Normal view

Received before yesterday

அசோகம்

7 February 2025 at 19:16
போன வருடத்தின் டைரியை புரட்டிக்கொண்டிருந்தேன். பிப்ரவரி 8, 2024, அன்று எழுதிய குறிப்பு கண்ணில் தென்பட்டது. ‘அசோக மரம் பூத்திருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன். இன்று வளாக எல்லைகளில் நடப்படும் நெடிய அலங்கார மரத்தைத்தான் அசோகா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. நீளமான, நெளிந்த விளிம்புகளுடைய இலைகள் கொண்ட மரம். ஆனால் செவ்வியல் பழமை கொண்ட அசோகமரம் … Continue reading

சங்கரநாராயணனின் வாழ்த்து

7 June 2024 at 08:53

படங்கள்: இரா.விஸ்வநாதன்


ராஜசிம்ம பல்லவேச்சுரம் - கும்பாபிஷேகம் :
படம் - இரா. விஸ்வநாதன் 





2017 ஜூன் ஐந்தாம் நாள் காலை, காஞ்சிபுரம் சென்று ராஜசிம்மபல்லவேஸ்வரத்து கும்பாபிஷேகம் காணலாம் என்ற எண்ணம். மதியம் 12 மணிக்கு என்று தெரிந்து, டிவியில் அமெரிக்க கூடைப்பந்து போட்டியை பார்த்துவிட்டு 9 மணிக்கு கோடம்பாகத்தில் பஸ் ஏறினேன். போரூர் சென்று அங்கிருந்து ஏசி (குளிர்சாதன) பஸ்ஸில் போக திட்டம். (இந்த வியாசம் முதிலில் முகநூலில் எழுதியப் பதிவு. இன்று ஜூன் 7 2024ல் இங்கே வலைப்பூவில் பிரதி.).

போரூரில் ஒரு மூடிய கடையின்  வாசற்பந்தலின் நிழலின் அருமை வெயலில் தெரிந்தது. காத்து காத்து நின்றாது தான் மிச்சம். பூந்தமல்லிக்கு செல்லும் பல பஸ்களும் திருப்பெரும்புதூருக்கும் திருவள்ளூரூக்கும் செல்லும் சில பஸ்களும் வந்தனவே தவிற, தி நகரில் புரப்பட்டு காஞ்சிக்கு செல்லும் ஏசி பஸ் ஒன்றும் வரவில்லை. அசரீரி விசையான கைப்பேசியில் நண்பர் விசுவநாதன் காஞ்சியை தான் கிட்டத்தட்ட சேர்ந்துவிட்டதாக சொன்னார் (அவர் பகிர்ந்த படங்கள் மேலே). நான் காரில் வருகிறேனா என்றும் கேட்டார். போரூர் அடைந்த போது 9.30 இருக்கும். 10.15 ஆனதும் கொஞ்சம் பொறுமை இழந்தேன். நடு நடுவே நண்பர்கள் பலரும் கைப்பேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அன்பு தென்றலிலும் வாட்சாப்பிலும் மெசஞ்சரிலும் வந்த வாழ்த்து மழையிலும் நனைந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஒன்று வரவே அங்கிருந்து காஞ்சிக்கு பஸ் பிடித்து போகலாம் என்றெண்ணி ஏறினேன். கண்டக்டரிடம் காஞ்சிபுரம் ஏசி பஸ் சேவை நிறுத்தப்பட்டதா என கேட்க, போரூர்ல் நிரைய பஸ் வராது, பூந்தமல்லியிலிருந்து நிரைய பஸ் இருக்கு என்று அவர் பொத்தாம் பொதுவாக சொல்ல, எதிரில் காஞ்சியிலுருந்து தியாகராய நகர் செல்லும் ஏசி பஸ் தெரிந்தது. ஆஹா, பின்னாடியே ஏசி பஸ் வந்து நாம் ஏறிய பஸ்ஸை தாண்டிவிடும் என்று நினைத்து முற்போக்கு சித்தம் துறந்து பின் ஜன்னல் வழியே ஆந்தைப்போல் கண்விரித்து பின் தொடரும் நிழலின் குரலை, மன்னிக்க, பின் தொடரும் பஸ்ஸின் பலகை வட்டெழுத்தை வாசித்தே பயணித்தேன். பூந்தமல்லியில் ஆமை வேக நெருக்கடி. திருக்கச்சிநம்பியின் நமட்டு சிரிப்பு கேட்டது போல் ஒரு லேசான பிரமை. 11 மணி ஆகிவிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் ஏசி பஸ்ஸும் வரவில்லை, பூந்தமல்லியிலிருந்தும் காஞ்சிக்கு எந்த பஸ்ஸும் புரப்படவில்லை. இனிமேல் சென்றால் 12 மணி கும்பாபிஷேகத்தை நிச்சயம் காணமுடியாது என்று வருந்தினேன்.

