Normal view
அறிவு அளித்த விடுதலை
4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
நிவேதிதையா காரணம்?
“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் பொய்யாகவோ மிகையாகவோ ஒன்றை எழுதுவதும், படிப்பதுவும், பரப்புவதுவும் அதை நம்புவதும் நம் கலாசாரத்தின் ஓர் அம்சமாகவே ஆகி விட்டது .
“பாரத சுதந்திரம் ,அடிமைத்தனத்தை நீக்குதல்,பெண்மையை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல், ஜாதி வேறுபாடுகளைத் தகர்த்தல், தீண்டாமை நோயைக் களைதல், ஒற்றுமையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை வேரறுத்தல், தேசபக்தியை தெய்வபக்திக்கு ஒப்பாக்குதல், அச்சம் தவிர்த்தல் முதலிய சக்தி மிகு சிந்தனைகளை நிவேதியையிடமிருந்து பாரதியார் பெற்றார். பாரதியார் பாடல்களில் உள்ள கருத்துக்கள்,உணர்வுகள், அனைத்திற்கும் நிவேதிதை அளித்த ஊக்கமே மூலம்” என்று சகோதரி நிவேதிதையைப் பற்றிய நூல் ஒன்று கூறுகிறது (நிவேதிதை நூற்றைம்பது-யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா-ராமகிருஷ்ணா மிஷின் வெளியீடு)
இது எவ்வளவு தூரம் உணமை?
பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது என மேலே குறிப்பிட்ட நூல் கூறுகிறது. ஆனால் நிவேதிதாவின் வரலாற்றை விவரிக்கும் ஆங்கில நூல் (Sister Nivedita -Pravrajika Atmaprana) பாரதி 1906 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற போது நிவேதிதையைச் சந்தித்ததாகக் கூறுகிறது : “When Subrahmanya Bharathi came to attend Calcutta Congress in 1906 he went to meet Nivedita”. (இந்த நூல் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கை பற்றிய மெய்யான (authentic) நூல் என மதிக்கப்படுகிறது. இதை எழுதிய ஆத்மபிராணா ராமகிருஷ்ணா மடத்துத் துறவி. பாரதிய வித்யா பவனைத் தோற்றுவித்த கே.எம்.முன்ஷியின் மகள்)
1905ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. முன்பே கூறியபடி அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவர் பத்திரிகையாளராகக் கூடப் பங்கேற்றிருக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் அவர் அப்போது சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதில் அந்தக் கூட்டம் பற்றி ஏதும் எழுதியிருக்கவில்லை
மாறாக 1906ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 1906ஆண்டு காலகட்டத்தில் நிவேதிதை கல்கத்தாவில் வசித்து வந்தார். காசியிலிருந்து கல்கத்தா 420 மைல். பயணங்கள் எளிதாக இல்லாத அந்த நாள்களில் பாரதி அவ்வளவு தொலைவு பயணம் செய்து நிவேதிதையைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனவே, சில நூல்கள் குறிப்பிடுவது போல, கல்கத்தாவின் ஒரு பகுதியான டம் டம் நகரில் இருந்த ஆனந்த மோகன் போஸ் என்பவரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். .
1906 டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதை ஒட்டிய நாள்களில்தான் நிவேதிதையுடனான சந்திப்பு நிகழந்திருக்கக் கூடும் .
நிவேதிதா அறிவுரை கூறித்தான் பாரதி பெண் கல்வி, ஆண் பெண் சமத்துவம், பெண் விடுதலை போன்ற கருத்துக்களில் நாட்டம் கொண்டார் என்பதற்கு ஆதாரமில்லை. பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1906 டிசம்பர் இறுதியில். ஆனால் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி இதழில். “விக்டோரியா சகரவர்த்தினியின் சரித்திரத்திலிருந்து நமது நாட்டு மாதர்களறியத்த்தக்க சில விஷயங்கள்” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் அவர் கூறுவது; “விக்டோரியா மகாராணியின் பெருமைக்கு முதல் காரணம் அவரது கல்வித் திறமையே. கல்வித் திறமையில்லாதவர்கள் உலகினைப் புகழோடு ஆட்சிபுரிய மாட்டுவார்களா? ஐயோ! கல்வியில்லாதவர்கள் நேரே மண் சுமக்கக்கூட முடியாதவர்களாயிற்றே!
விலங்கோடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றோ டேனை யவர்
இந்தக் குறள் தற்காலத்து ஆசாரத் திருத்தக்காரரகளில் ஒருவரால் இயற்றப்பட்டதனறு. தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனாரால் இயற்றப்பட்டது.படிப்பில்லாதவர்களையும் படித்தவர்களையும் ஒப்பிட்டு நோக்கினால் மிருகங்களையும் மனிதர்களையும் ஒப்பிடுவது போலுமென்கிறார்.வள்ளுவர். கல்வியற்றோர் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் வண்டியிழுக்கத்தான் பயன்படுவார்கள் என்பது திருவள்ளுவருடைய கருத்து”
(சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905)
1905 அக்டோபர் சக்ரவர்த்தினி இதழில் ஓர் பஞ்சாபி மாது என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை பெண்கல்வி பற்றி தெளிவாக மட்டுமல்ல, சுவையாகவும் பேசுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் அந்தப் பெண்மணியின் பெயர் கடைசிவரை சொல்லப்படவே இல்லை! அதற்கு ஒரு காரணமும் உண்டு. அயல்நாட்டில் படித்துவிட்டு சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வந்திருக்கும் ஒருவரின் மனைவியைப் பற்றிய கட்டுரை அது. அவரின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம் பற்றி பாரதி இப்படி எழுதுகிறார்: “இவரது உண்மையான பெயரைப் பிரசுரிப்பதற்கு நாம் இவரிடம் அனுமதி கேட்கச் சாவகாசமில்லாது போயின்மை குறித்து விசனமுறுகிறோம், ஆதலால் இவருக்கு பரதர் என்று புனைப்பெயர் கொடுக்கிறோம்” (இதுவல்லவா இதழியல் அறம்!)
இப்படிச் சொல்லிவிட்டு,, “மேற்படி பரதருடைய பத்தினியாரைப் பற்றியே நாம் இவ்விஷயமெழுதத் தொடங்கினோம்” என்று தொடரும் பாரதி, “சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் தனது தாயாரையும் சகோதரிகளையும், மனைவியரையும் பெண்களையும் கல்வி பெறுவதற்குத் தகுதியில்லாத அடிமைகளாகக் கருதுகிறார்கள் .இக்காரணத்தினாலேயே சென்னை மனிதர்கள் உருவத்திலும் அறிவிலும் மனோதைரியத்திலும் சரீர திடத்திலும் பின்னடைந்தவர்களாக இருக்கின்றனர் என்று இம்மாது ஒரு முறை சொல்லினாராம். தனது கணவரைப் பார்க்க வரும் சினேகிதர்களிடமெல்லாம் அவரவர் வீட்டு மாதர்களின் கல்வியறிவைப் பற்றியே இவர் பேராவலுடன் விசாரணை புரிவார்:”
(சக்ரவர்த்தினி அக்டோபர் 1905)
வாழும் உதாரணங்கள் காட்டி எழுதியதோடு பாரதி நின்றுவிடவில்லை செல்வச் செழிப்பும், அதிகாரத்தை அணுக வாய்ப்பும் கொண்ட, சென்னை நகரத்துப் பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கான ஒரு பள்ளி தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார். எட்வர்ட் அரசருடைய மகனும் பட்டத்து இளவரசருமான வேல்ஸ் இளவரசர் தன் மனைவியுடன் 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் வந்திறங்கிய போது அங்கு அவர்களுக்கு ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப் போல அவர்கள் செல்லவிருந்த கல்கத்தாவிலும், சென்னையிலும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதைக் குறித்து 24.10.1905 சுதேசமித்திரனில் பாரதி எழுதுகிறார்:
“சென்னை நகரத்திலும் வேல்ஸ் இளவரசருக்குச் செய்யும் பல உபசாரங்களுடன் இளவரசியாருக்கும் இந் நகரத்து மாதர்கள் பலர் கூடி பம்பாயில் நடந்ததைப் போல உபசரணைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவென்று கேள்விப்படுகிறோம். மாதர்கள் ஒருங்கூடித் தாமகவே ஒர் பொது நன்மை பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமே என்றாலும் இவ்விஷயத்தில் மிகுதியான பணத்தை வீண் செலவு செய்வது தகுதியாக மாட்டாது.
ஸர்.வி.பாஷ்யமய்யங்காரின் மனைவியார் முதலிய மாது சிரோன்மணிகள் இவ்விஷயத்தில் முற்பட்டு முயற்சி புரிவார்களென்று எண்ணுகிறோமாதலால், அவர்கள் இளவரசியார் வரவின் அறிகுறியாக ஹிந்து மாதர் ஹைஸ்கூல் ஒன்று ஸ்தாபனம் செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை புரிகிறோம்”
(சுதேசமித்திரன் 24.10.1905)
பெண் கல்வி விஷயத்தில் மட்டுமல்ல, ‘பெண்களை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல் ’ஒற்றுமையை வளர்த்தல்’ போன்ற விஷயங்களிலும் நிவேதிதாவைச் சந்திக்கும் முன்னரே சுயமான பார்வை கொண்டிருந்தார் என்பதற்கு சக்ரவர்த்தினி இதழில் நவம்பர் 1905ல் அவர் எழுதத் தொடங்கிய துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையே சான்று. அது மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அது சொல்லுக்கு சொல் வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. அது பாரதியின் கருத்துக்களும் வெளிப்படும் மொழியாக்கம். அதே போல ‘ஜாதி வேற்றுமைகளைத் தகர்த்தல். தீண்டாமை நோயைக் களைதல்’ போன்ற எண்ணங்களின் தீவிரமான வெளிப்பாடு 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன் ஹிண்டுவில் எழுதிய ஆங்கிலக் கடிதம் (காண்க தொடரின் முந்தைய கட்டுரைகள்)
நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி பெண்கல்வி,பெண்கள் முன்னேற்றம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்களுக்கு எதிரான எண்ணங்கள், மதங்களுக்கிடையே ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு போன்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை. எனவே நிவேதிதாவால்தான் பாரதி இத்தகைய சிந்தனைகளைப் பெற்றார் என்பதும் அவரே மூலம் என்பதும் மிகையான கூற்று. ஒருவரை உயர்த்திப் பேச மற்றவரைத் தாழ்த்துவது இங்கு எப்போதும் உள்ள வாடிக்கைதான்.
