Normal view

Received before yesterday

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு முக்கியமான சங்கம், பிளினியன் சங்கம். 1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1826-ம் ஆண்டு டார்வின் இணைந்தார்.

பிளினியன் சங்கத்தில் ஏராளமான சுயேட்சை ஆய்வாளர்கள் இருந்தனர். பலர் தன்னிச்சையாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்.

கிரான்ட், டார்வினைவிடப் பதினாறு வயது மூத்தவர். பன்னிரண்டு ஆண்டுகள் மருத்துவராக இருந்துவிட்டு, கடல் உயிரிகளை ஆராய வேண்டும் என்பதற்காகப் பாதியில் வந்தவர். கிரான்டுக்கு அறிவியல், சமூகம் இரண்டிலும் ஆர்வம் இருந்தது. சமூகத்தின் பல சிக்கல்களுக்கு அறிவியல்தான் பதிலளிக்கும் என நம்பினார்.

இந்த கிரான்டைச் சந்தித்ததுதான் டார்வினின் வாழ்வில் பெரும் திருப்புமுனை. கிரான்ட்தான் முதன் முதலில் உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றத்தைப் பற்றியும் பல கேள்விகளை டார்வினின் மனதிற்குள் விதைத்தார்.

0

கிரான்ட் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். பரிணாமக் கொள்கையை முன்வைத்து ஏராளமான ஆய்வுகளைச் செய்துவந்தார்.

உண்மையில் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்கிற கேள்வி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒருபக்கம் கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்ற எளிமையான பதில் சொல்லப்பட்டு வந்தாலும், அனாக்ஸிமேண்டர், அரிஸ்டாட்டில் தொடங்கி பல சிந்தனையாளர்கள் உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இருக்கும் அறிவியலை ஆராய முற்பட்டனர். இவ்வளவு ஏன், டார்வினின் தாத்தா எராஸ்மஸ்கூட எல்லா உயிர்களும் ஒரே மூதாதையரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையைத் தனது நூலில் முன்வைத்திருக்கிறார். இப்படித் துண்டுத் துண்டாகப் பல விளக்கங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் இணைக்கும் விதமாக முழுமையான பரிணாமக் கொள்கையை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அறிவியலாளர் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க். இவரைத்தான் கிரான்ட் தன் ஆதர்ச நாயகனாகக் கருதினார்.

லமார்க்கின் புரட்சிகர சிந்தனை, பிரெஞ்சு உலகில் கொண்டாடப்பட்டது. ஆனால் இங்கிலாந்திலோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக, திருச்சபை அதிகாரிகள் லமார்க்கின் பரிணாமக் கொள்கையை ஆபத்தானதாகக் கருதினர். அறத்திற்குப் புறம்பானதாக, சமூகத்தை அச்சுறுத்தும் கருத்தாகப் பார்த்தனர்.

பரிணாமக் கொள்கை, மனிதர்களும் விலங்குகள் வழி வந்தவர்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்தார் என்கிற கிறிஸ்தவத்தின் அடிப்படையான கூற்றை மறுக்கிறது அல்லவா? இதுதான் பிரச்னை. அதேபோல கடவுள் மேலே, திருச்சபை ஊழியர்கள் நடுவே, சாமானியர்கள் கீழே என அதிகாரம் உருவாக்கி வைத்திருந்த சமூகப் படிநிலையையும் பரிணாமக் கொள்கை கேள்வி எழுப்பியது.

இதனாலேயே திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கல்விநிலையங்களில் பணியாற்றி வந்த பல அறிவியலாளர்கள், இயல்பாகவே பரிணாமக் கொள்கையை ஏற்காமல் அமைதி காத்தனர். கிரான்டைப் போன்ற சில தன்னார்வ இளைஞர்கள்தான் லமார்க்கின் சிந்தனையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளைத் தன்னிச்சையாக முன்னெடுத்தனர்.

கிரான்ட், ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பரிணாமக் கொள்கையை விவாதித்தார்.

இறுதியாக எடின்பர்க் திரும்பிய அவர், தாவரங்கள் – விலங்குகளுக்கு இடையேயான தொடர்பை ஆராய வேண்டி, கடற்பஞ்சுகள் (Sea Sponges) என அறியப்பட்ட உயிர்களை ஆராய்ந்தார். இந்த ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த உதவியாளர்தான் டார்வின். டார்வினுக்கும் கிரான்டின் கருத்துக்கள் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடன் சேர்ந்து பயணிப்பதை விரும்பினார்.

கிரான்ட், டார்வினை கடலுக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் ஆய்வுகள் குறித்து ஏராளமாக உரையாடினார். பல விஷயங்களை டார்வினுக்குப் போதித்தார். எப்படி ஆய்வைத் தொடங்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும், கண்டறிந்த விஷயங்களை எப்படி ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என ஆய்வின் அடிப்படைகள் அனைத்தும் டார்வினுக்கு கிரான்ட் வழங்கியதுதான்.

கிரான்ட், எடின்பர்க்கில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் ஒரு கடற்கரை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு ஓதநீர்க் குட்டைகளைக் கண்டறிந்து அதிலிருந்து கடற்பஞ்சுகளையும், கடலிறகுகளையும் (Sea-Pens), பவளப்புழு இனம் அமைக்கும் தட்டைப் பாறைகளையும் (Sea mat) சேகரித்தார். அந்த உயிரிகள் முட்டையில் இருந்து எப்படி வளர்கின்றன என்பதை நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆராய்ந்தார்.

தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் இருபது ஆய்வுக்கட்டுரைகளாக எடின்பர்க் ஆய்விதழில் வெளியிட்டார். இதுவே கிரான்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.

கிரான்டின் வழிகாட்டலுடன் டார்வினும் கடல் உயிர்களை ஆராயத் தொடங்கினார். எடின்பர்க் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வெர்னியன் இயற்கை வரலாற்று சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு சென்று உரைகள் ஆற்றுவது கிரான்டின் வழக்கம். இந்தக் கூட்டங்களுக்கு டார்வினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் கிரான்ட். சங்கக் கூட்டங்களில் பொதுவாக மாணவர்கள் உரையாற்ற அனுமதி கிடையாது. ஆனால் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். இந்தச் சங்கத்தில் கடற்பஞ்சுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்த கிரான்ட், தனது கண்டுபிடிப்புகளில் டார்வின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இதுதான் டார்வினுக்கு பொதுவில் கிடைத்த முதல் அங்கீகாரம். அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே பூரித்துப்போனார். அப்போது, என் தந்தை சொன்னதுபோல் நான் உபயோகமற்றவன் இல்லையா? என்னாலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? டார்வினுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. மேலும் புதிய விஷயங்களைத் தேடினார். தனியாக ஓர் ஆய்வை நிகழ்த்தத் திட்டமிட்டார்.

