பூரியா) காரணமானது என்று உறுதிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப் பல கள ஆய்வுகளில் டாக்டர் கே முன்னோடியாகத் திகழ்ந்தார். என்ன, அவரது 1970-ம் ஆண்டு உடற்கூராய்வு அறிக்கை கிடைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கலாம். மிகப் பழைய காலத்தது என்பதால் அது கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் இதுபோன்ற ஆய்வுகளை எளிதில் செய்ய இயலும். அந்த அளவு உபகரணங்களும் பரிசோதனை வசதிகளும் பெருகி விட்டன; முன்னேறி விட்டன. 1970-ல் திசு பரிசோதனைக்குக் கூட சென்னை வர நேரிடும். பரிசோதனைக் கூடங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருக்கும். திசு மாதிரிகளை அவ்வளவு எளிதில் அனுப்ப முடியாது. இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையில் நேர்த்தியான பணியைச் செய்தார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். உள்ளார்ந்த ஈடுபாடும், செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனோபாவமும்.

இதுபோன்ற பயிரை மேயும் விலங்குகளால் மோதல்கள் ஏற்படுவது நமது நாட்டுக்கோ அல்லது மாநிலத்திற்கோ புதிது அல்ல. மலை படு கடாம் காட்டும் வாழ்க்கையைக் கண்டால், அன்றும் இன்றும் ஒன்றுதான் என்று நினைப்போம். உதாரணமாக,

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]

உரை: விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி விளைச்சலைத் தின்ன வரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர்.

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]

உரை: யானை ஒலி – தன் கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை, கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் ஒலி சங்கூதுவது போன்றது.

இந்த மலை படு கடாம், சங்க கால நூலான பத்துப் பாட்டில் ஒன்று. அன்றே யானைகள் விளை நிலங்களில் புகுந்து தொல்லை தந்தன என்றால், இன்று அவை அவ்வாறே செய்வதில் வியப்பென்ன? காலம் காலமாக மனிதனும் விலங்கும் இயைந்து வாழ்பவை என்பதைப் புரிந்து கொண்டால், அது தொல்லையாகத் தெரியாது. எப்படித் தடுக்கலாம்? எப்படிச் சேதத்தைக் குறைக்கலாம் என்று புரியும். எனவே, யானைகள் தினையை உண்ண வந்ததில் எந்த வியப்பும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பூஞ்சண நச்சால் இறந்ததுதான் சோகம். இன்றும், டாக்டர் கேயின் குறிப்புகள் வழிகாட்டியாக உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு.

இதேபோல, ஹெய்தி என்கிற மேல் நாட்டு கால்நடை வைத்தியருக்கு டாக்டர் கே உதவியது, அவரது ஆளுமையைப் பறைசாற்றும் மற்றொரு நிகழ்வு. திருமதி ஹெய்தி ரிடில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆசிய யானைகள் குழுவின் உதவித் தலைமைப் பொறுப்பாளர். அவர் தனது கடிதத்தில், ‘நன்றி ஐயா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன் என்று நினைத்தேன். இந்த ஆய்வுக் கட்டுரை என் நினைவை மீண்டும் கிளறுகிறது. ஆசிய யானைகளில் முடங்கிய (முழு அல்லது பகுதி) தும்பிக்கைகள் தொடர்பான அவரது அனுபவத்தைப் பற்றி பேராசிரியர் சுகுமார் மூலம் உங்கள் தந்தையிடம் கேட்டிருந்தேன். 1994-ம் ஆண்டு பகுதியளவு முடங்கிய தும்பிக்கையுடன் (துதிக்கை வாதம் அல்லது முடக்கம்) ஒரு யானை எங்களுக்குக் கிடைத்தது. அப்போது அவளுக்கு (அந்த யானைக்கு) 40 வயது இருக்கும். சர்க்கஸில் இருந்த யானை. அவள் முதலில் இந்தியாவிலிருந்து வந்த யானை. இந்த முடக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக வளர்ந்தது. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் 2020-ல் 63 வயதில் காலமானாள். மற்றபடி அவள் வாழ்நாள் முழுவதும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாள்.

வட அமெரிக்காவில் பகுதியளவு அல்லது கிட்டத்தட்ட முழு தும்பிக்கை முடக்கம் கொண்ட பிற யானைகள் இருந்தன. நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை அனைத்தும் பெண் ஆசிய யானைகள். அவற்றில் பெரும்பாலானவை சர்க்கஸில் வரலாற்றைக் கொண்டு இருந்தன. பாலினம், இனங்கள் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை விளக்க எந்த உறுதியான தொடர்பும் அடையாளம் காணப்படவில்லை. உங்கள் தந்தையின் தகவல் (இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி) மிகவும் சுவாரஸ்யமானது. வடக்கு அமெரிக்கச் சூழலில், அதற்கான காரணம் என்ன/எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தும்பிக்கை முடக்கம். ஒருவேளை ஏதோ ஒரு வகையான காயங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மலைப்பாங்கான நாட்டில் உள்ள யானைகளில், வளர்ப்பு, காட்டு யானைகள் இரண்டிலும் காணப்பட்டது என்பதையும், உங்கள் தந்தை அதற்குப் பல விளக்கங்கள் வைத்திருந்தார் என்பதையும் அறிந்து கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. யானைகளின் உடல்நலப் பிரச்னைகள் குறித்த தகவல்களின் அற்புதமான ஆதாரமாக அவர் இருந்தார்!’ என்று எழுதுகிறார்.

இந்தச் சம்பவம் நடந்தது பெங்களூருவில் இருந்த இந்திய அறிவியல் கழக வளாகத்தில். முனைவர் சுகுமாரின் அழைப்பின் பேரில் டாக்டர் கே சென்றிருந்தார். அப்போது திருமதி ஹெய்தி, சுகுமாரிடம் இந்தத் துதிக்கை வாதம் குறித்துக் கேட்கும்போது, அவர், ‘டாக்டர் கேவும் இங்குதான் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள்’ என்று தொலைபேசியை டாக்டர் கேயிடம் கொடுத்துள்ளார். டாக்டர் கே, உடனே துதிக்கை வாதம் குறித்து அவரது அனுபவங்களை விவரமாக எடுத்துரைத்துள்ளார். இதில் நாம் பாராட்ட வேண்டிய விஷயம், எந்தக் குறிப்பும் இல்லாமல், நினைவில் இருந்து பழைய சம்பவங்களையும், இந்த நோயின் தன்மையையும் மருத்துவ ஆலோசனையையும் தனிச்சையாக கூறினார் என்றால், எந்த அளவிற்கு டாக்டர் கேவுக்குத் தன் தொழிலின் மேல் ஈடுபாடு இருந்தது என்று அறியலாம். மூச்சே யானைகளின் நலம்தானோ என்று வியக்கும் அளவிற்கு அவர் எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது. இந்த ஈடுபாடுதான் அவரைக் கம்பம் பகுதியில் இத்தனை எளிதாகப் பணி செய்ய வைத்தது என்று நினைக்கிறேன்.

கேரளத்தின் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர் சீரன்,’ எனக்கு டாக்டர் கேவை அறிமுகப்படுத்தியது ஈஆர்சி தாவிதர். அப்போது தாவிதர் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. யானைகளைப் பற்றி முழுவதும் அறிந்தவர் டாக்டர் கே. யானைகளைப் பற்றி அவர் அறியாத தகவல்கள் உண்டெங்கில், அவை அறிய லாயக்கற்றவை என்று புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிடச் சிறந்த ஒரு சான்றித்ழை யாராவது தர இயலுமா? அப்படி அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1953 -2002) யானைகள் பராமரிப்பில் தலை சிறந்து விளங்கினார். அந்த ஈடுபாட்டில் ஒரு 20 சதவிகிதமேனும் இன்றுள்ளவர்களுக்கு இருந்தால் நிலைமை இப்படி இருக்காது. இதேபோல தகுந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளின் முக்கியத்துவம் எவ்வளவு உபயோகமானவை என்பதும் புரியும். கூகுள் இல்லாத காலத்திலும், அறிவியல் சஞ்சிகைகள் இவற்றை வெளியிட்டதால் இன்று நம்மால் அவற்றை மேற்கொள் காட்ட இயலுகிறது. இல்லை என்றால் டாக்டர் கேயின் பல அற்புதமான செயல்கள் மறக்கப்பட்டு இருக்கும்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் அங்கு சர்வ சாதாரணம். சில சமுதாயத்தினரை வெள்ளையர்கள் அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் (outlaws) என்று முத்திரை குத்தி இருந்தது. காடுகள் கேட்பாரின்றி வெட்டப்பட்டன; வன விலங்குகள் வேட்டை சர்வ சாதாரணமாக நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், தாணாக்காரர்கள் எல்லாம் பெரும் பயத்துடனேதான் பணி செய்து வந்தனர்.

குத்து, வெட்டு, கொலை என்பதெல்லாம் தினமும் நடக்கும். பெரியகுளத்தில் இருந்து கம்பம் அல்லது குமுளி வரையிலான பெரிய நிலப்பரப்பு அன்று மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. சின்னமனூரைச் சேர்ந்த பெரியவரிடம் பேசும்போது, அதற்கான காரணத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். ‘அய்யா, அன்று மக்கள் படித்திருக்கவில்லை; மேலும், சரியான வாழ்வாதாரங்கள் கிடையாது; வெள்ளையர்களின் ஆளும் முறையில் ஒரு சில சமூகத்தினர் புறந்தள்ளி வைக்கப்பட்டனர்; இவற்றுக்கு இடையில் சாதிப் பிரிவினைகள் வேறு. எனவே, இது போன்ற நடவடிக்கைகள் வெகு சாதாரணமாக இருந்தன. தினமும் ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகும். அரசாங்க வேலைக்காரர்கள் தவிர யாரும் திருட்டு பயமின்றி இருக்க இயலாத நிலை; வழிப்பறிக் கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலையில், ஏழு மணிக்குப் பின் வீடு திரும்புதல் ஆபத்தான வேலை. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் போலீஸ் வேலைக்கோ, வனத்துறை வேலைக்கோ வரத் தயங்குவார்கள். காரணம், சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று தெரியாத மக்கள். என்று பிரசங்கம் செய்தார். இந்த இடத்திற்குத்தான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வந்து சேர்ந்தார் டாக்டர் கே.

அந்தக் காலத்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, மதுரை ஜில்லா கெஜட்டியரை நான் படித்தேன். ஏனென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை. எண்பது வயதான ஒரே ஒரு கால்நடை மருத்துவர், அதுவும் கம்பத்துக்காரர், கிடைத்தும் பயனில்லை. காரணம், அவர் பெரிய அளவில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்ததனால், டாக்டர் கேவைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக்கால காடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. அவர் அங்கு வாழ்வது எப்படி ஒவ்வொரு நாளும் பெரும் சவாலாக இருந்தது என்பதை மட்டும் சொன்னார். அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று வெளி உலகே தெரியாமல் வாழ்ந்த கதையைத்தான் சொன்னார்.

கெஜட்டியர், பழனி மலையிலும், பெரியகுளத்தில் இருந்து குமுளி வரை படர்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தாவர வளத்தையும், வன உயிரின வளத்தையும், வேட்டையாடிகளையும் ஓரளவு நன்றாகவே விளக்குகிறது. வெள்ளையர்கள் இந்தக் காடுகளை வியாபார ரீதியில் எப்படி அணுகினார்கள், மரங்களை எப்படி வளர்க்கலாம், வளர்த்த மரங்களை எப்படி அறுவடை செய்யலாம் என்றெல்லாம் சிந்தித்தார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது. இங்கிலாந்தின் மரத் தேவையை எப்படி இந்தக் காடுகள் பூர்த்தி செய்தன என்றும் அறிய முடிகிறது. முக்கியமான விஷயம், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெரும்பாலான காடுகள் அன்று பல நிலச்சுவான்தாரர்களின் கைகளில், பல குட்டி ராஜாக்களின் சொந்த சொத்தாக இருந்தன என்பதுதான். எந்தக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இல்லாமல் பல காலங்களாக அவை பராமரிப்பின்றிக் கிடந்ததே வேட்டையாடுதல் அதிகரித்ததற்கும், மற்ற குற்றங்கள் பெருகியதற்கும் மற்றொரு முக்கியக் காரணம்.