அசரீரியாக வேறு ஒரு குரல் கேட்டது போலிருந்தது. செல்போனில் அல்ல,

உள்மனதில்.

ஆதி முனிவர் கன்வரோ, ஆதி மன்னர் துஷ்யந்தரோ அசரீரி குரல் கேட்டால் ஆச்சரயமில்லை. அது புண்ணியம் நிரைந்த க்ருத யுகம். யாரிந்த குரல் என்றால் பல்லவேசுவரன் கைலாசநாதனே பேசினான்.

அவன் கூறியதாவது: சிறுபிள்ளாய் (youth என்று பொருள்), இன்று நீ கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளியில் நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தை காண நினைக்கிறாய். ஆனால் என்னை என்றும் எந்தை எந்தை என்றழைக்கும் ஒரு பித்தன் அவ்வூரிலேயே இருந்தும் இந்த கும்பாபிஷேகத்தை காண இயலாமல், தன் சொல்லால் பக்தியால் சித்ததால் பாடலால் நடனத்தால் பணிவால் பணியால் பண்பால் அன்பால் அறத்தால் அறிவால் ஆற்றலால் தெய்வத்தமிழால் வேதமொழியால் விளக்கால் விளக்கத்தால் வழக்கால் வழுக்காமல் வழிப்பட்டு வருகிறான். அவன் மனக்கோவிலில் தான் எனக்கின்று மகத்தான கும்பாபிஷேகம். அதைக்காணும் அகக்கண் உனக்கில்லை. அதனால் அத்யந்தகாமன் எழுப்பிய கற்றளிக்கு நடக்கும் கும்பாபிஷேகத்தையும் நீ காணவேண்டாம். 

எனக்கு எப்படி இருக்கும்?

கைலாசநாதா! காஞ்சி மகாமணி! தர்மநித்யனே! சங்கரநாராயணுனுக்கு தொழில் செய்யவேண்டியதால் அவரால் உன் கும்பாபிஷேகம் பார்க்க முடியவில்லை? எனக்கோ எந்த வேலையும் இல்லை. என்னை தடுப்பது என்ன தர்மமா?, என்றேன்.

நாற்பத்தி எட்டு வயதான உன்னை சிற்பிள்ளாய் என்றேன். அது மட்டும் தர்ம்மா? என்றார் ஈசன்.

லலிதவிலாசா! எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும், என்று முனக, பல்லவ சிற்ப்ம் போல் சிரித்தான் பல்லவாதித்ய பரமேசன்.

காலக்கோபா! காரணகோபா! என் மேல் என்ன கோபம்? என்று தொடர...

கால தாமதா கோபா! உன் மேல் எனக்கேன் கோபம்?

நான் காஞ்சி போகிறேன் காஞ்சி போகிறேன் என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டேன், அது பொய்யாகிவிடுமா? இஷ்டவர்ஷனே! ரிஷபலாஞ்சனா! அதை நீ அனுமதிக்கலாமா?

அது பொய்யாகவில்லை. நீ வெயலில் நன்றாக காஞ்சி போய்விட்டாய் என்றான் அர்த்தபதி. எனக்கு இவ்வுலகில் ஈடில்லாத அந்த பக்தன் சங்கரநாராயணன் என்ன செய்கிறான் தெரியுமா? இன்று என்னைப் பாடாமல் உன்னை பாடுகின்றான், என்றார்

இது எப்படி நடக்கும் என்று ஒரு சின்னசம்சயம் தோன்றிற்று. சின்னசம்சயன் மறைந்தான்.


படம்: விஜய் பட்

அசரீரி விசை மணி ஒலித்தது. சங்கரநாராயணன் இயற்றி முகநூலில் பகிர்ந்த கவிதையை நண்பர் விகே ஸ்ரீநிவாசன் வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார்.

