Normal view

Received before yesterday

அனோஜனின் ‘தீக்குடுக்கை’


ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது.

000

அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலும் வெளிப்படையான போர் என்றால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெறுப்பும் சமூகப் பிளவும் அதிகரிக்கும் அகப்போர்கள். இந்த யுத்தங்களின் பின்னணியில் குழந்தைகள் பெரியவர்களாகும் காதைதான் ‘தீக்குடுக்கை’. 

யுத்தம், வறுமை, மேலதிகத் தரத்திலான வாழ்க்கைக்காக சொந்த ஊர், சொந்த மொழி, பந்தங்களைத் துறந்து மனிதர்கள் பாரிய அளவில் குறுக்கும்நெடுக்குமாகப் புலம்பெயரும் நூற்றாண்டு இது.

அனோஜனின் நாவலில், பெற்றோரின் காலத்திலேயே அடையாளத்தை இழந்து லண்டனில் வளர்ந்த ஆதன், வாலிபப் பருவத்தில் தன் அடையாளம், தன் வரலாறு குறித்த உணர்ச்சியால் தீண்டப்பட்டு, தன் இனமே ஒட்டுமொத்தமாக அடையாளத்தை இழக்கப்போகும் யுத்தகளத்துக்கு வந்து ஒப்புக்கொடுக்கிறான். 

லௌகீகமாக எல்லாப் பாதுகாப்புகளும் இருக்கும் ஒருவன் அடையாளத்துக்காக ஏன் அந்த சாகசத்தைச் செய்யத் துணிகிறான்? புயலில் ஒரு தோணி நாயகன் பாண்டியன் எடுக்கும் சாகசத் தேர்வை ஞாபகப்படுத்தும் அம்சம். இது நாவலில் நிகழும் அசாதாரணம் என்றால், யுத்தம், இன அழிப்பு காரணமாக லண்டனுக்கு வரும் காந்தனோ, ஈழக்கதைக் களத்திலும் எதார்த்தத்திலும் நாம் பரவலாகக் காணும் சாதாரணம். 

வரலாற்றின் அரதப்பழசான காதல் என்ற பழுதுபட்ட கட்டுமரத்தில் கருணைக் கொடியை ஏற்றி யுத்தமுனைக்கு ஆதனைத் தேடிவரும் எரிகா. உக்கிரமான போரையும் அடையாளம் இழப்பையும் வரலாறு நமது குழந்தைகள் மீது போடும் ஆறாத கீறல்களையும் அலைக்கழிப்புகளையும் நாவல் தயக்கமின்றி குட்டிக் குட்டிக் கதைகளாகத் தொட்டுச் செல்கிறது. இத்தனை மூச்சுமுட்டலுக்கு நடுவிலும் இருள்வெளியில் மினுங்கும் ஊசிமுனை போன்ற சிறிய நட்சத்திரங்களைப் பார்ப்பது போன்ற நம்பிக்கை உணர்வை இந்தப் படைப்பு அளிக்கிறது. 

அனோஜனின் மொழி அளிக்கும் மனப்பதிவை, அனுபவத்தை மிருது என்று நான் மொழிபெயர்க்கிறேன். காத்திரமான சிறுகதை ஆசிரியராக தன் அடையாளத்தை நிறுவியிருக்கும் அனோஜனின் முதல் நாவல் என்ற வகையில் குறிப்பிடத்தகுந்த அழகிய சிறு படைப்பு இது. Coming of age நாவல்கள் தமிழில் அதிகம். 18-வது அட்சக்கோடு, என் பெயர் ராமசேஷன் போன்ற நாவல்களின் வரிசையில் ‘தீக்குடுக்கை’ நாவலை ஈழப்பின்னணியில் நான் வைத்துப் பார்க்கிறேன். இன்று, ஒண்ட ஒரு வதிவிடம் இல்லாமல் காயங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் தீக்குடுக்கைகள்தானே.

சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே – என் புத்தக அட்டையின் கதை


‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை, எனது தனித்தொகுதியான ‘ஞாபக சீதா’வில் இடம்பெற்றது. 

மிக குறுகிய காலமே என்னை ஆட்கொண்டு, அந்த நாட்களை பொன்னில் சுடரேற்றி, சீக்கிரமே பிரிந்து சென்ற ஒருத்திக்கு, பிரிந்ததின் நினைவுப் பரிசாக, அதற்கு முன்னர் சில ஆண்டுகள் நான் சேகரித்திருந்த பொருட்களை, ஒரு கண்ணாடிக் குடுவையில் இட்டு அளித்தேன்.

நான் சேகரித்த கடல் சிப்பிகள், துங்கபத்ராவிலிருந்து கொண்டுவந்த கூழாங்கற்கள், திருநெல்வேலி கோயில் வாசலில் வாங்கிய சோளிகள், குட்டி பொம்மைகள் என அந்தக் குடுவையில் போட்டு அவளது பிறந்த தினம் தொடங்கும் நள்ளிரவில் பரிசளித்தேன்.

இதை ஒரு கவிதையாக எழுதுங்கள் என்று எனக்கு அக்காலத்தில் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் யோசனை கூறினார்.

அதன் விளைவே 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே' கவிதை. அவள் என்னிடமிருந்து தொலைந்து போய் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுதிக்கு ஒரு தலைப்பை வைப்பதற்கு ஆலோசித்தபோது, ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ தலைப்பு பொருத்தமாகப் பட்டது.

இந்த தலைப்புக்காக அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு யோசித்தபோது, அவள் என்னை விட்டு நீங்கியபிறகு நான் சேர்த்த பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி புகைப்படமாக எடுக்கலாம் என்று தோன்றியது தற்செயல்தான்.