ஆனால் எந்த ஓர் ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் இல்லையா? அதனால் கிரான்ட் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, கடற்பாசி வகையைச் சேர்ந்த Flustra எனும் உயிரியை டார்வின் ஆராயத் தொடங்கினர். அதன் உடலில் உள்ள முடிபோன்ற (Cilia) அமைப்பைக் கண்டறிந்தார். தன் கண்டுபிடிப்பை வெர்னியன் இயற்கை வரலாறு சங்கத்தில் சமர்ப்பித்தார். இதுதான் டார்வினின் முதல் கண்டுபிடிப்பு.

தனியாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அத்தனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்று தோன்றலாம். ஆனால் கிரான்ட் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

கிரான்ட் நிறுவ நினைத்தது இதுதான். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஓர் இணைப்பு இருக்க வேண்டும். தாவரங்கள் பாசி வகையில் இருந்து வந்துள்ளன. பாலூட்டிகள் குழாயுடலி (polyps) எனப்படும் கடல் உயிர்களிலிருந்து தோன்றி இருக்கின்றன. இவை இரண்டின் முட்டைகளை ஆராய்ந்தால் ஒற்றுமை இருப்பது தெரியும். இவை இரண்டையும் இணைக்கும் பொது மூதாதையர் இருக்க வேண்டும். அந்த மூதாதையரைப் பின் தொடர்ந்து சென்றால் ஒருமைப் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். இந்த ஒருமைப்புள்ளிதான் உயிரற்ற பொருட்களையும் உயிர்களையும் இணைக்கும் புள்ளி. அதில் இருந்துதான் இன்றைய சிக்கலான உயிரினங்கள் பரிணமித்து வந்திருக்க வேண்டும். இதுதான் கிரான்ட் நிறுவ நினைத்தது. இந்தக் கருத்தை இப்போது டார்வினின் ஆய்வும் வலுப்படுத்தியது.

டார்வின் ஆராய்ச்சி செய்த ஃப்லஸ்ட்ரா எனும் உயிரி, பிரையோசோவா (bryozoa) என அறியப்பட்ட பாசி போன்ற உயிரினத்தின் பிரிவைச் சேர்ந்தது. அந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் தாவரம் என்றே கருதி வந்தனர். ஆனால் டார்வின் அதன் உடற்பாகங்களை ஆராய்ந்து சிலியா எனும் பாகத்தைக் கண்டறிந்தது மூலம் அது விலங்கினத்தைச் சார்ந்தது என நிரூபித்தார். காரணம், அந்தக் குறிப்பிட்ட பாகம் பொதுவாக விலங்குகளுக்கே உடையது.

இதையடுத்து ஒட்டுமொத்த பார்வையில் பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட உயிரினம், தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கலாம். இதுபோன்ற உயிரினங்களில் இருந்து பிரிந்துதான் தாவரங்கள் தனியாக, விலங்கினங்கள் தனியாக பரிணமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவரது ஆய்வு முன்வைத்தது.

டார்வினின் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்த கிரான்ட், அகம் மகிழ்ந்துபோனார். எழுந்துவந்து டார்வினைக் கட்டி அணைத்துக்கொண்டார். டார்வினின் கண்டுபிடிப்பு பரிணாம கொள்கை குறித்த ஆய்வுகளுக்கு எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று விளக்கினார்.

‘ஒவ்வொரு விலங்கும் தனித்தனியாக படைக்கப்பட்டுள்ளது என்பது தவறு. இதனை உயிரினங்களுக்கு இடையேயான உடல் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். மனிதர்களில் இருந்து சிறிய நுண்ணுயிர்கள் வரை ஒரே வகையான உறுப்புகள்தான் இருக்கின்றன. இதனால் நாம் அறிவது ஒன்றுதான். எல்லா விலங்குகளுக்கும் தொடர்புண்டு. எல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. நுண்ணியிர்களிடம் எளிமையான உறுப்பாக இருப்பது, மனிதர்களிடம் சிக்கலான வடிவில் இருக்கிறது. அவ்வளவுதான். இதனால் நாம் கண்டடையும் உண்மை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் தொடர்ச்சி இருக்கிறது. லமார்க் சொல்வதுபோல் உயிர்கள் ஒவ்வொன்றும் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்துதான் வந்துள்ளன. இதுதான் உண்மை.’ என்று கூறினார்.

டார்வின் கிரான்டின் உரையைக் கேட்டு மெய்மறந்து நின்றார். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை. அண்டம் விடுத்துள்ள மிகப் பெரிய மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் பங்காற்றி இருக்கிறோம் என்ற எண்ணமே டார்வினைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அவர் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை.

கிரான்ட் தன் உரையை முடித்தவுடன் பிளினியன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பிரவுன் என்பவர் எழுந்து, ‘இந்தக் கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களை படைக்கவில்லை என்பதை நிறுவுகிறது’ என்று கூச்சலிட்டார். அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் அங்கு கலவரமே வெடித்துவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த திருச்சபை அமைச்சர்கள் பிரவுனின் மேல் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிரவுன் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கிழிக்கவும் முற்பட்டனர். டார்வினின் கண்களுக்கு முன்னாலேயே பிரவுனின் கண்டுபிடிப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. இனிமேல் இப்படியான ஆய்வுகள் வெளிவந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் திருச்சபை ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

நடப்பதைக் கண்டு டார்வின் அதிர்ந்துபோய் நின்றார். டார்வினுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அண்டம் குறித்தான ஒவ்வொரு பதிலுக்கும் நேர்மறை விளைவுகள் மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளும் உண்டு. அதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அது.

டார்வின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.

(தொடரும்)

 

______

படம்: ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்

The post டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான் அனுப்பி வைத்தார். டார்வினும் தந்தைக்குச் செய்த சிறுசிறு உதவிகளை எல்லாம் எண்ணி பல்கலைக்கழகம் தனக்குப் பிடித்த இடமாக இருக்கும் என்று நம்பிச் சென்றார். ஆனால் அங்கே எல்லாம் இவர் நினைத்ததற்கும் தலைகீழாக இருந்தது.

எடின்பர்க் பல்கலைக்கழகம் முழுக்கவும் அதிகாரத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போதைய ஐக்கிய ராஜ்ஜியம் இரண்டு பெரும் கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ஒரு கட்சியினர் விக்குகள் (Whigs) என அறியப்பட்டனர். இன்னொரு பிரிவினர் டோரிக்கள் (Tories) என அழைக்கப்பட்டனர். இதில் டோரிக்கள் பாரம்பரிய, பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள். திருச்சபை ஆதாரவாளர்கள். முடியாட்சி, சமூக ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள். அதிகாரத்தின் சலுகையை அனுபவித்து வந்தவர்கள். இவர்களுடைய எதிர்த்தரப்பினர், விக்குகள். இவர்களும் அரசரை ஏற்பவர்கள்தாம். ஆனால் அரசருக்கே சர்வ அதிகாரமும் என்று இல்லாமல், தனிநபர் சுதந்திரம், பாராளுமன்ற அரசியல், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை வேண்டியவர்கள்.

இந்த இரு கும்பலும்தான் எலியும் பூனையும்போல அடித்துக்கொண்டன. இதில் டார்வினின் குடும்பம் விக்குகளை ஆதரித்தது. இதற்குக் காரணமும் இருந்தது. 50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் டோரிக்கள் பல்கலைக்கழகத்தையே நாசமாக்கி வைத்திருந்தனர்.

