Normal view

Received before yesterday

‘இசைவியல்’ ஒரு யோக சாதகனுக்கு - நித்ய சைதன்ய யதி

27 May 2025 at 09:33

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: குரு நித்ய சைதன்ய யதி 'Letters to an Aspiring Yogi' என 15 கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் இரண்டு கடிதங்களின் மொழிபெயர்ப்பு இது. "யோகம்" என்பதை Science of Harmonious Union என்பார் நித்யா. அதையொட்டி, தமிழில் யோகம் என்பதை இசைவியல் என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.

************************

கடிதம் 1

இப் பிரபஞ்சத்தில் மறைமுகமான நன்மை ஒன்றுள்ளது. அது ஒவ்வொரு உயிரையும் பல்லாயிரம் வடிவிலான அருளாக வந்தடைகிறது. அத்தகையதொரு அருளுணர்வை உங்களுள் வளர்த்துக்கொள்வதன் வழியாக, கணம் கணமென அறியப்படுவனவற்றை இங்கு நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறியப்படாத ஒன்றுடன் ஒரு உரையாடலை துவக்க முடியும். இந்த உரையாடல் வளர்ச்சிக்கான, புரிதலுக்கான, உங்கள் நிறைவுணர்வின் பொருளுக்கான பாதை.

எங்கும் திகழும் அந்த மறைமுக நன்மையைப் போலவே, நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவாலான, தடைகளை ஏற்படுத்தும் எதிராற்றல் ஒன்றும் உள்ளது. குழப்பம், ஐயம், சோம்பல், அகக்குலைவு, ஏமாற்றப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உணர்வு, தடைகள், தன்னிரக்கம், பொறுமையின்மை என பல வடிவங்கள் கொள்வது அது. அருளுடன் கொள்ளும் மென்மையான, இடையறாத, நேர்மையான ஒரு உரையாடல் தீமையின் இருளைப் போக்கும் அற்புத ஆற்றல் கொண்டது.

மகிழ்வுடன் இருத்தல் என்பது அனைத்து உயிர்களுக்குமான பிறப்புரிமை. உங்களது அகமெனும் கருவிலிருந்து தோன்றும் மகிழ்ச்சியை நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில்தான் இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மலர்களும், பறவைகளும், வளர்ப்பு மிருகங்களும், குழந்தைகளும் இந்தப் பெருமகிழ்வை யாரும் கேட்காமலேயே பகிர்ந்துகொள்கின்றன. மானுட இயல்பை - நம்முடையதும் பிறருடையதுமான இயல்பை - சிறிது உற்று கவனித்தாலே உங்கள் உலகை விரித்துக்கொள்ளவும், உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பலருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். ஆனால், தன்னொளிர்வு இல்லாத அன்பும், புரிதலற்ற மகிழ்ச்சியும் நம்மை ஏமாற்றும் பொறிகளாக மாறிவிடக் கூடும். அறிதல் மிக அவசியமான ஒன்று.

நீங்கள் விரும்புவது எதனை என்றும் யாரை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். யாரோ ஒருவரை உங்கள்பால் ஈர்க்கும் உங்களின் அருமை என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் காதலிப்பவரிடமும் காதலிக்கப்படுபவரிடமுள்ளது, அகமெனும் ஒற்றை மெய்மையின் ஒன்றையொன்று நிரப்பும் பாதிகளே. உங்கள் நன்மைக்காகவும் பிறர் நன்மைக்காகவும் அதை முழுமையாக அறிய விரும்புங்கள்.

மனதின் பகுத்தறியும்-மதிப்பிடும் புலமும், பருவுலகையும் நனவெனும் களத்தையும் ஆளும் பிரபஞ்ச விதியும் ஒன்றாக இணைவதே யோகம். அத்தகை இசைவு, தெளிந்த பார்வையை அளிக்கிறது. பொருளின் உறுதிப்பாட்டை, செயலின் உறுதியை நிறுவுகிறது. உணர்வுகளை நிலைப்படுத்துகிறது. படிப்படியாக இதை எய்துகையில் பெரும் அக அமைதியை நீங்கள் உணர்கிறீர்கள். எப்போதும் உங்கள் மனதில் வாழ்வின் இயல்பான இனிமை ஒளிர்கிறது. கருணை உணர்வு உங்களைச் சூழ்ந்துள்ள அனைத்திற்கும் பரவுகிறது. 