இந்தச் சூழலில், டாக்டர் கே. கம்பத்தில் இருந்த ஆடு வளர்ப்புப் பண்ணைக்கு கால்நடை மருத்துவராகப் பணி ஏற்றார். அந்தக் குறுகிய கால (1953-56) வாழ்க்கையைப் பற்றி எழுத, டாக்டர் கிரிஸ் வெம்மரின் குறிப்புகள்தான் எனக்குப் பெரிதும் உதவின. அவருக்கு வயது 80க்கும் மேல். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இருந்தாலும், நானும் ஸ்ரீதரும் இணைந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதிலளித்தது மட்டுமல்லாமல், அவரும் டாக்டர் கேவைப் பற்றி எழுத உள்ளதாகத் தெரிவித்தார். அவரது பெருந்தன்மையும் ஆர்வமும் நாங்கள் தொடர்பு கொண்ட சிலரிடம் இல்லையே என்று நான் வருத்தப்பட்டது உண்மைதான். இத்தனைக்கும் அவர்கள் டாக்டர் கேவினால் பயனடைந்தவர்கள். அது அடிநாக்கில் தங்கிய கசப்பைப்போல ஒரு வெறுப்பைத் தந்தது. படிப்பும் பதவியும் பொருளும், வாழ்வில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தியது.

வழக்கமாக டாக்டர் கே-வின் நாள் காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் தொடங்கும். அந்த ஆடு வளர்ப்புப் பண்ணை கம்பத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. டாக்டர் கே. சைக்கிளில் போவார். அங்கு உள்ள ஆடுகளுக்கு வைத்தியம் பார்க்க நேரிட்டால் (சிறு காயங்கள், உடல் நலக் குறைவு போன்றவற்றிற்கு), வைத்தியம் பார்ப்பார். அங்குள்ள ஆடுகளின் நலனை மேற்பார்வை செய்வார். இரண்டு மணி நேர உணவு இடைவேளைக்குப் பின் வேறு அலுவலகக் கோப்புகள், பொது மக்களின் கால்நடைகளுக்கு வைத்தியம் என்று பொழுதுபோகும். மாலை ஆறு மணிக்கு இரண்டு மூன்று மெய்க்காவலர்கள் துணையுடன் வீடு திரும்புவார். இல்லையேல் பாதுகாப்பு கிடையாது. ஆயினும், டாக்டர் கே அந்த ஊர் மக்களிடம் எளிதில் நல்லுறவு கொண்டுவிட்டார். காரணம், அவரது கடமை உணர்வு. அன்புடன் பழகும் தன்மை, யாரையும் கடிந்து பேசாத குணம், உதவத் தயங்காத மனம். ஆயினும், தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல், பிரசவத்திற்கு அவர் மனைவியைப் பிறந்த இடத்திற்கே அனுப்பி வைத்தார்.

யானைகளின்பால் அவர் ஈர்க்கப்பட்டதற்கு இந்தக் கம்பம் வாழ்க்கையும் ஒரு காரணமானது. அன்றைய நடைமுறைப்படி, காட்டில் இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்த பின்னரே புதைக்க வேண்டும் என்று அரசாங்க ஆணை. யானைகள் பாதுகாப்பு சட்டம் 1876-ன் படி, இறந்த யானைகள், வேட்டையாடப்பட்ட யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய வேண்டும். அந்தப் பணி கால்நடை மருத்துவரைச் சார்ந்தது என்பதால், டாக்டர் கே அங்கு இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இப்படியாக, யானைகளுடன் அவர் தொடர்பு தொடங்கியது. கம்பம் காடுகளில் வண்ணாத்திப் பாறை, சுரங்கனாறு, குதிரையாறு போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். வேட்டையாடிகள், அந்தப் பகுதிகளில்தான் பெரும்பாலும் யானைகளைத் தந்தத்திற்கு வேட்டையாடுவார்கள். பல நேரங்களில், இறந்த யானையை, வெகு தாமதமாகத்தான் கண்டுபிடிப்பார்கள். காரணம், உயிரைப் பணயம் வைத்து காட்டில் ரோந்து போக எந்த வனத்துறை ஊழியர் முன் வருவார்? டாக்டர் கே சொல்வதுபோல, பல சமயங்களில், காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தான் இது போன்ற வன உயிர் இறப்பை துறைக்குத் தெரிவிப்பார்கள். பல நேரங்களில் யாரும் அறியாமல் போவதும் நிகழும். அப்படி வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல், பெரும்பாலும் அழுகிய நிலையில்தான் இருக்கும். மாமிசப் புழுக்கள் நிறைந்து உடல் முழுவதும் அப்பிக் கிடக்கும். தந்தங்களை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, உடலை அப்படியே விட்டுச் சென்றிருப்பார்கள். ஜெயமோகனின் யானை டாக்டர் கதை நினைவில் வருகிறதா? அதன் வேர் இங்கேதான்.

இதைப் பற்றி டாக்டர் கே, வெம்மெரிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘பெரும்பாலான இறந்த யானைகளின் உடல்கள் (பிணங்கள்) சேதமில்லாமல் அப்படியேதான் இருக்கும். தந்தங்கள் இருக்கும் கடைவாய் பகுதி தவிர. ஏனெனில், அவை வேட்டையாடப்படுவது தந்தங்களுக்காக மட்டுமே. எத்தனை நாட்களாக அழுகிப் போயிருந்தாலும், நாம் ஒரு நல்ல பிணக்கூராய்வு செய்யலாம். என்ன, அப்பிக் கிடக்கும் மாமிசப்புழுக்களை ஒரு துடைப்பம் கொண்டு பெருக்கித் தள்ளிவிட்ட பின், கிருமிநாசினி தெளித்த பின், கால்நடை மருத்துவர் பணியைத் தொடங்க வேண்டும். அது கால்நடை மருத்துவருக்கு அவரது திறமைக்கான சோதனை. அவருக்கு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பணி செய்யும் திறனும், மிகுந்த மன உறுதியுடன் கடினமான வயிறும் வேண்டும். வாந்தி வராமல் இருக்கணுமே!

சில சரகர்கள், பணியாட்களுக்கு வாசனை திரவங்கள், ஊதுபத்தி, ஏன், சந்தனக் கட்டைகளைக்கூடத் தருவார்கள், அந்தக் கொடூர நெடியில் இருந்து விடுபட. எப்படி இருந்தாலும், ஒரு சில புழுக்கள் மேலே ஏறி விடும்; நெடி இரண்டு மூன்று நாட்களுக்கு நம் உடலை விட்டு விலகாது!’. இங்கு ஓய்வு பெற்ற டி.எஃப்.ஓ பத்ரசாமியின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘டாக்டர் கே ஒரு சைவ மதத்தினர். மேலும் பிராமணர். ஆனாலும், அவரைப்போலப் பிணக்கூராய்வு செய்த ஒரு கால்நடை மருத்துவரை நான் என் 40 வருட சர்வீசில் பார்த்ததில்லை. அனாயாசமாக, யானையின் பிணத்திற்கு உள்ளே நின்றுகொண்டு முக்கியப் பாகங்களின் பகுதிகளை வெட்டி எடுப்பார். அங்கேயே நின்றுகொண்டு டீயும் பருகுவார். அவரைப் பொறுத்தவரை அது அவர் கடமை. விருப்பு வெறுப்புக்கு இடமில்லை!’ Anglia Productions ஆவணப்படம் யானையின் வயிற்றுக்குள் டாக்டர் கே இருக்கும் காட்சியுடன்தான் தொடங்கும்.

இதுகுறித்து மேலும் விளக்கும் டாக்டர் கே, ‘பிணக்கூராய்வு, வனத்துறையைப் பொறுத்தவரை, இறந்த யானை ஆணா, பெண்ணா என்று அறியவும், ஏதாவது தொற்று நோயால் இறந்ததா என்று அறியவும்தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்த்ராக்ஸ் நோய் (சிலர் அடைப்பான் என்றும் சொல்கின்றனர்) உள்ளதா என்பதுதான் பெரும் கவலை. ஏனெனில் அது ஓர் உயிர்க்கொல்லி நோய் மட்டுமல்ல, விரைவில் மற்ற மிருகங்களுக்கும் பரவக் கூடியது. இதற்காக, இறந்த உடலின் சில பாகங்களையும் திசுக்களையும் எடுத்த பின், பிணக்கூராய்வு முடிவடையும்.

ஒரு ஆழமான பிணக்கூராய்வு செய்ய குறைந்த பட்சம் 6 மணி நேரம் தேவை. தந்தங்களை எடுக்க வேண்டும் என்றால், மேலும் 2 மணி நேரம் தேவைப்படும். காரணம், அவற்றை எடுக்க மண்டை ஓட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் பிளந்து, தந்தங்களை அவற்றின் பற்குழியில் இருந்து சிதையாமல் எடுக்க வேண்டும். வேட்டையாடிகளைப்போல கோடரியால் தாடையில் வெட்டி எடுத்தால், முழுத் தந்தமும் கிடைக்காது. யானையின் மேல் தோலை அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களால் கிழித்து ஒரு பாதை உண்டாக்குவார்கள். பின், நான் எனது உபகரணங்களைக் கொண்டு சில உடல் பாகங்களை அறுத்து எடுப்பேன்’ என்கிறார்.

டாக்டர் வெம்மர், அந்தப் பழங்குடி மக்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்ததா என்றும், அவர்களுக்கு இந்த வேலைகளைச் செய்ய மது வழங்கப்பட்டதா என்றும் கேட்கும்போது டாக்டர் கேவின் பதில் அவரது பரந்த உள்ளத்தையும், பழங்குடிகளின் பால் அவருக்கிருந்த கரிசனத்தையும் வெளிக்காட்டுகிறது.

‘அவர்களை வரவழைப்பது சரகரின் வேலை. ஒரு சிலர் மது வேண்டும் என்று கேட்கலாம்; ஆனால் நான் அதை ஆதரிப்பதில்லை. தேவைப்பட்டால், யுடிகோலோன், யார்ட்லி போன்ற வாசனைத் திரவியங்களோ அல்லது சந்தனக் கட்டையை எரிக்கவோ பரிந்துரைப்பேன். அவர்கள் பெரும்பாலும் உடலில் விளக்கெண்ணெய்யைத் தடவிக் கொண்ட பின்தான் வேலையைத் தொடங்குவார்கள். கத்தியில் படியும் கொழுப்பை வெங்காயம் கொண்டு அகற்றுவார்கள். அதேபோல, அவர்களுக்கு சம்பளம் சற்று தாராளமாகக் கொடுங்கள் என்று சொல்வதோடு, கொடுக்கிறார்களா என்றும் உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆயினும், சரகர்களும் வன ஊழியர்களும் அவர்கள் என்ன பிணக்கூராய்வா செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புவார்கள். அவர்கள் செய்வது ஒரு நன்றி மறந்த வேலை. என்ன செய்ய? நான் என் வரையில் அவர்களுக்கு நல்ல வகையில் எல்லாம் கிடைக்க முயற்சி செய்வேன். அவர்களை நல்ல முறையில் நடத்துவேன்’ என்று டாக்டர் கே கூறுகிறார். ஆயினும், இன்றும் இந்த சமுதாயத்தில், கடைநிலை ஊழியர்களை நடத்தும் விதம் பெரிதாக மாறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த நிலை சற்றே முன்னேறி உள்ளது என்றாலும், போதாது.

