Normal view

Received before yesterday

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.

இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும் பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில் எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச் சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை. அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது.

அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான். விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும் சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப் பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.

தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச் செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல் இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.

எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன்மீது கோபம் கொண்டு வசைபாடினாள். அவனுடைய தேவைகளை உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில் சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள் அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.

ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது ‘இனிமேல என்னை அம்மான்னு கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு’ என்று கடுமையான குரலில் சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.

சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் ‘இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு அவனைப் பழக்கினாதானே நல்லது’ என்று சொன்னாள்.

‘சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?’ என்று கேட்டான் கணவன்.

‘நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது.’

‘விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?’

‘அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க முடியும்.’

‘அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்.’

ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.

‘வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.’

‘அனுப்பலாம். அனுப்பலாம். இரு. கொஞ்ச நாள் போவட்டும்.’

‘பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா? மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்.’

‘சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு.’

‘எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய் மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?’

அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. ‘சரி, ஏதாவது செய்’ என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.

அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும் அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். ‘ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா’ என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.

மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.

மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

‘என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?’ என்று கேட்டான். அவை தலையசைத்ததைப் பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ‘ஆகா, உங்களுக்கும் சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக் குலுக்கின.

அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள் பின்னால் நடந்துசென்றான்.

அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான். பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.

அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி, தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு, அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.

இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது. அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான் அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.

கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால், ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால் நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.

பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ பற்றி எரிந்தது.

அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து கொதிப்பேறியது.

அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள் செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும் கழித்தான்.

அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று நினைத்துப் பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.

அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும் ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.

‘ஏன், என்னாச்சி?’ என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.

‘தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது.’

அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். ‘ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை’ என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

‘சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு வைத்தியரை அழைச்சிட்டு வரேன்.’

‘அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு.’

‘பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா நீ?’

‘நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு நல்லா தெரியும்.’

‘என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்.’

‘கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்.’

‘உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்.’

‘சத்தியம் பண்ணு.’

‘எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?’

‘உன் பெரிய பையனை கொன்னு, அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான் என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.’

‘என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப் போய் எப்படி கொல்றது?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு.’

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.

கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான் முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால் புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.

பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல், மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.

அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில் அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது. இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனைத் தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது. இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி கூடவே நடந்தன.

பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும் விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே ஒருவித இயலாமையோடு பார்த்தான். ‘சரி, இதுவும் நல்லதுக்குத்தான்’ என மனத்துக்குள் ஆறுதலாக நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என நினைத்துக் குழம்பினான்.

அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியைப் பாதுகாப்பாக தன் பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.

அவளைப் பெயர் சொல்லி அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி ‘இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று எடுத்துவந்துட்டேன்’ என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.

‘நீங்களே நெத்தியை சுத்தி கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே’ என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள் அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.

சில நிமிடங்களிலேயே ‘அப்பாடி, இப்பதான் வலி போச்சி’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

மலை உச்சிக்கு இளைஞனை அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது. ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான் அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது. பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில் வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.

ஏழு பசுக்களும் ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. ‘கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது’ என்று அவனை வாழ்த்தின. பிறகு இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக் கொடுத்தன.

‘நாங்க வேற உலகத்துல இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல இந்தப் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்’ என்று மூத்த பசு சொன்னது.

பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன. அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான். பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில் துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை நினைத்துக்கொள்ளும்.

ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.

அவள் தண்ணீர் அருந்தும்போது பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.

சிறிது தொலைவு நடந்த பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம் தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள். அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.

வீட்டுக்குச் சென்றதுமே ஒரு கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன் மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.

‘என்னம்மா, உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத் தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்’ என்றான் அரசன்.

அவள் அதைக் கேட்ட பிறகு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ‘நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான் பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன்’

‘அவ்ளோதானே? அதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன். ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?’

‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்.’

‘சத்தியமா அவனை உனக்கு கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா.’

உடனே அரசன் நம்பிக்கைக்கு உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ‘அந்த இளைஞனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க’ என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் முதலில் அரசன் குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனை கைதட்டி அழைத்து ‘உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு’ என்றார்கள்.

‘அதெல்லாம் வரமுடியாது. போங்க’ என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. எதை எதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும் அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

அதைப் பார்த்ததும் துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன். அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை புரிந்துகொண்டன.

அக்கணமே ஏழு பசுக்களும் கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால் அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல் கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு சென்றன.

அரண்மனைக்கு ஓடிய வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். ‘இது என்ன, விசித்திரமா இருக்குதே’ என்று குழம்பினான் அரசன்.

பிறகு முப்பது பேரை அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான். உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால் முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத் திரும்பியது.

அரசன் தோல்வியோடு அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள். மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச் செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.

அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.

அப்போது பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில் காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின் சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.

‘இறைவனுடைய படைப்புல நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை’ என்று மனத்துக்குள் நினைத்து பெருமூச்சுவிட்டான்.

அப்போது அவன் முன்னால் ஒரு காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன் அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து புன்னகைத்தான்.

உடனே அந்தக் காக்கை அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. ‘அரசே, உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்’ என்று சொன்னது.

தன்னோடு பேசும் காக்கையைப் பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக் காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.

‘அவன்கிட்ட அதிசயமான ஒரு புல்லாங்குழல் இருக்குது. எங்களைப் பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம வழிக்குத் திருப்பிடலாம்.’

அதைக் கேட்டதும் ‘கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத் திரும்பினான்.

அரசன் குறிப்பிட்ட மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது. ‘இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை’ என்று நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தது.

அப்போது அவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ‘ஓ. இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?’ என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.

சற்றும் அதை எதிர்பார்க்காத இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில் மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகுதான் அவனுக்கு துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் இறங்கி வந்தன. ‘என்ன மகனே, என்ன துன்பம்?’ என்று கேட்டன. அவன் நடந்த செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.

‘போகட்டும் விடு. நடந்ததை நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்’ என்று பசுக்கள் ஆறுதல் கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு விண்ணுலகத்துக்குத் திரும்பின.

புல்லாங்குழலை எடுத்துச் சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு பலமுறை நன்றி சொன்னான். ‘கவலைப்படாதே அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ. நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது. இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.

அடுத்தநாள் காலையில் ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். ‘ஐயோ, அங்க அந்தப் பசுக்கள் வந்து முட்டுமே’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். ‘அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க’ என்று அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.

காலையில் சென்ற வீரர்கள் அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். ‘நீங்க போ போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம் இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி. அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது. ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது’ என்று முறையிட்டார்கள்.

அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று நினைத்துக் குழம்பினான்.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி காக்கை தோன்றியது.

‘துக்கத்துக்கு என்ன காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?’ என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.

காக்கை எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. ‘ஏதோ ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

இளைஞன் உட்கார்ந்திருந்த ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும் வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம் இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும் மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும் ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.

விண்ணுலகத்திலிருந்த பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன் நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.

குழலின் இசையில் தன்னை மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத் திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை. மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.

புதையலைப்போல தனக்குக் கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது. தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி எனப் புரியாமல் குழம்பினான். பித்துப் பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன். விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும் மகிழ்ச்சியில் திளைத்தன.

அப்போது தொலைவில் அரசன் அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ‘வருக வருக’ என இளைஞனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்தப்புரத்திலிருந்த இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம் செய்துவைத்தான். அங்கிருந்த அவைப் பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.

ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.

ஒரு மாதம் கழிந்தது. அந்த இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம் விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு திரும்பிவிடுவான்.

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும் சொல்வதில்லை.

ஒருநாள் அவன் வழக்கம்போல காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

விண்ணுலகத்தில் வசித்துவந்த பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில் மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.

வழக்கமாக இளைஞன் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை. ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.

மலையடிவாரத்தை நோக்கி வந்த இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன் குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும் காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.

ஒரு காலத்தில் பசுக்களை அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக் கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம் மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.

அந்தப் பசு எழுப்பிய குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும் அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில் துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.

கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத் தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்தான். ‘கவலைப்படாதே’ என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக் கொடுத்தது. ‘இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது. ஒரு பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.

இளைஞனும் பசுக்களும் உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.

அவனுடைய குழல் தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.

‘அவன் மேல நான் வச்ச ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும் இல்லை.’

அவளுடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும் புரிந்துகொண்டன.

‘நூறாண்டு காலம் மாறாத அன்போடு நீடித்து வாழ்க’ என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

‘குழல்களை பத்திரமா வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்’ என்று சொல்லிக்கொண்டே விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.

பசுக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள் பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.

அரண்மனைக்கு வந்துபோகும் துறவிகளும் குருசாமிகளும் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப ஏராளமான விரதங்களையும் அவர்கள் செய்து பார்த்துவிட்டார்கள். தான தருமங்களும் செய்து பார்த்தார்கள். எந்தப் பயனும் இல்லை.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதற்குப் பிறகும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை.

பிள்ளை இல்லை என்னும் கவலை ராணியை வாட்டியெடுத்தது. நாள் முழுதும் ராணி கவலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு ராஜாவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். எங்கு சென்றாலும் அந்தக் கவலையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அதே கவலையுடன் அரண்மனைக்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் இறைவனிடம் தன் கோரிக்கையை முன்வைத்து கடுமையான வகையில் தவமியற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அக்கணமே குளத்தங்கரை ஓரமாக இருந்த ஒரு வட்டப்பாறையை எடுத்து தன் தலைமீது சுமந்தபடி இன்னொரு வட்டப்பாறை மீது ஏறி கைலாசம் இருக்கக்கூடிய வடக்குத்திசையைப் பார்த்து நின்றார். ஒவ்வொரு நாளும் தான் பக்தியுடன் வணங்கும் சிவபெருமான் எதிரில் தோன்றி தனக்கு பிள்ளைவரம் அளிக்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என்றும் தலைமீது வைத்த சுமையை இறக்கப்போவதில்லை என்றும் மனத்தில் முடிவெடுத்துக்கொண்டார்.

ராஜாவின் செயலைப் பார்த்த வேலையாட்கள் அந்த முயற்சியைக் கைவிடும்படி பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர். இறைவனின் வரம் கிட்டும்வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராஜா அவர்களிடம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். உடனே வேலைக்காரர்கள் ஓடோடிச் சென்று ராணியிடம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு திகைத்த ராணி குளத்தங்கரைக்கு ஓடோடி வந்தாள். தலைமீது வட்டப்பாறையைச் சுமந்தபடி நின்றிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்து அச்சம் கொண்டாள்.

ராஜாவின் முன்னால் நின்று கைகுவித்து அவர் மேற்கொண்டிருக்கும் தவமுயற்சியைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாள் ராணி. ராணியைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும் அரண்மனை குருவும் அடுத்தடுத்து வந்து அதே கோரிக்கையை ராஜாவின் முன் வைத்தார்கள். சிவபெருமான் நேரில் காட்சியளிக்கும் வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என உறுதியாகத் தெரிவித்தார் ராஜா.

வேறு வழியில்லாமல் அனைவரும் ராஜாவைக் குளத்தங்கரையில் தனியாக விட்டுவிட்டு தத்தம் வேலைக்குத் திரும்பினர். ஒவ்வொரு கணமும் சிவபெருமானை மனமுருகும் வகையில் தன் கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் ராஜா. அவர் தலை மீதிருந்த பாறை பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது. பிள்ளை இல்லை என்னும் மனக்குறை அதைவிட பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது.

கைலாசத்தில் பார்வதிதேவியோடு அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானக்கண் வழியாக வட்டப்பாறையைத் தலையில் சுமந்தபடி தவத்தில் மூழ்கியிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க அவருக்கும் மனச்சுமை பெருகியது. ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

பார்வதி தேவியால் அப்படி இருக்கமுடியவில்லை. அடிக்கடி சிவபெருமானுக்கு அந்த ராஜாவைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். அந்த ராஜாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தாள். சிவபெருமானுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவரால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் ‘இது எல்லாமே ஆரம்ப வேகம்தான். கொஞ்சநாள் இப்படி இருந்து பார்த்துட்டு அப்புறம் தானாவே விட்டுடுவான்’ என்று பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதி கொண்டார்.

ஆனால் சிவபெருமான் நினைத்ததுபோல ராஜா பின்வாங்கிச் செல்பவராகத் தெரியவில்லை. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக மன உறுதி கொண்டவனாக இருந்தார். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் தீராத மனச்சுமையோடும் தலைச்சுமையோடும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒருநாள் சிவபெருமானின் மனத்தில் கருணை பிறந்தது. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து பூமிக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.

அவருடைய திடீர் பயணத்தைப் பார்த்த பார்வதிதேவி ‘இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?’ என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான் ‘அந்த ராஜாவுடைய பக்தி என் தலைமேல ஒரு பெரிய பாரமாக உட்கார்ந்துட்டிருக்குது. பன்னிரண்டு ஆண்டு கால பக்தியின் எடையை என்னால தாங்கமுடியலை. பாவம், அவன் ஒரு சாதாரண மனிதன். அந்தப் பாறையுடைய எடையை அவன் எப்படித்தான் தாங்கிட்டிருக்கானோ தெரியலை. முதல் வேலையா, அவனுக்கு அவன் கேக்கற வரத்தைக் கொடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம்தான் நானும் நிம்மதியா இருக்கமுடியும்’ என்று சொன்னார். ‘போய் வாங்க. போய் வாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கீங்க’ என்று சொல்லி சிவபெருமானை வாழ்த்தி கைலாசத்திலிருந்து வழியனுப்பி வைத்தாள் பார்வதிதேவி.

கைலாசத்திலிருந்து நேராக அரண்மனைக் குளத்தங்கரைக்கு வந்து ராஜாவின் முன் காட்சியளித்தார் சிவபெருமான். ஒளிவேறுபாட்டின் காரணமாக சிவபெருமானின் இருப்பை உணர்ந்துகொண்ட ராஜா தன் கண்களைத் திறந்து சிவபெருமானைப் பார்த்தார். அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

‘முதல்ல பாறையிலிருந்து நீ இறங்கி வா. தலைமேல வச்சிட்டிருக்கிற சுமையை கீழ எறக்கு’ என்று சொன்னார் சிவபெருமான்.

ராஜா தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘ஐயா சிவபெருமானே, முதல்ல எனக்கு வரம் கொடுங்க. அதுக்கப்புறம் நான் இந்தப் பாறையிலிருந்து இறங்கி வரேன்’ என்று தெரிவித்தான்.

சிவபெருமான் இரண்டுமூன்று முறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ராஜா அதைக் கேட்கவில்லை. தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘முதல்ல வரம். அதுக்கப்புறம்தான் இறங்குவேன்’ என்றார்.

அவருடைய உறுதியைக் கண்டு சிவபெருமான் மனம் நெகிழ்ந்துபோனார். ‘ராஜா. என் சொல்லை நம்பு. நீ கேட்கிற வரத்தை நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனால் இங்கு இல்லை. நாளைக்கு காலையில உன் அரண்மனைக்கே நேரா வந்து ராணியையும் சந்திச்சிட்டு வரம் கொடுப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவபெருமான்.

ஒரு கணம் ராஜா அமைதியாக சிவபெருமான் முகத்தைப் பார்த்தார். அவர் சொல்மீது அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ‘சரி சிவபெருமானே. உன் கருணைக்கு நன்றி. நீ சொன்னபடி செய்றேன்’ என்று சொல்லிக்கொண்டே தன் தலைமீது வைத்திருந்த பாறையை கீழே இறக்கிவைத்தார். பிறகு நின்றுகொண்டிருந்த பாறையிலிருந்து கீழே இறங்கி சிவபெருமானை நோக்கி நடந்துவந்தார். அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றார். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தபடி இருந்தது.

‘இப்போ நிம்மதியா அரண்மனைக்குப் போ. நாளைக்குக் காலையில நான் அங்க வரேன். அப்போ விரிவா பேசிக்கலாம்’ என்று அவரை வழியனுப்பிவைத்தார் சிவபெருமான். ராஜாவும் மற்றொரு முறை அவரைக் குனிந்து வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்து சென்றார்.

சிவபெருமானின் தரிசனம் கிடைத்த செய்தியை உடனடியாத் தன் ராணியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அவர் அரண்மனைக்குள் செல்லும்வரை பார்த்தபடி நின்றிருந்த சிவபெருமான் தனக்குள் புன்னகைத்தபடி அங்கிருந்து மறைந்தார்.

அரண்மனைக்குள் வரும் ராஜாவை முதலில் வேலையாட்கள்தான் பார்த்தார்கள். முதலில் ஒருகணம் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அஞ்சி ஒதுங்கினார்கள். பிறகு ராஜா அனைவரையும் பார்த்து ‘என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் மெரள்றீங்க?’ என்று கேட்டபடியே நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஓடோடிச் சென்று அரண்மனை முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர். ஒருவன் வேகமாக அந்தப்புரத்துக்குச் செய்தி அனுப்பிவைத்தான். செய்தி கிடைத்ததும் ராஜாவை வரவேற்க ராணியே நேராக வாசலுக்கு வந்து நின்றாள். அதே சமயத்தில் ராஜா படியேறி உள்ளே வந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.

‘ராணி, எனக்கு சிவபெருமானின் தரிசனம் கிடைச்சிட்டுது. அவர் கருணையும் கிடைச்சிட்டுது’ என்றார்.

‘என்ன ராஜா? என்ன சொல்றீங்க? விளக்கமாச் சொல்லுங்க’ என்று கேட்டாள் அவள்.

‘ஆமாம். நான் சிவபெருமானை நேருக்கு நேர் பார்த்தேன். அவர் என் கண் முன்னால காட்சியளித்தார்.’

‘உண்மையாகவா?’

‘ஆமாம். நமக்கு பிள்ளைவரம் கொடுக்க சிவபெருமான் ஒத்துகிட்டாரு.’

‘அப்படியா? இந்த மகிழ்ச்சியை என்னால தாங்கவே முடியலை.’

‘நாளைக்கு காலை வேளையில நம் அரண்மனைக்கே நேருல வரேன்னு சிவபெருமான் சொல்லியிருக்காரு. அந்த சமயத்துல அந்த வரத்தை கொடுக்கறதா எனக்கு வாக்களிச்சிருக்காரு.’

ராஜாவை உச்சியிலிருந்து பாதம் வரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு உடல்சிலிர்த்தாள் ராணி. ராஜாவை ஒருமுறை தழுவிக்கொண்டாள்.

‘நம்முடைய நீண்டகால ஏக்கம் நாளைக்கு காலையில நிறைவேறப்போவுது. சிவபெருமான் நம் அரண்மனைக்குள்ள வர சமயத்துல நீ நல்ல உடைகளை உடுத்திகிட்டு வரவேற்பு கொடுக்க தயாரா இருக்கணும். அதுக்கு முன்னால் இன்னைக்கே நம்ம வேலையாட்களை வச்சிகிட்டு அரண்மனையை முழுசா கழுவி துடைச்சி கோலம் போட்டு பளிச்சினு வச்சிருக்கணும். ஒருவேளை நம் அரண்மனையிலேயே அவர் காலை உணவைச் சாப்பிடக்கூடும். அவருக்குப் பேரீச்சம்பழங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். நல்ல பழங்களை விதையை எடுத்துட்டு ஒரு தட்டில தயாரா வச்சிருக்கணும். அது போதும்.’

ராணிக்கு ராஜாவின் சொற்களை நம்புவதா, கூடாதா என குழப்பமாக இருந்தது. அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டதும் ராஜா அவள் தோளைத் தொட்டு அசைத்து ‘பயப்படாதே ராணி. சிவபெருமான் எனக்கு வாக்களிச்சிருக்காரு. நிச்சயமாக அவரு நம்மைப் பார்ப்பதற்கு வருவாரு’ என்று ஆறுதலாகச் சொன்னார்.

அடுத்த காலை விடிந்தது. சிவபெருமான் கைலாசத்திலிருந்து ஆகாயமார்க்கமாக ஒரு சாமியாரின் தோற்றத்தோடு அந்த ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. ஒரு கையில் பிச்சைத்தட்டும் இன்னொரு கையில் ஓர் ஊன்றுகோலும் இருந்தன. ஊர் நெருங்கியதும், கண்ணுக்குத் தென்பட்ட முதல் வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டில் வசித்துவந்த ஒரு கிழவி முறத்தில் அரிசி எடுத்துவந்து நீட்டினாள். அவர் அதை தன் தோள்பையில் வாங்கிக்கொண்டு ஆசி வழங்கிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். அந்த வரிசையில் இருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் நின்று பிச்சை வாங்கியபடி நடந்தார்.

தெருக்கள் கூடும் இடங்களில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடி குதித்தார். ஓங்கிய குரலில் ராகம் போட்டு பாடினார். சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். சிவபெருமான் அவர்கள் அனைவருக்கும் பையிலிருந்து பழங்களை எடுத்துக் கொடுத்தார். இப்படி பிச்சை வாங்கியபடியே கடைசியாக அரண்மனையை அடைந்தார்.

ராஜாவும் ராணியும் அரண்மனை வாசலிலேயே சிவபெருமானுக்காகக் காத்திருந்தனர். வாசலில் வந்து நின்ற சாமியாரைப் பார்த்ததும் சிவபெருமான்தான் சாமியார் வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை ராஜா புரிந்துகொண்டான். ராணியின் பக்கமாகத் திரும்பி கண்ணசைவில் அந்த உண்மையை அவளுக்கு உணர்த்தினான். உடனே ராணி வாசலிலேயே மஞ்சள் கரைத்த நீரை நிறைத்துவைத்திருந்த குடத்தை எடுத்துவந்து சாமியாரின் பாதங்களில் ஊற்றி தூய்மை செய்துவிட்டு விழுந்து வணங்கினாள். ராஜாவும் ராணியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான். ‘சீரும் சிறப்போடும் சந்ததியோடும் நீடூழி வாழ்க’ என இருவரையும் வாழ்த்தினார் சாமியார்.

பிறகு பையிலிருந்து இரு மாம்பழங்களை எடுத்து ராணியிடம் கொடுத்தார். ‘இவற்றை சாப்பிடு மகளே. நீ நீண்ட காலமா பிள்ளை இல்லாத மனக்குறையோடு இருக்கறேன்னு எனக்குத் தெரியும். உன் குறையைத் தீர்க்கறதுக்காக பன்னிரண்டு ஆண்டு காலம் கடுமையா தவம் செய்த உன் கணவன் மிகவும் அன்பானவன். உங்க ரெண்டு பேருக்கும் நான் உதவி செய்யணும். உன் கணவன் கேட்ட வரத்தை அளிக்கறதுக்கு முன்னால உன்னிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னார்.

‘என்ன கேள்வி ஐயா?’ என்று பணிவோடு கேட்டாள் ராணி.

‘உனக்கு பதினாறு ஆண்டுகள் மட்டுமே ஆயுள் உள்ள புத்திசாலிக்குழந்தை வேணுமா? நூறு ஆண்டுகள் வரை கெட்டியான ஆயுள் உடைய முட்டாள் குழந்தை வேணுமா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டால், என் வேலை எளிதாக முடிஞ்சிடும்’ என்றார் சிவபெருமான்.

‘ஐயோ, இது என்ன குழப்பம்?’ என்று தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் ராணி. ‘நான் என்ன பதில் சொல்வேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்று புலம்பியபடி அருகில் நின்றிருந்த ராஜாவின் பக்கம் திரும்பினாள். ராஜாவும் ஏதோ பதில் சொல்ல முற்பட்டான். உடனே கையை உயர்த்தி அவனைத் தடுத்த சிவபெருமான் ‘ராணியிடம் கேட்ட கேள்விக்கு ராணிதான் பதில் சொல்லவேண்டும்’ என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ராஜா அமைதியடைந்தான்.

ராணி தன் கைகளை உயர்த்தி தன் தலைமீது பட்பட்டென்று அடித்துக்கொண்டாள். ‘ஐயோ, நான் என்ன செய்வேன்? இது என்ன சோதனை? நான் என்ன கேட்பேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே. இப்படி ஒரு இக்கட்டில சிக்கிகிட்டேனே’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவள் விழிகள் சிறிது நேரம் வாசலருகில் புத்தம்புது பூக்களுடன் காற்றில் மெல்ல அசைந்தபடி நின்றிருந்த ஒரு செடியின் மீது பதிந்தன.

பிறகு எழுந்து நின்று சிவபெருமானைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி, ‘ஐயா, ஒரு முட்டாளைப் பெத்து நூறு ஆண்டுகள்வரைக்கும் வச்சிருக்கிறதால என்ன பயன் இருக்கப் போவுது. ராஜ்ஜியத்தையும் ஆட்சி செய்ய முடியாம, வீட்டையும் கவனிச்சிக்க முடியாம இருக்கற ஒரு முட்டாள் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் அல்லவா?’ என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். சிவபெருமான் அவளை அமைதியோடு பார்த்தபடி நின்றிருந்தார்.

‘வீட்டைக் கவனிச்சிக்கிறதைவிட நாட்டைக் கவனிச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே, பதினாறு ஆண்டுகள் வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும்’ என்று சொன்னாள் ராணி.

‘முடிவாகத்தான் சொல்றியா?’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘ஆம் ஐயா’ என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் ராணி.

‘அவசரப்பட வேணாம். நல்லா யோசிச்சி உன் முடிவைச் சொல். வரத்தைக் கொடுத்த பிறகு எக்காரணத்தைக் கொண்டும் என்னால மாத்தமுடியாது.’