அப்படியானால் நிவேதிதா பாரதியிடம் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லையா?
அப்படிச் சொல்வதற்கு இல்லை. அவர் பாரதியிடம் ஏற்கனவே இருந்த கனலை தூண்டவும் அது பெரு நெருப்பாக வளரவும் அவர்களிடையே 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சந்திப்பு காரணமாக அமைந்தது.
இந்த சந்திப்பு குறித்து ஆராய வேண்டிய கேள்விகள், 1) காங்கிரஸ் மாநாட்டுக்குக் கல்கத்தா சென்ற பாரதி, காங்கிரஸ் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்காமல், நிவேதிதாவைச் சந்தித்ததின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?2. ‘எனக்கு ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று நிவேதிதாவைக் குறிப்பிடும் பாரதி ஏன் திலகரை, விபின் சந்திர பாலரைப் பற்றி, விரிவாக எழுதியது போல் எழுதவில்லை?
முதல் கேள்விக்கு என்னுடைய ஊகமான பதில், காங்கிரஸ் ஒருவித நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருந்த காலகட்டத்தில் நிவேதிதா போர்க்குணம் கொண்டவராக விளங்கினார் என அவரைப் பற்றிய செய்திகள் மூலம் அறிய முடிகிறது (அவை குறித்து இதே தொடரில் விரிவாக முன்னம் எழுதியிருக்கிறேன்) அந்தப் போர்க்குணம்தான் தாகூர் அவரிடம் இருந்து விலகி இருந்ததற்குக் காரணம் (“She had power and she exerted that power with full force on the lives of others. When it was not possible to agree with her it was impossible to work with her” -Rabindranath Tagore) ஆனால் அதே போர்க்குணம்தான் பாரதியை நிவேதிதாவை நோக்கி பாரதியை ஈர்த்திருக்க வேண்டும்.
எத்தனையோ தலைவர்களைப் பற்றி, ஆப்கானிஸ்தானத்து அமீர் உட்பட அயலகப் பிரமுகர்களைப் பற்றி, போற்றுதலுக்குரிய பெண்மணிகளான அகல்யா பாய், சரளாதேவி (தாகூரின் சகோதரி) -ஏன் விக்டோரியா மகாராணி பற்றிக் கூட – குறித்தெல்லாம் எழுதிய பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை. நிவேதிதா 1911ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானார். அதாவது நிவேதிதா பாரதி சந்திப்பு நிகழ்ந்ததற்குப் பின் சுமார் ஐந்தாண்டு காலம் வாழ்ந்திருந்தார். அவர் பாரதியின் ஆங்கில இதழான பாலபாரதாவிற்கு எப்போதாவது எழுதியதாக நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை என்பதுதான் பெரிய ஆச்சரியம்.
நிவேதிதா பற்றி பாரதி எழுதியதாக எனக்குக் கிடைப்பவை. நான்கு சிறிய குறிப்புகள்தான்
1.1906ஆம் ஆண்டு நவம்பர் 24 தேதியிட்ட இந்தியா இதழில் நிவேதிதா உடல் நலிவுற்றிருந்த போது நலம் பெற வேண்டும் என எழுதிய குறிப்பு (அதன் பின் நிவேதிதா நலம் பெற்று பணிகளுக்குத் திரும்பிவிட்டார் இது பாரதி -நிவேதிதா சந்திப்பு நிகழும் முன்னர் எழுதியது)
2.1907 ஆம் ஆண்டு பாலபாரதா என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக, அதன் நவம்பர் இதழில் ஆங்கிலத்தில் எழுதிய தலையங்கத்தில் “Open your eyes, men of India, open your eyes to the facts of life!” எனத் தொடங்கும் நிவேதிதாவின் மேற்கோளைக் குறிப்பிட்டிருப்பது.
3. ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்’ எனத் தொடங்கும் நிவேதிதா தேவி துதி. அது எப்போது எழுதப்பட்டது எனத் தெரியவில்லை அது பாரதியாரின் வாழ்நாளில் எங்கும் வெளியானதாகத் தெரியவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1937 ஆம் ஆண்டு வெளியான சுயசரிதையும் பிறபாடல்களும் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது
4. 1908ஆம் ஆண்டு பாரதியே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பான ஸ்வதேச கீதங்களில் காணப்படும் சமர்ப்பணக் குறிப்பு: “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணங்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன் -ஆசிரியன்” என்கிறது அந்தக் குறிப்பு. அதில் நிவேதிதாவின் பெயர் நேரிடையாக இடம் பெறவில்லை.
இந்தக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, “சகோதரி பாரதியின் கையைப் பிடித்திழுத்து வெளியே இழுத்து வந்தார்.அங்கே விரிந்து படர்ந்திருந்த ஓர் ஆலமரத்தின் அருகே சென்று, “இதோ பார் பாரத மாதா!” என்றார். இளைஞர் பாரதி வியப்புடன் அவர் காட்டிய திசையில் பார்த்தார். அங்கே அவர் கண்டது என்ன! பாரதமாதாவே தேவியாக வானாளவிய நின்றதை அகக் கண்கள் திறக்கப்பெற்ற பாரதியார் தரிசித்தார்.மெய் சிலிர்த்தது, நா தழுதழுத்தது அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டார்” என்று நாடகீயமாக நிவேதிதை நூற்றைம்பது என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள். கிருஷ்ணனுடைய விஸ்வரூபத்தை உவமையாகச் சொன்னதை ஜோடனைகள் செய்து உணர்ச்சிமயமான நாடகமாக ஆக்கிவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை!
“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி சொல்லியதுதான் எத்தனை உண்மையான வார்த்தை!
The post நிவேதிதையா காரணம்? appeared first on Maalan.
தகப்பனைப் போல ஒரு முன்னோடி
மாலன்
காற்று வேகமாக வீசும்போது கதவுகள் படீரெனெ திறந்து கொள்வதைப் போல பத்திரிகைப் பணி பாரதியின் மனக் கதவுகளைத் திறந்தது. அவரது பார்வை விரிந்தது.
அவர் பத்திரிகைத் தொழிலுக்கு வந்திருக்கவில்லையென்றால் அதிக பட்சமாக அவரது காலத்தில் வாழ்ந்திருந்த பல சிறந்த தமிழறிஞர்களைப் போல ஓரு தமிழ் அறிஞராக சிறப்பெய்தியிருக்கக் கூடும். அவரது காலத்தில் உ.வே.சாமிநாதய்யர், இரண்டு ராகவய்யங்கார்கள், ம.கோபாலகிருஷ்ணன், நாவலர் சோமசுந்தர பாரதி, அரசஞ்சண்முகனார் எனப் பல தமிழறிஞர்கள் வாழ்ந்தார்கள் அவர்கள் எல்லோரும் செவ்வியல் தமிழுக்கும், இலக்கணத்திற்கும் பங்களித்தார்கள். பத்திரிகைத் தொழிலுக்கு வரும் முன் பாரதி எழுதிய கடினமான நடையைக் கொண்ட, இலக்கண சுத்தமான, கவிதைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.
ஆனால் பாரதியை அவரைச் சுற்றிப் பேரெழுட்சியுடன் மலர்ந்து கொண்டிருந்த நவீன உலகை நோக்கிச் செலுத்தியது அவர் இணைந்து கொண்ட பத்திரிகைத் தொழில்.
அதற்கு சாட்சியாக இருப்பது அவர் ஹிண்டுவிற்கு ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதம். சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே அவர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். 1904ஆம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி வரை அவர் மதுரையில் சேதுபதி பள்ளியில் பணியில் இருந்திருக்கிறார். அதன் பின் அவர் நவம்பர் மத்தியில் சென்னையில் சுதேசமித்ரனில் சேர்ந்திருக்கலாம். அந்தக் கடிதம் 1904ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிண்டுவில் வெளியாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சுதேசமித்ரனில் அவரது படைப்புகள் ஏதும் வெளியாகும் முன்னரே (அதற்கு 10 மாதங்கள் ஆயிற்று) சென்னை வந்த சில நாள்களிலேயே இந்தக் கடிதம் ஹிண்டுவில் பிரசுரமாகி இருக்கிறது. அந்தக் கடிதம் வெறும் கடிதமல்ல. அது கனல் மணக்கும் பூ.
