Normal view

Received before yesterday

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

1895 முதல் 1910 வரை தொடர்ந்த அரசியல் மோதல்கள்

பழமைவாதிகளுக்கும், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவும், எழுச்சிபெறும் புதிய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து வாதம் செய்வதற்கும் ஆற்றல் உடையவர்களான ஆளுமைமிக்க புதிய தலைவர்கள் பலர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினர். இவர்களில் பெரும்பான்மையினர் உயர்தொழில்களில் சிறப்பெய்தியவர்கள்; சாராயக்குத்தகை முதலாளிகளதும், பெருந்தோட்டங்களினதும், காரீயச் சுரங்கங்களினது முதலாளிகளதும் புத்திரர்களாகவும், மருமக்களாகவும் விளங்கினர். சிலர் பிரித்தானியாவிற்குப்போய் சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் உயர்பட்டங்களைப் பெற்று நாடு திரும்பியவர்களாய் இருந்தனர். அக்காலத்தில் உலகில் மிகவும் முன்னேறிய நாடான பிரித்தானியாவில் வாழ்ந்து அச்சமூகத்தின் மனப்பாங்குகளையும் நடத்தை முறைகளையும் உள்வாங்கியவர்களாய் இருந்தனர். பிரித்தானியா 1832 ஆம் ஆண்டுகாலத்துச் சீர்திருத்தங்களுக்கு முன்னர் என்ன நிலையில் இருந்ததோ அப்படியான பின்னடைவான நிலையில் இலங்கை இருப்பதை நாடு திரும்பிய இவர்கள் கண்டனர். தம்மிடம் பணம் இருந்தும், வெளிநாட்டுப் படிப்பு இருந்தும் தாம்திட்டமிட்டு ஒதுக்கப்படுவதையும் அடிப்படை அரசியல் உரிமைகளான வாக்குரிமையும், பிரதிநிதித்துவ உரிமையும் திட்டமிட்டமுறையில் மறுக்கப்படுவதையும் கண்டனர். அத்தோடு முதலாளித்துவ வகுப்பின் பழமைவாதப் பிரிவினர், அரசியல் நிலப்பிரபுத்துவ சமூக மனப்பாங்குகளை வெளிப்படுத்துவதையும் தமக்குப் பாரபட்சம் காட்டுவதையும் தம்மைக் கண்டிப்பதையும் தொழிலாகக்கொண்டு நடந்து கொள்வதையும் கண்டு மனம் கொதித்தனர்.

சட்டசபையில் சிங்களவருக்கான பிரதிநிதியை 1895 இல் மீண்டும் நியமிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கான போட்டி வேட்பாளர்களின் ஆதரவுப்பிரசாரம் 1894 இல் தொடங்கியது. இத்தடவை ஜேம்ஸ் பீரிஸ், சி.எம். பெர்னாண்டோ என்ற இருவர் முதலியார் குழுமத்திற்கு எதிரான போட்டியாளர்களாக முன்வந்தனர். இவர்கள் இருவரும் புதிதாக எழுச்சி பெற்றுவரும் முதலாளித்துவ வகுப்பின் மிகச்சிறந்த பிரதிநிதிகளாக இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற டிமெல், டி சொய்சா என்ற இரு முதலாளிகளின் குடும்பங்களுக்குள் திருமணம் செய்வதன்மூலம் முக்கியஸ்தர்களாயினர். ஜேம்ஸ் பீரிஸ் (1856-1930), தெல்கே மார்ட்டினஸ் பீரிஸ் என்பவரின் மகன். ஜேம்ஸ் பீரிஸின் தந்தை 1850களிலும் 1860களிலும் பிரபலமான சாராயக் குத்தகைக்காரர் (பின்னர் வியாபாரத்தில் நொடித்துப்போனார்). அவரின் பாட்டன் ஆகிய பாணந்துறையைச் சேர்ந்த தெல்கே டேவிட் பீரிஸ் குத்தகைக்காரர், கப்பல் சொந்தக்காரர், நில உடைமையாளர் என்ற வகையில் 1820க்கள் முதல் 1840க்கள் வரை பிரகாசித்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சென்ற் யோன்ஸ் கல்லூரியில் அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்றுப் படிப்பதற்காக ஜேம்ஸ் பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்றார். அங்கு கற்று 1882 இல் சட்டத்துறையில் முதலாம் வகுப்புச் சித்தி பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலையின் சட்ட மாணவர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பிரித்தானியாவில் சிறிதுகாலம் நியாயதுரந்தரராக தொழில்செய்த பின் இலங்கைக்கு வந்து 1887 இல் சட்டத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் (கெபிள் மற்றும் சூரியசேன 1950: அத்தியாயம் 11). 1889 இல் ஜேம்ஸ் பீரிஸ், கிறேஸ் டி மெல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்பெண்மணி யாக்கோப் டி மெல் என்ற பிரபல வர்த்தகரின் புத்திரியாவார். யாக்கோப் டி மெல், யேம்ஸ் பீரிஸின் வெளிநாட்டுக் கல்விச் செலவுக்கு உதவி செய்தவர். யாக்கோப் டி மெல்லின் தந்தை (கிறேஸ் டி மெல் உடைய பாட்டன்) பிரபல்யம்பெற்ற சாராயக் குத்தகைக்காரராக இருந்தவர் (ஈ பெர்னாண்டோ, 1989:78). ஜேம்ஸ் பீரிஸ் சாதாரண குடும்பத்தில் தோன்றியவராயினும், டி மெல் குடும்பத்துப் பெண்ணை மணந்து பெற்றுக்கொண்ட சீதனச் சொத்துகளால் செல்வந்தரானார். இச்செல்வம் அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு உதவியது.

சாள்ஸ் மத்தியூ பெர்னாண்டோ (1866-1909), 1895 இல் சட்டசபை நியமனத்திற்கு போட்டியாளராக பிரேரிக்கப்பட்ட இன்னொரு பிரமுகர். இவர் அன்ட்ரூ பெர்னாண்டோவின் (சிறு வர்த்தகர்) மகன் ஆவார். பீரிஸ் போன்றே பெர்னாண்டோவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சென்ற் யோன்ஸ் கல்லூரியில் அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று, படிப்பதற்குச் சேர்ந்தார். சட்டத்தில் பட்டமும் (Law Tripos), எல்.எல்.பி பட்டமும் பெற்று 1888 இல் லண்டனில் நியாயதுரந்தரராகப் பணியாற்றினார். இலங்கை திரும்பிய சி.எம். பெர்னாண்டோ இலங்கை தேசிய கழகத்தின் செயலாளராக 1892 முதல் 1895 வரை கடமையாற்றினார். 1897 வரை நியாயதுரந்தரராகப் பணியாற்றிய பின் பதில் மாவட்ட நீதிபதியாகவும் அரச நியாயதுரந்தரராகவும் பணியாற்றினார். சாள்ஸ் டி சொய்சாவின் புத்திரியும் முன்னோடிகளான முதலாளிகள் யெரொனிஸ் சொய்சா, செவலியர் யுசி டி சில்வா ஆகியோரின் பேர்த்தியுமான யேன் மரியா டி சொய்சாவை திருமணம் செய்ததன் மூலம் சி.எம். பெர்னாண்டோ பெரும் செல்வத்திற்கு அதிபதியானார். முன்னேறி வரும் கராவ சாதியின் பெருமைக்குரிய தலைமக்களாக யேம்ஸ் பீரிஸ், சி.எம். பெர்னாண்டோ ஆகிய இரு நியாயதுரந்தரர்களும் விளங்கினர். இவர்கள் இருவரும் பிறப்பால் அல்லது திருமண பந்தத்தால் 19 ஆம் நூற்றாண்டின் நான்கு பெரும் வர்த்தக முதலாளித்துவக் குடும்பங்களான தெல்கே பிரிஸ், வருஷ கென்னடிகே சொய்சா, விதானலாகே டி மெல், லிண்டா முலாகே டி சில்வா ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருந்தனர்.

கரைநாட்டுச் சிங்களவர்களுக்கான பிரதிநிதித்துவத்தினைக் கோரும் வேட்பாளர்களாக ஜேம்ஸ் பீரிஸ், சி.எம், பெர்னாண்டோ ஆகிய இருவரும் நிறுத்தப்பட்டனர். இப்பிரேரணை சிறந்த திட்டத்துடன் முன்வைக்கப்பட்டது. அவர்களது கொள்கைப் பிரகடனங்களில் ரயில் போக்குவரத்தை விஸ்தரித்தல், கல்வி வசதிகளை மேம்படுத்தல் ஆகிய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களது எதிர்ப்போட்டியாளராகிய எஸ்.சி. ஒபயசேகர கிராமத் தலைமைக்காரர்களின் அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை மட்டும் முக்கியத்துவப்படுத்தினார். பீரிஸின் கொள்கைப்பிரகடனம் தாம் முற்போக்கு சிந்தனையுள்ள முதலாளித்துவ வகுப்பின் கருத்துகளை ஆதரிப்பதாகவும் நிலப்புரபுத்துவ சலுகைகளையும், மனப்பாங்குகளையும் தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டது.

“அவர் பிறப்பு, விவாக பந்தம் என்ற இரு வழிகளிலும் சிங்களச் சமூகத்தில் சுதேசத் தொழில்களில் முன்னோடிகள் எனக் கருதப்படும் பிரிவினர்களுடன் தொடர்புடையவர். பரம்பரை உரிமைகள், குடும்பத் தொடர்பு ஆகிய விடயங்கள் நவீன முன்னேற்றத்திற்கு ஒவ்வாதனவாக இருந்தன (மேலது: 134).

பீரிஸை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவரின் வர்க்க அந்தஸ்தும், கல்வித்துறைச் சாதனைகளும் அழுத்திக் கூறப்பட்டன. கரைநாட்டுச் சிங்களவர்களுக்குள் ஆகக்கூடிய கல்வித்தகைமை பெற்ற ஒருவர் பீரிஸ் என்றும், எந்த ஒரு இலங்கையர்களும் இதுவரை அடையாத சிறப்பை பெற்றவர் என்றும் இக்கூட்டத்தில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார். இன்னொரு கூட்டத்தில் ஜேம்ஸ் பீரிஸிடம் உள்ள பெரும் செல்வம், அவருக்கு இருந்த குடும்பத் தொடர்புகள் பற்றிப் புகழ்ந்து பேசப்பட்டது. அவருக்கு ‘இந்நாட்டின் மிகப் பெரும் சொத்துடைமையாளர்களுடனும், வர்த்தகர்களுடனும் குடும்பப் பிணைப்பும் உறவும் உள்ளது’ என்று கூறப்பட்டது. புதிய முதலாளி வகுப்பின் இவ்வாறான பிரசார அழுத்தத்திற்கு அரசாங்கம் மசிந்துபோகவில்லை. வழமையான தனது கொள்கையையே அரசாங்கம் தொடர்ந்தது. ஏ.டி. அல்விஸ் செனிவிரத்னவின் நியமனத்தை நீடிப்பதன்மூலம் அவர் கரைநாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதியாக 1900 ஆம் ஆண்டுவரை பதவி வகிக்க அரசாங்கம் வழி செய்தது. பிரித்தானிய அரசு 1900 ஆம் ஆண்டில் தானும் தன் கொள்கையை மாற்றவில்லை. இலங்கையின் மேற்தட்டு வர்க்கத்தின் ஆளுமைப்பலம் இல்லாத நபர்களைச் சட்டசபைக்கு நியமிப்பதை அரசாங்கம் விரும்பியதே அல்லாது, புதிய பணக்காரர்களில் இருந்து தோன்றிய கல்விகற்ற விமர்சன நோக்குடைய படிப்பாளிகளை நியமிப்பதில் அக்கறை காட்டவில்லை.