‘எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி பண்ணிட்டுதான் என் பதிலைச் சொல்றேன் ஐயா. எனக்கு பதினாறு ஆண்டு காலம் மட்டுமே வாழுறா புத்திசாலிக்குழந்தையே போதும்.’

சிவபெருமான் ஒருகணம் ராணியையும் ராஜாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு இருவருடைய தலைமீதும் கை வைத்து கண்களை மூடி முணுமுணுத்தார். பிறகு ‘நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டேன். நீங்க நினைச்சபடியே ஆகட்டும். வாழ்வாங்கு வாழ்க’ என்று கூறிவிட்டு அரண்மனையைவிட்டு வெளியேறினார்.

அடுத்து சில நாட்களிலேயே ராணி கருவுற்றாள். அரண்மனை வைத்தியர் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும், ராஜா ஊரில் உள்ள அனைவரும் வந்து உண்டுவிட்டுச் செல்லும் வண்ணம் அரண்மனை வாசலிலேயே பெரியதொரு பந்தல் போட்டு, ஓர் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் விருந்துண்டு ராணியை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

பத்து மாதங்கள் நிறைவுற்ற தருணத்தில் ராணி அழகான ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். வம்சம் விளங்கப் பிறந்த குழந்தையைப் பார்த்து ராஜா பூரித்தார். அன்று மாலையே ராஜா ஊரிலிருந்த சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு தெய்வத்துக்கு நன்றி சொன்னார். ஊரில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் குழந்தையின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குழந்தைக்கு சென்னா என்று பெயரிட்டனர்.

சென்னா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தான். அனைவருடைய முன்னிலையிலும் வெளித்தோற்றத்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் ராணி ஒவ்வொரு கணமும் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தாள். சிவன் குறிப்பிட்டதுபோல தன் மகன் பதினாறு வயதுவரை மட்டும்தான் உயிர்வாழ்வானோ என நினைத்து துயரத்தில் மூழ்கியிருந்தாள்.

யாருக்கும் தெரியாமல் ஒரு ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்தாள் ராணி. குழந்தை பிறந்த நேரத்தையும் வரம் கொடுத்தபோது சாமியார் சொன்ன தகவலையும் சேர்த்துச் சொல்லி, குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள். ஜோதிடர் அங்கேயே உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார்.

‘அம்மா, அந்தச் சாமியார் சொன்னது எல்லாமே உண்மை. இந்தக் குழந்தை நல்ல ஞானமுள்ளவன். வீரமும் நேர்மையுணர்ச்சியும் உள்ளவன். ஆனா பதினாறு வயசு நடக்கற சமயத்துல அவனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்னு காத்திட்டிருக்குது. அது எப்படி முடியும்னு யாராலயும் சொல்லமுடியாது.’

ஜோதிடருக்கு தக்க தட்சணையைக் கொடுத்து அனுப்பிவைத்த ராணி, தன் சென்னாவை கண்ணை இமை காப்பதுபோல காத்துவந்தாள். சென்னா மெல்ல மெல்ல வளர்ந்து பாலகனான். அரண்மனையில் இருந்த அனைவருக்கும் அவன் செல்லப்பிள்ளை ஆனான். அவனும் எல்லோரோடும் அன்பாகப் பழகி, எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்தான். சென்னா எங்கு சென்றாலும் அவனோடு ஒரு சிறுவர் கூட்டமும் பின்தொடர்ந்தது.

விளையாட்டுபோல பதினாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அப்போதும் சென்னா பிற சிறுவர்களோடு சேர்ந்து ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் பந்து விளையாடி பொழுதுபோக்கினான்.

ஒருநாள் ஒரு சிறுவன் ‘நீ ராஜாவுடைய பிள்ளை. நீ ஏன் எங்களை மாதிரியான ஆளுங்களோடு சேர்ந்து இங்க வந்து பந்து விளையாடுற? காட்டுக்குப் போய் மான்வேட்டை ஆடறதும் புலிவேட்டை ஆடறதும்தான் உன்னைமாதிரியான இளவரசர்களுக்கு அழகு’ என்று குறிப்பிட்டான்.

‘மானையோ, புலியையோ வேட்டையாடிக் கொல்றதில என்ன அழகு இருக்கப்போவுது? நமக்குத் துன்பம் தராத உயிருக்கு நாம ஏன் துன்பம் தரணும்?’ என்று கேட்டான் இளவரசன் சென்னா.

‘கொல்வதில் அழகு எதுவும் இல்லைதான். ஆனால் கொல்வதுதான் வீரம். அப்படித்தான் நம் சாஸ்திரம் சொல்லுது’ என்றார்கள் சிறுவர்கள்.

அன்று வீட்டுக்குத் திரும்பிய சென்னா இரவு முழுக்க, பிற சிறுவர்கள் சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் சிறுவர்களோடு விளையாடுவதற்குச் செல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் மூழ்கியபடி அரண்மனையில் ஓர் அறைக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ராணிக்கு வருத்தமாக இருந்தது.

‘என்ன நடந்திச்சி மகனே?’ என்று பரிவோடு கேட்டாள். பிற சிறுவர்கள் அவனைப் பார்த்து சொன்ன சொற்களையெல்லாம் அவன் ராணியிடம் சொன்னான். ‘பாவம் அந்தச் சிறுவர்கள். அவுங்க பேச்சையெல்லாம் நீ ஏன் கேட்கிற? நீ உன் விருப்பம்போல நம் அரண்மனைத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டுக்குப் போறதுலாம் ரொம்ப ரொம்ப ஆபத்தான காரியம்’ என்று ராணி அவனை எச்சரித்தாள்.

‘இல்லை அம்மா. நான் காட்டுக்குப் போய் புலியைக் கொன்று என் வீரத்தை அனைவருக்கும் நிரூபிச்சிக் காட்டணும். கோழை போல ஒதுங்கி நிற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்னான் சென்னா.

‘உன்னை கோழைன்னு இப்ப யாரு சொன்னாங்க? நீ எவ்வளவு பெரிய வீரன்ங்கறது எனக்குத் தெரியுமே. தினம்தினமும் நம் அரண்மனைத்தோட்டத்தின் உச்சிக்கிளையில தொங்கற மாம்பழங்களை உன் வில்லையும் அம்பையும் கொண்டு வீழ்த்தறதை என் கண்ணால ஒவ்வொரு நாளும் நான் பார்த்துட்டுதான இருக்கேன்’ என்று சென்னாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள் ராணி.

‘நான் வீரன்ங்கறது உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? ஊரில இருக்கிறவங்களுக்குத் தெரியவேணாமா? காட்டுக்குப் போய் வேட்டையாட எனக்கு அனுமதி கொடுங்க. என் வேட்டையில புலிகளை வீழ்த்தி நான் யார்ங்கறதை இவங்களுக்குப் புரியவைக்கிறேன்.’

‘அவசரம் வேண்டாம் மகனே. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது உன்னை நானே காட்டுக்கு அனுப்பிவைப்பேன். அமைதியாக இரு. இனிமேல நீ வெளியே போய் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவேணாம். அரண்மனைக்குள்ளயே இருக்கற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடு. அது போதும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.

அவளுக்கு திடீரென ஜோதிடர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று குறிப்பிட்ட சிவபெருமானின் சொற்களும் நினைவுக்கு வந்தன. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு தன் அறைக்குத் திரும்பினாள்.

மறுநாள் விடிந்தது. காட்டுக்குச் சென்று வேட்டையாட வேண்டும் என சென்னாவின் மனம் துடித்தது. அரன்மனைக்குள்ளேயே அவனோடு நெருக்கமாகப் பழகுகிற சில வேலைக்காரர்களையும் மாடுகளைப் பராமரிக்கிற சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குப் புறப்பட்டான்.

எதிர்பாராத விதமாக, ராணி அந்த இடத்துக்கு வந்துவிட்டாள். அவன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். அவன் புறப்பட்டு நிற்பதைப் புரிந்துகொண்டதும் அவனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என முயற்சி செய்தாள். அவனோடு பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே அவன் மன உறுதியை அவள் உணர்ந்துகொண்டாள். அவனைத் தடுத்து நிறுத்துவது சிரமம் என்பதையும் புரிந்துகொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன் ‘உன் விருப்பம்போல காட்டுக்குப் போய் வேட்டையாடிட்டு வா. நான் உன்னைத் தடுக்கலை. ஒரே ஒரு கணம் நான் வெளியே போய் சகுனம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ கெளம்பலாம்’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள்.

அப்போது அவள் பார்வையில் கெட்ட சகுனங்களே தென்பட்டன. எண்ணெய்க்கூடைகளோடு ஒரு வண்டி சென்றது. கோடரிகளோடு விறகுவெட்டிகள் நடந்துபோனார்கள். எல்லாமே கெட்ட சகுனங்கள். அவற்றையெல்லாம் பார்த்து மனவருத்தத்தோடு ராணி திரும்பி வந்தாள். தான் பார்த்த குறிப்புகளையெல்லாம் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘ஒரே ஒரு நல்ல சகுனம் கூட என் கண்முன்னால தென்படலை. கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது ஒரு நல்ல சகுனம் அமையட்டும். அதுக்கப்புறம் நீ புறப்பட்டுச் செல்லலாம். நான் உன்னைத் தடுக்கமாட்டேன்’ என்றாள் ராணி. அவள் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

ஆனால் சென்னா மன உறுதியோடு நின்றிருந்தான். ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதிலை என்பதில் உறுதியாக இருந்தான். ‘அம்மா. நான் புறப்பட்டுட்டேன். இப்பவே ரொம்ப காலதாமதமாகிட்டுது. தயவுசெஞ்சி என்னைத் தடுக்காதே. என் கூட இத்தனை பேர் வரும்போது எதுக்கும்மா கவலைப்படறீங்க? நான் பாதுகாப்பா திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவனோடு அரண்மனையைச் சேர்ந்த ஆட்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு பாதுகாப்புக்காக ராணி தன் சகோதரனையும் அவர்களோடு அனுப்பிவைத்தாள்.

ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

முதல் வேட்டையை எளிதாக நிகழ்த்திமுடித்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான் சென்னா. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய குளத்தைச் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட மான்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றினான். ஒரு வேலைக்காரனை அழைத்து வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். மான்களின் உடல்களைச் சுமந்த வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களையும் மான்களையும் வீழ்த்திய உற்சாகத்தோடு சென்னா தொடர்ந்து காட்டின் மையப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினான். நெடுந்தொலைவு பயணம் செய்த பிறகு ஒரு சிறிய குன்றைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் திரிந்துகொண்டிருந்த ஒரு புலிக்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை அசைந்து அசைந்து நடக்கும் அழகையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமுடன் பாய்ந்து தாவி எழும் அதிசயத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொரு புலியாக கொன்று வீழ்த்தினான். பிறகு வழக்கம்போல புலிகளின் உடல்களையெல்லாம் திரட்டி ஒரு வண்டியில் ஏற்றினான். வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். புலிகளின் உடல்களோடு வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களின் உடல்களையும் மான்களின் உடல்களையும் புலிகளின் உடல்களையும் சுமந்த வண்டிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலுக்கு வந்து நின்றதைப் பார்த்ததும் ராணி ஓரளவு மனம் தெளிந்தாள். ‘உங்களை கவலைப்பட வேணாம்னு இளவரசர் சொன்னாரு’ என்று ஒவ்வொரு வண்டிக்காரரும் அவளிடம் சொன்னதைக் கேட்டதும் அவள் மனம் நிறைந்தது. தன் மகன் பெரிய வீரன் என்று நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கினாள்.

அதே நேரத்தில் அன்றைய வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தான் சென்னா. அவனுக்குத் துணையாக நின்றிருந்த அவனுடைய மாமா ‘இன்றைக்கு இது போதும். நாம் வீட்டுக்குச் செல்லலாம்’ என்று சென்னாவுக்கு நினைவூட்டினார். சென்னாவும் அவர் சொற்களை ஏற்றுக்கொண்டான். மொத்த குழுவும் அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தது.

பொழுது அடங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் வழியில் ஒரு கோவில் தென்பட்டது. அதைப் பார்த்ததும், முதல் வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலுக்குச் செல்லவேண்டும் என சென்னாவுக்குத் தோன்றியது. மாமாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னான். அவரும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனே அனைவரும் அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.

வெளியே இருந்ததைவிட கோவிலுக்குள்ளே கூடுதலான இருள் அடர்ந்திருந்தது. அக்கம்பக்கம் எதுவும் தெரியவில்லை.

‘உள்ளே எதுவும் தெரியலையே. எப்படிச் சென்று எப்படி வணங்குவது?’ என்று கவலையோடு கேட்டான் சென்னா.

அப்போது ஒரு வீரன் ‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்க இளவரசரே. என்னிடம் சிக்கிமுக்கிக்கல் இருக்குது. அதைத் தேய்ச்சி நெருப்பை உண்டாக்கறேன். வெளிச்சம் வந்த பிறகு செல்லலாம்’ என்றான்.

‘சரி’ என்று தலையசைத்த சென்னா ஓரமாக ஒதுங்கி நின்றான்.

வீரன் வேகவேகமாக வெளியே சென்று கைநிறைய சருகுகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் குவித்தான். தன் பையிலிருந்த சிக்கிமுக்கிக்கற்களை எடுத்து ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பை எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் நெருப்புப்பொறி விழவில்லை. அடுத்தடுத்து பல முறைகள் முயற்சி செய்தான். எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.

விரைவில் அனைவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பவேண்டும் என்ற கவலையில் இருந்த மாமாவைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

‘வெளிச்சத்துக்காகக் காத்திருக்கவேணாம். சீக்கிரமா நாம அரண்மனைக்குத் திரும்பியாவணும். இருட்டா இருந்தாலும் பரவாயில்ல. வாசலில் இருந்து பார்க்கிறமாதிரிதான் கருவறை இருக்கும். நூல் பிடிச்சதுபோல நேரா நடந்து போனா, தெய்வத்தின் முன்னால் போய் நின்னுடலாம். அதே இடத்துல நின்னு கண்ண மூடி வணங்கிட்டு சட்டுனு திரும்பிடலாம்’ என்று அவர் வழி சொன்னார்.

மாமா சொன்ன ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘மெதுவா…. மெதுவா…..’ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து கருவறைக்கு முன்னால் சென்று நின்றார்கள். இருட்டுக்குள் நிழலாக தெய்வத்தின் கரிய உருவத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினர். பிறகு சென்ற வழியிலேயே ஒவ்வொரு அடியாக வைத்து திரும்பி நடக்கத் தொடங்கினர்.

சிக்கிமுக்கிக்கற்களைத் தேய்ப்பதன் வழியாக நெருப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தான் வீரன். அவனே எதிர்பாராத வகையில் சட்டென ஒரு நெருப்புப்பொறி தோன்றி சருகுகளிடையில் விழுந்தது. அக்கணமே நெருப்பு பற்றிக்கொள்ள எங்கெங்கும் வெளிச்சம் பரவியது. எதிர்பாராத வெளிச்சத்தில் கண்கள் கூசின. அனைவரும் கண்களை மூடிமூடித் திறந்தனர்.

அந்த வெளிச்சத்தில் கருவறைத் தெய்வத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் சென்னா. தெய்வத்தின் பின்னால் சுவர்மீது ஒரு பெரிய புலியின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பெரிய முகம். பெரியபெரிய பற்கள். பெரிய கண்கள். பெரிய உடல். பெரிய நகங்கள். பாய்வதற்குத் தயாராக இருப்பதுபோன்ற தோற்றம். அதைப் பார்த்த கணமே இனம்புரியாத அச்சத்தில் மூழ்கினான் சென்னா. காட்டில் நேருக்கு நேர் பார்த்த புலி எழுப்பாத அச்சத்தை அச்சுவரில் தீட்டப்பட்டிருந்த புலியின் சித்திரம் எழுப்பியது. அவனைத் தாக்கி வீழ்த்துவதற்காக அந்தப் பேருருவம் தக்க தருணத்துக்காகக் காத்திருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.

எந்தக் கணமும் அந்தப் புலி தன் மீது பாய்ந்து தன்னைத் தாக்கும் என சென்னாவுக்குத் தோன்றியது. அவனால் அப்போது மூச்சுகூட விடமுடியவில்லை. விரைவில் வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டு வாசலை நோக்கிப் பாய்ந்தான். அவன் கண்கள் அவனையறியமால் சுற்றுச்சுவர்கள் மீது படிந்தன. அச்சுவர்களிலும் புலிகளின் அதே பேருருவம். அதே கண்கள். அதே தோற்றம். தன்னைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் புலிகள் சூழ்ந்து நிற்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அச்சத்தில் சென்னாவின் உடல் நடுங்கியது. என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பேயே சென்னா அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

‘ஐயோ’ என அலறியபடி அவனை நோக்கி அவனுடைய மாமா ஓடினார். அவன் மயங்கியிருந்தான். சுய உணர்வு இல்லை. உடனே இரு கைகளாலும் அவனைத் தூக்கி ஏந்தியபடி வெளியே வந்தார். எல்லோரும் சென்னாவைப் பார்ப்பதற்காக அவனைச் சூழ்ந்து நின்றனர். அவன் கன்னத்தைத் தொட்டு அசைத்துப் பார்த்தார் அவனுடைய மாமா. எந்த அசைவும் இல்லை. மூக்கின் கீழே விரலை வைத்து மூச்சைப் பரிசோதித்துப் பார்த்தார். மூச்சின் தடமே இல்லை. ‘ஐயோ, என் மருமகனே. தவமாய்த் தவமிருந்து என் அக்கா பெத்த பிள்ளையை இப்படி பறிகொடுத்துட்டேனே’ என்று அழுதார்.

சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியது. சிறிது நேரத்துக்கு முன்புவரை அந்தக் கூட்டத்தினரிடையில் நிலவிய மகிழ்ச்சித்தடம் முற்றிலும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. உடனே நான்கைந்து பேர் அருகிலிருந்த மரங்களில் ஏறி பொருத்தமான கிளைகளை வெட்டி வீழ்த்தினார்கள். அக்கிளைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டிலைப்போல ஆக்கினார்கள். அதன் மீது சென்னாவின் உடலைத் தூக்கிக் கிடத்தினார்கள். பிறகு அதைச் சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடந்தனர். ‘ஐயோ, என் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே எனக்குப் புரியவிலையே…’ என்று சொல்லி வாய்விட்டுப் புலம்பியபடியே வந்தார் மாமா.

வேட்டையில் கொல்லப்பட்ட முயல், மான், புலி என விலங்குகளின் குவியல்கள் வாசலில் வந்து குவிவதைப் பார்த்துவிட்டு, வெற்றியோடு வருகை தரும் மகனுக்காகக் காத்திருந்த ராணி, மரக்கட்டில் மீது வைத்து சுமந்துவரப்பட்ட அவனுடைய உடலைப் பார்த்து மயக்கமுற்று விழுந்தாள். உடனே பணிப்பெண்கள் ஓடோடி வந்து அவளுடைய மயக்கம் தெளிய தேவையான சிகிச்சையைச் செய்தனர். ‘ஐயோ, அக்கா’ என்று வீறிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அவளுடைய சகோதரர். செய்தி கேட்டு ஓடோடி வந்த ராஜாவும் சென்னாவின் உடலைப் பார்த்து இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். ‘எல்லாம் விதியின் பயன்’ என்று மனம் நொந்து பேசியபடி இருந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்த ராணி, சென்னாவின் உடலை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அழுதாள். குழந்தைவரம் கொடுத்த சிவபெருமான் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்து அவள் மனத்தை அழுத்தியது. ‘சிவனே. நீ சொன்னபடியே பதினாறு வயதில் என் மகனைப் பறிகொடுத்துட்டேனே’ என்று ஆற்றாமையோடு சொல்லிச்சொல்லி கண்ணீர் விட்டாள். ராஜாவால் எதுவும் பேச இயலவில்லை. ‘முட்டாளா இருந்தாலும் பரவாயில்லை, நூறு வருஷம் வாழற பிள்ளையைக் கொடுன்னு நாம கேட்டிருக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லி அழுதார்.

அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் இளவரசனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். அதைக் கவனித்ததும் ராணி அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு தடுத்தாள்.

‘நான் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்ணும்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். அது நடக்கலை. ஆனாலும் நான் என் ஆசையை நிறைவேற்றிக்காம விடமாட்டேன். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்வேன். இது சத்தியம். இதை நான் செய்து காட்டுவேன். அந்தத் திருமணம் நடக்கும்வரை அவனுடைய உடலை அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கமாட்டேன்’.

அவளுடைய சூளுரையைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். ‘இறந்துபோன ஒருவனுக்கு யாரு இந்த உலகத்திலே பெண் கொடுப்பாங்க?. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? ஏன் இந்த ராணி இப்படி பைத்தியக்காரத்தனமா பேசுறா?’ என்று நினைத்துக்கொண்டனர். ஆனாலும் அவள் ராணி என்கிற காரணத்தால் யாரும் எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டனர்.

அரண்மனை கருவூலத்திலிருந்த தங்க ஆபரணங்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையில் போட்டுக் கட்டி எடுத்துவரச் செய்தாள் ராணி. அந்த மூட்டையை ஒரு மாட்டுவண்டியில் தூக்கிவைக்கச் சொன்னாள். பிறகு தன் அண்ணனையும் அவனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்களையும் அந்த வண்டியோடு செல்லும்படி சொன்னாள்.

‘இந்த ராஜ்ஜியத்தையே ஒரு சுத்து சுத்துங்க. என் மகனுக்கு யாரு பொண்ணு கொடுக்க தயாரா இருக்கறாங்களோ, அவுங்களுக்கு வண்டியில இருக்கிற இந்த தங்கமூட்டையை பரிசா கொடுத்துட்டு, அந்தப் பொண்ணை வண்டியில ஏத்திகிட்டு வாங்க.’

ராணியின் பேச்சைத் தட்டமுடியாமல் அவளுடைய சகோதரனும் பிற வீரர்களும் வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு தெருவாகச் சென்றார்கள். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் ராணியின் கோரிக்கையை அறிவித்தபடி சென்றார்கள்.

அந்த ஊர்க் கடைசியில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்துவந்தது. அவருக்கு ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் அவரால் திருமணம் செய்துவைக்கமுடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு நாட்களைக் கடத்திவந்தார். மாட்டுவண்டியோடு வந்தவர்களின் கோரிக்கை அவருடைய காதில் விழுந்தது. உடனே அந்த வண்டியை நிறுத்தி, அவர்களிடம் சென்று ‘இறந்துபோன இளவரசனுக்கு நான் என் பொண்ணை மனப்பூர்வமா கல்யாணம் செஞ்சி வைக்கறேன்’ என்று சொன்னார்.

கோரிக்கையின் விவரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியாமல், அவர்கள் நிதானமான குரலில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்கள். அந்தப் பெரியவர் ‘நீங்க சொல்றது எனக்குத் தெளிவாவே புரியுதுங்க ஐயா. நான் என் பொண்ணை அனுப்பிவைக்கத் தயாரா இருக்கறேன். வாங்க’ என்று அமைதியாகச் சொன்னார்.

வந்த வேலை இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததில் ஓரளவு ஆறுதல் கொண்ட அக்குழுவினர் மாட்டுவண்டியை அந்தப் பெரியவரின் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். பெரியவர் வண்டிக்கு முன்னால் வழி சொல்லிக்கொண்டே சென்றார். வீட்டை அடைந்ததும் திண்ணையைக் காட்டி ‘ஒரு நிமிஷம் இப்படியே உக்காந்திருங்க. நான் வீட்டுக்குள்ள போய் விவரத்தை சொல்லி பொண்ணை தயார் செஞ்சி அழைச்சிட்டு வரேன்’ என்று சொன்னார். வண்டிக்குழுவினர் திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறினர்.

வீட்டுக்குள் சென்ற பெரியவர் தன் மனைவியிடமும் பெண்களிடமும் வாசலில் வண்டி வந்து நின்றிருக்கும் விவரத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து தன் ஏழு மகள்களையும் பார்த்து ‘இந்தக் கல்யாண ஏற்பாட்டுல உங்கள்ல யாருக்கு விருப்பம் இருக்குதோ, அவுங்க போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா, யாராவது ஒருத்தவங்க போனாதான் கிடைக்கப்போற இந்த செல்வத்தால நம்ம குடும்பம் மேல வரும்’ என்றார்.

பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தபடி எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் நின்றிருந்தனர். அப்போது எல்லோருக்கும் இளைய பெண்ணான சென்னவ்வா ‘அப்பா, நான் இந்தக் கல்யாணத்துக்குத் தயாரா இருக்கேன். என்னை அனுப்புங்கப்பா’ என்று முன்வந்தாள்.

அதுவரை திடமானவர் போல இருந்த அந்தப் பெரியவர் திடீரென உடைந்து அழத் தொடங்கினார். ‘நீ இந்த வீட்டுக்குக் குலதெய்வமா இருப்பம்மா’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றார். மற்ற பெண்கள் அவளுக்கு நல்ல உடைகளை உடுத்தி வெளியே அழைத்துவந்தனர். வண்டிக்காரர்கள் வண்டியிலிருந்த தங்கமூட்டையை இறக்கி அந்த வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை உட்காரவைத்தார்கள். ‘போய்வா சென்னவ்வா. உனக்கு கொடுப்பினை இருந்தா சாவித்திரிக்கு செத்துப்போன புருஷன் உயிரோடு திரும்பவும் கிடைச்சமாதிரி உனக்கும் கிடைக்கட்டும்’ என்று கைகளை உயர்த்தி வாழ்த்தினார் பெரியவர்.

அடுத்த கணமே வண்டி புறப்பட்டது. அந்த வண்டி அந்தத் தெருவைக் கடக்கும்வரை கைகுவித்தபடி நின்றிருந்த பெரியவர் பிறகு ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குள் போனார்.

