Normal view

Received before yesterday

ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும். கற்கால மனிதர்கள் தான் பார்த்த, அறிந்த ஒன்றைத் தொலைவில் உள்ளவருக்கோ அல்லது இனிமேல் வரப்போகும் சந்ததிகளுக்கோ குகைகளில் சித்திரமாக வரைந்து தெரியப்படுத்தினார்கள். தொலைதூரத் தொடர்பிற்கு மலை மீது நெருப்பை மூட்டி அதிலிருந்து வரும் புகையைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சைகைகளின் மூலமாகவும், வாய்வழியே ஒலி எழுப்பியும், தோல் கருவிகளைக் கொண்டு (மத்தளம்) ஒலி எழுப்பி, தகவல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

சொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துகள் உருவாகிய பின்பு தகவல் தொடர்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னர்கள் காலங்களில் பறவைகள், விலங்குகள் மூலமாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காகிதங்களிலும், துணிகளிலும் எழுதிய தகவல்களையும் கடிதங்களையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அல்லது நாட்டிற்குக் வான்வழியாகவும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் கொண்டு சென்று சேர்த்தனர்.

1786இல் சென்னையில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல்தலை 21 நவம்பர் 1947இல் வெளியிடப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை உலகின் மிகப்பெரிய துறையாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் மற்ற எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களில் கடிதங்கள் போய்ச் சேரும்படி செய்கின்றனர்.
அஞ்சல்களை வேகமாகவும், குழப்பமின்றியும் பிரித்து குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்குறியீட்டு எண் போடும் திட்டம் 1972இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலங்களைக் குறிக்கும். இரண்டாம் இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாம் இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும்.

கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
இவ்வாறு சிறப்புப் பெற்ற அஞ்சல் பெட்டியைத்தான் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் வரையப் போகிறோம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் H,D,O மற்றும் E.

‘H’ எழுத்தை படத்தில் காண்பது போல் சற்று உயரமாக எழுதவும்.


தேவையற்ற கோட்டை அழித்த பின் ‘H’ எழுத்தின் மேற்பகுதியில் ‘D’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.


‘D’இன் மேற்பகுதியில் படத்தில் காண்பது போல் ‘O’ எழுத்தை எழுதவும்.
‘H’இன் வலதுபுறத்தில் ‘E’ எழுத்தை படத்தில் காண்பதுபோல் எழுதவும்.


தேவையற்ற கோட்டை அழித்தபின் ‘H’இன் அடிப்பகுதியில் ‘E’ எழுத்தைப் படுக்கை வசத்தில் எழுதவும்.


படத்தில் காண்பதுபோல் ‘டிசைன்’ செய்து கொள்ளவும்.

The post ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சிக்கனம் – தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.
ஒவ்வொரு பைசாவையும் யோசித்துச் செலவிட்ட பெரியார், அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றபோது, அவர் பிழைத்து நலமுடன் வரவேண்டும் என்பதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருந்தார்.
கொள்கை பரப்ப, பத்திரிகைகள் நடத்துவதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆதரவற்ற, எளிய பிரிவுப் பிள்ளைகளுக்குக் கல்வியும், உணவும், இருப்பிடமும் கிடைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுக் கல்வி நிலையங்களும், விடுதிகளும் அமைத்தார்.

இங்குதான் பிஞ்சுகள் சிக்கனம் என்றால் என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்குச் செலவு செய்ய வேண்டும். அதைத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். தேவைக்குக் கூட செலவு செய்யாமல் முடிந்து (சேமித்து) வைத்தால் அதற்கு கஞ்சத்தனம், கருமித்தனம் என்று பெயர்.
சிக்கனம் வேறு; கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் வேறு. தேவைக்குச் செலவு செய்ய வேண்டும் என்னும் போது நாம் விருப்பப்படுவதற்கெல்லாம் செலவு செய்தல் என்று பொருள் அல்ல. ஒரு மனிதனின் ஆசை, விருப்பங்கள் அளவற்றவை. ஒன்று நிறைவேறினால் இன்னொன்று வரும். அதுவும் நிறைவேற்றப்பட்டால் மற்றொன்று வரும். ஆசைக்கு அளவில்லை; விருப்பங்கள் எல்லையற்றவை.

