Normal view

Received before yesterday

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா

By:Para
1 June 2025 at 00:30

Pa Raghavan

நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று  ஆண்டுவிழா.

* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;

* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;

* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;

* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;

* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;

* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;

* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.

கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.

வருக.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

தாகூரின் ஓவியங்கள்

தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath.

இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது.

அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

மண்டியிடுங்கள் தந்தையே மொழியாக்கம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.

எஸ்.ரா 100 இணைய நிகழ்வு

நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

யாத்ரிக்

இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது.

மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது.

இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

இணைப்பு :

https://www.youtube.com/watch?v=1vPpUBuXNP0

வரலாற்றின் சாட்சியம்

சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன்.

மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட மரம்

காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது

அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் இதற்கு உதவி செய்தார்.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட ஆல மரத்தடியில் நின்றேன். அந்த மரம் வரலாற்றின் சாட்சியமாக மாறியுள்ளது. அதன் இலைகள் அசையும் போது கடந்தகாலத்தின் கதைகள் உயிர்பெறவே செய்கின்றன. பரக்பூரில் மங்கள் பாண்டே நினைவாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உருவச்சிலை உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தியின் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய, காந்தி படித்துறையும் பரக்பூரில் உள்ளது. கங்கை நதியின் அழகினை படித்துறையில் நின்றபடியே ரசித்தேன்.

••

கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்தில் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் வில்லியம் டேனியல் (1769-1837) வரைந்த அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. அந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் அனுபவம் பரவசமூட்டியது. நண்பர் கோபால்சுவாமி எங்களுடன் வந்திருந்தார். வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பார்வையாளர்கள் பலரும் கையிலும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் நுழைவாயிலில் உள்ளே தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது எனப் பறித்துவிடுகிறார்கள். அவரவர் பெயர் எழுதி பாட்டிலை வெளியே வைத்துவிட்டுப் போய் திரும்ப வரும் போது எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எதற்காக தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று ஒரு பெண் ஆத்திரப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று ஒரு காவலர் விளக்கினார். அந்தப் பெண் தனது பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவர் கண்முன்னே குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிந்தார்.

1784ல் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் இருவரும் ஓவியர்களாக இந்தியாவிற்கு வந்தார்கள். பின்பு வில்லியமின் தம்பி சாமுவேல் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து அவர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் பேரழகானவை.  

இந்த ஓவியங்களின் வண்ணம் மற்றும் துல்லியமான சித்தரிப்பு வியப்பூட்டக்கூடியது. தமிழகத்தின் முக்கிய நிலக்காட்சிகள் மதுரை தஞ்சை நகரக்காட்சிகளை இவர்கள் வரைந்திருக்கிறார்கள்.

தாமஸ் தனது தேவைக்களுக்காகக் கொல்கத்தாவில் ஒரு அச்சுக்கூடத்தை உருவாக்கினார். வில்லியம் நீர்வண்ண ஓவியங்களை வரைந்து வந்தார். இவர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து ஓவியங்களை அச்சிட்டு வெளியிட முனைந்தார்கள்.  கொல்கத்தாவின் பழைய நீதிமன்றம், எழுத்தர்களின் மாளிகை, தேவாலயம். கிளைவ் தெரு உள்ளிட்ட முக்கியமான இடங்களை வரைந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்தார்கள்

மதுரை

இந்தியா முழுவதும் சுற்றிவந்த வில்லியம் தனது பயணவிபரங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு நாட்குறிப்பு வைத்திருந்தார், அதில் அவர்கள் சந்தித்த மக்கள், சென்ற இடங்கள் மற்றும் ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி நிறையத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

டேனியல்ஸ் மார்ச் 29, 1792 அன்று மதராஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தங்களின் தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களுடன் பல்லக்குத் தூக்கிகள். பணியாளர்கள். சுமை தூக்குபவர்கள் என ஒரு குழுவே இணைந்து பயணம் செய்தது. அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி மதுரையை அடைந்தார்கள். மதுரையின் பழைய அரண்மனை மற்றும் தெப்பக்குளம் குளம் உள்ளிட்ட அருகிலுள்ள இடங்களை வரைந்தார்கள். பின்பு ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களைக் கண்டார்கள். அங்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டு பாபநாசம் வரை சென்றார்கள். திரும்பி வந்து தஞ்சை பகுதியினைப் பார்வையிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதே திருச்செங்கோடு கோவிலின் ஓவியம்.

