இராட்சதர்களின் வீழ்ச்சி
அயல்மொழி அலமாரி தொடரில் இரா.நடராசன் ஒரு முறை குறிப்பிட்டதிலிருந்து கென் ஃபாலெட்டின் (Ken Follett – இவரை சிலர் கென் ஃபாலே என்றும் கூறுகிறார்கள்) ஃபால் ஆஃப் ஜெயண்ட்ஸ் (Fall of giants) நாவலைத் தேடிக்கொண்டே இருந்தேன். சமீபத்தில்தான் கிடைத்தது. 20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டு ஃபாலெட் எழுதிய முதல் பாகம் இது. (இரண்டாவது பாகமும் இப்போது வந்துவிட்டது) 1913லிருந்து 1925 வரையில், அதாவது முதல் உலகப் போர் துவங்கும் சூழலிலிருந்து, அது முடிந்த பிறகான பின்விளைவுகள் ஏற்படுத்திய தாக்கம் வரை விறுவிறுப்பாகச் சொல்லும் 985 பக்க நாவல். லண்டனில் ஒரு பிரபுக் குடும்பம், வெல்ஷ் பகுதியின் ஒரு சுரங்கத் தொழிலாளியின் குடும்பம், ரஷ்யாவில் ஒரு எளிய தொழிலாளியின் குடும்பம், அமெரிக்காவில் ஒரு செனட்டரின் குடும்பம், ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா குடியேறிய ஒரு தாதாவின் குடும்பம், ஜெர்மனியின் ஒரு உயர்குடிக் குடும்பம் என ஆறு குடும்பங்களின் வாயிலாக உலகின் சரித்திர மாற்றங்களை விவரிக்கும் நாவல். ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களும் உலகப்போரின் போது ராணுவ சேவையில் ஈடுபட, குடும்பங்களின் கதை உலகநாடுகளின் கதையாக, உலகப்போரின் கதையாக உருமாறுகிறது. 103 கற்பனைப் பாத்திரங்களும், 23 உண்மைப் பாத்திரங்களும் உலவும் நாவல். லெனினும், டிராட்ஸ்கியும், உட்ரோ வில்சனும், சர்ச்சிலும், லாயிட் ஜார்ஜ்ஜும், ஜெர்மனியின் கெய்சரும் எடுக்கும் முடிவுகள் சாமான்ய மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கூறுகிறது இக்கதை. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான கர்சன் பிரபுகூட ஓரிரு இடங்களில் வந்து போகிறார். முதல் உலகப்போரின்போது அவர்தான் பிரபுக்கள்சபையின் சபாநாயகர்.

வரலாற்றுப் புனைவு எழுதுவது கடினம். அதுவும் சமீபகால நிகழ்வுகளை வைத்து எழுதுவது மிகமிகக் கடினம். நம் இந்தியா போல் ஆவணங்கள் சரிவர இல்லாத நாடாக இருந்தாலும் ஏதாவது கற்பனையாக எழுதி ஒப்பேற்றலாம். ஆனால், சர்ச்சில் போன்ற, லெனின் போன்ற உலகத் தலைவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஆவணங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு வரியையும் கடுமையான ஆய்வுக்குப் பின்னரே எழுதமுடியும். ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சில் யாரைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதற்கு ஆவணம் உள்ளது. அந்த ஆவணத்தை வைத்துக்கொண்டு, அந்தப் பேச்சிற்கு தொடர்புடையது போல கதையில் ஒரு காட்சியை உருவாக்கவேண்டும். அதில் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நடமாட விடவேண்டும். சர்ச்சில் அந்த சந்தர்ப்பத்தில் பேசியவற்றிற்கு ஏற்றாற்போல் கற்பனைப் பாத்திரங்களைப் பேசவைக்க வேண்டும். இந்தப் பேச்சுக்கள் கதையை அடுத்த காட்சிக்கு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லவேண்டும். எத்தனை கடினமான படைப்புச் சவால் !! கென் ஃபாலெட் இதில் பெரிய வெற்றி பெற்றுள்ளார். நாவலை எழுதி முடித்ததும், கதைக்களமான நாடுகளின் எட்டு மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களிடம் பிரதியைக் கொடுத்து, வரலாற்றுத் தகவல்ரீதியாக தவறுகள் எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே, அச்சுக்கு அனுப்பியதாக ஃபாலெட் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

தலைவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தால், இது ஒரு வறண்ட வரலாற்று நூலாக மாறியிருக்கும். சாமானிய மக்களின் கதையாக இது வளர்வதால், பிரமிப்பூட்டும் மக்கள் வரலாறாக மாறுகிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் முதன்முதலாய் சுரங்கவேலைக்கு பூமிக்கு அடியில் நுழைவதில் துவங்கும் நாவல், சுரங்கம், தொழிலாளர், அவர்கள் ஊர், வாழ்க்கைமுறை என்று முழுமையாய் அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது. சின்னச்சின்ன விஷயங்களுக்கான அவர்களது போராட்டம், சோவியத் யூனியன் எழுச்சி அவர்களுக்கு ஏற்படுத்தும் நம்பிக்கை எல்லாம் நாம் இதுவரை எங்கும் படிக்காத விஷயங்கள். மறுபுறம் சோவியத் யூனியனின் கதை. 1905 எழுச்சியில் கொல்லப்பட்ட ஒரு போராளித் தாயின் இரு குழந்தைகள் ஜார் அரசின் ரயில்வே தொழிற்சாலையில் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இருவரில் ஒருவன் அமெரிக்கா சென்று அங்குள்ள ரஷ்ய தாதாவின் மாப்பிள்ளையாகிறான். மற்றவன் சிறிதுசிறிதாக உணர்வு பெற்று, லெனினின் நம்பிக்கைக்குரிய உதவியாளனாகிறான். ரஷ்யாவின் மாற்றம் இங்கிலாந்திலும் வந்துவிடுமோ என்று சர்ச்சில் போன்றோர் கலவரமடைகிறார்கள். இங்க்கிலாந்தில் சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் காரணமான ஆடைத் தயாரிப்புத் தோழிலில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம். அவள் வழியே பெண் வாக்குரிமைக்கான போராட்டம், அது எப்படி வெற்றி பெற்றது என்பது நாவலில் மிக இயல்பாக வருகிறது. ஜெர்மனியின் ஆதிக்கவெறியும், அதன் தோல்வியும், தோற்ற அதன் செல்வங்களை ஏகாதிபத்திய நாடுகள் பேராசையோடு பங்குபோட்டுக் கொள்வதும், ஜெர்மன் மக்கள் போருக்கு முன்னும், பின்னும் எப்போதும்போல் கஷ்டப்படுவதும் கதையோடு ஒட்டி வருகின்றன.

நாவலின் மிகப்பெரும் பலம் அது சாமானிய மக்களின் மனவோட்டத்தை துல்லியமாக, நேர்மையாகப் பதிவு செய்வதுதான். இங்கிலாந்தின் ஒரு பிரபுக் குலத்தில் பிறந்து, ஜெர்மனியின் ஒரு உயர்குடிப் பிரபுவை மணந்து, போரின் சீரழிவில் இரவுவிடுதி ஒன்றில் (மாமனார், மாமியாருக்குத் தெரியாமல்) பியானோ வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஒரு சீமாட்டியும், இங்கிலாந்தின் சுரங்கங்களில் சொல்லமுடியாத அளவு துன்பத்தில் வேலை பார்த்து, உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்து, ஜெர்மன் குண்டுகளுக்கு அஞ்சிப் பதுங்குகுழியில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை சுரங்கத் தொழிலாளியும் இங்கிலாந்து நாட்டவர் உலகையே ஆள கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற நினைப்போடு வாழும் முரணை மிக இயல்பாக, சரியாகக் காட்டும் இந்த நாவல் முடியும் இடம் மிக அழகானது.