அரண்மனைக்குச் சென்றதுமே சென்னவ்வாவுக்குத் திருமண அலங்காரம் செய்தார்கள். செத்துப்போன சென்னாவுக்கும் மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களோடும் அந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. அனைவரும் அட்சதை தூவினார்கள். சென்னவ்வாவின் கழுத்தில் தாலி ஏறியது.

திருமணம் முடிந்த கையோடு சவ அடக்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. சென்னாவின் உடலைக் குளிப்பாட்டி, மாலையிட்டு பாடையில் கிடத்தினர். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, பாடையைக் தூக்குவதற்கு முற்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே நின்றிருந்த சென்னவ்வா மணப்பெண் கோலத்தோடு வேகமாக நடந்துவந்து அந்தப் பாடையில் சென்னாவின் உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

அதைப் பார்த்து அனைவரும் ‘இப்படி நீ செய்யக்கூடாதும்மா. நீ வீட்டுலதான் இருக்கணும்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொற்களைக் கேட்க சென்னவ்வா தயாராக இல்லை. அவள் மிகவும் உறுதியான குரலில் ‘நானும்தான் வருவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. அவர் என்னுடைய கணவர். அவரைப் புதைக்கற இடத்துல என்னையும் சேர்த்துப் புதைங்க. அவர் இல்லாத உலகத்துல வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்துவிட்டு உறுதியாக உட்கார்ந்துகொண்டாள்.

வேறு வழியில்லாமல் சென்னவ்வாவையும் சேர்த்து சுமந்துகொண்டு இடுகாட்டுக்குச் சென்றார்கள் பணியாட்கள். அவர்கள் இடுகாட்டை நெருங்கும் சமயத்தில் இடிமின்னலோடு கடுமையான மழை பொழியத் தொடங்கியது. இடுகாட்டில் பாடையை இறக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

இரண்டுமூன்று மணி நேரங்களாக காத்திருந்தபோதும் மழை நிற்கவே இல்லை. கொஞ்சம்கொஞ்சமாக வலுத்து பேய்மழையாக மாறியது. புயல்போல காற்று வீசியது. கிழக்கு மூலையில் இருந்த ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெள்ளம்போல இடுகாட்டை நோக்கிப் புரண்டு வந்தது. அதைப் பார்த்து அச்சம் கொண்ட அனைவரும் இடுகாட்டைவிட்டு வெளியேறி தத்தம் வீட்டை நோக்கியும் அரண்மனையை நோக்கியும் ஓடத் தொடங்கினர்.

மெல்ல மெல்ல பொழுது அடங்கத் தொடங்கியது. எங்கெங்கும் இருள் சூழ்ந்தது. மழை ஓயவே இல்லை. அந்த நேரத்தில் கூட பாடையில் இளவரசனின் உடலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் அவள். மழை வெள்ளத்தில் அவளைச் சுற்றி சேறும் சகதியும் ஓடியது.

‘நான் என்ன செய்யறது? இதுதான் என் விதி’ என்று சொன்னபடி அந்தச் சேற்றில் கையை விட்டு அளைந்தபடி இருந்தாள் சென்னவ்வா. அவள் கைகள் தன்னிச்சையாக அந்தச் சேற்றை அள்ளிக் குழைத்து ஒரு உருண்டையாக உருட்டின. அந்த உருண்டையை மனம்போன போக்கில் அழுத்தியும் தட்டையாக்கியும் வெவ்வேறு வடிவமாக மாற்றி மாற்றிச் செய்தன. ஒருமுறை உருவாக்கிய வடிவம் சிவன் கோவில் நந்தியைப்போல இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

நந்தீஸ்வரா என்று மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் சென்னவ்வா. அந்த நந்தியை தனக்கு முன்னால் நிற்கவைத்து, பல கோணங்களில் பார்த்து திருப்தியடைந்தாள். செத்துப்போன உடல்மீதிருந்த மாலையிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து அதன் மீது தூவினாள். தொடர்ந்து தனக்குத் தெரிந்த சிவன் பாடலை பக்தியோடு பாடத் தொடங்கினாள்.

அவள் பாடப்பாட அந்த நந்தி உருவம் தன் உடலை அசைப்பதுபோல இருந்தது. சில நொடிகளில் உண்மையிலேயே அவள் முன்னால் நந்தி உயிர்பெற்று எழுந்து நின்றது. ‘சென்னவ்வா, உன் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உனக்கு என்ன வேணும், கேள்’ என்று கேட்டது.

உடனே சென்னவ்வா கண்ணீரோடு தன் கதையையெல்லாம் நந்தியிடம் சொன்னாள். ‘என் புருஷனுடைய உயிர்தான் எனக்கு வேணும் நந்தீஸ்வரா. அவரோடு சேர்ந்து சிவபெருமான் பார்வதி மாதிரி நல்லவிதமா குடும்பம் நடத்தணும்’ என்று முறையிட்டாள். ‘உனக்காக நான் முயற்சி செய்றேன் சென்னவா, கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொன்னது நந்தி. அடுத்த கணமே அது மெல்ல அசைந்து கைலாசத்தை நோக்கிப் பறந்து சென்றது.

கைலாசத்தில் பார்வதியோடு உரையாடிக்கொண்டிருந்த சிவபெருமான் முன்னால் இறங்கி நின்று வணங்கியது நந்தி. உடனே சிவபெருமான் நந்தியை ஏறிட்டுப் பார்த்தார். உடனே ‘ஐயா, எனக்காக நீங்க ஒரு காரியம் செஞ்சிக் கொடுக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது நந்தி.

‘என்ன செய்யணும், சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘பூமியில நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் நீங்களும் பார்த்திருப்பீங்க. சென்னவ்வாவுடைய புருஷனுக்கு நீங்க மறுபடியும் உயிர் கொடுக்கணும். பாவம், ரொம்ப சின்ன பொண்ணு. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும்.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இப்படியெல்லாம் எடுத்த உயிரை கொடுத்துகிட்டே போனா, அதுக்கு ஒரு முடிவே இருக்காது. உனக்காக, அந்த சென்னவ்வாவுக்கு சின்னதா ஒரு சோதனை வைக்கலாம். அவளுடைய எதிர்வினை எப்படி இருக்குதுன்னு கவனிக்கலாம். அதுக்கப்புறம் நாம் உயிரைத் திருப்பிக் கொடுக்கிறதைப்பத்தி நாம ஒரு முடிவெடுக்கலாம்’ என்றார் சிவபெருமான். ‘சரி ஐயா’ என்று ஏற்றுக்கொண்டது நந்தி.

சிவபெருமான் அக்கணமே ஒரு புலியை சென்னவ்வா அமர்ந்திருக்கும் இடுகாட்டுக்குச் சென்று தாக்குதல் நிகழ்த்தும்படி ஏவிவிட்டார். இருளும் மழையும் சேர்ந்திருந்த அந்தப் பொழுதில் சிவபெருமான் ஏவிய புலி சென்னவ்வாவுக்கு அருகில் சென்று நின்று உறுமியது. சென்னாவின் உடலை இழுத்துச் சென்று தின்ன அது முயற்சி செய்தது. அதைப் புரிந்துகொண்ட சென்னவ்வா உடனடியாக இளவரசனின் உடலை மறைத்தபடி குறுக்கே படுத்துக்கொண்டு ‘புலி அண்ணா, புலி அண்ணா, உனக்குப் பசிச்சா நீ என்னை வேண்டுமானா அடிச்சிச் சாப்பிடு. தயவுசெஞ்சி என் கணவரை விட்டுடு’ என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.

அவள் கண்ணீரோடு கெஞ்சியதைப் பார்த்து அந்தப் புலியின் மனம் கரைந்துவிட்டது. இளவரசனின் உடலை நோக்கி முன்வைத்த காலை தயக்கத்தோடு பின்னால் எடுத்துக்கொண்டது. ஒருகணம் சென்னவ்வாவைப் பார்த்தது. ‘உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குது. நான் அவனையும் சாப்பிடலை, உன்னையும் சாப்பிடலை, போதுமா?’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

மறுகணமே கைலாசத்துக்குத் திரும்பிவந்து சிவபெருமான் முன்னால் நின்று வணங்கியது. உடனே சிவபெருமான் புலியை ஏறிட்டுப் பார்த்தார். ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது புலி.

‘சொன்ன வேலையைச் செய்யவிடாத அளவுக்கு உன்னை எது தடுத்தது, சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘சென்னவ்வாவுடைய பக்திதான் பெருமானே. அந்தச் சின்ன பொண்ண பார்க்க ரொம்ப பாவமா இருக்குது. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. கொல்லறதுக்கு மனசே வரலை. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும் பெருமானே.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை’ என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் சிவபெருமான். தன் முயற்சி தோற்றுப்போனதை நினைத்து வருத்தத்தோடு ஒதுங்கி நின்றது புலி.

நீண்ட யோசனைக்குப் பிறகு சிவபெருமான் ஒரு சிங்கத்தை அந்த இடுகாட்டை நோக்கிச் செல்லுமாறு ஏவினார். அந்தச் சிங்கமும் சென்னவ்வாவின் கண்ணீரில் மனம் கரைந்து திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

சிங்கத்தின் வேண்டுகோளைக் கேட்டு சலித்துப்போன சிவபெருமான் அடுத்து ஒரு யானையை ஏவினார். அந்த யானையும் சென்னவ்வாவின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கி திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

எல்லோரும் சென்னவ்வாவுக்காக வாதாடியதைக் கண்ட சிவபெருமான் தானே நேரில் பார்த்து நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக கைலாசத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டுக்கு வந்தார். வழக்கம்போல ஒரு சாமியாரின் கோலத்தில் தோளில் ஒரு பிச்சைப்பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையால் ஓர் ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கொட்டும் மழையில் அவளுக்கு முன்னால் வந்து நின்றாள். ‘அம்மா, ஏதாவது தானம் செய்யுங்கம்மா’ என்று சென்னவ்வாவை நோக்கி கை நீட்டினார்.

இடுகாட்டில் மழையில் இறந்துவிட்ட உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமியாருக்கு எதைத் தானமாகக் கொடுப்பது என்று புரியாமல் தவித்த சென்னவ்வா ஒருகணம் யோசனையில் மூழ்கினாள். மறுகணமே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தன் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலியைக் கழற்றியெடுத்து சாமியார் நீட்டிய கையில் வைத்தாள்.

‘இதைக் கொடுக்கறேன்னு தயவுசெஞ்சி நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. இந்த இடுகாட்டுல உக்காந்துகிட்டு இந்த மழையில உங்களுக்கு வேற எதையும் கொடுக்கமுடியாத நிலையில இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொன்னாள் சென்னவ்வா.

சென்னவ்வாவின் செய்கை சிவபெருமானின் மனத்தைக் கரைத்துவிட்டது. உடனே அவர் அந்தத் தாலியை அவள் கழுத்திலேயே மீண்டும் அணிவித்துவிட்டு, இறந்துபோன இளவரசனை மீண்டும் உயிர்ப்பித்தார். ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். தனக்கு அருகில் இருந்த இளவரசனின் உடலில் அசைவை உணர்ந்த சென்னவ்வா சாமியாருக்கு நன்றி சொல்லத் திரும்பினாள். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்.

அவர் சென்ற திசையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு நன்றியோடு கைகுவித்து வணங்கினாள் சென்னவ்வா. உயிர்பிழைத்த இளவரசன் சென்னா மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தான் இடுகாட்டில் இருப்பதையும் தனக்கு அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அவன் குழப்பமுற்றான். அவன் குழப்பம் தீரும் வகையில் சென்னவ்வா பொறுமையாக எல்லாவற்றையும் விரிவாக அவனுக்கு எடுத்துரைத்தாள். பிறகு இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று ஒதுங்கி விடியவிடிய கதைபேசி மகிழ்ந்தனர்.

காலையில்தான் மழை நின்றது. வெள்ளத்துக்கு அஞ்சி இடுகாட்டிலேயே பாடையை வைத்துவிட்டு ஓடிவிட்ட அனைவரும் மீண்டும் இடுகாட்டுக்கு வந்தனர். அங்கே சென்னாவும் சென்னவ்வாவும் மரத்தடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பிறகு அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் இருவரும் பொறுமையாக விளக்கம் கொடுத்தனர். அரண்மனையிலிருந்து ஒரு புதிய வண்டியை வரவழைத்து, அதில் இளவரசன் சென்னாவையும் சென்னவ்வாவையும் உட்காரவைத்து அரண்மனைக்கு ஓட்டிச் சென்றனர்.

வழிநெடுக அந்த ஊர்மக்கள் நின்று அந்த மணமக்களை வாழ்த்தினர். அரண்மனை வாசலிலேயே நின்றிருந்த ராஜாவும் ராணியும் அவ்விருவரையும் நெஞ்சோடு தழுவி மகிழ்ந்தனர். இறைவனின் கருணையே கருணை என கைலாசம் இருக்கும் திசையை நோக்கி எல்லோரும் கையை உயர்த்தி வணங்கினர். பிறகு ‘வலது காலை வச்சி உள்ள வாங்க’ என உரைத்து, மணமக்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் ராணி.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.

அந்தக் குட்டி எறும்பு அம்மா எறும்பைவிட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கணம் கூட அமைதியாகத் தங்கியிருக்காது. ஒரு புதரிலிருந்து இன்னொரு புதருக்கும் பிறகு அங்கிருந்து மற்றொரு புதருக்கும் ஊர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு வேலையும் கிடையாது. ஆனால் ஊர்ந்துகொண்டே இருக்கும் சுகத்துக்காகவே விழித்திருக்கும் நேரமெல்லாம் அப்படி தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும். அந்தக் குட்டி எறும்புக்கு அது ஒரு பொழுதுபோக்கு.

ஒருநாள் அது வேகமாக ஊர்ந்துகொண்டிருந்தபோது நிலம் வழுக்கி உருண்டு சென்று தண்ணீரில் விழுந்துவிட்டது. அதுவரை அச்சமென்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்துவிட்ட அந்தக் குட்டி எறும்புக்கு முதன்முதலாக அச்சம் ஏற்பட்டது. ‘அம்மா அம்மா, காப்பாத்துங்கம்மா’ என்று அம்மா எறும்பின் காதில் விழும் வகையில் அலறியது.

குட்டி எறும்பின் அலறலைக் கேட்டு அம்மா எறும்பு துடித்தது. தண்ணீரில் விழுந்து தவிக்கும் தன் குட்டி எறும்பின் நிலையைக் கண்டு அதன் உடல் நடுங்கியது. ‘சொன்ன பேச்சைக் கேக்காம இப்படி விழுந்து தானா துன்பத்தை வரவழைச்சிகிச்சே, இப்ப என்ன செய்வது?’ என்று நினைத்து வேதனைப்பட்டது.

‘ஐயோ, என் குட்டி எறும்பை யாராவது காப்பாத்துங்களேன்’ என்று அலறியது அம்மா எறும்பு. அதன் அலறலை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அந்த அம்மா எறும்பு தவித்தது. வேகவேகமாக ஊர்ந்து சென்று கரைக்குப் பக்கத்தில் நின்று கதறித் துடிக்கும் குட்டி எறும்பைப் பார்த்து ஆறுதல் சொன்னது. அடுத்த கணமே மேலேறி வந்து உதவிக்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று நான்கு பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றித் தேடியது.

அப்போது கரையோரத்தில் எங்கிருந்தோ ஒரு தவளை தத்தித்தத்தி குதித்தபடியே வந்து நின்றதை எறும்பு பார்த்தது. உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டதை நினைத்து அதன் மனம் ஆறுதல் அடைந்தது. உடனே வேகவேகமாக தவளைக்கு அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு, ‘தவளையண்ணா, தவளையண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது. ‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது தவளை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. எப்படியாவது அதைக் காப்பாத்துங்க தவளை அண்ணா. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று கெஞ்சியது.

அம்மா எறும்பின் குரல் காதில் விழுந்தபோதும், எதுவுமே கேட்காதமாதிரி அந்தத் தவளை நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது. பிறகு அலட்சியமாக தன் முகத்தைத் திரும்பி அம்மா எறும்பைப் பார்த்து ‘என்ன சொன்ன நீ? எனக்கு சரியா காதுல விழலை. இன்னொரு தரம் சொல்லு’ என்று கேட்டது. ‘என் குட்டி எறும்பு தெரியாத்தனமா மண் சரிவில சிக்கி தண்ணீருக்குள்ள விழுந்து உயிருக்குப் போராடுது. தயவுசெஞ்சி காப்பாத்துங்க தவளை அண்ணா’ என்று மன்றாடியது அம்மா எறும்பு.

‘உன் குட்டி எறும்பைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? அதனால எனக்கு என்ன லாபம்? பேசாம போ. போ. யாரையும் என்னால காப்பாத்த முடியாது’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது தவளை.

‘தவளையண்ணா, தவளையண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் உதவி கேட்பேன். தயவுசெஞ்சி வந்து காப்பாத்து தவளை அண்ணா’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘ஐய, ஒருதரம் சொன்னா உன் காதுல விழாதா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது தவளை.

அதைத் தொடர்ந்து தவளையிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்தது. உடனே ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா’ என்று அழைத்தபடி அதற்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் அந்தப் பாம்பு தன் புற்றுக்கு அருகில் சென்றுவிட்டது. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. கொஞ்சம் நில்லுங்க’ என்று கூவியபடி மூச்சு வாங்கியவண்ணம் பாம்பின் முன்னால் சென்று நின்றது எறும்பு. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பாம்பு. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. நீ வந்து அந்த தவளையப் புடிச்சி தின்னு புத்தி புகட்டணும். வாங்க. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று மன்றாடியது.

பாம்பு ஒருகணம் அந்த எறும்பை விசித்திரமாகப் பார்த்தது. பிறகு ‘எனக்கு பசியே இல்லாத நேரத்துல நான் எப்படி யாரையாவது புடிச்சி சாப்பிடமுடியும். உனக்கு வேற வேலை இல்லையா? பேசாம போ. போ’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது பாம்பு.

அதைத் தொடர்ந்து பாம்பிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக வசித்த ஒரு பாம்பாட்டியின் குடிசையைப் பார்த்தது. அவன் வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சென்ற அம்மா எறும்பு ‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா’ என்று அழைத்தபடி கட்டிலுக்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் பாம்பாட்டி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டான் பாம்பாட்டி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். எனக்கு இப்ப பசிக்கலை. நான் சாப்பிடமாட்டேனு பாம்பு சொல்லிடுச்சி. நீ இப்பவே வந்து அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி அடக்கி உன் தொழிலுக்கு எடுத்துக்கோ’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பாம்பாட்டி உடன்படவில்லை. ‘என்கிட்ட ஏற்கனவே ஒரு பாம்பு இருக்குது. புதுசா எனக்கு எந்தப் பாம்பும் தேவையில்லை. என்னைத் தொல்லை பண்ணாத. தூங்க விடு. போ’ என்று விரட்டியடித்துவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டினான் பாம்பாட்டி.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் மூழ்கியபடி அக்கம்பக்கம் பார்த்தது.

அப்போது ஒரு மரத்தடியில் நீண்டு செல்லும் வேர்களுக்கிடையில் ஒரு எலிவளையைப் பார்த்தது. உடனே அந்த வளைக்குப் பக்கத்தில் சென்று ‘எலி அண்ணா எலி அண்ணா’ என்று அவசரமாக அழைத்தது. நாலைந்து முறை குரல் கொடுத்த பிறகு வளையிலிருந்து எலி வெளியே வந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த எறும்பைப் பார்த்து ‘நீயா என்னைக் கூப்பிட்டாய்? என்ன விஷயம்?’ என்று கேட்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது எலி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். நீ அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி பெரிசா ஒரு ஓட்டை போடணும். அந்தப் பாம்பு தப்பிச்சி ஓடிடும். அப்பதான் அந்தப் பாம்பாட்டிக்கு புத்தி வரும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு எலி உடன்படவில்லை. ‘அவசியமே இல்லாம பாம்பாட்டி கூடையைக் கடிச்சி நான் ஏன் ஓட்டை போடணும். போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியது. பிறகு ‘நான் ஓய்வெடுக்கணும்’ என்று முணுமுணுத்துக்கொண்டே வளைக்குள் புகுந்துகொண்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது எலி.

தன் திட்டம் தொடர்ந்து தோல்வியடைவதைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் சிறிது தொலைவு சென்றது.

ஒரு செடிக்குப் பக்கத்தில் ஒரு பூனை உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நம்பிக்கையோடு, அந்தப் பூனைக்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது பூனை.

‘பூனை அண்ணா, பூனை அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பூனை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி ஓட்டை போட்டு அவனுக்குப் புத்தி புகட்டுன்னு எலிகிட்ட சொன்னேன். அந்த எலியும் எதுவும் செய்யமுடியாதுனு சொல்லி விரட்டியடிச்சிட்டுது. நீ அந்த எலியைப் புடிச்சி கரகரனு கடிச்சி சாப்பிடணும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பூனை உடன்படவில்லை. ‘எந்தக் காரணமும் இல்லாம ஒரு எலியை நான் ஏன் கடிச்சிக் கொல்லணும்? போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியடித்தது பூனை.

தன் திட்டம் பூனையிடமும் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டபடி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாய் கரையில் ஏறி நிற்பதைப் பார்த்தது.

உடனே நம்பிக்கையோடு, அந்த நாய்க்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது நாய்.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனை பாம்புக்கூடையில் ஓட்டை போட மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்த நாயிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்த நாய்க்கு வேகமூட்டும் வகையில் ‘நாய் அண்ணா, நாய் அண்ணா, நீ அந்தப் பூனையை இந்த வட்டாரத்தைவிட்டே துரத்திடிக்கணும். அப்பதான் அதனுடைய திமுரு அடங்கும்’ என்று கேட்டுக்கொண்டது.

அந்த நாய் எறும்பைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தது. ‘ஒரு பூனை உனக்கு உதவி செய்யலைன்னா, அது உனக்கும் பூனைக்கும் உள்ள பிரச்சினை. அந்தப் பிரச்சினைக்குள்ள நான் எப்படி நடுவுல வரமுடியும்? போ. போ. உன் பிரச்சினையை நீயே தீத்துக்கோ. நடுவுல என்னை இழுத்துவிடாதே’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபடியே சிறிது தொலைவு சென்றது.

ஒரு மரத்தடியில் யாரோ எப்போதோ உடைத்துப் போட்ட ஒரு கிளை உலர்ந்து கிடந்தது. பார்ப்பதற்கு உருட்டுக்கட்டை போல இருந்தது. யாருமே தனக்கு உதவவில்லை என்கிற ஆற்றாமையோடு அந்தக் கட்டையிடம் சென்று ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு உதவி செய்வியா?’ என்று சொல்லிப் புலம்பியது. அதன் குரல் கட்டையின் காதில் விழுந்தது. ‘என்ன உதவி வேணும், சொல்’ என்று பரிவோடு கேட்டது கட்டை.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனையை விரட்டியடிக்க நாய் மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்தக் கட்டையிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்தக் கட்டைக்கு வேகமூட்டும் வகையில் ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. எனக்கு உதவி செய்ய மறுத்த அந்த நாயை நீதான் ஓட ஓட அடிச்சி விரட்டணும். இந்த உலகத்துல யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு இந்த உதவியைச் செய்யணும்’ என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டது.

எறும்பின் மனத்தில் இருந்த சீற்றத்தை கட்டை புரிந்துகொண்டது. ‘உனக்கு நான் கட்டாயமா உதவி செய்றேன். கவலைப்படாதே’ என்று நம்பிக்கையூட்டும் குரலில் ஆறுதல் சொன்னது. தொடர்ந்து ‘ஒரு விஷயத்தை நீ புரிஞ்சிக்கணும். நானா பறந்துபோய் யார்மேலயும் விழுந்து அடிக்கமுடியாது. யாராவது என்னைப் புடிச்சி அவுங்கள நோக்கி வீசணும். முதல்ல நீ என்னை எடுத்து அந்த நாயைப் பார்த்து வீசு. நான் போய் அடிக்கறேன்’ என்று சொன்னது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியது அம்மா எறும்பு. ‘நான் இருக்கற அளவுக்கு உன் உருவத்தை என்னால தூக்கமுடியுமா? அதெல்லாம் நடக்கற காரியமா, சொல்’ என்று தளர்ந்த குரலில் பதில் சொன்னது. அதே சமயத்தில் அடுத்த என்ன செய்யலாம் அடுத்து என்ன செய்யலாம் என அதன் ஆழ்மனம் யோசனையில் மூழ்கியது.

சிறிது தொலைவில் ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்து ஒரு சிறுவன் பாடம் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உரத்த குரலைக் கேட்டபிறகுதான் அவன் அங்கே இருப்பதை அம்மா எறும்பு உணர்ந்தது. உடனே அதன் மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. வேகவேகமாக அந்தச் சிறுவனை நோக்கி ஊர்ந்து சென்றது. பாடத்தில் மூழ்கியிருந்த சிறுவன் தன்னை நோக்கி ஒரு எறும்பு ஊர்ந்துவருவதைக் கவனிக்கவில்லை. அவனை நெருங்கி வந்த அம்மா எறும்பு ‘தம்பி, தம்பி, எனக்கு ஒரு உதவி செய்வியா?’ என்று கேட்டது.

பேசும் எறும்பைப் பார்த்து படிப்பதை நிறுத்திய சிறுவன் ‘உதவியா? என்ன உதவி?’ என்று கேட்டான். ‘அதோ, அங்க இருக்கற கட்டையை எடுத்து அந்த நாயை அடிக்கணும்’ என்று சுட்டிக் காட்டியது. ‘நான் எதுக்கு அந்த நாயை அடிக்கணும். போ. போ. எனக்கு படிக்கிற வேலை இருக்குது’ என்று சலித்துக்கொண்டான் சிறுவன். அவன் பதிலைக் கேட்டு அம்மா எறும்புக்கு துயரம் பொங்கியது. ‘உயிரே இல்லாத அந்தக் கட்டை என் துக்கத்தைப் புரிஞ்சிகிட்டு எனக்கு உதவி செய்ய தயாரா இருக்குது. ஆனா உயிரு இருக்கற நீங்க எல்லாருமே இரக்கமே இல்லாதவங்களா இருக்கறீங்க. உங்களைவிட அந்தக் கட்டை ரொம்ப மேல்’ என்று புலம்பியது.