1900 ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிடம் ஏற்பட்டபோது ஜேம்ஸ் பீரிஸ் மீண்டும் வேட்பாளராக முன்வந்தார். 20 ஆம் நூற்றாண்டு உதயமாகிய வேளையில்கூட தம் மனதை மாற்றிக்கொள்ளாத ஆட்சியாளர்கள் கரைநாட்டுச் சிங்களவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக சொலமன் கிறிஸ்ரோபல் ஒபயசேகர என்பவரை நியமித்தனர். 1848 இல் பிறந்த ஒபயசேகர டி.பி.எவ். ஒபயசேகர, சுசன்னா கொர்னிலியா பண்டாரநாயக்க தம்பதியரின் புத்திரராவார். இவர்களது குடும்பம் யேம்ஸ் டி அல்விஸ், பிலிப்ஸ் பண்டிதரட்ன, யே.பி ஒபயசேகர, யே.ஜி. டயஸ், ஹரி டயஸ் ஆகிய முன்னாள் சட்டசபை உறுப்பினர்களின் நெருங்கிய சொந்தக்காரக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தினர் மாறிமாறி ஒன்றுக்குள் ஒன்றாக விவாகம் செய்துகொள்ளும் அகமண உறவு முறையைக் கடைப்பிடித்து வந்தனர். யேம்ஸ் டி அல்விஸின் மகள் எஸ்லின் மரியாவை ஒபயசேகர திருமணம் செய்தார். யேம்ஸ் டி அல்விஸின் மனைவி புளோரன்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஜே.ஜி. டயஸ், ஹரி டயஸ் ஆகிய இருவரதும் சகோதரியாவார். ஒபயசேகரவின் மூத்த சகோதரியான டெய்சி எஸ்லின், சொலமன் டயஸ் பண்டாரநாயக்க (1862-1946) அவர்களைத் திருமணம் செய்தார். சொலமன் டயஸை அரசாங்கம் 1895 இல் மஹா முதலியாராக நியமனம் செய்தது (சொலமன் டயஸின் மகன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1956-58 காலத்தில் இலங்கையில் பிரதமராக இருந்தவர்). இவ்வாறாக சலுகை பெற்றிருந்த இக்குடும்பம் சட்டசபை ஆசனத்தை தனது ஏகபோக உடைமையாகக் கொண்டிருந்ததைக் கண்டு புதிய முதலாளித்துவ வகுப்பு மனக்கொதிப்புற்றது இயல்பான தொன்றாகும்.

ஜேம்ஸ் பீரிஸ் ஆதரவாளர்களுக்கும் கிறிஸ்ரோபல் ஒபயசேகர ஆதரவாளர்களுக்குமிடையில், சட்டசபை ஆசனம் 1905 ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிடமானபோது, கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு வேட்பாளர்களதும் தகைமைகளும், நடத்தைப்பாங்குகளும் மீண்டும் விவாதப்பொருள் ஆயின. எஸ்.சி. ஒபயசேகர நியாயதுரந்தரராக (புறக்டர்) இருந்தவர். உல்லாசமாக வாழ்க்கை நடத்தக்கூடிய அவருக்கு ‘உயர் குடிப் பிறப்பு’டைய கனவான் என்ற தகுதி இருந்தது. றைட் எழுதிய நூலில் (1907: 521) அவர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையின் தென்பகுதியின் பழமையும் புகழும் வாய்ந்த குடும்பம் ஒன்றின் குலக்கொழுந்து இவர். இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் உயர்பதவிகளை வகித்து வந்தவர்கள். சுதேச சமூகத்தின் தலைவர்களாக தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தவர்கள். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இவரது பொழுது போக்கு. இலங்கையின் பல பாகங்களிலும் இவருக்கு பெருந்தோட்டங்களும், காணிகளும் உள்ளன. நகரத்தில் இவருக்கு ‘ஹில் காஸ்ரில்’ (Hill Castle) என்ற பெயரில் ஒரு பிரபலமான் வாசஸ்தலம் இருக்கிறது. பதுளையில் இவருக்கு நாட்டுப்புற உறைவிடம் ஒன்று உள்ளது. அது உண்மையில் பழைய நிலமானியக் கனவான் ஒருவரின் மாளிகை என்றே கூறப்படத்தக்கது.”

ஜேம்ஸ் பிரிஸ் உடைய உயர் தகைமைகள் கவனிப்பைப் பெறவில்லை. 1905 ஆம் ஆண்டில் எஸ்.சி. ஒபயசேகர நியமிக்கப்பட்டார். அத்தோடு 1908 இலும் அவரது நியமனம் நீடிக்கப்பட்டது. ‘பழைய நிலமானியக் கனவான் ஒபயசேகர 1910 வரை கரைநாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து பதவி வகித்தார். அது மட்டுமல்லாமல் 1911-12 காலத்தில் சட்டசபை சீர்திருத்தி அமைக்கப்பட்டபோதும் அவரது நியமனம் தொடர்ந்தது. அவர் 1917 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதவி வகித்தார். தனது குடும்பத்தையும் முதலாளித்துவத்தின் பழமைவாதப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக எஸ்.சி. ஒபயசேகர 17 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தார்.

இலங்கையில் இக்காலத்தில் சீர்திருத்தக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் சட்டசபையில் சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கான உரிமையை ஒரு குடும்பத்திற்கே வழங்கிய அரசு அதை நீடிக்க விரும்பியதே அல்லாமல் இக்குரல்களிற்கு செவி சாய்க்கவில்லை. மஹா முதலியார் பரம்பரைக் குழுமத்தின் சுய அடையாளம், தாம் உயர்குடிப் பிறப்பாளர் என்பதாக இருந்ததென்பதும் முக்கியமானது. ஒபயசேகர குடும்பக் குழுமம் இலங்கைச் சமூகத்தின் மேதகு குடியாகவே தம்மைக் கருதியது. சாதியால், அந்தஸ்தால், பட்டங்களால், ராச கௌரவத்தால், கணிப்பால், நில உடைமையால், மாளிகை வீடுகளின் உடைமையால், நகரச் சொத்துகளால், மலிவானதும் கூலி வழங்கத் தேவையற்றதுமான வீட்டு வேலைக்காரர் பட்டாளத்தை வைத்திருப்பதால், தம் குடியினர் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர்கள் என்று இவர்கள் கருதினர். ஆகையால் சிங்களவருக்கான சட்டசபைப் பிரதிநிதித்துவம் தமக்கே உரியது என்றும் எண்ணலாயினர். பணக்காரக் கராவக்களும், கொய்கம சாதிக்குள் இருந்து முளைத்த இதுவரை அறியப்படாதவர்களான பெருந்தோட்ட முதலாளிகளும், குத்தகைக்காரர்களும் முன்னரங்குக்கு வந்ததும் நிலைமை மாறலாயிற்று. குணரட்ண பின்வருமாறு எழுதுகிறார்:

“சட்டசபை விவாதத்தின்போது சேர் கிறிஸ்ரோபல் ஒபயசேகர, இவர்கள் வெறும் அநாமதேயங்கள். அறியப்பட்டவர்களாக ஆவதற்குத் துடிக்கிறார்கள் என்ற சொல்லம்பைச் சடாரென வீசினார். ‘அறியப்பட்டவர்கள்’ என்றதன்மூலம் அவர் தன்னையும் தன் உறவினர்களையுமே கருத்தில் கொண்டார் (1986:17).”

“புதிய பணக்காரர் வகுப்பினர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் பந்தியில் இரண்டு வரிசை பின்னுக்கு உட்கார்ந்துகொள்வதில் திருப்திப்பட்டுக் கொண்டவர்கள். இப்போது அவர்கள் முன்வரிசைக்கு முந்திக்கொள்ளும் துணிச்சல் கொண்டுள்ளார்கள்” (மேலது: லுடோவைக்) என்று லுடோவைக்கை மேற்கோள் காட்டும் குணரத்தின புதுப்பணக்காரர்களின் இச்செய்கை முதலியார் வகுப்புக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது என்றும் தொடர்ந்து எழுதுகிறார். மது ஒழிப்பு பிரசார இயக்கத்தில் முன்னின்ற சேனநாயக்காக்களையும், ‘முறைகேடான வழிகளில் தம் செல்வத்தைத் திரட்டிக்கொண்ட’ கராவ குத்தகைக்காரர்களையுமே குத்திக் காட்டுவதாகவே இது அமைந்தது (ஜயசேகர 1970: 212-13).

அரசியல் சீர்திருத்தமும் புதிய வர்க்கமும்

முதலியார்கள் குழுமத்தினர்தான் அறிவாளர் சமூகத்திற்குரிய பண்பட்ட இயல்புகள் இல்லாத ‘அநாமதேயங்கள்’ என்று புதுப்பணக்காரர்கள் கருதியதும், புதுப்பணக்காரர்கள் மத்தியில் இருந்து தோன்றிய ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ‘தாரகைகள்’தான் உண்மையில் ‘அறியப்பட்டோர்’ என்று புதுப்பணக்காரர்கள் எண்ணியதும்தான் இந்த ‘அநாமதேயங்கள்’ என்ற சர்ச்சையின் நகைமுரண். புதிய பணக்காரர்களின் கோரிக்கைகள் தயவுதாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், 1907 ஆம் ஆண்டில் அரசியல் சீர்திருத்தக்கோரிக்கை எழுந்தது. தமது பெரும்சிறப்புடைய தனிநபர்களிற்கு இடங்கொடுக்காமல், நிறுவனமாகிப் போய்விட்ட முதலியார் குடும்பங்களுக்கு அரசாங்கம் சலுகை காட்டிக்கொண்டிருந்த வேளையில் அரசியல் சீர்திருத்தத்திற்கான பரவலான ஆதரவை வேண்டிப் பிரசாரம் தொடங்கப்பட்டது. அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்ற பிரசாரத்தை சாதியடிப்படையில் கொவிகமச் சாதியினருக்கும் கராவச் சாதியினருக்கும் நடந்த விவாதமாகவும் போட்டியாகவும் சிலர் விளக்கம் தந்துள்ளனர். உண்மை யாதெனில், புதுப்பணக்காரர்களான சீர்திருத்தவாதிகளுக்குள் எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்; எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களாகவும் இவர்கள் இருந்தனர். சீர்திருத்தத்தை எதிர்த்த பழமைவாதிகளுள்ளும் சமூகத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தோர் இருந்தனர். சீர்திருத்தவாதிகளின் பிரசாரம் ‘சிலோன் ஸ்ராண்டர்ட்’ என்ற பத்திரிகை வாயிலாக முதலில் தொடங்கப்பட்டது. இப்பத்திரிகை டி சொய்சா குடும்பம், என்.பி.டி. சில்வா, யோன் குளோவிஸ் டி சில்வா ஆகிய சாராயக்குத்தகை முதலாளிகளின் உடைமையாக இருந்தது. பின்னர் இதற்குப் பதிலாக ‘மோணிங் லீடர் (Morning Leader) என்ற பத்திரிகை சீர்திருத்தப் பிரசாரத்தைத் தொடர்ந்தது. இப்பத்திரிகையும் புதிய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தது. இப்பத்திரிகை சமத்துவ உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தித் தீவிரப்பிரசாரத்தில் இறங்கியது.