குறிப்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் இல்லாமல், உள்ளூர் டோரிக்களின் சபையே கட்டுப்படுத்தியது. பேராசிரியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை டோரிக்கள் சபைதான் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்குக் கல்வித் தகுதி இருக்கிறதா என்பதைவிட அரசியல் தகுதி இருக்கிறதா என்பதையே ஆராய்ந்தது.

திருச்சபை விசுவாசிகளே பணியிடங்களை நிரப்பினர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி, தந்தை, மகன், பேரன் என வாரிசுகளே அங்கு பேராசிரியர்களாக இருந்தனர்.

இதுவே அவர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் நிலவ காரணமாக இருந்தது. பேராசிரியர்கள் யாரும் மாணவர் நலனில் அக்கறையெடுத்துப் பாடம் நடத்துவதுபோல தெரியவில்லை. வகுப்பறையில் இருப்பதைவிட மதுவிடுதிகளில்தான் அதிகம் நேரம் செலவழித்தனர். அங்கிருந்தே பாடத்திற்கான குறிப்புகளைக் கொடுத்தனுப்பினர். மாற்றுக் கருத்துக்கள் கொண்ட மாணவர்களை வஞ்சிக்கவும் செய்தனர். பல்கலைக்கழகத்தின் பெருமை எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பளபளத்தது. உள்ளே நிர்வாகம் அழுகிக்கொண்டிருந்தது.

இதனாலேயே மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்தைத் தாண்டிச் சுற்றியுள்ள கல்வி விடுதிகளில் பாடம் பயின்றனர். அப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளமான சிறிய தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. நிறுவனங்கள் என்று சொல்வதைவிட விடுதிகள் என்றால் சரியாக இருக்கும்.

ஒரு சிறிய வகுப்பறை. ஒரு சோதனைக்கூடம். இதுதான் கட்டமைப்பு. அங்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் கட்டணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். இவர்களிடம் கற்பதைத்தான் மாணவர்களும் விரும்பினர். இந்தப் புதிய சிந்தனையாளர்கள் பேசிய அரசியல், மரபார்ந்த விழுமியங்களின் மீதான அவர்களது தாக்குதல் இளம் வயதினரை இயல்பாகவே ஈர்த்தது.

டார்வினுக்கோ வகுப்பில் இருக்கவும் பிடிக்கவில்லை. வெளியே படிக்கவும் விருப்பமில்லை. யார் வம்புக்கும் செல்லாமல், தனி அறையில் அமர்ந்து தனாகப் படித்துக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகம் சென்று நூலகத்திலிருந்து எல்லாப் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். இரவு பகலாக உட்கார்ந்து படிப்பார். அதன்பிறகுதான் தூக்கம், சாப்பாடு எல்லாமே.

ஆனாலும் டார்வினுக்கு மருத்துவப் படிப்பு உவக்கவில்லை. காரணம், பாடப்புத்தகத்தைத்தாண்டி அவர் செய்ய வேண்டி இருந்த உடற்கூராய்வு சோதனைகள்.

டார்வினுக்கு ரத்தத்தைப் பார்த்தாலே பயம். குறிப்பாக அறுவை சிகிச்சையை அவர் வெறுத்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு என்று தனித்தனி அறுவை சிகிச்சைக் கூடங்கள் இருந்தன. அங்கே பிணங்கள் கொட்டிக் கிடந்தன. உடல் அறுபட்டு, கைகள் ஒருபக்கம், கால்கள் ஒருபக்கம் துண்டுத் துண்டாக விரவி கிடந்தன. பிணத்தின் வாடை குமட்டலை ஏற்படுத்தும். அந்த அறையில் இருப்பதே டார்வினுக்கு மூச்சு முட்டும்.

அறுவை சிகிச்சை செய்யும் முறையும் அப்போது குரூரமானதாக இருந்தது. மயக்க மருந்துகள் புழக்கத்தில் வராத காலகட்டம் அது. இதனால் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது நோயாளிகள் வலி தாங்க முடியாமல் கத்துவர். கேட்கவே கோரமாக இருக்கும். அதேபோல உடல் பாகங்களை வெட்டுவதற்குப் பழைய அழுக்கடைந்த துருப்பிடித்த கத்திகள்தான் பயன்படுத்துவார்கள். கைகளைச் சுத்தம் செய்வதற்குக்கூட வழி கிடையாது. உடலை வெட்டி அதிலிருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை வாளியில் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கேட்கவே குரூரமாக இருக்கும் இத்தகைய காட்சிகளை டார்வினால் கல்வி நிலையங்களில் அனுபவிக்க முடியவில்லை. மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்வதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமுறை குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை கதறுவதைப் பார்க்கச் சகிக்காத, டார்வின் அறையை விட்டு ஓடிவிட்டார். இனிமேல் அறுவை சிகிச்சைக் கூடத்திற்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் காட்சியே வாழ்க்கை முழுவதும் அவரை அச்சுறுத்தியது. இதனாலேயே அவர் மருத்துவத்தை வெறுத்தார்.

இந்த அவலமான நாட்களில் டார்வினுக்கு இருந்த இரண்டே ஆறுதலான விஷயங்கள், வேதியியலும் கடற்கரையும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களில் வேதியியல் சோதனைகளை மட்டுமே டார்வின் ஆர்வமுடன் செய்தார். அதேபோல மாலை நேரங்களில் கடற்கரையில் அலைந்து திரிந்து கணவாய், நத்தை, கடல் எலி, கடல் அட்டை ஆகியவற்றைச் சேகரித்தார்.

பறவைகள் மீதும் டார்வினுக்கு ஆர்வம் வந்தது. பறவைகளை உற்று நோக்கக் காற்றுக்கொண்டார். அவற்றின் நடத்தைகளை, வாழ்விடங்களைப் புத்தகத்தில் குறித்து வைத்தார். வேட்டையாடிய பறவைகளைப் பாடம் செய்தார்.

பாடம் செய்யும் செயல்முறையை டார்வினுக்குக் கற்றுக்கொடுத்தது, சார்லஸ் வாட்டர்டன் எனும் முன்னாள் கறுப்பின அடிமை. அடிமையாக இருந்து தனியார் ஆசிரியராக மாறிய அவர், தான் சந்தித்த அனுபவங்களை, பயணித்த நிலங்களை விவரிப்பார். குறிப்பாகத் தென் அமெரிக்க மழைக்காடுகளில் சந்தித்த மிருகங்களை, அவற்றின் வாழ்வியலைச் சுவைபடக் கூறுவார். இந்தக் கதைகளைக் கேட்கவே டார்வினுக்குப் பிடிக்கும். இதற்காகவே தவறாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார். நேரம் போவது தெரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். இதன் காரணமாகவும் டார்வினுக்குப் பயணத்தின் மீதான ஆர்வம் துளிர்விட்டது.