‘நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோ. எனக்கு பாடம் படிக்கிற வேலை இருக்குது’ என்று திரும்பி உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான் சிறுவன்.

‘இரு இரு. உனக்கு நான் சரியான பாடம் கத்துக் குடுக்கறேன்’ என்று சொன்ன அம்மா எறும்பு மனத்துக்குள் கறுவிக்கொண்டே மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அவன் தொடையின் மேல் ஏறி நறுக்கென்று கடித்தது.

‘ஐயோ, இது என்ன? ஏன் இப்படி கடிக்கிற?’ என்று அலறினான் சிறுவன்.

‘எனக்கு உதவி செய்றேன்னு சொல்லு. அப்பதான் கடிக்கிறத நிறுத்துவேன்’ என்றபடி மீண்டும் அழுத்தமாக அவன் தொடையைக் கடித்தது அம்மா எறும்பு.

‘சரி சரி. உதவி செய்றேன். முதல்ல கடிக்கிறத நிறுத்து’ என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றான். அம்மா எறும்பு அவனைப் பார்த்தது.

‘என்ன செய்யணும், சொல்லு’ என்று கேட்டான் சிறுவன்.

‘எடு. அந்தக் கட்டையை எடு. எடுத்து அந்த நாயை அடி’ என்றது அம்மா எறும்பு.

அந்தச் சிறுவன் வேகமாகச் சென்று அருகிலிருந்த அந்தக் கட்டையை எடுத்து நாயை நோக்கி குறிபார்த்து வேகமாக வீசினான். நாயின் வயிற்றில் அந்தக் கட்டை சரியாகத் தாக்கியது. ‘ஐயோ’ என்று வலியால் அலறிக்கொண்டு எழுந்தது நாய் தனக்கு எதிரில் அம்மா எறும்பையும் அதற்கு உதவியாக ஒரு சிறுவனும் நின்றிருப்பதைப் பார்த்து அச்சம் கொண்டது. ‘ஐயோ, அடிக்காத. நான் என்ன செய்யணும், சொல்’ என்று வலியோடு கேட்டது.

‘போ. போய் அந்தப் பூனையை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே நாய் அந்தப் பூனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

நாய் விரட்டிவருவதைப் பார்த்ததுமே தப்பிப்பதற்காக அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஓடியது பூனை. எந்தப் பக்கம் சென்றாலும் பின்னாலேயே விரட்டிவரும் நாயைப் பார்த்து அச்சத்தில் மூழ்கியது. இறைக்க இறைக்க ஓடியபடியே அம்மா எறும்பைப் பார்த்து ‘ஐயோ, என்னை விரட்டவேணாம்னு சொல்லு. நான் என்ன செய்யணும். சொல்லு. அதைச் செய்யறேன்’ என்று அலறியது.

‘போ. போய் அந்த எலியை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே அந்தப் பூனை எலியை நோக்கி ஓடியது. பூனை தன்னை விரட்டி வருவதை உணர்ந்ததும் எலி நடுங்கியது. அங்குமிங்கும் ஓடி மறைந்துகொள்ள முயற்சி செய்தது. பூனையின் வேகத்தின் முன்னால் அதன் முயற்சி பலனின்றி தோல்வியில்தான் முடிந்தது. மூச்சிறைக்க ஓடி களைத்துப்போன எலி ‘ஐயோ. என்னை விரட்ட வேணாம்னு பூனைகிட்ட சொல்லு. நான் என்ன செய்யணும், அதைச் சொல்லு. நீ சொல்றபடி செய்றேன்’ என்று அம்மா எறும்பிடம் கேட்டது. ‘போ. அந்தப் பாம்பாட்டியுடைய கூடையில கடிச்சி ஓட்டை போடு’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே தூக்கத்தில் மூழ்கியிருந்த பாம்பாட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையில் ஒருபக்கமாக கடித்துக் கடித்து ஓட்டை போட்டுவிட்டுச் சென்றது.

பாம்பாட்டி அப்போதும் நல்ல உறக்கத்தில் மூழ்கியிருந்தான். பாம்புக்கூடையில் சுருண்டிருந்த பாம்பு ஓட்டை வழியாக மெல்ல வெளியே வந்தது. முற்றிலுமாக வெளியே வந்ததும் விடுதலை கிடைத்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க நினைத்தது.

தன் முன்னால் நின்றிருந்த அம்மா எறும்பைப் பார்த்து பாம்பு ஒரு கணம் திகைத்து நின்றது. அம்மா எறும்பு தன் கதையை எல்லாம் அந்தப் பாம்பிடம் விளக்கமாகச் சொன்னது. அதைத் தொடர்ந்து ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீ விடுதலையாவறதுக்கு நான்தான் காரணம். நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘என்ன செய்யணும், சொல்’ என்று இரக்கத்தோடு கேட்டது பாம்பு.

‘அங்க கரையோரமா ஒரு தவளை உக்காந்திட்டிருக்குது பாரு. அதை நீ ஒரே விழுங்கா விழுங்கணும்’ என்றது அம்மா எறும்பு.

‘ஆகா. நானும் ரொம்ப பசியோடு இருக்கேன். எங்கே இருக்குது அந்தத் தவளை. அதைக் காட்டு’ என்று தலையைத் திருப்பி உற்றுப் பார்த்தது பாம்பு. அம்மா எறும்பு அது உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டியது. உடனே பாம்பு அதை நோக்கி வேகமாகச் சென்றது.

தன்னை நோக்கி வேகமாக ஒரு பாம்பு வருவதையும் அதற்குப் பின்னால் அம்மா எறும்பு நின்றிருப்பதையும் பார்த்த தவளை அச்சத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்தபடியே தப்பிக்க இடம் தேடி தத்தளித்தபடி ‘ஐயோ எறும்பே. நான் என்ன செய்யணும் சொல். என்னைக் கொல்ல வேணாம்’ என்று கதறியது. ‘சீக்கிரமா தண்ணியில குதிச்சி, உயிருக்குத் தவிச்சிட்டிருக்கிற என் குட்டி எறும்பைக் காப்பாத்தி கரைக்கு அழைச்சிட்டு வா’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு.

உடனே தவளை ஒரே பாய்ச்சலில் தண்ணீருக்குள் தாவியது. அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குட்டி எறும்பை நெருங்கி தன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதுவரை மூச்சுவிட தடுமாறிக்கொண்டிருந்த குட்டி எறும்பு வேகமாகச் செயல்பட்டு சட்டென அந்தத் தவளையின் முதுகில் ஏறி அமர்ந்தது. அப்போதுதான் அதற்கு போன உயிர் திரும்பிவந்த மாதிரி இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டது. தவளை மெதுவாக கரைக்கு வந்து சேர்ந்தது. குட்டி எறும்பும் அதன் முதுகிலிருந்து இறங்கி வந்து அம்மா எறும்போடு சேர்ந்துகொண்டது.

பாம்புக்கும் தவளைக்கும் அம்மா எறும்பு நன்றி சொல்லிவிட்டு தன் புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது. குட்டி எறும்பைப் பாதுகாப்பாக புற்றுவரை அழைத்துச் சென்று தங்கவைத்தது. பிறகு தொடக்கத்தில் நின்றிருந்த இடத்துக்கு மீண்டும் தனிமையில் திரும்பி வந்தது. ஆபத்து சமயத்தில் தனக்கு உதவ மறுத்த பாம்புக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அதன் மனம் திட்டமிட்டது.

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பாம்பாட்டி தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த பாம்புக்கூடையில் ஓட்டை இருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். கூடைக்குள் இருந்த பாம்பு தப்பித்துச் சென்றிருப்பதை உணர்ந்து திகைப்பில் மூழ்கினான். இது யார் செய்த வேலையாக இருக்கும் என்று தெரியாமல் அவன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு முன்னால் சென்று நின்றது அம்மா எறும்பு.

‘கூடைக்குள்ள இருந்த பாம்பு தப்பிச்சிடுச்சின்னு நினைச்சி கவலைப்படாதே பாம்பாட்டி அண்ணா. நான்தான் என்னுடைய சொந்தக் காரணத்துக்காக அதைத் தப்பிக்க வைச்சேன். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. உனக்கு வேற ஒரு பாம்பு கிடைக்க ஏற்பாடு செய்றேன். அந்தப் பாம்பு இருக்கற இடம் எனக்குத் தெரியும். நீ என் கூட வந்தா, நான் அந்த இடத்தைக் காட்டுவேன். நீ மகுடி ஊதி அதைப் புடிச்சி எடுத்துக்கலாம்.’

அம்மா எறும்பு சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது பாம்பாட்டிக்குப் புரிந்தது. மறுபேச்சில்லாமல் மகுடியோடும் புதிய கூடையோடும் அம்மா எறும்புக்குப் பின்னாலேயே சென்றான். சிறிது தொலைவு சென்றதும் அம்மா எறும்பு தனக்கு உதவிக்கு வராமல் ஏளனம் செய்த பாம்பு வசிக்கும் புற்றை அந்தப் பாம்பாட்டிக்கு அடையாளம் காட்டியது.

பாம்பாட்டி அந்தப் புற்றுக்கு அருகில் சென்று மகுடியை எடுத்து ஊதினான். புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை லாவகமாகப் பிடித்து தன் கூடைக்குள் சுருட்டி வைத்தான். தொலைவிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மா எறும்பைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு புன்னகைத்தபடி தன் குடிசையை நோக்கி நடந்து சென்றான்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா. இளையவள் பெயர் புஷ்பா.

அவர்களுடைய வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பூந்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தில் பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கின. தினந்தோறும் காலையில் தூங்கி எழுந்ததும் அந்த அம்மா தோட்டத்துக்குச் சென்று ஒரு சிறிய கூடை நிறைய பூக்களைப் பறித்து எடுத்துவருவாள்.

அவர்கள் வசித்துவந்த குடிசையிலிருந்து நடந்து செல்கிற தொலைவில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ளேயும் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தப் பூக்களில் இருந்து எழும் நறுமணம் இனிய மயக்கத்தைக் கொடுப்பதுபோல இருக்கும். தோட்டத்தில் அம்மா பூக்களைப் பறிக்கும் சமயத்தில் இரு மகள்களும் காட்டில் உள்ள பூந்தோட்டத்துக்குச் செல்வார்கள். நடக்கும்போது சிரிக்கச்சிரிக்க கதை பேசிக்கொண்டே சென்று வருவதால் அவர்களுக்கு களைப்பே தெரியாது. அங்கிருக்கும் பூந்தோட்டத்தில் ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்கும். இருவரும் சேர்ந்து கூடை நிறைய பூக்களைப் பறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

காலையில் கஞ்சி குடித்தபிறகு இரு மகள்களும் ஆளுக்கு ஒரு கூடையை எடுத்துக்கொண்டு பூக்களை விற்று வருவதற்காக சந்தைக்குச் செல்வார்கள். சந்தைக்குச் செல்லும் வழியில் உள்ள தெருக்களில் ‘பூ வாங்கலையோ பூ’ என்று கூவியபடி செல்வார்கள். சிலர் தம் வீடுகளிலிருந்து வெளியே வந்து பூ வாங்கிக்கொண்டு செல்வார்கள். கூடைகளில் நிரப்பி எடுத்துவந்த பூக்களில் பெரும்பகுதியை தெருவில் வசிப்பவர்களே வாங்கிவிடுவார்கள். எஞ்சியிருக்கும் பூக்கள் சந்தையில் உச்சி வேளைக்குள் விற்பனை ஆகிவிடும்.

விற்பனையில் கிடைத்த பணத்தில் சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், உப்பு, புளி முதலிய பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.

அவர்கள் வந்ததும் சமையல் வேலையைத் தொடங்குவாள் அம்மா. சமைத்து முடித்ததும் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பொழுது அப்படித்தான் கழிந்துவந்தது.

புனிதாவும் புஷ்பாவும் சகோதரிகள் என்றபோதும், அதையும் கடந்து இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். ஒன்றாகவே வருவார்கள்.

செடிகளில் பூக்கும் பருவம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தோட்டத்தில் வழக்கமாக ஒரு கூடை நிறைய பூக்களைப் பறிக்கும் அம்மா அரைக்கூடை கூடக் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படத் தொடங்கினாள். காட்டில் இருக்கும் தோட்டத்திலும் பூக்கள் குறைவாகவே கிடைத்துவந்தன. பூக்கள் குறைந்ததால் விற்பனை குறைந்தது. விற்பனை குறைந்ததால் வருமானமும் குறைந்தது. அரைவயிறும் கால்வயிறுமாகச் சாப்பிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

ஒருநாள் நள்ளிரவில் ஏதோ கெட்ட கனவின் விளைவாக புஷ்பாவுக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்ணைத் திறந்து பார்த்தாள். எங்கெங்கும் இருளே சூழ்ந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக இருண்ட வானமும் மேகங்களைக் கடந்துசெல்லும் அரைநிலாவும் தெரிந்தன. அப்போதுதான் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டு படுத்த நிலையிலேயே தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

நடுவீட்டில் மாடக்குழியில் இருந்த சாமி விளக்கின் முன்னால் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் உருவம் தெரிந்தது. யாரோ ஒரு முகம் தெரியாத மனிதரிடம் பேசுவதுபோல அந்த விளக்கிடம் எதையோ சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள் அம்மா. அழுதுகொண்டே அவள் பேசிக்கொண்டிருந்ததால் அவளுடைய சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அம்மாவின் முகத்தில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்க்கப் பார்க்க புஷ்பாவுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. உடனடியாக புனிதாவை எழுப்பவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆயினும் அந்த எண்ணத்தை அப்படியே அடக்கிக்கொண்டு என்னதான் நடக்கிறது பார்ப்போம் என அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘கடவுளே, இது உனக்கே அடுக்குமா? பெத்தெடுத்த புள்ளைங்களுக்கு வயிறு நிறைய சோறு போடக்கூட முடியாத நிலையில என்னை வச்சிருக்கியே, இது நியாயமா? இந்த உலகத்துக்கே வழிகாட்டறியே, என் ஒருத்திக்கு நீ நல்ல வழி காட்டக்கூடாதா? உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?’

இந்தத் துக்கத்திலிருந்து எப்படியாவது அம்மாவை மீட்கவேண்டும் என புஷ்பாவின் மனம் திட்டமிட்டது. நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அவள் நெஞ்சில் ஒரு எண்ணம் உருவானது. அக்கணமே அவள் கவலைகள் எல்லாம் விலகிவிட்டன. குடும்பத்தில் கவிந்த வறுமைச்சூழலில் இருந்து மீண்டுவிடலாம் என்றும் துக்கத்தில் மூழ்கியிருக்கும் அம்மாவையும் மீட்டெடுத்துவிடலாம் என்றும் அவள் மனம் நம்பியது. அம்மாவைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, மெதுவாக விழிமூடி உறங்கத் தொடங்கினாள்.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் குளித்துமுடித்த பிறகு வழக்கம்போல பூப்பறிப்பதற்காக அம்மா தோட்டத்துக்குச் சென்றுவிட்டாள். புனிதாவும் புஷ்பாவும் கூடையை எடுத்துக்கொண்டு காட்டின் திசையில் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். நடைக்களைப்பு தெரியாமல் இருப்பதற்காக புனிதா ஒரு காட்டில் சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரியின் கதையைச் சொல்லிக்கொண்டே வந்தாள். கதை முடிவதற்கும் காட்டை அடைவதற்கும் சரியாக இருந்தது.

தோட்டத்தில் நிறைய பூச்செடிகள் இருந்தபோதும் பல செடிகளில் பூக்களே இல்லை. ஒருசில செடிகளில் ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமே காணப்பட்டன. அதுவரை அவர்களுக்கு அரைக்கூடை நிறையும் அளவுக்காவது பூக்கள் கிடைத்துவந்தன. அன்று அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்கும் அளவுக்கு மட்டுமே பூக்கள் கிடைத்தன.

‘இத கொண்டுபோய் வித்தா என்னடி கிடைக்கும்? யாராவது ஒரு ஆள் வந்து வாங்கினாலே முடிஞ்சிபோயிடும். நிச்சயமா நாம எல்லாரும் இன்னைக்கு பட்டினியாதான் இருக்கணும்.’

புனிதாவின் முகம் வாடியது. அவள் பெருமூச்சு விடுவதைப் பார்க்க புஷ்பாவுக்கு வருத்தமாக இருந்தது. நேற்று இரவு அம்மா கண்ணீர் விட்டு அழுத காட்சியும் அப்போது நினைவுக்கு வந்தது.

‘அக்கா, நான் ஒரு முக்கியமான செய்தி சொல்றேன். அதை நீ யாருகிட்டயும் சொல்லக்கூடாது. சரியா?’ என்று புனிதாவிடம் சொன்னாள்.

‘அப்படி என்னடி முக்கியமான செய்தி? அதை ஏன் யாருகிட்டயும் சொல்லக்கூடாது?’ என்று புஷ்பாவைக் குழப்பத்தோடு பார்த்தாள் புனிதா.

‘அது அப்படித்தான். முதல்ல நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லு. அதுக்கப்புறம் என்ன செய்திங்கறத நான் சொல்றேன்.’

புஷ்பாவை ஒருகணம் விசித்திரமாகப் பார்த்தாள் புனிதா. பிறகு ‘சரிடி அம்மா. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அது என்ன செய்தியோ, அதைச் சொல்லு’ என்றாள்.

‘சத்தியமா.’

‘ஏன் சத்தியம் செய்தாதான் சொல்வியா?’

‘ஆமாம்.’

‘சரி, சத்தியமா, சத்தியமா, சத்தியமா. போதுமா?’

‘பூ கிடைக்கலைங்கறதுதான இப்ப நம்ம குறை? கூடை நிறைய பூ கிடைக்கறதுக்கு என்கிட்ட ஒரு வழி இருக்குது. அதும்படி நாம செஞ்சா, தினந்தினமும் கூடை நிறைய பூ கிடைக்கும். நமக்கும் நிறைய பணமும் கிடைக்கும்.’

கண்கள் மின்ன விவரித்துக்கொண்டே போகும் புஷ்பாவை ஒருமுறை தலையிலிருந்து கால்வரைக்கும் மெளனமாகப் பார்த்தாள் புனிதா.

‘என்னடி உன் வழி? ஏதேதோ உளறாம, புரியறமாதிரி அதை முதல்ல சொல்லுடி.’

‘நல்லா கேட்டுக்கோ. நான் நினைச்சா, என்னால பூ பூக்கிற மரமா மாறமுடியும். அந்த சக்தி என்கிட்ட இருக்குது.’

‘ஏன்டி இப்படி திடீர்னு உளற ஆரம்பிச்சிட்ட?’

‘உளறலை. உண்மையைத்தான் சொல்றேன். பொறுமையா கேளு. நான் மரமா நிக்கிற சமயத்துல நீ இந்தக் கூடை நிறைய பூக்களை பறிச்சிக்கோ. அந்த அளவுக்கு அதிகமா ஒரு பூவைக்கூட பறிக்கக்கூடாது. பூவைக் கிள்ளி எடுக்கும்போது அளவா கிள்ளி எடுக்கணும். எந்தக் கிளையையும் உலுக்கக்கூடாது. ஒவ்வொரு பூவா தொட்டுத் தொட்டுத்தான் எடுக்கணும். தேவை இல்லாம கிளைகளை வளைக்கிறதோ, இலைகளைக் கிள்ளறதோ கூடாது. புரியுதா?’

புஷ்பா சொல்லச்சொல்ல நம்பமுடியாதவள் போல உறைந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைத் தொட்டு அசைத்தாள். ‘என்ன அக்கா, நான் சொல்றது புரியுதா?’ என்று கேட்டாள்.

‘புரியுது. ஆனா, இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாவும்னுதான் தெரியலை. அதான் யோசிக்கிறேன்’ என்று நம்பிக்கையற்றவளைப்போல பதில் சொன்னாள் புனிதா.

‘இங்க பாருக்கா. முதல்ல நம்பக் கத்துக்கோ. நம்பிக்கைதான் வாழ்க்கை. புரியுதா?’

‘சரி, முதல்ல நீ பூ பூக்கிற மரமா மாறு. பார்க்கலாம்.’

‘அதுக்கு முன்னால நீ ஒரு முக்கியமான வேலை செய்யணும்’

‘அது என்ன வேலை?’

‘அதோ அங்க ரெண்டு குடம் இருக்குது பாரு. அதை அந்தக் குளத்தங்கரைக்கு எடுத்தும் போயி சுத்தமா கழுவு. ரெண்டு குடம் நிறைய தண்ணியை நிரப்பி எடுத்து வா. குடத்துக்குள்ள தண்ணிய நிரப்பிய பிறகு உன் விரல் நகம் கூட அந்த தண்ணியில படக்கூடாது. தீட்டு பட்டுடும். கவனமா சிந்தாம சிதறாம எடுத்துட்டு வரணும்.’

‘அப்புறம்?’

‘நான் இங்கயே உக்காந்துட்டிருப்பேன். ஒரு குடம் தண்ணியை எடுத்து குளிக்கவைக்க தலையில ஊத்தறமாதிரி என் தலையில ஊத்து. உடனே நான் மரமா மாறிடுவேன். ஒவ்வொரு கிளையிலும் ஏராளமான பூ பூத்திருக்கும். கூடை நிறைய தேவைப்படற அளவுக்கு நீ பூக்களை பறிச்சிக்கலாம். எல்லா வேலையையும் முடிச்சிட்ட பிறகு தண்ணி வச்சிருக்கிற இன்னொரு குடத்த எடுத்து மரத்தை சுத்தி ஊத்தணும். உடனே நான் மறுபடியும் பொண்ணா மாறிடுவேன்.’

புஷ்பாவின் சொற்களில் புனிதாவுக்கு அப்போதும் நம்பிக்கை பிறக்கவில்லை. ‘நீ சொல்றதெல்லாம் உண்மையா நடக்குமாடி?’ என்று சந்தேகத்தோடு கேட்டாள்.

‘முதல்ல உன் அவநம்பிக்கையை நிறுத்துக்கா. நடக்கும்னு நம்பிக்கையோடு நினைச்சிக்கோ அக்கா. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.’

‘சரி’ என்றபடி அரைமனத்தோடு அங்கே ஒரு மரத்தடியில் காணப்பட்ட இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு குளத்துக்குச் சென்றாள். திரும்பித்திரும்பி புஷ்பாவைப் பார்த்தபடியே நடந்துபோனாள். புஷ்பா சொன்னபடி இரு குடங்களையும் முதலில் நன்றாகக் கழுவி தூய்மைப்படுத்தினாள். பிறகு தண்ணீரை நிரப்பிக்கொண்டாள். அந்தத் தண்ணீரில் விரல் படாமல் லாவகமாக எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

புஷ்பா ஏற்கனவே நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தாள். புனிதா குடங்களுடன் திரும்பி வருவதைப் பார்த்ததும் அதே இடத்தில் கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்தாள்.

ஒரு குடத்தை அருகிலிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு இன்னொரு குடத்தோடு புஷ்பாவின் அருகில் வந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைப் பார்த்து தண்ணீரை தன் தலைமீது ஊற்றுமாறு கண்ணாலேயே சைகை செய்தாள். அவள் உதடுகள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தன. குடத்தை உயரே தூக்கி தன் கைவிரல் பட்டுவிடாதபடி மெதுவாக குடத்தைச் சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பாவின் தலையில் தண்ணீரை ஊற்றினாள் புனிதா.

பானையிலிருந்த கடைசிச்சொட்டு தண்ணீர் புஷ்பாவின் மீது விழும்வரை, அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மறுகணமே புஷ்பா மாயமாக மறைந்துபோனாள். அந்த இடத்தில் உண்மையாகவே பூக்கள் நிறைந்த ஒரு மரம் நின்றது. ஒவ்வொரு கிளையிலும் கொத்துக்கொத்தாக பூக்கள் தொங்கின. புனிதா ஒரு கிளையை நெருங்கிச் சென்று ஒரு பூவைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையான பூ. கமகமவென அதன் நறுமணம் வீசியது.

புஷ்பா சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. வேகவேகமாக தம் பூக்கூடையை எடுத்துவந்து ஒவ்வொரு பூவாக எச்சரிக்கையோடு பறித்து கூடைக்குள் போட்டாள். வெகுவிரைவில் அந்தக் கூடை நிறைந்துவிட்டது.

இன்னும் பத்து கூடைகளை நிரப்பலாம் என்கிற அளவுக்கு கிளைகளில் பூக்கள் நிறைந்திருந்தன. அவற்றை என்ன செய்வது என வாய்பிளந்து பார்த்தாள் புனிதா. அப்போது ஏற்கனவே புஷ்பா எச்சரிக்கையாகச் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. உடனே மனநிறைவோடு கூடையை எடுத்துவந்து வேறொரு மரத்தடியில் வைத்துவிட்டு, அங்கிருந்த இரண்டாவது தண்ணீர்க்குடத்தை எடுத்துச் சென்று பூமரத்தின் வேரில் ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் தரையில் விழுந்த கணத்தில் மரம் மறைந்துவிட, அந்த இடத்தில் புஷ்பா அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் ஒரு மரம் இருந்ததற்காக எவ்விதமான அடையாளமும் தெரியவில்லை.

புன்னகைத்தபடியே எழுந்து நின்று புனிதாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள் புஷ்பா. தன் சகோதரியின் சாமர்த்தியத்தையும் தியாகத்தையும் நினைத்து பெருமையோடு அவளைத் தழுவிக்கொண்டாள் புனிதா.