டாக்டர் கே பிணக்கூராய்வு பற்றி மேலும் கூறுகையில், ‘பெரும்பாலும் நான் பிணக்கூராய்வை நெஞ்சுப் பகுதியில் இருந்துதான் தொடங்குவேன். அதன்பின் வயிற்றுப் பகுதி, குடல், சீகம் அல்லது பெருங்குடல் வாய், பெருங்குடல், பின்னர் கல்லீரல் என செல்வேன். அதன் பின் தோராக்ஸ் பகுதியும் கபாலமும். சில நேரங்களில், இறங்கி, வயிற்றினுள் நுழைய வேண்டி வரும். அதற்கு இந்த முறைப்படி போக இயலாது. சில நேரங்களில், தலையில் இருந்து தொடங்கி ஆசனவாய், பிறப்புறுப்புகள் வரை பிறழ் முறையில்போக வேண்டி வரும். அந்தந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் நம் தேவையை ஒட்டி பிணக்கூராய்வு நடக்கும். கிட்டத்தட்ட 18 இறந்த யானைகளை நான் கம்பத்தில் இருந்தபோது பிணக்கூராய்வு செய்திருக்கிறேன். அவற்றில் 12க்கும் மேற்பட்டவை வேட்டையாடிகளால் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டவை. அவற்றில் ஒரே ஒரு யானையின் தந்தத்தை மட்டும் மீட்க இயன்றது. மற்றவை எல்லாம் திருடப்பட்டு விட்டன. இதற்கு முன் இரண்டு சர்க்கஸ் யானைகளுக்கு வைத்தியம் பார்க்க நேர்ந்தது. இந்தப் பிணக்கூராய்வுகள், யானைகளைப் பற்றிய என் அறிவை மேம்படுத்தின. இவற்றுடன் வேறு சில காட்டு விலங்குகளையும் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இவ்வாறு பணி சுறுசுறுப்பாக இருந்தாலும், எனக்கு வேலையில் ஒரு திருப்தி இல்லாமல்போனது. காரணம், என்னுடைய மேலதிகாரி ஒரு முசுடு. குறையை மட்டுமே கண்டுபிடிக்கும் இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதுதான்’ என்கிறார்.

மருத்துவர் கே இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், வனத்துறையில் வேலை பார்க்க கால்நடை வைத்தியர்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியானது!

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் டாக்டர் கே-வை மிகவும் பிடித்துப்போனது. காரணம், அவர் குதிரைகளைக் கையாண்ட விதம். கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல் பாடம் மிருகங்களை எவ்வாறு கையாள்வது என்பதுதான். குறிப்பாக, குதிரைகளை எப்படிக் கையாளச் சொல்லிக் கொடுப்பார்கள். குதிரைகளை நல்ல முறையில் கையாள அவர்கள் பரிந்துரைப்பதாவது:

1. எப்போதும் குதிரையின் பக்கவாட்டிலிருந்து தான் அணுக வேண்டும்.

2. கையாள்பவர் நிதானத்துடன், தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

3. முதலில் குதிரையை நமது கையை முகர அனுமதிக்க வேண்டும். அதற்குக் கையை நீட்டி முகரச் செய்ய வேண்டும்.

4. குதிரைகளிடம் மென்மையான தொனியில் பேச வேண்டும்.

இப்படிப் பல வழிமுறைகள் சொல்லித் தரப்படும். டாக்டர் கே இந்த வகையில் அனாயாசமாகக் குதிரைகளைக் கையாளுவதைக் கண்டு மேற்கண்ட இருவரும் அவர் சிறந்த கால்நடை மருத்துவர் ஆவார் என்று உணர்ந்தனர். அதன் காரணமாக அவர் மேல் அதிகப் பிரியம் வைத்திருந்தனர். அங்கு இருந்த எல்லோருமே அவரை டார்ஜான் என்று செல்லப் பெயரால் அழைத்தார்கள்.

முன்பே சொன்னதுபோல அவரது சித்தப்பா ஹரிஹரன் வீட்டிலிருந்துதான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் இருந்தது புரசைவாக்கத்தில். ஹரிஹரன் பணி புரிந்தது எம்.சி.டி. முத்தையா பள்ளியில். அன்று அந்தப் பள்ளியில், சாம் என்ற ஆசிரியரும் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் குத்துச் சண்டையில் தேர்ந்தவர். இளைஞர்களுக்குக் குத்துச் சண்டைப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் தாக்கத்தால், டாக்டர் கே-வும் குத்துச் சண்டை பயின்றார். ஆனால், லைட் வெயிட் பிரிவில்.

பல கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் டாக்டர் கே பதக்கங்கள் வாங்கி, கிட்டத்தட்ட சார்பட்டா ரேஞ்சுக்கு இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். அன்று புரசைவாக்கம் சென்னையின் குத்துச்சண்டை வீரர்களின் கோட்டையாக இருந்தது. முக்கியக் காரணம், ஆங்கில-இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்பதால் அதன் தாக்கம் கண்கூடாக இருந்தது. மகாகவி பாரதி, சுரேந்திர ஆர்யாவை புரசைவாக்கத்தில் சந்தித்ததை செல்லம்மா விவரித்திருப்பார்- எப்படி ஆரியாவின் வீட்டில் வெள்ளைக்காரத் தோரணையில் உணவு பரிமாறப்பட்டது, அவர் எப்படிக் கிறிஸ்தவர்களைப்போல மாறியிருந்தார் என. அப்படி, வெள்ளையர்களின் விளையாட்டுகளும், நடையுடை பாவனைகளும் மிகுந்திருந்த இடத்தில் கே-வும் இருந்ததனால், அவற்றில் சில அவரிடம் படிந்தன.

அடுத்து, வெள்ளையர்களின் விளையாட்டான கிரிக்கெட். டாக்டர் கே. அதிலும் சிறந்து விளங்கினார். சென்னை முதல் பிரிவு (பர்ஸ்ட் டிவிஷன்) அணியில் விளையாடினார். நல்ல தொடக்கப் பந்து வீச்சாளர். லெக் ஸ்பின்னர். இவருடன் அன்று விளையாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்– ஜெமினி கணேசன், ஆர்.டி. பார்த்தசாரதி, பாலு அழகண்ணன், சி.டி.கோபிநாத், கண்ணாயிரம் போன்றோர். சிலர் இவருக்கு எதிர் அணியில் இருந்தனர். சிலர் இவர் அணியில் இருந்தனர். கால்நடை மருத்துவக் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவராக டாக்டர் கே இரண்டு மூன்று வருடங்கள் இருந்தார்.

இவர் ஒரு சவுத் பா. அதாவது, இடது கை ஆட்டக்காரர். என்ன, தொடர்ச்சியாக விளையாடிப் பெயர் பெற முடியாமல், யானைகளின் பால் அவர் கவனம் திரும்பிவிட்டது. இது மட்டுமில்லாது, தடகளப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். தொலைத்தூரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அவர் கால் படாத விளையாட்டே இல்லை எனலாம். படிப்புடன், இதுபோன்ற திறமைகளும் கொண்ட அவருக்கு நல்ல பெயர் இருந்ததில் வியப்பில்லை. குறிப்பாக மந்திரமூர்த்தி, இவரிடம் பெரும் அன்பு கொண்டிருந்தார். பின்னாட்களில், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக இருந்தபோதும் நல்ல அணுக்கத்துடன் பழகி வந்தார்.

விளையாட்டில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக டாக்டர் கே-வின் தலைமைக் குணங்கள் நன்கு வளர்ந்ததோடு, பலதரப்பட்ட மனிதர்களுடன் இணைந்து பணி புரியும் பாங்கைக் கற்றுக் கொடுத்தது. உதாரணமாக, குத்துச்சண்டை தனி வீரர் விளையாட்டு என்றாலும், அதில் பங்கேற்கும் வீரர்களின் நடையுடை பாவனைகள் கிரிக்கெட் வீரர்களைப்போல இருக்காது. சற்று முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால், போட்டியிடும் தீவிரம் ஒரே போலத்தான் இருக்கும். ஆனால், இருவரிடம் பழகும் விதம் மாறுபடும். இது வாழ்க்கையில் பல வித மனிதர்களைக் கையாள பயன்பட்டது. யானைகளைப் பிடிப்பது, பழக்குவது போன்ற வேலைகள் குழு முயற்சி. அதற்குப் பணியில் இருந்த அனைவரும் தங்கள் பணியை நன்கு அறிந்திருப்பதொடு, மற்றவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதை டாக்டர் கேவால் எளிதில் செய்ய இயன்றதற்கு விளையாட்டில் அவருக்கு இருந்த திறமை பெரிதும் பயன்பட்டது.

இப்படி நான்கு வருடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கிய பின், டாக்டர் கே. ஆந்திராவில் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது முதல் பணி நியமனம் கதிரியில். அது அவர் தந்தை வைத்தியனாதன் பணிபுரிந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்தது, ஒரு தற்செயலான நிகழ்வே! அந்த இடம் ஆந்திரா, கர்நாடகா எல்லையருகே அமைந்திருந்தது. எப்படி சித்தூர் இருக்கிறதோ அதுபோல. அவரின் பன்மொழிப் புலமை இந்த நியமனம் காரணமாக மேலும் மெருகேறியது.

எல்லா வைதீகக் குடும்பங்களில் உள்ள வழக்கத்தைப்போல, இவர் வீட்டிலும், உடனே (1953-ல்) திருமண ஏற்பாட்டைச் செய்தனர். பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது, அடுத்தது கல்யாணம்தான் என்ற பழங்கால மரபுப்படி டாக்டர் கேவுக்கு லக்னோவில் குடிபெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்ணை நிச்சயம் செய்தனர். அவர்கள் குடும்பம் அதற்கு முன் லஹோர், டெல்லி ஆகிய இடங்களில் இருந்தது. ஆக, டாக்டர் கேவின் மனைவியும் பல மொழிகள் தெரிந்தவர்தான். அவர் பெயர் சரஸ்வதி.

அதன்பின் மொழிவாரி மாநிலங்கள் காரணமாக, மதராஸ் ராஜதானி, நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, டாக்டர் கேவும் அவரது தந்தையாரும் மதராஸ் மாநிலத்தில் பணி நியமனம் பெற்றனர். டாக்டர் கே, மதுரை அருகே கம்பத்திற்கு 1953-ல் மாற்றப்பட்டார். கம்பத்திலும் தேனியிலும் அவர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். அதே ஆண்டு திருமணமும் நடைபெற்றது. இந்த இளம் தம்பதியர் தங்கள் திருமண வாழ்க்கையை இனிதே கம்பத்தில் தொடங்கினர்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் நாம் இப்போது பயணிக்கிறோம். திரு.வைத்தியநாதன், டாக்டர் கேயின் தந்தை. ஒரு மாவட்ட விவசாய அதிகாரி. அந்தக் காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் கிடையாது. காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில், நான்கு ராஜதானிகள் மாத்திரமே உண்டு. கிழக்கு (கொல்கத்தா); வடக்கு (டெல்லி); மேற்கு (மும்பை); மற்றும் தெற்கு (மதராஸ்) என மொத்த இந்தியாவும் அடக்கப்பட்டுவிட்ட காலம். இதன் காரணமாக இந்த நான்கு பெரிய நகரங்களும் உயரிய இடத்தைப் பெற்றிருந்ததோடு, கல்வியிலும் சிறந்து விளங்கின.

