Normal view

Received before yesterday

இசையெனும் இறை

கனியின் திரை நேரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் அந்த குறுகிய நேரத்திற்குள் அவன் எப்படியாவது சில அபூர்வ முத்துக்களை கண்டடைந்துவிடுவது வழக்கம். அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே’ எனும் பாடலை கண்டெடுத்தான்.

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் பேராயர் சின்னப்பா அவர்கள் பாடிய பாடல் அது. அவன் உபயத்தில் அப்பாடலைக் கேட்ட எனக்கும் மனம் நெகிழ்ந்தது.

ஒரு பாடல் பிடித்துவிட்டால் திகட்டத் திகட்ட அதை மீண்டும் மீண்டும் கேட்டு, மனதில் பதித்துக் கொள்வது கனியின் வழக்கம். இந்தப் பாடலுக்கும் அதையே செய்யத் தொடங்கினான்.

இவ்வளவு தூரம் அவனை ஈர்த்த அந்தப் பாடலைப் பாடியவரிடமே அவனை அழைத்துப் போனால் என்ன என்று தோன்றியது. நெருக்கமான சில தோழர்களிடம் வழி கேட்டோம். அவர்களின் உதவியோடு,

பேராயரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டோம்.

இன்று மதியம் வரச் சொன்னார். நானும் கனியும் மட்டும்தான் சென்றிருந்தோம். அவரது உதவியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரத்தில் வயதினால் உடல் சற்று தளர்ந்தாலும், குன்றாத மன ஊக்கத்தோடு ஐயா அவர்கள் வந்தார்.

பேச ஆரம்பித்ததுதான் நான். பின்னர் இரு இசை ஆர்வலர்களும் அவர்களின் மொழியில் உரையாடியபடியே இருக்க, நான் ஆங்காங்கு சிற்சில மொழிபெயர்ப்பு வேலைகள் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

சிறியதொரு பிரார்த்தனையுடன் மதிய உணவிற்கு அமர்ந்தோம். அட்டகாசமான விருந்து.

வயிற்றுக்கு ஈயும் நேரத்திலும் ஐயாவும், கனியும் மாறி மாறி பாடிக் கொண்டும், சிலாகித்துக் கொண்டுமிருந்தார்கள்.

சாப்பிட்டு முடித்து மீண்டும் வரவேற்பரைக்கு வந்தபோது கனியிடம் கானடா ராகம் தெரியுமாப்பா என்றார் ஐயா.

இவன் அதற்கான ஆரோகண அவரோகணத்தைப் பாடியதும், அலைபாயுதே கண்ணா பாடுவியா, பாடேன் கேட்போம் என்றார். இவனுக்கு பாடல் வரிகளில் கொஞ்சம் ஐயமிருப்பினும், பாட ஆரம்பித்துவிட, அவரும் பாடலில் ஆங்காங்கு இணைந்து கொண்டார்.

கண்ணனும், ஏசுவுமாகிய மேய்ப்பர்கள் இருவருக்கும் பொதுவான பாலமாக கானடா ராகம் அங்கே பொங்கிப் பிரவாகித்தது. கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே நெகிழ்ந்துவிட்டிருந்தோம்.

கனியின் தலை தொட்டு ஆசிர்வதித்து, வேளாங்கண்ணி மாதாவின் அழகிய திருவுருவச் சிலை ஒன்றினையும் தந்ததோடு மீண்டும் வாருங்கள் என்று அன்புடன் சொல்லி வழியனுப்பினார் பேராயர்.

❌