‘அக்கா, நாம கெளம்பலாம். இப்ப புறப்பட்டாதான் சந்தைக்கு நேரத்தோடு போய் சேரமுடியும்.’

‘ஆமாமாம் கெளம்பு.’

புனிதா கூடையைச் சுமந்துகொள்ள இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

‘மரமா மாறக்கூடிய சக்தி உனக்கு எப்ப வந்தது? எப்படி வந்தது?’ என்று ஆர்வத்தோடு கேட்டாள் புனிதா.

‘சின்ன வயசுல இங்கதான அடிக்கடி வந்து விளையாடிட்டிருப்பேன். அப்ப ஒருநாள் ஒரு சாமியாரு இந்த வழியா நடந்து போனாரு. அவருக்கு ஒரு கால் இல்ல. குச்சி வச்சிட்டு ஒத்தக் காலால நடந்து போனாரு. பார்க்கறதுக்கே பரிதாபமா இருந்தது. அவருக்கு ரொம்ப தண்ணி தாகம்போல. அந்த வழியா போன என்னைப் பார்த்து இங்க குடிக்கறதுக்கு தண்ணி எங்க கிடைக்கும்னு கேட்டாரு. நான் தண்ணி இருக்கற இடத்தை சொல்லி, அவரு அந்த இடத்துக்கு நொண்டி நொண்டி போய் சேர்றதுக்குள்ள பொழுதே போயிடும்னு நினைச்சி, இங்கயே இரு தாத்தா, நான் போய் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு ஓட்டமா ஓடி ஒரு தேக்கு இலையை பொட்டலம்மாதிரி மடிச்சி, அதுக்குள்ள தண்ணியை நிரப்பி எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.’

‘சரி.’

‘அதை குடிச்ச பிறகுதான் அவருக்குத் தெம்பு வந்தது. அதுக்கப்புறம்தான் அவரு என்னைப் பத்தி விசாரிச்சாரு. நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு சிரிச்சிகிட்டே என்னை ஆசீர்வாதம் செஞ்சாரு. அதுக்கப்புறம்தான் மரமா மாறக்கூடிய ஒரு மந்திரத்தைச் சொல்லி செய்முறையையும் கத்துக் குடுத்தாரு. இதெல்லாம் எதுக்குங்க தாத்தான்னு அவர்கிட்ட கேட்டேன். என்னைக்காவது உனக்கு உதவியா இருக்கும்மான்னு சிரிச்சிகிட்டே சொல்லிட்டு போயிட்டாரு. அப்பவே நான் அதை மறந்துட்டேன். நேத்து ராத்திரி நடுராத்திரியில எழுந்து உக்காந்துகினு சாமியப் பார்த்து அம்மா அழுது புலம்பனதைப் பார்த்தேன். பூ கிடைக்கலைங்கறதுக்காக மனக்கஷ்டத்தோடு அம்மா பேசிட்டிருந்தாங்க. அப்பதான் நம்மால முடிஞ்ச அளவுக்கு அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்ங்கற எண்ணம் உண்டாச்சி. பூ இருந்தா பொழைச்சிக்கலாம்ங்கற எண்ணம் வந்ததுமே சின்ன வயசுல சாமியார் சொல்லிக்கொடுத்த மந்திரமும் ஞாபகம் வந்திட்டுது. அதான் சங்கதி.’

‘தினமும் இப்படி கிடைக்குமா?’

‘அதுதான் நம்ம திட்டம். ஒவ்வொரு நாளும் இதேபோல நாம காட்டுக்கு வருவோம். நான் மரமா மாறி நின்னதும் கூடை நிறைய பூவை எடுத்துக்கோ. அதுக்கப்புறம் மறுபடியும் நீ என்னை பொண்ணா மாத்திடு. அது போதும்.’

‘எப்படியோ நம்ம சாப்பாட்டுக்கவலை தீர்ந்தது. அம்மா நிம்மதியா இருப்பாங்க. எதையும் நினைச்சி அழமாட்டாங்க. அது போதும்.’

இருவரும் வீட்டை நோக்கி உற்சாகத்தோடு நடந்தார்கள். அம்மா பாதி அளவே நிரப்பிவைத்த பூக்கூடை வாசலிலேயே இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டு இருவரும் சந்தைக்குச் சென்றார்கள்.

காட்டிலிருந்து எடுத்துவந்த பூக்களின் நிறமும் மணமும் சந்தைக்கு வந்த அனைவரையும் ஈர்த்தன. தெருவில் நடப்பவர்கள் ஒவ்வொருவரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துபோனார்கள். சிலர் கையில் இருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு பூக்களை பொட்டலமாகக் கட்டி வாங்கிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்ததைவிட வேகமாக எல்லாப் பூக்களும் விற்றுத் தீர்ந்தன. உடனே இருவரும் கடைக்குச் சென்று அன்றைய சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

சீக்கிரமாக திரும்பிவிட்ட மகள்களைப் பார்த்ததும் அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ‘எங்கடி பூ? ஏன் சீக்கிரமா வந்துட்டீங்க?’ என்று தயக்கத்தோடு கேட்டாள். ‘எல்லாப் பூவும் இன்னைக்கு சீக்கிரமா வித்து தீர்ந்துடிச்சிம்மா’ என்று சொல்லிக்கொண்டே வெற்றுக்கூடைகளை திண்ணையில் வைத்தாள் புஷ்பா. சமையல் சாமான்கள் நிறைந்த கைப்பையை அம்மாவிடம் கொடுத்தாள் புனிதா.

‘என்னமோ கடவுள் கண்ணத் தெறந்துட்டான்’ என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடி சமையல் பொருட்கள் அடங்கிய பையை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள் அம்மா.

இப்படியே ஒவ்வொரு நாளும் நடந்தது. ஒரு கட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூக்கும் அளவு குறைந்துகொண்டே வந்து நின்று போனது. அப்போது அந்தக் கூடையையும் காட்டுக்கு எடுத்துச் சென்று இரு கூடைப்பூக்களோடு திரும்பி வந்தனர். வயிற்றுப்பாட்டுக்காக எங்கோ எப்படியோ அலைந்து திரிந்து பூக்களைச் சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள் என தன் பிள்ளைகளை நினைத்து பெருமைப்பட்டாள் அம்மா. ஆண் பிள்ளைகள் கூட செய்யமுடியாத செயலை தனக்குப் பிறந்த பெண் பிள்ளைகள் செய்கிறார்கள் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டாள்.

ஒருநாள் சந்தையில் அவர்கள் பூக்கூடையோடு உட்கார்ந்திருந்தபோது ஒரு இளைஞன் அவர்களுக்கு அருகில் வந்து கூடையில் இருந்த பூக்களைத் தொட்டுப் பார்த்தான். அவன் பெயர் சிக்கண்ணா. அதன் மணத்தையும் நுகர்ந்து பார்த்தான்.

‘இந்தப் பூவுடைய பெயர் என்ன?’ என்று புஷ்பாவிடம் கேட்டான்.

இதுவரை ஒருவரும் அவளிடம் அப்படி ஒரு கேள்வி கேட்காததால் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒருகணம் புரியவில்லை. ஆனாலும் தைரியமாக ‘காட்டுப்பூ’ என்றாள்.

‘அது தெரியுது. பூவுக்குன்னு தனியா பேரு எதுவும் கிடையாதா?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாங்க காட்டுப்பூன்னு சொல்வோம். அதுதான் பழக்கம்.’

‘அது சரி, நல்ல மணமாத்தான் இருக்குது. என்ன விலை?’

‘உங்களுக்கு எவ்வளவு வேணும், அதைச் சொல்லுங்க?’

‘இந்தக் கூடையில இருக்கற எல்லாப் பூவையையும் நான் எடுத்துக்கறேன். என்ன விலைன்னு சொல்லுங்க.’

சிக்கண்ணாவின் கண்களில் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. கிண்டலோ கேலியோ எதுவும் தெரியவில்லை. புஷ்பா ஒருகணம் கழித்து ஒரு விலையைச் சொன்னாள். அவன் மறுபேச்சின்றி அவள் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு பூக்களை மூட்டையாகக் கட்டித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு சென்றான்.

அதற்குப் பிறகு சிக்கண்ணா ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்துக்கு வரத் தொடங்கினான். புஷ்பாவிடம் பேச்சு கொடுத்து அவளை எப்படியாவது உரையாடலுக்குள் இழுத்தான். அவள் அவனை எப்படியாவது வெட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வெடுக்வெடுக்கென்று பேசினாலும் அவன் மிகவும் அன்பார்ந்த குரலிலேயே பேசினான்.

‘ஒவ்வொரு நாளும் இருக்கற பூ எல்லாத்தையும் நீங்களே வாங்கிட்டு போறீங்களே? வீட்டுக்கு எடுத்தும் போயி என்ன செய்வீங்க?’ என்று கேட்டாள் புஷ்பா.

‘நான் வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு யாரு சொன்னா?’

‘பின்ன?’

‘வீட்டுக்குப் போற வழியில ஒரு கோயில் இருக்குது. அந்தக் கோயிலுக்குப் போய் சாமிகிட்ட வைக்கச் சொல்லிட்டு போயிடுவேன்.’

‘ஏன்? வீட்டுக்கு எடுத்தும் போவமாட்டீங்களா?’

‘எடுத்துட்டு போகலாம். ஆனா வீட்டுல யாருகிட்ட கொடுக்கறது?’

‘ஏன், உங்க மனைவிகிட்ட கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்லையா?’

‘மனைவியா?’ என்று சொல்லிவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தான் சிக்கண்ணா. சிரித்துச்சிரித்து அவனுக்கு புரையேறிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செருமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டான். பிறகு ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க’ என்று வெட்கத்தோடு சொன்னான். அதற்குப் பிறகு புஷ்பா எதுவும் பேசவில்லை. அமைதியாக வேறெங்கோ பார்ப்பதுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் பூக்கூடைகளோடு சந்தைக்கு வருகிற சமயத்தில் அவனும் வரத் தொடங்கினான். ஏதாவது ஒரு விஷயத்தைத் தொட்டு அவர்களோடு உரையாடலை வளர்ப்பதில் அவன் மிகுந்த ஆர்வம் காட்டினான். ஒருநாள் பூவிலிருந்து எழும் மணத்தை இழுத்து நுகர்ந்துவிட்டு ‘சந்தனம் மாதிரி மணக்குது’ என்றான் இன்னொருநாள் ‘நெய்மாதிரி மணக்குது’ என்றான். மற்றொரு நாள் ‘வெல்லப்பாகு மாதிரி மணக்குது’ என்றான். அவன் வரும் சமயத்தில் கூடையில் எவ்வளவு பூ இருக்கிறதோ, அவ்வளவையும் அவனே மொத்தமாக வாங்கிக்கொண்டு சென்றான்.

ஒருநாள் புஷ்பாவிடமிருந்து பூக்களை வாங்கிக்கொண்டு திரும்பிய சிக்கண்ணா தனக்கு ஏற்பட்டிருக்கும் மயக்கம் பூவை மட்டும் சார்ந்த மயக்கமா, அந்தப் பெண்மீது ஏற்பட்டிருக்கும் மயக்கமா என பிரித்தறியமுடியாமல் குழம்பினான். கடைசியில் இரண்டும் சேர்ந்த மயக்கம் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கிருந்து மணம் நிறைந்த அப்பூக்களைக் கொண்டுவருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும் என்று திட்டமிட்டான். அவனுடைய திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் சகோதரிகள் இருவரும் வழக்கம்போல ஊரில் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சந்தையிலிருந்து அவர்கள் தம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது அவர்களுக்குத் தெரியாமல் சிறிது தூர இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து நடந்து சென்றான். சுவாரசியமாக கதை பேசிக்கொண்டு சென்ற சகோதரிகள் இருவரும் அவன் தமக்குப் பின்னால் வருவதை உணரவே இல்லை.

ஊருக்கு வெளியே தன்னந்தனியாக இருக்கிற ஒரு குடிசைக்குள் சகோதரிகள் இருவரும் சென்று மறைவதை அவன் கண்டுபிடித்தான். அங்கேயே வெகுநேரம் ஒதுங்கி நின்று அந்த வீட்டில் அவர்களைத் தவிர அவர்களுடைய அம்மாவும் இருப்பதைப் புரிந்துகொண்டான். அந்தக் குடிசையின் மீது கண்வைத்தபடி சுற்றிவரும்போது, குடிசைக்குப் பின்னால் இருக்கிற பெரிய பூந்தோட்டத்தையும் பார்த்தான் சிக்கண்ணா. ஒன்றிரண்டு செடிகளில் மட்டும் பூக்கள் பூத்திருக்க, பிற செடிகள் செடிகளாக மட்டுமே நின்றிருப்பதைப் பார்த்தான். பூக்களே இல்லாத இந்தத் தோட்டத்திலிருந்து இப்பெண்கள் பூக்களை எப்படி எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று நினைத்துக் குழம்பினான். சந்தையில் அவர்கள் விற்கும் பூக்களுக்கும் அந்தத் தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களுக்கும் இடையிலான வேறுபாடு அவனை மேன்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என அவனாகவே எதைஎதையோ நினைத்துக்கொண்டான். இறுதியில் குழப்பம்தான் எஞ்சியதே தவிர, அவனால் உறுதியாக ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

அடுத்தநாள் சந்தையில் அந்தப் பெண்களின் வரவுக்காக அவன் காத்திருந்தான். அவர்கள் கூடைகளோடு வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து வியாபாரத்தைத் தொடங்கியதும் அவன் வழக்கம்போல பூ வாங்குபவன் போல அவர்கள் முன்னால் சென்று நின்றான்.

‘என்ன இது? இன்னைக்கு பூவிலிருந்து கரும்புச்சாறு மணம் வருது’ என்று சொன்னபடி குனிந்து கூடையிலிருந்து ஒரு பூவை எடுத்து திருப்பிப் பார்த்தான்.

‘கரும்புச்சாறை நினைச்சிகிட்டே பூவைப் பார்க்கிறவங்களுக்கு கரும்புச்சாறு மணம் வரும். கஞ்சித்தண்ணியை நினைச்சிகிட்டே பார்க்கிறவங்களுக்கு கஞ்சித்தண்ணி மணம் வரும்.’

‘நான் விளையாட்டுக்குச் சொல்லலைங்க. உண்மையாவே இந்தப் பூவிலேர்ந்து கரும்புச்சாறு மணம் வருது.’

அந்த இளைஞனோடு பேசுவதற்கு புஷ்பாவுக்கு ஆசையாக இருந்தாலும் பக்கத்தில் அக்காவை வைத்துக்கொண்டு பேச அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் அவன் பேச்சைத் தடுக்கும் விதமாக, ‘பூவிலேர்ந்து எந்த மணமாவது வந்துட்டுப் போகட்டும். இப்ப உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க’ என்று கேட்டாள்.

‘எனக்கு பூதான் வேணும்’ என்று கூடையை நெருங்கினான்.

‘ஐயையோ, ஒவ்வொரு நாளும் நீங்களே எல்லாப் பூவையும் மொத்தமா எடுத்துட்டு போயிட்டா, வழக்கமா எங்ககிட்ட வாங்கற வாடிக்கைக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது? மொத்தமா தரமுடியாது. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ, அந்த அளவுக்கு மட்டும் வாங்கிட்டுப் போங்க.’

புஷ்பா பேசப்பேச, அந்தப் பேச்சில் மயங்கியவன் போல கேட்டுக்கொண்டிருந்தான் சிக்கண்ணா. பிறகு ‘சரி, நீங்க சொல்றதையே கேக்கறேன். எத்தனை பேரு வந்து வாங்கிட்டு போறாங்களோ வாங்கட்டும். நான் யாரையும் தடுக்கலை. எல்லாரும் வாங்கினதுபோக கடைசியில என்ன மிஞ்சுதோ அதை நான் வாங்கிக்கறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

அந்த அளவுக்கு அவன் சட்டென்று இறங்கிவந்து பேசுவான் என புஷ்பா எதிர்பார்க்கவில்லை. அதனால் அவனை வெளியேற்றும் விதமாக அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘சரி சரி’ என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.

பல பெண்கள் வந்து புஷ்பாவிடம் பூக்களை வாங்கிச் சென்றார்கள். கூடையில் பூ வேகவேகமாக குறைந்துகொண்டே வந்தது.

‘அது சரி, இதுக்கு முன்னால இந்த மாதிரி வண்ணவண்ணப் பூக்களை நான் இந்தப் பக்கம் பார்த்ததே இல்லை. எல்லாம் புதுசா இருக்குது. எங்கேர்ந்து வாங்கிட்டு வரீங்க?’ என்று கேட்டான் சிக்கண்ணா.

‘இது ஒன்னும் வாங்கன பூ கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ’ என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.

பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

‘தினமும் இவ்வளவு பூ பூக்கற அளவுக்கு உங்க தோட்டம் பெரிய தோட்டமா?’

‘ஆமாம். பெரிய தோட்டம். அதுதான் எங்க வாழ்க்கைக்கு ஆதாரம்.’

‘காலையில எழுந்ததும் பூவுடைய முகத்தைத்தான் முதல்ல பார்ப்பீங்களா?’

‘ஆமாம். அது எங்களுக்கு வெறும் பூ கிடையாது. எங்க தெய்வமே அதுதான்.’

அதற்குமேல் அவன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. விற்றதுபோக எஞ்சியிருந்த பூக்களை அவளே ஒரு தாளில் பொட்டலமாகக் கட்டி அவனிடம் கொடுத்தாள். அவன் உடனே பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டான்.

மறுநாள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்த சிக்கண்ணா தன் ஊரிலிருந்து வேகவேகமாக நடந்து அந்தப் பெண்களின் குடிசை இருந்த பகுதிக்குச் சென்று ஒரு தோப்புக்குள் ஒளிந்து நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தான்.

குடிசையின் கதவு திறந்தது. முதலில் அப்பெண்களின் அம்மா வெளியே வந்து குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவினாள். அதற்குப் பிறகு இரண்டு பெண்களும் எழுந்துவந்து முகம் கழுவினர். ஒரு கூடையை எடுத்துக்கொண்டு அம்மா தோட்டத்துக்குள் செல்ல, இன்னொரு கூடையை எடுத்துக்கொண்டு பெண்கள் இருவரும் தோட்டத்துக்கு அப்பால் நீண்டு செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினர். அந்த அதிகாலை வேளையில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிக்கண்ணா சிறிது தொலைவு இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

நீண்ட நேர நடைக்குப் பிறகு பெண்கள் காட்டில் நுழைந்தார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞனும் காட்டுக்குள் நுழைந்தான்.

அவர்கள் ஒரு தோட்டத்தின் முன் நின்றார்கள். வீட்டுத்தோட்டத்தில் காணப்பட்டதுபோல அங்கும் ஏராளமான பூச்செடிகள் இருந்தன. ஆனால் பூக்கள் மிகமிகக் குறைவாகவே இருந்தன. சந்தையில் அவர்கள் கூடையில் வைத்திருந்த பூக்களுக்கும் அங்கு பூத்திருந்த பூக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என்னதான் நடக்கிறது என்பதை பொறுமையாகக் காத்திருந்து பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்த சிக்கண்ணா மறைவிடத்திலேயே ஒதுங்கி நின்றான். ஒரு பெண் இரு குடங்களை எடுத்துக்கொண்டு குளத்தங்கரைக்குச் சென்று திரும்பியதையும் ஒரு குடத்தின் நீரை இன்னொருத்தியின் மீது ஊற்றியதையும் மறுகணமே அவள் பூக்கள் கொத்துக்கொத்தாக தொங்கும் மரமாக மாறியதையும் பார்த்தான். ஒவ்வொரு பூவாக நிதானமாகப் பறித்து கூடையை நிரப்பிக்கொண்டாள் பெரியவள். கூடை நிறைந்ததும் மற்றொரு குடத்தில் இருந்த நீரை எடுத்துவந்து மரத்தின் வேரடியில் ஊற்றியதையும் அடுத்த கணமே அவள் பெண்ணாக மாறியதையும் பார்த்தான்.

கண் முன்னால் நிகழ்ந்த அந்த மாற்றத்தைக் கண்டு அவன் பரவசத்தில் மூழ்கினான். எவ்வளவு அற்புதமான பெண் என்று அவளைப்பற்றி நினைத்துக்கொண்டான். இந்த அளவுக்கு உயர்வான ஆற்றல் உள்ளவளாக இருந்தபோதும் சந்தையில் மற்ற பெண்களைப்போல சாதாரணமாக பழகும் அளவுக்கு மனப்பக்குவத்தோடு அவள் நடந்துகொண்ட விதத்தை எண்ணி ஆச்சரியமடைந்தான். அக்கணமே அவள் மீது அவனுக்கு காதல் பிறந்துவிட்டது. எளிமையும் மகத்துவமும் கொண்ட அவளோடுதான் தன் வாழ்க்கை அமையவேண்டும் என மனத்துக்குள் முடிவெடுத்தான். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் செல்லும்வரை காத்திருந்து, அதற்குப் பிறகு தன் மறைவிடத்தைவிட்டு வெளியேறி தன் வீட்டுக்குச் சென்றான்.

அன்றும் சிக்கண்ணா சந்தைக்குச் சென்றான். அவர்கள் பூ விற்பனை செய்வதை தொலைவிலிருந்தே அவனால் பார்க்கமுடிந்தது. மறைவான ஓரிடத்தில் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, புஷ்பாவையே வைத்தகண் எடுக்காமல் பார்த்து மகிழ்ந்தான். அவளைப் பார்க்கப்பார்க்க அவன் மனத்தில் இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பெருகுவதை உணர்ந்தான்.

பூக்கள் வேகவேகமாக விற்று, இன்னும் கொஞ்சம் பூக்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் அவன் புஷ்பாவை நோக்கி வந்தான். அருகில் வந்ததும் புன்னகைத்தபடி தலைகுனிந்து ‘வணக்கம்’ என்று சொன்னான். அவன் வணங்கிய விதத்தைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘இங்க என்ன கோயிலா கட்டி வச்சிருக்குது? இப்படி கும்பிடறீங்க’ என்றாள். ‘என் கண்ணுக்குத் தெரியற கோயில் உங்களுக்குத் தெரியலைபோல’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகைத்தான். அதைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. அவனை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

‘இந்த ஊருலயே இப்படி ஒரு அழகான பூ பூத்ததை நான் பார்த்ததில்லை. எங்கேருந்து இதையெல்லாம் கொண்டு வரீங்க?’ என்று அப்பாவியைப்போல அவன் கேட்டான்.

புஷ்பா பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். அப்போது புனிதா குறுக்கிட்டு ‘அதான் அன்னைக்கே சொன்னமே, மறந்துடிச்சா? எல்லாமே எங்க வீட்டுத் தோட்டத்துல பூத்த பூதான்’ என்றாள். ‘அப்படியா, சரி சரி’ என்று தலையசைத்துக்கொண்டான் சிக்கண்ணா. அவன் பூவையெல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றதும் ‘எங்க எங்கன்னு கேட்டு இவன் எதுக்கு உயிரை எடுக்கறானோ’ என்று சத்தமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டாள் புஷ்பா.

அன்று இரவு சிக்கண்ணாவுக்கு தூக்கமே இல்லை. புஷ்பா பற்றிய கனவாகவே இருந்தது. கண்ணை மூடினால் மலர்குலுங்கும் மரமாக அவள் மாறி நின்ற கோலம்தான் தோன்றியது. அந்த அற்புதக்கணத்தை அவனால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சென்று அந்தக் காட்டில் அவள் மரமாக மாறி நிற்கும் காட்சியைப் பார்க்கவேண்டும் என அவன் மனம் துடித்தது. அக்கணமே விடிந்ததும் முதல் வேலையாக காட்டுக்குச் சென்று அக்காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தான். அதற்குப் பிறகுதான் அவன் மனம் அமைதியடைந்தது.

திட்டமிட்டபடியே அதிகாலையில் எழுந்து காட்டுக்குச் சென்று ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி கிளைகளுக்கு நடுவில் மறைந்து உட்கார்ந்துகொண்டு சகோதரிகளின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல சகோதரிகள் வந்தார்கள். வழக்கம்போல மூத்தவள் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து இளையவள் மீது ஊற்ற, அடுத்த கணமே அவள் வண்ண வண்ண மலர்குலுங்கும் மரமென நின்றாள். கூடை நிறைய பூக்களைப் பறித்துக்கொண்ட மூத்தவள் இன்னொரு குடம் தண்ணீரை எடுத்துவந்து அம்மரத்தின் வேரடியில் ஊற்றினாள். அக்கணமே மரம் மறைந்துவிட அந்த இடத்தில் புஷ்பா நின்றாள். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் சிக்கண்ணா தன் வீட்டுக்குத் திரும்பினான்.

மலர்குலுங்கும் மரமென புஷ்பா நின்ற காட்சி அவன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவள் மீது அவன் கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது. ஒவ்வொரு நாளும் அவளைப் பார்ப்பதற்காகவே சந்தைக்குச் செல்வதும் அவளிடம் பேசுவதற்காகவே பூ வாங்குவதுமாக இருந்தான். காதல் பித்து அவனைப் பாடாய்ப் படுத்தியது. மணந்தால் அவளைத்தான் மணக்கவேண்டும் என அவன் முடிவு கட்டிக்கொண்டான்.

அன்று இரவு உணவுண்ணும் வேளையில் தன் பெற்றோரிடம் தன் காதலைத் தெரிவித்தான் சிக்கண்ணா. அதைக் கேட்டு அவர்கள் முதலில் திகைத்துவிட்டனர். ‘பூக்காரியையா? சந்தையில் பூ விற்பவளையா? ஊர்க்கோடியில் குடிசையில் இருப்பவளையா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டனர். ஆயினும் மகனுடைய மன உறுதியையும் விருப்பத்தையும் புரிந்துகொண்ட பிறகு அவன் காதலை ஏற்றுக்கொண்டனர்.