அதைக் கனல் மணக்கும் பூ எனச் சொல்லக் காரணம் அதில் வெளிப்படும் பாரதியின் அறச்சீற்றம். அந்தக் கடிதத்தில் பாரதி எழுதுகிறார்: “அரசியல் விடுதலை என்பது நான் இந்த நாட்டைச் சார்ந்தவன் என்ற தேசிய உணர்வு இல்லாமல் ஏற்படாது. எங்கே ஜாதி அமைப்பு இருக்கிறதோ அங்கு தேசிய உணர்வு ஏற்படாது.இந்த ஜாதி அமைப்பு என்பது விசித்திரமானது. பறையர் ஒருவர் அறக் கொடைகள் அளிக்கும் வள்ளலாக இருந்தாலும் அவரை ஒரு பிராமணத் தரகனை விடத் தாழ்ந்தவராகவே அது நடத்தும். இங்கிலாந்தில் உரிய தகுதிகள் கொண்ட செருப்புத் தைக்கும் இளைஞன் அந்த நாட்டின் பிரதமராக ஆவதற்கு அங்கு எந்தத் தடையும் எவரிடமிருந்து எழாது ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இணையற்ற ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் இந்து மடம் ஒன்றின் பீடாதிபதியாக வர முடியும் என இந்தியாவில் எவராவது நம்பினால் அவர் தேசத் துரோகியாகக் கருதப்படுவார் சூத்திரனே வர முடியாது என்னும் போது பஞ்சமரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏன் மக்கள் விரும்பியே குருடர்களாக இருக்கிறார்கள்? தேசிய காங்கிரசில் மிகச் சிறந்த தொண்டர்கள் இருக்கிறார்கள், அந்தன் லட்சியங்கள் உயர்ந்தன என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண் என்றென்றும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் கல் நெஞ்சம் கொண்ட ஒருவர் தலைமைப் பீடத்திலிருந்து மக்களை எழுட்சியுறச் செய்ய முடியும் என எவரேனும் நம்புவார்களா?” என்று அந்தக் கடிதத்தில் பொரிந்து தள்ளும் பாரதி “சமூக சீர்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்த்திருத்தம் என்பது ஒரு கனவு. பொய். ஏனெனில் சமூக அடிமைகள் அரசியல் சுதந்திரம் என்ன என்பதை ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.” என்று கடிதத்தை முடிக்கிறார்.
இந்த சீற்றத்தின் ஊற்றுக் கண் ஜி.சுப்ரமணிய ஐயர். ஜி.சுப்ரமணிய ஐயரைப் பற்றித் தமிழ் நாட்டில் அதிகம் பேசுவாரில்லை. மறக்கப்படுவதற்காகவே பிறக்கிறவன் பத்திரிகையாளன் என்பதற்கான மற்றொரு நிரூபணம் அவர். அவரைப் பற்றிப் பேசுகிற ஒரு சிலரும் அவர் ஹிண்டு சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், நிறுவனர் என்றோ, மிதவாதி என்றோ ஓரிரு வரிகளில் சுருக்கி விடுவார்கள்.
இவையெல்லாம் உண்மைதான். ஆனால் முழுமையான உண்மைகள் அல்ல. ஜி. சுப்ரமணிய ஐயர் பலவிதங்களில் முன்னோடி. அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். மதப் பிரசாரகர்கள் ஊர் ஊராய்ப் போய் பரப்புரை செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி அதைத் தொடங்கியவரும் அவர்தான். ஊராட்சி நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் அவர்தான்.இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான் அவரது பத்திரிகைகள்.
அவரது மற்றொரு முகம், அதிகம் அறியப்படாத முகம், அவர் ஒரு சமூக சீர்த்த ஆர்வலர் என்பது. இந்து மதத்தில் இருந்த தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவனவர்களில் ஒருவர். மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தை பாரதி ‘இந்து ஆசார சபையின் உறுப்பினர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்
ஜி.சுப்பரமணிய ஐயர் பேச்சளவில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டு காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டவர். அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 1889ஆம் ஆண்டு பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடிய போது நடத்தினார். வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது இறந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து அந்தணர்களும் உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம் இறந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்கு மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜி.சுப்ரமணிய ஐயர், அந்த வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் பேச்சு நடத்தி வேறு சில புரோகிதர்களை ஏற்பாடு செய்து அந்தச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.
இந்து மத சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. அந்த விலை அவர் தன் உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கிய ஹிண்டு நாளிதழ்.
இந்து ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்ரமணிய ஐயர் சம்பந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம். அதைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள்தான் ஹிண்டு பத்திரிகையைத் தொடங்கியவர்கள். ஜி.சுப்ரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ், என்.சுப்பாராவ் பந்துலு ஆகிய ‘திருவல்லிக்கேணி அறுவர்’தான் 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முறையாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் (முத்துசாமி ஐயர்) உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற ஹிண்டுவைத் தொடங்கினர். அப்போது ஜி.சுப்ரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள். மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலை கவனிக்கப் போய் விட்டனர். ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியர் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்ரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பை கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியர் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரப்பத்திரிகையாகத் தொடங்கிப் பின் வாரம் மும்முறையாக வளர்ந்து, 1887ஆம் ஆண்டு சென்னையில் முத்ன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது. பிரச்சினை ஜி.சுப்ரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் நுழைந்தது.
ஜி.சுப்ரமணிய ஐயர் பிரிட்டீஷ அரசின் செயல்கள், அதிகாரிகளின் அத்து மீறல், இவற்றோடு தீண்டாமை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றை விமர்சித்து எழுதி வந்தார். அவரை மிதவாதி, மென்மையானவர் என்று விமர்சிப்பவர்கள் அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டுத்தான் பேசுகிறார்களா என்று நான் எண்ணுவது உண்டு. காரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுபவர் அவர். சுதேசமித்திரனில் அவர் எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்:
மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு நாள் காலையில் மாணவர்கள் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனை பாடல்களுக்குப் பின் வந்தேமாதரம் பாடலைப் பாடினர். ஆத்திரம் அடைந்த வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை பெஞ்ச்சின் மேல் நிற்க வைத்து, மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து விட்டார். அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார். அவர்களில் ஒருவருக்கு மணிக்கட்டு பிசகிவிட்டது. சுப்ரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டுத் தலையங்கமும் எழுதினார். அதில் ஒரு வரி: “ ஹிந்துப் பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதன் முக்கிய பலன் தேசாபிமானம் என்கிற உத்தமோத்தமான நல்லுணர்ச்சியைக் கற்பது. அப்படி ஹிந்துப் பிள்ளைகள் தேசாபிமானம் கற்பதால் வெங்கோபாச்சாரிக்குக் கோபம் உண்டாகுமானால் இவரைவிடக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?”
குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் என்பது உருவ கேலியாக இருந்தாலும், அந்த சொற்றொடர் இல்லாமலே இந்தக் கண்டனத்தை எழுதியிருக்கலாம் என்றாலும் அது அவரது சீற்றத்தைக் காட்டுகிறது. இந்தச் சீற்றம், அரைக்கணம் இதை பாரதி எழுதியிருப்பாரோ என்ற மயக்கத்தைத் தந்தாலும் இதை எழுதியது பாரதி இல்லை. ஐயர்தான். ஏனெனில் இந்தத் தலையங்கம் வெளியானது 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி. அப்போது பாரதி இந்தியா பத்திரிகைக்குப் போய்விட்டார். அதுமட்டுமல்ல, அவர் இந்தத் தலையங்கத்தை வரவேற்று களி கூத்தாட இந்தியா பத்திரிகையின் 13.10 1906 ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்
சுப்ரமணியத்தின் ஆங்கில நடையும் இதுபோலக் காரமானதுதான்.அதிலும் குறிப்பாக நம் கலாசாரத்தில் இருந்த குறைகளைப் பற்றி எழுதும் போது. உதாரணத்திற்கு ஓரிடத்தில் சுப்ரமணியம் எழுதுகிறார்: (நம்) “கலாசாரத்தின் தொன்மை எவ்வளவு போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் அது நடைமுறையில் பழமையானதாகவும் பயனற்றதாகவும் ஆகிவிட்டது” (“a civilisation which however venerable its antiquity is for practical purposes more or less antiquated and useless)
சமரசம் செய்து கொள்ளாத சுப்ரமணியத்தின் எழுத்துக்கள் பார்டனர்ஷிப்பில் விரிசலை ஏற்படுத்தின அவர் முன்வைக்கும் கடுமையான வாதங்கள் பத்திரிகையின் விற்பனையை பாதிப்பதாக வீரராகவச்சாரியர் கருதினார். ஏற்கனவே அரசுக்கு எதிராக எழுதப்பட்ட தலையங்கங்கள் காரணமாக பத்திரிகை பல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியிருந்தது
விரிசல் பிளவானவது அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான விமர்சனத்தால்.
தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் தாழ்ந்த நிலை குறித்தூ எழுதும் போது “ இழிவானதாகவும், விநோதமாகவும் உள்ள இந்து சமூக அமைப்பு (தாழ்த்தப்பட்டவர்களுக்கு) எந்த வித மேம்பாட்டையும் அனுமதிக்கும் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.நம் மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும் இந்த ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது (“notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained… no amount of admiration for our religion will bring social salvation to these poor people.”)
.ஜி.சுப்ரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள இணங்கவில்லை. பார்ட்னர்ஷிப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் பார்டனர்கள் கருதினர். பிர்பல வழக்கறிஞர் நார்ட்டன் முன் ஹிண்டுவை விட்டு சுப்ரமணியம் விலகி விடவேண்டும் என்றும் வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பை கவனிப்பார் என்றும் முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த பத்திரிகை சாம்ராஜயத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பியமைக்காக இழந்து ஜி.சுப்ரமணிய ஐயர் வெளியேறினார். மிச்சமிருக்கும் சுதேசமித்திரன் மூலம் தன் பணியையும் லட்சியங்களையும் தொடர்ந்தார்.