முதலில் உங்கள் மனம் நோக்கி கவனத்தை குவியுங்கள். அதை கவனியுங்கள். உங்கள் மனம் அலைபாய்கிறது. அனைவருக்கும் நிகழ்வது அதுவே. மனதின் ஒழுக்கும் காலத்தின் ஒழுக்கும் வேறுவேறல்ல. உங்கள் பிறப்பிலிருந்தே தொடங்கிய ஒழுக்கு இது. உங்கள் உடலில் உள்ள உயிர் பிரியும்போது அது நிற்கும். நேரத்திற்கும் மரணத்திற்கும் ‘காலம்’ என்ற பெயரையே பயன்படுத்துகிறோம். நேரம் என்பது இயக்கம் எனும் புலன். உங்களது மன இயக்கத்தை நீங்கள் எப்போதும் உணர்வதில்லை. தூங்கும்போதும், கவனமில்லாமல் இருக்கும்போதும் அது புலப்படாமல் இருக்கிறது. ஒளி பாய்வதை நீங்கள் காண்பதில்லை; ஒரு பொருளை ஒளிரச் செய்கையில்தான் அது தெளிவாகிறது. அதேபோல்தான் மனமும். புறவயமான ஒன்றோ அல்லது அகவயமான ஒன்றோதான் மனதை தன்னைப்பற்றி உணரச் செய்கிறது. பொருட்களும், மனிதரும், அவற்றின்- அவர்களின் இடையேயான செயல்பாடும் உறவும் புறவயமானவை. ‘நான்’ எனும் நனவு, நேரம் பற்றிய உணர்வு, மதிப்பீடு, விருப்பம், உணர்ச்சிகள் என்பவையெல்லாம் அகவயமானவை.

ஒரு குறிப்பிட்ட வெளி அல்லது கருத்தின் மீது நீண்ட நேரம் இடையறாது மையம் கொள்கையில், உணர்வு தீவிரமடைகிறது, தெளிவடைகிறது. உங்கள் மனம் மேலாண்மை செய்யும் ஆற்றல் கொண்டது. உணர்வின் ஒழுக்கை உங்களால் வழிநடத்த முடியும், ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவச்செய்ய முடியும். 

உங்கள் மனம்

  • இயங்கிக்கொண்டே இருக்கிறது
  • அவ்வப்போது தெளிவிழக்கிறது
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுகிறது
  • அதை கட்டுப்படுத்தமுடியும்
  • அது மையம் கொள்கிறது

மனதின் இந்த இயல்புகளை எல்லாம் பொறுமையுடன் கவனியுங்கள். அதனுடன் தோழமை கொள்ள இதுவே சிறந்த வழி.

பயிற்சி

  1. நேரம் கடந்துசெல்வதை, அதைப்போலவே உங்கள் மனமும் ஒழுகிச் செல்வதை கவனியுங்கள். காலத்தின் ஒழுக்கையோ, மனதின் ஒழுக்கையோ திருப்பிச் செலுத்த இயலாது.
  2. தடையின்றி ‘ஓம்’ ‘ஓம்’ என்று சொல்லுங்கள். இடையில் பிற எண்ணங்கள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு எண்ணம் உள் நுழைய முயலும். உங்கள் விழிப்புணர்வு இருளும் ஒரு கணம் வழியாக வருவது அது.
  3. ஒரு பொருள் பற்றி எண்ணுங்கள்; அதைத் தொடர்ந்து தொடர்பற்ற வேறொரு பொருள் பற்றி நினையுங்கள்
  4. உங்களுக்கு மிக அணுக்கமானவரைப் பற்றி சிந்தியுங்கள். அன்பர் மீதான உங்கள் அகப்பார்வை விலகும்போதெல்லாம், இனிய நிகழ்வொன்றை நினைவில் கொணர்ந்து மனதை அவர் மீதே செலுத்துங்கள்
  5. பெருமகிழ்வு கொண்ட உங்கள் அகத்தின் அழகையும் அமைதியையும் உங்களது தோழர் என, மெய்யான காதலரென உங்கள் அருகே அமர அனுமதியுங்கள்.

