தாயைத்தின்னி -தில்லை:
ஆசிரியர் குறிப்பு:
கிழக்கிலங்கையை சேர்ந்த தில்லை சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர். . பெண்ணிய செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், ஓவியர், சமூக செயற்பாட்டாளர்,கவிஞர், அரங்கச் செயற்பாட்டாளர், பதிப்பாளர் என்று பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியான இவருடைய முதல் நாவல் இது.
Coming of age story என்பது வெகுசிலருக்கே வெளியில் சொல்வதற்கு சுவாரசியம் மிகுந்ததாக அமைகிறது. அதிகம் வெளியில் அலையும் ஆண்பிள்ளைகளுக்கே அது சொற்பம் எனும் போது பெண்பிள்ளைகளுக்கு இன்னும் அரிது.
தாயத்தின்னி தனது கதைகளை முழுமையாகச் சொல்லவில்லை என்று நாவல் முடிகிறது. சொல்லியதைத் தாங்குவதற்கே பலரது மனதுக்கு சக்தி இருக்கப்போவதில்லை.
தமிழகத்தில் இருந்து ஆகமவிதிகள் தெரிந்த சிற்பிகளை இலங்கையில் இந்து கோயில்களுக்குச் சிற்பங்கள் செய்ய அழைப்பது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் மிகக்கட்டுப்பாடான ஊர் ஒன்றில் தமிழகச்சிற்பிக்கும் வேற்றுப்பெண்ணுக்குமான காதல் அவளுக்கு குழந்தையையும் தாளவியலாத துயரத்தையும் தருகின்றது. துயரம் ஒரு தொற்று நோய். அடுத்த தலைமுறையையும் அது இன்னும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் ஒருபோதும் காதலித்திருக்க மாட்டாள்.
யாருக்கு இடையில் பிரச்சனை என்றாலும் பெண்கள் பாதிக்கப்படுவதும் புதிதல்ல. ஆதியில் மனிதன் குழுவாக இடம்பெயர்ந்தபோது கூட அடுத்த குழுவின் ஆண்களைக் கொல்வதில் மட்டும் வெற்றி முடிவதில்லை. பெண்களை சிறைபிடித்தாலே அது முடிவடையும். இவன் தோற்றால் அடுத்தவன் சிறைபிடிப்பான். நாவலில் இது நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. அதே போல் முற்போக்காளன் புத்திசாலிப் பெண்ணுக்கு சுவிஷ் நாட்டில் விரிக்கும் வலை.
ஒரு பெண்ணுக்குள் மூன்று பெண் பிம்பங்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் தாயத்தின்னியே Strong personality. அவளுக்கு நேர்ந்ததில் பாதி வேறு யாருக்கும் நடந்திருந்தாலும் அவர்கள் மீண்டு வந்திருப்பது கடினம்.
தாயத்தின்னி கதாபாத்திரம் கனகச்சிதமாக வடிவெடுத்திருக்கிறது. அதன் காரணம் நாவலை வாசிப்பவருக்குப் புரிபடும். கோவில் தலைவர் விஷயத்தில் மட்டுமல்ல,
ஆதம் காக்கா சம்பவத்திலும் அவள் வாயைத் திறக்காததற்குப் பின்னான முதிர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வகையில் லிலித் பிம்பத்தை விட தில்லை பிம்பத்துடன் அவள் நெருங்கிப் போகிறாள்.
ஐரோப்பாவில் அயல் தேசத்தவரை, குறிப்பாக Brown skin peopleஐ உயரத்தில் இருந்து தான் பார்ப்பார்கள். அது உடல் வளர்ச்சியால் வந்த உயரத்தால் அல்ல. உலகம் முழுக்கக் கொள்ளையடித்தவை, அடிமை வியாபாரம் என்று அவர்களுக்கு ஒற்றுமை இல்லாத நம் முன்னோர்கள் எத்தனையோ வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். லிலித்துக்கும் தில்லைக்குமான உரையாடல்கள், லட்சியவாதிக்கும், இருத்தியலியவாதிக்கும் இடையேயானவை.
தில்லையின் மொழி நேரடியாக இதயத்துக்குள் நுழைகிறது. தாயத்தின்னியின் வலியை வாசகருக்குக் கடத்துவதில் தில்லை வெற்றி பெற்றிருக்கிறார். கதை சொல்லும் யுத்தியிலும், வடிவத்திலும் உறுத்தாத புதுமை இருக்கின்றது. எல்லாவற்றையும் தாண்டி அசைக்க முடியாத நேர்மை இருக்கின்றது. பாதகத்தி-ஒத்தக்கொட்டை உறவைப் பார்த்தும் விளங்காத தாயத்தின்னி, கைமரத்தில் உன்னி உன்னி நகர்வதில் கிடைப்பது பாலியல் சுகம் என்றறியாத தாயத்தின்னி, கண்பெரட்டிக்காளிக்கு இரத்தத்தைத் தொட்டுக் காட்டும் தாயத்தின்னி என்று அவளது அறியாமை அவளை நமக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது. அனுபவம் நிறைந்தவர்கள் கையில் எழுத்துக்கலை இருந்தால் மட்டுமே மாஸ்டர்பீஸ்கள் உருவாகும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. தில்லையால் எப்படி இவ்வளவு நாள் எழுதாமல் இருக்க முடிந்தது? தவறாது, வாங்கி வாசிக்க வேண்டிய நூலாக இதைக் குறித்துக் கொள்ளுங்கள்.
பிரதிக்கு:
தாயதி இலங்கை
இந்தியாவில் பாரதி புத்தகாலயம்
044-2433 2924
முதல்பதிப்பு டிசம்பர் 2024
விலை ரூ.280.