Normal view

Received before yesterday

மாறிவரும் பாடத்திட்டங்களும் மாறாத தேர்வுமுறைகளும்!!

2 May 2025 at 12:22
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன?  மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது?! என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கே மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன. கல்வியில் நவீனமயமாக்கம் கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. கல்விக் கொள்கைகள் மாற்றம் அடையும்போது, அதற்கு ஏற்றாற்போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது.  கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதியபுதிய கலை அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு […]

Source

நிற்க கல்விக்கு தக

 கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது.

கல்வி கற்பது, திறனை வளர்த்துக் கொள்வது போன்றவை எல்லாம் ஏன் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருக்கப் போகிறது? அல்லது வணிகம் என்பதை மட்டுமே நம்பும் சமூகம், எப்படி சமுதாயத்தை சீர்கேடாக்குகிறது? இது போன்ற அடிப்படை பிரக்ஞை எதுவுமில்லாமல், வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எதையாவது உருட்டி பிரட்டி கருத்துரைக்க வேண்டும் என்கிற அகநெருக்கடி ஏன் உண்டாகிறது?

JSTOR போன்ற தளங்களில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீடாக எழுதிக் குவிக்கப்படும் கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். காந்தி ஏன் குடியை எதிர்த்தார் என்பதை காந்தியின் அத்தனை எழுத்துகளிலும் இருந்து புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஒரு மேல்நாட்டுக்காரர் திரிபுவாதமாக எழுதி வைத்திருப்பதை அப்படியே உருவி எடுத்து தமிழ்ச்சூழலில் உலவவிடுவது போன்றவை அறிவு செயல்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானவை.


நமது சமூகத்தின் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளனவா? மிக அதிக மனித வளம் கொண்ட நாட்டில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும், அதற்கு மேல் தரமான உயர்கல்வியும் அளிக்கும் சிஸ்டம் சாமானியமாக உருவாக்கப் படுவதில்லை. ஏகப்பட்ட கருத்து விவாதங்களின் மீது, கற்க வேண்டிய கல்வி வரையறுக்கப்பட்டு, மொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த திரளின் மீதான அதன் தாக்கத்தை எடைபோட்டு, இந்த கல்வித்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் போக்கில் பல குறைபாடுகள் விளைந்து கொண்டேதான் இருக்கும். அவற்றை சீர்படுத்தி செப்பனிடுவதும் நமது பொறுப்புதான்.
மாறாக, வணிகம் மட்டுமே நோக்காக கொண்டு செயல்படும் சில சமூக்கத்தினரை உதாரணமாக காட்டி, 'அதுதான் உயர்ந்தது' என்று அடித்து விடுவதெல்லாம் அறிவுச்செயலுக்கு அடாதது.
வணிகம் மட்டுமே நோக்காக கொண்டவருடைய பார்வையில், இலாபம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். சுரண்டல், வன்முறை, பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்க்கும் தடித்தனம், காரியம் சாதிக்க யாரையும் காவுகொடுக்கும் அடாவடித்தனம், சமூக சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாதிருத்தல் என பல எதிர்மறை குணங்களை, அதன் ஊறுகள் தெரியாமலே தன்னகத்தே கொண்டிருக்கும் அவலம் நிகழ்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உண்டு.
வள்ளுவரின் வாக்கில் சொல்வதானால், "கற்க வேண்டியவற்றை குறையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்'. இதில் 'காசு பணம் சம்பாதிப்பதும்' உள்ளடக்கம்தானேத் தவிர, அது மட்டுமே 'கற்பவை' அல்ல. ஒரு குடிமைச் சமூகத்திற்கு தேவையான பரந்துபட்ட கல்வியைத்தான் வள்ளுவர் 'கற்பவை' எனக் குறிப்பிடுகிறார்.
அரசியல் வெளியில், சிறந்த ஜனநாயக முறை என்பது மிகவும் சர்ச்சைகள் கொண்ட, கருத்து மோதல்களுக்கு பரந்த இடமளிக்கக் கூடிய, கட்டுபாடான முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி கேள்விக்குட்படுத்தும் மக்கள் செயல்பாடுகள் எல்லாம் உள்ளடக்கியது. ஜனநாயக முறையின் திறனுக்கு, தீர்க்கமான அளவுகள் இல்லை.
ஆனால், ஜனநாயக முறைதான் நமது குடிமை அமைப்பிற்கு, குறைந்த ஊறுகளை விளைவிக்கும் சிறந்த அரசியல் முறை.
அது போலதான், வெறும் வணிக இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட இனக்குழு செயல்பாடுகளைக் காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய சீரான கல்விமுறைதான் சமூகத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.
நான் கற்ற கல்வியோ, பெற்ற செல்வமோ, அறிவுச்சமூகத்தில் வெறும் அடையாளங்கள்தான். அந்த கல்வியின் வழியே நான் என்னை நடத்திக் கொள்ளும் முறையே என் தகுதியை தீர்மானிக்கின்றது.
அப்படியல்லாது, வணிக இலாபங்களை புகழ்ந்தும், அறிவு செயல்பாட்டை இகழ்ந்தும் அடையாளப்படுத்துமானால், அந்த சமூகம் எனக்கானதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எவருக்கானதுமல்ல.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