ஒருநாள் மாலை வேளையில் தம் பெற்றோரை அழைத்துக்கொண்டு புஷ்பா வசிக்கும் குடிசைக்குச் சென்றான். ஊரிலேயே பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தம் குடிசையைத் தேடி வந்திருப்பதை நினைத்து புஷ்பாவின் அம்மா தடுமாறினாள். ஏதோ தப்பு நடந்துவிட்டதோ என நினைத்துக் குழம்பினாள். இளைஞனின் அம்மா எல்லா விவரங்களையும் அவளிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னாள். அதற்குப் பிறகுதான் அவள் மனம் நிதானமடைந்தது.

‘புஷ்பா சின்ன பொண்ணு. அவளைவிட பெரிய பொண்ணு ஒருத்தி இருக்கா. பெரிய பொண்ண வச்சிகிட்டு சின்ன பொண்ணுக்கு எப்படிங்க கல்யாணம் செய்யமுடியும்? அதான் யோசனையா இருக்குது’ என்றாள் அம்மா.

‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, நாங்களே அந்தப் பொறுப்பை எடுத்துக்கறோம். என் கணவருடைய அண்ணன் பக்கத்து ஊருலதான் இருக்காரு. அந்தக் குடும்பத்துல ஒரு பையன் இருக்கான். உங்க பெரிய பொண்ண அவனுக்கு முடிச்சிடலாம்.’

தன் பிரச்சினைக்கு இப்படி ஒரு தீர்வு கிடைக்கும் என அம்மா எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் நெருங்கிவிட்டது என்று அவளுக்குத் தோன்றியது. தான் கும்பிட்ட கடவுள் தன்னைக் கைவிடவில்லை என நினைத்து மனமுருகினாள்.

‘ஒரு வார்த்தை என் பொண்ணுங்ககிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் அம்மா. கதவுக்குப் பின்னால் நின்றபடி எல்லாவற்றையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் தன் அம்மாவைத் தழுவிக்கொண்டனர். அந்த அணைப்பே அவர்களுடைய சம்மதத்தை அவளுக்கு உணர்த்திவிட்டது. சிறிது நேரம் அவர்களோடு உரையாடிய பிறகு வெளியே வந்து ‘உங்க விருப்பம்போலயே நடக்கட்டும்மா. ரெண்டு பேருமே சம்மதம்னு சொல்லிட்டாங்க’ என்றாள்.

அதற்குப் பிறகு எல்லா வேலைகளும் வேகவேகமாக நடந்தன. ஒரு நல்ல முகூர்த்த நாளில் இரண்டு திருமணங்களும் நடந்தன. அம்மா தன் மகள்களை அணைத்து ஆசி வழங்கி புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். புனிதாவும் புஷ்பாவும் தத்தம் கணவன் வீட்டுக்குச் சென்றனர். புகுந்த வீட்டில் இரண்டு பேருமே மிகமிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

ஒருநாள் இரவு புஷ்பாவும் சிக்கண்ணாவும் அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் நகரும் நிலவைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர். நிலவின் வெளிச்சமும் இனிய குளிரும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

அப்போது சிக்கண்ணா புஷ்பாவைப் பார்த்து ‘நான் உன்னிடம் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக நீ செய்வியா?’ என்று கேட்டான்.

‘என்னால முடிஞ்சா கட்டாயம் செய்வேன். உங்களுக்குச் செய்யாம நான் யாருக்கு செய்யப்போறேன்?’ என்றாள் புஷ்பா.

அவன் புஷ்பாவை முதன்முதல் பார்த்ததில் தொடங்கி அவள் மரமாகி மலர்குலுங்க நின்றதையும் மீண்டும் பெண்ணாக மாறியதையும் பார்த்தது வரைக்கும் விவரித்தான். ‘மலர்குலுங்கற மரமா நீ நிக்கிற கோலத்தைப் பார்க்க ஆசையா இருக்குது. எனக்காக அந்த ஆசையை நிறைவேத்துவியா?’ என்று ஏக்கத்துடன் கேட்டான்.

ஏக்கமும் எதிர்பார்ப்பும் கொண்ட அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள் புஷ்பா. அவளால் அவன் கோரிக்கையை மறுக்கமுடியவில்லை. ‘ஐயோ, அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு?’ என்று கொஞ்சிப் பேசி தப்பிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் தொடர்ந்து அவளிடம் ஒரு குழந்தையைப்போல கெஞ்சிக்கொண்டே இருந்தான். அதை மறுக்க அவளுக்கு மனம் வரவில்லை.

‘சரி, போய் ரெண்டு குடம் தண்ணி எடுத்து வாங்க’ என்றாள். அவன் உடனே ஓடோடிச் சென்று இரு குடங்களில் தண்ணீருடன் திரும்பி வந்தான். எல்லா வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் அவனிடம் சொன்னான்.

‘தேவையில்லாம பூவைக் கிள்ளக்கூடாது. இலையைக் கிள்ளக்கூடாது. கிளையை ஒடிக்கக்கூடாது. கவனமா இருக்கணும்’ என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தாள். அவன் எல்லாவற்றுக்கும் ‘சரி புஷ்பா’ ‘சரி புஷ்பா’ என்று புன்னகையோடு தலையாட்டினான்.

ஊஞ்சலைவிட்டு இறங்கி சில அடிகள் நடந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் புஷ்பா. உதடுகள் மட்டும் அசைய சில சொற்களை முணுமுணுத்தாள். பிறகு அவனைப் பார்த்து தண்ணீரை எடுத்து தன் தலைமீது ஊற்றும்படி கண்ணாலேயே அவனுக்கு சைகை செய்தாள். அவனும் பயபக்தியோடு அதைப்போலவே செய்தான். குடத்திலிருந்து கடைசிச்சொட்டு தண்ணீர் அவள் தலையில் விழுந்த மறுகணமே அவள் மறைந்துவிட, அந்த இடத்தில் அழகான மலர்மரம் நின்றிருந்தது.

அவன் விழிவிரிய அந்த மரத்தைப் பார்த்தபடி நின்றான். நிலவின் வெளிச்சத்தில் அந்த மலர்களின் நிறமும் அழகும் நெஞ்சைக் கவர்ந்தன. அந்த மலர்களின் நறுமணத்தில் அவன் மனம் நிறைந்தது. பரவசத்தில் ‘சொர்க்கம் சொர்க்கம்’ என்று அவன் கூவினான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

சில கணங்களுக்குப் பிறகு நிறைவுற்ற மனத்துடன் மற்றொரு குடத்தில் இருந்த தண்ணீரை அடிமரத்தைச் சுற்றி ஊற்றினான். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்ததும் அந்த மரம் இருந்த தடம் மறைந்தது. அந்த இடத்தில் புஷ்பா உட்கார்ந்திருந்தாள். ‘இப்ப சந்தோஷம்தானே?’ என்று புன்னகையோடு கேட்டபடி அவள் எழுந்து அவனை நோக்கி வந்தாள். ‘ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணே’ என்றபடி அவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

தோட்டத்திலிருந்து ஒரு புதுவிதமான மணம் வருவதை உணர்ந்ததும் அதே வீட்டின் வேறொரு அறையில் படுத்திருந்த அந்த இளைஞனின் தங்கை த்ரிஷா சட்டென விழித்தெழுந்தாள். முதலில் அது கனவு என அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்போதும் அந்த மணம் ஜன்னல் வழியாக தன் அறைக்குள் வருவதை உணர்ந்த பிறகு அதை கனவு என நினைக்க அவள் மனம் மறுத்தது. எங்கிருந்து இந்தப் புதிய மணம் வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து சத்தமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

தோட்டத்தை நெருங்கிய கணத்தில் சிக்கண்ணா நின்றிருப்பதையும் அவனுக்கு அருகில் ஒரு மலர்மரம் நின்றிருப்பதையும் அதன் முன்னால் கைவிரித்து மயங்கிய கோலத்தில் அவன் காணப்படுவதையும் அவள் பார்த்தாள். சட்டென ஒருகணம் அங்கேயே ஒரு மறைவிடத்தில் ஒதுங்கி நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாள். தம் வீட்டுத் தோட்டத்தில் இந்தப் புதிய மரம் எப்படி ஒரே இரவில் வந்து முளைத்தது என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள். அம்மரத்தின் பூக்களின் மணமே தன் அறை வரைக்கும் பரவியிருக்கிறது என்பதை அக்கணமே அவள் புரிந்துகொண்டாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டுவந்து அடிமரத்தைச் சுற்றி ஊற்றியதையும் அந்த இடத்தில் புஷ்பா எழுந்து நிற்பதையும் அவர்கள் இருவரும் கட்டித் தழுவிக்கொண்டதையும் பார்த்தாள். அந்த மாயமாற்றத்தைக் கண்டு த்ரிஷா மிகவும் பரவசம் கொண்டாள். இருவரில் ஒருவரும் தன்னைப் பார்த்துவிடாதபடி மெல்ல மெல்ல பின்வாங்கி நடந்து தன் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் த்ரிஷா. என்றைக்காவது ஒருநாள் இதைப்பற்றி தன் அண்ணியிடம் பேசவேண்டும் என நினைத்து, அந்த விஷயத்தை ரகசியமாகவே தன் மனத்துக்குள் வைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு வேலை தொடர்பாக சிக்கண்ணா வெளியூருக்குச் செல்லவேண்டியிருந்தது. நாலைந்து நாட்களில் திரும்பி விடுவதாக புஷ்பாவிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு அவன் ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தன்னோடு இருந்தவன் திடீரென பிரிந்துபோனதும் அப்பிரிவு புஷ்பாவை வாட்டியது. அவள் நெஞ்சில் வழக்கத்தைவிட அவனைப்பற்றிய நினைவுகள் அதிக அளவில் எழுந்தன. வீட்டிலும் சரி, தோட்டத்திலும் சரி, எங்கு சென்று உட்கார்ந்தாலும் அவன் நினைவு எழுந்து ஆக்கிரமித்தது.

ஒருநாள் மாலை வேளையில் புஷ்பா தன் அறையில் தனியாக உட்கார்ந்திருந்தாள். அப்போது த்ரிஷா ‘என்ன அண்ணி இது? ஏன் எப்ப பார்த்தாலும் ஒரே சோகமா இருக்கீங்க? நானும் என் சிநேகிதிகளும் காத்துவாங்க ஆத்தங்கரை வரைக்கும் போறோம். நீங்களும் வாங்க. உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்’ என்று ஆசையோடு அழைத்தாள். புஷ்பாவுக்கும் ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் எங்காவது வெளியே போய்வந்தால் நல்லது என்று தோன்றியது. அதனால் த்ரிஷா அழைத்ததும் தலைவாரி பூச்சூடிக்கொண்டு புறப்பட்டாள்.

த்ரிஷாவின் ஆறு தோழிகள் ஏற்கனவே வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களோடு புஷ்பாவும் சேர்ந்துகொண்டாள். எல்லோரும் கதைபேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றார்கள். மாலைப்பொழுதில் ஆற்றங்கரை மணற்பரப்பில் ஓடிப் பிடித்து விளையாடினர். பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று மரங்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி விளையாடினர். அங்கிருக்கும் மரங்களில் பழுத்துத் தொங்கும் பழங்களைப் பறித்துத் தின்றனர். அவ்வப்போது தென்படும் குரங்குகளைக் கண்டு கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

மாலையில் சூரியன் மறையும் நேரம் வந்தது. ஆற்றின் மறுகரை விளிம்பை ஒட்டி சூரியன் முழுகுவதைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அப்போது திடீரென அவளுக்கு சிக்கண்ணாவின் நினைவு வந்தது. அந்த அஸ்தமனக்காட்சியை அவனோடு சேர்ந்து பார்த்தால் அவன் என்னென்னவெல்லாம் சொல்வான் என அசைபோட்டு மகிழ்ந்தாள். அவளை அறியமால் அவள் முகத்தில் ஒரு புன்னகை வெளிப்பட்டது.

எல்லோரும் புறப்படுவதற்குத் தயாரான போது ‘அண்ணி, உங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக செய்வீங்களா?’ என்று கேட்டாள்.

அவள் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் ‘என்ன த்ரிஷா? என்ன வேணும்? என்னால முடிஞ்சா உனக்காக கண்டிப்பா செய்வேன்’ என்றாள் புஷ்பா.

உடனே த்ரிஷா ஒருநாள் இரவில் தோட்டத்தில் சிக்கண்ணாவும் அவளும் தனித்திருந்த நேரத்தில் அப்போது அவனுக்காக அவள் மலர் சொரியும் மரமாக நின்றதையும் பிறகு பெண்ணாக மாறியதையும் தான் பார்த்ததையும் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் தெரிவித்தாள்.

‘எனக்காக ஒரே ஒருமுறை நீங்க மலர்மரமா மாறி நிக்கணும் அண்ணி. எனக்கு பார்க்கணும்போல ஆசையா இருக்குது. உங்களுக்கு அந்த சக்தி இருக்குதுங்கறத காட்டறதுக்காகத்தான் இவுங்க எல்லாரையும் நான் இங்க கூட்டி வந்திருக்கேன்’ என்று மன்றாடினாள்.

‘வேணாம் த்ரிஷா. அது ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி விளையாட்டுக் காரியமில்லை. ஏதாவது தப்பு நடந்தா விபரீதமா போயிடும். நான் சொன்னா கேளு. புறப்படலாம் வா’ என்றாள் புஷ்பா.

த்ரிஷா விடவில்லை. தொடர்ந்து மன்றாடினாள். ‘எனக்காக ஒரே ஒருமுறை செய்யக்கூடாதா? என் மேல உங்களுக்கு கருணையே கிடையாதா?’ என்று கண்ணீர் விட்டாள்.

ஒரு காலத்தில் தன் குடும்பத்தையே தாங்கிய தன் வரம் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்கவைத்திருப்பதை நினைத்து புஷ்பா வருத்தத்தில் மூழ்கினாள். அதே சமயத்தில் தன் கண் முன்னால் ஒரு பெண் கண்ணீர் விடுவதைப் பார்க்கவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது.

‘சரி, உன் விருப்பப்படியே செய்யறேன். கண்ணீரைத் துடைச்சிக்கோ. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்’ என்று த்ரிஷாவிடம் செய்யவேண்டிய ஒவ்வொரு செய்முறையையும் விளக்கமாகச் சொல். த்ரிஷா எல்லாவற்றுக்கும் சரி சரி என்று உற்சாகமாகத் தலையாட்டினாள்.

‘நல்லா ஞாபகம் வச்சிக்கோ த்ரிஷா. தேவையில்லாம ஒரு பூவைக் கூட பறிக்கக்கூடாது. ஒரு இலையைக் கூட கிள்ளக்கூடாது. எந்தக் கிளையையும் புடிச்சி உலுக்கக்கூடாது. ஒடிக்கக்கூடாது.’

த்ரிஷா மீண்டும் எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையாட்டினாள்.

புஷ்பா தரையில் உட்கார்ந்து கண்மூடி மந்திரச்சொற்களைச் சொல்லிமுடித்ததும் அவளுடைய கண் சைகைக்காகக் காத்திருந்த த்ரிஷா குடத்திலிருந்த தண்ணீரை அவள்மீது ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்த மறுகணமே அவள் மலர்மரமாக மாறி நின்றாள். ஒரு மாயவித்தைபோல வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரம் திடீரென தன் கண் முன்னால் நிற்பதைப் பார்த்து த்ரிஷாவும் அவள் தோழிகளும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். ஒவ்வொரு மலரையும் தொட்டுத்தொட்டுப் பார்த்து ஆரவாரம் செய்தனர். உற்சாகத்தில் புஷ்பா சொன்ன நிபந்தனைகளை அனைவரும் மறந்தனர். ஒவ்வொரு பூவையும் கிள்ளி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடத் தொடங்கினர். கைக்கு எட்டும் தொலைவில் இருந்த பூக்களையெல்லாம் பறித்து முடித்ததும் சற்றே தொலைவில் இருந்த பூக்களைப் பறிப்பதற்காக கிளையை எட்டி இழுத்தனர். அது மெல்லிய சத்தமுடன் முரிந்து விழுந்ததைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆசை தீர ஆடி முடித்ததும்தான் அவர்களுக்கு வீட்டுக்குத் திரும்பும் நினைவு வந்தது. ‘சரி சரி போதும் விளையாட்டு. இருட்டற நேரமாயிடுச்சி. இதோடு நிறுத்திக்கலாம்’ என்றாள் த்ரிஷா. அவள் குரல் எழுந்ததும் அனைவரும் விளையாடுவதை நிறுத்திவிட்டனர். அவள் ஓரமாக வைத்திருந்த இரண்டாவது குடத்தை எடுத்துவந்து மலர்மரத்தைச் சுற்றி தண்ணீரை ஊற்றினாள். ஒரு பெண் வேதனையில் முனகும் குரல் கேட்டதே தவிர, மலர்மரம் பெண்ணாக மாறவில்லை.

த்ரிஷா முதன்முறையாக அச்சத்தில் மூழ்கினாள். மரத்தை ஊன்றிக் கவனித்தாள். ஒரு கிளையின் விளிம்பில் புஷ்பாவின் முகம் மட்டும் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. வேதனை நிறைந்த அம்முகத்தை அவளால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. பயமாக இருந்தது. ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் உடல் நடுங்கியது. அவளுடைய தோழிகளும் அச்சத்தில் மூழ்கினர். மேலும் அங்கே நின்றிருந்தால் ஆபத்து என நினைத்து ‘வா வா த்ரிஷா. போயிடலாம்’ என த்ரிஷாவை அழைத்தனர். த்ரிஷாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.

‘எங்க அண்ணன் வந்து கேட்டா நான் என்னன்னு பதில் சொல்றது?’

‘எல்லாரும் ஒன்னா சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிட்டிருந்தோம். மறைஞ்சிக்கிறதுக்காக காட்டுக்குள்ள போனா, திரும்பிவரலைன்னு சொல்லிடலாம். கவலைப்படாதே.’

தோழிகள் சொல்லுக்குக் கட்டுப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் தன் முட்டாள்தனமே காரணம் என அவளுக்குத் தோன்றினாலும் அந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. அமைதியாக எதுவும் நடக்காததுபோல அனைவரோடும் சேர்ந்து அவள் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

சில நாட்கள் கழித்து சிக்கண்ணா வீட்டுக்குத் திரும்பி வந்தான். வாசலைத் தாண்டும்போதே ‘புஷ்பா புஷ்பா’ என்று அழைத்துக்கொண்டே வந்தான். பதில் இல்லை என்றதும் ஒவ்வொரு அறையாகச் சென்று தேடினான். கடைசியாக த்ரிஷா இருக்கும் அறைக்கு வந்து ‘புஷ்பா எங்க போனா?’ என்று கேட்டான். த்ரிஷா நடந்த விஷயத்தை அவனிடம் விளக்கமாகச் சொன்னாள். அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. ஐயோ என்று இடிந்துபோய் ஒரு தூணுக்கடியில் சரிந்து உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போதே சிக்கண்ணா ஆற்றங்கரைக்குச் சென்றான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் காட்டுக்குள் சென்று தேடினான். இரவு கவிந்த பிறகுதான் நம்பிக்கையை இழந்து வீட்டுக்குத் திரும்பினான். அவனைப் பார்க்கப்பார்க்க த்ரிஷாவுக்கு பாவமாக இருந்தது. உண்மையைச் சொல்லிவிடலாமா என பல நேரங்களில் நினைத்தாள். ஆயினும் ஏதோ அச்சத்தில் மூழ்கி அமைதியாக இருந்தாள். அவளுடைய குற்ற உணர்வு அவளை வாட்டியது.

தன் தேடல் வேட்டையில் மனம் தளராமல் தொடர்ந்து ஈடுபட்ட சிக்கண்ணா ஒருநாள் சோர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. புஷ்பா புஷ்பா என்று சொல்லிச்சொல்லிப் புலம்பினான்.

அப்போது எங்கிருந்தோ யாரோ வேதனையில் முனகும் சத்தம் கேட்டது. முதலில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஒரு பறவையின் முனகல் என்றே நினைத்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுந்த அக்குரல் அவனை உருகவைத்தது. அது ஏதோ ஒரு மானுடக்குரல்தான் என்ற எண்ணம் எழுந்ததும் வேகமாக எழுந்து நின்று அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளையில் புஷ்பாவின் முகத்தைப் பார்த்தான். வேதனை படிந்த அவள் கண்களைப் பார்த்ததும் ‘புஷ்பா புஷ்பா’ என்று கூவினான். அக்குரலைக் கேட்டதும் அவள் கண்கள் விரிந்தன. தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவளால் ஒரு சொல் கூட பேசமுடியவில்லை.

‘ஐயோ. இது என்ன புஷ்பா? ஏன் இப்படி ஆச்சி?’

அப்போதுதான் மரத்தைச் சுற்றி விழுந்திருந்த பூக்களையும் கிளைகளையும் இலைகளையும் பார்த்தான். ஓரமாக உருண்டோடி கவிழ்ந்திருக்கும் குடத்தையும் பார்த்தான். என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் எளிதாக ஊகிக்க முடிந்தது.

கண்ணீர் பெருக ‘புஷ்பா புஷ்பா’ என்று முணுமுணுத்தான். ‘தெய்வமே, என் புஷ்பாவை எனக்குத் திருப்பிக்கொடு’ என்று மனமுருக வேண்டினான். பிறகு தரையில் கிடந்த ஒவ்வொரு பூவையும் எடுத்து அது பறித்தெடுக்கப்பட்ட இடத்தில் வைத்தான். ஆச்சரியமூட்டும் விதமாக, பூ உடனே அந்தக் கிளையுடன் ஒட்டிக்கொண்டது.

பூக்களைத் தொடர்ந்து இலைகளையும் கிளைகளையும் எடுத்துப் பொருத்தினான். மரம் பழைய நிலைக்குத் திரும்பியது. குடத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவந்து மரத்தைச் சுற்றி தெய்வத்தை நினைத்தபடி ஊற்றிவிட்டு கைகுவித்தபடி கண்களை மூடினான்.

ஒரு கணத்துக்குப் பிறகு கண் விழித்தபோது அந்த மரம் மறைந்துவிட்டதையும் புஷ்பா நிலைகுலைந்து சோர்வோடு சுருண்டு படுத்திருப்பதையும் பார்த்தான். உடனே ஓடோடிச் சென்று அவளை எடுத்து மடியில் சாய்த்துக்கொண்டு புஷ்பா புஷ்பா என்று பெயர் சொல்லி அழைத்தான். அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்து ‘வந்துட்டீங்களா?’ என்றபடி சோர்வோடு புன்னகைத்தாள்.

‘புஷ்பா, என் புஷ்பா’ என்று சொன்னபடி அவளை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் சிக்கண்ணா.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.

புதிய ஊருக்குச் சென்றதும் முதலில் அந்த ஊரைச் சுற்றிவந்து அதன் அமைப்பைப் புரிந்துகொள்வார்கள். பிறகு அங்கு நடமாடும் மனிதர்களிடன் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய எண்ணப்போக்கைப் புரிந்துகொள்வார்கள். அதன் அடிப்படையில் சூழலுக்குத் தகுந்தபடி பேசத் தொடங்குவார்கள்.

காதுகொடுத்துக் கேட்கிறவர்கள் மயங்கிப் போகிற அளவுக்கு இருவரும் இனிமையாகப் பேசி நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வார்கள். அதுவரை ஊர்சுற்றி ஈட்டிய அனுபவங்களின் அடிப்படையில் அந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டு பழைய சம்பவங்களை அழகாக விவரித்து அவர்களுடைய மனத்தில் எளிதாக இடம்பிடித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அந்த ஊரில் அவர்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, ஏதேனும் மரத்தடியிலோ அல்லது குளக்கரையிலோ அல்லது சத்திரத்திலோ உறங்கிவிடுவார்கள்.

விடிந்ததும் எழுந்து குளத்தில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு அடுத்த ஊருக்கு நடக்கத் தொடங்கிவிடுவார்கள். ஊரில் இருப்பவர்களின் ஒருசிலர் அவர்களை நெருங்கி ‘ஐயா, இன்னும் ரெண்டுநாள் எங்க ஊருல தங்கிட்டுப் போகலாமே. ஏன் இவ்வளவு அவசரமா புறப்படறீங்க? நீங்க தங்கினா, உங்க புண்ணியத்துல நாங்களும் நாலு நல்ல விஷயங்களைக் கத்துக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்” என்று கேட்பார்கள். குருவும் சீடனும் புன்னகைத்தபடி அவர்களுடைய கோரிக்கையை மறுத்துவிடுவார்கள். ‘ஒருநாள் தங்கின ஊருல இன்னொரு நாள் தங்கக்கூடாதுங்கறது கடவுள் முன்னால நாங்க எடுத்துகிட்ட சபதம். தயவுசெஞ்சி எங்களைத் தடுக்கவேணாம்’ என்று நயமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள்.

எந்த ஊருக்குப் போனாலும் அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு பத்து பேர் கூடிவிடுவார்கள். வயிற்றுப்பசியைத் தணித்துக்கொள்ள நல்ல சாப்பாடு கிடைத்துவிடும். அதனால் தினசரிக்கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் ஆண்டுக்கணக்கில் நாடோடிகளாகத் திரிந்தார்கள்.

வழக்கம்போல ஒருநாள் காலை வேளையில் ஓர் ஊரிலிருந்து புறப்பட்டு மாலை வேளையில் இன்னொரு ஊரை அடைந்தார்கள். அந்த ஊரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஊர் எல்லையைத் தொட்ட சமயத்திலிருந்து ஒருவர் கூட அவர்கள் பார்வையில் தட்டுப்படவில்லை. வழக்கமாக தெருவில் தென்படும் சின்னஞ்சிறு பிள்ளைகளின் விளையாட்டுக்காட்சிகள் கூட அந்த ஊரில் தென்படவில்லை. ஊரே நடமாட்டமின்றி ஏதோ பாழடைந்த ஊரைப்போல அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தது. கடைத்தெரு வெறிச்சென்றிருந்தது. குளத்தங்கரையும் கிணற்றங்கரையும் வெறிச்சென்று இருந்தன. கோவில் வாசல் கூட வெறிச்சோடி இருந்தது.