திரு. வைத்தியநாதன், மதராஸ் ராஜதானியின் கீழ் அனந்தப்பூர், பெல்லாரி, பெனுகொண்டா, காதிரி, ஊட்டி, குன்னூர், கோவை, ஆடுதுறை, சாத்தூர் என மூன்று மாநிலங்களில் (தற்போதைய வரையறைப்படி) உள்ள ஊர்களில் பணி புரிந்தார். எனவே, டாக்டர் கேயின் பள்ளிப் படிப்பு பல இடங்களில் இருந்தது. ஓர் இடத்தில்கூட வெகு காலம் நிலைத்திருந்ததில்லை. காரணம், அவர் தந்தைக்கு அடுத்த மாற்றல் தயாராகிவிடும். அப்படி மாற்றல் நேரவில்லை என்றால், குடும்பச் சூழல் காரணமாக அல்லது மாற்றல் ஆன இடங்களில் பள்ளிகள் சரியான நிலையில் இல்லாததால், டாக்டர் கே, தன் மாமன், சித்தப்பா உள்ளிட்ட மற்ற உறவினருடன் தங்கிப் படிக்க நேரிட்டது.

மற்றொரு முக்கியக் காரணம், அன்று கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக நடைமுறையில் இருந்தன. இப்போதுபோல, தனிக்குடித்தனங்கள் கிடையாது. ஏனெனில், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாகக் குறைந்தது நான்கிலிருந்து எட்டுக் குழந்தைகள் இருப்பர். அன்றைய நிலை அறிந்தவர்களுக்கு இது தெரியும். எனவே, அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளப் பெரியவர்கள் தேவை. அதற்குச் செலவில்லாத வழிமுறை, கூட்டுக் குடும்பம்தான். எப்போது நாம் இறப்பை மருத்துவ வசதி கொண்டு தள்ளிப்போடத் தொடங்கினோமோ, அப்போதிருந்து மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இறப்பும் பிறப்பும், சம நிலையில் இருக்கும்வரை மக்கள் தொகைப் பெருக்கம் எல்லை மீறாமல் இருந்தது. சரி, அது வேறு கதை. இப்போது டாக்டர் கேயின் கதைக்கு வருவோம். அவரது வீட்டிலும் இதே நிலைதான். அவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவர்தான் முதல் குழந்தை. இவர் பிறந்த நாள் ஜூன் 6, 1929. எப்போதும் வீட்டில் திருவிழாபோலக் கூட்டம்தான். இதுவும் ஒரு காரணம், அவர் பிறர் வீட்டில் இருந்து படிக்க நேர்ந்ததற்கு. வீட்டுச் சூழ்நிலை சற்று முன்பின் இருக்கும்போது படிப்பைப் பாதிக்கக் கூடாது என்று அவரைப் பல இடங்களில் தள்ளியது.

இதனால் நேர்ந்த நல்ல விஷயம், டாக்டர் கேவுக்கு எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் சிறந்த பாண்டித்யம் கிடைத்தது. அவருடன் பழகிய பலரும் இந்த உண்மையை மிகவும் சிலாகித்துச் சொல்வார்கள். ஓரளவு ஹிந்தியும் தெரிந்ததால், அவருக்கு எந்த வனத்துறை அதிகாரியிடமோ அல்லது வேறிடங்களிலோ, மொழியின் காரணமாகத் தடை இருந்ததில்லை. கிட்டத்தட்ட எல்லோரிடமும் அவரவர் தாய்மொழியில் பேசும் திறன் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால் ஓர் உடனடி அணுக்கம் அவருக்குக் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் பயிர்ச் சேதம் செய்த யானைகளைப் பிடிக்கச் சென்றபோது மொழிப் பிரச்னை இங்கிருந்து (தமிழகத்திலிருந்து) சென்ற யாருக்கும் வரவில்லை. காரணம், டாக்டர் கேயின் சரளமான தெலுங்கு மொழிப் புலமைதான். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசி, குறைகளைக் கேட்டறிந்து, அதை அதிகாரிகளிடம் சொல்லி இழப்பீட்டுக்குச் சிபாரிசு செய்தார். அதேபோல உடற்கூறு ஆய்வுக்கு வரும் ஹனுமந்துவிடம், எந்த உடலுறுப்பை எடுக்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்று கன்னடத்தில் பேசிக் காரியத்தை முடிப்பார். காரணம், ஹனுமந்துவின் தாய் மொழி கன்னடம்.

அதேபோலக் கூட்டுக் குடும்பக் காலத்தில், இவரது குடும்பம், மாறுதல்கள் காரணமாக ஒரு தனிக் குடித்தனமாகவே இருந்தது. ஏனெனில், பெரியவர்கள் வந்து தங்கும் அளவிற்கு ஓர் இடத்தில் தொடர்ச்சியாக இருந்ததில்லை. இதனால், இவர் தன் தாயின் பிரசவக் காலங்களில்கூட உடன் இருக்கும் சந்தர்ப்பங்களும் வாய்த்தன. பெரியவர்கள் வந்து உதவ இயலாத அல்லது தாயார் ஊருக்குப் போக இயலாத சமயங்களில், மூத்த மகனாக இவருக்குக் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு இருந்தது. அதனால் சமையல் போன்றவற்றை எடுத்துச் செய்யவும் நேர்ந்தது.

கிட்டத்தட்ட ஒரு second in charge போல! இதன் விளைவு, சமையலிலும் இவர் கை தேர்ந்து விளங்கினார். அவருடன் பணி புரிந்தவர்கள், டாக்டர் கேயின் நளபாகத்தைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. முனைவர் ஏஜேடி ஜான் சிங் பல முறை என்னிடம் டாக்டர் கேயின் சமையல் கலை தேர்ச்சியைப் பற்றிக் கூறி இருக்கிறார். பல ஆராய்ச்சியாளர்கள் அவரது சமையலின் நேர்த்தியை வியந்து பாராட்டி இருக்கின்றனர். இப்படி ஒரு பின்னடைவை, சோர்வடையச் செய்யும் வேலையைக் கலையாக மாற்றும் திறன் டாக்டர் கேவுக்கு இருந்தது. ‘அவர் வைக்கும் சாம்பார் நம்மை அடிமை ஆக்கி விடும்’ என்று அஜய் தேசாய் அடிக்கடி சிலாகிப்பார்.

ஐந்தாம் வகுப்பு வரை பெற்றோர்களிடம் இருந்து படித்த அவர், அடுத்த மூன்று வருடங்கள் சென்னையில் சித்தப்பாவின் வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் குன்னூரிலும், இன்டர்மீடியட் மீண்டும் பாட்டி வீட்டிலும் இருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். இப்படிப் பல இடங்களில் மாறி மாறிப் படித்தும் அவர் படிப்பில் சோடைபோக வில்லை என்பதுதான் வியப்பு. மீளுந்தன்மை என்பதன் நிதரிசன உதாரணம் டாக்டர் கே.

இவர் மிகச் சிறிய வயதில், ஒரு பூனைக் குட்டியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அதைக் குளிப்பாட்டலாம் என்று முடிவு செய்து, தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி விட்டார். அந்தப் பூனைக்குட்டி மூச்சுத்திணறி இறந்து விட்டது. அதைக்கண்ட அவரது தாயார் டாக்டர் கேவைக் கடுமையாகத் தண்டித்தார். அவரது தந்தை அது அளவு கடந்த அன்பால் விளைந்த செயல் என்று உணர்ந்து, ‘நீ கால்நடை மருத்துவர் வேலைக்குத்தான் லாயக்கு’, என்று திட்டினார். பின்னாட்களில் அவர் இதை அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. ‘எந்த நேரத்தில் சொன்னாரோ அதே போல ஆகி விட்டது’, என்று.

இன்னொரு வியக்கத்தக்கக் குணம், இசையில் அவருக்கிருந்த ஈடுபாடு. இசை விற்பன்னர்கள்போல் பிரமாதமான ஞானம் என்று கூற இயலாவிட்டாலும், ராகங்களைக் கண்டறியும் திறன் அவரிடம் இருந்தது. பல கீர்த்தனைகளைப் பாடும் திறனும் புரிந்துகொள்ளும் திறனும் அவரிடம் இருந்தது. அதேபோல், ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையிலும் அவருக்கு நல்ல அறிவு இருந்தது. இதற்கு அவரது தாய் வழி முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. தாய் நல்ல பாடகி; தாத்தா சங்கர நாராயணன் சிறந்த வயலின் வித்வான். பல நண்பர்கள் திரு.கேயின் ராகங்களைக் கண்டறியும் திறன்பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். மற்றொரு விஷயம், பாரம்பரியமாக வாழும் பிராமணக் குடும்பங்களில் இசை என்பது அவர்கள் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அடிப்படையான சில திறமைகளைக் கொண்டிருப்பார்கள். அதனால், இவர் இசை ஞானம் உடையவராக இருந்ததில் வியப்பில்லை. அதேபோல இறை நம்பிக்கை அவர் தாயாரிடம் இருந்து வந்தது. அவர் சொல்வார், ‘என் தாய் எனக்குக் கடவுள் நம்பிக்கையைக் கற்றுக் கொடுத்தார். என் தாய்க்குத் திருமணம் ஆகும்போது 14 வயது. நான் பிறக்கும்போது அவளுக்கு வயது 15. அவளுக்கு நான் ஓர் இளவரசன். ஐந்தாவது வரை மட்டுமே படித்த அவளுக்கு 3 மொழிகளில் சரளமாகப் பேச எழுத வரும்’ என்று.

மற்றொரு போற்றத்தக்க அம்சம், அவரது பரந்துபட்ட விஷய ஞானம்! அவரது தொழிலைச் சார்ந்து மட்டுமல்லாது, பலதரப்பட்ட துறைகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பார். ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் அவரது அறிவு வியக்கத்தக்கது. எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். இதன் விளைவாக, அவரது எழுத்தாற்றல் ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாக இருந்ததுடன், சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும், அழகாகவும் சொல்ல இயன்றது. முனைவர் பட்டம் படிக்கும் பல மாணவர்களிடம், எழுத்தாற்றல் குறித்து அவர் எடுத்துரைப்பார்.

டாக்டர் கேவின் மற்றொரு சிறந்த பண்பாக எல்லோரும் சொல்வது, அவரது பழகும் விதமும் தன்மையும். நிர்வாக நோக்கில் கடைநிலை ஊழியரிடம் இருந்து முதன்மை வனப் பாதுகாவலர் வரை ஒரே மாதிரி அன்புடன் பழகும் குணம்தான் இன்றும் அவரை ஓர் ஆதர்ச மனிதனாக, தலைவனாக, யானைப் பாகன்களுக்கு மத்தியிலும், யானை ஆய்வாளர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் நிலை நிறுத்தி இருக்கிறது. கால்நடை ஆய்வாளர் மணி, வெளிநாட்டுக் கால்நடை மருத்துவர் கிரிஸ் வெம்மர் சொல்வதுபோல் பாகன்கள், காவடிகளிடம் அவர் எப்படித் தோளில் கை வைத்துப் பேசுவார் என்று கூறுவதைப் பார்க்கும்போது இது விளங்கும். இதற்கான பயிற்சியும் மனமும், அவரது குடும்பத்தில் கிடைத்தது. ஏனெனில், அத்தனை சகோதரச் சகோதரிகளுடன் வாழும்போது, விட்டுக் கொடுப்பதும், பொறுப்புடன் உதவுவதும், பொறுப்பை எடுத்துக் கொள்வதும், தன்னைப்போல வந்து விடும். எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை இயல்பாக வந்துவிடும். நாங்கள் டாப்ஸ்லிப் சென்றபோது அங்கிருந்த பாகன்கள் கண்கள் பனிக்க டாக்டர் கேவைப் பற்றி இன்றும் நினைப்பதில் (25 ஆண்டுகளுக்குப் பின்!) வியப்பில்லை. அவரிடத்தை நிரப்ப வேறொருவர் இல்லை என்பதை அவ்வளவு எளிதில் மறுக்க முடியவில்லை. மிதுனபூரில், மொழி அறியாத இடத்தில் பல மாதங்கள் தங்கி, பணியில் ஈடுபட்ட பாகன்கள் எப்படி டாக்டர் கே அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவினார் என்பதை இன்றும் சொல்லி மகிழ்ந்தனர். Elephant Men என்ற ஆவணப்படம் அந்த வாழ்வை நன்கு எடுத்துரைக்கும்.