அந்த ஓவியம் கொல்கத்தா விக்டோரியா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவியத்தின் கீழே தரப்பட்ட தகவல் சரியானதாகயில்லை. காலனிய ஆட்சியின் அடையாளமாக உள்ள விக்டோரியா நினைவகத்தினுள் ஆள் உயர கிளைவ் சிலை உள்ளது. மைய மண்டபத்தின் நடுவே விக்டோரியா ராணி சிலை காணப்படுகிறது. பிரம்மாண்டமான இந்த வளாகம் பத்து ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடந்த விதம் பற்றிய புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டேன்.

••

பால்தசார் சோல்வின்ஸ் வரைந்த வங்காள ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியைக் கொல்கத்தாவில் கண்டேன். இதில் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவில் அச்சுத் தயாரிப்பின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான பிரான்சுவா பால்தசார் சோல்வின்ஸ் 1760ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் பிறந்தவர்.

கடல் ஓவியராகப் பயிற்சி பெற்ற சோல்வின்ஸ் 1791-1803 வரை கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். இந்த நாட்களில் இந்தியவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் ஜோன்ஸின் நட்பு உருவானது. அவரது உத்வேகத்தால் தான் கண்ட கேட்ட மனிதர்களை வரைந்திருக்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் அந்தமான் மற்றும் நிகோபார் மக்களையும் நிலப்பரப்பினையும் ஒவியமாக வரைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட தனி ஓவியங்களை தொகுத்து தனிநூலாகவும் வெளியிட்டிருக்கிறார்

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வங்களாத்தின் சமூகக் கட்டமைப்பு. சாதிய படிநிலைகள். ஒடுக்குமுறை, திருவிழா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து இவரது ஓவியங்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தின் அன்றாட வாழ்வையைப் பால்தசார் சோல்வின்ஸ் திறம்பட வரைந்திருக்கிறார். குறிப்பாகக் கிராமியக் கலைகள் மற்றும் கலைஞர்களை அவர் வரைந்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

சோல்வின்ஸ் தான் கேட்டு அறிந்த விஷயங்களை வரையும் போது தவறு செய்திருக்கிறார். அதில் ஒன்று தஞ்சாவூர் ராஜா என ஒருவரை வரைந்திருப்பது. அது ஒரு தவறான சித்தரிப்பு. சரபோஜி மன்னர்கள் பற்றிய தகவலை வைத்துக் கொண்டு அவர் வரைந்திருக்கலாம்.

சோல்வின்ஸின் ஓவியங்களில் காணப்படும் பெண் நடனக் கலைஞர்கள், மிளிர்கிறார்கள். அவரது ஓவியத்தின் பின்னே எழுதப்படாத கதைகள் மறைந்திருக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டு வங்காளத்தில் கணவன் இறந்தவுடன் பெண்களைச் சிதையில் இறங்கச் செய்யும் பழக்கம் இருந்தது. இந்த நிகழ்வை சோல்வின்ஸ் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் சிதைபுக இருக்கும் பெண் முகத்தில் தனக்குச் சதியில் விருப்பமில்லை என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. அதை உணர்ந்தவர்கள் போலப் பெண்ணின் உறவினர்கள் அழுகிறார்கள்.