சரியானதைத் தேர்வு செய்தல்:
எண்ணற்ற விருப்பங்கள், தேவைகள் நமக்கு இருப்பினும் அதில் எது சரியானது, எது தப்பானது என்று முதலில் முடிவு செய்ய வேண்டும். பழம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் சரியானது, உடலுக்கு நலம் தருவது. புகைபிடித்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் தப்பானது, தீயது, உடலுக்குக் கேடு தரக் கூடியது. எனவே, நல்லதைத் தேர்வு செய்தால் நமக்கு நன்மை கிடைப்பதோடு செலவும் குறையும். இது சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் பின்பற்றும் வழிகளில் ஒன்று.
விரயம் (வீண்) செய்யாமல் இருத்தல்:
உணவு, உடை, நீர், இயற்கை வளங்கள் எதுவாயினும் அவற்றை ஒரு சிறு அளவு கூட வீணடித்தல் கூடாது. தண்ணீர்தானே என்று அதைக் கண்டபடி, தேவைக்கும் அதிகமாகச் செலவிடுவது குற்றம்; இந்தச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் கேடு.

திட்டமிடல்:
திட்டமிட்டுச் செய்தால் எதுவும் வீணாவதைத் தடுக்க முடியும். எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், அதை எந்த அளவிற்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அது வீண் ஆகாது. திட்டமிடாமல் பயன்படுத்தினால் வீண் ஆகும். 5 பேருக்குச் சமைக்கிறோம் என்றால் அதற்கு ஒவ்வொரு பொருளையும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று கணக்கிட்டுப் பயன்படுத்தினால் வீணாகாது. கணக்கிடாமல் பொருளைப் பயன்படுத்தினால் சமைத்தவை மிகுந்து பாழாகும்.

நேரச் சிக்கனம்:
பொருள்களைச் சிக்கனமாகச் செலவிடுவது போலவே நேரத்தையும் சிக்கனமாகச் செலவிட வேண்டும். அதற்கு நேர மேலாண்மையும், திட்டமிடலும் கட்டாயம். படிக்கின்ற மாணவர்களுக்கு நேரச் சிக்கனம் கட்டாயம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். விளையாடுவதற்கு எவ்வளவு நேரம், தொலைக்காட்சி பார்க்க எவ்வளவு நேரம், குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசி மகிழ எவ்வளவு நேரம், உறங்க எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நேர வீணடிப்பு நிகழாது. இல்லையென்றால் நேரம் பற்றா நிலை ஏற்படும். விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிட்டு விட்டு, படிக்க நேரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது நேரக் கணக்கீடும், ஒதுக்கீடும் செய்யாததால் வரும் விளைவாகும்.

எழுத்திலும் பேச்சிலும் சிக்கனம்:
எந்தவொன்றையும் எவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும், ஆழமாகவும், செறிவாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். மாறாக, தேவையற்ற பேச்சும் எழுத்தும் சலிப்பை ஏற்படுத்துவது போலவே, வெறுப்பையும் ஏற்படுத்தும். இன்றைக்குச் சமூக ஊடகங்களில் கூட இரண்டு நிமிடம், அய்ந்து நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்வது – பின்பற்றப்படுவது இந்த உண்மை அறிந்து தான். வள்ளுவர் அறிவார்ந்த, ஆழமான, செறிவான கருத்துகளை இரண்டு அடிகளில் கொடுத்துள்ளதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும். சொற்சிக்கனத்தில் உலகிலேயே சிறந்தவர் வள்ளுவர் தான். அவரை மாணவர்கள் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

சிக்கனமின்மையின் பாதிப்பு:
திட்டமின்றி, சிக்கனமின்றிச் செலவு செய்வதால் இழப்பு மட்டும் அல்ல; பாதிப்பும் ஏற்படும். அய்ந்து வரிகளில் பதில் எழுத வேண்டிய வினாவிற்கு 20 வரிகளில் பதில் எழுதினால் நேர வீணடிப்பு, உழைப்பு வீணடிப்பு மட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவனுக்குப் பாதிப்பு ஏற்படும். அய்ந்து வரியில் எழுத வேண்டிய பதிலுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு விட்டதால், விரிவான விடை எழுத வேண்டிய கேள்விகளுக்கு நேரம் போதாமல் போகும். அதனால் மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே சிக்கனமின்மை இழப்பை மட்டும் தராது, பாதிப்பையும் தரும்.
எனவே, எந்தவொன்றிலும் சிக்கனமாக (தேவையான அளவு) பயன்பாடு இருக்க வேண்டியது கட்டாயம். இதைப் பிஞ்சுகள் இளம் வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

வருவாய் அறிந்து செலவு
சிக்கனம் பற்றி நாம் அறியும்போது இக்கருத்தையும் ஆழமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணக்கார வீட்டுக் குழந்தை அதிகம் செலவிடுவதைப் பார்த்து, ஏழை வீட்டுக் குழந்தை அதிகம் செலவு செய்யக் கூடாது.
பணக்காரப் பையன் மாதுளை, ஆப்பிள் சாப்பிடுகிறான் என்றால், ஏழையும் செலவு செய்ய முடியாது. அப்போது கீரை, நெல்லிக்காய், சப்போட்டா, கம்பு, கேழ்வரகு போன்ற விலை மலிவான, ஆனால் சத்தான உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக நன்மை பெற முடியும்.
சிக்கனம் செய்வதே பின்னாளில் எந்த அவசியத் தேவைக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான்.
சிக்கனத்தில் மிக முதன்மையாக நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியது, வருவாய் குறைவு என்று கவலைப்படாது, செலவை வருவாய்க்குள் செய்யத் திட்டமிட வேண்டும் என்பது தான். இதையே வள்ளுவர்,
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்றார். சிந்தையில் கொள்ளுங்கள்.