பல்கலைக்கழகத்தில் அவர் கடைபிடித்துவந்த மற்றொரு பழக்கம், தவறாமல் தனது சகோதரிகளுக்குக் கடிதம் எழுதுவது. தினசரி அனுபவங்களை, கற்றறிந்த விவரங்களைச் சகோதரிகளுக்கு விளக்குவார். அதேபோல அனுபவிக்கும் இன்னல்களையும் விவரிப்பார். அவர்களோ டார்வினுக்கு ஆறுதல் சொல்லி, அவரை ஊக்கப்படுத்தி பதில் கடிதம் எழுதுவர்.

டார்வினின் சகோதரி சூசன், ‘உன் கஷ்டம் புரிகிறது சார்லஸ். ஆனால் வாழ்க்கை என்பதே கடினமானதுதான். அதில் நீ தேடி கண்டடையும் ஞானமே உனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று எழுதுவார். இன்னொரு சகோதரி கரோலின், டார்வினுக்கு ஆன்மீக ஊக்கங்களை வழங்குவார். ‘நீ பயிலும் மருத்துவம் அருள் வாய்ந்தது. நீ இறந்தபின் சொர்க்கத்திற்குச் செல்லத் தேவையான அருளை உனக்குப் பெற்றுத்தர வல்லது’ என்பார். இப்படியாகச் சகோதரிகளின் அன்பான வார்த்தைகளே டார்வினை இயக்கின.

ஆனாலும் டார்வினால் மருத்துவப் படிப்பில் முழுதாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. வகுப்புகளில் கவனம் இல்லாமல் இருந்தார். இதை ஒரு பேராசிரியர் கவனித்துவிட்டு டார்வினின் தந்தைக்குத் தெரியப்படுத்தவே, அவர் கோபமாக ‘நீ படிப்பில் கவனம் செலுத்தாமல் சோம்பேறியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லாமல் போவாய்’ என்று கடிதம் எழுதினார்.

டார்வினுக்கு அச்சம் பிறந்தது. பிடிக்காத பாடம். பிடிக்காத சூழல். எதிலுமே ஆர்வம் வரவில்லை. எதிர்காலம் என்னவாகப்போகிறது? தந்தை சொன்னதுபோல ஒன்றுமில்லாமல் முடிந்துவிடுவோமா?

ஆனால் அப்போதே மற்றொரு எண்ணமும் வந்தது. இல்லை, என் தந்தை ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும்கூட நிராதரவாக நிற்கும் நிலை ஏற்படாது. இதுபோதும். பார்த்துக்கொள்வோம்.

இந்த எண்ணமே அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. விரும்பியதுபோல வாழ முடிவெடுத்தார். வகுப்புகளுக்குச் செல்வதையே முற்றிலுமாக நிறுத்தினார்.

பொழுதுகளை வீணாகக் கழித்தார். அவர் எண்ணம் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது. அப்போதுதான் அவருக்கு மாணவர் சங்கங்களுடனான தொடர்பும் ஏற்பட்டது. விளையாட்டாக அவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்து, அங்கே கிடைத்த அனுபவங்கள்தான் டார்வினின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

(தொடரும்)

The post டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்! appeared first on கிழக்கு டுடே.

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ் | BBC News கருத்து கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள்

5 May 2025 at 04:28

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ்.. BBC News நடத்திய கருத்துக் கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள்.. 1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) ஜெர்மன் நாட்டை சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான…

The post கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ் | BBC News கருத்து கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள் appeared first on Book Day.

டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக் காட்டினார். சொற்களுக்குப் பொருள்களை விளக்கினார். டார்வினுக்கோ சகோதரி பயில்விக்கும் பாடங்களில் ஆர்வம் கிடையாது. படு சுட்டியாக இருப்பார். வம்பு தும்புகளில் ஈடுபடுவார். கண்ணாடிகளை உடைப்பார். பொருட்களைத் திருடிச் சென்று வழியில் காணும் சிறுவர்களுக்குத் தானம் செய்வார்.

டார்வினுடைய தந்தை ராபர்ட் பெரிய நூலகம் வைத்திருந்தார். அதில் சென்று வரைபடங்களையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்ப்பார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமே டார்வினின் பிரதான வசிப்பிடம். அவரது தாய் வளர்த்து வந்த புறாக்களுடன் விளையாடுவார். மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து உண்பார். அருகே ஓடும் ஆற்றில் மணிக்கணக்கில் அமர்ந்து மீன் பிடிப்பார்.

டார்வினுக்கு அப்போதே சிற்றுயிர்களைச் சேகரிப்பதில் ஆர்வம் இருந்தது. நத்தை, சிப்பி ஆகியவற்றின் ஓடுகள், பறவை முட்டை என ஒவ்வொன்றையும் எடுத்துவந்து வீட்டில் குடுவையில் அடைத்து வைப்பார். பூக்களைப் பறித்துவந்து நோட்டுப் புத்தகங்களுக்குள் பதுக்குவார். அவற்றின் பெயர்களைத் தாயிடம் கேட்டு எழுதிக்கொள்வார்.

டார்வினின் எட்டாவது வயதில் வீட்டின் அருகேயுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கேயும் அவருக்கு வகுப்பறை உவக்கவில்லை. பள்ளிக்கு வெளியேயுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது, பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது என நேரம் கழிப்பார். விலங்குகளையும் தாவரங்களையும் சேகரிப்பதுடன், அவற்றைப் பற்றி நண்பர்களிடம் விவரிப்பது டார்வினுக்கு இன்னமும் பிடிக்கும். குறிப்பிட்ட விலங்கையோ, தாவரத்தையோ எங்கே பார்த்தேன், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தது, அவற்றை எப்படிப் பிடித்தேன் என உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் கலந்து அடித்துவிடுவார். நண்பர்களும் அவர் சொல்லும் கதைகளை வாய்பிளந்து கேட்பர். இப்படியாக டார்வினுக்கு அறிவியலை எப்படிச் சலிப்பில்லாமல் சொல்ல வேண்டும் என்ற கலை அப்போதே கைகூடி இருந்தது.

0

சிறார் பருவம் இப்படியாக நகர, திடீரென்று ஒருநாள் டார்வினின் தாய் சூசானா காலமானார். வயிற்றுக் கட்டியால் படுக்கையில் இருந்தவர் மறைந்துபோனார். தாயின் மரணம் டார்வினை உலுக்கியது. நீண்ட நாட்கள் தனிமையிலேயே இருந்தார். சூசானாவின் மரணத்திற்குப் பிறகு டார்வினின் சகோதரிகள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். டார்வினின் தந்தை ராபர்ட்டோ குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினார். வெளியில் அன்பான மனிதராக இருந்தாலும் வீட்டில் சிடுசிடுவென இருப்பார். தான் சொன்ன வேலைகளை உடனே செய்து முடிக்க வேண்டும் எனக் கெடு விதிப்பார். எல்லாமும் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

பதிமூன்று வயதில் டார்வினை ஷ்ரூஸ்பரி அரசுப் பள்ளியில் சேர்ந்தார் ராபர்ட். அந்தப் பள்ளியும் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வீட்டின் கடுமையான சூழலுக்கு பள்ளியையே தாங்கிக்கொள்ளலாம் என்றிருந்தார்.