இப்படிப் பல கஷ்டங்களுக்கு இடையில் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பை நோக்கி அடி எடுத்து வைத்தார். அன்று சென்னையில் மட்டும்தான் பொறியியல் கல்லூரி, அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில். எனவே, இவரது மதிப்பெண்களுக்கு, (நல்ல விதம் என்றாலும் போட்டியில் வெல்லத் தக்கவை இல்லாததால்) பொறியியல் கிடைப்பது கடினமானது. ஆகவே சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்தார். அதற்குள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. வேதியியலுக்கு இது மேல் என்று உடனே சேர்ந்துவிட்டார். அது பின்னாட்களில் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது என்று அவருக்கும் தெரியாது; யானைகளுக்கும் தெரியாது.

இந்தப் படிப்பையும் அவர் புரசைவாக்கத்தில் இருந்த தனது மற்றொரு சித்தப்பாவின் வீட்டில் இருந்துதான் படித்து முடித்தார். All those who wander are not lost என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, அவர் இத்தனை அலைச்சல்களுக்கிடையிலும், தனது குறிக்கோளான படிப்பை விடவில்லை; வாழ்விலும் தொலையவில்லை. மாறாக, வனக் கால்நடை மருத்துவர்களுக்கிடையே ஒரு ஜாம்பவான் என்று போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தார். யானை டாக்டர் என்ற அடைமொழியுடன் யானைகளைப் பற்றிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். அதற்கான உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது விவாதிக்கத்தக்கது, ஆனால் இங்கு அதற்கு இடமில்லை.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அவரது கணுக்கால் தண்டவாளத்திற்கும், ஸ்லீப்பர் கட்டைக்கும் இடையில் சிக்கி, கணுக்கால் எலும்பு முறிந்து, கால் நடக்க இயலாமல் போனது. நல்லவேளையாக அவரது நண்பர்கள் சிலர், அருந்தவசெல்வன் போன்றோர் ரயிலடியில் இருந்ததால், உடனே அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இருக்க வேண்டியதாயிற்று. காரணம், தகடுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவுகளைச் சரி செய்யும் முறை அப்போதுதான் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் வந்திருந்தது. இவருக்கோ கணுக்கால் எலும்புகள் நொறுங்கி இருந்தன. புதிய முறை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவர்கள் குறைவு. எனவே சிகிச்சைக் காலம் நீண்டது. கிட்டத்தட்ட மே மாதம்தான் அவர் வீடு திரும்பினார். காலில் கட்டுடன், ஜூனில் பணிக்கு வரத் தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் மாவுக்கட்டு விலக்கப்பட்டு கிரீப் எனப்படும் துணிக்கட்டுடன் நடமாடிக் கொண்டிருந்தார். ஆயினும், முழு ஆரோக்கியத்துடனோ, நடக்கக்கூடிய நிலையிலோ அவர் இருந்தார் என்று சொல்ல முடியாது. சற்று விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.

மதம் கொண்ட யானையின் அருகில் சென்று சிகிச்சை அளிப்பது எந்த அளவிற்கு உசிதம் என்பது கேள்விக்குறிதான். அசம்பாவிதம் இல்லாமல் செயல்பட முடியுமா என்பதும் சொல்ல முடியாத நிலை. ஆயினும், அதனைத் தன்னுடைய தலையாயக் கடமை என்றெண்ணி, திருச்சிக்குக் கிளம்பினார். இதுதான் தொழிலை ஊதியத்திற்காகச் செய்பவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு!

மற்றொரு முக்கியமான விஷயம், அந்தக் காலகட்டத்தில், துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தும் முறை இல்லை. எனவே, யானையை நெருங்காமல் தொலைவிலிருந்து பாதுகாப்பாக மயக்க மருந்து செலுத்த முடியாது. கட்டாயம் சற்றேனும் அருகில் சென்றுதான் ஆக வேண்டும். அவரது கால் இருந்த நிலையில், அது எவ்வளவு ஆபத்தானது என்று நான் சொல்லத் தேவையில்லை. யானை வெகுண்டு திரும்பினால், இவரால் ஓட முடியுமா? ஆயினும், அவர் மாலையில் செய்தியும் பணிக்கட்டளையும் கிடைத்ததும் புறப்பட்டு விட்டார், திருச்சிக்கு. அப்போது நடைமுறையில் இருந்த ஊதுகுழல் (புளோ பைப்) மற்றும் 3 டோஸ் மயக்க மருந்துகளுடன்.

அந்தக் காலகட்டத்தில் காட்டு மிருகங்களுக்கு மயக்க மருந்து பயன்பாடு டாக்டர் கே அவர்களால்தான் தொடங்கப்பட்டது. அதுவரை ஊதுகுழலால்தான் மயக்க மருந்து செலுத்தப்படும். ஏனெனில், காட்சிச் சாலையில் இருக்கும் விலங்குகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும்தான் கால்நடை மருத்துவர்கள் இந்த முறையில் மயக்க மருந்து தருவர். காட்டு விலங்குகளுக்கு மயக்க மருந்து தந்து பிடிப்பதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ யாரும் அறியாத ஒன்று.

அன்றைய நடைமுறைப்படி, இந்த மயக்க மருந்தை வாங்குவதற்குப் பெரும் பாடு பட வேண்டும். மாவட்ட வன அதிகாரி சிபாரிசு செய்து அரசுக் கிடங்கில் மருந்தாளுநர் பரிந்துரைத்தால்தான் ஒரு டோஸ் மருந்து கிடைக்கும். அந்த அளவிற்குக் கட்டுப்பாடுகள். சிவப்பு பட்டை நடைமுறைகள். இவற்றுக்கிடையில், அந்த 3 டோஸ் மருந்திலேயே காரியத்தை முடிக்க வேண்டும். இல்லையேல், மறுபடி இந்த நடைமுறையை முதலில் இருந்து திரும்பத் தொடங்க வேண்டும். அதற்கு மேலும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகள் நிறைந்த காலத்தில் அவர் பணியாற்றியதே ஒரு பெரும் சவால்தான். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல், விலங்குகளின் நலனுக்காக அவர் செயல்பட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இன்றுபோல எல்லா வசதிகளுடன் (போக்குவரத்து, மருந்துகள், துப்பாக்கி) ஒரு படையுடன் (!) சென்று ஒரு விலங்கை மயக்கமடைய (டார்ட்) செய்வதுபோல் அல்ல அன்று!

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தபோது, ஏறக்குறைய இரவு ஒரு மணி. அதாவது அடுத்த நாள் புலர்காலை. டாக்டர் கே அந்த இடத்தையும் சூழலையும் உன்னிப்பாக நோக்கினார். யானை எவ்வாறு நடந்து கொள்கிறது என்று தாற்காலிகத் தடுப்புகளுக்கு வெளியே நின்று அவதானித்தார். அது ஒரு திறந்த வாசல் கொண்ட தென்னந்தோப்பு. வாயிலின் எதிர்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் உயரமான மண்கரை. திறந்த வாயில் தற்போது கட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுவிட்டது; அந்தத் தடுப்பை ஒட்டி வசந்த மண்டபத்தின் மதில் சுமார் அரை கிலோமீட்டர் நீண்டு கிடந்தது. மதிலிலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் யானையைக் கட்டும் மேடை இருந்தது. தடுப்பின் மற்றொரு முனையில் அஹோபில மடத்தின் ஒரு சிறிய கோவிலும் மண்டபமும். மற்றொரு புறம் நந்தவனமும் அடுத்த தெருவில் உள்ள வீடுகளின் புழக்கடை சுவர்களும். தோப்பினுள் யானை தனியாக, சங்கிலி அனுமதிக்கும் அளவு சுற்றி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் அருகே (சுமார் 20 அடி தூரம் தொலைவில்) வந்து சற்று நிற்பதை ஒரு சடங்காகச் செய்து கொண்டிருந்தது. சுற்றிலும், முன்பே சொன்னது போல, விளையாட்டு மைதானங்களில் பொருத்தும் பெரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு அந்தத் தோப்பைப் பிரகாசமாகப் பகல் போல வைத்திருந்தன.

அங்கிருந்த பாகன்களிடம் சற்று அளவளாவினார். யாரெல்லாம் இந்த யானையைப் பிடிக்க முடியும் என்று ஆழம் பார்த்தார். அவர்களது மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். யாரும் யானை அருகில் போகத் தயாரில்லை என்று அறிந்தார். யானைகளை மிகச் சாதுரியமாகக் கையாளும் பல பழங்குடிப் பாகன்களிடம் பழகிய அவருக்கு இந்தக் கோவில் யானைகளின் பாகன்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர். கோழிக்கமுத்தியிலும் முதுமலையிலும் உள்ள பழங்குடிப் பாகன்கள் யானையை அவர்களது வீட்டு அங்கத்தினர்போல வைத்திருப்பர். அந்த முகாம்களுக்குப் போனவர்களுக்குத் தெரியும், அந்தப் பாசப் பிணைப்பு. ஆனால் இங்கு நிலைமை சற்று வேறு விதமாக இருந்ததை உணர்ந்தார். அங்கு கையாளும் முறைகள் இங்கு செல்லாது என்று அறிந்தார். முற்றிலும் அவரை நம்பி இந்தச் செயல்பாடு உள்ளது என்று உணர்ந்தார். ஆகவே, இவர்களது பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அறிய அவருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. மேலும், அவர் கையாளப்போகும் நடைமுறை, யானை மயக்கம் அடையும் வரை அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதனால், தெளிவாகத் திட்டமிட்டு காரியத்தில் இறங்கத் தீர்மானித்தார். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

‘இந்த வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் மேலே ஏறுவதற்கு ஏதாவது படி அல்லது வழி இருக்கிறதா?’ என்று கேட்டார். உடனே மடத்துக்காரர்கள், ‘வழி இருக்கிறது, படிகள் வழியாக மேலே போகலாம்’ என்றனர். டாக்டர் கே, ஊதுகுழலும் மயக்க மருந்து குப்பிகளும் அடங்கிய தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த வழியைக் காட்டச் சொன்னார்.