அந்தமானுக்கு நண்பர் சுப்ரமணியனின் அழைப்பின் பேரில் சென்றபோது சேர்த்த பவளப்பாறைகள்,கிளிஞ்சல்கள், காலை நடையில் சேகரித்த கிரிக்கெட் பந்துகள், சிங்கப்பூர் நண்பர்களான இன்பாவும் சுஜாவும் அளித்த பொம்மைகள், கவிஞர் இசை எனக்கு நினைவுப் பரிசாகத் தந்த மான் சிலை, எனது மகள் வினு பவித்ரா பள்ளிப்படிப்பில் பயன்படுத்திய வஸ்துகள் எல்லாமும் எனது சேகரத்தில் இருந்தன.

என் அப்பா கடந்த மே மாதம் 26ஆம் தேதி இறந்தபின்னர், திருநெல்வேலி வீட்டை காலிசெய்தபோது அவரது அப்பாவும் எனது தாத்தாவுமான சங்கரன் பிள்ளை எனது 13 வயதில் பரிசாக அளித்த 2 கொலு பொம்மைகள், ஒரு அட்டைப்பெட்டியில் கிடைத்ததை ஒரு ஆசிர்வாதமாகவே கருதி சென்னைக்கு எடுத்து வந்தேன். சரஸ்வதி, பால பருவத்திலிருக்கும் கிருஷ்ணன் பொம்மை அவை.

என்னைப் பிரிந்து போனவள் எனக்கு ஸ்தூலமாக எந்தப் பொம்மையையும் பரிசாக அளிக்கவில்லை. அவள் அளித்த பரிசு இந்த அட்டைப்படத்தில் அடங்கும் அளவு சிறிய பொருளும் அல்ல.

எனக்கு இன்னும் பொம்மைகளோடு இடைவெளி இல்லை. இணக்கமும் குறையவில்லை. பந்துகளைப் பார்க்கும்போதெல்லாம் விளையாட்டை அவை தேக்கிவைத்து அழைப்பதாகவே நான் உணர்கிறேன்.

அதனால் எனது உள்ளடக்கத்தோடு சம்பந்தப்பட்ட இந்த வஸ்துகளைச் சேர்த்து வைத்து அட்டைப்படம் செய்யலாம் என்று எனது நண்பரும் ஓவிய, புகைப்படக் கலைஞருமான நோயல் கார்க்கியை அணுகினேன். அவர் எனது சேகரங்களை வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்தார்.

நான் அந்தப் புகைப்படத்தையும் எனது மகள் வினு பவித்ரா விளையாடிய ஒரு நாய் பொம்மை புகைப்படத்தையும் மாமல்லபுரத்தில் நான் எடுத்த ஒரு இறந்த குட்டி மீனின் புகைப்படத்தையும் வடிவமைப்பாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணனிடம் அனுப்பினேன். ஒரு புகைப்படத்தை அட்டைப்படமாக்குவது தனது பாணியல்ல என்று முதலில் கூறினார்.


சந்தோஷ் நாராயணனிடம் இதையெல்லாம் பாருங்கள். உங்களுக்கு மனம் ஒப்பவில்லையெனில் நீங்கள் தனியாக ஒரு அட்டை செய்யுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் எனது பொம்மைகளை வைத்தே அவர் அபூர்வமான ஒரு அட்டைப்படத்தை உருவாக்கிவிட்டார். சந்தோஷ்க்கு எனது நன்றி.


96 கவிதைகள் அடங்கிய எனது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.

எல்லாருக்கும் சலாம்…எல்லாவற்றுக்கும் சலாம்...

இந்த 96 கவிதைகள் குறித்து…

எனது முதல் நல்ல கவிதையான ‘சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் நாங்கள்’ கவிதையை எழுதி 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன கவிதை என்ற வடிவத்தை அனிச்சையாக 19 வயதில் தேர்ந்து, இன்னும் அதன் வசீகரம், சுழிப்பு, உள்ளடக்க மாறுதல்கள், குண-மொழிப் பரிணாமத்தில் தீராமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது 50. இந்தப் பின்னணியில் எனக்கும், எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் தொடர்ந்து எனது கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கும் வாசகருக்கும், அந்தத் தருணத்தைத் தேக்கிவைப்பதற்கான முயற்சியே, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பு.

என்னை நானே ஊக்கப்படுத்தியபடி மேற்கொள்ளும் இந்த முயற்சியில் நண்பரும், கவிஞருமான வே.நி. சூர்யா இணைந்து இக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துத் தந்துள்ளார். ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ எனத் தலைப்பிட்டிருக்கிறேன். இந்தத் தலைப்பே என் கவிதைகளைப் பற்றிய, எனது உலகத்தைப் பற்றிய ஒரு பிரகடனம்தான். இந்தத் தொகுப்பிலுள்ள 96 கவிதைகளினூடாக, அவ்வப்போதைய என்னுடைய அல்லல்கள், அலைக்கழித்த கேள்விகள், தாக்கம் செலுத்திய இலக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள், மோஸ்தர்கள், அறைகள், வீடுகள், நிலக்காட்சிகள், அதன்மேல் படிந்திருந்த மூட்டங்கள் என அனைத்தையும் மறுபடி மறுபடி பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது. எவ்வளவு ஒளியை, எவ்வளவு இருட்டை இந்தக் கவிதைகள் கடந்திருக்கின்றன? பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கவிஞன், எழுதுபவன் எனும் அடையாளங்களைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களையும் பொருளற்றவையாகவும் மதிப்பற்றவையாகவும் கொண்டதற்குக் கிடைத்த வெகுமதி என்றே எனது இந்த இருப்பைக் கருதுகிறேன். இது திட்டமிட்டது அன்று; என் சாமர்த்தியமும் அன்று. சில பொம்மைகள் உடைபட்டன. சில பொம்மைகள் மிஞ்சியிருக்கின்றன. போர்ஹெஸ் சொன்னதுபோல அதுவே ஆழ்ந்த வெகுமதியாக உள்ளது.

நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்ளத் தகுதியும் திறனும் அற்ற பையனாக, சுந்தர ராமசாமியின் வீட்டுக்குள், ஒரு அடைக்கல இல்லத்துக்குள் நுழைவதைப் போல நண்பன் தளவாய் சுந்தரத்துடன் நுழைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர ராமசாமியின் மனைவி கமலா அம்மாவைப் போய்ப் பார்த்தபோது, அவர் நினைவுக்குள் அந்தப் பையனே அடையாளமாக இருப்பதாகச் சொன்னார்.

உடலையும் மனத்தையும் சுயத்தையும் அதிகம் அழித்துக்கொள்ளாமல் இந்த வயதுவரை நீடித்திருப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், என் ஆளுமையை மேம்படுத்திச் செம்மைப்படுத்தியவர்கள், இந்தத் தந்தைமாரும் ஆசிரியர்களுமே. என்னைக் கீறி அகழ்ந்து குணமூட்டிச் செப்பனிட்டவர்கள் அவர்கள்தான்.

லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், ஆனந்த் என மேலானதும் ஆத்மார்த்தமானதுமான உறவுகளை இங்கேதான் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறேன். 

கௌதம், பச்சோந்தி, வே.நி. சூர்யா என என் அன்றாடத்தின் பகுதியாகிப்போன இளம் தலைமுறை நண்பர்களின் இணக்கமும் அணுக்கமும் இந்த மொழியுடனான ஈடுபடுதல் தந்த பரிசுகளே. நேசம், காதல், மதிப்பு எனச் சிறந்தது எல்லாவற்றையும் எனக்கு மொழிதான் தந்துகொண்டிருக்கிறது.

‘தாவரங்களின் உரையாடல்’ சிறுகதை மூலமாக 1990-களின் பிற்பகுதியில் அறிமுகமாகி, எங்களது ஆரம்பகாலக் கவிதை, வாசக ஆளுமையில் தாக்கம் செலுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனுடனான உரையாடல்கள். எனது கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டுமென்று முதலில் தூண்டியவரும் அவர்தான். அவரது ‘அட்சரம்’ இதழில்தான் பத்துக்கும் மேல் கவிதைகளைச் சேர்த்து வெளியிட்டார். நேரடியான தொடர்பு, படிப்படியாக அருகிப்போன நிலையில், எனது கவிதைகளின் வளர்நிலைகளைப் பற்றி, அரிதாக அவருடன் உரையாடிய பொழுதுகள் என்னைச் சோர்விலிருந்து மீட்டிருக்கின்றன. எனது அண்மைய கவிதைத் தொகுப்புகளைச் சிரத்தையோடு வாசித்து, வாசகர்களுக்குக் கவனமும் படுத்தியவர் அவர். எனது குறுங்காவியமான ‘இகவடை பரவடை’ தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு அவரது அவதானங்களைப் பேசியது, என்னை ஒருகட்டத்தில் ஆழ்ந்த மூச்சுமுட்டலுக்குள் தள்ளியது. ‘இகவடை பரவடை’யை இழைஇழையாகப் பிரித்துப் பேசினார். என் தொடக்ககாலக் கவிதைகளில் தென்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், சிறுமிகள் அண்மையக் கவிதைகளில் தொலைந்துவிட்டார்கள் என்று எஸ். ராமகிருஷ்ணன் சொன்னார். ஆமாம், உண்மைதான். சோகமும் கசப்பும் மூடிவிட்ட அந்தக் கல்மிஷமில்லாத சிறுவனை நான் மீட்டெடுக்க வேண்டும். அதை ஞாபகப்படுத்திய எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

அனுபவத்தைச் சலித்துச் சலித்துப் பேசி அர்த்தத்தை விமர்சனத்தோடு நெருங்கும் கதைமொழியை அம்மா தனது அன்றாடத்திலே பராமரித்தவள். அவள்தான் எனது மொழிக்கு முந்தையவள். புத்தகங்களின் உலகத்துக்குள் எட்டு வயதிலேயே என்னைத் தள்ளிவிட்டவளும் அவளே. அவள் குறித்த எனது கவிதைகளில் சில இத்தொகுப்பிலும் உள்ளன. 

எவ்வளவோ முட்டாள்தனங்களோடு வஸ்துகளையும் உணர்வுகளையும் சேர்த்துக்கொண்டு நானும் என் கவிதைகளும் ஓடிவந்திருக்கிறோம். இந்தக் கணம்தான் இருப்பதிலேயே ஞானம் கொண்டதாகத் தோன்றுகிறது. இன்னும் புதுப்புது முட்டாள்தனங்களோடும் கவிதைகளோடும் நான் ஓட வேண்டும்; புதிய பாதைகளை, புதிய ஞானங்களைக் கண்டு கடக்க வேண்டும்.

தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படியெடுத்து மெய்ப்புப் பார்த்த நண்பர் வேதநாயக்குக்கு எனது நன்றி. ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ தொகுப்புக்குப் பின்னுரையாக கட்டுரை எழுதிய மதிப்புக்குரிய கவி ஸ்ரீநேசன் இத்தொகுப்பின் முகப்பிலும் இருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. சிரத்தையோடு ஒட்டுமொத்த நூலையும் படித்து எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்த நண்பர் செல்லப்பாவுக்கு நன்றி. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியை வெளியிடும் எதிர் வெளியீடு நண்பர்களுக்கும் என்னைப் பதிப்பகத்தாரிடம் ஆற்றுப்படுத்திய த. ராஜனுக்கும் எனது நன்றி.