புதுப்பணக்காரர் என்ற புதிய வகுப்பினர் தமது பொருளாதார, அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக வேறு பல அமைப்புகளையும் உருவாக்கினர். செயற்பாடுகளை இழந்ததாய் இருந்த இலங்கைத் தேசிய கழகம் என்ற அமைப்பை ஜேம்ஸ் பீரிஸ் தலைமையில் புனரமைத்தனர். பிராந்தியங்களிலும் சீர்திருத்தம் கோரிய அமைப்புகள் உருவாகின. இக்காலத்தில் தான் சிலாபம் கழகம் (Chilaw Association) என்ற அமைப்பு உருவானது (இது கொறயா குடும்பத்துடன் தொடர்புடைய அமைப்பு). ஏனைய அமைப்புகள் குறித்தவகைப் பொருளாதார நலன்களின் அடிப்படையில் உருவானவை. 1905 இல் தொடங்கப்பட்ட காரீய வர்த்தகர் சம்மேளனம் (Plumbago Merchants Union) இவற்றுள் ஒன்று (இச்சம்மேளனம் இதற்கு முன்பிருந்த ‘பிளம்பாகோ டீலேர்ஸ் அசோசியேசன்’ என்பதைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்டது). 1907 இல், இச்சம்மேளனத்தில் 82 காரீயச் சுரங்க உடைமையாளர்கள் அங்கத்தவர்களாய் இருந்தனர். இதன் தலைவராக எச். பஸ்ரியன் பெர்னாண்டோவும், உப தலைவராக ஆர்.ஏ. மிறாண்டோவும் பணியாற்றினர். சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்களாக அமடோரிஸ் மென்டிஸ், யாக்கோப் டி மெல், என்.டி.பி. சில்வா, யூ.டி.எஸ். குணசேகர, டபிள்யூ.ஏ. பெர்னாண்டோ, யோன் குளோவிஸ் டி சில்வா, எச். யோசப் பீரிஸ், யோன் கொத்தலாவல (மூத்தவர்), டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க, டி.டி. பெத்திரிஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் கராவ, கொவிகம, சலாகம, வகும்புர ஆகிய சாதிகளைச் சேர்ந்தோராவர் (றைட் 1907; 588,624). சுதேச பெருந்தோட்ட முதலாளிகளின் அமைப்பாக தாழ்நில உற்பத்திகளுக்கான கழகம் (Low Country Products Association) 1908 இல் தொடங்கப்பட்டது. இக்கழகத்தில் ஜேம்ஸ் பீரிஸ், எச்.ஜே.சி. பெரேரா, ஈ.ரி.டி. சம்பாயோ, ஹென்றி எல். டி மெல், என்.டி.பி. சில்வா, மார்கஸ் பெர்னாண்டோ, டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க என்போர் அங்கத்தவர்களாயிருந்தனர். இங்கும் கராவ, கொவிகம, துராவ, நவண்டன ஆகிய சாதிகளின் பிரதிநிதிகள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டதைக் காண்கிறோம். பல சாதிகளின் பிரதிநிதிகளான இவர்கள் தமது முதலீடுகளைப் பரவலாக்கிக் கொண்டுள்ளதையும் காண்கிறோம் (ஜயசேகர 1970: 149 மற்றும் 241-42).

பல்வேறு அமைப்புகளில் இருந்தும் மனுக்களும் விண்ணப்பங்களும் கிடைக்கத்தொடங்கியது (தாழ்நில உற்பத்திகள் கழகம், சிலாபம் கழகம், இலங்கைத் தேசிய கழகம் என்பன). தனிநபர்களான ஜேம்ஸ் பீரிஸ், எச்.ஜே. டி மெல், (இருவரும் கராவ சாதியினர்) எச்.ஜே.சி. பெரேரா (துராவ சாதி) ஆகியோரும் இவ்வாறான மனுக்களையும் விண்ணப்பங்களையும் அரசுக்கு அனுப்பினர். இவை முதலாளிகளான தோட்டச்சொந்தக்காரர், குத்தகைக்காரர், வர்த்தகர்கள், உயர்தொழில்களில் இருந்தோர் ஆகிய பலரதும் அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாயின. இது அரசியல் சீர்திருத்த இயக்கத்தில் புதியதொரு கட்டமாக அமைந்தது. முக்கிய சீர்திருத்தக் கோரிக்கைகளாவன: i) நிர்வாக சபைக்கு இரண்டு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் (Unofficial) நியமிக்கப்பட வேண்டும் ii) இனக்குழுமத்தை அடிப்படையாகக்கொண்ட பிரதிநிதித்துவமுறை ஒழிக்கப்பட வேண்டும் iii) சட்டசபைக்கு பிரதிநிதிகளை ‘தேர்தல்’ மூலம் தெரிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் மத்தியதர வகுப்புக்கு உரியதாகவும் இருத்தல் வேண்டும். 

1907 ஆம் ஆண்டில் யாக்கோப் டி மெல் அவர்களின் மகனான எச்.ஜே. டி மெல் இனக்குழும அடிப்படையிலான பிரதிநிதித்துவம் பழமையானதும் தீங்கானதும் எனக் கண்டனம் செய்தார். சட்டசபையில் உத்தியோகச்சார்புடையவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். பிற உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களை தேர்தல்மூலம் தெரிவு செய்ய வேண்டும் என்றார் (மேலது 144). 1908 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பீரிஸ் இது பற்றி ஒரு ஆலோசனையை முன்வைத்தார். உத்தியோகத்தர்கள் 13 பேரும் உத்தியோகப்பற்றற்றோர் 12 பேரும் இருக்கலாம் என்றும், இப் 12 பேரில் 7 பேர் பிராந்திய அடிப்படையில் வாக்காளர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இக்கோரிக்கைகள் யாவும் மிதவாதப்போக்கை தெளிவாக எடுத்துக்காட்டுபவை. முதலாளித்துவ வகுப்பு, சுய ஆட்சியையோ, சர்வசன வாக்குரிமையையோ கேட்பதற்குத் தயாராக இருக்கவில்லை. இவ்வகுப்பு சட்டசபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட விடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத மனப்பாங்கும், இலங்கையின் பழமைவாத சமூகப்பிரிவினரான ‘அறியப்பட்டோரின்’ (Somebodies) அகங்காரமும், பாசாங்குத்தனமும் முதலாளித்துவ வகுப்பின் புதிய பணக்கார வகுப்பிற்கு விரக்தியுணர்வை வளர்ப்பதாக இருந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

தமது கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மிதவாதிகள் ஆதரிக்கவில்லை. இது வெளிப்படையானது. எச்.ஜே.சி. பெரேரா “இந்தியாவில் அண்மையில் நிகழ்ந்தது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களான கிளர்ச்சி, அமைதியின்மை என்பனவற்றை ஏற்படுத்தக்கூடாது” என்று கூறினார். புதிய முதலாளி வர்க்கம் இவ்வகையில் தனது வர்க்க உணர்வுகளையே வெளிப்படுத்தியது. சுதேசிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கைத்தொழில்களும் வர்த்தக முயற்சிகளும் விரிவடைந்திருப்பதால், ‘முற்போக்குடைய அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களைச் செய்வதற்குரிய காலம்’ கனிந்துள்ளது என்று இவ்வகுப்பினர் கருதினர் (இலங்கை தேசிய கழகத்தின் கைந்நூல் 1929: 15 மற்றும் 22). பெரேரா இந்தியாவின் ‘இராஜதுரோக’ நடவடிக்கையாளர் போன்றவர் அல்லர். இருப்பினும் அவர் கடுமையான சொற்களில் தன் கருத்துகளை 1909 ஆம் ஆண்டில் தெளிவாகக் கூறினார். பழைய இலங்கை மனப்பாங்கினரின் பழமைவாதம், பொறாமையுணர்வு, சாதியை முக்கியப்படுத்துதல், சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தவறு இழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை, பிறழ்வுப் போக்குடைய இனக்காழ்ப்பு ஆகிய இயல்புகளை அவர் சாடினார் (ஜயசேகர 1970: 158). அரசியல் சீர்திருத்தத்திற்கான பிரசார இயக்கத்திற்கு கவர்னர் சாதகமான பதிற்குறி எதனையும் காட்டவில்லை. புதியபணக்காரர்களான ‘கராவக்களின்’ பேராசைகளையே இவை வெளிப்படுத்துவன என்று அவர் குறிப்பிட்டார். பிரடரிக் பவுஸ் (Frederick Bowes) என்ற பிரித்தானிய அதிகாரி இப்பிரசார இயக்கம் ‘பணம் படைத்த தாழ்சாதிக் குழுக்களின் பொறாமையின் வெளிப்பாடு’ என்றும் ‘சட்டசபை ஆசனங்களை ஒரு பீரிஸிற்கும் ஒரு பெர்னாண்டோவுக்கும் கொடுத்துவிட்டால்போதும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் சீர்திருத்தம் பற்றிய பேச்சு இருக்காது’ என்றும் கூறினார் (மேலது: 164).

1911-12 காலத்தின் குறூமக்கலம் அரசியல் யாப்புத் திருத்தம் சில அற்பசலுகைகளை வழங்கியது. மிதவாதிகளின் கோரிக்கைகள் ‘அப்போது நிராகரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு கொதிப்படைந்தவர்கள் கண்டனம் செய்தனர். புதிய சட்டசபை, உத்தியோகத்தர்களே பெரும்பான்மையினராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. 11 உத்தியோகச்சார்புடையவர்களும், 10 உத்தியோகப்பற்றற்றவர்களும் இச்சட்டசபையில் இருப்பர் என்றும், உத்தியோகப்பற்றற்றவர்கள் 10 பேரில் 7 பேர் வெவ்வேறு இனக்குழுமங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நியமிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது. 4 பேர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதான வாக்குரிமையின்படி தெரிவு செய்யப்படவிருந்தனர். இவ்வாறு தெரிவு செய்யப்படுவோரில் ஐரோப்பியர் இருவர், பறங்கியர் ஒருவர், ‘படித்த இலங்கையர்’ ஒருவர் என்றவகையில் இனக்குழுக்களின் பிரதிநிதிகள் இருப்பர் என்றும் கூறப்பட்டது. சட்டசபையில் சீர்திருத்தம் பற்றிய விவாதம் முதலாளி வகுப்புக்குள் இருந்த இரு பிரிவினர் தமக்குள் மோதிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது. எஸ்.சி. ஒபயசேகர சீர்திருத்த ஆலோசனைகளை எதிர்த்துப்பேசினார். தேர்தலின்மூலம் சிலரைத் தெரிவு செய்வதான சலுகையை லண்டனில் உள்ள காலனிகளுக்கான அலுவலகமே வழங்க முன்வந்த வேளையில் எஸ்.சி. ஒபயசேகர அதனைக்கூட எதிர்த்தார். பிரித்தானியர்களான இலங்கை உத்தியோகத்தர்களும், எல்லா இனக்குழுமங்களைச் சேர்ந்த பழமைவாதிகளும் ஒபயசேகரவின் கருத்தை ஏற்கவில்லை. சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் ஒபயசேகர பழமைவாதக் கண்ணோட்டத்தை வெளியிட்டார். நாடு தேர்தல்மூலமான தெரிவுக்கு ‘இன்னும் பக்குவப்படவில்லை’ என்றார்.

சில அமைப்புகளையும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில கபடம்மிக்க நபர்களையும் கொண்டதும், தமது தீய நோக்கங்களை அடைவதற்காக செயற்படுவதுமான இந்த இயக்கம் பற்றி இராஜாங்கச் செயலாளருக்குச் சரியாக எடுத்துக்கூறப்பட்டிருந்தால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார். இந்தியாவில் நடந்ததுபோன்று இங்கேயும் அமைதியின்மையும் பிரச்சினையும் தோன்றும் என்று அவரை நம்பச் செய்துள்ளார்கள். அப்படி ஒன்றும் இங்கே நிகழப்போவதில்லை. இலங்கையரைப் போன்று விசுவாசம்மிக்க மனிதர்களைக் கொண்ட இடம் உலகில் எங்குமே கிடையாது. இலங்கையர்கள் தேர்தல் முறையை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சிங்களவர்களும் பிற இலங்கையர்களும் அதனை ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கவில்லை. மாறாகப் பேராபத்து என்றே கருதுகிறார்கள் (ஹன்சார்ட், 28 செப். 1910: 312-13).

இவ்விதமாக பழமைவாதக் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக ஒபயசேகர எடுத்துக்கூறியது பலரையும் கொதிப்படையச் செய்தது. அப்போது பதில் சட்ட அதிபதி நாயகமாக இருந்த வால்டர் பெரேரா, சீர்திருத்தத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஒருவர். அவர் ஒபயசேகரவிற்கு எதிராகக் காரசாரமான கண்டனத்தைத் தொடுத்தார். “ஒபயசேகரவின் மனப்பாங்கு, தேர்தல்முறையை உடனடியாகவே அறிமுகப்படுத்த வேண்டும், நியமனமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்குப் பலம் சேர்க்கும் ஒன்றாகவே உள்ளது” என்று குறிப்பிட்டார். சட்டசபையில் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 11 பேர் தேர்தல்முறைக்கு ஆதரவாகவும் 5 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எதிராக வாக்களித்தோர்: ஐரோப்பியர் – 3 பேர், முஸ்லிம் உறுப்பினர் அப்துல் ரகுமான் மற்றும் ஒபயசேகர ஆகியோராவர்.