************************

கடிதம் 2

முந்தைய கடிதத்தை படித்துவிட்டு உங்கள் நனவோடையின் ஒழுக்கை அமைதியாக உற்றுநோக்கியபின் நான் குறிப்பிட்ட ஐந்து பண்புகள் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும்:

  • தொடர் ஒழுக்கு (க்ஷிப்தம்)
  • அவ்வப்போது விழிப்புணர்வு இருண்டுபோதல் (மூடம்)
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் ஆர்வத்தின் தொடர்ச்சியின்மை (விக்ஷிப்தம்)
  • கவனத்தை சிதறடிக்கும் ஆர்வத்தை தடுக்கக் கூடிய உங்களது மேலாண்மை (நிரோதம்)
  • குறிப்பிட்ட நேரத்தில் மனதை நிரப்பும் ஒற்றை ஆர்வத்தில் முழுதாக கரைந்துபோதல் (ஏகாக்ரம்)

இந்த ஐந்து நிலைகளில், இறுதியாக சொல்லப்பட்டதன் பண்புகள் அனைவராலும் போற்றப்படுபவை. வலி, சலிப்பு போலல்லாமல் நீங்கள் இந்த நிலையை தவிர்க்க முயல்வதில்லை. முழுதாக ஈர்க்கப்பட்ட நிலையில் நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணுவதில்லை. இந்நிலையில் ‘நான்’ எனும் நனவுக்கும் ‘நான்’ அல்லாத பிறவற்றுக்கும் இடையில் தெளிவான பிரிவினை இல்லை. அத்தைகையதொரு அனுபவத்தில் காலம் இடம் போன்ற கூறுகள் பற்றிய உணர்வை கடந்து செல்கிறீர்கள். அந்நிலையில் கலக்கமோ கிளர்ச்சியோ இருப்பதில்லை.

இதுவரை படித்துவிட்டு, உங்கள் உடலையும் மனதையும் நிலைநிறுத்தி கண்களை மூடி அத்தகையதொரு நிலையை தீண்ட முடியுமா என்று முயலுங்கள். எதை நோக்கி மெல்ல முன்னேற வேண்டுமோ அந்த இலக்கைப் பற்றிய எண்ணம் உங்களில் தெளிந்துவரக் கூடும். பத்து நிமிடம் வரை அமைதியாக அமர்ந்திருந்த பின் தொடர்ந்து படியுங்கள்.

இப்போது உங்கள் மனம் பரபரப்பின்றி அமைந்திருக்கக் கூடும். நான் சொல்வதும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதும் இப்போது உங்களுக்கு தெளிவாக புரியக்கூடும். நீங்கள் மிக மகிழ்ந்திருந்த தருணங்களை நினைவில் மீட்டெடுக்கக் கூடும். அத்தகைய நிலையே தெளிந்த மெய்மை நிலை. 

ஒரு கண்ணாடி முன் நிற்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் முகத்தில் பளிச் என ஒளி விழுகிறது. அந்தக் கண்ணாடி மாசுமறுவற்றிருக்கிறது. விளைவாக மிகத் தெளிந்த பிரதிபலிப்பு. தெளிந்த நிலையில் நிகழ்வது இதுவே. இந்த ஒப்புமையில் மூன்று பகுதிகள் உள்ளன: ஒளி, முகம் அல்லது பொருள், கண்ணாடி. படிவத்தின் பண்பையும் இதனோடு நான்காவதாக சேர்த்துக்கொள்ளலாம். தெளிந்த நிலையில் ஒளியே தூய நனவின் ஆன்மாவாக இருக்கிறது. அதனை இறை என்றோ அகம் என்றோ, புருஷன் என்றோ மெய்மை என்றோ சொல்லிக்கொள்ளலாம். ஒவ்வொரு பண்பாடும் ஒரு பெயரை அதற்கு அளிக்கிறது. முகம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் அறிதல் புலத்தில் பதிவாகும் ஆர்வம். கண்ணாடி என்பது முக்குணங்களில் ஒன்று. அந்தந்த நிலைக்கேற்ற பெயர் அதற்கு வழங்கப்படும். நாம் தெளிந்த நிலை என்று இங்கே சொல்வதற்கு சத்வ குணம் என்று பெயர்.

புறவய புரிதலுக்கும் அகவய இயல்நிகழ்வுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்ப்பதற்கு பதிலாக, ஒரு ஒளிப்படத்தை திரையில் வீழ்த்துவதை கற்பனை செய்துகொள்ளுங்கள். இதில் ஒளியானது பின்புறமிருந்து வருகிறது. ஒளிரச் செய்யவேண்டிய பொருள் வழியாக ஊடுருவுகிறது. பிம்பத்தைப் பார்ப்பவருக்கு ஒளியின் மூலமோ ஒளிப்படம் வைக்கப்பட்டிருப்பதோ தெரிவதில்லை. விளைவை மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது. அதேபோல், உங்களது புலனறிவுப் புலத்தை ஒளிரச் செய்யும் ஒளியை உங்களால் நேரடியாகக் காண முடியாது. உள்செலுத்தப்படுவது எது என்ற உணர்வோ, உங்கள் அகவயமான கருவியை தன் ஆளுகைக்குள் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் பற்றிய உடனடி உணர்வோ உங்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து வரும் எறிவே உங்கள் நனவுதான். இந்த வீச்சு காலத்தையும் இடத்தையும் சட்டகமாகக் கொண்டது, அவ்வீச்சின் உள்ளார்ந்த பகுதிகளும் அவையே. அதனால் அந்த அனுபவம் நான்கு-பரிமாண மெய்மையாக உங்களுக்கு தோன்றக்கூடும்.

