Normal view

Received before yesterday

ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அதை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை. பிடித்த கதைகளை சமீபத்தில் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன்.

ஹோம்ஸ் கதைகளைப் படித்துவிட்டு வேறு கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆவல். அகதா கிறிஸ்டி, பெர்ரி மேசன் கதைகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. கிறிஸ்டி பிடித்திருந்தாலும் ஹோம்ஸ் அளவு இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பெர்ரி மேசன் கிறிஸ்டி அளவு கூட வரவில்லை. வேறு துப்பறியும் கதைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போது ஹ்யூ கிரீன் தொகுத்த Rivals of Sherlock Holmes என்ற புத்தகம் கிடைத்தது. ஹ்யூ கிரீன் (கிரஹாம் கிரீனின் சகோதரர்) இப்படி மூன்று அருமையான தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். Rivals of Sherlock Holmes, Further Rivals of Sherlock Holmes, American Rivals of Sherlock Holmes. அவர்தான் பிற நல்ல கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த Rivals அனைவரும் ஹோம்ஸின் “சமகாலத்தவர்” – அதாவது ஹோம்ஸ் கதைகள் வந்த காலத்தில் – 19 -ஆம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் – இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த சில துப்பறியும் “நிபுணர்கள்”, எழுத்தாளர்கள் பற்றி சின்ன ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

கிரான்ட் ஆலனின் கர்னல் க்ளே (Grant Allen’s Colonel Clay): க்ளே ஒரு ஏமாற்றுக்காரன். மீண்டும் மீண்டும் தென்னாப்பிரிக்க மில்லியனர் வாண்ட்ரிஃப்டிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டே இருக்கிறான். Episode of the Diamond Links என்னுடைய ஃபேவரிட் கதை.

ராபர்ட் பாரின் யூஜீன் வால்மான்ட் (Robert Barr’s Eugene Valmont): Absent-minded Coterie ஒரு அருமையான கதை. ஆனால் வேறு எதுவும் அவ்வளவு சுகமில்லை.

ஜாக்விஸ் ஃப்யூட்ரல்லின் திங்கிங் மெஷின் (Jacques Futrelle’s Thinking Machine): ப்ரொஃபசர் வான் டூசன் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி. சவால் விட்டு ஜெயிலிலிருந்து தப்பிக்கும் Problem of Cell 13 மிகவும் அருமையான கதை. எல்லா கதைகளிலும் தரம் எப்போதும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் படிக்கலாம்.

மாரிஸ் லேப்ளான்கின் ஆர்சீன் லூபின் (Maurice Leblanc’s Arsene Lupin): லூபின் ஒரு திருடன். சில கதைகள் – Arsene Lupin in Prison, Red Silk Scarf – நன்றாக இருக்கும்.

ஆர்தர் மாரிசனின் மார்ட்டின் ஹெவிட் (Arthur Morrison’s Martin Hewitt): ஹெவிட் ஒரு சம்பிரதாய துப்பறியும் நிபுணர். படிக்கலாம்.

ஆர்தர் மாரிசனின் டாரிங்க்டன் (Arthur Morrison’s Dorrington): டாரிங்க்டன் துப்பறிபவனாக வேஷம் போடும் திருடன். படிக்கலாம்.

கிளிஃபோர்ட் ஆஷ்டவுனின் ராம்னி ப்ரிங்கிள் (Clifford Ashdown’s Romney Pringle): ராம்னி ப்ரிங்கிள் ஏமாற்றுக்காரர். நான் படித்த கதைகளின் ambience charming ஆக இருந்தது.

பாரனஸ் ஆர்க்சியின் (Baroness Orczy) Old Man in the Corner: ஒரு டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு மர்மங்களை தீர்ப்பார் இந்தக் கிழவர். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆஸ்டின் ஃபிரீமனின் டாக்டர் தார்ண்டைக் (Austin Freeman’s Dr. Thorndyke): தார்ண்டைக் விஞ்ஞானத்தை பயன்படுத்தி துப்பறிபவர். கொஞ்சம் dry ஆக இருந்தாலும் கதைகள் மிக நன்றாக இருக்கும்.

வில்லியம் ஹோப் ஹாட்க்சனின் கார்னகி (William Hope Hodgson’s Carnacki): கார்னகி பேயோட்டுபவர். எல்லா கதைகளிலும் ஒரு supernatural background இருக்கும்.

எர்னஸ்ட் பிரம்மாவின் மாக்ஸ் காரடோஸ் (Ernest Bramah’s Max Carrados): காரடோஸ் ஒரு குருடர். ஹோம்ஸ் தரத்துக்கு இல்லாவிட்டாலும் நல்ல துப்பறியும் கதைகள்.

சில இன்று curiosities மட்டுமே. Guy Boothby உருவாக்கிய திருடன் Simon Carne (A Wedding Guest சிறுகதை, Prince of Swindlers தொகுப்பு), E. Phillips Oppenheim (Mr. Blunt’s Three Clients சிறுகதை போன்றவை.