படித்த இலங்கையர் ஆசனத்திற்கான முதலாவது தேர்தல் 1911 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தல் முதலாளித்துவ வர்க்கத்தின் இரு பிரிவினர்களுக்கும் இடையிலான மோதலை மீண்டும் புதுப்பிப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது. இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையோர் மிகக்குறைந்த தொகையினராக (2,957) இருந்தனர். ஆங்கிலம் கற்ற இச்சிறுதொகை வாக்காளர்களுக்கு வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது. பொ. இராமநாதன், மார்கஸ் பெர்னாண்டோ என்ற இரு வேட்பாளர்களே களத்தில் நின்றனர். பெர்னாண்டோ ‘சுய முயற்சியால் முன்னேறிய மனிதர்’ (Self made man) என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். பரீட்சைகளில் திறமையைக் காட்டிச் சாதனை படைத்தும், பெரிய இடத்து விவாக சம்பந்தம் மூலமும் பொருளாதார – சமூக அந்தஸ்தில் மிக விரைவாக உயர்ந்து சென்றவர். 1864 ஆம் ஆண்டில் அன்றூ பெர்னாண்டோ என்பவரின் மகனாகப் பிறந்த மார்க்கஸ் பெர்னாண்டோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் ‘அதீத விவேகம் மிக்கவர், இவ்வாறான சாதனைகளைப் படைத்த இலங்கையர் வேறு யாருமில்லை’ என்ற புகழ்ச்சிக்குரியதாக இருந்தது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிக்குப் புலமைப்பரிசில் பெற்று, 1883 ஆண்டில் அங்கு சென்ற பெர்னாண்டோ 1888 இல் எம்.பி. (M.B) பட்டத்தையும் 1889 இல் எம்.டி. (M.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1891 இல் இலங்கை திரும்பியதும் இலங்கை மருத்துவக் கல்லூரியின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொழும்புப் பொதுமருத்துவமனையின் மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1891 ஆம் ஆண்டிலேயே இவரின் திருமணமும் நடைபெற்றது. சாள்ஸ் டி சொய்சாவின் மகள் மேரி பிரான்சிஸை பெர்னாண்டோ மணம் முடித்தார் (இதே ஆண்டில் இவருக்கு முன்பதாக இவரது தமையனார் சி.எம். பெர்னாண்டோ, சாள்ஸ் டி சொய்சாவின் இன்னொரு மகளை திருமணம் செய்தார்). மார்கஸ் பெர்னாண்டோவுக்கு ரூ 200,000 காசும் பிற சொத்துகளும் சீதனமாகக் கிடைத்தது. பெர்னாண்டோ பின்னர் பக்டீரியா ஆராய்ச்சி நிலையத்தின் (Bacteriological Institute) பணிப்பாளராக நியமனம் பெற்றார். இந்த நிறுவனம் டி சொய்சா குடும்பம் வழங்கிய நன்கொடைகொண்டு ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (றைட், 1907:549-50). அக்காலத்தில் பெரிய இடத்து திருமணப் பந்தங்களைச் செய்து கொண்ட பிற உயர்தொழில் உத்தியோகத்தர்கள் போன்றே பெர்னாண்டோவும் பெருந்தோட்ட உடைமையாளரானார். உயர் தொழில்தகைமைகள், நில உடைமை, முக்கிய குடும்பங்களோடு உறவுமுறைத் தொடர்புகள் என்ற தகுதிகளைக் கொண்டிருந்த பெர்னாண்டோவைப் புதிய பணக்காரர் குழுமம் தமது வேட்பாளராகத் தேர்ந்து கொண்டது.

1911 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரான பொ. இராமநாதன் சிங்களவரான மார்கஸ் பெர்னாண்டோவைத் தோற்கடித்தார். மேலோட்டமான பார்வையில் இந்நிகழ்வு படித்த சிங்களவர்களின் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுவதாகத் தோற்றலாம். ஒரு சிங்களவருக்குப் பதிலாக தமிழர் ஒருவருக்கு அவர்கள் வாக்களித்ததன் மர்மம் யாது? இந்த புதிரை விடுவிக்கும் விளக்கம் ஒன்று அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. சிங்கள கொவிகம சாதியினருக்கும் கராவ சாதியினருக்கும் இடையிலான சாதிப்போட்டியின் விளைவே இதுவெனவும், கொவிகம சிங்களவர்கள், சிங்கள கராவ ஒருவரைவிட தமிழ் வேளாளர் ஒருவரைத் தேர்ந்து கொள்வதற்கு விரும்பினர் (வேளாளர், கொவிகமவுக்குச் சமதையான தமிழ்ச் சாதி) என்பதாக இவ்விளக்கம் அமைந்தது. இந்த விளக்கத்தின்படி கொவிகம – கராவ என்ற சாதிகளிடையே கசப்புணர்வு தீவிரமாக இருந்தது. இத்தேர்தல் போட்டி பற்றிக் கருத்துரைக்கும் கே.எம்.டி. சில்வா “விறுவிறுப்பும் உயிர்ப்பும் கொண்டதான மிக வித்தியாசமான தேர்தல், சாதிப்போட்டி உச்சத்திற்குச் சென்றது (1973b:387)” என்று குறிப்பிடுகிறார்.

கொவிகம சாதியினரில் பலர் கராவமீது விரோதம் பாராட்டினர் என்பது உண்மைதான். ஆயினும் 1911 ஆம் ஆண்டுத் தேர்தல் முழுமையாகச் சாதியடிப்படையிலான போட்டியாக இருந்தது என்று கூறுவது தவறு. வேட்பாளர் இருவருக்கும் அரசியல் அடிப்படையில் பல வேறுபாடுகள் இருந்தன. இராமநாதன் இளமைக்காலத்தில் முற்போக்கான விடயங்களுக்காக குரல் கொடுத்தவர். இத்தேர்தல் நடந்தவேளை அவருக்கு 60 வயது ஆகியிருந்தது. அவர் ஒரு பழமைவாத அரசியல்வாதி என்பது நாடறிந்த தொன்றாகியிருந்தது. இதனால் அவர் எல்லாச் சமூகத்திலும் இருந்த பழமைவாதிகளுக்கு ஏற்புடைய ஒருவராக இருந்தார். இராமநாதனின் கொள்கைப் பிரகடனத்தில் எவ்விதமான தீவிர முற்போக்கு கருத்துகளும் இடம்பெறவில்லை. அவர் வரிச்சீர்திருத்தம், கிராமத் தலைமைக்காரர்களுக்குக் கூடிய சம்பளம், நாட்டில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் செய்யப்படுதல் ஆகிய விடயங்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார். பெர்னாண்டோவின் கொள்கைப் பிரகடனமும் தீவிரத்தன்மையைக் கொண்டிராதபோதும், முதலாளித்துவ வகுப்பின் தேவைகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் ரயில் சேவைகளை விஸ்தரித்தல் பற்றியும், கைத்தொழில் கல்விக்கான வசதிகளை வழங்குதல் பற்றியும் குறிப்பிட்டார். தாம் கல்வியறிவால் மேம்பட்ட அறிவாளி வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் ‘ஐக்கியப்பட்ட இலங்கைச் சமூகம், அரசியல் விடுதலை ஆகிய மக்களின் அபிலாசைகளையும் நம்பிக்கைகளையும்’ பிரதிநிதித்துவம் செய்பவன் என்றும் தன்னைக் குறிப்பிட்டார் (ஜயசேகர 1970: 181-82). இராமநாதனுக்கு தேர்தலில் 1645 வாக்குகள் கிடைத்தன. அவர் 664 மேலதிக வாக்குகளைப்பெற்று சட்டசபையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார்.

1911 ஆம் ஆண்டுத் தேர்தல் சிங்களவர், தமிழர் என்ற இரு இனத்தவர்களிடையேயும் இருந்த பழமைவாதிகள் இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டிருந்ததைக் காட்டுகிறது. இதன்பொருள் சிங்கள கொவிகம, சிங்களவரான கராவவைவிட தமிழ் வேளாளரை விரும்பி ஏற்றனர் என்பதன்று. பெரும்பாலான சிங்களப் பழமைவாதிகள் சீர்திருத்தவாதியான சிங்களவர் ஒருவரைவிடப் பழமைவாதியான தமிழர் ஒருவரையே விரும்பினர் என்பதே இத்தேர்தல் முடிவு எடுத்துக்கூறும் உண்மையாகும். அத்தோடு கண்டியின் உயர்குடி நிலப்பிரபுக்களும் இராமநாதனுக்கே தமது ஆதரவை வழங்கினர். இந்நிலப்பிரபுத்துவக் குடும்பங்களுக்கு சீர்திருத்தவாதியான பெர்னாண்டோவைவிட பழமைவாதியான இராமநாதனின் கருத்துகள் ஏற்கத்தக்கனவாய் இருந்தன. பௌத்தர்களும் பௌத்தர்களது நலன்களுக்காகவும் வாதாடிய இந்துவான இராமநாதனை ஆதரித்ததும், கிறிஸ்தவரான மார்க்கஸ் பெர்னாண்டோவை நிராகரித்ததும் இயல்பானதே. தமிழ் மத்தியதர வகுப்பும் இராமநாதனையே ஆதரித்தது. யாழ்ப்பாணத்தின் 440 வாக்குகளில் 410 வாக்குகள் இராமநாதனுக்குக் கிடைத்தன (வைத்திலிங்கம் 1977: 584).

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் மத்தியில் இருந்த பழமைவாதிகள் தமது வர்க்க நலன்களோடு ஒத்துப்போகக்கூடிய ஒருவரையே விரும்பினர். அத்தகையவர் இன்னொரு இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவராய் உள்ளார் என்பது இரண்டாம் பட்சமான காரணமாகும். பெர்னாண்டோ முதலாளித்துவ வகுப்பின் உயர்தொழில் பிரிவினர்களின் ஆதரவைப் பெற்றார். உயர்தொழில்களில் இருந்த கொவிகம சாதியினரும் பிறசாதியினரும் இராமநாதனைவிட பெர்னாண்டோ முற்போக்கான வேட்பாளர் என்பதைக் கண்டனர். ஈ.ஜி. ஜயவர்த்தன, டாக்டர் சி.ஏ. ஹேவவித்தாரண, எட்மண்ட் ஹேவவித்தாரண, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, டி.டி. பெட்ரிஸ், எச்.ஜே.சி. பெரேரா ஆகியோர் பெர்னாண்டோவை ஆதரித்தனர். இறுதியாகக் குறிப்பிட்ட எச்.ஜே.சி. பெரேரா அக்காலத்தின் தலைசிறந்த நியாயத்துரந்தரராவார்; 1908 ஆம் ஆண்டில் அவர் சீர்திருத்தப் பிரசார இயக்கத்தை நடத்துவதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். “பெர்னாண்டோ முன்னேற்றம், விடுதலை ஆகியவற்றை வேண்டி நிற்கும் சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்றும், கல்விபெற்ற வாக்காளர்கள் கீழைத்தேயத்தின் சிந்தனை முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள்” என்றும் பெரேரா கூறினார் (ஜயசேகர 1970: 181-82).