இது என்னடா விசித்திரம் என நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கியபடி குருவும் சீடனும் ஒவ்வொரு தெருவாக நடந்து பார்த்தார்கள். எல்லா வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு வீட்டில் கூட ஜன்னல் இல்லை. திண்ணைகள் வெற்றிடங்களாக இருந்தன. வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையே தெரிந்துகொள்ள முடியவில்லை.

வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்மடக்கி அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. வைக்கோல் போரின் ஓரமாக கோழிகள் கதகதப்பாக சுருண்டுப் படுத்திருந்தன. மரத்தடிகளில் நாய்கள் படுத்திருந்தன. புதருக்கடியில் பூனைகள் ஒடுங்கி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன, அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது பூட்டிய வீடுகளுக்குள் மனிதர்களும் உறங்குகிறார்களோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்தது. ஒட்டுமொத்த ஊரே ஏன் இப்படி உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

‘நாம இந்த ஊரைவிட்டு உடனடியா புறப்பட்டுப் போயிடறதுதான் நல்லது. யாருமே தென்படாத இந்த ஊருல யாரோடு நாம உரையாடமுடியும்? நமக்கு யார் சாப்பாடு போடுவாங்க?’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

சீடன் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவனைப்போல தலையை அசைத்தான். ‘குருவே, என்னால் இனிமேல் ஒரு அடிகூட நடக்கமுடியாது. கால்கள் வலியெடுத்துவிட்டன. பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. சிறுகுடலை பெருங்குடல் தின்றுவிடும்போல உள்ளது’ என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

‘இங்கேயே உட்கார்ந்துடறதால நம்ம பிரச்சினை தீராது. நமக்கு சாப்பாடு கிடைக்க வழியே இல்லை. நான் சொல்றதைக் கேளு. மெதுவா நாம அடுத்த ஊரைப் பார்த்துப் போயிடலாம்’ என்று குரு மறுபடியும் சீடனிடம் எடுத்துரைத்தார்.

‘மன்னிச்சிக்குங்க குருவே. என் உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்லை’ என்றான் சீடன்.

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருளத் தொடங்கிய வானத்தின் பக்கம் பார்த்தபடி யோசனையில் மூழ்கினார் குரு. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சேவல் கூவும் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் குரு ஒருகணம் திகைத்து எல்லாத் திசைகளிலும் திரும்பிப் பார்த்தார். என்ன நடக்கிறது என்பதே அவருக்குப் புரியவில்லை. அப்போது இருள் முழுமையாகக் கவியத் தொடங்கியது.

அந்த நேரத்தில் எல்லா வீடுகளிலிருந்தும் கதவுகளைத் திறந்துகொண்டு மனிதர்கள் வெளிப்படத் தொடங்கினார்கள். வாசல் தெளித்து கோலம் போட்டார்கள். தெருவில் மெல்ல மெல்ல நடமாட்டம் பெருகியது.

அதைப் பார்த்ததும் சீடன் உற்சாகத்தோடு எழுந்து நின்றான். ‘பாருங்க, பாருங்க. நம்ம நம்பிக்கை வீண்போகலை. சுடுகாடு மாதிரி தெரிஞ்ச இந்த ஊருல மனிதர்கள் நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. உலகத்துக்கெல்லாம் பகலா இருக்கும்போது இந்த ஊருல இரவா இருக்கும்போல. மத்த இடங்கள்ல ராத்திரியாகத் தொடங்கற சமயத்துல இந்த ஊருல விடியத் தொடங்கும்போல. விசித்திரமா இருக்குது’ என்று நடமாட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினான்.

எல்லாவற்றையும் பார்த்து குரு குழப்பத்தில் ஆழ்ந்தார். ஆனால் மக்கள் நடமாட்டத்தைப் பார்த்ததும் சீடன் உற்சாகமடைந்துவிட்டான். களைப்பைப் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனுக்குப் பின்னால் நடந்துசெல்வதைத் தவிர, குருவுக்கு வேறு வழி தெரியவில்லை.

மனிதர்களைச் சந்தித்து, நம்பிக்கையைச் சம்பாதித்து, அதற்குப் பிறகு உணவு கிடைப்பதற்காகக் காத்திருக்கும் அளவுக்கு அவர்களால் பசியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனடியாக எதையாவது சாப்பிட்டு தெம்பை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இருவரும் இருந்தார்கள். அதனால் ஏதேனும் உணவுக்கடைக்குச் சென்று எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என நினைத்து கடைத்தெருவை நாடி நடக்கத் தொடங்கினார்கள்.

ஓர் உணவுக்கடையிலிருந்து வந்த மணம் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. சீடன் வேகமாக அந்தக் கடைக்குச் சென்றான். ஏராளமான தட்டுகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க சீடனின் நாவில் எச்சில் ஊறியது. முதல் பார்வையில் தென்பட்ட ஓர் உணவைச் சுட்டிக்காட்டி கடைக்காரரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘ஒரு பித்தளை காசு’ என்றார். சீடன் உடனே அதற்குப் பக்கத்தில் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த வேறொரு சிற்றுண்டி வகையைக் காட்டி ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘அதுவும் ஒரு பித்தளை காசு’ என்று சொன்னார். உடனே சீடன் இன்னொரு சிற்றுண்டி வகையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன விலை?’ என்று விசாரித்தான். கடைக்காரர் ‘அதன் விலையும் ஒரு பித்தளைக்காசுதான்’ என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து நின்றான் சீடன். அதைப் பார்த்த கடைக்காரர் அவனிடம் பொறுமையான குரலில் ‘இந்த ஊருல எதை எடுத்தாலும் ஒரே விலைதான். எல்லாமே ஒரு பித்தளை காசுதான்’ என்று சொன்னார்.

அதைக் கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்தான் சீடன். ‘எல்லாத்துக்கும் ஒரே விலையா? அது எப்படி? ஆச்சரியமா இருக்குதே’ என்று வாயைப் பிளந்தான்.

‘எல்லாம் எங்க ராஜாவுடைய கட்டளை. இந்த ஊருல எந்தப் பொருளை வித்தாலும் ஒரே விலைதான்.’

‘சாப்பாட்டுக்கடையில மட்டும்தான் அந்த வழிமுறையா? இல்ல, எல்லாக் கடைகளிலும் இதே வழிமுறைதானா?’ என்று மென்று விழுங்கியபடி கேட்டான்.

‘எந்தக் கடையில எதைக் காட்டி விலை கேட்டாலும் ஒரே விலைதான் சொல்வாங்க. ஒரு பெரிய கடப்பாறையை நீங்க வாங்கப் போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ஒரு படி நெல்லு வாங்கப்போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ராஜாவுடைய கட்டளையை மீறினா கடுமையான தண்டனை உண்டு.’

ஆளுக்கொரு பித்தளைக் காசைக் கொடுத்து சிற்றுண்டி வாங்கிச் சாப்பிட்டனர். வயிறு நிறைந்ததும் களைப்பின் காரணமாக அவர்கள் கால்கள் தள்ளாடத் தொடங்கின. படுத்துறங்க உடல் கெஞ்சியது. அப்போதுதான் தெருக்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடமாட்டம் பெருகத் தொடங்கியது. இருட்டை பகல்போல நினைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்களைப் பார்க்க அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது. வழக்கமாக ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியைத் தேடி நடக்கும் பழக்கமுள்ள அவர்கள் முதல்முறையாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியைத் தேடி அலைந்தார்கள். சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பாழடைந்த மண்டபம் தெரிந்தது. அனைவராலும் கைவிடப்பட்ட அந்த மண்டபத்தில் நாலைந்து நாய்களைத் தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. உடனே குருவும் சீடனும் அங்கேயே மறைவாக ஓரிடத்தில் படுத்து உறங்கத் தொடங்கினர்.

பொழுது விடியும் சமயத்தில்தான் அவர்களுக்கு விழிப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்து வானத்தில் சூரியன் உதித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறுவதையே சிறிது நேரம் பார்த்தனர். பிறகு குளம் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று நீராடி முடித்தனர். அதே நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஊர் அடங்கத் தொடங்கியது.

‘இப்பவே நாம இந்த ஊரிலிருந்து கெளம்பிடலாம். இந்த ஊர் நமக்கு ஒத்துவராது’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

‘குருவே, நான் சொல்றதைக் கேளுங்க. இதைவிட நல்ல ஊர் உலகத்துலயே இருக்கமுடியாது. ஒரே ஒரு பித்தளைக்காசு செலவு செஞ்சா போதும். வயிறாரச் சாப்பிட்டு காலத்தைக் கழிக்கலாம். சாப்பாட்டுக்காக நாம ஊரூரா அலையவேணாம்.’

‘அந்த கோணத்துல யோசிச்சா நமக்கு வசதிதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, ஊரு தூங்கற நேரத்துல நாம விழிச்சிருக்கறதும், நாம விழிச்சிருக்கிற நேரத்துல ஊரே தூங்கறதும் எனக்கு என்னமோ நல்லதா படலை. அதனாலதான் இந்த இடத்தைவிட்டு போயிடலாம்னு சொல்றேன்.’

‘நாலு நாள் பழகிட்டா தூக்கம், முழிப்பு எல்லாம் பழகிடும் குருவே. நீங்க கவலைப்படாதீங்க.’

‘இந்த ஊருல இருக்கறவங்க எல்லாருமே முட்டாளா இருக்கறாங்க. இவுங்களுக்கு ராஜாவா இருக்கறவன் எல்லாரைவிடவும் பெரிய முட்டாளாதான் இருப்பான். கடப்பாறையையும் நெல்லையும் ஒரே விலையில விக்கணும்னு கட்டளை போடற ராஜா நல்லவனா இருக்க வாய்ப்பே இல்லை. இவுங்களுக்கு நடுவுல நாம வாழறது ரொம்ப கஷ்டம். இவுங்களோடு பழகிப்பழகி கடைசியில நாமளும் முட்டாளா மாறிடுவோம். அதைப்பத்தியும் நீ கொஞ்சம் யோசிக்கணும்.’

‘யாரு முட்டாளா இருந்தா நமக்கென்ன குருவே. இது சொர்க்கம் குருவே, சொர்க்கம். நம்ம வாழ்க்கை குறையில்லாம நடந்தா போதாதா? நீங்க ஏன் நடக்காததையெல்லாம் கற்பனை செஞ்சி குழப்பிக்கறீங்க? அமைதியா இருங்க. எல்லாத்தயும் நான் பார்த்துக்கறேன்.’

குரு எடுத்துச்சொன்ன எந்தக் கருத்தையும் சீடன் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. குருவுக்கும் சீடனைவிட்டுத் தனியாகச் செல்ல மனமில்லை. வேறு வழியில்லாமல், சீடன் சொல்லுக்கு குரு கட்டுப்பட்டார். இருவரும் அந்த ஊரிலேயே காலத்தைக் கழிக்கத் தொடங்கினர்.

நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. ஒரு மாற்றமும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு பொழுதும் நல்லபடியாகக் கழிந்தாலும் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் எவ்விதமான உறவும் உருவாகிவரவில்லை. ஒருவரும் அவர்களிடம் நின்று பேசவில்லை. நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கூட கேட்கவில்லை. அவரவர்களும் அவரவர்கள் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்.

நாள் முழுக்க நடந்து நடந்தே பழக்கப்பட்ட இருவரும் நடையே இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கியதில் இருவரும் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாதபடி பருத்துவிட்டனர்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு திருடன் வந்தான். மற்ற ஊர்களைப்போல அந்த ஊர்க்காரர்கள் பகலில் விழித்திருந்து இரவில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல என்பதையும் இரவில் விழித்து பகலில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதையும் அவன் தெரிந்துகொண்டே வந்திருந்தான். பகல் வெளிச்சம் தன் தொழிலுக்கு உதவும் என அவன் நினைத்தான்.

அந்த ஊரில் ஒரு நகை வியாபாரி வசித்துவந்தார். ஊரிலேயே அவருடைய வீடுதான் பெரிய வீடு. அவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். இரண்டுமூன்று நாட்கள் அந்த ஊரிலேயே தங்கி தெருத்தெருவாக அலைந்து நோட்டமிட்ட பிறகு அந்த வீட்டில் திருடுவதற்கு முடிவெடுத்தான் திருடன். அந்த வீட்டுக்குள் புகுந்தால் ஒரே திருட்டில், தேவையான அளவுக்குத் திருடிச் செல்லலாம் என்றும் அதற்குப் பிறகு இரண்டுமூன்று மாதங்கள் சந்தோஷமாகச் சுற்றித் திரியலாம் என்றும் அவன் திட்டமிட்டான்.

ஒருநாள் உச்சிப்பகல் வேளையில் அந்த ஊரே உறக்கத்தில் மூழ்கியிருந்தது. அந்த நேரத்தில் வியாபாரியின் வீட்டுக்குள் நுழைவதற்காக, பொருத்தமான இடத்தைத் தேடி வீட்டையே ஒருமுறை சுற்றி வந்தான் திருடன். உயரமான வெளிப்புறச்சுவரில் வாகான ஓர் இடத்தைத் தேடிக் கண்டடைந்தான். தன் மூட்டைக்குள் வைத்திருந்த கூர்மையான சின்னஞ்சிறு ஆயுதத்தால் குத்திக் குத்தி ஓட்டையிட்டான். ஓர் ஆள் தடையின்றி நுழைந்து செல்வதற்குப் போதுமான அளவுக்கு ஓட்டையிட்ட பிறகு, முதலில் தலையை நுழைத்து வீட்டுக்குள் ஏதேனும் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு கைகளை மட்டும் நீட்டி தரையைத் தொட்டு ஊன்றிக்கொண்டான். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக உடலை உட்பக்கமாக இழுத்தான். வயிறுவரைக்கும் உள்ளே வந்துவிட்டது. இன்னும் கால்களை மட்டுமே உள்ளே இழுக்கவேண்டும் என்கிற நிலையில், அந்தச் சுவர் திடீரென இடிந்து அந்தத் திருடன் மீது விழுந்தது.

வலி தாங்காமல் திருடன் போட்ட சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் விழித்தெழுந்துவிட்டனர். திருடனைப் பார்த்ததும் கூக்குரலிட்டனர். அதைக் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர். வியாபாரியின் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே கூடிவிட்டது.

வீட்டுக்குள் பாதி உடலும் வெளியே பாதி உடலுமாக இருந்த திருடன் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் அந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டான். திருடனின் தலையைப் பிடித்து இழுத்து நிற்கவைத்த கூட்டத்தினர், அவனை முதலில் நையப் புடைத்தனர். பிறகு அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துச் சென்று ராஜாவின் முன்னால் நிறுத்தினார்கள்.

அகாலத்தில் உறக்கத்திலிருந்து எழுந்துவந்த ராஜா அவர்களைப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். வியாபாரி நடந்த விவரங்களைச் சுருக்கமாக ராஜாவிடம் தெரிவித்தார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராஜா, திருடனைப் பார்த்து ‘உனக்கு ஏதாச்சும் சொல்லணும்னு தோணிச்சின்னா தாராளமா சொல்லலாம். உன் மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றங்கள் எல்லாம் உண்மைதானா?’ என்று கேட்டார். தொடர்ந்து ‘ரெண்டுபேர் சொல்றதையும் கேட்ட பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வரமுடியும்’ என்றார்.

பேசுவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்த திருடன் மகிழ்ச்சியடைந்தான். அதற்காக ராஜாவின் முன் தலைகுனிந்து வணங்கி நன்றி சொன்னான்.

‘திருட்டு என் குலத்தொழில் ராஜா. எல்லாரும் அவுங்கவுங்க குலத்தொழிலைச் செய்யறமாதிரி நானும் என் குலத்தொழிலைச் செய்யறேன். அது ஒன்னும் எனக்கு பெரிய தப்பா தெரியலை ராஜா.’

‘சரி, மேல சொல்லு’

‘திருடணும்ங்கற நோக்கத்தோடு அந்த வியாபாரி வீட்டுக்குத் திருடப் போனது உண்மைதான் ராஜா. ஆனா, நான் எதையும் திருடவே இல்லை. வீட்டுக்குள்ள போகறதுக்கு முன்னாலயே நான் பிடிபட்டுட்டேன்.’

ராஜா அந்தத் திருடனின் பேச்சைக் கேட்டு குழம்பினார். ‘திருட்டே நடக்கலைன்னா, அப்புறம் எதுக்கு இந்த வழக்கு?’ என்று முணுமுணுத்தார். பிறகு வியாபாரியின் பக்கம் திரும்பி ‘உன் வீட்டிலேர்ந்து ஏதாவது திருடு போயிருக்குதா?’ என்று கேட்டார். அந்த வியாபாரி ‘எதுவும் திருடு போகலை ராஜா’ என்று சொல்லிவிட்டு தலையை அசைத்தார். தொடர்ந்து ‘அவன் வீட்டுக்குள்ள பூந்து திருடறதுக்கு முன்னாலயே அவனைப் பிடிச்சிட்டோம் ராஜா’ என்றார்.

திருட்டே நடக்காத வழக்கில் எப்படி தீர்ப்பு கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார் ராஜா. அவருடைய தூக்கக்கலக்கம் அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அந்த நேரம் பார்த்து திருடன் ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ராஜா’ என்று சொன்னான்.

‘என்ன?’ என்பதுபோல அவன் பக்கம் பார்த்தார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுச் சுவர் கட்டுமானம் சரியில்லை ராஜா. அது உறுதியா இல்லாததாலதான் அது என் மேல உடைஞ்சி விழுந்தது. ஒரு சாதாரண ஓட்டைக்குக் கூட தாக்குப் பிடிக்காத அளவுக்கு ஒரு வீட்டுடைய சுவரைக் கட்டறது குற்றமில்லையா ராஜா? அந்தச் சுவரால ஒரு வீட்டுக்கு எப்படி பாதுகாப்பைக் கொடுக்கமுடியும் ராஜா?’ திருடனாக இருந்தாலும் அவன் நியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறான் என்று நினைத்தார் ராஜா.

ராஜாவுடைய அமைதியைப் பயன்படுத்திக்கொண்டு திருடன் இன்னும் ஒரு படி முன்னேறி ‘இடிஞ்ச சுவர் என் மேல விழுந்ததால என் உடம்பெல்லாம் காயமா இருக்குது ராஜா. முதுகெலும்புல நல்ல அடி. நின்னாலும் வலிக்குது. உட்கார்ந்தாலும் வலிக்குது. ஒருவேளை அந்த அடியில என் உயிரே போயிருந்தா என் குடும்பத்துடைய கதி என்ன ஆயிருக்குமோ, தெரியலை’ என்று பணிவுடன் உடலை வளைத்து குனிந்தவாக்கிலேயே சொன்னான்.

‘அவ்வளவு பலவீனமா சுவரைக் கட்டிய வியாபாரியை விசாரிச்சி தண்டிக்கணும் ராஜா. அப்பதான் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் ராஜா.’

திருடனின் யோசனை ராஜாவுக்குப் பிடித்துவிட்டது. அவர் உடனே வியாபாரியின் பக்கம் திரும்பினார். ராஜாவின் பார்வையைப் பார்த்ததுமே வியாபாரிக்கு உடல் வேர்வையில் நனைந்துவிட்டது.

‘என்ன சொல்ற நீ? உனக்குத் தண்டனை கொடுக்கட்டுமா?’ என்று கேட்டார் ராஜா. வியாபாரி ஒருகணம் யோசித்தார். எப்படியாவது இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று அவர் மனம் திட்டமிட்டது.

பணிவாகப் பேசுவதுபோல உடலை வளைத்து வணங்கியபடி ‘எனக்குச் சொந்தமான வீட்டுடைய சுவர்தான் ராஜா அது. அதுல ஒன்னும் சந்தேகம் இல்லை. ஆனா, நான் சுயமா அந்தச் சுவரைக் கட்டலை. கட்டடவேலை செய்யற ஆளுங்கதான் அந்தச் சுவரைக் கட்டினாங்க. நான் அந்த வேலைக்கு அவுங்களுக்கு சம்பளம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவுங்கதான் ஏதோ தில்லுமுல்லு செஞ்சிருக்காங்க’ என்று நிதானமான குரலில் சொன்னார்.

வியாபாரியின் கூற்றைக் கேட்டுவிட்டு ராஜா ஒருசில கணங்கள் யோசனையில் மூழ்கினார். வியாபாரியின் பேச்சில் ஒரு நியாயம் அடங்கியிருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பிறகு தொண்டையைச் செருமியபடி அவையில் நின்றிருந்த ஆட்களிடம் ‘வியாபாரியின் வீட்டில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடிச்சி உடனே அழைச்சிட்டு வாங்க’ என்று ஆணையிட்டார்.

வேகவேகமாக அவையைவிட்டு வெளியேறிய ஆட்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடித்து இழுத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர். வரும் வழியிலேயே அரண்மனை ஆட்கள் அந்த ஆளிடம் அவனை அழைத்துச்செல்வதற்கான காரணத்தை விளக்கியிருந்தனர். அதனால் ராஜாவின் முன்னால் நின்றதும் முதலில் குனிந்து வணக்கம் சொன்னான். பிறகு ‘ராஜா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கவனிச்சி கேளுங்க. என் கட்டட வேலையில எந்தக் குத்தமும் இல்லைங்க ராஜா. இதே ஊருல நான் எவ்வளவோ பேருக்கு வீடுங்க கட்டிக் கொடுத்திருக்கேன். இந்த வியாபாரி வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயும் கட்டியிருக்கேன். பின்னாலயும் கட்டியிருக்கேன். அந்த வீடுங்க எல்லாம் பத்திரமாதான இருக்குது. ஊருக்குள்ள நீங்க வேணும்ன்னா விசாரிச்சித் தெரிஞ்சிக்கலாம். இவருடைய வீட்டுல மட்டும் ஒரு பிரச்சினை வந்திருக்குதுன்னா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் ராஜா?’ என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்டார்.

ராஜாவும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு ‘சுவர் இடிஞ்சி விழறதுக்கு நீ பொறுப்பில்லைன்னா, வேற யாரு பொறுப்பா இருக்கமுடியும்?’ என்று அவனிடமே அப்பாவித்தனமான குரலில் கேட்டார்.

‘ராஜா, நீங்க கோவப்பட மாட்டீங்கன்னா, நான் ஒரு விஷயம் சொல்றேன்’ என்று இன்னும் கூடுதலான பணிவோடு சொன்னான் கட்டட வேலை செய்பவன்.

‘என்ன, சீக்கிரம் சொல்லு’ என்று அவசரப்படுத்தினார் ராஜா.

‘எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

அவன் கூற்றில் ஒரு நுட்பமான பொருள் இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. ‘ஆமாம், ஆமாம், நீ சொல்றது உண்மைதான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். உடனே ஆட்களை அழைத்து ‘உடனே போய் அந்தச் செங்கல் சூளைக்காரனை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

வேலைக்காரர்கள் பல இடங்களில் தேடி அலைந்து கடைசியில் ஒரு வழியாக செங்கல் சூளை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்து விஷயத்தையெல்லாம் சொல்லி அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர்.

‘நீதான் இந்த வியாபாரி கட்டின வீட்டுக்கு செங்கல் கொடுத்தியா?’ என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தார் ராஜா. அவன் ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு தலையசைத்தான்.

‘அப்ப வியாபாரியுடைய வீடு இடிஞ்சி விழறதுக்கு நீதான் மூலப்பொறுப்பு. உனக்குத்தான் தண்டனை கொடுக்கணும்’ என்று அவசரமாகச் சொன்னார் ராஜா.

‘நீங்க தண்டனை கொடுத்தா தாராளமா ஏத்துக்கறேன் ராஜா. அதுக்கு முன்னால நான் சொல்ற வார்த்தையை கேக்கணும்.’ என்று ராஜாவின் முகத்தைப் பார்த்தான் சூளைக்காரன்.

‘என்ன சொல்லப் போற நீ?’ என்று அதட்டலாகக் கேட்டார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுக்கு செங்கல் கொடுக்கறதுக்குத்தான் புதுசா ஒரு சூளையை போட்டேன். அதுக்குத் தேவையான செங்கல்லுக்காக, களிமண்ணை கொழைச்சி கல் அறுத்துட்டிருந்த சமயத்துல பக்கத்து வீட்டுல நாட்டியக்கச்சேரிக்கு ஒரு இளவயசுப்பொண்ணு சலங்கைகட்டி ஆடி பயிற்சி எடுத்துட்டிருந்தா. ராஜா, அந்தச் சலங்கைச்சத்தம் எல்லாரையும் ஒரு மாதிரி பைத்தியம் புடிக்கிறமாதிரி வைச்சிடுச்சி. அடிக்கடி ஆளுங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய பாக்கறதுக்காக திரும்பித்திரும்பி பார்த்துகிட்டே வேலை செஞ்சாங்க. அதனால செங்கல் தயாரிப்புல முறைதவறி ஏதோ கோளாறு ஏற்பட்டுச்சி. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாட்டியக்காரிதான் ராஜா’ என்றான் சூளைக்காரன்.

அவனுடைய விவரிப்பில் ஒரு உண்மை இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. உடனே ஆட்களை அழைத்து ‘சீக்கிரமா போய் அந்த நாட்டியக்காரியை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

உடனே வேலைக்காரர்கள் வெளியேறி நாட்டியக்காரி இருக்கும் இடத்தைத் தேடி அலைந்தனர். பலரிடம் விசாரித்து அவளுடைய வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து, தேடிவந்ததன் காரணத்தையும் சுருக்கமாக விவரித்துவிட்டு, தம்மோடு அழைத்துவந்தனர்.