மெதுவாக, கிரீப் கட்டு போட்ட காலுடன், சிரமப்பட்டு மற்றவர்கள் உதவியுடன் மதில் மேல் ஏறி, அந்தக் காலுக்குப் பெரும் அழுத்தம் தராதவாறு வசதியான ஓர் அமரும் நிலையைத் தெர்ந்தெடுத்தார். ஏனெனில், அப்போதுதான் முழு பலத்தில், ஊதுகுழலில் மருந்தை வைத்துச் செலுத்த முடியும். மருத்து செலுத்துவதற்கு நல்ல சீரான சமநிலையும் கிடைக்கும். ஊதும் போது நிலை தடுமாறாமலும் இருக்க முடியும். அப்படியே அமர்ந்துகொண்டு, ஒருமணி நேரம் யானையின் நடையுடை பாவனைகளைக் கவனித்தார். மதிலின் அருகில் வந்தால் சில நிமிடங்கள் நிற்பதை யானை கிருஷ்ணன் வழக்கமாகக் கொண்டிருப்பதை அனுமானித்தார். அந்த நிலையில் யானைக்கு ஊதுகுழல் வழியே மயக்க ஊசியைப் போடுவது நல்லது என்று சரியாக அனுமானித்தார். அதற்கேற்ப மருந்தைக் குழலில் நிரப்பினார். யானை மறுமுறை மதிலருகே வரும் நேரத்திற்குத் தயாராக இருந்தார். பார்ப்பவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவ்வளவு பெரிய யானையை ஊதுகுழலால் மயக்கம் அடையச் செய்ய முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தனர். யானை மற்றொரு முறை தனது சுற்றை முடித்து மதிலருகே வந்து நின்றது. ஆச்சரியகரமாக, மக்கள் டாக்டர் கே. கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பெரும் குழப்பம் விளைவிக்காமலும், சத்தம் போடாமலும் அமைதியாக இந்த வித்தியாசமான நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

யானை கிருஷ்ணன் வந்து மதிலுக்குச் சுமார் 20 அடி தொலைவில், சற்றே பக்கவாட்டில், நெற்றியைக் காட்டியவாறு நின்றது. அப்போது அதன் நெற்றி தெளிவாக விளக்கொளியில் தெரிந்தது. மருத்துவர் கே, முழுப் பலத்தையும் பிரயோகித்து மயக்க ஊசியைக் குறி வைத்து ஊதினார். சேஷாத்திரி சொன்னதுபோல, ‘ஊப்ப்’ என்ற அந்தச் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. மயக்க ஊசி, மருந்துடன் சரியாக நெற்றிப் பொட்டில் தைத்தது. யானை சற்று உதறி ஆடியது. ஆனால் பெரிதாக எந்த அசைவையும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் யானை தள்ளாடி நடந்தது. டாக்டர் கே, உடனே அங்கிருந்த மாவுத்தர்களை உள்ளே இறங்கி யானையைச் சங்கிலி கொண்டு பிணைக்குமாறு கூறினார். அதற்காகக் காத்துக் கொண்டிருந்ததுபோல நான்கைந்து பாகன்கள் உள்ளே தடுப்பைத் தாண்டி ஓடிச் சென்றனர். டாக்டர் கே.வும் மெதுவாக மதிலிலிருந்து இறங்கி, மற்றவர்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்றார்.

ஏனெனில், யானை ஆஜானுபாகுவான ஒரு கொம்பன். சுமார் 10 அடி உயரமும், நல்ல வலுவான உடலும், நீண்ட கொம்புகளும் உடைய முரட்டு யானை. சில நேரம் இந்த ஒரு டோஸ் போதாமல் போனால், மாவுத்தர்களுக்குப் பிரச்சினை ஆகலாம். அதனால் இன்னொரு டோஸையும் எடுத்துக் கொண்டு டாக்டர் கே பின் தொடர்ந்தார். நினைத்ததுபோல யானை முற்றிலும் அடங்கவில்லை. பாகன்கள் சற்றுத் தொலைவிலேயே நின்று விட்டனர். அதற்குள் டாக்டர் கே யானையின் பின்னால் சற்றுத் தொலைவில் பாதுகாப்பாக நின்று இரண்டாவது ஊசியை அதன் பின் பகுதியில் செலுத்தினார். மிக வேகமாக, அதே நேரம் சரியானபடி செயல்பட்டு இரண்டு டோஸ் மருந்தையும் டாக்டர் கே செலுத்தியிருந்தார். யானை மேலும் தள்ளாடத் தொடங்கியது. பின் மயங்கி நின்றது. அதன் பின், எளிதாக யானையின் அருகே பாகன்கள் செல்ல முடிந்தது. பயமின்றிப் பணி செய்யத் தைரியம் கொண்டனர்.

ஒரு யானையை, மயக்கத்தில் நின்ற நிலையில் வைக்க மிகத் தீவிரமான அளவு மருந்தைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஜைலோ சீன் போன்ற மருந்து, யானையின் செயல்களைக் கட்டுப்படுத்தி நின்ற நிலையிலேயே வைக்கும் தன்மை வாய்ந்தது (குறைந்த அளவுகளில்). யானையை இடம் மாற்ற அல்லது வேறு சில சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் கூடுதலான அளவில் மருந்தை உபயோகிக்க நேரிடும். ஏனெனில், அப்போதுதான் நினைத்ததுபோல காரியத்தைச் செய்ய இயலும். அதற்கான நேரமும் கிடைக்கும். அதன் பின்னர், யானையை நிலைக்குக் கொண்டு வர மற்றொரு மருந்தைப் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கு ரிவைவல் டோஸ் என்று பெயர். இங்கு, அதுபோலச் செய்ய நேரவில்லை என்று அனுமானிக்கிறேன்.

காரணம், இங்கு நோக்கம் யானையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான். வெகு நேரம் சிகிச்சை அளிப்பது அல்ல. எனவே டாக்டர் கே, யானையை அவர்கள் சங்கிலி கொண்டு பிணைக்கும் வரை, சிறிய கால அவகாசத்திற்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்து இருப்பார் என்று தோன்றுகிறது. நமக்கு எப்படி மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை முடிந்ததும் சில மணி நேரங்களில் நாம் மீண்டும் சுய நினைவு அடைகிறோமோ, அதுபோல. இதை நான் டாக்டர் கே-யுடன் 25 ஆண்டுகள் கால்நடை ஆய்வாளராகப் பணி புரிந்த மணி என்பவரிடமும், டாக்டர் மனோகரனிடமும் (மற்றொரு சிறந்த கால்நடை வைத்தியர்) ஊர்ஜிதம் செய்து கொண்டேன். எப்படியாயினும் பாகன்கள் கிருஷ்ணனை முன்கால், பின்கால் என நான்கு கால்களையும் சங்கிலி கொண்டு பிணைத்துவிட்டனர். இனி, யானை தன் இஷ்டம்போல எங்கும் செல்ல முடியாது. இந்தக் கிருஷ்ணன், அதன் பின் சில வருடங்கள் கழித்து திருவள்ளூர் கோவிலுக்கு அனுப்பப்பட்டது என்பது வேறு கதை.

இந்த நடவடிக்கை முடிவு பெறும்போது விடிந்துவிட்டது. அன்று அங்கிருந்தவர்கள் மட்டும்தான், இது எப்படிப்பட்ட ஒரு தீரச் செயல் என்று அறிவார்கள். ஒரு முரட்டுக் கொம்பனை, ஊதுகுழல் கொண்டு மயக்க மருந்து செலுத்தி மயக்கம் அடையச் செய்வது எவ்வளவு சிரமமான செயல் என்பதை இந்தத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரு டோஸ் மருந்து வீண் ஆனாலோ, அல்லது குறி தவறினாலோ மொத்த முயற்சியும் பயனில்லாமல் போகும். ஊதும் திறன், குறி பார்த்தல், மருந்தின் அளவு எனப் பல செயல்பாடுகள் இங்கு கச்சிதமாக இருக்க வேண்டும்.

டாக்டர் கே ஊதுகுழல் மூலம் சுடுவதை ஒரு பயிற்சியாகச் செய்வார் என்று அவரது மகன் ஸ்ரீதர் சொல்வதுண்டு. வீட்டிலேயே ஒரு குறி அட்டை வைத்து பல்வேறு தூரங்களில் நின்று ஊதி, குறி தவறாமல் இருக்கப் பயிற்சி செய்வார் என்று விவரிப்பார். அது தன் தொழிலில் அவருக்கிருந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது. அதேபோல நான் சந்தித்த பலரும், யானையை (அல்லது எந்த மிருகத்தையும்) பார்த்த மாத்திரத்தில், அதற்கு ஏற்ற மயக்க மருந்து அளவு என்ன என்பதை உடனே கணிக்க வல்லவர் டாக்டர் கே என்ற விஷயத்தை வியப்புடன் கூறுவர். அதற்கு அடித்தளம், மிருகத்தின் உடல் எடையும் உருவமும்தான். அதனால்தான், டாக்டர் கே-வுக்கு வனத்துறையில் மற்றவர் பொறாமைப்படத்தக்க அளவில் செல்வாக்கு மட்டுமல்ல, பெரும் மரியாதையும் இருந்தது. ஆனால் அதை என்றும் அவர் தவறாகப் பயன்படுத்தியதில்லை!

இங்கு நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்- டாக்டர் கே-இன் நிலைமையைத் துல்லியமாகக் கணிக்கும் திறன்; தன் பலவீனங்களை அறிந்து செயல்படுதல்; கூட நின்று செயல்படுபவர்களை அனுசரித்து திட்டமிடுதல்; கள நிலவரத்திற்கு ஏற்ப தன் திட்டத்தை வகுப்பது; புது யுக்திகளைக் கையாளுவது; எந்த நேரத்திலும் நிதானத்தை இழக்காதது எனப் பல நிர்வாகப் பாடங்களை இந்த நிகழ்விலிருந்து நாம் அறியலாம்.

ஜீயருக்கு பரம சந்தோஷம், யானையை உயிருடன் மீட்டதில். மக்களும் நிறைந்த மகிழ்வடைந்தனர். கோவில் யானையைச் சுட்டுக் கொல்லாமல் காப்பாற்றியதற்கு. என்ன, பல வருடங்கள் கழிந்துவிட்டதால் பல நேரடிச் சாட்சிகள் உயிரோடு இல்லை. அதிர்ஷ்டவசமாக பரோடா வங்கி ஊழியர் சேஷாத்திரியும் (உள்ளூர் வாசி), பழைய பாகன் ஸ்ரீதரன் நாயரும், பாகன் ராஜேஷும் கிடைத்தனர். இவர்கள் கிடைக்க நண்பர் மாலோலன் பெரிதும் உதவினார். சில சந்தேகங்களை நண்பர்கள் மணியும் டாக்டர் மனோகரனும் தீர்த்து வைத்தனர். அதனால், இந்த நிகழ்வை மீட்டெடுக்க இயன்றது.

வருத்தமான விஷயம், அன்று எந்த நாளேடோ, பத்திரிக்கையோ இந்தச் சம்பவத்தை இப்போது நான் சொன்னது போல விவரமாக எழுதவில்லை. பெட்டிச் செய்திபோல வந்ததாகத் தகவல். அன்றைய அரசாங்கம் அல்லது வனத்துறை இதை ஒரு வீரச் செயல் என்று கருதவில்லை. எப்படி வ.உ.சி.யின் தியாகம் இன்று அறியப்படாமல் போனதோ, அதேபோல இந்த நிகழ்வும் மறக்கப்பட்டுவிட்டது. இதை மீட்டெடுத்ததில், எனக்குப் பெரும் நிறைவும் மகிழ்ச்சியும். அதைவிட மகிழ்ச்சி, உண்மையான அர்ப்பணிப்பு, தொழில் பக்தி, நேர்த்தி, ஜீவகாருண்யம், பக்கவாட்டுச் சிந்தனை, திட்டமிடல், தன்னலம் அற்ற சேவை, செயல்பாடு போன்ற சொற்களின் சரியான அர்த்தத்தை உணர வைக்க இயன்றதுதான்!

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2 appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

நாம் பல சொற்களை அதன் சரியான அர்த்தம் புரிந்து உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக அர்ப்பணிப்பு என்கிற சொல். ஒரு வேலையைச் சற்றுத் திறம்படச் செய்துவிட்டால் அதை அர்ப்பணிப்புடன் செய்தார் என்போம். அதேபோல் சமயோசிதமாகச் செய்தால் பின்னிவிட்டார் என்போம்; புதிய உத்திகளைக் கையாண்டால், பிரமாதம் என்போம். இப்படிச் சாதாரணச் செயல்களைக்கூட உயர்வு நவிற்சியாகப் பேசி, செய்தவர் ஏதோ இமாலயச் சாதனை செய்த பிரமிப்பை ஏற்படுத்துவோம். இங்கே இன்று நான் சொல்லப்போகும் உண்மைச் சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நிகழ்ந்தது.