புதுப்பணக்காரர்களான முதலாளி வகுப்பினர் தமக்குச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவந்த கோரிக்கைக்கு 1912 ஆம் ஆண்டிலேயே பயன் கிடைத்தது. அவ்வாண்டில் சாள்ஸ் டி சொய்சாவின் இரண்டாவது மகன் ஏ.ஜே.ஆர்.டி. சொய்சா கரைநாட்டுச் சிங்களவர்களிற்கான இண்டாவது பிரதிநிதியாக நியமனம் பெற்றார். முதலாவது பிரதிநிதியாக எஸ்.சி. ஒபயசேகர நியமனம் பெற்றார். பிரித்தானிய ஆட்சியாளர்கள் இவ்விதம் புதுப்பணக்காரர்களான முதலாளி வகுப்பின் இருப்பை ஏற்று அங்கீகரித்து அவர்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமனம் செய்தபோது, ஆட்சியாளர்கள் அவ்வகுப்பின் திறமை வாய்ந்த அரசியல் பிரசாரகர்களையும் ஆளுமைமிக்க நபர்களையும் ஒதுக்கிவிட்டனர் என்பது முக்கிய கவனத்திற்குரியது. ஜேம்ஸ் பீரிஸ், மார்கஸ் பெர்னாண்டோ போன்றவர்களை ஒதுக்கிவிட்டு அவர்களிலும் குறைந்த தகைமையை உடையவரான ஏ.ஜே.ஆர்.டி. சொய்சாவை அரசாங்கம் சட்டசபைக்கு நியமித்தது. 1869 இல் பிறந்தவரான ஏ.ஜே.ஆர்.டி. சொய்சா கொழும்பிலும், இங்கிலாந்திலும் கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டி ஹாலில் இரு வருடம் படித்த சொய்சா தமது பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்திசெய்யாமல் 1890 இல் அவரது தந்தையார் இறந்தபோது நாடு திரும்பினார். குடும்பத்தின் பேரளவு சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். லிண்டா முலாகே டேவிட் டி சில்வா என்னும் பணக்கார சாராயக் குத்தகைக்காரரின் மகளை விவாகம் செய்தார். 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 3000 ஏக்கர் தேயிலை, ரப்பர், தெங்குத் தோட்டங்கள் இருந்தன (றைட் 1907: 543). இவ்வாறாக ஏ.ஜே.ஆர்.டி. சில்வா சாராயக் குத்தகையாளர்கள், பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள், சொத்துடைமையாளர்கள் என்ற வகையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார். அவர் ஆட்சியாளர்களின் கண்ணில் ஆபத்தான பேர்வழியாகத் தோற்றவில்லை என்பது முக்கியம். சொய்சா ஏன் நியமிக்கப்பட்டார் என்பதற்குரிய அரசாங்கத்தரப்புக் குறிப்பின்படி ‘அவர் எந்தவொரு விடயத்தையும் தர்க்கமுறையில் எடுத்துச்சொல்ல இயலாதவர்’ என்று கூறப்பட்டது. இது ஆட்சியாளர் பார்வையில் நல்ல தகுதியாக மதிக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் ஏ.ஜே.ஆர்.டி. சொய்சாவின் சகோதரர் எல்.டபிள்யூ.ஏ. (வில்பிரட்) டி சொய்சா சிங்களவர் பிரதிநிதியாக சகோதரரின் இடத்திற்கு நியமிக்கப்பட்டார். 1884 இல் பிறந்த வில்பிரட் சொய்சா கொழும்பிலும், இங்கிலாந்தின் கிளவ் செஸ்டர் றோயல் விவசாயக்கல்லூரியிலும் கல்விகற்ற பின் நாடு திரும்பி குடும்பச் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். இவரும் தன் தமையனைப் போன்றே சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நபராக இருந்தார்.

1917 ஆம் ஆண்டில்தான் டாக்டர் மார்கஸ் பெர்னாண்டோவிற்கு சட்ட சபை நியமனம் கிடைத்தது. அவ்வாண்டில் கரைநாட்டுச் சிங்களவருக்கான பிரதிநிதியாக முதன்முதல் நியமனம் பெற்றார். அதன்பின் 1920-1925 வரை உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக மாற்றியமைக்கப்பட்ட புதிய சட்டசபையில் நியமனம் பெற்றார். சட்டசபை உறுப்பினரான இக்காலத்தில் மார்கஸ் பெர்னாண்டோ முற்போக்கு சீர்திருத்தவாதி என்ற நிலையில் இருந்து விலகி வெகுதூரம் சென்றிருந்தார். அவரது அரசியல் எதிரியாக முன்னர் இருந்த பொ. இராமநாதனுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு 1919 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸை ஆதரிப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். 1921 இல் காங்கிரஸின் கொள்கைகள் மாறியிருந்தன. ‘பழமைவாதக் கராவ தலைவர்களான மார்கஸ் பெர்னாண்டோ போன்றவர்களே அதன் கூட்டங்களில் பங்குபற்றும் அளவுக்கு’ காங்கிரஸ் மாறிவிட்டது (மேலது 484 மற்றும் 497). 1920க்களில் பெர்னாண்டோவுக்கு சேர் பட்டம் கிடைத்தது. அவர் தீவிர வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக ஆகினார். சீர்திருத்தங்களையும், சர்வசன வாக்குரிமையையும் எதிர்ப்பதற்கு உருவாக்கப்பட்ட யூனியனிஸ்ட் கட்சியின் (Unionist Party) உபதலைவராக அவர் செயற்பட்டார். இக்கட்சியின் தலைவராக மஹா முதலியார் சேர். சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இருந்தார். மஹா முதலியார் குடும்பத்தின் ஏனைய முக்கியஸ்தர்களான பீலிக்ஸ் டயஸ், வெஸ்லி டி சேரம், டொனல்ட் ஒபயசேகரம் என்போரும் பழமைவாதிகளான அப்துல் ரகுமான், கேட் முதலியார், ஏ.ஈ. ராஜபக்ச ஆகியோரும் யூனியனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். ‘காங்கிரஸின் கருத்துகளோடு உடன்பாடில்லாத பலம்மிக்க அரசியல் சிந்தனைக்கூடம் ஒன்று இந்த நாட்டில் உள்ளது’ (பண்டாரநாயக்க 1929: 290) என்பதை அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆராய வந்திருந்த டொனமூர் ஆணைக்குழுவினருக்கு எடுத்துக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது (பண்டாரநாயக்க 1929: 290).

ஜேம்ஸ் பீரிஸின் சரித்திரமும் ஏறக்குறைய மார்கஸ் பெர்னாண்டோவுடையதைப் போன்றே அமைந்தது. அவரும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் பேசியது கிடையாது; மிதவாத சீர்திருத்தங்களையே கேட்டார். முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில், இலங்கை தேசிய கழகத்தின் தலைவராக இவர் இருந்தார். அவர் அக்காலத்தில் சீர்திருத்தக் கோரிக்கைகளை கைவிடுவதற்கும் யுத்தம் முடியும் வரை இப்பிரச்சினையை ஒத்திப்போடுவதற்கும் சம்மதித்தார். பிரித்தானிய அரசின்மீது தான் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும் முகமாகவே இவ்வாறு செய்தார் (ஜயசேகர 1970: 450-1). மனிங் சீர்திருத்தங்களின்படியான புதிய சட்டசபை 1920 இல் அமைக்கப்பட்டபோது, அச்சபையில் 14 உத்தியோகத்தர்களுக்கும் 23 உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களுக்கும் இடம் கிடைத்தது. ஜேம்ஸ் பீரிஸ் கொழும்பு நகரத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, சட்டசபையில் தொடர்ந்து பதவி வகித்தார். அவ்வாண்டில் அவருக்கு சேர் பட்டம் கிடைத்தது. அப்பட்டம் கிடைத்தமையை அவர் பெரும்பேறாகக் கருதினார் போலும்; லண்டனில் உள்ள கொலிஜ் ஒவ் ஹெரல்ரிக்கு விண்ணப்பித்து பிரபுக்களுக்குரிய படை அணிகலன்களை அணிந்துகொள்ள விண்ணப்பித்தார். 1913 இல் ஜேம்ஸ் பீரிஸ் ‘நிலப்பிரபுத்துவத்தின் சரிவு’ பற்றிப் பேசியவர் (கெபிள் மற்றும் சூரியசேன 1950:82, ஜயசேகர 1970:425). இறுதிக்காலத்தில் பீரிஸ் மிகுந்த பழமைவாதியாக மாறினார். அவர் சர்வசன வாக்குரிமைக்கு எதிராகப் பேசினார். இலங்கைத் தேசிய காங்கிரஸின் அரசியல் சீர்திருத்தச் சிபார்சுகளை ஏற்றுக்கொள்ளாத ஜேம்ஸ் பீரிஸ் அவ்வமைப்பிலிருந்து விலகினார் (கெபிள் மற்றும் சூரியசேன 1950:88). கூடிய அளவிலான சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜேம்ஸ் பீரிஸ் பின்வருமாறு கூறினார்:

“நாடு சுயாட்சிக்கு இன்னும் பக்குவப்படவில்லை. பொதுத்திணைக்களங்களின் பொறுப்பையும் நாட்டின் பொதுவான நிர்வாகத்தினையும் ஒப்படைக்கக்கூடிய பயிற்சிபெற்ற தகுதியுடைய ஆட்களின் குழு இந்நாட்டில் உருவாகவில்லை (மேலது).”

சமத்துவம், முன்னேற்றம், சட்டசபைச் சீர்திருத்தம், வாக்களிக்கும் உரிமையைப் பரவலாக்கல் ஆகிய விடயங்களின் முன்னணிப் பிரசாரகர்கள் என்று சொல்லக்கூடியவர்களாய் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் விளங்கிய பெருமக்கள் இருவர் (மார்கஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ்) பழமைவாதிகளின் பக்கத்தில் சேர்ந்துகொண்டு சுயாட்சி, சர்வசன வாக்குரிமை ஆகியவற்றை எதிர்ப்பவர்களாக விரைவில் மாறினர் என்பது தெளிவாகிறது. 1920களின் பிற்பகுதியில் புதுப்பணக்காரர்களதும் பழைய பணக்காரர்களான முதலியார் குழுமத்தினதும் அடிப்படை நலன்கள் ஒன்றுபடுவதையும் வேறுபாடுகள் மறைவதையும் காண்கிறோம். வடிகட்டிய பழமைவாதிகளின் முகாமுக்குள் மிதவாத சீர்திருத்தவாதிகள் இக்காலத்தில் புகுந்துகொள்வதையும் காண்கிறோம். 1920களின் பின்னர் முன்னைய காலகட்டத்தின் அரசியல் முரண்பாடுகள் முடிவுக்கு வருவதையும், வர்க்க நலன்கள் மேலோங்கி முரண்பாடுகள் உள்ளடங்கிப்போவதையும் காண்கிறோம். இக்காரணத்தினால் முதலாளி வர்க்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் சட்டசபையில் இடம் பிடித்துக்கொண்டனர். 1931 இல் சர்வசன வாக்குரிமை கிடைத்த பின்னரும் முதலாளித்துவ வகுப்பின் பிரதிநிதிகளே சட்டசபையை ஆக்கிரமித்தனர்.  

The post காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2 appeared first on Ezhuna | எழுநா.

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

காலனித்துவ அரசியலில் வர்க்கமும் சாதியும் (Class and Caste in National Politics) என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘Nobodies to Somebodies: The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 18 ஆவது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும். 1833 முதல் 1948 வரையான காலத்தில் இலங்கையின் தேசிய அரசியலில் வர்க்கம், சாதி என்பனவற்றின் வகிபாகம் பற்றி ஆராயும் இக்கட்டுரையை பொருத்தம் கருதி இத்தொடரில் வெளியிடுகின்றோம்.

இலங்கை முதலாளிகளிடையே பழமைவாதிகள், மிதவாதிகள் என்ற இரு பிரிவினர் இருந்தனர். இவ்விரு பிரிவினரும் ஏகாதிபத்தியத்தில் தங்கியிருப்போராகவும் அதன் விசுவாசிகளாகவும் இருந்தனர். இவ்விடயத்தில் அவர்களிடையே பிரதான முரண்பாடுகள் என்று எவையும் இருக்கவில்லை. ஆயினும் இவ்விரு பிரிவினர்களிடையே அரசியல் விடயத்தில் சில பிளவுகள் ஏற்பட்டன. கொய்கம சாதியினரான சிங்கள முதலியார்கள் பிரிவு, ஏனைய சமூகங்களின் பழமைவாதிகளுடன் ஒன்று சேர்ந்து, இருந்துவரும் நிலையில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல், தமது நலன்கள் தொடர்ந்து பேணப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் விரும்பினர். இப்பழமைவாதிகள் கொய்கம, கராவ, சலாகம, துராவ, வகும்புர, நவண்டன ஆகிய சாதிகளில் இருந்தும் பிறசாதிகளில் இருந்தும் தோன்றிய புதுப்பணக்காரர்களை வெறுத்தனர். இச்சாதிகளில் இருந்து தோன்றிய புதுப்பணக்காரர்கள் ஏகாதிபத்திய ஆட்சி என்ற வரைசட்டகத்துள் நின்றுகொண்டே கொய்கம முதலியார் வகுப்பின் ‘நிலமானிய’ப் பகட்டையும், அவர்கள் அனுபவித்த சலுகைகளையும் கேள்விக்கு உட்படுத்தியதோடு அல்லாமல், தமக்கும் சமத்துவ அந்தஸ்தைக் கோரினர்; மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தையும், ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் வாக்குரிமையுடன்கூடிய அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தையும் கோரலாயினர்.