The post நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள்

அடப்பாவிகளா? சேர்த்துப்படிங்க கடி புரியும்!

“அது ஒரு சிகப்புக் கலர் புத்தகம் சார்!
பெயரை மறந்துட்டேன்!’னு எத்தனை தடவை நூலகரை தொந்தரவு பண்ணிருப்போம்.

Over Booking இங்க பிரச்சினையே இல்லை!

Pleasure your Shelf
என்றால் உங்களை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொருள்.
இங்கே இருப்பது
Pleasure your (Book) Shelf!

Dino‘Saurs’ இல்லாட்டி என்ன?
The‘Saurus’ இருக்கே!
(Thesaurus ஒரு சொல்லுக்குத் தொடர்புடைய பல சொற்களைத் தரும் ஏடு. ‘‘இணைப் பொருள் சொற் களஞ்சியம்’’ என்று பொருள்)

‘‘ரசனைல்ல!’’ இருந்தாலும் இவ்வளவு உயரம் too much!

Mystery — மர்மக்கதை புத்தகங்கள்தான் — சரி! அதுக்காக என்ன புத்தகம்னு கூடவா தெரிஞ்சுக்க முடியாம திருப்பி வைப்பீங்க?

எலக்ட்ரானிக் கருவிகளைத் தவிரவும் உரிய பொழுதுபோக்குக் கருவிகள் இருக்கு…. உள்ளே வாங்க!

புத்தக வாசிப்பு என்பது அறிவுக்கும், அமைதிக்கும், புரிதலுக்கும் வழிவகுக்கக்கூடியது. புத்தக வாசிப்பாளர்கள் அதற்குள்ளேயே அமிழ்ந்து போகக்கூடியவர்கள் அல்ல! ரசனைக்குரியவர்களும்கூட!
நூலகங்களை தலைப்பு வாரியாக அடுக்கி வைத்திருக்கும் கூடங்களாக இல்லாமல், இங்கே எவ்வளவு ரசனையாக நூலக வளாகங்களை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

The post உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

சென்னை புத்தகத் திருவிழா-புதிய வெளியீடுகள்; பகுதி-4

சென்னை புத்தகத் திருவிழா புதிய வெளியீடுகள் – கிழக்கு, யாவரும்,வானவில் புத்தகாலயம்,படைப்பு, உயிர், ஆழி,விஷ்ணுபுரம்

சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவந்த, வெளிவர இருக்கும்  கிழக்கு,யாவரும், படைப்பு, உயிர், விஷ்ணுபுரம், ஆழி வானவில் புத்தகாலயம் ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு வெளியீடுகள்

 

யாவரும் வெளியீடுகள்

 

படைப்பு வெளியீடுகள் 

 

விஷ்ணுபுரம் வெளியீடுகள்

 

வானவில் புத்தகாலயம் வெளியீடுகள்

 

உயிர் வெளியீடுகள் 

 

ஆழி வெளியீடுகள்

The post சென்னை புத்தகத் திருவிழா-புதிய வெளியீடுகள்; பகுதி-4 appeared first on Kaanalvari.

சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி-3

சென்னை புத்தகத் திருவிழா புதிய வெளியீடுகள் – காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன்,சால்ட், தமிழ்வெளி, புலம் 

சென்னை புத்தகத் திருவிழா இன்று(27-12-2024)  தொடங்கியுள்ளது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவந்த, வெளிவர இருக்கும்  காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன், சால்ட், தமிழ்வெளி,புலம் ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

காலச்சுவடு வெளியீடுகள்

 

பாரதி புத்தகாலயம் வெளியீடுகள்

Book for children வெளியீடுகள்

 

சால்ட் வெளியீடுகள்

 

தமிழ்வெளி வெளியீடுகள்

 

புலம் வெளியீடுகள்

 

சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.

The post சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி-3 appeared first on Kaanalvari.

சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -2

சென்னை புத்தகத் திருவிழா புதிய வெளியீடுகள் – எழுத்து பிரசுரம், உயிர்மை, ஹெர் ஸ்டோரிஸ், தேசாந்திரி, நாற்கரம்

சென்னை புத்தகத் திருவிழா நாளை (27-12-2024) தொடங்குகிறது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவர இருக்கும் எழுத்து, உயிர்மை, ஹெர் ஸ்டோரிஸ், தேசாந்திரி, நாற்கரம் ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்து பிரசுரம் வெளியீடுகள்

 

உயிர்மை வெளியீடுகள்

 

ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகள்

 

தேசாந்திரி வெளியீடுகள்

 

நாற்கரம் வெளியீடுகள்

 

சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.

