Normal view

Received before yesterday

ஒரு பழைய நாவல்

ய. மஹாலிங்க சாஸ்திரி எழுதிய நாமொன்று நினைக்க (1950) என்ற நாவல் இணையத்தில் கிடைக்கிறது.

மிஸ்டர் வேதாந்தம் பாணி நாவல். பணக்காரக் குடும்பத்து வாரிசு ராமநாதன். அவன் உயிர் நண்பன் சீதாராமன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். ராமநாதனின் அப்பாதான் அவனையும் படிக்க வைக்கிறார். ராமநாதனின் மாமாவுக்கு இது பிடிக்கவில்லை. தன் மகளை ராமநாதனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். பல ஜோடிகள், கடைசியில் எல்லாருக்கும் திருமணம் ஆகிறது.

இந்த நாவலைப் படிக்கும்போதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் அருமை புரிகிறது. கட்டுக்கோப்பாக ஒரு தொடர்கதை எழுதுவது கஷ்டம்தான். அதை சாதித்ததால்தான் அன்று இவர்கள் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். சாஸ்திரியும் முயன்றிருக்கிறார்தான், ஆனால் அவர்கள் தரத்தை எட்ட முடியவில்லை.

இந்தப் பதிவை எழுத நாவலின் ஒரு பாராதான் தூண்டுகோல். ராமநாதனின் மாமா சிவராமன் தன் மகள் செல்லத்தை ராமநாதனுக்கு மணம் முடிக்க விழைகிறார். ஆனால் ராமநாதனுக்கு உஷா மீது காதல். உஷா யார்? அதே சிவராமன் மாமாவின் வைப்பாட்டி மகள், தாசிக்கு பிறந்தவள். இது சிவராமனுக்கு தெரிய வரும்போது அவர் ராமநாதனுக்கு அறிவுரை சொல்கிறார் – நீ உஷாவை மணந்து கொள்ள விரும்புகிறாயே, வீட்டில் டிபன் சரியில்லை என்றால் கிளப்புக்கு போகலாம், ஆனால் வீடு என்று ஒன்று இருக்க வேண்டும், எனக்கு முறையாகப் பிறந்த பெண் செல்லத்தையே மணந்துகொள், செல்லம் வேண்டாமென்றால் வேறு “நல்ல குலப்பெண்ணாக” மணந்து கொள் என்கிறார்! விழுமியங்கள் எத்தனை மாறி இருக்கின்றன!

சாஸ்திரி எழுதிய டூவா சேர்த்தியா என்ற எளிய கதை புன்னகை வர வைக்கிறது.  ஒப்பந்தக் கல்யாணம் (1945) என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது.

சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர். தி.ஜா. இவர் போன்ற திறமைசாலி அபூர்வம் என்கிறாராம்.

முப்பது நாற்பதுகளுக்கான வணிக எழுத்து என்று மதிப்பிடுகிறேன். இந்த நாவலே கூட கலைமகளில் நாற்பதுகளில் தொடர்கதையாக வந்ததுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:

❌