இந்தத் தொகுப்பில் இடம் பெறாத சில நல்ல துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்:

  1. எட்கார் ஆலன் போ – டூபின் (Edgar Allan Poe – Auguste Dupin) குறிப்பாக Purloined Letter சிறுகதை. டூபின் இல்லாத Gold Bug சிறுகதை.
  2. அகதா கிறிஸ்டி – ஹெர்க்யூல் போய்ரோ, மிஸ் மார்பிள் கதைகள் (Agatha Christie: Hercule Poirot, Miss Marple)
  3. டோரதி சேயர்ஸ் – பீட்டர் விம்சி கதைகள் (Dorothy Sayers: Lord Peter Wimsey)
  4. ஜி.கே. செஸ்டர்டன் – ஃபாதர் பிரவுன் கதைகள் (G.K. Chesterton: Father Brown)
  5. ஈ.சி. பென்ட்லி – ட்ரென்ட் கதைகள் (E.C. Bentley: Trent)
  6. ஹெச்.சி. பெய்லி – டாக்டர் ஃபார்ச்சூன் கதைகள் (H.C. Bailey – Dr. Fortune)
  7. எட்கார் வாலஸ் – ஜே.ஜி. ரீடர் கதைகள் (Edgar Wallace – J.G. Reeder)
  8. ஜோசஃபின் டே (Josephine Tey) – குறிப்பாக Daughter of Time நாவல்.
  9. மெல்வில் டேவிசன் போஸ்ட் – அங்கிள் எப்னர், ராண்டால்ஃப் மேசன் கதைகள் (Melville Davisson Post – Uncle Abner, Randolph Mason)
  10. டாஷியல் ஹாம்மட் (Dashiel Hammett)
  11. ரேமன்ட் சாண்ட்லர் – ஃபிலிப் மார்லோ (Raymond Chandler – Phillip Marlowe)
  12. ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) – குறிப்பாக Three Coffins நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

256. And then there were none

உலகின் கடைசி மனிதன் தனியாக இருந்தபோது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
– மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா சொன்னது

தாண்டவராயன் கதை படித்த பிறகு கொஞ்சம் திமிர் தலைக்கனம் எகத்தாளம். எந்தப் புதினத்தை எடுத்தாலும் ஒட்டவேயில்லை. மிகவும் கடினப்பட்டு மூன்றில் ஒரு பங்கான 180 பக்கங்கள் படித்தபிறகு, ஒரு தமிழ்ப் புதினத்தைச் சென்றவாரம் தான் நிரந்தரமாக மூடி வைத்துவிட்டேன். இந்த விபத்தில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்குப் பல காலங்கள் ஆகும். இதனால் தான் நான் புதினங்கள் படிப்பதேயில்லை. இப்படி பலமுறை எனக்கு முன்னர் நடந்திருக்கிறது. அந்நேரங்களில் என்னை மீட்டெடுக்க எப்போதும் என்னிடம் திருக்குறள் உண்டு. அப்பறம் அகதா கிறிஸ்டி. நான் தமிழ்ப் புதினங்களால் கொல்லப்படும்போது, நான் அந்த அம்மாவின் ஆங்கிலத் துப்பறியும் புதினங்களைப் படிப்பதுண்டு. விரசம் கலவி முத்தம் ஏதும் இருக்காது. கதாநாயகன் துப்பாக்கி எடுத்து சண்டை போட மாட்டார். எழுத்தில் கவிதை நடையோடும். மூளைக்கு வேலைதரும் கதைக்களங்கள்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: And then there were none
ஆசிரியர்: Agatha Christie
வெளியீடு: Harper Hollins
முதல் ஈடு: 1939
பக்கங்கள்: 250
விலை: ரூபாய் 299
வாங்கிய இடம்: Amazon.com
—————————————————————————————————————————————————————————————————————————
Longest uncut single-shot Tamil movie. அகரம் என்றொரு தமிழ்ப்படம் வந்தது. வெட்டு இல்லாமல் எடுக்கப்பட்ட மிக நீண்ட தமிழ்ப்படம். அதாவது முதல் காட்சியில் ஒளிப்பதிவாளர் கேமராவை ஆன் செய்தால், கடைசி காட்சியில் தான் ஆஃப் செய்வார். கேமரா நகரும், இடையிடையில் கதாப்பாத்திரங்கள் கேமராவின் எல்லைக்குள் வந்துவந்து நடித்துவிட்டு போவார்கள். கடினம்தான். சென்னையில் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். என்னைத் தவிர அநேகமாக மற்றவர்கள் எல்லாம் அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் நண்பர்கள் உறவினர்கள். படம் முழுக்க நொய்நொய்யென்று பேசிக்கொண்டே இருந்தார்கள். கடுப்பாகி எழுந்து போகக்கூட நினைத்தேன். ஒரு கேள்விக்கு விடைகிடைக்க கடைசி வரை பொறுமையாகப் பார்த்தேன். காரணமில்லாமல் ஒவ்வொரு கொலையாக நடக்கும் அந்த த்ரில்லர் திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும். வெட்டு இல்லாமல் கடந்தகால, நிகழ்கால காட்சிகளை இணைத்து எப்படி சொல்வார்கள்? உண்மையிலேயே அக்காட்சியை நன்றாக எடுத்து இருந்தார்கள்.