The post சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -2 appeared first on Kaanalvari.

சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -1

சென்னை புத்தகத் திருவிழா 2025- எதிர், பரிசல், தமிழினி புதிய வெளியீடுகள்

சென்னை புத்தகத்திருவிழாவானது வருகின்ற டிசம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவர இருக்கும் எதிர், பரிசல், தமிழினி ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர் வெளியீடு

 

பரிசல் வெளியீடு 

 

தமிழினி வெளியீடு

சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.

The post சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -1 appeared first on Kaanalvari.

கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை” 

கானல்வரி பக்கத்தில் புத்தகத் திருவிழாக்களை ஒட்டி வகைமை வாரியான நூல் பரிந்துரைகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறோம். 

நாளை (06-09-2024) தொடங்கவிருக்கும் மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் முதல் நவீனம் வரையிலான நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் அடங்கிய பட்டியலை இங்கு பதிவிடுகிறோம். இப்பட்டியல் ஆரம்பகட்ட மற்றும் நடுத்தர வாசகர்கள் பயன்பெறுதற் பொருட்டு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நூற்பட்டியலைப் பரிந்துரைத்து உதவிய காலச்சுவடு அய்யாசாமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

படங்களைத் தொடர்ந்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்

1) கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் – எம்.எஸ்)

2) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் – சுந்தர ராமசாமி )

3) மஹ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

4) மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

5) கடல்புரத்தில் – வண்ணநிலவன்

6) ஈரம் கசிந்த நிலம் – சி.ஆர்.ரவீந்திரன்

7) தண்ணீர் – அசோகமித்திரன்

8) சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

9) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

10) நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

11) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

12) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

13) நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

14) பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்

15) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

16) ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

17) புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

18) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

19) புனலும் மணலும் – ஆ.மாதவன்

20) அஞ்சு வண்ணம் தெரு – தோப்பில் முஹம்மது மீரான்

21) அமிர்தம் – தி. ஜானகிராமன்

22) மாதொருபாகன் – பெருமாள்முருகன்

23) வெல்லிங்டன் – சுகுமாரன்

24) அஜ்னபி – மீரான் மைதீன்

25) சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

26) காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், (தமிழில், கே.நல்லதம்பி)

27) பால்யகாலசகி – வைக்கம் முஹம்மது பஷீர், (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

சிறுகதைகள்

28) சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

29) குதிரைக்காரன் – அ. முத்துலிங்கம்

கட்டுரைகள்

30) மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

31) கோவில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி

32) உய்யடா உய்யடா உய் – இசை

33) கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

34) பதிப்புகள் மறுபதிப்புகள் – பெருமாள் முருகன்

35) மயிர்தான் பிரச்சினையா – பெருமாள் முருகன்

36) சாதியும் நானும் – பெருமாள் முருகன் (ப. ஆ)

37) பதிப்பும் படைப்பும் – கண்ணன்

38) நகலிசைக் கலைஞன் – ஜான்சுந்தர்

39) பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

40) நடந்தாய் வாழி காவேரி – சிட்டி, தி.ஜானகிராமன்

41) அந்தக் காலத்தில் காபி இல்லை – ஆ.இரா.வேங்கடாசலபதி

42) எனது இந்தியா – ஜிம் கார்பெட், (தமிழில் -யுவன் சந்திரசேகர்)

43) என்கதை – கமலாதாஸ், (தமிழில் – நிர்மால்யா)

44) கவர்ன்மென்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தி, (தமிழில் – பாவண்ணன் )

45) நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை, (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

46) திருடன் மணியன்பிள்ளை -ஜி.ஆர்.இந்துகோபன், (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

47) ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில்,குளச்சல் மு.யூசுப்)

48) ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் – ஆ.சிவசுப்பிரமணியன்

49) கிழக்கும் மேற்கும் பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் – மு.இராமனாதன்

50) காலந்தோறும் பெண் – ராஜம் கிருஷ்ணன்

The post கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை”  appeared first on Kaanalvari.