நாவலின் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஒரு பிரபு வீட்டுப் பணிப்பெண். பிரபு எதிரில் வந்தால், அவள் சுவரை ஒட்டிக் கொண்டு, தலைதாழ்த்தி நிலம் பார்த்து நிற்கவேண்டும். அவர் பேசினால்தான் பதில் கூறவேண்டும். இப்பெண் பெண்வாக்குரிமைப் போராட்டத்தில் சேர்கிறாள். பத்திரிகையில் பணியாற்றுகிறாள். தொழிலாளர்கட்சியின் முக்கியமான நிர்வாகியாகிறாள். பெண்கள் வாக்குரிமை பெறும்போது, தொழிலாளர்கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். பாராளுமன்றத்தில் பிரபுக்கள்சபை உறுப்பினரான முன்னாள் எஜமானரை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பத்தில், தலை நிமிர்த்தி, அவருக்கு ஹலோ சொல்கிறாள். இவள் செல்வதற்கு வழிவிட்டு சுவரோரமாக நிற்கிறார் அந்தப் பிரபு. நம் செம்மலர் கதைகளில் வருவது போன்ற இந்த அற்புதமான காட்சியோடு முடிகிறது இந்த நாவல்.
தி ஐ ஆஃப் தி நீடில் (the eye of the needle) துவங்கி, புகழ்பெற்ற ஏராளமான நாவல்கள் எழுதியவர் கென் ஃபாலெட். அவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளன. பெருமளவு பணமும், புகழும் சேர்த்தபின், இலக்கிய உலகில் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பேரவாவினால் அவர் இந்த மூன்று நாவல் தொடரினை எழுதத் திட்டமிட்டார் என்று கருதலாம். பணத்திற்கும், புகழுக்கும் மீறிய ஒரு ஆசை படைப்பாளனின் மனதில் வரும்போதுதான் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாகின்றன. அப்போது ஒரு ஏகாதிபத்திய எழுத்தாளன் தன்னையறியாமல் மக்கள் எழுத்தாளனாகிறான். நம் தமிழ்கூறு நல்லுலகின் எழுத்தாளர்களும் இதுபோன்ற ஆசைகளை மனதில் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !
பின்னிணைப்பு
ஆசிரியரின் பிற நூல்கள்
- Eye of the Needle (1978) (a.k.a. Storm Island) (Edgar Award, 1979, Best Novel)
- Triple (1979)
- The Key to Rebecca (1980)
- The Man from St. Petersburg (1982)
- On Wings of Eagles (1983)
- Lie Down with Lions (1985)
- Night Over Water (1991)
- A Dangerous Fortune (1993)
- A Place Called Freedom (1995)
- The Third Twin (1996)
- The Hammer of Eden (1998)
- Code to Zero (2000)
- Jackdaws (2001)
- Hornet Flight (2002)
- Whiteout (2004)
- The Pillars of the Earth (1989)
- World Without End (2007
- Fall of Giants (2010)
- Winter of the World (2012)
- Edge of Eternity (2014)[15]
கென் ஃபாலெட் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். புத்தகப் பதிப்பாளராக இருந்தவர். பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினர். மனைவி பார்பரா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்தவர். கார்டன் பிரவுன் மந்திரிசபையில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தவர்.