டார்வினுடைய அண்ணன் எராஸ்மஸும் அதே பள்ளியில்தான் படித்தார். டார்வினுக்கு எராஸ்மஸ்தான் எல்லாம். இருவரும் சகோதரர்கள் என்பதைவிட நல்ல நண்பர்கள். எந்நேரமும் சேர்ந்தே பொழுதைக் கழிப்பர். இருவரும் சேர்ந்து புத்தகங்களை வாசிப்பர். கதைகளைப் பகிர்ந்துகொள்வர்.

டார்வினுக்குச் சாகசக் கதைகள் பிடிக்கும். அவற்றில் வரும் வினோத மிருகங்கள் பிடிக்கும். நிறையக் கதைகளைப் படித்ததில் அந்த வயதிலேயே உலகம் முழுக்கம் சுற்ற வேண்டும் என்ற விருப்பம் டார்வினுக்கு வந்தது. தீவுகளிலும், தென் அமெரிக்கக் காடுகளிலும் சாகசப் பயணம் மேற்கொள்வதுபோல் பகல் கனவு காண்பார். அதேபோல் கடல்கள் என்றாலும் டார்வினுக்கு அலாதி பிரியம். கடற்கரைகளுக்குச் சென்றால் நீண்ட நேரம் அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பார். அங்கே காணும் தாவரங்களை, கரை ஒதுங்கும் உயிரினங்களை வீட்டிற்கு எடுத்து வருவார். அது என்ன என்று கேட்டறிந்து வகைப்படுத்தி எழுதி வைப்பார். இப்படி எழுதி வைப்பது அவருடைய தாய் சொல்லிக்கொடுத்த பழக்கம். உயிரினங்களைச் சேகரிப்பதையும் வகைப்படுத்துவதையும் இப்படித்தான் கற்றுக்கொண்டார்.

உயிரினங்களைப் போல வேதியியலிலும் டார்வினுக்கு ஆர்வம் இருந்தது. இதற்குக் காரணமும் சகோதரன் எராஸ்மஸ்தான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் சோதனைக்கூடம் ஒன்றை உருவாக்கி, தன் தந்தையின் மருந்துகளை எடுத்து வந்து பல்வேறு சோதனைகள் செய்வர். குறிப்பாக அந்தக் காலகட்டம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி இருந்ததால் வளர் பருவத்தினருக்குப் பெற்றோர்களே வேதியியல் பரிசோதனைகளை ஊக்குவித்தனர். டார்வினும் எராஸ்மஸும் தந்தையின் சட்டைப் பையிலிருந்து காசுகளைத் திருடிச் சென்று கண்ணாடிக் குடுவை, சிறிய அடுப்பு, ரசான கரைசல்கள் என என்னென்னவோ வாங்கி வருவர்.

ஆனால் இவை அனைத்தும் எராஸ்மஸ் பதினேழு வயதை எட்டியவுடன் முடிவுக்கு வந்தது. பள்ளிப் படிப்பை முடித்த எராஸ்மஸ், மருத்துவம் பயில்வதற்காக கேம்பிரிட்ஜ் கிறிஸ்து கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். டார்வினின் கூட்டுச் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. சகோதரன் இல்லாத வீடு, சகோதரிகளின் கட்டுப்பாடுகளாலும் தந்தையின் கடுமையாலும் வாழ வழியற்ற இடமாகத் தெரிந்தது.

வீட்டில் இருப்பதையே வெறுத்தார். அப்போது டார்வின் பதினைந்து வயதை எட்டியிருந்தார். வேட்டையாடுவதில் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாமல் தந்தையின் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்து காடுகளிலும் ஏரிகளிலும் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் தேடித் திரியத் தொடங்கினார்.

ஆனால், துப்பாகி வேட்டைக்கு அரசின் அனுமதி வேண்டும். இருப்பினும் டார்வினுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. தன் தந்தை உள்ளூரில் பிரபல மருத்துவர் என்பதால், உள்ளூர் பிரமுகர்களிடம் தந்தையின் பெயரைச் சொல்லிவிட்டு வேட்டையாடக் கிளம்பிவிடுவார். நேரம் காலம் தெரியாமல் வேட்டையாடுவது, ஊர் சுற்றுவது என நாட்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் டார்வினின் தந்தைக்கு உண்மை தெரியவந்தது. ராபர்ட் கடும் கோபத்தில் கொந்தளித்தார். வீட்டிற்குத் திரும்பிய டார்வினை இடைமறித்து, ‘நீ நாய் சுடுவதற்கும், எலி பிடிப்பதற்கும் தவிர எதற்கும் லாயக்கில்லாதவன். நீ, நம் குடும்பத்திற்கே அவமானம்’ எனக் கத்திவிட்டார்.

தந்தை கண்டிப்புடன் நடப்பார் என்பது டார்வினுக்குத் தெரியும். ஆனால் தன்னைப் பற்றி இப்படி ஓர் எண்ணத்தை வைத்திருப்பார் என்பதை டார்வினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அழுதேவிட்டார். டார்வினை ஒழுக்கமற்ற நிலையிலிருந்து வெளிகொண்டு வருவதற்கு ஒரு வழிதான் ராபர்ட்டுக்கு இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் மிச்சம் இருக்கும் நிலையிலும், அவரது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு, கல்லூரிக்கு அனுப்புவது. அவருக்கான வாழ்க்கைப் பாதையைக் காட்டுவது. மருத்துவம் பயிலவைப்பது. இவை எல்லாம் டார்வினை நல்வழிப்படுத்தும் என்று நம்பினார். இதற்காக இரண்டு தேர்வுகளை டார்வினுக்கு முன்னால் வைத்தார்.

ஒன்று, ஸ்காட்லாந்துக்குச் சென்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில வேண்டும். பிறகு லண்டனில் தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்து மருத்துவராக உயர வேண்டும்.

இல்லை என்றால், இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலோ சேர்ந்து கிறிஸ்தவ நெறியியலைக் கற்க வேண்டும். ராபர்ட் இவ்வாறு கருதியதற்குக் காரணம் இருந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் திருச்சபையுடன் இணைப்பில் இருந்தன. திருச்சபை வலியுறுத்தும் ஒழுக்க நெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதே அவற்றின் தலையாயக் கடைமையாக இருந்தது. அங்கே பயில்வது அறிவை இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என ராபர்ட் கருதினார். சொல்லப்போனால் ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜும் வகுப்புவாதத்தைச் சமூகத்தில் நிலைக்க வைத்திருக்கும் கல்விக்கூடங்களாகவே இருந்தன. ஒருவேளை டார்வினுக்கு ஆர்வம் இருந்தால் அங்கேயே மருத்துவமும் பயின்று ‘உயர்குடி’ நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவராக உயரலாம் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு.

டார்வினுக்கு இரண்டிலும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. சலிப்பூட்டும் சமயக் கொள்கைகளைப் பயில்வதற்கு மருத்துவராகிவிடலாம் என முடிவு செய்து எடின்பர்க் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்தார்.