காலம் கேட்ட கதைகள்

 

காலம் கேட்ட கதைகள்

உதயசங்கர்

( காலம் சென்ற எழுத்தாளர்.ஜமிலுதீனின் புதுச்சட்டை சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை )




வாழ்க்கையின் எந்தப்பருவத்தில் எப்படிப்பட்ட உறவுகள் வந்து சேரும் என்று யாருக்கு தெரியும்? சுழன்று விரியும் புதிர்ப்பாதையில் எப்போதும் புதிதாக சிலர் இணந்து கொள்வதும், சிலர் பிரிந்து செல்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. பல சூழ்நிலைக்காரணங்களால் என்னால் உறவுகளை சரிவரப் பராமரிக்க முடிந்ததேயில்லை. கையாலாகாத நிலையில் மிகுந்த கவலைப்படுவேன். அதற்கான முழுப்பொறுப்பும் என்னை மட்டுமே சாரும். அப்படி உறவுகளைத் தொடர முடியாத என்னுடனும் சில நண்பர்கள் தொடர்ந்து நட்பைப் பேணி வருகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பொறுமைசாலிகளாவும், பெருந்தன்மை மிக்கவர்களாகவும், பேரன்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நண்பர்களில் முக்கியமானவர் எழுபத்தியைந்து வருட இளைஞர் திரு..ஜமீலுதீன்.

 எப்பொதாவது சில புதிய நண்பர்கள் தாங்கள் எழுதிய கதைகளைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுப்பார்கள். நானும் வாசித்து விட்டு என்னுடைய பாராட்டுகளையும், அபிப்பிராயங்களையும் சில விமரிசனங்களையும் சொல்லுவேன். புதிய எழுத்தாளர்களைப் பார்த்தால் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும். அவர்களுடைய கதைகளை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி புதிது புதிதாக கதைக்களனில் எழுதுகிறார்கள்? அப்படி ஒரு நாள் மதுரையிலிருந்து அலைபேசியில் திரு..ஜமிலுதீன் பேசினார். செம்மலரில் வெளிவந்துள்ள அவருடைய கதையை வாசித்து விட்டு அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தியதிலிருந்து அவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்துவதில் நிபுணர் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டேன். கோவில்பட்டி எழுத்தாளர் பூமணி பணி செய்து ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதையும் பேச்சுக்கிடையில் அவர் சொன்னார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆச்சரியம் அவர் இதுவரை சிறுகதை எதுவும் எழுதியதில்லை. இப்போது சமீபகாலமாகத்தான் எழுதத் தொடங்கியிருப்பதாகவும் சொன்னது தான். முதலில் சற்று அசட்டையாகத்தான் அவருடைய கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க அவருடைய ஆளுமை எனக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.

பல கதைகளை எழுத்துப்பிரதியாகவே எனக்கு அனுப்பி வைத்து எனது கருத்துக்களையும், இந்தக் கதையை எந்தப்பத்திரிகைக்கு அனுப்பலாம் என்ற விவரங்களையும் கேட்பார். என்னுடைய ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தவும் செய்வார். அதில் புதுச்சட்டை என்ற கதை உயிரெழுத்து பத்திரிகையில் பிரசுரமானது மிக முக்கியமான நிகழ்வு. அதோடு அந்தக்கதை அந்த மாதம் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாகவும் விருட்சம் பத்திரிகையாசிரியர் அழகியசிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக்கதை மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளெழுத்து என்ற பத்திரிகையில் பிரசுரமானது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திரு..ஜமீலுதீன் அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சாணை பிடிப்பவர், மெக்கானிக், பேப்பர் போடுகிற பையன், பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்கள் ஒரே ஒரு உடையுடன் இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், என்று சாமானிய மக்களை கதைகளில் சித்திரிக்கிறார். அத்தனை கதைகளிலும் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் கடுமையான உழைப்பாளிகளாக, முயற்சியுடையவர்களாக, பிறருக்கு உதவி செய்பவர்களாக, இரக்கமுடையவர்களாக, மார்க்கவழி பிறழாதவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இஸ்லாமிய இந்து மக்களின் உணர்வுகளின் ஊடாடல் நிகழ்கிறது. இன்றைய காலகட்டத்தின் அவசியமான மதநல்லிணக்கத்தினைச் சித்தரிக்கிற கதைகளும் இருக்கின்றன. அதிகாரவர்க்கத்தினை விமரிசிக்கிற கதைகளும், அரசியல்வாதிகளின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கதைகளும் இருக்கின்றன. சாதிவெறியர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிற கதைகளும் இருக்கின்றன. 

திரு..ஜமீலுதீனோடு நடத்திய பல உரையாடல்களின் வழியாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் திரு..ஜமீலுதீன் தான் எழுதுவது என்னவென்று தெரிந்து, திட்டமிட்டு எழுதுபவர். தான் எழுதிய அத்தனை கதைகளுக்கும் உரிய நியாயத்தை அவர் வைத்திருக்கிறார். இது மிகவும் அபூர்வம். எனவே சிறுகதை இலக்கணம் சற்றும் பிசகாத கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இன்னுமொரு முக்கியமான பண்பாக திரு..ஜமீலுதீனுடைய கதையில் வருகிறசிறுவர் சிறுமிகள், அவர்களுடைய மனநிலை, உளவியல், ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. சமீபகாலத்தில் சிறுவர்களை இத்தனை கதைகளில் சித்தரித்த எழுத்தாளர் இவர் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.

 எழுத்தின் மீதான தீராத பற்றின் காரணமாக இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முக்கியமான சிறுகதைத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார் திரு..ஜமீலுதீன். அவர் ஒரு அநுபவச்சுரங்கம். அந்தச் சுரங்கத்தின் ஒரு துளியே இந்தச் சிறுகதைத்தொகுப்பு. இன்னும் இருக்கிறது கடலளவு. இன்னும் எழுதுவார்.. எழுதிக்கொண்டேயிருப்பார்….