இது எவ்வளவு உன்னதமான செயல்! சுப்ரமண்ய சிவா இதைப்பற்றி இப்படி எழுதினார்; “தேசாபிமானமும் பாஷாபிமானமும் இன்னவையென்று எவரும் உணராத அக்காலத்தில் அதாவது ‘சுதேசமித்திரன்’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ப்ரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் தாம் நடத்திக் கொண்டிருந்த ‘ஹிந்து’ என்ற ஆங்கில பத்திரிகையை விட்டுவிட்டுச் சாதாரண ஜனங்களுக்குள் அறிவைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் வியக்கத்தக்கது.” (ஞானபாநு – 1916- ஆகஸ்ட்)
பாரதி சுப்ரமணிய ஐயரை எப்படிப் பார்த்தார்? : “இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதியவிழிப்பிற்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர்.” (சுதேசமித்திரன் 1918 மே- 31- ) என்று எழுதினார் பாரதி. அவர் சுப்பிரமணிய ஐயரை வள்ளலாருக்கு நிகராக வைக்கக் காரணம் சுப்ரமணிய ஐயரிடமிருந்த சமூக சீர்திருத்த கருத்துக்கள்தான்
22 வயதில் சமூகம் பற்றி பாரதி பெற்ற விழிப்புணர்வின் ஆதிகர்த்தாவும் அவர்தான். திலகர் வழியை சுப்ரமண்யம் ஏற்கும் முன் அவருக்கும் பாரதிக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. அதன் காரணமாக பாரதி அவரை விமர்சித்ததும் உண்டு. ஆனால் கருத்து ரீதியான வேறுபாடுகள் தகப்பனுக்கும் மகனுக்குமிடையே ஏற்படுகிற முரண்பாடுகள் போல.
ஆம் தகப்பன்தான். பாரதிக்கு 33 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் சுப்ரமணிய ஐயர் தனது 49ஆம் வயதில் 22 வயது பாரதியைக் கண்டெடுத்து இதழியலுக்குக் கொண்டு வந்தவர். அது பாரதிக்கு மறு பிறப்பு.
தமிழுக்கும்தான்
கலைமகள் ஜூலை 2024
The post தகப்பனைப் போல ஒரு முன்னோடி appeared first on Maalan.
பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர்
நாம் நம் வாழ்நாளில் ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத ஒருவர் நம் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பாரதியின் வாழ்க்கை.
பாரதியும் விவேகானந்தரும் வாழ்வில் ஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. விவேகானந்தர் பாரதிக்கு 19 ஆண்டுகள் மூத்தவர். விவேகானந்தர் மறைந்த போது (1903 ஜூலை) பாரதி காசியில் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த சமயத்தில்தான் எட்டையபுரத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய 1893 செப்டம்பரில் பாரதிக்கு வயது 11. அப்போது அவர் எட்டையபுரத்தில்தான் இருந்தார். ஆனால் விவேகானந்தரின் அந்தப் புகழ் பெற்ற உரை பற்றி இந்தியப் பத்திரிகைகளில் உடனே செய்தி வெளியாகவில்லை. ஹிண்டு நாளிதழ், பாஸ்டனில் வெளியான ஒரு மாலைப் பத்திரிகையை மேற்கோள் காட்டி, 1893 நவம்பர் 17அன்றுதான், விவேகானந்தர் உரையாற்றிய இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், செய்தி வெளியிட்டது.(வங்காளத்திலிருந்து வெளியான ஸ்டேட்ஸ்மேன் அதற்கும் பின்னர் டிசம்பரில்தான் செய்தி வெளியிட்டது!) எட்டையபுரத்திலிருந்த பாரதி இந்தச் செய்தியை வாசித்திருக்க வாய்ப்பில்லை. வாசித்திருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்போது அவர் வயது 11தான்.
ஆனால் பாரதியை நாத்திகத்திலிருந்து மீட்டெடுத்தது, 22 வயதில் அவருக்கு அறிமுகமான விவேகானந்தரது கருத்துக்கள்தான். அவற்றை அவருக்கு அறிமுகப்படுத்தியவர்கள் விவேகானந்தர் மீது பற்றுக் கொண்ட சில நண்பர்கள். குறிப்பாக மண்டயம் குடும்பத்தினர்.
வடநாட்டிலேயே தங்கி விட விருப்பம் கொண்ட பாரதி, எட்டையபுர மன்னரின் அழைப்பின் பேரில் எட்டையபுரம் திரும்பினார்.ஆனால் மன்னருடன் பிணக்கு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். இனி என்ன செய்வது என்ற கேள்வி எதிர் நிற்க வேலை தேடத் தொடங்கியவருக்கு மாதம் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் மதுரை சேதுபதி பள்ளியில் ‘தமிழ்ப் பண்டிட்’ வேலை கிடைத்தது. அது தற்காலிக வேலை. 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலைக்குச் சேர்ந்தவர் நவம்பர் 10ஆம் தேதிவரைதான் அங்கு வேலையில் இருந்தார்.
தமிழாசிரியராகப் பணியாற்ற வந்த அவருக்கு, மதுரையில் அப்போது இயங்கி வந்த ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பு அறிமுகமாயிற்று. அவர் பணிக்கு வருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் (5 மே 1901) அது தொடங்கப்பட்டிருந்தது. அதன் நிறுவனர் மா.கோ என்று அழைக்கப்பட்ட புலவர் மா.கோபாலகிருஷ்ண ஐயர். சிகாகோ உரைக்குப் பின் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது அவரை பாம்பனில் இராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியோடு சேர்ந்து வரவேற்றவர்.
மா.கோ.வின் நட்பு பாரதிக்கு விவேகானந்தர் என்ற சாளரத்தைத் திறந்து விட்டது. அதற்கு முன் பாரதி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருக்கலாம்.ஆனால் அவரது கருத்துக்களைப் பற்றிய விரிவான தரிசனம் அவருக்கு அந்த நட்பின் விளைவாகத்தான் சாத்தியமாயிற்று. அதன் விளைவாக நாத்திக எண்ணங்கள் சூழ்ந்திருந்த மனதில் மெல்ல மெல்ல ஒளி புகலாயிற்று விவேகானந்தரின் கருத்துக்களின் சாரம் இவைதான்: “சணடையிடாதே, உதவு” (Help, not fight)“ சிதைக்காதே, ஜீரணித்துக் கொள்”“ (Assimilation, not destruction) “விலகாதே, அமைதியும் நல்லிணக்கமும் கொள்” (Harmony and Peace not dissention) (இவை விவேகானந்தரே சொல்லியவை) இந்த மூன்றையும் பாரதியின் பல படைப்புகளில் பார்க்கலாம் (ஓர்: உதாரணம்: ‘பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே”).
மா.கோ.வின் மற்றொரு நண்பர் சுதேசமித்ரன், ஹிண்டு நாளிதழ்களின் ஆசிரியரான ஜி.சுப்ரமணிய ஐயர். அவரும் விவேகானந்தர் மீது பெரு மதிப்புக் கொண்டவர். விவேகானந்தர் சிகாகோவிலிருந்து திரும்பிய பின் 1894 ஆம் ஆண்டு சென்னையில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் விவேகானந்தரின் சிகாகோ உரையை பாராட்டிப் பேசியவர் ஜி.சுப்ரமணிய ஐயர். மேடையில் விவேகானந்தருக்கு அருகில் அமர்ந்திருந்திருந்து உரையாடும் வாய்ப்பும் பெற்றவர்.அதன் பின் தனது ஹிண்டு நாளிதழில் விவேகானந்தர் பற்றி தலையங்கமும் எழுதினார். பரவலாக வரவேற்கப்பட்ட தலையங்கம் அது. விவேகானந்தருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான (விவேகானந்தர் இவரது இல்லத்தில் தங்கியிருக்கிறார்) பேராசிரியர் கே.சுந்தரராம ஐயர் இந்தத் தலையங்கம் பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார். (காண்க: K. Sundarama Iyer, Reminiscences of Swami Vivekananda, by His Eastern and Western Admirers, pp. 79-80, Advaita Ashrama, Calcutta) 1894-95ஆம் ஆண்டுகளில் விவேகானந்தர் பற்றி ஹிண்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது (ப்ரூக்லின் ஸ்டாண்டர்ட் பத்திரிகைச் செய்தியின் மறு பிரசுரம் (23பிப்ரவரி), பாஸ்டன் ஈவ்னிங் செய்தி (28 ஜூன்) டெட்ராய்ட் ஈவ்னிங் நியூஸ் வெளியிட்ட செய்தி (27 ஆகஸ்ட்), இண்டர் ஓஷன் செய்தி (14 நவம்பர், இவையன்றி பிர்ட்டீஷ் இதழ்களான சண்டே டைமஸ், பால் மால் கெசட், எக்கோ இண்டியா, ஆகியவை விவேகானந்தரின் இங்கிலாந்துப் பயணம் குறித்து எழுதியவை, கும்பகோணத்திலும் பெங்களூரிலும் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (27 ஆகஸ்ட்) கல்கத்தாவில் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (13 செப்டம்பர்) சென்னைக் கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய பதிலுரை (12, 15 நவம்பர்) என்று அது குறித்து ஒரு நீண்ட பட்டியல் இட முடியும். ஜி.சுப்ரமணிய ஐயர் விவேகானந்தர் மீது கொண்டிருந்த பற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் இந்து ஆசார சீர்திருத்த சபை என்ற அமைப்பில் 1897ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி. அந்தக் கேள்வி இதுதான்: “விவேகானந்தரை ஏன் சங்கராச்சாரியாராக நியமிக்கக்கக் கூடாது?” என்று கேட்டதாக இந்தியன் சோஷியல் ரிஃபார்ம் கூறுகிறது (G.Subramania Iyer in 1897 had, wistfully perhaps, asked The Madras Hindu Social Reform Association,” Cannot the reformers install Swami Vivekananda or some spiritual hero like him into a reform Sankarachari as there was a second Pope for some time in Europe!” Indian Social Reform, IV 363)
காசி வாசத்தின் காரணமாக பாரதிக்குப் பலமொழிகள் பரிச்சயமாகி இருந்தன. ஆனால் தமிழ் இலக்கணத்தில் அவர் பெரிய பயிற்சி கொண்டிருக்கவில்லை.அதுவும் தவிர முதல் முதலில் வேலைக்குச் செல்லும் 22 வயது இளைஞனுக்கு முதல் சில மாதங்களில் ஏற்படும் குழப்பங்களும் மெலிதான பதற்றங்களும் அவருக்கு இருந்திருக்கலாம். அவை பற்றி அவர் மா.கோவிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.