ஐரோப்பாவில் புதிதாக எழுச்சி பெற்ற முதலாளித்துவ வகுப்பு நிலமானிய வகுப்பின் சலுகைகளுக்கு எதிராகவும், சர்வாதிகார முடியாட்சிக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்பட்டது. தமது வர்க்கத்தின் அரசியல் உரிமைகளையும் அரசியல் பங்கேற்பையும் இவர்கள் கோரினர். தமது பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டதும் புதிய பணக்காரர்கள் தமக்கு அரசியல் உரிமை வேண்டும் என்று கூறத் தொடங்கினர். இருந்தபோதும் இலங்கையில் அரசியல் மட்டத்தில் தேசியவாத இயக்கம் தோன்றவில்லை. காரணம், முதலாளித்துவ வகுப்பு சாராம்சத்தில் சமரசப் போக்குடையதாயும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காததாயும் இருந்தது. முதலாளித்துவ வகுப்பால் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் கூடிய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எழுச்சி பெறும் புதிய முதலாளிகளுக்கு சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதையுமே கோரிக்கைகளாக முன்வைத்தன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சமூகச் சீர்திருத்தத்தையும் கோரின. அவர்களின் எதிர்ப்புக்குரிய பிரதான இலக்காக முதலியார் வகுப்பு இருந்தது. முதலியார்கள் பெற்றிருந்த சலுகைகளும், சுதேசிகளுக்கு காலனிய நிர்வாகத்தில் உத்தியோகப் பதவிகள் வழங்கியபோது, முதலியார் வகுப்பு அதனைத் தனது ஏகபோகமாக ஆக்கியதும், சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை முதலியார் வகுப்புக்குக் கொடுத்ததையும் புதிய பணக்காரர்கள் எதிர்த்தனர்.

காலனித்துவப் பின்னணியில் மதிப்புமிக்க தொழில்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆங்கிலக்கல்வியைப் பெறுவதன்மூலம் இத்தொழில்களைப் பெற்று சமூகப்படித்தரத்தில் உயர முடிந்தது. வெளிநாடு சென்று கல்வி கற்றும் செல்வந்த வகுப்பினர் இப்பதவிகளைப் பெற்றுத் தம் சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. இதனால் யாவருக்கும் உத்தியோகங்களில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பினரும் சட்டம், மருத்துவம் போன்ற உயர்தொழில்களில் புகமுடிந்ததேயன்றி பிறவகையான உத்தியோகங்களில் புக முடியவில்லை. பறங்கியர் தவிர்ந்த பிற இனத்தவர்களான சுதேசிகளிற்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படவில்லை. பறங்கியரும் எழுது வினைஞர்களாகவும், கீழ்நிலைப் பதவிகளிலுமே இணைத்துக் கொள்ளப்பட்டனர். உயர்பதவிகள் அவர்களுக்கும் வழங்கப்படவில்லை. 

புதிய பணக்காரர் வகுப்பினர் சொத்துகளைச் சேர்ப்பதன்மூலம் சமூகநிலையில் உயர்ந்தனர். ஆயினும் கல்விமூலம் உயர்பதவிகளைப் பெற்றுத் தமது சமூக அந்தஸ்தை உயர்த்த முடியவில்லையே என்ற மனக்குறை அவர்களுக்கு இருந்தது. கண்டியின் உயர்குலப் பிரபுக்கள் வம்சம் தமது சமூக மதிப்பை கல்வியாலும் உத்தியோகத்தாலும் மேலும் உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதுபோன்றே பழைய நிலஉடைமைக் குடும்பங்களைச் சேர்ந்த சிங்களவரும், முஸ்லிம்கள், போராக்கள், செட்டிகள் போன்ற குழுக்களும் உயர்தொழில்கள் மூலம் தம்மை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் சிங்களவர்களிடையும், தமிழர்களிடையும் தோன்றிய குட்டி முதலாளி வகுப்பினருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் போதியளவு இல்லாதநிலையில் கல்வியொன்றே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரே ஒரு வழியாக இருந்தது. கல்வி முன்னேற்றம் ஏற்பட்டபோது உத்தியோகங்களிற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் தொழில்களில் திறமைக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மொறட்டுவவைச் சேர்ந்த அலக்சாண்டர் தர்மரட்ன என்ற நியாயத்துரந்தரர் 1890 இல் ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடக்கினார். படித்த இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தர்மரட்ன கூறினார். பிரித்தானிய உத்தியோகத்தர்களின் கர்வத்தையும், தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாவனையையும் தர்மரட்ன கேலி செய்தார். கவர்னர் பதவி, குடியேற்ற நாட்டுக் காரியதரிசி பதவி, இராணுவத் தளபதி பதவி போன்ற ஒருசில பதவிகள் பிரித்தானியர் வசம் இருக்க வேண்டும் என்று கூறிய தர்மரட்ன பூரண அரசியல் சுதந்திரத்தைக் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ‘தகைமை, திறமை, அடைவும் தேர்ச்சியும் ஆகியவற்றால் தம்தரத்தை வெளிப்படுத்திய சுதேசிகளுக்கு உரிய பதவிகளை வழங்கலாம்’ என்பதே தர்மரட்னவின் கருத்தாகும். சிவில் சேவைப் பரீட்சைக்கு சிங்களமும் தமிழும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும் என்றும் தர்மரட்ன குறிப்பிட்டார்.

சட்டத்துறையில் உள்ள நிலைமையைச சுட்டிக் காட்டி நியாய துரந்தரர்களது கருத்தை எடுத்துக் கூறிய தர்மரட்ன “நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்கள், பறங்கியர்கள், கல்வி, திறமை, நேர்மை, செல்வம் என்பவற்றைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் நீதித்துறைப் பதவிகளை நிரப்புவதற்குப் பொருத்தமானவர்கள்” என்றும் “ஏனைய காலனிகளில் இலங்கை நியாய துரந்தரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை; இலங்கையில் அரச வழக்கறிஞர் பதவிக்கு இலங்கையர்களை நியமிக்க வேண்டும்” என்றும் தமது கருத்துகளைக் கூறினார்.

இலங்கையில் உத்தியோகத்தர்களாயிருந்த ஐரோப்பியர்கள் விசேட சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். தமக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதை கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பு உணர்ந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி உணர்வு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை தர்மரட்னவின் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் கீழ்நிலைப் பணியாளர்களும், எழுதுவினைஞர்களும் மிகவும் குறைந்த சம்பளத்தையே பெறுவதையும், பிரித்தானிய உத்தியோகத்தர்களின் ஆடம்பர வாழ்க்கையையும் ஒப்பிட்டு தர்மரட்ன நையாண்டி செய்தார். “பிரித்தானியாவில் இந்த உத்தியோகத்தர்களுக்கு குதிரையோ, பயணிப்பதற்கு வண்டியோ கிடைப்பதில்லை. இவ்வளவு எண்ணிக்கையான வேலையாட்களை அவர்களால் அங்கு வைத்திருக்க முடியுமா? இங்குள்ளதுபோல் அங்கு வைன் குடித்துக் களிக்கலாமா?” என்று கிண்டல் செய்தார். இளம் உத்தியோகத்தர்களான பிரித்தானியர்களுக்கு சட்டப்படிப்பு இல்லாவிடினும் நீதிவான் உத்தியோகம் கொடுக்கப்படுகிறது. ‘ஐரோப்பிய நீதிபதிகள் ஒரு ஐரோப்பியனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சுதேசி ஒருவனுக்கு நியாயம், வழங்கிய’ உதாரணங்கள் குறைவு. பாடசாலை விடுதிகளில் சுதேசிப் பெண் பிள்ளைகள் ‘ஐரோப்பிய பெண் பிள்ளைகளுடன் உடன் இருந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இவை போன்ற பல அநீதிகளை தர்மரட்ன சுட்டிக்காட்டினார் (தர்மரட்ன, 1890). சமத்துவ வாய்ப்புகள் இன்மை, பாரபட்சம் காட்டுதல் என்ற இரு விடயங்களும் புதிய பணக்காரர்களிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியவை. வழமையான இந்த முறைப்பாடுகளைவிட இன்னொரு முறைப்பாடும் இவர்களால் முன்வைக்கப்பட்டது. இது முதலாளித்துவ வகுப்புக்கு உள்ளே ஏற்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் என்ற சிக்கல் வாய்ந்த பிணக்கு ஆகும். அரசியல் பிரதிநிதித்துவம் என்ற இந்தப் பிணக்கை சாதிச்சச்சரவாக அல்லது சாதிப் போராட்டமாக சிலர் விளக்க முயன்றனர். ஆகையால் இது பற்றித் தனியாகப் பார்ப்போம்.

சட்டசபைப் பிரதிநிதித்துவம் தொடர்பான சர்ச்சைகள்

சட்டசபைப் பிரதிநிதித்துவம் 1833 முதல் 1912 வரை ஏறக்குறைய எவ்வித சீர்திருத்தமும் இல்லாமல் தொடரப்பட்டது. புதிய பணக்காரர்களினால் எழுப்பப்பட்ட முக்கிய சச்சரவாகவும் சண்டையாகவும் இது விளங்கியது சட்டசபையில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகத்தவர்களாவர். 6 பேர் உத்தியோகத்தவர் அல்லாதோராவர். உத்தியோகத்தவர் அல்லாதோரை கவர்னர் நியமிப்பார். வெவ்வேறு குழுக்களில் இருந்தும் ‘பிரதான வர்த்தகர்களையும்’, ‘சுதேசிகளின் உயர் வகுப்பினரையும்’ கவர்னர் நியமித்தார். 1889 வரை சிங்களப் பிரதிநிதி ஒருவர் இருந்தார். அவ்வாண்டு முதல் கண்டியச் சிங்களவர் ஒருவரும், கரைநாட்டுச் சிங்களவருக்கு மேலதிகமாக நியமிக்கப்பட்டார். 1830களில் இருந்து 1889 வரை சிங்களவரைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள், 1889 இல் நியமிக்கப்பட்ட கரைநாட்டுச் சிங்களவர் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் பண்டிதரட்ண(1839-43)
யே.ஜி. டயஸ்(1843-60)
ஹென்றி (ஹரி) டயஸ்(1861-65)
ஈ.எச். டெகியாகம(1865-75)
யேம்ஸ் டி அல்விஸ்(1875-78)
யே.பி. ஒபயசேகர(1878-81)
ஏ.எல்.டி. அல்விஸ்(1881-88)
ஏ.டி.அல்விஸ் செனிவிரத்ன(1888-1900)
எஸ். கிறிஸ்ரோபல் ஒபயசேகர(1900-11)

இப்பட்டியலில் உள்ளவர்களில் டெகியாகம தவிர்ந்த பிறயாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒன்றிற்குள் ஒன்று திருமணம் செய்துகொள்ளும் உறவுக் குழுமமான இந்தக் குடும்பத்தில் இருந்தே மஹா முதலியார் என்ற பதவிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இக் குடும்பத்தினர் அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுமாவர் இவர்களுள் யே.ஜி. டயஸ், ஹரி டயஸ் என்போர் சகோதரர்கள். இவர்களின் சகோதரி ஒருவரைத் திருமணம் செய்தவர், உறவுக்காரரான ஜேம்ஸ் டி அல்விஸ்; ஜே.பி. ஒபயசேகர, அவரின் சகோதரர் எஸ்.சி. ஒபயசேகர ஆகியோர் டயஸ் சகோதரர்களின் உறவினர்களாவர். இவ்விதம் பட்டியலின் ஐந்து உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் மிகநெருங்கிய உறவினர்களாய் இருந்தனர். சட்டசபை நியமனம்பெற்ற சிங்கள உறுப்பினர்கள், நில உடைமையாளர்களான இந்தக் கொவிகம நிலப்பிரபுத்துவ அந்தஸ்தை தமக்கு வரித்துக்கொண்டதோடு ‘முதல் தர கொவிகம’ என்று தம்மைக் கருதலாயினர்.

“சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் என்பது எமது குடும்பத்துக்குரியது என்றாகிவிட்டது. இப்படியிருந்தபோது அவர்கள் ஒரு வெளியாளான தெகியாகம என்ற கண்டியைச் சேர்ந்த புறர்டரை நியமித்தார்கள். அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைதானும் பேசவராது. அவர் கல்வி அறிவில் குறைந்தவராயினும் அடக்கம் உடையவர். அவர் கவர்னரிடம் சென்று தம்மை நியமிக்க வேண்டாம் என்று சொன்னார். கவர்னர் அவருடைய முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார் ‘எனது பிரியமான தெகியாகம அவர்களே, உம்மையொத்த ஒருவர்தான் எங்களுக்கு சட்டசபை நியமனத்திற்குத் தேவை!’ கவர்னர் தெகியாகமவையே நியமித்தார். இருந்தாலும் மீண்டும் அந்த ஆசனம் எங்கள் குடும்பத்து யேம்ஸ் டி அல்விஸ்க்கு வந்தது. அதையடுத்து யே.பி. ஒபயசேகரா…. அதற்குப்பின் அல்பேர்ட். டி அல்விஸ் என்ற எமது இன்னொரு உறவினர்.”

-லயனல் வெலிங்டன் டியூக் சேரம் எழுதிய கடிதம் ஒன்றில் உள்ள பகுதி (குணரத்ன 1986: 39:40. மேற்கோள்).

60 வருடங்களுக்கு மேலாக சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை தம் குடும்பச்சொத்தாக வைத்துக்கொண்டிருந்த இக்குழுமத்திற்கு, முதலாளித்துவத்தின் புதுப்பணக்காரர் பிரிவில் இருந்து எழுந்த எதிர்ப்பு இயல்பானதொன்றே. 1878 இல் இப்பதவி வெற்றிடமானபோது புதுப்பணக்காரர் பிரிவு தம்மவரில் ஒருவரை இப்பதவிக்கு நியமிக்கும்படி சிபார்சு செய்து கோரிக்கைவிட்டது. இக்கோரிக்கை கவனிப்பைப் பெறாமல் போனதும் அடுத்த 30 வருடகாலத்தில் பதவி வெற்றிடம் ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் இப்பிரிவினர் கரைநாட்டுச் சிங்களவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சிபார்சுடன் கோரிக்கைகளை வைத்து, நியமனத்தை தம்மவருக்கு வழங்கும்படி வாதாடிவந்தனர். இவர்கள் சிபார்சு செய்தவர்கள் மிகுந்த கல்வியறிவு படைத்தவர்களாயும் கராவ முதலாளித்துவப் பிரிவைச் சார்ந்தவர்களாயும் இருந்தனர். பல தடவைகளில் இந்த எதிர்ப்பு இயக்கம் கசப்புணர்வும் தீவிரமும் மிக்கதாய் இருந்தது. வரலாற்றாசிரியர்கள் சிலர் இதனை கொவிகம – கராவா சாதிச்சண்டையாக விளக்கம் கொடுத்தனர். தர்மரட்ன 1890 இல் வெளியிட்ட சிறுநூல் ‘கரா – கொய் போட்டி’ (Kara – Goi Contest) என்ற தொடரைத் தலைப்பில் கொண்டிருந்தது.

முதலியார் குழுமத்திலிருந்த சட்டசபையின் சிங்கள ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டோருக்கும் புதுப்பணக்காரர் சிபார்சு செய்தவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் வெளிப்படையானவை. முதலியார்களின் பிரதிநிதிகள் ஆளுமைக் கவர்ச்சியற்றவர்கள், அவர்களின் ஒரே ஒரு ‘தகுதி’ குடும்பத் தொடர்புகள் ஆகும். அவர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டவர்கள் உயரிய கல்வியும், திறன்களும் உடைய இளைஞர்கள்; வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள். பிரித்தானியர்கள், நல்ல குடும்பப் பின்னணியையும், சட்டசபையில் அதிகம்பேசாது, வாய்திறக்காமல் இருக்கக்கூடியவர்களையும் நியமிக்கவே விரும்பினர். புதிய பணக்காரர்கள் செய்த முறைப்பாடுகள் நியாயமானவை. யே.ஜி. டயஸ் சிங்களவர் பிரதிநிதியாகச் சட்டசபையில் 17 வருடங்கள் இருந்தார். ‘இவரைப் பற்றிக் குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை. இவரது சகோதரர்களின் விவேகமும், புத்திக்கூர்மையும் இவரிடம் காணப்படவில்லை’ என்று வெயின்மன் குறிப்பிட்டிருக்கிறார். டெகியாகம 1865 முதல் 1875 வரை நீண்டகாலம் உறுப்பினராக இருந்தார். இப்பத்து வருடகாலத்தில் அவர் சட்டசபையில் வாய் திறந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும் அவர் பேசினார். ‘இப்பேச்சுதான் உலகின் சட்டசபையின் சரித்திரத்தில் உறுப்பினர்களில் ஒருவர் பேசியிருக்கக்கூடிய மிகச்சிறிய உரை. ஒரு தீர்மானத்திற்கு அவர் ‘ஐ ஓல் சோ’ (I also) என்ற சொற்களைக்கூறி வழிமொழிந்தார் (வெயின்மன், 1947. P. 10-11). இருந்தபோதும் முதலியார் குழுமத்தின் சில புத்திசாலிகளான உறுப்பினர்கள் தம்திறமையை சட்டசபையில் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஹென்றி டயஸ் மிகச் சிறந்த நியாய துரந்தரராக விளங்கியவர்: பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். யேம்ஸ் டி அல்விஸ் ஒரு புலமையாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அக்காலத்தில் பெரும் ஆளுமைகளுள் ஒருவர்’ (மேலது: 11). 

முதலியார் குழுமத்திற்கும், கராவப் பணக்காரர்களுக்கும் இடையிலான சண்டை அரசியல் அரங்கில் இடம்பெற்ற சாதிச்சண்டையாகத் தோற்றலாம். இது உண்மையல்ல. முதலியார் வகுப்பு ‘முதல் தர கொவிகம சாதியின் அறியப்பட்டோராக’ (First Class Govigama Somebodies) இருந்தனர். அவர்களின் சமூக அந்தஸ்து நில உடைமையையும், சாதியின் உயர்படி இருப்பையும் ஆதாரமாகக்கொண்டது. பணக்காரர்களான கராவ ‘அநாமதேயங்கள்’ (Nobodies), பணத்திலும் கல்வியிலும் முதலியார் வகுப்பைவிட முன்னணிக்கு வந்திருந்தனர். அத்தோடு காணிகளை பெருமளவில் கொள்வனவு செய்து காணி உடைமையாளர்களும் ஆயினர். முன்பு காணி உடைமை என்றால் அது முதலியார்களுக்கு உரிய சிறப்பாக இருந்தது. இப்பின்னணியில் இவ்விரு தரப்பினருக்குமான சண்டையை நுணுகி ஆராய்ந்தால் உருவத்தில் சாதிச்சண்டையாக தென்படும் இச்சண்டை உள்ளடக்கத்தில் ஒரே வர்க்கத்தின் இரு பிரிவினருக்கிடையிலான முரண்பாடு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

முதலாளித்துவ வகுப்பின் பழைய பிரிவினர் நில உடைமையால் வரும் சமூகத்தகுதியைக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வந்தனர். புதுப்பணக்காரர்கள் தொடக்கத்தில் வர்த்தக நடவடிக்கைகள்மூலம் பணத்தைச் சேர்த்து, அப்பணத்தைக்கொண்டு உயர் சமூகத்தகுதிக்குத் தேவையான காணி உடைமையையும் ஏனைய அடையாளச்சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர். இதனால் பழைய முதலாளிகளிற்கு ஏற்பட்ட பகைமையுணர்வும் போட்டியும் இரு தரப்பாருக்கும் இடையிலான மோதல்களுக்குக் காரணமாயிற்று.

வர்க்கமொன்றிற்கு உள்ளே நடந்த மோதல்

சட்டசபையில் சிங்களவருக்கான ஆசனம் தொடர்பான பெரும்மோதல் 1878 ஆம் ஆண்டில் புதிய முதலாளி வகுப்பால் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வாண்டில் யேம்ஸ் டி அல்விஸ் இறந்ததால் இப்பதவி வெற்றிடமாயிற்று. இந்த ஆசனம் அதற்குப் பின்னர் 1881, 1888, 1895, 1900, 1905 ஆகிய ஆண்டுகளில் வெற்றிடமாகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இம்மோதல் மீண்டும் மீண்டும் இடம் பெற்றது. 1878 இல் முதல் தடவையாக முயற்சியாளர்குழு சட்டசபை நியமனம் தமது தரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியபோது மொரட்டுவவின் கராவ முதலாளியாகிய ஜோர்ஜ் அலெக்சாண்டர் தர்மரட்னவை முன்னிறுத்தியது. பிரித்தானியாவில் கல்விகற்ற தர்மரட்ன 1874 இல் பாரிஸ்டராக தொழில்புரியும் தகைமையை பெற்றார். இவரது தந்தை எச்.ஏ. தர்மரட்னவும் 1820களில் இங்கிலாந்துச் சென்று கல்விகற்றவர். பின்னர் இலங்கையில் அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றினார். 1878 இல் ஜி.ஏ. தர்மரட்னவின் பெயர் சட்டசபை நியமனத்திற்காகச் சிபார்சு செய்யப்பட்டவேளையில் கராவ சாதியினரில் அதி உயர் கல்வித்தகைமை உடையவராக அவர் கருதப்பட்டார். அக்காலத்தில் முன்னணியில் திகழ்ந்த முதலாளிகளும், நிலச்சொத்துகளின் உடைமையாளர்களுமான சுசூ சொய்சா, சாள்ஸ் டி சொய்சா, யெரொனிஸ் பீரிஸ், லின்டாமுலாகே யாக்கோப் டி சில்வா என்ற நான்கு பேர்கள் ஜி.ஏ. தர்மரட்னவின் நியமனத்தை முன்வைத்து ஆதரித்தனர். இந்நான்கு முதலாளிகளும் தமது ஆரம்ப மூலதனத்தை சாராயக்குத்தகை வியாபாரம்மூலம் தேடிக்கொண்டனர். பின்னர் பெருந்தோட்டங்களிலும் முதலீடு செய்தனர். பெரும்செல்வம் என்ற தகுதி மட்டுமல்லாமல் பிறதகுதிகளையும் அவர்கள் தேடிக்கொண்டனர். கிறிஸ்தவத்தை தழுவுதல், மேற்குமயமாதல்மூலம் நாகரிகத்தை விரைந்து ஏற்றல் ஆகிய தகுதிகளையும் பெற்றனர். இந்நான்கு பேரும் தர்மரட்னவின் சார்பில் குடியேற்ற நாட்டுக்காரியதரிசிக்கு விண்ணப்பம் செய்தனர். சட்டசபையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதி உச்சமான தகுதிகளைப்பெற்ற ஒருவர் என்றால் அது தர்மரட்னதான் என்று தம்விண்ணப்பத்தில் குறிப்பிட்டதோடு தர்மரட்னவின் தந்தையார் பிரித்தானிய அரசாங்கத்தில் விசுவாசம்மிக்க உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதையும் பதிவு செய்தனர். இருப்பினும் இப்புதிய வர்க்கத்தின் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. பழைய முதலாளி வகுப்பின் மிக விருப்புக்குரிய குடும்பத்தின் உறுப்பினரான ஜேம்ஸ் பீட்டர் ஒபயசேகர 1878 இல் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்.

சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை கிறிஸ்தவ, கொய்கம, முதலியார் குடும்பம் ஒன்றின் ஏகபோகமாக ஆக்கும் கொள்கை தொடரப்பட்டது. இது சிங்கள சமூகத்தின் பிறபகுதியினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. பணக்காரர்களான கிறிஸ்தவ முதலாளிகள் மட்டுமல்லாது எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த பெளத்தர்களும் தம் அதிருப்தியை வெளியிட்டனர். 1881 இல் களுத்துறையில் புறக்டராகப் பணியாற்றிய ஏ.எல்.டி. அல்விஸ் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார். இது வெளிப்படையான பாரபட்சமான செயலாகக் கருதப்பட்டது. அல்விஸ் ‘பழைய தலைமுறையின் மிகச் சிறந்த கனவான். ஆயினும் குடும்பத் தொடர்பு என்ற விடயம்தான் அவரைத் தெரிவு செய்ததில் பிரதானம் பெற்றது என்பது யாவரும் அறிந்த ஒன்று’ என்று வெயின்மன் (1947: 11) குறிப்பிட்டார். 1883 முதல் 1890 வரை கவர்னராக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இதனைத் திட்டமிட்டே செய்து வந்தார்; பிரித்தானிய அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கும் முதலியார் குழுவிற்கு நியமனங்களைத் தொடர்ந்து வழங்குவதே அவரது கொள்கை என்பது தெளிவாகத் தெரிந்தது. “பிரித்தானியருக்கு முதலியார்கள் பதவியில் இருந்து விசுவாசத்துடன் சேவை செய்த குடும்பம் என்பதுதான் முக்கியம். அறிவிலும் திறமைகளிலும் மட்டமானவர்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதல்ல.” என்று கே.எம்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார் (1973: 243)

1880களின் பத்தாண்டுகாலத்தில் முதலாளிகளின் கழகங்களும், உயர்தொழில் துறையினரின் சங்கங்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில், பல இனங்களையும் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். 1882 இல் இலங்கை விவசாயக்கழகம் (Ceylon Agricultural Association) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் முன்னணி முதலாளிகளில் ஒருவரான சாள்ஸ் டி சொய்சா இக்கழகத்தின் தலைவராக இருந்தார். அக்காலத்தின் முக்கிய முதலாளிகளான பி. ஆனல்ட் டயஸ், எல்.யூசி.டி. சில்வா, வி. யாக்கோப் டி மெல், எச். யெரொனிஸ் பீரிஸ் ஆகியோர் உள்ளடங்கிய முக்கிய பிரமுகர்களும் இக்கழகத்தின் செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். பொ. இராமநாதன் (சட்டசபை உறுப்பினர்) ஹெக்டர் வான் குல்யன்பேர்க் மற்றும் யோன் பெர்குசன் (இவ்விருவரும் முன்னணிப் பத்திரிகைகளின் உடைமையாளர்கள்), பிரான்சிஸ் பெவன், எவ்.சி. லூஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக, லூயிஸ் டி சொய்சா, பொ. குமாரசுவாமி ஆகியவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பிரமுகர்களாவர். 1888 இல் இலங்கை விவசாயிகள் கழகம் இலங்கைத் தேசியக் கழகம் (Ceylon National Association) என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர்மாற்றம் கழகத்தை ஓர் அரசியல் நிறுவனமாக ஆக்கும் துணிச்சலான செயல் எனக் கூறப்பட்டது. ஆனால் சாள்ஸ் டி சொய்சா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் பதவி விலகினார். பெயர்மாற்றத்தை வால்டர் பெரேரா, டெல்கே சாள்ஸ் பீரிஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக ஆகியோர் பிரேரித்தனர் (ஜயசேகர 1970: 126). 1890களில் யேம்ஸ் பீரிஸ் (யாக்கோப் டிமெல்லின் மருமகன்), சி.எம். பெர்னாண்டோ (சாள்ஸ் டி சொய்சாவின் மருமகன்) ஆகிய இளந்தலைவர்கள் இலங்கைத் தேசியக் கழகத்தில் மிகத்துடிப்போடு செயற்பட்டனர் (த சேர்ச் லைட், கிறிஸ்மஸ் இதழ், 1916).

1888 இல் சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் வெற்றிடமானபொழுது புதிய பணக்காரர்குழு தம்மவர் ஒருவருக்கு நியமனம்பெறும் முயற்சியில் மீண்டும் தோல்விகண்டது. கவர்னர் பழைய கொள்கையில் விலகாமல் நின்று, அலக்சாண்டர் டி அல்விஸ் செனிவிரத்தின என்ற நியாய துரந்தரரை சட்டசபைக்கு நியமித்தார். இவரும் குறிப்பிட்ட முதலியார் குடும்பத்தின் உறுப்பினரே ஆவர். 1889 இல் கண்டியச் சிங்களவருக்கு ஒரு பிரதிநிதியும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு சட்டசபைப் பிரதிநிதிகள் எண்ணிக்கையைக் கூட்டியதுதான் இக்காலத்தின் ஒரேயொரு முக்கிய மாற்றம். நியமிக்கப்பட்டோரின் பதவிக்காலம் 3 இல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டது. விரும்பினால் ஒருவரை மீண்டும் நியமனம் செய்யலாம் என்றும் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கை காரணமாக புதிய முதலாளிகள் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வின் தீவிரத்தை, இக்காலத்தின் கண்டன நூல்களின்மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை சாதியச் சொல்லாடலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இவை பணமும் கல்வியும் இருந்தபோதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூட மறுக்கப்பட்டதால் எழுந்த விரக்தியின் வெளிப்பாடு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜி.ஏ. தர்மரட்ன, “எழுந்தமானமானது; திருப்தியற்றது.” என்று கண்டித்ததோடு “சட்டசபையை, தேர்தல்மூலம் தெரியும் முறையின்படி திருத்தியமைத்தல் வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கையின் சட்டசபையின் சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கு நியமிக்கப்பட வேண்டியவருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் என்ன? என்பதைப் பிரசுரம்செய்து பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இங்கிலாந்து சென்று கல்விகற்றவர்களும், உயர்ந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுமான சிங்களக் கனவான்கள் பலர் வேட்பாளர்களாக முன்வந்தபோதும் அவர்களை ஒதுக்கிவிட்டு கொவிகம சாதிக் கனவான்களே பல்லாண்டுகளாக இப்பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். ‘கராவக்களுக்கும் இந்தக் கொவிகமக்களுக்கு இடையிலான பணக்கார அந்தஸ்து பற்றிய வேறுபாட்டை நாம் விளக்கமாகத் தந்துள்ளோம். அத்தோடு இங்கிலாந்தில் கல்விகற்றவர்களாக கொவிகமவைவிட அதிக எண்ணிக்கையிலான கராவ இருக்கின்றனர்.” (தர்மரட்ன, 1890: 63-64. ரூ. 74).

தர்மரட்னவின் கடுங்கோபம் இங்கே வெளிப்படுகிறது. ஏ.டி. அல்விஸ் செனிவிரத்தின வெளிநாடு சென்று படித்தவரல்லர்; ஏனைய போட்டியாளர்கள் அளவுக்குப் பணக்காரரும் அல்லர். 1849 இல் பிறந்த செனிவிரத்தின சென்ற் தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். 1883 இல் கொழும்பு முனிசிப்பல் சபை உறுப்பினரானார். 39 வயதில் நியாயதுரந்தரர் வேலையைச் செய்யத் தொடங்கினார் (றைட், 1907: 102). பிரித்தானியர்கள் செனிவிரத்தினவை அடக்கமும், விசுவாசமும் உள்ள டாம்பீகமற்ற பேர்வழியாகக் கருதி 1888 இல் அவரைச் சட்டசபை உறுப்பினராக நியமித்தனர். புதிய பணக்காரர்கள், செனிவிரத்தின மட்டமான திறன்களை உடைய ஒருவர் என்பதையும், தாம் பிரேரித்தவர்களின் மேதாவித்தனத்தையும், உயர்தகைமைகளையும் ஒப்பீடுசெய்து காட்டினர். தர்மரட்னவின் நூலின் கருத்துகள் சாதிய உள்ளடக்கத்தையுடையனவாகப் பார்க்கப்பட்டன. அவர் ‘முதல்தர கொவிகம’க்களின் பாசாங்கினை எடுத்துக்காட்டினார். புதிய பணக்காரர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார். கராவ சாதியினர் சத்திரிய வம்சத்தினர் என்பதை தம்நூலில் விவரித்துச் சொல்கிறார். கொவிகம தாழ்ந்த நிலையினரான சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய உயர் லட்சியங்கள் பற்றியும் எழுதியுள்ளார். குறிப்பாக தொழில்வாய்ப்புகளில் இனவாத பாரபட்சம் காட்டப்படுவதை எதிர்த்தார். பிரித்தானிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார, சமூகச் சலுகைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். வரிகளைக் குறைக்க வேண்டும்; சுதேச முயற்சியாளர்களுக்கு கடன்வசதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுத்தார். அவ்வகையில் சுதேசிய வர்த்தக முதலாளித்துவத்தின் உள்ளக் குமுறல்களை தர்மரட்ன வெளிப்படுத்தினார்.

தர்மரட்னவின் சிறுநூல் பிரஞ்சுப் புரட்சி, அடம்சிமித், முதலாளித்துவ சிந்தனையாளர் என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. இது அவரது கோரிக்கைகளின் வர்க்க உள்ளடக்கத்தினை எடுத்துக்காட்டுவதாகும். முதலாளித்துவச் சீர்திருத்தங்கள் விரைவாகப்பரவி முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். அரசாங்க உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றிக் கூறுமிடத்து அவர் சாதி என்பதைப் பேசாது பொதுவாகவே பேசுவது முக்கியமானதொரு விடயம். “முதலியார்கள், ரட்டே மஹாத்தயாக்கள், முகாந்திரங்கள் ஆகிய பதவிகளில் இருப்போர் சிங்களவர்களே ஆதலால் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.” என்று அவர் எழுதினார். வறுமையின் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் தானிய வரி, வீதி வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ‘செவிடர், ஊமை, ஊனமுற்றோர், பிச்சைக்காரர்’ ஆகியோருக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். அவர் நூலில் இருந்து மேற்கோளாகத்தரப்படும் பின்வரும் பகுதி எழுச்சி பெற்றுவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் உலகப்பார்வையை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

“தவறான சட்டங்களை இயற்றுதல், நீதியற்ற வரி விதிப்பு, அறவிட்ட வரிப்பணத்தைத் தவறான முறையில் செலவிடுதல் ஆகியவற்றால் நேர்ந்த துன்பங்கள்தான் பிரஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தன. ஆளும்குழுவின் உறுப்பினர்களான சிலர், ஆளப்படுவோர் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டவர்கள்; ஆளுவோரின் நன்மைக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றனர். அறிவற்றவர்களான பலர் கபடபுத்தியுள்ள சிலர் உண்டு கொழுப்பதற்கு உழைத்துக் கொடுக்கத்தான் இருக்கிறார்கள் என்றும் கருதுகின்றனர். சனப்பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்கின்றது என்ற எமது கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். (தர்மரட்ன, 1890)”

விவாதமுறையில் அமையும் தர்மரட்னவின் கருத்துகள் உள்ளடக்கத்தில் புதிய முதலாளித்துவ வகுப்பின் பொருளாதார, அரசியல், சமூகக் கோரிக்கைகளையும், அவர்தம் மனக்குறைகளையும் வெளிப்படுத்துவனவாய் இருந்தன. புதிதாக எழுச்சிபெற்ற முதலாளித்துவ வகுப்பு அரசியல்ரீதியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒன்று திரளவில்லை. ஆயினும் முதலியார் வகுப்பின் ஆழவேரூன்றிய நலன்களைக் கேள்விக்கு உட்படுத்தியும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டியும் எதிர்ப்பை வெளியிட்டது.

தொடரும். 

The post காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

❌