காலம் தனக்கான படைப்பாளிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. காலம் தனக்கான குரலை தானே உரத்துப்பேசுகிறது. காலம் தனக்கான பாடலைத் தானே பாடிக்கொள்கிறது. மதவெறி தூண்டிவிட்ப்பட்டு அதில் சாமனியர்களைப் பலியிட்டு குளிர்காயந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உலவுகிற நடுநிசி நேரத்தில் மதநல்லிணக்கத்தை உரக்கப்பேசிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் திரு..ஜமீலுதீன்! அவருடைய இந்தக்கதைகள் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


 

தமிழில் எஸ்.எம். ஷாகீர்

அறிவியக்கத்தின் ஆணிவேராக இருப்பது மொழிபெயர்ப்பு. அறிவும் கலையும் இலக்கியமும் உலகம் முழுக்க சென்று சேர மொழிபெயர்ப்புகள் துணைபுரிகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு பெரியது. ரஷ்ய இலக்கியம், வங்க இலக்கியம், தென் அமெரிக்க இலக்கியம்,  ஐரோப்பிய இலக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தைச் செறிவாக்கியுள்ளன. மலேசியாவின் தேசிய மொழி…

Read more →

மலாய் மொழியில் தமிழின் பத்து சிறுகதைகள்

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை 1930 முதல் 1978 வரை ந. பாலபாஸ்கரன் ஆறு காலக்கட்டமாகப் பிரித்திருந்துள்ளார். மலேசிய சிங்கப்பூர் ஆய்வுலகின் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படும் அவரது வரையறையே இன்றும் இலக்கிய ஆய்வுகளில் பிரதானமானது. ந. பாலபாஸ்கரன் கருத்துப்படி 1930களில் மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு தொடங்குகிறது. 1941 வரை மலேசியாவில் வெளிவந்த பல தமிழ்…

Read more →

மாஹுவா இலக்கியம்

மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர்.  சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில்…

Read more →

அனோஜனின் ‘தீக்குடுக்கை’


ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது.

000

அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலும் வெளிப்படையான போர் என்றால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெறுப்பும் சமூகப் பிளவும் அதிகரிக்கும் அகப்போர்கள். இந்த யுத்தங்களின் பின்னணியில் குழந்தைகள் பெரியவர்களாகும் காதைதான் ‘தீக்குடுக்கை’. 

யுத்தம், வறுமை, மேலதிகத் தரத்திலான வாழ்க்கைக்காக சொந்த ஊர், சொந்த மொழி, பந்தங்களைத் துறந்து மனிதர்கள் பாரிய அளவில் குறுக்கும்நெடுக்குமாகப் புலம்பெயரும் நூற்றாண்டு இது.

அனோஜனின் நாவலில், பெற்றோரின் காலத்திலேயே அடையாளத்தை இழந்து லண்டனில் வளர்ந்த ஆதன், வாலிபப் பருவத்தில் தன் அடையாளம், தன் வரலாறு குறித்த உணர்ச்சியால் தீண்டப்பட்டு, தன் இனமே ஒட்டுமொத்தமாக அடையாளத்தை இழக்கப்போகும் யுத்தகளத்துக்கு வந்து ஒப்புக்கொடுக்கிறான். 

லௌகீகமாக எல்லாப் பாதுகாப்புகளும் இருக்கும் ஒருவன் அடையாளத்துக்காக ஏன் அந்த சாகசத்தைச் செய்யத் துணிகிறான்? புயலில் ஒரு தோணி நாயகன் பாண்டியன் எடுக்கும் சாகசத் தேர்வை ஞாபகப்படுத்தும் அம்சம். இது நாவலில் நிகழும் அசாதாரணம் என்றால், யுத்தம், இன அழிப்பு காரணமாக லண்டனுக்கு வரும் காந்தனோ, ஈழக்கதைக் களத்திலும் எதார்த்தத்திலும் நாம் பரவலாகக் காணும் சாதாரணம். 

வரலாற்றின் அரதப்பழசான காதல் என்ற பழுதுபட்ட கட்டுமரத்தில் கருணைக் கொடியை ஏற்றி யுத்தமுனைக்கு ஆதனைத் தேடிவரும் எரிகா. உக்கிரமான போரையும் அடையாளம் இழப்பையும் வரலாறு நமது குழந்தைகள் மீது போடும் ஆறாத கீறல்களையும் அலைக்கழிப்புகளையும் நாவல் தயக்கமின்றி குட்டிக் குட்டிக் கதைகளாகத் தொட்டுச் செல்கிறது. இத்தனை மூச்சுமுட்டலுக்கு நடுவிலும் இருள்வெளியில் மினுங்கும் ஊசிமுனை போன்ற சிறிய நட்சத்திரங்களைப் பார்ப்பது போன்ற நம்பிக்கை உணர்வை இந்தப் படைப்பு அளிக்கிறது. 

அனோஜனின் மொழி அளிக்கும் மனப்பதிவை, அனுபவத்தை மிருது என்று நான் மொழிபெயர்க்கிறேன். காத்திரமான சிறுகதை ஆசிரியராக தன் அடையாளத்தை நிறுவியிருக்கும் அனோஜனின் முதல் நாவல் என்ற வகையில் குறிப்பிடத்தகுந்த அழகிய சிறு படைப்பு இது. Coming of age நாவல்கள் தமிழில் அதிகம். 18-வது அட்சக்கோடு, என் பெயர் ராமசேஷன் போன்ற நாவல்களின் வரிசையில் ‘தீக்குடுக்கை’ நாவலை ஈழப்பின்னணியில் நான் வைத்துப் பார்க்கிறேன். இன்று, ஒண்ட ஒரு வதிவிடம் இல்லாமல் காயங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் தீக்குடுக்கைகள்தானே.

சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே – என் புத்தக அட்டையின் கதை


‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை, எனது தனித்தொகுதியான ‘ஞாபக சீதா’வில் இடம்பெற்றது. 

மிக குறுகிய காலமே என்னை ஆட்கொண்டு, அந்த நாட்களை பொன்னில் சுடரேற்றி, சீக்கிரமே பிரிந்து சென்ற ஒருத்திக்கு, பிரிந்ததின் நினைவுப் பரிசாக, அதற்கு முன்னர் சில ஆண்டுகள் நான் சேகரித்திருந்த பொருட்களை, ஒரு கண்ணாடிக் குடுவையில் இட்டு அளித்தேன்.