அன்று மதம் கொண்ட யானையை அடக்க இன்றுபோல நெடுந்தூரம் சுடக்கூடிய டெலஸ்கோபிக் துப்பாக்கிகள் கிடையாது. மயக்க மருந்தை எளிதில் பெற முடியாது. கிட்டத்தட்ட எல்லாக் கால்நடை வைத்தியர்களுக்கும் மாடு, நாய், பூனை போன்ற வீட்டுப் பிராணிகளுக்கு மட்டும் வைத்தியம் பார்க்கத் தெரியும். இதில், கால்நடை வைத்தியர் காலில் அடிபட்டு நொண்டி நடக்க வேண்டிய நிலை. இத்தனை இடர்பாடுகளின் இடையில் அவர் அந்த மதம் கொண்ட யானையைப் பிடித்து அடக்க வேண்டும். இதில் அந்த யானையால் குத்தப்பட்டு ஒரு பாகன் வேறு இறந்து விட்டார். எனக்குத் தெரிந்து பல கால்நடை வைத்தியர்கள் உடல்நிலையைச் சாக்குச் சொல்லி தட்டிக் கழிக்கத்தான் பார்ப்பார்கள். இப்படி ஒரு சூழலில்தான் நம் யானை டாக்டர் அர்ப்பணிப்பு, சமயோசிதம், புதிய உத்தி போன்றவற்றைக் கையாண்டு கிருஷ்ணன் என்ற அந்த யானையைப் பிடித்தார். அதை வாருங்கள் பார்ப்போம்.

1982ஆம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மாலையில் பத்மனாப பணிக்கர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தபோது அவன் மதத்தில் இருப்பது தெரிந்தது. வலது காதுக்குச் சற்று மேலே மதநீர் வடிந்துகொண்டு இருந்தது. அதோடு அதன் மெல்லிய வாடையும் அடித்தது. சாதாரணமாக அவர், தன்னிடம் உள்ள எந்த யானையின் முன்னங்கால்களையும் பிணைப்பது கிடையாது. யானைகளுடன் பல காலம் பழகியதால், அவற்றின் குணங்களைப் பற்றியும், எதிர்வினை ஆற்றல்கள் பற்றியும் நன்கு அறிந்தவர். அதோடு எந்த யானையையும் எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் திறமையும் பெற்றவர். இதனால் அவரிடம் பெரும்பாலும் அடங்காப்பிடாரி யானைகளைத்தான் அதிகம் அனுப்புவர். அவரது 35 வருட அனுபவத்தில் அவர் ஒருமுறைகூட யானைகளால் தாக்கப்பட்டது கிடையாது என்பதோடு, அன்பினால் யானைகளை அடக்குவதில் பெயர் பெற்றவர்.

மற்ற பாகன்களைக் காட்டிலும் அவர் கொம்பன்களைத் திறமையாகக் கையாளுவார் என்ற நம்பிக்கையும் பெற்றவர். அதனால்தான், கொல்லங்கோடு மஹாரஜா அஹோபில மடத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்த இந்த கிருஷ்ணன் என்கிற கொம்பனை, பத்மனாப பணிக்கரிடம் அனுப்பிப் பார்த்துக் கொள்ளச் செய்தனர்.

இயல்பிலேயே முரட்டுக் குணம் கொண்ட கிருஷ்ணன், பணிக்கரிடம் பவ்யமாகவும் பணிவாகவும் பழகியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அவர் பெருங்குரலிலோ, அங்குசத்தாலோ அல்லது கம்பு கொண்டோ அதை நெறிப்படுத்துவது கிடையாது. அவரது கட்டைக் குரலில், ‘தா, தா’ அல்லது ‘ஆனே’ என்று அதட்டுவதோடு சரி.

அந்தத் திறந்தவெளி மேடை ஒரு பெரிய தென்னந்தோப்பினுள் இருந்தது. அந்தத் தோப்பு ஒருபுறம் வசந்த மண்டபத்தின் மதிலாலும், மறுபுறம் கொள்ளிடம் ஆற்றின் கரையாலும் தடுக்கப்பட்டு இருந்தது. மக்கள் வரும் வழி வசந்த மண்டபத்தை ஒட்டி இருந்தது. அதன் அருகே ஒரு சின்னக் கோவிலும் இருந்தது. அங்கு மடத்துக்காரர்கள் பூஜை செய்வார்கள். மற்றொரு முனையில் நந்தவனம் அதன்பின் இருந்த வீடுகளின் மதில்களால் அடைபட்டு இருந்தது. இப்படிக் கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி மிருகக்காட்சி சாலை போன்ற இடத்தில் கிருஷ்ணன் குடி இருந்தான். கோவிலுக்கோ அல்லது வசந்த மண்டபத்திற்கோ வரும் பக்தர்கள், அப்படியே கிருஷ்ணனையும் பார்த்துவிட்டு ஏதாவது தின்னக் கொடுப்பது உண்டு. ஆனால் பாகன் மூலம்தான். ஆஜானுபாகுவான கிருஷ்ணனைப் பார்த்து மகிழாதவர்களே இல்லை எனலாம்.

நீண்ட தந்தங்களும், ஒன்பது அடி உயரமும் கொண்ட கிருஷ்ணன் அன்று ஸ்ரீரங்கத்தில் ஒரு ஸ்டார் என்றால் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்த நாள் காலை அவரது உதவியாளர் கோபாலன் மேடையைச் சுற்றி சுத்தம் செய்து ஒரு நீண்ட கோல் கொண்டு யானையின் காலடியில் கிடந்த சாணத்தையும் குப்பைகளையும் அகற்றிக் கொண்டிருந்தார். பாகனின் உதவியாளர்கள், யானை நன்கு பழகிய பின்னரே அருகில் சென்று வேலை செய்வர். அதுவரை தொலைவில் இருந்துதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். காரணம், யானை சில நேரங்களில் அவர்களைத் தாக்கலாம். யானையிடம் சுவாதீனமாக பழகக்கூடிய நபர் அதன் பாகன் மட்டுமே.

பணிக்கர், மெதுவாக வந்து பார்த்தார். எப்போதும்போல யானையின் முன்கால்கள் சங்கிலியால் பிணைக்கப்படாமல் இருந்தது. அவர் எப்போதும் முன்கால்களைப் பிணைக்க மாட்டார். பின்கால்களை மட்டுமே பிணைப்பார். அவருக்கு அவரது யானையின் மேலும், தன் திறமை மேலும் அத்தனை நம்பிக்கை. அப்போது அவர் யானையின் முன்னங்கால்களைப் பிணைத்து விடுவதுதான் நல்லது என்று முடிவு செய்தார். காரணம், அந்தத் தென்னந்தோப்பிற்குள் இருக்கும் திறந்தவெளி மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் யானையைக் காண ஊர்க்காரர்களும் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் வருவதுதான். அதனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான். யானையின் முன் குனிந்து சங்கிலியை எடுத்துக்கட்ட முனைந்தார். யானை கிருஷ்ணனுக்கு என்ன கோபமோ அல்லது ஆத்திரமோ, புரியவில்லை. தனது நீண்டு பருத்த தந்தங்களால் பணிக்கரின் தோளில் குத்தித் தள்ளியது. பணிக்கர் ‘ஐயோ, ஞான் மரிச்சு’ என்று பெருங்குரலில் அலறியவாறு விழுந்தார்.

கோபாலன் உடனே ஓடி, அருகில் இருந்த ஊர்க்காரர்களைக் கூட்டிவந்து, மேடைக்குச் சற்றுக் கீழே குத்துப்பட்டுக் கிடந்த பணிக்கரை இழுத்து தூக்கி வந்து வெளியில் கிடத்தினார்.

யானை மேடையை விட்டு இறங்காமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக, ஆனால் நிலையின்றி ஆடிக்கொண்டு இருந்தது. பின் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அங்கேயே சுற்றி வந்தது. இந்த மக்களின் தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். காரணம், மதம் கொண்ட யானையின் அருகிலிருந்து பணிக்கரை வெளியே கொண்டு வர நிறையத் தைரியம் வேண்டும். மிகக் கோரமாக அவரது தோளின் வழியே குத்தி முதுகு வரை அந்தக் குத்து விழுந்திருந்தது. காலர் போன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் காறை எலும்பின் கீழ் சென்று தோள்பட்டை வழியாக ஒரு ஓட்டைபோல இருந்தது.

உடனே அஹோபில மட ஜீயருக்குத் தகவல் தரப்பட்டது. அவர் முதலுதவிக்கு ஏற்பாடு செய்து அவரைப் புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அத்துடன் தென்னந்தோப்பில் எந்தவித நடமாட்டமும் இனி வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. திறந்த வாயிலைப்பெரும் கட்டைகள் வைத்து தாற்காலிகமாக அடைத்தனர்.

பணிக்கரை யானை குத்தி கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற செய்தி காட்டுத் தீயாக, ஸ்ரீரங்கம், திருச்சி, சமயபுரம் போன்ற சுற்றுவட்ட நகரங்களில் பரவியது. மக்கள் திரளாக வரத் தொடங்கினர். எனவே, தோப்பைச் சுற்றி கட்டைகள் கொண்டு வேலி அமைத்தனர்.

எதிர்க்கரை, கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்த பெரும் மணல் சுவர். சமயபுரம், திருவானைக்கா போன்ற கோயில்களில் இருந்த யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கிருஷ்ணன் அருகில் சென்று சங்கிலியைக் கட்டத் தைரியம் இல்லை. கிருஷ்ணனின் கோபமும் முரட்டுத்தனமும் அந்த அளவிற்குப் பிரபலம். ஒன்பது அடி உயரமும், திடகாத்திரமான உடலும், நீண்ட தந்தங்களையும் கொண்ட கிருஷ்ணனிடம் யாரும் நெருங்கத் தயாரில்லை. முன்னங்கால்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்ற உண்மையும், யானை பின் கால் சங்கிலி ஒன்றைத் தளர்த்திக் கொண்டதும் அவர்களைப் பின்வாங்கச் செய்தது. மேலும், பாகன்களின் தலைவர் என்று கருதப்படும் பணிக்கரே அடிபட்டதால், எல்லோரும் மிகவும் தயங்கினர். இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் மேடையை விட்டு இறங்காமலும், எந்த ஒரு எதிர்ச்செயலும் காட்டாமலும் ஆடிக்கொண்டே இருந்தான். பணிக்கரை குத்தியது குறித்து என்ன மன நிலையில் இருந்தான் என்று யாராலும் சரியாகக் கணிக்க இயலவில்லை. அருகில் இருந்து பார்த்த ஸ்ரீதரன் நாயர் என்ற பாகனும், சேஷாத்ரி என்கிற ஸ்ரீரங்கம் வாசியும், யானை அது குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தது என்று சொன்னார்கள். இருக்கலாம். ஏனெனில், அதன் பின்னர் அதன் ஆர்ப்பாட்டம் முற்றிலும் அடங்கி விட்டது. இதற்கிடையில், பணிக்கர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட செய்தி வந்தது. மிகப்பெரிய சோகம் அஹோபில மடத்தையும் ஊர் மக்களையும் சூழ்ந்தது.

அடுத்து என்ன செய்வது என்பது பெரிய கேள்விக்குறி ஆனது. காரணம், யானையைக் கட்டாமல் வைத்திருப்பது பெரும் ஆபத்து. பாகன் இல்லாமல் யானையை வைத்திருப்பதும் இயலாது. மற்ற பாகன்கள் யாரும் துணிச்சலாக ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை; யானையோ மதத்தில் இருக்கிறது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். இப்படிப் பல வகை சிந்தனைகள்; யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. இரவில் யானை தெறிகெட்டு ஓடினால் என்ன செய்வது என்று பெரிய சர்ச் விளக்குகளைப் பொருத்தி, ஒரு கால்பந்து மைதானம்போலத் தோப்பை மாற்றினார்கள்.