இதோ அந்த தடுத்தாட்கொண்ட கவிதை.

கோபுவுக்கு ஒரு வாழ்த்து..

 

நாவின் கிழத்தி நற்பயனோங்க

பாவின் முறைமை பணியொடு சிறக்க

ஓங்கு கலைகளும் ஒருங்க வாய்த்து

தாங்கும் தடவென தாரணி தன்னில்

அரங்கரத்தினத்துக் கருமகனாகி

சுரங்கமெனவே சூழ்கலைக்கிடமாய்

பல்லவர் கலையும் பாவலர் நிலையும்

எல்லையில் வானியல் இயலும் சிறக்க

தமிழ்பாரம்பரியத் தகவுடை நிலையின்

அமிழ்தாய்த் திகழ்ந்து ஆய்வுகள் சிறக்க

இராசசிம்மனெனும் ஈடில் அரசன்

பராவிய எழுத்தின் பாங்கறி நிலையும்

வராகமிகிரர் வரைந்தளித்திட்ட

விராவும் வானியல் விழைந்த திறமும்

கலைபல மலிய கவித்திறம் பொலிய

அலையென புகழும் அடர்ந்த விதமும்

எந்தனைப் போலே இத்தரை மக்கள்

விந்தை யடைந்து விழித்திரை விரிக்க

சிந்தும் புன்னகை சீரெனத் திகழ

முந்தும் புகழோ முகிலையும் கிழிக்க

என்றும் இளமை எழிலொடு திகழும்

மன்றம் பலகாண் மாண்புடை கோபா

நன்றென நாட்கள் நலம்பல பயக்க

என்றும் சிறப்பொடு இனிதென வாழி....

 

மோகனச் சுவை

31 August 2023 at 17:36

தியாகராய நகர் தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அரங்கில் இந்திரா பார்த்தசாரதிசிலப்பதிகாரத்தை பற்றி பேசிய நாள். கடைசியில் அவர் மேடை இறங்கி ரசிகர்களை சந்தித்தப்போது, ஒருவர் “என்னை தெரிகிறதா?” என்று கேட்டார். பார்த்தசாரதி தயங்க, அவர் “சார்வாகன்” என்று லேசாக சிரித்துக்கொண்டே தன் பெயரை தெரிவித்தார். அது அவரது இயற்பெயர் அல்ல, சிறுகதைகள் எழுத சூட்டிக்கொண்ட புனைப்பெயர். தன்னோடு வந்திருந்த தன் சகதோரரை அறிமுகம் செய்தார்.

சிலப்பதிகார சிக்கல்கள்- இந்திரா பார்த்தசாரதி உரை
சார்வாகன் முன்வரிசை,
மோகன் ஹரிஹரன் நடு வரிசை
மியூசிக் கண்ணன் பின் வரிசை

தம்பி கொஞ்சம் நடிகர் நாசர் சாயல். அப்பொழுது அவர் பெயர் நினைவில்லை; ஆனால அந்த ஆண்டு இறுதியில் த.ப.ஆவின் கலையுலாவில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து, பேரா சாமிநாதனிடம் சில தகவல்களை கேட்டுக்கொண்டார். அக்டோபாரில் கலையுலா உரைகள் தொடங்கியபோது அமெரிக்காவில் இருந்து ஈமெயில் அனுப்பி, தன் உதவியாளரை (அவர் பெயரும் சாமிநாதன்) அனுப்பி வைத்தார். வாராவாரம் பினாமியாக பாவம் அந்த சாமிநாதன் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

ஓரிரண்டு மாதம் கழித்து நேரிலேயே வந்தார் சார்வாகனின் தம்பி. தன் பெயர் ஹரிஹரன் என்றார். மெதுவாக, ஹரிஹரன் என்பது தனது தந்தையின் பெயர், ஆனால் தானும் தன் மூன்று சகோதரர்களும் தங்கள் இயற்பெயரை சொல்லாமல் தந்தை பெயரான ஹரிஹரன் என்றே அறிமுகம் செய்வது வழக்கம் என்றார். என் பெயர் மோகன், நான் ஒரு ஆர்கிடெக்ட் என்றார்; சகோதரர் சார்வாகன் என்றார். அவரை இந்திரா பார்த்தசாரதி கூட்டத்தில் பார்த்த நினைவிருக்கிறது என்றேன். திருநெல்வேலி சுற்றியுள்ள தென்பாண்டி தலங்களுக்கு அந்த ஆண்டு கலையுலா. ஒரு சில சொதப்பல்களாயினும் மகிழ்வோடு கலந்துகொண்டார். அடுத்த பல ஆண்டு கலையுலாவிலும் கலந்துகொண்டார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகளில் மாதாமாதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகநூலில் நட்பாயினோம்.