நான் சேகரித்த கடல் சிப்பிகள், துங்கபத்ராவிலிருந்து கொண்டுவந்த கூழாங்கற்கள், திருநெல்வேலி கோயில் வாசலில் வாங்கிய சோளிகள், குட்டி பொம்மைகள் என அந்தக் குடுவையில் போட்டு அவளது பிறந்த தினம் தொடங்கும் நள்ளிரவில் பரிசளித்தேன்.

இதை ஒரு கவிதையாக எழுதுங்கள் என்று எனக்கு அக்காலத்தில் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் யோசனை கூறினார்.

அதன் விளைவே 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே' கவிதை. அவள் என்னிடமிருந்து தொலைந்து போய் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுதிக்கு ஒரு தலைப்பை வைப்பதற்கு ஆலோசித்தபோது, ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ தலைப்பு பொருத்தமாகப் பட்டது.

இந்த தலைப்புக்காக அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு யோசித்தபோது, அவள் என்னை விட்டு நீங்கியபிறகு நான் சேர்த்த பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி புகைப்படமாக எடுக்கலாம் என்று தோன்றியது தற்செயல்தான்.

அந்தமானுக்கு நண்பர் சுப்ரமணியனின் அழைப்பின் பேரில் சென்றபோது சேர்த்த பவளப்பாறைகள்,கிளிஞ்சல்கள், காலை நடையில் சேகரித்த கிரிக்கெட் பந்துகள், சிங்கப்பூர் நண்பர்களான இன்பாவும் சுஜாவும் அளித்த பொம்மைகள், கவிஞர் இசை எனக்கு நினைவுப் பரிசாகத் தந்த மான் சிலை, எனது மகள் வினு பவித்ரா பள்ளிப்படிப்பில் பயன்படுத்திய வஸ்துகள் எல்லாமும் எனது சேகரத்தில் இருந்தன.

என் அப்பா கடந்த மே மாதம் 26ஆம் தேதி இறந்தபின்னர், திருநெல்வேலி வீட்டை காலிசெய்தபோது அவரது அப்பாவும் எனது தாத்தாவுமான சங்கரன் பிள்ளை எனது 13 வயதில் பரிசாக அளித்த 2 கொலு பொம்மைகள், ஒரு அட்டைப்பெட்டியில் கிடைத்ததை ஒரு ஆசிர்வாதமாகவே கருதி சென்னைக்கு எடுத்து வந்தேன். சரஸ்வதி, பால பருவத்திலிருக்கும் கிருஷ்ணன் பொம்மை அவை.

என்னைப் பிரிந்து போனவள் எனக்கு ஸ்தூலமாக எந்தப் பொம்மையையும் பரிசாக அளிக்கவில்லை. அவள் அளித்த பரிசு இந்த அட்டைப்படத்தில் அடங்கும் அளவு சிறிய பொருளும் அல்ல.

எனக்கு இன்னும் பொம்மைகளோடு இடைவெளி இல்லை. இணக்கமும் குறையவில்லை. பந்துகளைப் பார்க்கும்போதெல்லாம் விளையாட்டை அவை தேக்கிவைத்து அழைப்பதாகவே நான் உணர்கிறேன்.

அதனால் எனது உள்ளடக்கத்தோடு சம்பந்தப்பட்ட இந்த வஸ்துகளைச் சேர்த்து வைத்து அட்டைப்படம் செய்யலாம் என்று எனது நண்பரும் ஓவிய, புகைப்படக் கலைஞருமான நோயல் கார்க்கியை அணுகினேன். அவர் எனது சேகரங்களை வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்தார்.

நான் அந்தப் புகைப்படத்தையும் எனது மகள் வினு பவித்ரா விளையாடிய ஒரு நாய் பொம்மை புகைப்படத்தையும் மாமல்லபுரத்தில் நான் எடுத்த ஒரு இறந்த குட்டி மீனின் புகைப்படத்தையும் வடிவமைப்பாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணனிடம் அனுப்பினேன். ஒரு புகைப்படத்தை அட்டைப்படமாக்குவது தனது பாணியல்ல என்று முதலில் கூறினார்.


சந்தோஷ் நாராயணனிடம் இதையெல்லாம் பாருங்கள். உங்களுக்கு மனம் ஒப்பவில்லையெனில் நீங்கள் தனியாக ஒரு அட்டை செய்யுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் எனது பொம்மைகளை வைத்தே அவர் அபூர்வமான ஒரு அட்டைப்படத்தை உருவாக்கிவிட்டார். சந்தோஷ்க்கு எனது நன்றி.


96 கவிதைகள் அடங்கிய எனது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.

எல்லாருக்கும் சலாம்…எல்லாவற்றுக்கும் சலாம்...

இந்த 96 கவிதைகள் குறித்து…

எனது முதல் நல்ல கவிதையான ‘சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் நாங்கள்’ கவிதையை எழுதி 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன கவிதை என்ற வடிவத்தை அனிச்சையாக 19 வயதில் தேர்ந்து, இன்னும் அதன் வசீகரம், சுழிப்பு, உள்ளடக்க மாறுதல்கள், குண-மொழிப் பரிணாமத்தில் தீராமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது 50. இந்தப் பின்னணியில் எனக்கும், எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் தொடர்ந்து எனது கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கும் வாசகருக்கும், அந்தத் தருணத்தைத் தேக்கிவைப்பதற்கான முயற்சியே, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பு.