சுற்றிலும் மின்விளக்குகள், கட்டைகளால் தடுப்பு. யானையைக் கட்ட ஒரு சிலர் துணிந்து சென்றபோது, யானை அவர்களை வெருட்டியது. அவர்கள் பயந்து திரும்பி வந்து விட்டனர். இதே நிலையில் யானையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்குள், தகவல் ஜில்லா கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வரை சென்றது. அவர்கள் வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். இப்படியே நீடித்தால், மதம் கொண்ட யானையால் வேறு பிரச்னை வரக்கூடும் என்று எண்ணினர். அவர்களது முடிவு, சாதாரண நிர்வாகிகளைப் போலத்தான் இருந்தது!. சட்டம், ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் யானையைச் சுட்டுக் கொன்று விடுவதுதான் நல்லது என்று அபிப்பிராயப்பட்டனர். ஜீயருக்கு அது உவப்பானதாக இல்லை. ஆனால் அவரிடம் எந்த மாற்று ஏற்பாடும் இல்லை. அதோடு எந்தப் பாகனும் இனி அந்த யானையைப் பார்த்துக்கொள்ள வரத் தயாரில்லை. இந்த நிலையில் அவர் எப்படி கலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் யானையைச் சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஆயினும், அது ஒரு பழிச் செயல், மடத்திற்கும் அவமானம் என்று கருதினார்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள கால்நடை மருத்துவர் வைத்தீஸ்வரனிடம் யோசனை கேட்கப்பட்டது. அதன்படி, வாழைப்பழத்தில் மயக்க மாத்திரைகள் வைத்து யானைக்குத் தூரத்தில் இருந்து ஒரு பெரிய கோல் மூலம் தரப்பட்டது. அதன்பின் சுமார் ஆறு மணி நேரத்திலும் ஒரு மாற்றமும் தெரியவில்லை. அப்போது அவர், ‘எனக்குத் தெரிந்து, யானைகளுக்கு வைத்தியம் பார்ப்பதில் சிறந்தவர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்திதான். அவரைக் கூப்பிடுங்கள். அவர் வனத்துறையில் இருப்பதால், திருச்சி வனத்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.

அதன்படி ஜீயர், வனத்துறையுடன் தொடர்பு கொண்டு மரு. கிருஷ்ணமூர்த்தியை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார். கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஓரிரு நாட்கள் தவணை கேட்டு மனு கொடுத்தார். அதாவது, மரு. கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியும் பலனளிக்காமல் போனால் யானையைச் சுட்டுக் கொன்று விடலாம் என்று அவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மரு. கிருஷ்ணமூர்த்தியை உடனே வரவழைக்கச் செயலில் இறங்கினார். இதற்கிடையில் ஒருநாள் போய் விட்டது. ஆச்சரியகரமாக, யானை எந்தவிதப் பிரச்னையும் செய்யாமல், அதன் இடத்தைச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. சங்கிலி தளர்ந்து வெகு நீளமாக இருந்ததால், யானையால் சற்று உலாவ முடிந்தது. ஆயினும் யாரும் அனாவசியமாக அதன் பக்கம் போகாமல், தொலைவில் இருந்தவாறே உணவு போன்றவற்றைத் தூக்கி வீசினர். முறையான அனுமதியும் பணி ஆணையும் தரப்பட்டுதானே மரு. கிருஷ்ணமூர்த்தி வர முடியும்? அதுவரை இப்படியே ஓட்டலாம் என்று எண்ணினர்! அதற்கேற்றார்போல் யானையும் பெரிய அமர்க்களத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.

திருச்சி வனத்துறை கன்சர்வேட்டர் (பாதுகாவலர்) கோவையில் இருந்த பிரதான வன உயிர் பாதுகாவலருக்குத் தகவல் தெரிவித்து மரு. கிருஷ்ணமூர்த்தியை அனுப்ப வேண்டுகோள் விடுத்தார். அவரும் ஒப்புக்கொண்டு மரு. கிருஷ்ணமூர்த்தியை ஸ்ரீரங்கம் செல்லப் பணித்தார். அன்று இருந்த வனத்துறை அமைப்பில், பிரதான வன உயிரின பாதுகாவலர் கோவையில்தான் இருப்பார். இப்போதுபோல ஐந்தாறு முதன்மை வனப் பாதுகாவலர்கள் கிடையாது. சென்னை எல்லோருக்கும் தலைமை இடமும் கிடையாது. மரு. கிருஷ்ணமூர்த்தியும் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சென்று சேவை செய்துகொண்டிருந்தார். ஜீயரும் அவரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி எப்படியாவது யானையைக் கொல்லாமல் பிடிக்க வகை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அச்சமயம், மரு. கிருஷ்ணமூர்த்தி காலில் அடிபட்டு நடப்பதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஆயினும், யானைகளின் பால் மட்டற்ற அன்பு கொண்டிருந்த மரு. கிருஷ்ணமூர்த்தி, யானையைக் கொல்வது கடைசி முடிவாக இருக்க வேண்டும் என்று நினைத்து வருவதாக ஒப்புக் கொண்டார்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1 appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல. எப்போதோ ஒருமுறை பிறக்கும் ஓர் அபூர்வ மனிதரைப் பற்றியது. எந்தப் பிழை நேர்ந்தாலும், அது அவருடைய மதிப்பையும் மாண்பையும் பாதிக்கும். இந்த நினைவே என்னைச் சற்று மிரட்டியது. உண்மைதான்! இதில் கற்பனைக்கு இடம் இல்லை என்பதோடு, எந்த இடத்திலும் அவர் மாண்பைக் குறைக்காமல் நடந்தவற்றைக் கூற வேண்டும். என்னடா, இவன் இத்தனை பெரிய பீடிகை போடுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். இங்கு வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அப்போதுதான் யானை டாக்டரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் சரியானவாறு உணரும்படி இருக்கும்!

முதலில், இந்த நிகழ்வுகள் நடந்த காலகட்டம். 1960களில் இருந்து 1998 வரையிலான நான்கு தசாப்தங்கள் என்று உத்தேசமாகக் கொள்ளலாம். அந்தக் காலங்களில், இப்போது உள்ளதுபோல தகவல்தொடர்பு சாதனங்கள் கிடையாது. குறிப்பாக, கைபேசி. டெலிபோன் வசதிகள் வந்தது 1970இன் பின்னால், சிறுகச் சிறுக, அதுவும் தரை தொடர்பு மூலம்! அருகில் உள்ள தபால் நிலையத்தில் இணைப்பு கேட்டு காத்திருந்து, வேண்டிய நபர் எதிர் முனையில் வந்த பின்தான் பேச முடியும். பல நேரங்களில், அழைப்பு கிடைக்காது.

அன்று வன உயிர் மருத்துவருக்குத் தனியாக வண்டி கிடையாது. ஏன், சரகருக்கே வண்டிகள் பிற்காலத்தில்தான் வந்தன. அன்று வண்டி டி.எப்.ஓ.வுக்கு மட்டும்தான். அதுவும் அவர் பணிபுரியும் இடத்தில்தான் இருக்கும்.  அந்த நாட்களில் யானை டாக்டருக்கு வரும் அவசரத் தகவல் எல்லாம் தந்தி / மின்தபால் மூலமாகத்தான் அனுப்பப்படும். டாக்டர் கே என்ற ஒரு தனி மனிதனுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தந்தி, மின்தபால் யாவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது என்றால் மிகையாகாது. அவசரத் தொடர்புக்கு அதுதான் தீர்வு அன்று.

அதேபோல, கால்நடை மருத்துவர் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்பர். அதுவும் தலைமை அலுவலகத்தில். அன்று அந்த அலுவலகம் கோவையில் இருந்தது. டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி)  அங்குதான் இருப்பார். தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் அவரது சேவை தேவைப்படுகிறதோ, அங்கு அவர் செல்ல தலைமை வன உயிரின காப்பாளரிடம்  அனுமதி பெற்றுச் செல்வார். எல்லோரும் த.வ.கா.விற்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கென்று வண்டி இல்லாததால், டாக்டர் கே, பேருந்தைப் பிடித்து சம்பவ இடத்திற்கு விரைவார். அங்கு வண்டி இருந்தால், அதில் போவார் அல்லது மற்றொரு பேருந்து. அதன்பின் நடை. சாதாரணமாக, அடுத்த நாள் அல்லது மூன்றாம் நாள்தான் அவர் செல்ல இயலும்.  சராசரியாக ஒரு மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் அவர் முதுமலை மற்றும் ஆனைமலை காடுகளில் உள்ள யானை முகாம்களில் இருப்பார். பெயருக்குத்தான் கோவையில் முகாம் என்ற நடைமுறை!

மேலும், 1987 வரை அவர் ஒருவர்தான் வனக்கால்நடை மருத்துவர்! இடையில், ஒருசில கால்நடை மருத்துவர்கள் வந்தாலும், அவர்கள் நிலைக்கவில்லை. அந்நாட்களில், டாப் ஸ்லிப்பிலும், முதுமலையிலும் யானைகள் முகாம் நல்ல முறையில் கிட்டத்தட்ட 80 யானைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த நேரம். அடிக்கடி போக வேண்டி நேரிடும். ஆயினும் ஒரு வண்டி கிடையாது. பின்னாட்களில், அதாவது 1973-ம் வருடத்திற்கு பிறகு முகாம்களுக்குச் செல்ல அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு வண்டி கிடைத்தது. ஆனால், அந்த வண்டியை கோவை வன பாதுகாவலர் கேட்கும் போதெல்லாம் அவர் பயன்பாட்டிற்கும் கொடுக்க நேரிடும். அந்த நேரங்களில் பழையபடி பேருந்து, நடைதான்! யானைக்கு அல்லது ஏதேனும் விலங்குக்குப் பிரச்சனை என்று தந்தி வரும். இவர் இரவில் கூடச் செல்ல வேண்டி இருக்கும். இவரால் அதன் பின் வீட்டில் இருக்க மனம் வராது!

இந்தத் தடங்கல்களைப் படிக்கும் வாசகர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், எத்தனை இடர்ப்பாடுகளுக்கிடையில் அவர் பணிப்புரிந்தார் என்பதை உணர இயலாது. எப்படி வ.உ.சி.யின் மகத்தான தியாகத்தை இன்று நம்மால் உணர இயலாதோ; உ.வே.சா.வின் தமிழுக்கான முயற்சிகளை முழுவதும் அறிய இயலாதோ; திருப்பூர் குமரனின்  மகத்தான தியாகத்தை இன்று நம்மால் உணர இயலாதோ; அப்படி இவரது பணியின் மகத்துவத்தை, இந்தச் சூழ்நிலையை அறியவில்லை என்றால் பாராட்ட இயலாது. இத்தனை இடர்ப்பாடுகளுக்கிடையில் அவர் சாதித்ததை நாம் நன்றாக உணர அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நாமும் அந்தக் காலத்திற்கு மானசீகமாகப் போக வேண்டும். அவை இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாக தோன்றலாம். ஆனால், அன்றைய வாழ்வின் மதிப்பு முறை முற்றிலும் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டாக்டர் கே-வின் பணி நெறியையும், அர்ப்பணிப்பையும் நாம் உணர அந்தக் காலத்திற்கும் அதன் மதிப்பு முறைக்கும் செல்ல வேண்டும்.

அப்படி நீங்கள் தயாரான பின் யானை டாக்டரின் கதையைத் தொடங்குகிறேன், அடுத்த வாரத்தில் இருந்து.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை appeared first on கிழக்கு டுடே.

❌