விவேகானந்தாரின் விசுவாசியான மா.கோ. இவற்றை விவேகானந்தரின் இன்னொரு அன்பரும்,தனது நண்பருமான ஜி.சுப்ரமணிய ஐயரிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஹிண்டுவில் வெளியிட்டதைப் போல சுதேசமித்திரனிலும் அயல்நாட்டுச் செய்திகளை வெளியிடக் கருதியிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மொழிகள் பல அறிந்த பாரதியை சுதேசமித்திரனுக்கு அழைத்துக் கொண்டார். 1904ஆம் ஆண்டு இறுதியில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். முதல் ஓராண்டுக்கு அவருக்குப் பெரிதும் மொழிபெயர்ப்புப் பணிகளே கொடுக்கப்பட்டன.
ஜி.சுப்ரமணிய ஐயர் தனது பத்திரிகைகளுக்கு அப்பால் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம், சென்னை இந்து ஆசார சீர்த்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த அமைப்பின் கூட்டங்களுக்கு பாரதியும் சென்றிருக்கக் கூடும். அங்கு அவருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கக் கூடிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் மண்டயம் குடும்பம்.
மண்டயம் என்பது இன்று மாண்டியா என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மைசூருக்கு 45 கீ.மீ. தொலைவில், உள்ள சிறுநகரம். அங்கு வசித்த, ராமானுஜர் மரபில் வந்த தென்கலை வைணவக் குடும்பங்களில் ஒன்று, புகழ் வாய்ந்த மண்டயம் குடும்பம். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். தனித்தனியாகப் பார்த்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சிறப்பானவர்கள்.
முதலில் சுல்தான்களிடமும் பின் அவர்களிடமிருந்து பிரிட்டீஷாரிடமும் பறிபோன மைசூர் அரசை உடையார்கள் மீட்க உதவியவர் திருமலாராவ். மைசூர் அரசில் முதன்மை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதால் பிரதான் திருமலாராவ் என்றழைக்கப்பட்டவர். அவரது மகன் கிருஷ்ணமாச்சாரியார் நவீன கன்னட மொழிக்கு இலக்கணம் இயற்றிய மொழி அறிஞர். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். யோகி பார்த்தசாரதி என்றழைக்கப்பட்ட அவரது மகன், வழக்கறிஞர், யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர், வேதாந்த அறிஞர். காலப்போக்கில் மறைந்து போன சமஸ்கிருதச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சர் கோலி ஹர்மன், சர் ஆடம் பிட்டில்ஸ்டோன் என்ற ஆங்கிலேய நீதிபதிகளுக்கு சமஸ்கிருதம் கற்பித்தவர். காந்தி, திலகர் ஆகியோரது நண்பர். அவர் இந்தி பயிற்றுவிக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய போது அதன் முதல் ஆசிரியாராகச் சேர்ந்தவர் காந்தியின் மகன்
அவரது சகோதரி பெருந்தேவியின் மகன்தான் அளசிங்கப் பெருமாள். விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான எல்லா முயற்சிகளையும் -இருமுறை நிதி திரட்டுவது. ஒருமுறை குடும்ப நகைகளை விற்று அமெரிக்காவிற்குப் பணம் அனுப்புவது உள்பட- எல்லா முயற்சிகளையும் செய்தவர். “இதெல்லாம் உங்களால்தான் சாத்தியம் ஆயிற்று” என்று விவேகானந்தர் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். அளசிங்கரைப் பற்றி தனியாக ஒரு நூலே எழுதலாம்.
அளசிங்கரின் தங்கை சிங்கம்மாவின் கணவர் நரசிம்மய்யங்கார், கோதாவரியில் அணைகட்டியவர் என்பதால் அந்தப் பகுதி மக்களால் கோதாவரி சாமி என்றழைக்கப்பட்டவர். சிங்கம்மாவின் மகன் எம்.பி.டி ஆச்சாரியாவின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்த ஒரு வீரனின் வாழ்க்கை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு விதை ஊன்றியவர் அவர்.
அளசிங்கரின் தாய் பெருந்தேவியின் உடன் பிறந்த சகோதரி வேடம்மாவின் மகன்கள்தான் மண்டயம் திருமலாச்சாரியார், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர். இவர்கள்தான் இந்தியா பத்திரிகையைத் தொடங்கியவர்கள். அவர்களது உறவினர்களான அளசிங்கப் பெருமாளும், எம்.பி.டி ஆச்சார்யாவும் அதற்குத் துணை நின்றார்கள். எம்.பி.டி.ஆச்சாரியா சில காலம் அதன் பதிப்பாளராக இருந்தார். இந்தியா இதழ் முதலில் சில காலம் அளசிங்கப் பெருமாள் நடத்தி வந்த பிரம்மவாதின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வந்தது.
இவர்கள் அனைவருமே விவேகானந்தரின் சீடர்கள். அவர்களது இன்னொரு ஆதர்சம் திலகர். 1898ல் சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களுக்குப் பின் சென்னை வந்த திலகர் மண்டயம் குடும்பத்தினருடன்தான் தங்கியிருந்தார்.தன்னுடைய நூல் ஒன்று வரைவு நிலையில் இருந்த போது அதை அளசிங்கரிடம் கொடுத்துக் கருத்துக் கேட்குமளவிற்கு திலகருக்கு அந்தக் குடும்பத்தோடு நெருக்கம் இருந்தது.
1893ல் விவேகாநந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை படித்த இந்தியர்களிடையே ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவர்களிடையே இந்தியா இந்துமதம் குறித்தபெருமித உணர்வு துளிர்த்ததிருந்தது. அந்தச் சூழ்நிலையில் திலகர், இந்துக்களை ஒருங்கிணைப்பது என்ற நோக்குடன் விநாயகர் ஊர்வலம் (1893) சிவாஜி ஊர்வலம் (1895) நடவடிக்கைகளைத் தொடங்கி ஒரு பெருந்தலைவராக உருவாகிக் கொண்டிருந்தார். 1901 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் விவேகானந்தரை சந்தித்தார். (விவேகானந்தர் சிகாகோ செல்லும் முன் இந்தியா முழுக்க யாத்திரை மேற்கொண்டிருந்த காலத்தில் புனேயில் திலகரது இல்லத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சந்நியாசி என்று மட்டும் கூறிக் கொண்டு சில நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்) கல்கத்தாவில் நடந்த அந்த சந்திப்புக்குப் பின் திலகர் சுதேசி என்ற கருத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார்.
விவேகானந்தராலும் திலகரினாலும் பாரதியின் நண்பர்களான மண்டயம் குடும்பத்தினரும், வ.உ.சியும் ஈர்க்கப்பட்டதைப் போலவே பாரதியும் திலகரின் பால் ஈர்க்கப்பட்டார். திலகர் தனது கருத்துக்களை தனது பத்திரிகைகள் மூலம் பரப்பி வந்தார். அவரது தலையங்கங்கள் காரணமாக பிரிட்டீஷ் அரசால் கைது செய்யப்பட்டு ஓராண்டு தண்டனையும் பெற்றார். அந்த சிறைவாசத்திலிருந்து விடுதலை அடைந்த போதுதான் சென்னை வந்து மண்டயம் குடும்பத்தினரோடு தங்கியிருந்தார்.
1905ல் கர்சன் அறிவித்த வங்கப் பிரிவினை திலகரின் அரசியலை வேகம் பெறச் செய்யதது. அந்தப் பிரிவினை குறித்து கொதித்தெழுந்த பாரதி கர்சனை எதிர்த்த வங்க இளைஞர்களைப் பாராட்ட சென்னை கடற்கரையில் 1905ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அதில் வங்கமே வாழிய என்ற கவிதையையும் பாடினார். அது அதற்கு மறுநாள் சுதேசமித்திரனில் வெளியாயிற்று. அதுதான் சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் முதல் படைப்பு.
திலகரின் கருத்துக்களைத் தமிழரிடம் பரப்ப ஒரு பத்திரிகை வேண்டும் என்று பாரதி நினைத்தார். அந்த எண்ணத்தை நிறைவேற்ற மண்டயம் சகோதரர்கள் முன் வந்தார்கள். அவரை ஆசிரியராகக் கொண்டு 1906 ஆம் ஆண்டு மே 9 அன்று இந்தியா வார இதழாக சென்னையில் மலர்ந்தது. திருமலாச்சாரியார் இந்தியா இதழை பாரதியின் பொருட்டே தொடங்கியதாக பாரதியுடன் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராக இருந்தவரும் , தேசியத்தலைவர்கள் பலருடைய வரலாற்றை எழுதியவருமான எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்
இலக்கியவாதியாகத் தொடங்கிய பாரதி அரசியலில் அடியெடுத்து வைத்தது இந்தியா இதழ் மூலம்தான். இந்தியாவும், அதையடுத்து வந்த மண்டயம் சகோதரர்களின் இதழ்களும் பாரதி வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது.
அது அடுத்து வரும் இதழ்களில்
கலைமகள் ஜூன் 2024
The post பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர் appeared first on Maalan.
நாத்திகராய் பாரதி
“உலகத்தில் வாலிப பருவத்தில் ஒருவன் எவ்வாறு பழகினானோ அப்படியே வயோதிக பருவம் வரையில் நடக்கிறான் என்பது உண்மை. ஐந்தில் வராதது ஐம்பதில் வராது என்பது திண்ணம்” என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் பாரதி. (இந்திய குருவும் ஆங்கில குருவும்- விஜயா 25 பிப்ரவரி 1910)
இவ்வளவு உறுதியாக பாரதியார் சொல்லும் விஷயம் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் அவரது இளமைப் பருவம், அதில் அவர் பெற்ற கல்வி, அடைந்த அனுபவங்கள், அவரை பாதித்த சிந்தனைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது பதின்ம வயது வாழ்க்கை, குறிப்பாக 16 முதல் 20 வயது வரையிலான (1898-1902) வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் இதுவரை நமக்குக் கிட்டவில்லை.