(தொடரும்)

The post டார்வின் #3 – ஒழுக்கமற்றவன் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. இங்கிலாந்து, பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து தொழிற்சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. பிர்மிங்ஹாம் இந்தப் புதிய தொழில் உலகின் மையமாகத் திகழ்ந்தது. நீராவி இயந்திரங்களின் கூச்சல்களும் தொழிற்சாலைகளின் இரைச்சல்களுமே நகர வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.

புதிய செல்வந்தர்கள் வர்க்கம் உருவாகி வந்தது. அறிவையும் தொழில்நுட்பங்களையும் லாபத்தையுமே கருத்தில் கொண்டு எதிர்காலத்தை உருவாக்கும் முனைந்த வர்க்கம். இதில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். பாரம்பரிய, நிலவுடைமைச் சமூகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிதாய் முளைத்து, சுயமாய் செல்வத்தைத் தேட முனைந்தவர்கள்.

இதில் ஒருவராக ஜோஷியா வெட்ஜ்வுட் இருந்தார். மண்பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலை வைத்திருந்தார். பிர்மிங்ஹம் வட்டாரத்தில் முக்கியப் புள்ளி. வெட்ஜ்வுட்டுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் எராஸ்மஸ். மருத்துவர், கவிஞர், கண்டுபிடிப்பாளர் எனப் பல்துறை வித்தகர். இவரும் வெட்ஜ்வுட்டும் எலியும் பூனையும்போல.

எராஸ்மஸ் எல்லோரையும் கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் கிண்டலடிப்பார். குறிப்பாக மத நம்பிக்கைகளை, கிறிஸ்தவ நம்பிக்கைகளை. கிறிஸ்தவ மதம் அழிந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு அறிவு வந்துவிட்டது. கிறிஸ்தவத்தைக் கேள்வி எழுப்புகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் தன்னைச் சீர்திருத்திக்கொள்கிறது என்பார். ஜோஷியா வெட்ஜ்வுட்டோ கிறிஸ்தவர். ஆனால் பழைமைவாத, சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர் கிடையாது. இவருடையது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்தக் கிறிஸ்தவம் பிதா, குமாரன், தூய ஆவி என்கிற பழைய திரித்துவ நம்பிக்கையை நிராகரித்தது. இறைவன் ஒருவனே என்கிற இறை ஒருமைவாதத்தை முன்வைத்தது.

இதைத்தான் கிறிஸ்தவம் பகுத்தறிவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள சீர்திருத்தத்தில் ஒளிந்துகொள்கிறது என்றார் எராஸ்மஸ். அவர் அறிவை நம்பினார். அறிவியலை நம்பினார். அறிவியலே எல்லாவற்றுக்குமான பதிலை வைத்திருக்கும்போது எதற்காக மதத்தின் பக்கம் ஒளிய வேண்டும்? பகுத்தறிவைக் கொண்டே வளமையான எதிர்காலத்தைக் கட்டமைப்போம் என்பதுதான் எராஸ்மஸின் வாதம். இதுதான் இருவருக்கும் அடிக்கடி மோதல் வருவதற்குக் காரணம்.

இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை உளமாற நேசித்தார்கள். கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடினார்கள். இந்தக் கண்டுபிடிப்பாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து லூனார் சமூகம் என்ற சங்கத்தை நிறுவினர். ஜேம்ஸ் வாட், மேத்யூ போல்டன், பெஞ்சமின் பிராங்ளின், ஜோசப் பிரிஸ்ட்லி போன்ற பெரும் அறிவியலாளர்கள் இந்தச் சங்கத்தில் இருந்தார்கள். அறிவியல், தத்துவம், சமூகம், தொழில், கல்வி, மருத்துவம் எனப் பலவற்றை விவாதித்தார்கள். இந்தச் சமூகம் பௌர்ணமி இரவு அன்றைக்கு மட்டுமே கூடும். அதனால் லூனார் சமூகம் என அழைக்கப்பட்டது. லூனார் என்றால் நிலவு என அர்த்தம். ஆனால் அரசு இவர்களை லூனாட்டிக் சமூகம் என்றது. லூனாட்டிக் என்றால் அறிவற்றவர்கள் என அர்த்தம்.

இந்த லூனார் சமூகம், பழமைவாத கருத்துகளை மறுத்தது. பழைய சமூக விழுமியங்களைப் புறக்கணித்து, புதிய விழுமியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டது. இதனால் அரசு இவர்களைக் கலகக்காரர்களாகப் பார்த்தது. அன்றைக்கு இங்கிலாந்து அரசியலில் பழைமைவாதத்தைப் போற்றும் ஆங்கிலிகன் திருச்சபை ஆட்களே இருந்தனர். இவர்கள்தான் கல்வி அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அதிகார மட்டம் அனைத்திலும் இவர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. இவர்களது அதிகாரத்தை லூனார் சமூக ஆட்கள் அச்சுறுத்தியதால் அரசு பயந்தது.

லூனார் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஜோசப் பிரிஸ்ட்லி. வேதியியலாளர். ஆக்சிஜன் வாயுவைக் கண்டறிந்ததில் முக்கியமானவர். இவருடைய ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட எராஸ்மஸ், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது நோயாளிகளுக்கு ஆக்சிஜனைப் பரிந்துரைத்த முதல் மருத்துவர் எனக்கூடச் சொல்லலாம். வெட்ஜ்வுட்டும் பிரிஸ்ட்லியைக் கொண்டாடினார். அவரது பரிசோதனைகளுக்கு வேண்டிய நிதியையும் கருவிகளையும் தாராளமாக வழங்கினார்.

பிரிஸ்ட்லி அறிவியலில் மட்டுமல்லாமல் இறையியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிறிஸ்தவத்தை எல்லோருக்குமான மதமாக மாற்ற முனைந்தார். அது என்ன அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இறைவன் அருள் பாலிப்பார்? இயேசுவின் அருள் சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கேற்ற கொள்கைகளை வகுக்கத் தொடங்கினார்.

இதுதான் திருச்சபை அதிகாரத்தை அச்சுறுத்தியது. அது எப்படி பிரிஸ்ட்லி கடவுளை எல்லா வர்க்கத்தினருக்கும் சமம் என்று சொல்லலாம்? சடங்குகளை நிராகரிக்கலாம்? புனித ஆவியையும், மந்திர தந்திரங்களையும் மறுக்கலாம்? பிரிஸ்ட்லி மனிதர்களுக்கு மறு அவதாரம் கிடையாது என்கிறார். இயேசு உயிர்த்தெழுந்ததிற்குப் பின்னால் நாம் கண்டறியாத இயற்பியல் விதிகள் இருக்கலாம் என்கிறார். இது இப்படியே சென்றால் நமது எதிர்காலத்தைப் பாதித்துவிடும். மக்களிடம் இத்தகைய கருத்துக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு முன் இந்தக் கும்பலுக்கு மொத்தமாக முடிவுரை எழுத வேண்டும் என அரசு முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பம் அமைய காத்திருந்தபோதுதான் வந்தது, பிரெஞ்சுப் புரட்சி.