நனவோடை என்பது எப்போதும் ஒழுகிக்கொண்டிருப்பது என்பது அடுத்த புதிர். ஏதோ ஒரு இயக்காற்றல் காரணமாக அதன் வேகம் கூடலாம், குறையலாம், ஓட்டம் நிற்கலாம். ஒவ்வொரு உயிரும் அகமும் உடலும் கொண்ட தனிப்பட்ட பொருள் ஒன்றாக படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அந்த இயக்காற்றல் செயல்படுகிறது. ஒருவரது இயக்குநீர் ஒழுக்கு (hormonal flow), சுரப்பிகளின் ஊற்றம் (glandular secretions), ஏற்பிகளின் கூருணர்ச்சி (irritability of receptors), குளக எதிர்ப்புசக்தி (synaptic resistance), உள்ளார்ந்த வேட்கைகள் (latent urges), முன் நிரல் செய்யப்பட்ட நாட்டங்கள் (preprogrammed pursuits) போன்ற பல கூறுகள் நனவோடையின் ஒழுக்கோடு தொடர்புடையவை. இந்த அக-உடற் கூறுகள் சுழற்காற்றுகளை, கொந்தளிப்புகளை, பேரலைகளை ஏற்படுத்தக்கூடும். மற்றுமொரு நனவுநிலையை இது சுட்டுகிறது - பிரதிபலிப்பில் குறுக்கீடு ஏற்படுகிறது. நீங்கள் கண்டுகொண்டிருந்த தெளிந்த அமைதியான பிம்பத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது இது. இப்போது நீங்கள் உணர்வது தெளிவை அல்ல ஒளியுருவலை (translucency instead of transparency); அமைதிக்கு பதிலாக கொந்தளிப்பை; நிதானத்திற்கு பதிலாக அவசரத்தை. இதிலிருந்து நீங்கள் தப்பவியலாது. ஏனெனில், இது உங்களது இயல்பின் மற்றொரு கூறு - ரஜஸ் எனப்படும் குணம். 

மேற்சொன்ன இரண்டு வகை பிரதிபலிப்புகளும் ஆதல் எனும் தொடர் நிகழ்வின் பகுதிகளே. தவிர்க்க முடியாத மூன்றாவது கூறு ஒன்றுண்டு. ஒரு அனுபவத்தை உறையச்செய்து அதன் நேர்படியாக்கி நினைவில் தங்கச் செய்வது. இங்கு தேவைப்படுவது ஒளியல்ல. அதனை தடுத்து ஒரு பகுதியை இன்னொன்றிலிருந்து பிரிக்கக்கூடியது. இது இயக்கமற்ற நிலை. தெளிவுக்கு பதிலாக மழுப்பலைக் கொணரக்கூடியது. இந்நிலை குறிப்பிட்ட அளவுக்கு நீடிக்குமென்றால் நீங்கள் ஊக்கமிழப்பை, வெறுமையை, பொருளின்மையை, தன்மறுப்பை உணர்வீர்கள். சம்ஸ்க்ருதத்தில் இது தமஸ் எனப்படுகிறது. 

உங்கள் ஆர்வங்களை பிரதிபலிக்கும் இந்த முக்குணங்கள் உங்களில் மாறி மாறி நிகழ்வதை ஏற்கப் பழகுங்கள். அடுத்த கடிதத்தில் இம்முக்குணங்களின் வரிசைமாற்றங்களையும் சேர்க்கைகளையும் (permutations and combinations) விளக்குவேன். 

************************

நித்ய சைதன்ய யதி

தமிழில் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

நித்ய சைதன்ய யதி (1923-1999) நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.


நித்ய சைதன்ய யதி - Tamil Wiki


ஆனந்த் ஶ்ரீநிவாசன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.


ஆனந்த் ஸ்ரீனிவாசன் - Tamil Wiki

இடமும் இருப்பிடமும்

By:Para
11 April 2025 at 05:08

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

❌