கூவம் நதிக்கரையில்
செஞ்சி பெருமாள் கோவில்

எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தொடங்கிய கூவம் கலாச்சார வரைப்பட திட்டத்தில் கூவம் நதிக்கரை வரலாற்று சின்னங்களை தேடி பயணங்கள் தொடங்க, அதிலும் மோகன் ஹரிஹரன் பங்கு கொண்டார். நான் ஒரு மாதம் அமெரிக்க பயணம் செல்வதை கேட்டு, என் மகன் மருமகள் லாஸ் ஏஞ்ஜலீசில் உள்ளனர்; என் மகள் மருகன் பிலடல்பியாவில் உள்ளனர், அங்கே சென்றால் நிச்சயம் அவர்களை பார்க்கவும் என்று உபசரித்தார். ஆறு ஏழு மாதங்கள் பழக்கத்தில் அவருடைய நட்புணர்வும் விருந்தோம்பலும் வியக்கவைத்தது. லாஸ் ஏஞ்சலீசில் அவர் மகனை பார்க்க இயலவில்லை. ஆனால் அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டனுக்கு சென்று என் உறவினன் ராமாநுஜனுடன் ஒரு வாரம் நானும் என் தம்பி ஜயராமனும் தங்கினோம். பிலடெல்பியாவிற்கு சென்று பெஞ்சமின் பிராங்கிளின் அருங்காட்சியகம் பார்க்கவேண்டும் நியூ ஜெர்சிக்கு சென்று தாமஸ் எடிசனின் ஆராய்ச்சிசாலை பார்க்கவேண்டும் என்று எனக்கு அந்த சமீபத்தில் ஆர்வம் பெரிதும் வளந்திருந்தது. 1990களில் அமெரிக்காவில் வாழ்ந்த போதே கொஞ்சம் ஆசை; ஆனால அப்பொழுது விடுமுறை கிடைத்தால் உறவினர்களை பார்க்கும் ஆசையும் இயற்கை காட்சிகளை பார்க்கும் ஆசையும் அதிகம் இருந்ததால் அங்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு திரும்பிய பின் கலை இலக்கிய வரலாற்றின் மீது வந்த ஆர்வம் போல் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு மீதும் ஆர்வம் சிந்தை வனத்தில் அக்னிக்குஞ்சாய் தணல் எரிந்தது. பிலடெல்பியாவிக்கு ஆர்த்தி அருண் இல்லத்திற்கே அன்புடன் வரவழைத்தனர். அவர்கள் சுட்டி குழந்தைகளின் துடிப்போடு, ஒரு நாள் பெஞ்சமின் பிராங்கிளின் வாழ்ந்த இல்லத்தையும் அவருடை அறிவியல் படைப்புகளையும் பார்த்தோம்.

பிலடெல்பியா - 2015ல் ஆர்த்தி அருண் குழந்தைகளோடு
நான், ஜெயராம், ராமானுஜன்  

முதல் நாள் இரவு அவர்கள் இல்லத்தில் விருந்து. தந்தை மோகன் வரைந்த ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன! விசித்திரம் என்னவென்றால் திருவான்மியூரில் உள்ள மோகன் சித்ரா தம்பதியினர் இல்லத்துக்கு செல்வதற்கு முன்பே பிலடெல்பியாவில் உள்ள ஆர்த்தி அருண் இல்லதிற்கு நான் சென்றதே.

இந்தியாவிற்கு வந்த பின் தானும் தன் மனைவியும் எகிப்து சுற்றுலா பயணம்  செல்வதாக கூறினார். என்னையும் அழைத்தார். போக ஆசை தான். ஆனால் ஒரு மாத அமெரிக்கப் பயணத்திற்கு பின் என் பயண ஆவல் குறைந்திருந்தது. ஆனால் தயக்கத்துடன் அழைப்பை மறுத்துவிட்டேன். பெரிய இழப்பாக இன்று தோன்றுகிறது. கூவம் பயணங்களிலும் பின்னர் அடையாறு பயணங்களிலும் சந்தித்துக்கொண்டோம். சார்வாகனோடு ஒரு சந்திப்புக்கு அழைத்தார், அதற்கு செல்ல முடியவில்லை; மற்றொரு இழப்பு.