0

பிரெஞ்சுப் புரட்சியில் பழைய மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு புதிய மக்கள் அரசாங்கம் உருவானது. இதனை எராஸ்மஸ் கொண்டாடினார். மூளையற்ற முட்டாள் மன்னர்கள் வீழ்ந்து, மக்கள் அரசாளட்டும் என ஆராதித்தார்.

இங்கிலாந்து அரசு ஏற்கெனவே பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இங்கிலாந்திலும் எதிரொலித்துவிடுமோ என அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் எராஸ்மஸ் போன்ற அறிஞர்கள் இப்படிப் பேச, லூனார் சமூக ஆட்கள் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனச் சொல்லி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

சமத்துவம் பேசிய லூனார் சமூகத்தின் ஆட்கள் சல்லடைப்போட்டு தேடப்பட்டனர். நாத்திகம் பேசியவர்கள் நசுக்கப்பட்டனர். ஜோசப் பிரிஸ்ட்லியின் வீடும், பிரார்த்தனைக் கூடமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அறிவாளிகளுக்கு இனி வேலை இல்லை. அரசரும் திருச்சபையுமே போற்றப்பட வேண்டியவர்கள் என்றது அரசாங்கம். லூனார் சமூகம் சிதைந்துபோனது. பிரிஸ்ட்லி அமெரிக்கா தப்பிச் சென்றார்.

எராஸ்மஸ் தன் உழைப்பை எல்லாம் செலுத்தி ‘ஸூனோமியா’ (Zoonomia) எனும் புரட்சிகர மருத்துவ நூல் ஒன்றை எழுதி இருந்தார். ஆனால் அதைக் கிழித்தெறிய வேண்டும் என்றது அரசாங்கம். அவருடைய மற்ற படைப்புகளும் ஆபாசம் எனத் தூற்றப்பட்டன. எராஸ்மஸ் பேசும் நாத்திகம்தான் பிரெஞ்சுப் புரட்சி போன்ற சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இறுதியில் லூனார் சமூகம் இழுத்து மூடப்பட்டது. அப்போது நிலவி வந்த சுதந்திரச் சிந்தனை எல்லாவற்றையும் தீக்கு இரையாக்கிவிட்டு, புதிய இங்கிலாந்தை மீண்டும் பழைமைவாதம் நோக்கிய, திருச்சபை விழுமியங்களைப் பாதுகாக்கும் தேசமாக மாற்றியது அரசு.

அறிவுஜீவிகள் தங்கள் நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டனர். வெட்ஜ்வுட் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தனது மகன்களுக்குச் சொத்துகளைப் பிரித்துக்கொடுத்துவிட்டு, மகள்களுக்குத் திருமணங்கள் செய்துவைத்தார். தனது மகள் சூசானாவை தனது நண்பர் எராஸ்மஸின் மகனான ராபர்ட்டுக்குத் திருமணம் செய்துவைக்க முன்வந்தார்.

எராஸ்மஸுக்கு 14 வாரிசுகள். மூத்தமகன் சார்லஸ். அவரும் மிகச் சிறந்த மருத்துவர். ஆனால் நோயாளி ஒருவரைக் குணப்படுத்த முயற்சி செய்து, அதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்துபோனார். இரண்டாவது மகன்தான் ராபர்ட். எராஸ்மஸ், ராபர்ட்டையும் மருத்துவராக்க விரும்பினார்.

ராபர்ட் எடின்பர்க் பல்கலைக்கழகம் சென்றார். லெய்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். சொந்த ஊருக்குத் திரும்பி, மருத்துவர் பணியைத் தொடங்கினார். ராபர்ட்டுக்கு தனது தந்தையைப்போலவே மருத்துவ ஞானம் இருந்தது. அனைவரையும் அரவணைக்கும் நேசம் இருந்தது. இதனால் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார். ஆனால் தன் தந்தையைப்போலப் புரட்சிகர, நாத்திகவாதக் கருத்துக்களைப் பேசாமல், இங்கிலாந்து அரசுக்கு அடிபணிந்து ஷ்ரூஸ்பரி நகருக்கு வெளியே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபுகுந்தார்.

இவருக்குத்தான் வெட்ஜ்வுட் தன் மகள் சூசானாவைத் திருமணம் செய்ய முன்வந்தார். ராபர்ட்டுக்கும் சூசானாவுக்கும் 1796-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் பிறந்தன. முதல் மூன்றும் மகள்கள். நான்காவது மகன். அவனுக்கு எராஸ்மஸ் எனத் தந்தையின் பெயரையே வைத்தார் ராபர்ட். இதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து பிப்ரவரி 12, 1809 அன்று இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்கு ராபர்ட், தன் குடும்பத்தின் மருத்துவப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வண்ணம், சார்லஸ் ராபர்ட் டார்வின் எனப் பெயரிட்டனர்.

சார்லஸ், ராபர்ட்டின் சகோதரர் பெயர். நோயாளியைக் குணப்படுத்தப்போய் இறந்தவர் எனப் பார்த்தோம் இல்லையா? அவரது பெயர். டார்வின் என்பது தனது தந்தை ‘எராஸ்மஸ் டார்வினின்’ வம்சாவளியை நினைவுபடுத்தும் குடும்பப் பெயர். இப்படியாக மருத்துவர்கள் வழிவந்த மகன் என்பதால் சார்லஸ் டார்வினும் சிறந்த மருத்துவராக வருவான் என ராபர்ட் எதிர்பார்த்தார். ஆனால் மகனுக்கோ மருத்துவத்தில் துளியும் ஆர்வமில்லாமல் இருந்தது.

(தொடரும்)

The post டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம், கூச்சல் நகரமெங்கும் விரவிக் கிடந்தது. சாலைகளில் நெருப்புக் குண்டுகள் வீசப்பட்டன. வீதிகளில் புரட்சி அலை வீசிக்கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். பழைய அதிகார அமைப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய, சமத்துவ சமூகத்தை நிறுவும் முயற்சியில் இருந்தனர்.

எவை எல்லாம் மக்களை ஒடுக்கும் கருவிகளாகப் பார்க்கப்பட்டனவோ அத்தனையையும் அடித்து நொறுக்கத் தயாராக இருந்தனர். மதங்கள், மத குருமார்கள், அரசாங்கம், அதிகாரிகள் என எல்லாமும் விமர்சிக்கப்பட்டன.

கடவுளைக்கூடப் புரட்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஆவியும் ஆன்மாவும் உண்மை இல்லை. உழைக்கும் மக்களைக் கட்டுப்படுத்த உயர்குடியால் உருவாக்கப்பட்ட பொய்கள் அவை. இந்தச் சமூக ஒழுங்கே சாமானியர்களை அடிமைப்படுத்த செல்வந்தர்கள் உருவாக்கிய கட்டமைப்புதான் எனச் சொல்லப்பட்டது.