என்னை நானே ஊக்கப்படுத்தியபடி மேற்கொள்ளும் இந்த முயற்சியில் நண்பரும், கவிஞருமான வே.நி. சூர்யா இணைந்து இக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துத் தந்துள்ளார். ‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ எனத் தலைப்பிட்டிருக்கிறேன். இந்தத் தலைப்பே என் கவிதைகளைப் பற்றிய, எனது உலகத்தைப் பற்றிய ஒரு பிரகடனம்தான். இந்தத் தொகுப்பிலுள்ள 96 கவிதைகளினூடாக, அவ்வப்போதைய என்னுடைய அல்லல்கள், அலைக்கழித்த கேள்விகள், தாக்கம் செலுத்திய இலக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள், மோஸ்தர்கள், அறைகள், வீடுகள், நிலக்காட்சிகள், அதன்மேல் படிந்திருந்த மூட்டங்கள் என அனைத்தையும் மறுபடி மறுபடி பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது. எவ்வளவு ஒளியை, எவ்வளவு இருட்டை இந்தக் கவிதைகள் கடந்திருக்கின்றன? பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கவிஞன், எழுதுபவன் எனும் அடையாளங்களைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களையும் பொருளற்றவையாகவும் மதிப்பற்றவையாகவும் கொண்டதற்குக் கிடைத்த வெகுமதி என்றே எனது இந்த இருப்பைக் கருதுகிறேன். இது திட்டமிட்டது அன்று; என் சாமர்த்தியமும் அன்று. சில பொம்மைகள் உடைபட்டன. சில பொம்மைகள் மிஞ்சியிருக்கின்றன. போர்ஹெஸ் சொன்னதுபோல அதுவே ஆழ்ந்த வெகுமதியாக உள்ளது.

நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்ளத் தகுதியும் திறனும் அற்ற பையனாக, சுந்தர ராமசாமியின் வீட்டுக்குள், ஒரு அடைக்கல இல்லத்துக்குள் நுழைவதைப் போல நண்பன் தளவாய் சுந்தரத்துடன் நுழைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர ராமசாமியின் மனைவி கமலா அம்மாவைப் போய்ப் பார்த்தபோது, அவர் நினைவுக்குள் அந்தப் பையனே அடையாளமாக இருப்பதாகச் சொன்னார்.

உடலையும் மனத்தையும் சுயத்தையும் அதிகம் அழித்துக்கொள்ளாமல் இந்த வயதுவரை நீடித்திருப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், என் ஆளுமையை மேம்படுத்திச் செம்மைப்படுத்தியவர்கள், இந்தத் தந்தைமாரும் ஆசிரியர்களுமே. என்னைக் கீறி அகழ்ந்து குணமூட்டிச் செப்பனிட்டவர்கள் அவர்கள்தான்.

லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், ஆனந்த் என மேலானதும் ஆத்மார்த்தமானதுமான உறவுகளை இங்கேதான் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறேன். 

கௌதம், பச்சோந்தி, வே.நி. சூர்யா என என் அன்றாடத்தின் பகுதியாகிப்போன இளம் தலைமுறை நண்பர்களின் இணக்கமும் அணுக்கமும் இந்த மொழியுடனான ஈடுபடுதல் தந்த பரிசுகளே. நேசம், காதல், மதிப்பு எனச் சிறந்தது எல்லாவற்றையும் எனக்கு மொழிதான் தந்துகொண்டிருக்கிறது.

‘தாவரங்களின் உரையாடல்’ சிறுகதை மூலமாக 1990-களின் பிற்பகுதியில் அறிமுகமாகி, எங்களது ஆரம்பகாலக் கவிதை, வாசக ஆளுமையில் தாக்கம் செலுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனுடனான உரையாடல்கள். எனது கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டுமென்று முதலில் தூண்டியவரும் அவர்தான். அவரது ‘அட்சரம்’ இதழில்தான் பத்துக்கும் மேல் கவிதைகளைச் சேர்த்து வெளியிட்டார். நேரடியான தொடர்பு, படிப்படியாக அருகிப்போன நிலையில், எனது கவிதைகளின் வளர்நிலைகளைப் பற்றி, அரிதாக அவருடன் உரையாடிய பொழுதுகள் என்னைச் சோர்விலிருந்து மீட்டிருக்கின்றன. எனது அண்மைய கவிதைத் தொகுப்புகளைச் சிரத்தையோடு வாசித்து, வாசகர்களுக்குக் கவனமும் படுத்தியவர் அவர். எனது குறுங்காவியமான ‘இகவடை பரவடை’ தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு அவரது அவதானங்களைப் பேசியது, என்னை ஒருகட்டத்தில் ஆழ்ந்த மூச்சுமுட்டலுக்குள் தள்ளியது. ‘இகவடை பரவடை’யை இழைஇழையாகப் பிரித்துப் பேசினார். என் தொடக்ககாலக் கவிதைகளில் தென்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், சிறுமிகள் அண்மையக் கவிதைகளில் தொலைந்துவிட்டார்கள் என்று எஸ். ராமகிருஷ்ணன் சொன்னார். ஆமாம், உண்மைதான். சோகமும் கசப்பும் மூடிவிட்ட அந்தக் கல்மிஷமில்லாத சிறுவனை நான் மீட்டெடுக்க வேண்டும். அதை ஞாபகப்படுத்திய எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

அனுபவத்தைச் சலித்துச் சலித்துப் பேசி அர்த்தத்தை விமர்சனத்தோடு நெருங்கும் கதைமொழியை அம்மா தனது அன்றாடத்திலே பராமரித்தவள். அவள்தான் எனது மொழிக்கு முந்தையவள். புத்தகங்களின் உலகத்துக்குள் எட்டு வயதிலேயே என்னைத் தள்ளிவிட்டவளும் அவளே. அவள் குறித்த எனது கவிதைகளில் சில இத்தொகுப்பிலும் உள்ளன. 