பூச்சிகளின் தேசம்

பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான்.  ஒரு தோராயமான கணக்கில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுமார் 10 லட்சம் பூச்சிகள் இருக்கின்றன. பூச்சிகளைத் தோழமையோடு பார்க்கச் சொல்லித் தரும் ஒரு தனி நூலைப் ‘பூச்சிகளின் தேசம்’ என்ற தலைப்பில் தந்திருக்கிறார் கோவை சதாசிவம்.  தமிழின் பசுமை இலக்கியத்தில், இது ஒரு முதன்மை முயற்சியாகும்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

உலக வனப்பாதுகாப்பு ஆண்டையொட்டி மாணவிகள் சிறப்பு கானுலா செல்வது போலவும், பயண வழியில் உரையாடல் வழியே பூச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது போலவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரையாக இல்லாமல் கேள்வி பதிலாகவும், உரையாடலாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் வாசிக்க எளிதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கானுலா குழுவினரோடு வேட்டை தடுப்புக் காவலராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மான்பன் என்பவரும் இணைந்து கொள்கிறார். இடையிடையே பூச்சிகள் பற்றிய பழங்குடி மக்களின் அனுபவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வது சிறப்பு.

கரையான் பற்றிய கட்டுரையில், மலைவாழ் மக்களின் வீடுகட்டும் முறையைப் பற்றி இவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு:-

“மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் கட்டும் வீடுகளில் மூங்கில் தப்பைகள் தான் சுவர்.  மூங்கில் தப்பைகளின் மீது கரையான் புற்றிலிருந்து எடுத்து வரும் மண்ணைத் தப்பைகள் மறைய பூசி விடுவார்கள். சின்ன சந்து கூட இருக்காது. ஆனால் காற்றோட்டமும் மித வெப்பமும் சமச் சீராக இருக்கும்..”

17ஆம் நூற்றாண்டில் டார்வினுக்கு முன்பாகவே பூச்சிகள் பற்றியறிய தென்னமெரிக்காவுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்ட ‘மரியா சிபெல்லா மேரியான்’(Maria Sibylla Merian) என்ற பெண்மணி தாம் ‘பூச்சியியலின் மூதாய்’ என்று கருதப்படுகிறார்.

கரையான் புற்று பற்றியும், கரையான்களின் வாழ்வியல் பற்றியும் மழைக்காலத்தில் கரையான் புற்றைச் சுற்றிக் காளான் முளைப்பதற்கான காரணம் பற்றியும் பல வியப்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.   கரையான்கள் காய்ந்த புற்களைத் துண்டுகளாக்கிப் புற்றிலுள்ள சுரங்கத்தில் அடுக்குமாம். அப்புற்கள் சில நாட்களில் பூஞ்சையடைந்து, கரையானின் விருப்ப உணவான காளானாய் மாறிவிடுமாம். இந்த நிகழ்வை ஆசிரியர் ‘பூஞ்சைத் தோட்டமாகவும், எறும்புகள் நேராக ஊர்ந்து போவதை உயிருள்ள வாக்கியமாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்.

கரையான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை நம்மிடையே புழங்கும் நாட்டுப்புறக்கதையோடு இணைத்துச் சொன்னது ரசிக்க வைக்கிறது. பணிக் கரையான்கள் மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தம் வாழ்விடங்களைத் தீர்மானிக்கும் என்பதும், 4000 ஆண்டுகளாக ஓரு கரையான் புற்று நீடித்து நிலைத்திருக்கிறது என்பதும் இயற்கையின் அதிசயங்கள்.    

மழை, வெள்ளம் வரப்போவதை எறும்புகள் முன்பே அறிந்து தற்காத்துக் கொள்ளும் என்பதும், எறும்புகள் மண்ணிலுள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைத்துப் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும், உலகில் கிட்டத்தட்ட 22000 எறும்பு இனங்கள் இருக்கின்றன என்பதும் வியப்பான அறிவியல் உண்மைகள். “பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை விடக் கரையான்களின், எறும்புகளின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகம்” என்கிறது ஓர் அறிவியல் உண்மை.  

நத்தை பற்றிய கட்டுரையில் நத்தைகள் உடல் பருமனுக்கேற்ப ஓடுகளைப் பெரிதாக்கி கொள்வதால் மேல் ஓட்டில் வளையங்கள் தோன்றுகின்றன; வெள்ளை மற்றும் மரப்பட்டை நிறத்தில் இருக்கும் ஓட்டின் மேல் வரிகள் நம் உள்ளங்கை ரேகை போல ஒவ்வொரு நத்தைக்கும் வேறுபடும் என்பவை பலருக்கும் தெரியாத செய்திகள்.

கண் கொத்திப்பாம்பு என்று சொல்லப்படும் பச்சைப் பாம்பு பற்றி மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை ஓர் அத்தியாயம் பேசுகிறது. எல்லாப் பாம்புகளைப் போலவே பச்சைப் பாம்புக்கும் காதுகளில்லை என்கிறார் ஆசிரியர். மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவதாகப்  பாம்பாட்டிகள் காட்டும் பித்தலாட்ட வித்தைக்கும் வேட்டு வைத்துள்ளார். பாம்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவும் விதமாக ‘ரோமுலஸ் விட்டேகர்’ எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளது சிறப்பு! 