தனது காலகட்டதை ஆவணப்படுத்தும் விதமாகச் சோல்வின்ஸ் வரைந்த ஓவியங்களை  கண்காட்சியில் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

••

எஸ்.ரா 100 தொடர் நிகழ்வுகள்

எனது நூறு நூல்களுக்கான விமர்சனக்கூட்டங்கள் வாரந்தோறும் இணையத்தில் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் சார்பில் பேராசிரியர் வினோத் இதனை ஒருங்கிணைப்பு செய்கிறார்

இன்றைய நிகழ்வில் ஐந்து நூல்கள் குறித்து உரையாற்றுகிறார்கள்.

விருப்பமான அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்

By:Para
17 May 2025 at 00:30

Pa Raghavan

இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.

நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.

இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால்  ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.

ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.

பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்.  ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

விருது விழா

பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமானநிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கபட்டிருந்த மீரா இன் போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. புதிய மேம்பாலங்களைக் காண முடிந்தது. தொண்ணூறுகளில் பார்த்த டிராம்களைக் காணமுடியவில்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பழைய நினைவாக டிராம் இயக்குகிறார்கள் என்றார் காரோட்டி.

மீரா கோவிலின் மாடியை விருந்தினர் அறையாக மாற்றியிருக்கிறார்கள். சின்னஞ்சிறிய அறைகள். அதில் ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். கோவிலின் மாடியில் தங்கியிருந்தது புதிய அனுபவம். மாலை முழுவதும் பக்திப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நடைப்பயிற்சிக்கு கிளம்பினால் வாசற்கதவைத் திறக்க எவருமில்லை. விடுதிக் காவலர் உறங்கிக் கொண்டிருந்தார். ஏழு மணிக்கு மேல் தான் கதவைத் திறப்பார்கள் என்றார்.

கொல்கத்தாவின் தினசரி வாழ்க்கை மிக மெதுவாக துவங்கக் கூடியது. அதிகாலையில் காபி குடிப்பதற்கு கூட வழியில்லை. சாலையோர தேநீர் கடைகளில் காபி கிடைப்பதில்லை. ஒன்பது மணிக்கு தான் உணவகங்கள் ஆரம்பமாகின்றன. அங்கும் அவல் உப்புமா, பூரி தவிர வேறு எதுவுமில்லை. கொல்கத்தாவின் வெயில் முறுகிய வெல்லப்பாகு போலிருந்தது. நிறைய பூங்காங்கள் உள்ள நகரம். ஆயினும் உஷ்ணம் மிக அதிகமாகவே இருந்தது.

மே 1 மாலை ஷேக்ஸ்பியர் வீதியில் இருந்த பாரதிய பாஷா பரிஷத்திற்குச் சொந்தமான அரங்கில் விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.

பிரசிடென்சி பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் அனுராதா லோகியா விருது வழங்கினார். தலைமை உரை, சிறப்புரை, அறிவிப்புகள் என யாவும் பெங்காலி மற்றும் இந்தியில் நடைபெற்றன. எவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை. எனது ஏற்புரையைத் தமிழில் வழங்கினேன். உரையின் ஆங்கில வடிவத்தை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை அச்சிட்டுப் பகிரவில்லை. ஏற்புரை என்பதால் மூன்று நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் 'கோபுரம் தாங்கி' சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.

லாஸ்லோவின் நூலகம்

“தி ப்ரூடலிஸ்ட்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி லாஸ்லோ டோத் நூலகம் ஒன்றை வடிவமைப்பதாகும். அதுவும் வாசிப்பதற்கு ஏற்ற விளக்குடன் கூடிய நாற்காலி ஒன்றையும் வடிவமைக்கிறான்.

தொழிலதிபர் ஹாரிசன் லீ வான் ப்யூரனுக்காக அந்த நூலகத்தை வடிவமைக்கும்படி அவரது மகன் லாஸ்லோவை அழைக்கிறான்.