எவ்வளவோ முட்டாள்தனங்களோடு வஸ்துகளையும் உணர்வுகளையும் சேர்த்துக்கொண்டு நானும் என் கவிதைகளும் ஓடிவந்திருக்கிறோம். இந்தக் கணம்தான் இருப்பதிலேயே ஞானம் கொண்டதாகத் தோன்றுகிறது. இன்னும் புதுப்புது முட்டாள்தனங்களோடும் கவிதைகளோடும் நான் ஓட வேண்டும்; புதிய பாதைகளை, புதிய ஞானங்களைக் கண்டு கடக்க வேண்டும்.

தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படியெடுத்து மெய்ப்புப் பார்த்த நண்பர் வேதநாயக்குக்கு எனது நன்றி. ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ தொகுப்புக்குப் பின்னுரையாக கட்டுரை எழுதிய மதிப்புக்குரிய கவி ஸ்ரீநேசன் இத்தொகுப்பின் முகப்பிலும் இருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. சிரத்தையோடு ஒட்டுமொத்த நூலையும் படித்து எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்த நண்பர் செல்லப்பாவுக்கு நன்றி. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியை வெளியிடும் எதிர் வெளியீடு நண்பர்களுக்கும் என்னைப் பதிப்பகத்தாரிடம் ஆற்றுப்படுத்திய த. ராஜனுக்கும் எனது நன்றி.

சர்ப்பங்கள், வேதாளங்கள், டைனோசர்கள்- வேணு தயாநிதி கவிதை தொகுப்புக்கான முன்னுரை

 


(வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.) 

புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான்.  அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு  முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது.  இப்படி  எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும். 


வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.  


 வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை” 

என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/

பொருளின்மையில்,/ எப்படியாவது/

ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/

முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார். 


 பிரபஞ்ச விளையாட்டு


கரைந்து குழைந்து

காற்றைக் குடிக்கும் 

சோப்புக்குமிழி

வீங்கிப்பெருத்து 

மிதந்தலையும்.


மூப்படைந்து 

துளைகள் தோன்ற 

வெடித்துச் சிதறும்.


உடையாத குமிழியொன்று

உயர்ந்தெழுந்து 

நிறமடர்ந்து

வானவில்லாய் 

விரிவடையும்.


மதிய வெய்யில்

மரத்தடியில் அம்முக்குட்டி

ஊதுகிறாள் 

விளையாட்டாய்.

 

அவள் குழல் முன்

தோன்றி வளர்ந்து 

விரிந்து மறையும்


எண்ணற்ற 

பிரபஞ்சம்.


வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது. 

“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்

உதிப்பதற்கென்று 

தயாராகி விட்டது சூரியன்

எழுந்துவிடு 

சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது. 

“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/

நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள்  நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள்  தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக  அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”


இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.  

“இரவி அணைந்து 

இரவு வரக்கண்டு

விடாய் கொண்டு 

விழி அயர்ந்து


கடாவு எழ

அனுட்டானம் எனப் 

பிரக்ஞை கொண்டு

கண் மலர எழுந்தனன் 

யானே இன்று.


எழாவிடின்

உறட்டை சவம்


நிவகம்

எவர்க்கும்

சூதகம்.”

(நிகழ்தகவின் மானுடத்துவம்).



இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம்,  புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம். 


நந்தி 


ஆலகால விடம் அருந்தி

அம்மை மடியில் 

மயங்கிக் கிடக்கையில் 

காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப

எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்

பிரகதீஸ்வரர் முன் 

வீற்றிருக்கும் நந்தி.


கயிலாயத்துள் நுழையும்

பக்தகோடிக்கு ஜருகண்டி.

அத்துமீறினால் 

விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.

வெறும் மூச்சுக்காற்று போதும்

கருட பகவானை 

தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு 

அந்த சிவபெருமானே வந்து

சொன்னால்தான் ஆச்சு.


அவதார அதிகார கைலாச

சிறிய பெரிய, மற்றும்

சாதாரண நந்திகள் மத்தியில்

ஓரமாய் எங்கோ உடனுறைகிறார் 

சிவபெருமான்.


காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்

விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய 

முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து 

வாலைச்சுழற்றி


கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க

எழுந்துவிடக்கூடும், எந்நேரமும். 

என்றாலும், 

நந்திகள் ஏன் எப்போதும்

அமைதியாக 

அமர்ந்திருக்கின்றன?


பிரதோஷ நேரங்களில்

எண்ணற்ற நந்திகளுள்

ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து

அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் 

ஏதாவது ஒன்றை

இடக்கால் வீசி 

ஆவேசமாய் நடனமிடுகிறார்

சிவபெருமான்.


நடனம் முடியும்வரை 

ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்

மூச்சைப்பிடித்தபடி

விழிபிதுங்க 

அசையாமல்

அமர்ந்திருப்பதைத் தவிர

வேறு வழியில்லை.


நந்தி 

இம்மி அசைந்தாலும் 

போதும்.


அவரின் 

அடவு 

தப்பிவிடும்.



வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/

தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது

கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த  சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை. 




வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/ 

வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய

முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./

ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /

கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.


வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது.  “என் இருப்பிலிருந்து/

பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/ 

எனக்குள் குடியேறிவிட்ட/  நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன.  “இப்போதுங்கூட ஒன்று/ 

இந்த அறையில் தான்/ 

எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/

அவைகளும்/  உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம். 


“இமைகளுக்குள் 

கருவிழிகள் 

உருளும் ஆழ்துயிலில் 

தேவதைகள் 


தோன்றும் 

கனவில்.


தேவதையின் முகம் கண்டு

குழந்தையைப்போல 

முறுவல் பூக்கும் 

பூத முகம்.


இறுக்கம் அவிழ்ந்து 

புன்னகை இடம் மாறி 

குடிகொள்கையில்


பூதமும் 

தேவதையும் 

ஒன்று.”


தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 


சுனில் கிருஷ்ணன்

22.12.2023










 






 




 









இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு

23 February 2025 at 11:01
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம் ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள்.  என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள். மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்). தினம் […]
❌