தொட்டாச்சுருங்கி செடியை அடிப்படையாகக் கொண்டு எந்திர மனிதர்களின் தொடுதிறனை அதிகப்படுத்த மேலை நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வு பற்றிய சிறு குறிப்பையும் ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிடத் தவறவில்லை.

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் முதன் முதலாகப் பறந்த பூச்சியினங்களில் தும்பியும் ஒன்று. சுமார் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படிநிலை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தும்பி என்ற வியத்தகு செய்திகளைத் தும்பி பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

“தும்பியின் தலைமுழுதும் அதன் கண்கள் பரவியுள்ளன; பறக்கும் போது பல திசைகளிலும் பார்வையைச் செலுத்த முடியும்; பூச்சி இனங்களில் தும்பிக்குத் தான் கூர்மையான பார்வை; அதன் இரண்டு பெரிய கண்ணுக்குள் 30000 சிறிய கண்கள் உள்ளன” என்ற அறிவியல் தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை.

‘அடர்வனமும் ஒளிரும் பூச்சிகளும்’ என்ற அத்தியாயத்தில் மின்மினியை ‘வன நட்சத்திரம்’ என்று ஆசிரியர் சிலாகித்துச் சொல்வது, அழகான பொருத்தமான உவமை! இப்பூச்சிகள் பற்றிப் பல தெரியாத செய்திகள்  இக்கட்டுரையில் உள்ளன. மின்மினிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் தன்மை கொண்டவை; மண்புழுவும் நத்தையும் வளர்ந்த மின்மினியின் விருப்ப உணவு; மின்மினி அரிவாள் போன்ற கொடுக்கால் குத்தி இரையை மயக்கமடையச் செய்து செரிமான நொதிகளைச் சேர்த்துக் கூழாக மாற்றி ஜூஸ் குடிப்பது போலக் குடிக்கும்; மின்மினி உடல் நச்சுத்தன்மை வாய்ந்தது போன்ற பல தகவல்கள் வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும், வியப்பாகவும் இருந்தன.

அது போல ‘உயிருடன் ஓர் வானவில்!’ என்ற பொருத்தமான தலைப்பில் அறிமுகம் செய்யப்படும் வண்ணத்துப்பூச்சி குறித்த அத்தியாயத்தில்    

“உதிர்ந்த இலை

கிளைக்குத் திரும்புகிறதோ

வண்ணத்துப்பூச்சி”

என்ற அருமையான ஜப்பானிய ஹைக்கூ கவிதையும் இடம்பெற்று, வாசிப்பை ரசிக்க வைக்கிறது.   

மருத்துவத் துறையில் மிக நுண்ணிய பகுதியில் போடும் தையலுக்கும் பேண்டேஜ் துணி தயாரிப்புக்கும் சிலந்தியின் நூலிழை பயன்படுத்தப்படுகின்றது; நவீன தொழில் நுட்பத்தில் சிலந்தியின் நூலிழையைக் கொண்டு செயற்கைத் தோல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது என்ற அறிவியல் செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன. தேனியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னதை ஆசிரியர் தேனீக்கள் பற்றிய கட்டுரையில் கொடுத்திருக்கிறார்:-

“உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்காண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும்; செடி,கொடிகள் மறையும்; மனிதனும் மறைந்து விடுவான்.”

இன்னும் 86 விழுக்காடு உயிரினங்கள் உலகில் கண்டறியாமல் இருக்கின்றன என்கிறார்கள் உயிரியியலாளர்கள்.  இவைகளைக் கண்டறிந்து பெயரிட பல ஆண்டுகள் ஆகும்….அடர்ந்த காடுகள், ஆழ்கடல் போன்ற இடங்களில் என்னென்ன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத ஒரு வியப்பூட்டும் ரகசியம்” என்கிறார் ஆசிரியர். அப்படியென்றால் வெறும் 14% உயிரினம் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் உண்மை!

வண்ணத்துப்பூச்சி முதல் கரப்பான் பூச்சி வரை பூச்சிகளைப் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் இந்நூலில் உள்ளன. உயிரியல் மாணவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்க்கும், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்க்கும் பெரிதும் பயன்படும் நூல்.

வகைசூழலியல் கட்டுரைகள்
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடு:-குறிஞ்சி பதிப்பகம், திருப்பூர். +91 99650 75221
விலை:-ரூ 120/-.

The post பூச்சிகளின் தேசம் first appeared on சுட்டி உலகம்.

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

தலையங்கம் – மே 2025

சுட்டி உலகத்துக்கு இன்று நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள்! சுட்டி உலகம் துவங்கி நேற்றுடன் நான்காண்டு நிறைவு பெற்று, இன்று ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது.