நானறிந்த வரையில் பாரதியின் மனைவி செல்லம்மா எழுதியுள்ள பாரதியார் சரித்திரத்தில் இந்தக் காலகட்டம் பற்றி சில செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் முரண்பாடுகளும் இருக்கின்றன. “பாரதியார் 1902ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று ஓரிடத்தில் எழுதும் செல்லம்மா, “காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டிற்கு அழைத்து வந்தவர் எட்டையபுரம் மகாராஜாதான். அந்த சமயத்தில் தில்லி தர்பாருக்குச் சென்றிருந்த மகாராஜா திரும்புங்காலையில் காசியில் சிவமடத்தில் இறங்கினார். அங்கே பாரதியாரைச் சந்தித்து தம்முடன் எட்டையபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்” என்றும் எழுதுகிறார்.
பிரிட்டீஷ் ஆட்சியில் மூன்று முறை தில்லியில் தர்பார் நடந்தது.(1877, 1903, 1911) இதில் 1877 ஆண்டின் போது பாரதி பிறந்திருக்கவில்லை. 1911 ஆண்டு புதுச்சேரியில் இருந்தார். இங்கிலாந்தில் புதிதாக அரசரோ அரசியோ அரியணை ஏறும் போது அவர்கள் தங்களது காலனி நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி ஏழாம் எட்வர்ட் அரசரானபோது அவர் தில்லிக்கு வருவதற்கு 1903ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தார். பெரிய வெளியில் கூடாரங்கள் எழுந்தன. பிரத்தியேகமாக ஒரு ரயில் பாதை போடப்பட்டது. கப்பலில் பம்பாய் வரும் அரசர் அங்கிருந்து ரயில் மூலம் தில்லி வருவதாக ஏற்பாடு. அதே நேரம் கல்கத்தாவிலிருந்து கர்சன் வருவார், மேற்கிலிருந்து வரும் அரசரும் கிழக்கிலிருந்து வரும் வைஸ்ராயும் தில்லியில் சந்திப்பார்கள் எனத் திட்டம். மற்ற காவலர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமான சீருடை அணிந்த சிறப்புக் காவல் படை உருவாக்கப்பட்டது. மின்சார கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் நிறுவப்பட்டன. ஒருதபால் நிலையமும் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது. 1903 ஜனவரி ஒன்றாம் தேதி, புத்தாண்டு அன்று, நாடெங்கிலிருந்தும் சமஸ்தான அரசர்கள் அவர்களிடமிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து தர்பாருக்கு வந்தனர். சிலர் யானை மீது தங்க அம்பாரியில் வந்தனர். அவர்களது யானைகளைக் கட்டவும் அவற்றுக்குத் தீனிபோடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்தனை கோலாகலம். ஆனால் அரசர்தான் வரவில்லை! ஏழாம் எட்வர்ட் தான் வராமல் தன் தம்பியை அந்த தர்பாருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் இதெல்லாம் நடந்தது 1903ல். 1902ல் அல்ல. அதனால் எட்டையபுரம் மகாராஜா தில்லி தர்பாரிலிருந்து திரும்பிச் செல்லும் போது காசிக்கு வந்திருக்க இருக்க முடியாது. அல்லது பாரதி எட்டையபுரம் திரும்பியது 1902ஆக இருக்க முடியாது.
வருடக் கணக்கு முன் பின்னாக இருந்தாலும் செல்லம்மாவின் நூலை வரிகளுக்கு இடையில் வாசித்தால் சில செய்திகள் புலனாகின்றன. பாரதி சில காலம் நாஸ்திகராகவும் இருந்தார் என்பது அவற்றில் ஒன்று. “காளைப் பருவமானதாலும், பண்படாத சுதந்திர வீறுபடைத்த மனமாகையாலும் அவருக்கு நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று” என்று எழுதுகிறார் செல்லம்மா.
பாரதியா? கணபதி, முருகன், சிவன், பராசக்தி,சரஸ்வதி, லக்ஷ்மி, காளி, மாரியம்மன், கண்ணன் என்ற இந்து தெய்வங்கள் மட்டுமன்றி, ஏசு, அல்லா என்று எல்லா தெய்வங்கள் மீதும் கவிதைகள் எழுதிய பாரதியா நாஸ்திகராக இருந்தார்? ‘தமிழா, பயப்படாதே, தெய்வத்தை நம்பு!” என்று எழுதியா நாஸ்திகராக இருந்தார்? வேத, உபநிஷத்களிடம் மனதைப் பறி கொடுத்து வேத ரிஷிகளின் கவிதை என ரிக் வேதப் பாடல்களையும், பகவத்கீதையையும் மொழிபெயர்த்த பாரதியா நாஸ்திகராக இருந்தார்?
ஆம். அவரது பதின்ம வயதில் அவர் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். “அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் என்ற ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியம் அதிகம்” என்று செல்லம்மா கூறுகிறார்.காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பின் பாரதி ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார் செல்லம்மா.
எட்டையபுரத்திலிருந்தும் பாரதி வெளியேற எட்டையபுரம் மன்னரை விமர்சித்து திருநெல்வேலியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சர்வஜனமித்திரன் என்ற இதழில் பாரதி எழுதியதுதான் காரணம் என்று பாரதியின் சகோதரர் சி.விஸ்வநாதன் தெரிவித்ததாக ஓரு குறிப்பு உண்டு. அதனை ஷெல்லிதாஸ் என்ற பெயரில் எழுதியதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நூல் கற்பனை வகையைச் சார்ந்தது என்று பிரேமா நந்தக் குமார் போன்றவர்கள் கருதுகிறார்கள். பாரதியின் அந்தப் படைப்பும் கிடைக்கவில்லை.
ஆனால் ஷெல்லிதாஸ் என்ற பெயரில் பாரதி எழுதிய வேறு ஒரு படைப்பை நாம் இன்றும் வாசிக்க முடியும். அது ‘துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’. பாரதியே ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி பத்திரிகையில் 1905 நவம்பர் தொடங்கி, 1906 ஜூலை வரை, இதழுக்கு இரண்டு பக்கங்கள் வீதம், இடைவெளி விட்டு விட்டு, ஐந்து மாதங்கள் வெளியான கதை. அது ஒரு மொழியாக்கக் கதை. அதை ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரைச் சூடி பாரதி எழுதினார்.
காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பாரதி அங்கு ஷெல்லியின் பெயரால் ஷெல்லியன் கில்ட் (Shelleyan Guild என்ற ஓர் அமைப்பையும் தொடங்கியதை பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான ஆக்கூர் அனந்தாச்சாரியார் குறிப்பிடுகிறார்: “ஷெல்லி, கீட்ஸ் இவ்விரு கவிவாணர் மீதுதான் அவர் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார். தமது ஊரில் ஒரு சங்கம் ஏற்படுத்தி, அச்சங்கத்தில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படி செய்து வந்தார்” (கவிச்சக்ரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் -ஆக்கூர் அனந்தாச்சாரி)
சுதந்திர வீறு கொண்ட மனம் வாய்த்த பாரதி, தன்னை எந்த மனிதருக்கும் தாஸன் என்று சொல்லிக் கொண்டதில்லை, ஷெல்லியைத் தவிர. சக்தி தாஸன், காளிதாசன் என்ற பெயர்களில் அவர் எழுதியதுண்டு. ஆனால் அவை இறைவியின் பெயர்கள். மனிதர்களில் அவர் தன்னை தாஸனாக அறிவித்துக் கொண்டது ஷெல்லி ஒருவருக்குத்தான்.
யார் இந்த ஷெல்லி? ஏன் அவர் மீது அவ்வளவு ஈர்ப்பு?
இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம் சசக்ஸ். அந்த மாநிலத்தில் ஒரு பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தவர் ஷெல்லி. அவரது தந்தை பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. ஷெல்லி பிறந்தது 1792 ஆகஸ்ட்டில்.
அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவையே உலுக்கியிருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரஞ்சுப் புரடசியின் லட்சியமும், முழக்கமும் ஆகும். மன்னர் என்பவர் தெய்வத்தின் பிரதிநிதி, எனவே அரசாட்சி என்பது தெய்வீக உரிமை என்ற கருத்து ஒருகாலத்தில் இங்கிலாந்தில் நிலவி வந்தது (Sovereignty என்ற சொல்லை அதனால்தான் தமிழில் இறையாண்மை என்று மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்) ஆனால் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்று மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் வேண்டும் என்று 1688ல் நடந்த கிளர்ச்சியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதும் அந்தக் காலகட்டத்தில்தான்.
பிரபு வீட்டுப் பிள்ளையானாலும் மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், சுதந்திரம், சமத்துவம் என்ற கருத்துக்கள் காதில் விழுந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் ஷெல்லி வளர்ந்தார். அந்தக் கருத்துக்களின் தாக்கம்தான் அவரைக் கவிஞனாக்கியது. எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் ஷெல்லி. அவரை பிரஞ்சுப் புரடசியின் குழந்தை என அவரது கவிதைகளின் விமர்சகரான எட்மண்ட்ஸ் எழுதுகிறார்.
