Normal view

Received before yesterday

தமிழியல் தேடல்(1) – அரிமாநோக்கு இதழ் -“ஆசிரியர் – மாணவர் அரசியலால் பலிகடாவாகும் ஆய்வு மாணவர்கள்; கவனிக்குமா UGC?”

25 January 2025 at 15:07

ஆய்வாளர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வணிக நோக்கத்தை மட்டுமே தார்பரியமாகக் கொண்டு செயல்படுவதால் “அரிமாநோக்கு” இதழில்  பல குளறுபடிகள் நடந்தேறியுள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC), கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் Consortium for Academic and Research Ethics (CARE) என்ற அமைப்பை உருவாக்கியது. பல்கலைக்கழக, கல்லூரி அளவில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்தவும், இதழ்களின் மோசடிகளைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு(CARE) துறை வாரியாகக் குறிப்பிட்ட சில இதழ்களுக்கு மட்டும் “UGC- CARE இதழ்கள்” என்ற அங்கீகாரம் வழங்கியது.

பல்கலைக்கழகங்களிலும் உறுப்புக் கல்லூரிகளிலும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் CARE இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற முறை சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. தற்போது ISSN எண் கொண்ட ஆய்விதழில் கட்டுரை வெளியிட்டால் போதும் என நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், இன்றளவும் சில தனியார் கல்லூரிகள் NIRF தகுதியை மேம்படுத்திக் கொள்ள, UGC CARE இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என ஆய்வு மாணவர்களை நிர்பந்திக்கின்றனர்.

தமிழ்ப் பாடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட UGC CARE இதழ்களாக அரிமா நோக்கு, காலச்சுவடு, உங்கள் நூலகம், பெயல், மணற்கேணி, வரலாறு, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், தமிழியல் (journal of tamil studies) போன்றவை உள்ளன.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த 2007 முதல் அரிமாநோக்கு இதழானது வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது, அரிமாநோக்கு என்ற பெயரில் ஒரே பதிவெண்ணைக் கொண்ட(ISSN) மூன்று இதழ்கள் உலாவுவதால், எது உண்மை? எது போலி? என்பது புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பியுள்ளனர்.

எனவே, அரிமாநோக்கு பெயரில் வரும் இதழ்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டினோம்.

1) “Arimaanokkujournal.com – வடமாநில இளைஞர்களின் போலி இதழ்”

இந்த இணைய இதழ் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர். இந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிடுவதற்கு ரூபாய் 3300 பெறப்படுகிறது.

2023ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 2025 வரை 214 கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஒரு கட்டுரைக்கு 3300ரூ. என்ற கணக்குப்படி பார்த்தால், இதுவரை 7,06,200 ரூபாயை போலி இதழைக் கொண்டு மோசடி செய்து கல்லா கட்டியுள்ளனர்.

இந்த இதழ் போலி என்று தெரிந்தும் சில பேராசிரியர்கள், கல்லூரியில் தங்களது பெயரை நிலை நாட்டிக் கொள்ளத் தெரிந்தே வலையில் விழுந்திருக்கின்றனர். இந்தப் போலி இதழில் பணத்தைக் கட்டி கட்டுரையை வெளியிட்டு விட்டு, “UGC CARE” இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளேன் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த இதழ்தான் உண்மை என நினைத்து பணத்தைக் கட்டி ஏமாந்து, ஆய்வேட்டை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் பல ஆய்வாளர்கள் தவிக்கின்றனர்.

UGC தற்பொழுது இந்த இதழை Cloned journal பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், இன்றளவும் இதில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கின்றன.

2) “Arimanokku.com – இணையாசிரியர் பன்னிருகை வடிவேலன்”

பன்னிருகை வடிவேலன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

“அரிமா நோக்கு இதழுக்கான ISSN எண் என் பெயரில்தான் உள்ளது. இது தொடர்பான விவரங்களை என்னுடைய இணையத்தில் பதிவிட்டுள்ளேன். இதழ் தொடர்பாக UGC-க்கும் எனக்கும் தகவல்தொடர்பு உள்ளது. இதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன” என்றார்.