And then there were none. அப்பறம் அங்கு யாருமேயில்லை. ஒரு தீவு. ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத 10 பேர் அங்கு ஒரே நாளில் வரவழைக்கப்படுகிறார்கள். 3 பெண்கள், 7 ஆண்கள். 10 பேரும் ஒவ்வொருவராக வெவ்வேறு முறைகளில் சாவதாக, அவர்கள் தங்கும் அறை ஒவ்வொன்றிலும் பள்ளிக் குழந்தைகள் பாடல் ஒன்று இருக்கிறது. வந்த இரவே அடுத்தடுத்து இருவர் மர்மமாக மரணிக்கின்றனர். அப்பாடல் போல ஒவ்வொருவராக இறந்து, கடைசியில் யாருமே இல்லாமல் போகப் போகிறார்கள் என அவர்களுக்குப் புரிந்து சுதாரிக்கிறார்கள். அதுவே நடக்கிறது. அப்பறம் அங்கு யாருமேயில்லை. 9 பேரைக் கொன்றுவிட்டு, ஒரு பிளாஸ்பேக் சொல்லி கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் மொக்கை கதையை அந்த அம்மா எழுத மாட்டார். அதிகப் பிரசங்கித்தனமாக புதினத்தின் கடைசி பக்கம் போய், கடைசி வரியைப் படித்தால் கொலைகாரன்/ரி பெயர் இருக்கிறது. நான் படிக்கும்போது, அகரம் திரைப்படம் போல எனக்கு கொலை செய்வது யாரென்று முக்கியமாகப் படவேயில்லை. அதைவிட முக்கியமான ஒன்றை அந்த அம்மா இக்கதையில் வைக்கவேயில்லை. அதைத் தேடித்தான் புதினத்தைப் படித்து முடித்தேவிட்டேன். அதுதான் கதைசொல்லியின் வெற்றி! நான் இதுவரை படித்த அகதா கிறிஸ்டி புதினங்களில், எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். சுவர் இல்லாமல் சித்திரம் வரையும் கதை!

மனைவி பிணம் இருக்க, கணவன் மற்றவர்களுக்கு உணவு சமைக்கிறான். செத்தவர்களை அவரவர் அறைகளில் பூட்டி வைத்துவிட்டு, சாகப்போகிறவர்கள் சாப்பிட்டு சரக்கடித்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன இந்த அம்மா இப்படி லாஜிக் இல்லாமல் கதை சொல்கிறது என்று யோசித்தால், அதற்கெல்லாம் பதில் வருகிறது. நண்பனின் மனைவியை அபகரிக்கும் மிகச் சிறந்த ஆன்மிகவாதி ஒருவன், எல்லா நாட்களும் கோவிலுக்குப் போகிறான், தாவீது தன் தளபதி மனைவியை அபகரிக்கும் திருப்பலி வாசகம் வாசிக்கப்படும் நாள் தவிர, என்று அந்த அம்மா எழுதும் போது, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ரசித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரே பெண், 4 ஆண்கள் இருக்கும் நிலையில் யார் கொலையாளி என்று எல்லார் மேலும் எல்லாருக்கும் சந்தேகம். எல்லாருடைய உடைமைகளையும் சோதனை செய்கிறார்கள். ஒவ்வொருவர் உடலையும் சோதனையிட வேண்டிய கட்டாயம். இப்படி கதை வைத்து, அந்த 4 ஆண்கள் அந்த ஒரு பெண்ணை நம்மூர் சினிமாவில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும். புது வசந்தம் திரைப்படம் தவிர! அடுத்து சாவை வைத்துக் கொண்டு கடைசியில் ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் மிஞ்சினால் சட்டுபுட்டென்று ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்க நாம் ஓர் உடன்படிக்கைக்கு வருவோம். இந்த அம்மா இவ்விரண்டு இடங்களையும் மிக எளிமையாக கடந்து போகிறது.

அப்பறம் அங்கு யாருமேயில்லை என்றாவதற்கு முன்னர், நீங்களும் ஒருமுறை படித்துவிடுங்கள். நானும் அடுத்த தமிழ்ப் புதினத்தின் விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற, இன்னொரு அகதா கிறிஸ்டி புத்தகம் வாங்க வேண்டும்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

❌