கிஷ்கிந்தா காண்டம் – நினைவெனும் இருட்குகையின் இரகசிய வெளிச்சம்

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வனப்பகுதியை ஒட்டி வாழும் குடும்பம் ஒன்றின் கதை. ஒவ்வொன்றிலும் கச்சிதம் எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அப்பு பிள்ளா (விஜயராகவன்). அவருடைய மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). மனைவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன மகனும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் அஜய் சந்திரன். அவருடைய வாழ்வில் புது நம்பிக்கையாக மறுமணம் நிகழ்கிறது. அவருடைய குடும்பத்தில் நம்பிக்கையும், கனிவும் ததும்ப கலக்க முயல்கிறார் மனைவி அபர்ணா (அபர்ணா பாலமுரளி).  

வனத்தை ஒட்டிய அவர்கள் வீட்டைச்சுற்றி குரங்குகளின் நடமாட்டம்.  திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் கிடைக்கிறது. அப்பு பிள்ளாவின் துப்பாக்கி காணாமல் போனது தெரிய வருகிறது. அப்பு பிள்ளாவிற்கு ஞாபக மறதி இருப்பது படிப்படியாக தெளிவாகிறது. அவர் நினைவில் இருப்பது என்ன, அவர் மறந்துவிட்டது என்ன என்பது இருட்குகை. அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களின் உலகம் அது.

ஏன் துப்பாக்கி காணாமல் போனது? அவரின் பேரன் எங்கு போனான்? ஏன் அவர் கதவை எப்போதும் அடைத்துவைத்துக் கொள்கிறார்? முன்னாள் நக்சல் இயக்கத்தினரை ஏன் சந்திக்கிறார்? குரங்குகள் மட்டும் சாட்சியாக நிற்க அவர் ஏதேனும் குற்றம் புரிந்தாரா? அப்பு பிள்ளாவின் நினைவு திரும்புமா? துப்பாக்கியும், தொலைந்துபோன குண்டுகளும் திரும்பக்கிடைக்குமா? 

கடந்து போன காலத்தின் உண்மையைக் கண்டறிய சிசிபஸ் போல அப்பு பிள்ளா முனைகிறார். உண்மையின் உச்சியை அடைந்ததும், தெளிவை விட குழப்பங்களும், கவலைகளும் வந்தடைகின்றன.  மீண்டும் முதலில் இருந்து உண்மையைத் தேடுகிறார். சளைப்பும், சலிப்பும் அவரை நிறுத்த முடியவில்லை. ஏன்? 

கிஷ்கிந்தா காண்டம் த்ரிஷ்யம் படத்தைப் போன்ற சாயலை சற்றே கொண்டது. ஆயினும், இக்கதையின் முதன்மைக் கதை மாந்தர்கள் புத்திசாலிகள் இல்லை. அழுகை, நோய்மை, இயலாமை அவர்களைப் பீடிக்கிறது. அரவணைப்பின்றி நெருக்கும் உலகத்தின் ஊடாக அவர்களால் பத்திரமாக மீண்டுவரும் முயற்சி என்னானது என்பதே கதை.  இத்தனை மனதுக்கு நெருக்கமான, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான திரைப்படத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது. மறக்காமல் பாருங்கள். 

வைகறை வாசகன் பதிவுகள் – கனிவான கலங்கரை விளக்கம்

டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம். 

காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.

ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன். 

உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது  அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை. 

டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி  பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும். 

டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர். 

சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.

பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார். 

தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும். 

‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த  ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன்  செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது. 

இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது. 

அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.

திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை. 


இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து. 

வைகறை வாசகன் பதிவுகள் 

விகடன் பிரசுரம் 

முதல் பதிப்பு 

பக்கங்கள் : 352

விலை : 375 ரூபாய்  

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்

இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்

 கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார். 

டாடா  சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே  அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய்  செலவில் பெரிய ஏரி  ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது. 

ரத்தன் டாடா  ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது. 


ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர்  ஸெர்ஸேஸ்  தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள். 


கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி  வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா  தன்னுடைய மனைவி  மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள்  தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது. 


ஏர் இந்தியாவை டாடா  நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி  சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா  கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது. 


IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு. 


இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள்  வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.  


டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது  ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ்  என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். 
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது. 

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,


ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும். 

எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது. 

தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 

சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’

‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

நவோதயா உண்மைகள்

26 August 2020 at 13:44

நவோதயா பள்ளிகளை தமிழக அரசியல் கட்சிகள் தடுத்து வருவதாகவும், அதனால் தமிழகத்தின் அனைத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன என்று பார்ப்போமா?

நவோதயா பள்ளி ஆரம்பிக்க மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து, பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்காலிக இட வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.

ஏன்… அந்த பணத்தில் தமிழக அரசுக்கு பள்ளிக்கூடம் கட்டி நடத்த தெரியாதா?

நவோதயா பள்ளி 6ஆம் வகுப்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அங்கு 6ஆம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்!

நுழைவுத்தேர்வு வைத்து 0.1% மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, மீதி 99.9% எப்படியாவது போகட்டும் என்று இருப்பது மத்திய அரசு மாடல். 

கையில் இருக்கும் நிதியை வைத்து முடிந்த அளவுக்கு எல்லோருக்கும் சமமான கல்வியை கொடுக்க முயற்சி செய்வது தமிழக மாடல். 

சென்ற ஆண்டு நவோதய பள்ளியின் 6ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் 19 இலட்சத்து 94 ஆயிரம்.

அதில் தேர்வானவர்கள் வெறும் 46 ஆயிரம்! நவோதயா வலைத்தளத்தில் இந்த தகவல் இருக்கிறது https://navodaya.gov.in/nvs/en/Admission-JNVST/JNVST-Result-Statistics/

அப்ப தேர்வாகாத மாணவர்கள் கதி? அவர்களுக்கு உங்கள் “தரமான” கல்வி திட்டத்தில் இடமில்லையா?

நவோதயா பள்ளியின் வலைத்தளத்தில் இருக்கும் இந்த வரியை பாருங்கள்.

“…to select 80 most meritorious students for each JNV…”

ஒரு மாவட்டத்துக்கு 80 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படும்! மீதி மாணவர்கள் தரமான கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்று அவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போதே தரம் பிரிக்கப்படுவார்கள்!

தமிழ்நாட்டுல இப்ப என்ன 38 மாவட்டமா? அப்ப தமிழ்நாடு முழுக்க மொத்தம் 3040 மாணவர்களுக்கு மட்டுமே! 

தமிழநாட்டில் சென்ற ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் 8.5 இலட்சம்! இவர்கள் வெறும் 3 ஆயிரம் பேருக்காக ஒரு பள்ளி நடத்தி தமிழ்நாட்டு கல்வித்தரத்தையே உயர்த்த போகிறார்களாம்! அதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்காததால்தான் எல்லாம் கெட்டுப் போய்விட்டதாம்!

நவோதயாவை அனுமதித்த பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? 4ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கோச்சிங் என்ற பெயரில் தினம் வதைக்கப்படும் அவலம் நடக்கிறது.  


சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இவர்கள் என்று குழந்தைகள் படங்களை போட்டு கல்வி வியாபாரம் நடக்கிறது 

கிராமப்புற மாணவர்களுக்காக நவோதயா பள்ளிகள் நடத்தப்படுகிறது என்று கதை விடுவார்கள். எந்த கிராமத்தில் இப்படி கோச்சிங் செண்டர்கள் நடக்கிறது? 

இந்த நுழைவுத்தேர்வில் யார் வெல்வார்கள்? கோச்சிங் செண்டர்களுக்கு பணம் செலவழித்து தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பவர்கள் வெல்வார்கள். ஏழைகள் இந்த போட்டியில் ஜெயிக்க முடியுமா?

தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு நடக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். தனியார் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் நடக்கவில்லை. ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள், நமது வரிப்பணத்தில் நடக்கிறது.

மாநில அரசு நடத்தும் எந்த பள்ளியிலாவது சேர நுழைவுத்தேர்வு இருக்கிறதா? இருக்காது! ஏனென்றால் பள்ளிக்கல்வி என்பது உரிமை! அதை மறுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் இங்கே பகிரங்கமாக மத்திய அரசு அடிப்படை பள்ளிக்கல்வியை வழங்க மாணவர்களை முளையிலேயே தரம் பிரிக்கிறது.

நாம் 800 மாணவர்களின் கல்விக்காக செலவு செய்யும் நிதியை, நம்மிடம் இருந்து மத்திய அரசு பிடுங்கி “நாங்கள் 80 மாணவர்களுக்கு மட்டும் தரமான கல்வியை அளிக்கிறோம்” என்கிறார்கள். எது சரியான மாடல்? இருக்கிற நிதியை 800 மாணவர்களின் கல்விக்காக சரி சமமாக பகிர்ந்தளிப்பதா? அல்லது அதில் 80 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அனைத்து நிதியையும் அவர்களுக்காக மட்டுமே செலவு செய்வதா?


PDF வடிவில் தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1SayKod_yBnFXH3Rrcha4MH5JQgz7bGGm/view?usp=sharing

❌