அரசன் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல என்ற புள்ளியில் தொடங்கிய ஷெல்லியின் சிந்தனை இறைவனுக்கு எதிராகவும் நீண்டது. அவர் தனது பதினேழாவது வயதில், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படிக்கும் போது நாத்திகத்தின் தேவை (The Necessity of Atheism) என்ற நூலை எழுதினார். அது பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கல்வி நிலையங்களில் கெடுபிடி நிலவிய காலம். அதனால் ஜெர்மியா ஸ்டக்லி என்ற புனை பெயரில் எழுதினார். அவர் கையெழுத்திட்டு நண்பர்களுக்கு அனுப்பி வைத்த நூலின் பிரதிகளை, நண்பர் ஒருவர் மதகுருக்களுக்கு அனுப்ப, அந்த மதகுரு பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்ப, ஷெல்லி பிடிபட்டார். பல்கலைக்கழக துணைவேந்தரும் அதிகாரிகளும் ‘இதை எழுதியது நானல்ல’ என்று மறுத்துவிடு உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று சொன்னார்கள். ஆனால் ஷெல்லி, “உங்கள் மதம் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வது அற்பத்தனமான, கோழைத்தனமான காரியம் என்று நானறிந்த கொள்கைகள் சொல்கின்றன. நான் பெருமை கொள்ளத் தக்கதாக இந்த நூலை நான் எழுதவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக அதைப் புறக்கணிக்கச் சொன்னால் அது என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார். விளைவு பல்கலைக்கழகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதை அவமானமாகக் கருதிய அவரது தந்தை, உன் போக்கை நீ மாற்றிக் கொள்ளாதவரை உன்னை என் மகனாக நான் ஏற்க மாட்டேன் என்று ஷெல்லிக்கு கடிதம் எழுதினார். தந்தையின் நிபந்தனைகள் எதையும் ஏற்கமறுத்த ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார். பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ஷெல்லி வாழ்க்கையில் பெரும்பகுதி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தார்.
ஷெல்லியின் வாழ்க்கை, மன்னர்களைப் பற்றிய அவரது எள்ளல் (A King, a heartless beast, pageant, a name – ஒரு மன்னன், இதயமற்ற மிருகம், அலங்கார அணிவகுப்பு, வெறும் பெயர்) அதிகார எதிர்ப்பு, சமத்துவத்திற்கான வேட்கை, ஏழைகள் மீதான ஷெல்லியின் பரிவு (I am the friend of the unfriended poor- நான் நண்பர்களற்ற ஏழைகளின் நண்பன்)) மதகுருக்களுக்கு எதிரான உணர்வாகத் தோன்றி விரிந்த நாத்திகம் இவையெல்லாம் பதின்ம வயது பாரதியை வசீகரித்திருக்க வேண்டும். எட்டையபுர அரசரை முட்டாள் என வர்ணித்ததால்தான் அரசர் சினமடைந்தார் எனச் சொல்கிறார்கள். “The fool whom the courtiers nickname monarch, whilst a slave even to the basest appetites” – அரசப் பிரதிநிதிகளால் அரசன் என்றழைக்கப்படும் முட்டாள், கீழான வேட்கைகளுக்கு அடிமை என்பது ஷெல்லியின் வரிகள்.
நாத்திகத்தைத் தவிர ஷெல்லியின் கருத்துக்களின் தாக்கத்தைப் பல படைப்புகளில் காணலாம். அரசரையும், அரசவையையும் ஏளனம் செய்வது (சின்னச் சங்கரன் கதை) மதகுருக்கள், அமைப்புக்கள் மீதான விமர்சனம் (சங்கரன் நாயர் விஷயம் தொடர்பாக சங்கராச்சாரியார் பற்றி இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதம்) ஏழைகள் மீது பரிவு (மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?) சமத்துவத்திற்கான வேட்கை (ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்) அதிகார எதிர்ப்பு (பல பாடல்கள்/கட்டுரைகள்) எனச் சில உதாரணங்களைக் கூறலாம்.
நேரடியான உதாரணம் காந்தாமணியின் தொடக்க வரிகள்:” வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன” என்று காந்தாமணி என்ற கதையைத் தொடங்குகிறார் பாரதி.
இதில் கவனிக்க வேண்டிய ஓர் செய்தி உண்டு. காந்தாமணி பாரதி மறைவதற்கு ஈராண்டுகளுக்கு முன், செப்டம்பர் 1919ல் எழுதப்பட்ட கதை. 1905ல் ஷெல்லிதாசன் என்ற பெயரில் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கி 1921 அமரராகும் வரை ஷெல்லி பாரதி மீது தாக்கம் செலுத்தி வந்திருக்கிறார் என்பதற்கான வலுவான சான்று இது.
இன்னொரு சான்றும் உண்டு. தனது மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பு, 1921 பிப்ரவரி மாதம் பாரதி மகாமகம் என்று ஒரு கட்டுரை எழுதினார். அதில் எழுதுகிறார்: “ இந்திரனை தேவ தேவ என்ப. மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவருக்கு அவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி காளிதாசர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும் இங்கிலீஷில் ஷெல்லியையும் கவிகளின் கவி என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்”
ஷெல்லியைப் பற்றி அப்படிச் சொல்பவர், நமது கவிகளின் கவியான பாரதி!
கலைமகள் -மே 2024
The post நாத்திகராய் பாரதி appeared first on Maalan.
மணியின்கண் மறைந்திருக்கும் ஒளி
'ஹெமிங்வேயின் "வெள்ளை யானைகளை ஒத்த மலைகள்" கதையில், அந்த அமெரிக்கனும் அவனுடன் கூட இருந்த பெண்ணும் எப்படி இருப்பார்கள்?'
'அதிகம் யோசிக்க வேண்டாம். "அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜை மேல் வைத்திருந்தாள்" என்கிற ஒரே ஒரு வர்ணனையைத் தவிர வேறு பாத்திர விவரிப்புகள் அதில் கிடையாது' . பாத்திரங்களுக்கான விவரணைகளை மிதமிஞ்சி செய்யக் கூடாது என்பதற்காக இப்படியொரு உதாரணத்தை கூறுகிறார் எழுத்தாளர் எல்மோர் லெனார்ட் (Elmore Leonard). வணிக ரீதியான வெற்றிகரமான எழுத்திற்கான பத்து விதிகளென 2001ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் எழுதியிருந்தார்.
"முதல் வரியிலேயே சொல்ல வந்த விஷயத்தைப் பற்றி கோடிட்டு காட்டிவிட வேண்டும். வானிலை அறிக்கை போல் வளவளவென எழுதிக் கொண்டே போகாதீர்கள். நீள பீடிகைகளை முடிந்த அளவில் தவிருங்கள். தேய்வழக்குகள் அறவே வேண்டாம். வட்டார வழக்குகளை குறைவாக பயன்படுத்துங்கள். வர்ணணைகளை விட, இயன்றளவு உரையாடலில் உணர்ச்சிகளைக் கொண்டு வாருங்கள். ஆச்சரியக் குறிகளை வாரியிறைக்காதீர்கள்" என்று நிறைய விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
இவற்றில் பலதும் விவாதத்திற்குரியவை என்றாலும், அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த விஷயம் "இந்த விதிகள் அனைத்தையும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நான் எழுதியதைப் படித்தால் 'எழுதியது' போலிருப்பதாகத் தோன்றினால், அதை நான் மீண்டும் மீண்டும் எழுதுவேன்" என்றதுதான்.
எழுத்தைப் போல் அல்லாது எழுதுவதுதான் படிப்பதற்கு சுவாரசியமானதாக இருக்கும் என்கிறார் லெனார்ட். நடிப்பது போல் அல்லாது நடிக்கும் கலை போல. அந்நிலையை அடைவதற்கு அத்தனை படிநிலைகளில் பட்டை தீட்ட வேண்டியிருக்கிறது.
லெனார்ட் சொல்லாமல் விட்ட விஷயத்தை இங்கே நான் சேர்த்துக் கொள்கிறேன். ஒளிமிக்க பிரகாசத்தை உள்ளேக் கொண்ட கச்சா வைரம் போல் எழுத்தின் உள்ளே விஷயம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தீட்டப்படும்போது, பொலியும் வைரக்கல் என மேலும் பிரகாசம் பெறும். செயற்கை கண்ணாடி கற்களை விட்ட, அரிய வைர மணிகள் காலத்தில் நின்று ஒளிரும் இயற்கையான பிரகாசம் கொண்டவை.
சைவ சித்தாந்த மரபில், அரிய கற்கள், மணிகளில் மறைந்திருக்கும் ஒளி போல இறைவன் நம் உள்ளத்தில் மறைந்து உறைவதாக உருவகங்கள் உண்டு. பாலில் இருக்கும் பசுநெய், விறகில் மறைந்திருக்கும் நெருப்பு, இவற்றைப் போல மாமணிகளில் ஒளிந்திருக்கும் பிரகாசம் போல என்று அப்பர் பெருமான் சிவனை வர்ணிக்கின்றார். "மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்" போல.
அதெப்படி மாமணிகளில் ஒளி மறைந்திருகும்? நன்றாக பிரகாசித்தால்தானே அது அரிய மணி என ஐயம் உண்டாகலாம். அரிய கற்களும், மணிகளும் அவற்றுக்கே உண்டான பிரத்யேக வகையில் தீட்டப்படும்போது அதன் பிரகாசம் மேலோங்குகிறது.
Sanding Stone - என்பதை சாணைக் கல் என்பர். வெட்டும் கூரான ஆயுதங்களை அக்கல்லில் உரசி தீட்டிக் கொள்வது போல, அரிய மணிகளை பொலிய வைக்கும் பட்டை தீட்டுவதும் உண்டு.
இதில் வியப்பு என்னவென்றால், பாரதியின் குறுகியகால வாழ்க்கையில், அவர் தன்னுடைய இருபதுகளில் கூட ஆசிரியப் பணி கொண்டுதான் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். பிறகு பத்திரிகைத் துறைக்கு மாறி, அரசியல் கட்டுரைகள் எழுதி, கேலிச் சித்திரங்கள் வரைந்து, தேசபக்தி பாடல்கள் இயற்றி, காவியம் புனைந்து, ஆன்மிகத்திலும் பாடல்கள் புனைந்திருக்கிறார். அதிலும் 'மணி ஒளிர (வெளுக்க) சாணை (Sanding) உண்டு' என்பது தேவாரப் பாடலில் இடம்பெறும் சைவ சித்தாந்தத்தின் ஒரு கூறு எனலாம். இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கை அனுபவங்களின் பதிவுகளின்படி அவர் பக்தி இலக்கியங்களை அறிமுகம் செய்து கொண்டதே இருபதுகளின் இறுதிப் பகுதியில்தான்.