அவரது மற்ற நாவல்களைப் பற்றிப் பேசவே முடியாதபடி சமீபத்திய சென்சுரி ட்ரைலாஜி நாவல்கள் அமைந்துவிட்டன. இரண்டாவது பாகமான winter of the world ஸ்பானிய உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போரை விவரித்தது. மூன்றாவது பாகமான edge of eternity இந்த செப்டம்பர் மாதம் தான் வெளியானது. சமீபகாலத்தில் இப்படியொரு அற்புதமான நாவல் வரவேயில்லை என்று சொல்லலாம். பனிப் போர் காலத்தில் ஆரம்பித்து ஒபாமா பதவியேற்போடு முடிகிறது. பெர்லின் சுவர் கட்டப்படுவது, கியுபா ஏவுகணைப் பிரச்னை, வியட்நாம் போர், வாட்டர்கேட் விவகாரம், சாலிடாரிடி இயக்கம், சோவியத் யூனியன் சிதறியது, பெர்லின் சுவர் இடிப்பு என்று 1960களுக்குப் பின்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள். இத்தனையயும் தொட்டுத் தொட்டுச் சென்றாலும், இந்த பாகத்தின் அடிநாதமாக இருப்பது கறுப்பின மக்களின் எழுச்சி, அவர்களுக்கு ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாகவேனும் நன்மை செய்தே ஆகவேண்டிய கட்டாயம்தான். மார்டின் லூதர் கிங் ஜூனியரின் எனக்கொரு கனவு இருக்கிறது என்ற உரை நாவலில் வரும் இடத்தில் நம் கண்ணில் கண்ணீர் வரும். அமைதியாகப் போராடிய அந்த மக்கள் சந்தித்த அடக்குமுறைகள் அத்தனை கொடுமை. போலீஸ் நாய்களை விட்டு போராட்டக் காரர்களைக் கடிக்க விடும் கொடுமையெல்லாம் நடக்கும். கடைசியில் ஒபாமா பதவியேற்பின் போது அந்தப் போராளிகள் வடிக்கும் ஆனந்தக் கண்ணீரோடு நம் கண்ணீரும் கலக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் 1960களுக்குப் பிறகான அமெரிக்க அதிபர்களைப் பற்றிய ஃபாலெட்டின் வார்த்தைகள். கென்னடியிலிருந்து புஷ் வரை பலரையும் திருடன், பொய்யன், கொலைகாரன் என்று பல இடங்களில் நேரடியாகவே திட்டுவார். நம் ஊராக இருந்தால் கொடும்பாவி எரிப்பது, அவர் படத்தை செருப்பு, விளக்குமாறு வைத்து அடிப்பது, தடை செய்ய வழக்கு என்று ஒரு பெரிய கோஷ்டி கிளம்பியிருக்கும்.
ஒரு புறம் அரசியல் வரலாற்று நாவல்களை எழுதிய அவர் மறுபுறம் 11, 12ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சர்ச் கட்டுவதை வைத்து அருமையாக இரு நாவல்கள் எழுதியிருக்கிறார். Pillars of the earth, world without end என்ற அந்த இரு நாவல்களில் சர்ச் கட்டுவதைப் பின்னணியாக வைத்து அன்றைய இங்கிலாந்தின் நிலப்பிரபுத்துவ சமூகம் எளிய மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியது என்பதை இங்கிலாந்தின் வரலாறு, சர்ச்சின் வரலாறு ஆகியவற்றோடு இணைத்து எழுதியிருப்பார். இந்த நாவல்களில் அவர் வர்ணிக்கும் சர்ச் ஸ்பெயினின் விட்டோரியா நகரில் உள்ள சான்டா மரியா சர்ச். பில்லர்ஸ் ஆஃப் தி எர்த்தின் ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளியான முதல் மாதத்தில் 2,75,000 பிரதிகள் விற்றது. இதைவிட ஆச்சரியமான ஒரு தகவல் இருக்கிறது. அந்த ஊர் மக்கள் அந்த சர்ச் வாசலில் கென் ஃபாலெட்டிற்று ஆளுயர வெண்கலச் சிலை வைத்திருக்கிறார்கள். கென் ஃபாலெட் தன் சிலையைத் தானே திறந்து வைத்தார். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் உலகில் இதுவரை கிடைத்திராத மரியாதை இது. ஆனால், இந்த மரியாதைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதில் சந்தேகமே இல்லை.
இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.