2021ஆம் ஆண்டில் இந்த வலைத்தளத்தைத் துவங்குவதற்கு முன், தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறுவர் நூல்கள் கிடைக்கின்றன? தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் யார் யார்? எந்தெந்தப் பதிப்பகங்கள் தமிழில் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? தமிழில் குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த சிறுவர் நூல்கள் என்னென்ன? என்று இணையத்தில் தேடிய போது விபரம் எதுவும் கிடைக்கவில்லை.  ஆனால் ஆங்கில நூல்களைப் பரிந்துரை செய்யும் வலைத்தளங்கள் பல இருந்தன.

எனவே நம் தாய்மொழித் தமிழில் வெளியாகும் நூல்களை வாசித்துப் பரிந்துரை செய்து, குழந்தைகளின் வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்று தோன்றிய எண்ணமே, ‘சுட்டி உலகம்’ துவங்க வழிவகுத்தது. அதற்குப் பிறகு பல சிறார் நூல்களை வாங்கி, அவற்றை வாசித்து நூல் அறிமுகம் செய்யத் துவங்கினோம். இன்று நூற்றுக்கு மேற்பட்ட நூல் அறிமுகங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. மேலும் இந்நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பற்றிய விபரங்களுடன், தற்கால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த, அவர்களின் வயதுக்கேற்ற நூல்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும்; இல்லையேல் குழந்தை வாசிப்பை வெறுக்கத் துவங்கிவிடும். புத்தகத்தைக் கண்டாலே ஓடத் துவங்கிவிடும். எனவே தான் இந்தத் தளத்தில் குழந்தைகளின் வயது வாரியாக புத்தக அறிமுகம் உள்ளது.

ஸீரோவில் ஆரம்பித்த இந்த வலைத்தளப் பார்வையின் (Views)எண்ணிக்கை, இன்று 80000ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழைத் திருத்தமாக உச்சரிக்கச் ‘சுட்டி உலகம்’ காணொளியும் துவங்கி, அதில் பாடல்களை ஒலிபரப்புகிறோம்.

இவை குழந்தைகளைக் கவரக்கூடிய சந்தமும், இசையும், அனிமேஷனும் கொண்ட பாடல்கள். இந்தப் பாடல்களுள் ‘யானை வருது’ என்ற பாடல், ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பார்வையைப் பெற்றிருக்கிறது என்பது வியப்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி! குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த பாடலிது!

வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பிறந்த நாட்களைச் ‘சுட்டி உலகம்’ கொண்டாட இனிய வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – மே 2025 first appeared on சுட்டி உலகம்.

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட சுட்டி உலகத்தில், குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் பரிந்துரைகள் உள்ளன. எனவே பெற்றோர் தம் குழந்தைகளின் விருப்பம் ரசனைக்கேற்ப நூல்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.

‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறந்த குழந்தைப் பாடல்கள் உள்ளன. குழந்தைகள் தமிழை எளிதாக உச்சரித்துப் பழக, இந்தப் பாடல்கள் உதவும்.

நான்காம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து, ஐந்தாம் ஆண்டில் நுழையும் சுட்டி உலகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம். 

The post சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து! first appeared on சுட்டி உலகம்.

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஏழைமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை போன்று உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கவும் இலக்கியம் சிறந்த பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)” என்பதை இந்த 2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகத் (Theme) தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதிலும், குறிக்கோள்களை அடைவதிலும் இலக்கியம் சிறப்பான பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கருப்பொருள் உறுதி செய்கிறது.    

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

The post உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025 first appeared on சுட்டி உலகம்.

நாம எல்லாம் ஒன்னு

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.  

“நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் உயிர்”; “கிளி..குருவி..காக்கா..மயில்.. எல்லாம் வேறே வேறே தான். ஆனா..எல்லாமே பறவைகள் தானே?” “மதங்கள் வேறு வேறு ஆனாலும் நாம மனுசங்க தானே?” என்ற கேள்விகள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக வேற்றுமையில் ஒற்றுமை காண வலியுறுத்தும் புத்தகம்.

வழ வழ தாளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவும், அழகான வண்ணப் படங்கள் நிறைந்தும் உள்ள இப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post நாம எல்லாம் ஒன்னு first appeared on சுட்டி உலகம்.

பீ…பீ..டும்..டும்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது.

இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை உள்ளன. நாகஸ்வரம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளின் வண்ணப்படங்கள் இதில் உள்ளன. அந்தக் கருவிகளை வாசிக்கும் போது அதிலிருந்து என்ன மாதிரியான ஒலி வெளிவரும் என்பதை இந்நூலில் கொடுத்துள்ளனர்.   