லாஸ்லோ டோத் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கட்டிடக்கலை நிபுணர். மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆகவே நூலகத்தை மறுஉருவாக்கம் செய்யும் போது அதைத் தனது கனவின் வடிவமாக மாற்ற முனைகிறார்.

நூலகம் என்பது புத்தகங்கள் அடுக்கபட்ட இடமோ, வாசிப்பு அறையோ இல்லை. அது ஒரு தனித்துவமிக்க வெளி. வாசிப்பு என்பதை உன்னதமாக நிகழ்வாக மாற்ற முயலுகிறார். வெளிச்சம் பாயும் நாடகமேடையில் தனித்து அமர்ந்துள்ள கதாபாத்திரம் போல வாசிப்பவரை உணர வைக்கிறார்.

உயர்ந்த கூரை, புத்தங்களை அடுக்குவதற்காக அவர் உருவாக்கிய முறை, சுவர்களின் வண்ணம். திரைச்சீலை என யாவும் நேர்த்தியாக உருவாக்கபடுகின்றன . ஆனால் ஹாரிசனுக்கு அந்த வடிவமைப்பு பிடிக்கவில்லை. அதில் தங்கள் குடும்பப் பெருமை வெளிப்படவில்லை என நினைக்கிறான். நூலகக் குவிமாடக் கண்ணாடி கிழே விழுந்து உடைவது அவர்கள் அதிகாரத்தின் சிதறலேயாகும். இதன் காரணமாக அவர்களுக்குள் கருத்துமோதல் உருவாகிறது. லாஸ்லோ வெளியேற்றப்படுகிறார்.

லாஸ்லோவின் அழகியல் சொற்களுக்கு அப்பாற்பட்டது. தான் உருவாக்கிய கட்டிடம் தனது அழகைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைப்பதில்லை. மாறாக உண்மையான அழகை உணரச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்.

மானசீகமாக லாஸ்லோ உருவாக்கிய நாற்காலியில் அமர்ந்து கையில் விருப்பமான புத்தகம் ஒன்றை வைத்து படிப்பது போல கற்பனை செய்து கொள்கிறேன். கலை தரும் மகிழ்ச்சிக்கு நிகரே கிடையாது.

••

நாவல்வாசிகள் 4

இந்து தமிழ் திசை நாளிதழில் ஞாயிறு தோறும் வெளியாகிவரும் நாவல்வாசிகள் தொடரின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது

காலச்சுவடு இதழில்

இம்மாத காலச்சுவடு இதழில் மறைந்த முத்துகாமிக்ஸ் நிறுவனர் சௌந்திரபாண்டியன் குறித்து எழுதியிருக்கிறேன்

கொல்கத்தா தமிழ் சங்கவிழா

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் மே 3 சனிக்கிழமை மாலை ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் திரு. சி.முருகன் ஐஏஎஸ் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் "சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”"

கொல்கத்தா /விருது விழா

பாரதிய பாஷா பரிஷத் விருது வழங்கும் விழா கொல்கத்தாவில் மே 1 வியாழன் மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் முப்பது மதியம் கொல்கத்தா செல்கிறேன்.

மூன்று நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருப்பேன்.

கொல்கத்தாவில் வசிக்கும் வாசகர்கள் / நண்பர்கள் சந்திக்க விரும்பினால் 9600034659 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை சார்ந்து இரண்டு நாடகங்களை எழுதியிருக்கிறேன்.

இரண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறப்பான வரவேற்பும் கிடைத்தது.

இத்தோடு அவரது Notes from Underground யை அடிப்படையாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறேன். அந்த நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வெளி ரங்கராஜன் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த மூன்று நாடகங்களையும் தொகுத்து ஒரே நூலாகத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடவுள்ளது.

அதன் தலைப்பு தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்“

சலுகை வாரம்

By:Para
24 April 2025 at 05:35

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

ஜெயமோகன் பிறந்த நாள்

எனது அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் வகையிலான அவரது படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய செயல்பாட்டிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

❌