மறுபக்கம், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், மடாதிபதிகளும் செய்வது அறியாது திகைத்தனர். அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது. பிரிட்டன் வீழும் தருவாயில் இருக்கிறது. இப்படியே சென்றால் புரட்சியாளர்கள் மொத்தமாக நம்மை வாரிச் சுருட்டிவிடுவார்கள். நமது அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் பாதுகாக்க நாமும் சண்டையிட்டாக வேண்டும். அவர்களிடம் ஆள் பலம் இருக்கலாம். நம்மிடம் ஆயுத பலம் இருக்கிறது. யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்துத் துவையுங்கள். யாரெல்லாம் எதிர்த்துப் பேசுகிறார்களோ அத்தனைப் பேரையும் புரட்டி எடுங்கள்.

உத்தரவு பறந்தது. முற்போக்குப் பேசியவர்கள் தாக்கப்பட்டனர். கடவுளைப் பழிப்பவர்கள் கண்டிக்கப்பட்டனர். இருபக்கமும் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்தச் சமயத்தில் அந்த 30 வயது நபர் லண்டனின் பதற்றச் சூழலில் இருந்து வெளியேறி இங்கிலாந்தின் கிராமம் ஒன்றில் குடியேறினார். சுற்றியும் ஆள் நடமாட்டமில்லாத இடம். உதவிக்குக் கூப்பிட்டால்கூட யாரும் வர முடியாது. முற்றிலும் தனிமை. ஆனால் அப்படியொரு இடம்தான் அவருக்குத் தேவைப்பட்டது.

இத்தனைக்கும் அவர் ஏழையில்லை. புகழ்பெற்ற மருத்துவரின் பேரன். மிகப்பெரிய நிலச்சுவாந்தாருடைய மகன். கேம்ப்ரிட்ஜில் கல்வி பயின்றவர். திருச்சபையில் மிகப் பெரிய சமய குருமாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியாமல் தனிமையைத் தேடி வந்திருந்தார்.

அவருக்குள் பூகம்பம் வெடித்துக்கொண்டிருந்தது. மனதுக்குள் சுனாமி வீசியது. அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணம். அதில் எழுதப்பட்டுள்ள சொற்கள்தான் அவரைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தன. அடிக்கடி தலைவலி வந்தது. உடல் வலி வாட்டியது. கைகளில் நடுக்கம். பலமுறை படுத்த படுக்கையாய் ஆகவும் நேர்ந்தது.

அந்த நோட்டுப்புத்தகத்தில் உள்ள விஷயம் வெளியே தெரிந்தால் என்னவாகும்? இங்கிலாந்தே இரண்டாய் உடைந்துவிடுமே? எந்தப் பக்கத்தில் இருந்து தாக்குவார்கள் என்றே சொல்லமுடியாதே? ஒருவகையில் இது நான் சார்ந்திருக்கும் சமூகத்திற்குச் செய்யும் துரோகம் இல்லையா? ஏற்கெனவே நாலாபுறமும் புகைந்து கொண்டிருக்கிறது. கொலைகாரக் கும்பல் சாலையில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையில் இந்த நோட்டுப் புத்தகம் கிடைத்தால் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல ஆகிவிடாதா?

இதில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் வெளியே தெரிந்தால் திருச்சபை என்னை மன்னிக்காது. நாத்திகவாதி எனத் தூற்றுவார்கள். அறத்திற்குப் புறம்பானவன் என வசைபாடுவார்கள். மொத்தமாய் ஒதுக்கிவிடுவார்கள். இதற்கு நானே ஒதுங்கிவிடலாம் என முடிவெடுத்துதான் இங்கு வந்திருக்கிறேன்.

அப்படியென்றால் அந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிடலாமே? விட்டு ஒழிந்தது என நினைத்துவிடலாமா? அதுவும் முடியாது. இது நான் கண்டடைந்த கருத்துகள். சொல்லப்போனால் உண்மைகள். ஆனால் சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போடும் வல்லமை படைத்த உண்மைகள். அதனால்தான் என்னை அலைக்கழிக்கிறது.

அந்த நோட்டுப் புத்தகத்தை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்தார். அந்த வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையே தவிர்த்தார். தனது படிப்பறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கண்ணாடியை மாட்டிவைத்துக்கொண்டு வீட்டின் அருகே யாரெல்லாம் வந்துபோகிறார்கள் எனக் கண்காணித்தார். தூங்குவதுகூட அச்சமாயிருந்தது. இப்படித்தான் அவரது வாழ்க்கை கழிந்தது. ஒருநாட்கள், இரு நாட்கள் அல்ல. 22 ஆண்டுகள்.

ஆம், தான் கண்டுபிடித்த உண்மையை 22 ஆண்டுகள் பாதுகாத்து வைத்தார் அந்த மனிதர். அவர் வேறு யாரும் இல்லை. வரலாற்றில் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக அறியப்பட்ட சார்லஸ் டார்வின்.

டார்வின் இந்த அளவு அஞ்சி நடுங்குவதற்கு அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? அப்படி அவர் என்ன கண்டுபிடித்திருந்தார்?

அவர் கண்டுபிடித்த உண்மை எளிமையானது. உயிரினங்களைக் கடவுள் படைக்கவில்லை. அவை சில இயற்கை விதிகளின்கீழ் பரிணமித்து தோன்றின. இதுதான். இந்தக் கருத்துக்கள்தான். இதற்காகத்தான் அவர் இன்றைக்கும் தூற்றப்படுகிறார். மதநம்பிக்கைவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார். சில அறிஞர்களாலும் விமர்சிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தக் கருத்தை அவர் சொன்னபோதே அது ஒன்றும் புதிய கருத்து இல்லை. டார்வினுக்கு முன்பே பரிணாமம் பற்றிய பார்வை இருந்தது. கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை என்ற கருத்தாக்கம் இருந்தது. பிறகு ஏன் டார்வினை மட்டும் எல்லோரும் தூற்ற வேண்டும். டார்வினைக் கண்டு மட்டும் ஒருசாரார் ஏன் அலறவேண்டும்?

இதைத் தெரிந்துகொள்ள நாம் டார்வினையும் அவர் கண்டடைந்த உண்மைகளையும் அவை தோன்றிய சமூக–அரசியல் பின்னணியையும், அந்தக் கருத்துகள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் டார்வினின் வாழ்க்கையை முழுதாக ஆராய வேண்டும்.

டார்வின் தான் கண்டடைந்த உண்மையை நினைத்து, மனம் வெதும்பி, நண்பர் ஒருவருக்கு எழுதிய கடித்ததில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘வேறு யாரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்? இயற்கையை அத்தனை அழகானதாய், தெய்வீகம் வாய்ந்ததாய் கருதுகிறோம். இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கடவுள் பார்த்து பார்த்துப் படைத்தார் எனப் பூரிக்கிறோம். ஆனால் நானோ இயற்கையின் மற்றொரு முகத்தை, அதன் குரூரத்தைக் காட்ட விழைகிறேன். நான் நிச்சயம் சாத்தானின் பணியாளாகத்தான் இருக்க முடியும்.’

உண்மையில் டார்வின் சாத்தானின் பணியாளா?

(தொடரும்)

The post டார்வின் #1 – சாத்தானின் பணியாள்! appeared first on கிழக்கு டுடே.

❌