இந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிட ரூபாய் 3000 வாங்குகின்றனர். நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் 57 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

3) “Arimaanokku.in – இணையாசிரியர் – வ.ஜெயதேவன்”

ஈரோடு தமிழன்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஜெயதேவன் அவர்களை இணையாசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

இணையாசிரியர் ஜெயதேவன் அவர்களிடம் பேசுகையில், “பன்னிருகைவடிவேலன் என்னிடம் முனைவர் பட்டம் பயின்றவர்தான். நம்ம மாணவர் என்று நம்பி அவர் பெயரில் இதழுக்கு ISSN எண் வாங்கினோம். பண விஷயத்தில் அவர் குளறுபடி செய்ததால் இதழ் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி விட்டோம். அவர் சமீபத்தில் தனியாக ஒரு இணையதளம் தொடங்கி அரிமாநோக்கு பெயரில் வெளியிட்டு வருகிறார். அரிமாநோக்கு இதழை நான்தான் UGC CARE- ல் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவுசெய்தேன். UGC-யிடம் நாங்கள் வழங்கிய ஆசிரியர் குழு பெயர் விவரத்தில் அவர் பெயர் இல்லை. ஜெராக்ஸ் கடையில் கட்டுரைகளை ஜெராக்ஸ் எடுத்து, அட்டைப் படத்தை மட்டும் கலர் ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்” என திகைக்கவைக்கும்படி சொன்னார்.

மேலும், “எங்களுடைய இதழில் வாழ்நாள் சந்தாதாரருக்கான தொகை ரூபாய் 5000. இத்தொகை செலுத்தியவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டுரை அனுப்பலாம். ஒரு கட்டுரைக்கெனத் தனியாகப் பணம் வாங்கப்படுவதில்லை. அரிமா நோக்கு இதழுக்கு ஈரோடு தமிழன்பன் ஆசிரியர். நான் இணை ஆசிரியர். எங்களுடையது தான் உண்மையான இதழ். பன்னிருகை வடிவேலனின் இச்செயல் தொடர்பாக வழக்கறிஞரை நாடியுள்ளோம்” என்றார்.

இது தொடர்பாக இதழின் முதன்மை ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களிடம் கேட்ட போது, “அரிமாநோக்கு இதழானது கடந்த 2007இல் இருந்து எனது தலைமையில், ஜெயதேவன் அவர்களை இணையாசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது” என்றார்.

இங்ஙனம், ஆசிரியருக்கும் – மாணவருக்கும் இடையேயான அரசியலில் சிக்கித் தவிக்கிறது ஆய்வாளர்களின் எதிர்காலம். ஆய்வாளர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வணிக நோக்கத்தை மட்டுமே தார்பரியமாகக் கொண்டு செயல்படுவதால் “அரிமாநோக்கு” இதழில் இப்படிப் பல குளறுபடிகள் நடந்தேறியுள்ளன.

இதழின் ISSN எண் ஒருவரிடத்திலும், இதழ் ஆசிரியர் குழுப்பொறுப்பு வேறொருவரிடத்திலும் உள்ளதால் எது உண்மை என்பது புரியாமல் குழம்பியுள்ளனர் ஆய்வாளர்கள். ஆயிரங்களைக் கொட்டியும் சரியான இதழில் கட்டுரைகளை வெளியிட முடியாமல், ஆய்வாளர்கள் திண்டாடுவதை UGC கவனத்தில் கொண்டு, அரிமாநோக்கு பெயரிலான போலிகளைக் களைந்து, உண்மையான இதழைத் தெளிவுபடுத்துதல் அவசியமாகிறது.

 

The post தமிழியல் தேடல்(1) – அரிமாநோக்கு இதழ் -“ஆசிரியர் – மாணவர் அரசியலால் பலிகடாவாகும் ஆய்வு மாணவர்கள்; கவனிக்குமா UGC?” appeared first on Kaanalvari.

❌