எடுத்துக்காட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் பெண் குழந்தைப் படம் உள்ள பக்கத்தில் பீ.பீ.டும்..டும் என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளன.

வழ வழ தாளில் வார்த்தைகள் இல்லாமல், அழகான வண்ணப் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post பீ…பீ..டும்..டும் first appeared on சுட்டி உலகம்.

தலையங்கம் – ஏப்ரல்-2025

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

சிறார் வாசிப்பை ஊக்குவிக்க ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10/05/2021 அன்று துவங்கிய இத்தளத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய அறிமுகத்தை வெளியிட்டிருக்கிறோம்.

‘சுட்டி உலகம்’ துவங்குமுன் இணையத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய விபரம் தெரிவிக்கும் தளம் ஏதுமில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் பரிந்துரைக்குப் பல்வேறு வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தன;இருக்கின்றன.

எனவே தற்காலத்தில் தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறார் நூல்கள் கிடைக்கின்றன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? இப்போது குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள் யார்? என்ற விபரம் எதுவும் அன்று கிடைக்கவில்லை. எனவே முதல் முயற்சியாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க வழிகாட்ட வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ஆரம்பித்த இந்த வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாக முடித்து அடுத்த மாதம் 10/05/2025 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்க இருக்கின்றது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். கைபேசி, இணையம் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கப் புத்தக வாசிப்பு ஒன்றே சிறந்த வழி!

இந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் குழந்தைகள் புத்தக நாள் உலகமுழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதை குழந்தைகளிடையே மிகவும் பிரபலம்.

இவருடைய இன்னொரு பிரபலமான நூல் ‘லிட்டில் மெர்மெய்டு’ (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை. தமிழிலும் இதன் மொழிபெயர்ப்பு கிடைக்கின்றது. வானம் பதிப்பகம், சென்னை இதை வெளியிட்டுள்ளது.

சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாகத் (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்; அவர்கள் வாசிப்பின் அருமையை உணர வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம்.

எனவே பெற்றோரே! உங்கள் குழந்தை வருங்காலத்தில் பன்முகத் திறமை பெற்றுச் சிறந்த ஆளுமையாகத் திகழ வேண்டும் என்பது உங்கள் கனவா? இன்றே குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள்; வாசிப்பின் அருமையை அவர்கள் உணரச் செய்யுங்கள்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – ஏப்ரல்-2025 first appeared on சுட்டி உலகம்.

எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது. 

எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.

தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.

 வகைசிறார் கதை
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 50/-

The post எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் first appeared on சுட்டி உலகம்.

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் கதைச் சுருக்கம்:- கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது காதல் கொள்கிறாள். கடலில் இருந்தால் அவளுக்கு 300 ஆண்டுகள் மரணமில்லை. ஆனால் அவள் தனது களங்கமில்லாத அன்புக்காக மரணமில்லா வாழ்வைத் துறந்து கரையேறத் துணிகிறாள். அவள் மீன் உடலில் இருக்கும் வாலுக்குப் பதிலாக. கரையில் நடக்க அவளுக்குக் கால்கள்  தேவைப்படுகின்றன. மந்திரவாதியிடம் தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து அதற்குப் பதிலாகக் கால்களைப் பெறுகின்றாள். எனவே அவளால் பேசவோ பாடவோ முடியாது. இளவரசன் அவள் காதலை ஏற்றுக் கொண்டானா? அவளைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக் கதை. மிகவும் நெகிழ்ச்சியான கதையிது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025 first appeared on சுட்டி உலகம்.

ஏழும் ஏழும் பதினாலாம்

‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. இவரது பாடல்கள் குழந்தைகள் பாடுவதற்கேற்ற இனிய ஓசையும், சந்தமும் கொண்டவை. குழந்தைகள் எளிதாக உச்சரித்து பாடுவதற்கேற்ற எளிய மொழியில் அமைந்தவை.  

இவரது பாடல்களிலிருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம்- வெளியிட்டுள்ளது.

“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தைகள் விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.

“ஏழும் ஏழும் பதினாலாம்

எலியா ருக்கு முழம் வாலாம்.

அறைக்குள் எலியார் புகுந்தாராம்

அங்கும் இங்கும் பார்த்தாராம்.

இரண்டு தட்டில் பணியாரம்

இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்

கடித்து கடித்துத் தின்றாராம்

கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.

ஏழும் ஏழும் பதினாலாம்.

எலியார் ஏப்பம் விட்டாராம்!”

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, அவர்கள் தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.

வகைகுழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்அழ.வள்ளியப்பா
வெளியீடு:-பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம் தஞ்சாவூர். செல் +91 9731736363  
விலைரூ 40/-.

The post ஏழும் ஏழும் பதினாலாம் first appeared on சுட்டி உலகம்.

❌