தான் பிறந்த ஆரணிஎன்ற ஊரைப்பற்றி நவம்பரில் த.ப.அ-வில் மோகன் ஹரிஹரன் ஒரு உரையாற்றினார். டிசம்பர் மாதம் நடந்த பேச்சுக்கச்சேரியில் கலந்து கொண்டு மிகவும் ரசித்தார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாய் அளித்தார்.

ஆர்கிடெக்ட் ஸ்ரீநிவாசன் என்று தன் குருநாதரை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். தமிழ்நாட்டில் பல சினிமா அரங்ககளை வடிவமைத்தவர் அந்த ஸ்ரீநிவாசன். சவீதா பலகலைகழகத்து நிறுவனர் மற்றும் சான்சிலர் வீரையன் அவர்களோடு மோகன் அவர்களுக்கு நாற்பது ஆண்டு நட்பு. வீரையனின் மகளே, டாக்டர் சவீதா. ஸ்ரீநிவாசனின் பொதுப்பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்திய மோகன், சவீதா கல்வி நிறுவனங்கள் சாதனையாளர்களை கௌரவிக்க நடத்திய விழாவில், குருநாதர் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சிறப்பு விருது வழங்க சிபாரிசு செய்தார். சான்சிலர் வீரையன் அந்த ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

அவர்கள் “தி பியூப்பில்” என்ற ஒரு பள்ளிக்கூடத்தையும் நடத்துகின்றனர். அதற்கு ஆர்க்கிடெக் மோகன் ஹரிஹரன் தான். அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க, அதன் கட்டுமானத்தின் பல பிம்பங்களை விளக்க ஒரு கட்டிட உலா நடத்தினார்; மிகச்சிறப்பான அனுபவம். அரைகளுக்குள்ளே வரும் இயற்கை வெளிச்சத்திலிருந்து, வெப்பத்தணிக்கைக்கு ஏற்ற செங்கல், குழந்தைகளின் மனம் கவரும் வண்ணங்கள், ஓவியங்கள் சித்திரங்கள், என்று பல சித்தாந்தங்கள் மிளிர்ந்த கலை. த.ப.அ மற்றும் அது போன்ற கலை மரபு பேச்சாளர்கள் சவீதா பள்ளி மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சிபாரிசு செய்தார். டாக்டர் சவீதா அவர்களே இதை நிறைவேற்றினார். பேராசிரியர் சாமிநாதன், பத்ரி சேஷாத்ரி, நான், மற்றும் பல கலை ஆர்வலர்கள்  பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினோம்.


பியூப்பில் பள்ளியில் மோகன் ஹரிஹரன் விளக்கம்

பியுப்பில் பள்ளியின் செங்கல் கட்டுமானமும் 
நீச்சல் குளமும்

2017ல் பியுப்பில் பள்ளி ஆண்டு விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். நான் மயிலை சி.ஐ.டி காலனி தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்தப்போது என் பெற்றோர் சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டனர். அந்த கௌரவம் எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. சவீதா கல்லூரியோடும் இதனால் தொடர்பு ஏற்பட்டது. சவீதா பொறியியல் கல்லூரி இயக்குனர் மருத்துவர் ராஜேஷ், டாக்டர் சவீதாவின் கணவர். அவர்களது அழைப்பில் முதலாமாண்டு இஞ்சினியரிங் மாணவர்களின் ஓரியண்டேஷன் விழாவில் உரையாற்றினேன்.