ஒரு பத்தாண்டுகள் அவர் தன் படைப்பூக்க உச்சத்தில் இருந்திருக்கலாம். அதற்கு மேல் காலம் அவரைக் காத்திருக்க வைக்கவில்லை. அவ்வளவு குறுகிய காலத்தில் பாரதி வெளிப்படுத்தியிருக்கும் விரிவான படைப்பூக்கத் திறனும், அதில் வெளிப்படும் கூர்மையான மரபுத் தொடர்ச்சியும், அவற்றை மானுடத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு அர்ப்பணித்திருப்பதையும் பார்க்கும் போது பெரும் வியப்பு உண்டாகிறது.
சாணைக் கல் கொண்டு பொலியச் செய்வதோ, கூர்மை கொள்வதோ நம்முடைய செவ்விலக்கிய மரபில் பயின்று வரும் உவமைதான். தற்போது, ஒரு திரையிசைப் பாடலில் "வாளில் ஏற்று சாணை" என்ற வரியைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. சாணைப் பிடித்தல் என்று நாம் வழக்கில் குறிப்பிடுவதில், அச்சொல் தொழிலாகு பெயராக வருகிறது. இந்தப் பாடலிலோ, 'அடி இயைபு' விதிகளுக்கேற்ப ஆணைக்கும், சேனைக்கும் இணையாக சாணையைப் பிடித்துப் போட்டிருக்கிறார் பாடலாசிரியர். ஆனால் பொருள் மாறி பண்பாகு பெயராக வருகிறது. இந்த வேறுபாடுகள் எல்லாம் புரிந்துதான் இப்படி எழுதினார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.
சுற்றிப் படரும் தீ
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணியிலக்கணம், ஓசைநயம், மரபு சார்ந்த பொருள் கூட்டுதல் என்று பலவகை வழக்கங்கள் இருந்தாலும், கவிதை என்று வரும்போது உரையாசிரியகளின் சிறகுகள் பெரியதாக விரியத் தொடங்கி விடுகின்றன.
மரபு கவிதைகளிலிருந்து, வசன கவிதைகளுக்கு ஒரு இயல்பான பாலம் அமைத்துக் கொடுத்த வகையில், பாரதியின் பங்கு தமிழ்மொழிக்கு இன்றியமையாதது.
"பாரதிக் கல்வி" என்ற நூலில், அந்தக் கவிதைகளுக்குள் இன்னும் சில அடிகள் ஆழப் புகுந்து விடுகிறார், கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். "தீக்குள் விரல்வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுகிறதே" என்கிற ஒரு வரியைக் கொண்டு மோகனரங்கன் பாரதியை நெருங்கிச் சென்று அறிய முற்படும் தருணங்கள் மிகவும் தீர்க்கமானவை.
பாரதியின் பாடல்கள் நூலின் இரு பதிப்பை எடுத்துக் கொண்டு, மேற்குறிப்பிட்ட வரி ஒரு பதிப்பில் இடம்பெற்று அதற்கு முந்தைய பதிப்பில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதையொட்டி மோகனரங்கனின் ஆய்வுகள் பாரதியின் படைப்புகளைச் சுற்றிச் சுழன்று செல்கின்றன.
"துழாய் (துளசி) மலர் மணக்க, வளையல்கள் செறிந்த முன் கையுடன், சிறு மானைப் போன்ற என் பெண், தன் மேனி வேகாமல், அச்சுதனே என்று சொல்லி செந்தீயை தழுவுகிறாள். என் கோவிந்தனே எனச் சொல்லி குளிர்ந்தக் காற்றைத் தழுவுகிறாள். இப்படி அவள் செய்வது ஒன்றா இரண்டா..." எனத் தாயின் புலம்பலாக நம்மாழ்வாரின் பாசுரம் ஒலிக்கிறது. கண்ணன் மீது பித்துக் கொண்ட அந்த சிறுபெண்ணிற்கு சுடுநெருப்பும், குளிர்காற்றும் ஒன்றே போலத்தானாம்.
இந்தப் பாசுரத்தை பாரதியின் ஆங்கில மொழியாக்கத்திலும் படிக்கும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது. நேரடியான புத்தகப் பிரதியாக இல்லை. மைக்ரோஃபில்ம் பிரதியாக,நியூயார்க் லைப்ரரியில் கிடைக்கும் என்கிறார்கள். 'பாரதி எனும் பற்றுக்கோடு' சிறுகதையில் வரும் புலவர் இரத்தினசாமி ஐயா இந்தப் புத்தகம் தன்னுடைய பாரதி சேகரிப்பில் இல்லையே என வருத்தப்படுவார். அதனால் என்ன. இது போன்ற அரிய புத்தகங்கள் பற்றி சில அரிய பதிவுகளாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றனவே என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
ஆண்டாள், தன்னுடைய நாச்சியார் திருமொழியில், பார்க்கும் குயில்கள், மயில்கள், மலர்கள் என எல்லாவற்றிலும் கண்ணனின் நிறத்தையே காண்பதாக புலம்புவார். தொண்டரடி பொடியாழ்வார், முல்லை நிலத்து காட்டின் தெய்வமான கண்ணனை, அதன் பசுமையான நிறத்தோடு ஒப்பிடுவார்.
இந்த மரபார்ந்த பொருட்செறிவோடு, பாரதி தன்னுடைய பாடலில், காக்கையின் சிறகை உவமையாகக் கொண்டு வருகிறார். அவ்வளவு அடர்த்தியான கருமை நிறம் என்பது எவ்வளவு ஒளி பொருந்தியதாக, காந்தியுடையதாக இருக்க வேண்டும். இந்திய பக்தி மரபில், துன்பங்கள் கொடுக்கும் கலியின் (சனி பகவான்) வாகனம் காக்கை என்பார். ஆண்டாளை ஒட்டியும், அப்படியே மரபை உடைத்துக் கொண்டும், காக்கையின் சிறகை காதல் கண் கொண்டு பார்க்கும் கவித்துவ மனம் பாரதிக்கு வாய்த்திருக்கிறது.
நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும் அச் சிறுபெண் குளிர்காற்றையும், சுடும்நெருப்பையும் கண்ணனின் நாமம் சொல்லி தழுவி நிற்கிறாள். பாரதிக்கு ஒரு விரல் கொண்டு தீயினை தீண்டினால் போதும். கண்ணன் அவரையேத் தழுவும் இன்பத்தை அப்படியே அளித்து விடுகிறான்.
தமிழ்வேதம் செய்வித்த பெருமை கொண்ட ஆழ்வார்களின் பாசுரங்களில், கண்ணனின் கீதையைப் பற்றி நேரடியான சுட்டுதல் இல்லை என்பார்கள் ஆய்வாளர்கள். ஆனால் கீதையின் சரணாகதி தத்துவத்தை சுட்டும் விதமாக நம்மாழ்வாரின் பாசுரத்தில் "வணக்குடைத் தவநெறி வழி நின்று" என வருவதாகச் சொல்வார்கள்.
பாரதிக்கு கண்ணனின் வேய்ங்குழல் கீதம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. அது தத்துவம் சார்ந்த மொழியாற்றுகையாக இருந்தால் என்ன, மொழியற்ற குழலோசையாக இருந்தால் என்ன, கண்ணனின் கீதம் அவர் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.
சுற்றிப் படரும் தீயை பாரதி தொடர்ந்து தனக்குள் உருவகித்துக் கொண்டே வந்திருக்கிறார். தசையினைத் தீச்சுடினும், சிவசக்தியைப் பற்றி பாடும் மனம் அவருக்குத் தேவையாக இருக்கிறது. சிறு பொந்தினுள் வைத்த நெருப்புப் பொறி படர்ந்திழுத்து பஸ்மமாக பொசுகிக் கொள்ளக் காத்திருக்கும் காடுபோல ஒரு கவித்துவத் தருணத்தை நோக்கிக் காத்திருப்பது தவிர கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்?
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.
பீ…பீ..டும்..டும்
தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது.
இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை உள்ளன. நாகஸ்வரம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளின் வண்ணப்படங்கள் இதில் உள்ளன. அந்தக் கருவிகளை வாசிக்கும் போது அதிலிருந்து என்ன மாதிரியான ஒலி வெளிவரும் என்பதை இந்நூலில் கொடுத்துள்ளனர்.
எடுத்துக்காட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் பெண் குழந்தைப் படம் உள்ள பக்கத்தில் பீ.பீ.டும்..டும் என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளன.
வழ வழ தாளில் வார்த்தைகள் இல்லாமல், அழகான வண்ணப் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல் 5-8 வயது குழந்தைகளுக்கானது.
வகை | வண்ணப்படப் புத்தகம் |
ஆசிரியர் | யெஸ்.பாலபாரதி |
வெளியீடு:- | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 75/- |
The post பீ…பீ..டும்..டும் first appeared on சுட்டி உலகம்.
‘பாரதி யார்’ @ பாஸ்டன்
அபினுக்கு அப்பால்
கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.
நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.
பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.
இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.
‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.
சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.
‘என்னா தெரியுது?’
‘சூரியன்.’
‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’
பாரதி பார்க்கிறார்.
‘இப்ப என்னா தெரியுது?’
‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’
‘அவ்ளதான் மேட்டர். போ.’
சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:
தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.
‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’
அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’
புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ
– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.
பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.
‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’
இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?
அதுதான் நடந்திருக்கிறது.
… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.
இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.
யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.
பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.
All rights reserved. © Pa Raghavan - 2022