இதற்குள் வராகமிகிரன் அறிவியல் மன்றம் தொடங்கியதால், கட்டுமான கலை பற்றி மோகன் அவர்களை உரையாற்ற அழைத்தோம். சிறப்பாக உரையாற்றினார். அவரது மற்றொரு மூத்த சகோதரர் கர்ணல் ரமணி ஹரிஹரன் கூட்டத்திற்கு வந்திருந்தார். ராணுவ உளவுத்தொழில் பற்றி  தான் ஒரு உரையாற்ற தயார் என்றார்; பின்னர் தமிழிலேயே உரையளித்தார். இளைய சகோதரர் சிவகுமார் ஹரிஹரன் த.ப.அ-வின் சாஞ்சி-மத்திய பிரதேச கலையுலாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் அவர் நிர்வகிக்கும் பாபாஜி பள்ளிக்கூடத்தில் என்னை பேச அழைத்தார். இப்படி அந்த குடும்பத்தோடு நீளமாக அகலமாக உறவு வளர்ந்தது.

வராகமிகிரன் அறிவியல் மன்றத்தில் நாங்கள் நடத்திய இந்திய வானியல் கணித வகுப்பிற்கு, டாக்டர் ராஜேஷ், டாக்டர் சவீதா, இரு மகள்களோடு வந்து சேர்ந்துகொண்டனர். ஆடிப்போய்விட்டேன். அடிக்கடி மயிலையில் நடக்கும் த.ப.அ நிகழ்வுகளுக்கும் கோட்டூர்புரத்தில் நடந்த வ.அ.ம நிகழ்வுகளுக்கும் அவர்கள் வருவதுண்டு. கல்வியிலும் கலையிலும் மரபிலும் அவர்களுக்குறிய ஆர்வம் அசாத்தியம். இவ்வார்வத்திற்கு மோகன் ஹரிஹரன் ஒரு முக்கிய தூண்டுகோள்.

சவீதா கல்லூரி வளாகத்தில் ஒரு முருகன் கோயில் கட்டினர். சிலைகளையும் மாடியில் உள்ள சிற்றாலயங்களையும் ஸ்தபதிகள் செய்தனர். ஆனால் கோயில் வளாகத்திற்கு மோகன் தான் ஆர்க்கிடெகட். கும்பாபிஷேகத்திற்கு முன் அவர் தலைமையில் ஒரு உலா நடத்தினார். அருகே கட்டிவந்த புதிய மருத்துவ வளாகமும் அவரது கைவண்ணம். அதையும் பார்த்து களித்தோம். 

கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட கல்லூரிகள் வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் தொடங்காமல் டிசம்பர் மாதம் தொடங்கியபோது. இந்திய வானியல் கணித பாடத்தை ஒரு கோர்ஸாக அவர்கள் சவீதா பொறியியல் கல்லூரியில் நடத்த பேராசிரியர் மணிமாறன் வழியாக அழைப்பு விடுத்தனர். அவர்களின் வர்புறுத்தலில் இன்வென்ஷன்ஸ் அண்டு டிஸ்கவரீஸ் என்று ஒரு பாடத்தையும் இணையம் வழியாக இரண்டு செமஸ்டரும், 2021ல் ஊரடங்கு விலகிய பின் நேரே கல்லூரி வளாகம் சென்று நடத்தி வருகிறேன்.

இந்திரா பார்த்தசாரதி உரைக்கு வந்த மோகன் ஹரிஹரன் வழியாக வேலைவெட்டியாற்ற நான் மீண்டும் வாரம் ஒரு நாள் வேலை செய்யும் நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

மோகன் சித்ரா தம்பதியர் சதாபிஷேகம் -
நண்பர்கள் உமையாள் சிவசங்கர் பாபுவுடன் நானும்

மோகன் அவர்களின் சித்திரங்கள்

சமீபத்தில் மோகன் சித்ராவின் மகன் பிருத்வி மகள் ஆர்த்தி மற்றும் குடும்பத்தினர் சென்னைக்கு வந்து அவர்களது சதாபிஷேகமும் ஐம்பதாண்டு கல்யாண வாழ்க்கையும் சேர்த்து கொண்டாடும் வகையில் ஒரு விழா நடத்தினர். என்னையும் தன் நெருங்கிய நண்பர்களில் ஒன்றாய் அழைத்தார்கள். வாழ்வில் அமைந்த பாக்கியங்களில் இவர்களது நட்பு, அன்பு, அக்கறை, உபசரிப்பு, ஆசிர்வாதம் எல்லாம் சேர்க்கை.

ஆகஸ்து முப்பது மோகன் ஹரிஹரனின் பிறந்தநாள்.

பல்லாண்டு பல்லாண்டு !!

சொந்த கதை பதிவுகள்

கிளிவாழை கவிதைகள்

❌