‘இந்த சூளைக்காரங்க செங்கல் அறுத்திட்டிருந்த சமயத்துல நீ சலங்கை கட்டி நாட்டியப்பயிற்சி செஞ்சிட்டிருந்தியா?’ என்று நேரிடையாகக் கேள்வி கேட்டார் ராஜா. நாட்டியக்காரி உடனே ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு சொன்னாள்.

‘உன்னுடைய சலங்கைச்சத்தத்தால என்னென்ன விபரீதம்லாம் நடந்திருக்குது தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொன்றாக அவளிடம் நிறுத்தி நிதானமாக அடுக்கினார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்பதுபோல தலைவணங்கி நின்றிருந்தாள் நாட்டியக்காரி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று அவளுடைய ஆழ்மனம் திட்டமிட்டபடி இருந்தது. சட்டென மின்னல்போல ஓர் எண்ணம் அவள் நெஞ்சில் உதித்தது. அடுத்து ‘ராஜா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?’ என்று பணிவோடு கேட்டாள்.

‘என்ன? சீக்கிரம் சொல்’ என்றார் ராஜா.

‘அன்னைக்கு நான் சலங்கை கட்டி ஆடினது உண்மைதான் ராஜா. அதை நான் மறுக்கலை. ஆனா, அதுக்கு ஒரு காரணம் இருக்குது ராஜா.’

‘என்ன காரணம்?’

‘கால்ல போடற சலங்கைக்குப் பொருத்தமா கையிலயும் வளையல் போட்டு ஆடறதுதான் ஒரு நாட்டியக்காரிக்கு அழகு ராஜா. அப்படித்தான் எல்லா நாட்டியக்காரிகளும் ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் சலங்கைக்கு பொருத்தமா ஒரு டஜன் வளையல் வேணும்னு அந்த நகைவியாபாரிகிட்ட ரொம்ப நாள் முன்னாலயே சொல்லி வச்சிருந்தேன். கை அளவு கூட கொடுத்து முன்பணம் கூட கொடுத்து வச்சிருந்தேன். சொல்லிவச்சி நாளுங்கதான் ஓடிச்சே தவிர, அவரு வளையலைச் செஞ்சி குடுக்கிற வழியாவே தெரியலை. எப்ப போய் கேட்டாலும் நாளைக்கு நாளைக்குன்னு சாக்குப்போக்கு சொல்லி அனுப்பிவச்சிடுவாரு. அவர் மட்டும் சொன்ன நேரத்துக்கு ஒழுங்கா வளையல்களை செஞ்சி குடுத்திருந்தாருன்னா, நான் வளையலை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சி பார்த்திருப்பேன். அப்ப சத்தம் பெரிசா கேட்டிருக்காது. ஆனா அவரு வளையலைக் கொடுக்காததால வேற வழியில்லாம சலங்கையை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சேன். அந்த சத்தம் இவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்த்ததில்லை. இதுல என் தப்பு எதுவும் இல்லை ராஜா. எல்லாமே இந்த வியாபாரியுடைய தப்பு.’

நாட்டியக்காரி சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்ட ராஜாவுக்கு அந்தப் பெண்ணின்மீது கருணை பிறந்தது. எல்லாக் குற்றங்களுக்கும் மூல காரணம் அந்த வியாபாரியே என்று அவர் முடிவு கட்டினார். தண்டனையை அறிவிக்கும் எண்ணத்துடன் அந்த வியாபாரியின் பக்கம் திரும்பினார். ‘உன் தப்பை மறைப்பதற்காக மத்தவங்க மீது பழி சுமத்திடலாம்னு நெனைச்சிட்டியா?’ என்று கேட்டார்.

‘அப்படியெல்லாம் நெனைக்காதீங்க ராஜா. என் மேல ஒரு தப்பும் இல்லை. நாட்டியக்காரி செஞ்சி கொடுக்கச் சொன்ன வளையல்களை எங்க தச்சாசாரிங்க எப்பவோ செஞ்சி முடிச்சிட்டாங்க. தங்கம் சம்பந்தமான பொருள்ங்கறதால, அதை நல்ல சகுனத்துலதான் எடுக்கணும், கொடுக்கணும்ங்கறது ஒரு சம்பிரதாயம் உண்டு ராஜா. காலையில விழிப்பு வர்ர வேளைதான் ஒரு நாள்ல நல்ல முகூர்த்தம் ராஜா. ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததும் குளிச்சிட்டு அந்த நேரத்துல அந்த வளையல்களை வாங்கிட்டு வரதுக்காக தச்சாசாரிங்க வீட்டுக்கு கெளம்புவேன். ஆனா, வீட்டு வாசலைத் தாண்டி நடக்கற சமயத்துல மொட்டை அடிச்சிகிட்டு, உடம்பு பூரா சாம்பலால பட்டையை போட்டுகிட்டு யானை மாதிரி தடியா ஒரு ஆளு எதுத்தாப்புல வந்துடுவான். அவன் இந்த ஊரே இல்லை. ஏதோ வெளியூருகாரன். இங்க வந்து மண்டபத்துல படுத்துங்கெடக்கறான். அவனைப் பார்த்தாவே வெளங்காமூஞ்சியா இருக்கும். அப்படி ஒரு மூஞ்சிய பார்த்துட்டு போனா, போற காரியம் விளங்குமான்னு எனக்கு மனசுக்குள்ள தோணும். சரி, விடு, நாளைக்குப் போயிக்கலாம்னு வீட்டுக்கே திரும்பிடுவேன். ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, ஆறேழு மாசமா இதே கதைதான் நடக்குது. நாட்டியக்காரிக்கு சொன்ன தேதியில வளையலை கொடுக்கமுடியாததுக்கு இதுதான் காரணம் ராஜா.’

இரக்கத்தைத் தூண்டும் விதமாக வியாபாரி விவரித்த கதையைக் கேட்டு ராஜாவுக்கும் சங்கடமாக இருந்தது. ஆயினும் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டு ‘நீ சொல்ற விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, உனக்குத் தூக்குதண்டனை நிச்சயம்’ என்று எச்சரித்தார். பிறகு வேலையாட்களை அழைத்து முதலில் தச்சாசாரிகள் வசிக்கும் குடியிருப்புக்கு அனுப்பி, வியாபாரி சொன்ன விஷயம் உண்மைதானா என்று அறிந்துகொண்டு வருமாறு அனுப்பிவைத்தார்.

சிறிது நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து ஆசாரிமார்களிடம் விசாரித்ததாகவும் வளையல்கள் தொடர்பான விஷயம் உண்மைதான் என்றும் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் ராஜா மெளனமாக வியாபாரியின் பக்கம் பார்த்தார். தான் தெரிவித்த உண்மையை ராஜா உணர்ந்துகொண்டார் என்ற நிம்மதி உணர்வு வியாபாரியின் முகத்தில் படிந்திருந்தது.

ஒருகணம் யோசனையில் மூழ்கிய ராஜா ஒவ்வொரு நாள் காலையிலும் அவலட்சணமான முகத்துடன் மண்டபத்தில் ஒதுங்கியிருக்கும் ஆண்டியைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொன்னார். உடனே ஆட்கள் புறப்பட்டுச் சென்றனர். ஊரில் புதிதாக நடமாடுகிறவர்கள் யார் என்கிற கேள்விக்கு எல்லோருமே குரு-சீடன் தங்கியிருக்கும் மண்டபத்தின் பக்கம் கையைக் காட்டினர். உடனே ஆட்கள் குளத்தங்கரைக்குச் சென்றனர். அங்கே குரு ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கண்மூடி தியானத்தில் மூழ்கியிருக்க, சீடன் மட்டும் பரபரப்போடு அங்குமிங்கும் பார்த்தபடி நடமாடிக்கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே தான் தேடிவந்த ஆள் அவனே என்று வேலையாட்கள் உறுதியாக நம்பினர். உடனே அவனை ‘வா. உன்னை ராஜா கூப்பிடுறார்’ என்று சொல்லி அழைத்துச் சென்றனர். அவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட பிறகு மெல்ல கண்விழித்த குரு என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருகணம் குழப்பமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பிறகு அவர்களுக்குப் பின்னாலேயே சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு நடக்கத் தொடங்கினார்.

ராஜாவின் முன்னால் சீடன் நிறுத்தப்பட்டதுமே, ராஜா வியாபாரியின் பக்கம் திரும்பி ‘நீ சொன்ன ஆள் இவன்தானா?’ என்று கேட்டார். மொட்டைத்தலையுடன் உடல்பருத்து காணப்பட்ட அவனைப் பார்த்ததுமே வியாபாரி ‘இவனேதான் ராஜா, இவனேதான்’ என்று குதித்தார். தொடர்ந்து ‘நீங்களே ஒருமுறை இவனை உற்றுப் பாருங்க ராஜா. இந்த அவலட்சணமான மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, போகிற காரியம் உருப்படுமா? நீங்களே ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க ராஜா’ என்றார்.

சீடனை ஒருமுறை ஏற இறங்க கவனமுடன் பார்த்தார் ராஜா. தான் எதற்காக அவைக்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாத சீடன் குழப்பத்தோடு ‘ராஜா, நான் ஒரு தப்பும் செய்யலையே. என்னை எதுக்காக இங்க இழுத்து வந்திருக்காங்க?’ என்று கேட்டான்.

‘நீ நேரிடையா ஒரு தப்பும் செய்யலை. ஆனா மறைமுகமா பல தப்புகள் இந்த ஊருல நடக்கறதுக்கு நீ காரணமா இருந்திருக்க’ என்றார் ராஜா.

சீடன் குழப்பத்துடன் ராஜாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ராஜா ஒவ்வொன்றாக விஷயத்தை அடுக்கடுக்காகத் தெரிவித்தார். இறுதியாக, அவன் செய்த குற்றத்துக்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்தநாள் காலையில் ஊரெல்லையில் உள்ள தூக்குமேடையில் அவன் தூக்கிலிடப்படுவான் என்று தண்டனையையும் அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

தண்டனையின் அறிவிப்பைக் கேட்டு சீடன் துயரத்தில் மூழ்கினான். எதற்காக இந்த ஊரில் தங்கினோம் என்று தன்னையே நொந்துகொண்டான். இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடலாம் என ஏதோ உள்ளுணர்வின் தூண்டுதலால் தன்னை எச்சரித்த குருவின் பேச்சைக் கேட்காதது குறித்தும் அவரைத் தன் சாமர்த்தியத்தால் அமைதிப்படுத்தி அதே ஊரில் தங்கியிருக்கும் முடிவை எடுத்தது குறித்தும் வருந்தினான்.

சீடனின் பின்னாலேயே சென்ற குரு அந்தச் சபையின் ஓரமாக ஒதுங்கி நின்று, அங்கு நடைபெற்ற விசாரணையையெல்லாம் பார்த்தார். தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவனை வேலையாட்கள் அழைத்துச் சென்றதையும் பார்த்தார். எங்கும் குறுக்கிட்டுத் தடுக்கமுடியாத தன் நிலையை எண்ணி வருத்தமடைந்தார். தன் சீடனை எப்படி காப்பாற்றுவது என அன்று முழுநாளும் யோசித்தபடி இருந்தார்.

அடுத்தநாள் பொழுது விடிந்ததும் அவர் சீடன் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டு சென்றார். யாரோ ஒன்றிரண்டு பேர் வழியைச் சொல்ல, அதே வழியில் சென்று அந்தப் பெரிய கட்டடத்தின் முன் நின்றார்.

வெளியே நின்றிருந்த காவல்காரனிடம் ஒரு நிமிடம் தன் சீடனிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டார். ‘நாளைக்கு காலையில தூக்குல போடவேண்டிய ஆளு. பத்திரமா வச்சிருக்கறோம். பக்கத்துல போவாதீங்க. எட்டி நின்னு சீக்கிரமா பேசிட்டு வந்துடுங்க’ என்று எச்சரித்துவிட்டு, அவரை உள்ளே அனுப்பிவைத்தான் காவல்காரன்.

உள்ளே சென்ற குரு சீடன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று சீடனை அழைத்தார். சுவரோடு ஒட்டியவனாக உள்ளே அமர்ந்திருந்த அவன் ஒரே பாய்ச்சலில் கதவுக்கு அருகில் வந்துவிட்டான்.

‘என்னை மன்னிச்சிக்குங்க குருவே. அன்னைக்கு நீங்க சொன்னபடி நான் கேட்டிருந்தா நாம ஏதாவது ஒரு இடத்துல ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கலாம். இப்படி ஒரு சிக்கல்ல சிக்கியிருக்கமாட்டேன். நான் செஞ்ச ஒரு தப்பால இப்படி முட்டாளுங்க நடுவுல சிக்கி என்னுடைய உயிரே போவப்போவுது’ என்று அழுதான் சீடன்.

சீடனின் கண்ணீரைப் பார்த்ததும் குருவின் மனம் உருகியது. ‘கவலைப்படாதே, உனக்கு உதவி செய்யறதுக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாளைக்கு காலையில ஊரு எல்லையில உன்னை தூக்குமரத்துல ஏத்தற சமயத்துக்கு சரியா நான் அங்க வந்து சேருவேன். இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. அதுமாதிரி செஞ்சா நீ பிழைச்சிக்கலாம். நாம ரெண்டு பேரும் இந்த ஊருலேர்ந்து தப்பிச்சிடலாம்’ என்றார் குரு.

‘என்ன குருவே?’ என்று கேட்டான் சீடன்.

சீடனின் அருகில் சென்ற குரு, அவன் காதோடு ஒரு ரகசியத்தைச் சொன்னார். சீடன் அதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டான். அவன் அதுவரையில் உணராத ஒரு நிம்மதியை அக்கணத்தில் உணர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பிறகு குரு அவனிடமிருந்து விடைபெற்று அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

அடுத்தநாள் காலையில் ஊர் எல்லையில் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். ராஜாவும் வந்திருந்தார். அவர் அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு ராஜா ‘ம், தண்டனைக்கைதியை கொண்டுவாங்க. சீக்கிரம் தண்டனை முடியட்டும்’ என்று அவசரப்படுத்தினார்.

சீடனை அழைத்துவந்த ஆட்கள் அவனை தூக்குமேடையில் நிற்கவைத்தனர். அவன் முகத்தில் எவ்விதமான கலக்கமும் இல்லை. பதற்றமில்லாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தை மூடுவதற்காக ஒரு பெரிய கருப்புத்துணியோடு அவனுக்கு அருகில் ஒரு வேலைக்காரன் சென்றான்.

அந்த நேரத்துக்குச் சரியாக, கூட்டத்துக்கு நடுவில் நின்றிருந்த குரு ‘மன்னிக்கவும் ராஜா. உங்ககூட ஒரே ஒரு நிமிடம் பேசணும்’ என்று அனைவரையும் விலக்கிக்கொண்டு ராஜாவின் இருக்கைக்கு முன்னால் வந்து நின்றார்.

‘எதுவா இருந்தாலும் தண்டனை முடியட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம்’ என்றார் ராஜா.

‘தண்டனையைப்பற்றித்தான் உங்ககூட பேசணும் ராஜா. ஒரே ஒரு நிமிடம் போதும்’ என்று கெஞ்சினார் குரு.

ராஜா குருவை ஒருகணம் உற்றுப் பார்த்தார் ‘முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க. அதுக்கப்புறமா நீங்க என்ன நினைக்கறீங்களோ அதைச் சொல்லுங்க’ என்றார்.

‘இதோ, தூக்குமேடையில நிக்கிறானே, இவனுடைய குரு நான். இவன் என்னுடைய சீடன்.’

‘ஓஹோ’

‘இவ்வளவு காலமும் என்கூட இருந்தும் கூட, இவனை நல்லபடியா ஆளாக்கமுடியாம போயிடுச்சி. அதுவே எனக்குப் பெரிய குற்ற உணர்வா இருக்குது. இவனை நல்லவிதமா ஆளாக்காம இருந்தது என்னுடைய முதல் குற்றம். நான் இவனை ஒழுங்கா கவனிச்சிருந்தா, இவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான். அதனால இவனுக்குத் தரவேண்டிய தூக்குத்தண்டனையை எனக்குக் கொடுங்க. நான் முழுமனசோட அந்தத் தண்டனையை ஏத்துக்கறேன்’ என்று சொல்லிக்கொண்டே தூக்குமேடையில் ஏறி சீடனுக்குப் பக்கத்தில் சென்று நின்றுவிட்டார்.

ராஜா அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது என்ன புது குழப்பம் என்று சிந்தனையில் மூழ்கினார்.

‘எங்க குரு சொல்றத கேக்காதீங்க ராஜா. வாய்ப்பிருந்தும் நல்ல விஷயங்களைக் கத்துக்காம இருந்தது என் தப்புத்தான். இதுல குருவுடைய தப்பு எதுவும் இல்லை. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்றான் சீடன்.

‘ராஜா, வயசுல நான் பெரியவன். நான் சொல்றத தயவுசெஞ்சி கேளுங்க. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்று வாதாடினார் குரு.

‘இல்லை இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை எனக்கு உரியதாவே இருக்கட்டும். அதை மாத்தவேணாம்’ என்றான் சீடன்.

குரு, சீடன் இருவருக்குமிடையில் நடைபெற்ற விவாதத்தைக் கேட்டு சுற்றி நின்றிருந்தவர்கள் குழப்பத்தில் மூழ்கினர். முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜாவுக்கு என்ன முடிவெடுப்பது என்பதைப்பற்றி ஒரு தெளிவும் பிறக்கவில்லை. ‘இது என்ன புது குழப்பமா இருக்குது? இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை’ என்று முணுமுணுத்தார்.

‘நான் ஒரு முன்மாதிரியா இருக்கணும்னு நினைக்கறேன் ராஜா’ என்றார் குரு.

அப்போது சீடன் குறுக்கிட்டு, ‘ராஜா, வேணும்ன்னா குருவையும் நீங்க தூக்குல போடுங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா, என்னை முதல்ல தூக்குல போட்டுட்டு, அதுக்கப்புறம் அவரை போடுங்க’ என்றான்.

‘இல்லை. இல்லை. என்னைத்தான் முதல்ல போடணும். அதுக்கப்புறம் அவனுக்கு தண்டனை கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டாலும் சரி, உங்க விருப்பம்’ என்றார் குரு.

ராஜாவுக்கு மனம் குழம்பியது. ‘சாகறதுக்கு ஏன் நீங்க ரெண்டு பேரும் நான் நான்னு முன்னால வரீங்க, எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்றார்.

‘ராஜா, என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் சீடன்.

‘நான் இவனுடைய குரு. நான் சொல்றதை கேளுங்க. என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் குரு.

‘இங்க பாருங்க. விசாரணைப்படி அவன்தான் குற்றவாளின்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். அதை மாத்தமுடியாது. அதனால அவனைத்தான் முதல்ல தூக்குல போடணும்’ என்று முடிவாக அறிவித்தார் ராஜா.

அதைக் கேட்டு சீடனின் முகம் மலர்ந்தது. குருவின் முகம் வாட்டமடைந்தது. அதைப் பார்த்த ராஜாவுக்கும் சற்றே வருத்தமாக இருந்தது. ‘என்ன விஷயம், ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லுங்க. தூக்குல தொங்கறதுக்கு ஆளாளுக்கு ஏன் முந்திக்கறீங்க?’ என்று குருவிடம் கேட்டார். குரு ஒருகணம் அமைதியாக நின்றிருந்தார். பிறகு ராஜாவை நோக்கி இரண்டடி தொலைவு நெருங்கிச் சென்று நின்றார். அடங்கிய குரலில் ‘அதுல ஒரு சின்ன ரகசியம் இருக்குது ராஜா’ என்று சொன்னார்.

‘ரகசியமா, என்ன ரகசியம்?’ என்று கேட்டார் ராஜா. குரு ஒருகணம் தன்னையே கவனித்தபடி நின்றிருக்கும் கூட்டத்தைப் பார்த்தார். பிறகு ‘என்னுடைய ஞானக்கண்ணால நான் ஒரு காட்சியைப் பார்த்தேன் ராஜா. அதுதான் முக்கியமான காரணம்’ என்று ராஜாவுக்கு மட்டும் கேட்கிறவகையில் ரகசியமான குரலில் சொன்னார். அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ராஜாவும் குரலை மட்டுப்படுத்தி ‘அது என்ன ரகசியம், கிட்ட வந்து சொல்லுங்க’ என்றார்.

குரு இன்னும் சில அடிகள் நடந்து ராஜாவுக்கு அருகில் சென்றார். அவர் காதருகில் குனிந்து ‘இன்னைய முகூர்த்தத்துல யார் முதல்ல தூக்குல தொங்கி உயிர் விடறாங்களோ, அவுங்களுக்கு அடுத்தடுத்த ஏழு பிறப்புகள்லயும் ஏதோ ஒரு ராஜ்ஜியத்துக்கு ராஜாவா இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போவுது. அதுதான் நான் பார்த்த காட்சி’ என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்டு ராஜா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று துள்ளிக் குதித்தார். ‘உண்மையாகவா சொல்றீங்க?’ என்று கண்கள் மின்ன கேட்டார்.

‘ஆமாம் ராஜா. சத்தியமா நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்’ என்றார் குரு.

‘ஏழு பிறவியிலயும் ராஜாவா?’ என்று மீண்டும் கேட்டார் ராஜா.

‘ஆமாம் ராஜா. இது ஒரு அபூர்வமான முகூர்த்தம்’ என்றார் குரு.

அதைக் கேட்டு ராஜா தண்டனையை நிறைவேற்ற தூக்கு மேடையில் காத்திருக்கும் ஊழியர்களை அழைத்தார். சீடனை விடுவிக்கும்படி ஆணையிட்டார். ‘இந்தக் கணமே என்னைத் தூக்கிலிடுங்கள். இது என் கட்டளை’ என்று சொன்னபடி தூக்கு மேடையில் ஏறி நின்றார். சீடனும் குருவும் திகைத்த முகத்துடன் ஒதுங்கி நின்றனர். மேடையைச் சுற்றி வேடிக்கை பார்க்க நின்றிருந்த பொதுமக்கள் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ராஜா என்ன சொல்கிறார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றத்தோடு நின்றிருந்தனர் ஊழியர்கள்.

‘முட்டாள்களே, நான் சொல்வது புரியலையா? உங்க ராஜாவுடைய கட்டளை இது. என்னைத் தூக்கிலிடுங்க’ என்று சத்தம் போட்டு சொன்னார் ராஜா.

வேறு வழியில்லாத ஊழியர்கள் அக்கணமே கருப்புத்துணியால் அவருடைய முகத்தை மூடி கயிற்றில் சுருக்கிட்ட கயிற்றை மாட்டிவிட்டு தூக்குமேடையில் நிறுத்தினர். அடுத்த கணமே இன்னொரு ஊழியர் காலுக்குக் கீழே இருந்த பலகையை இழுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது.

‘என்ன இது?’ ‘ஏன் இப்படி?’ என்று குழப்பத்துடன் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டபடி அங்கேயே கூட்டமாக நின்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். குருவையும் சீடனையும் ஒருவரும் கவனிக்கவில்லை. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக் கூட்டத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினர். பிறகு அந்த ஊரைவிட்டே வெளியேறினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர் கனகவல்லி. இளையவன் ஆண்குழந்தை. பெயர் கனகராஜா. இருவருமே பெற்றோர்களின் செல்லப்பிள்ளைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் வளர்ந்து கல்வி கற்கும் பருவத்தை அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியரொருவர் அரண்மனைக்கே வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

பாடம் படிக்கும் நேரம் போக, இரு பிள்ளைகளும் எஞ்சிய நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் விளையாடி பொழுதுபோக்கினார்கள். அங்கு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் கதை கேட்டு மகிழ்ந்தார்கள். இரவு உறங்கச் செல்லும்போது அந்தக் கதைகளையெல்லாம் அம்மாவுக்குச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் அந்தப் பெண்குழந்தை பெரியவளானாள். பூப்புனித நீராட்டு விழாவில் புத்தாடைக்கோலத்தில் அவளைப் பார்த்த அம்மா பரவசமடைந்தாள். நம் பெண்ணா இவள் என நினைத்து நினைத்து அவள் பெருமிதமடைந்தாள். சிறுவனும் நன்றாக வளர்ந்து படிப்பிலும் பாட்டு முதலான கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

எல்லாம் நல்ல விதமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதபடி ஊரெங்கும் பரவிய புதுவிதமான ஒரு நச்சுக்காய்ச்சலால் அரசி துன்பமுற்றாள். பத்து நாட்களுக்கும் மேலாக கண்களைக் கூட திறக்காமல் மயங்கிய நிலையிலேயே படுக்கையில் கிடந்தாள். தன்னுணர்வு திரும்பாமலேயே அவளுடைய உயிர் பிரிந்துவிட்டது.

அரசி இறந்ததும் அரண்மனையே இருண்ட உலகமாக மாறிவிட்டது. அரசனின் முகம் களையிழந்து மூப்படைந்ததைப்போல காணப்பட்டது. பிள்ளைகளும் மெலிந்து நலியத் தொடங்கினார்கள்.

அரண்மனையில் இருந்த பெரியவர்கள் கூடி அரசனின் நிலைமை குறித்து தமக்குள் ஆலோசனை செய்தனர். வாழ்க்கைத் துணையை இழந்ததால்தான் அவர் அந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டார் என அவர்களுக்குத் தோன்றியது. ஒரு திருமணம் செய்துகொண்டால், அரசன் பழைய நிலைக்கு மீண்டு வந்துவிடுவார் என அவர்கள் நம்பினர். தக்க நேரம் வரும் வரையில் காத்திருந்து அனைவரும் அரசனைச் சந்தித்தனர்.

தொடக்கத்தில் ஏதேதோ செய்திகளைப் பேசிய பிறகு, இறுதியில் மறுமணம் செய்துகொள்ளுமாறு அரசனிடம் கேட்டுக்கொண்டனர். அதைக் கேட்டதும், அந்தக் கோரிக்கையை அரசன் வேகமாகத் தலையசைத்து மறுத்தான். ஆனால் அரண்மனைப் பெரியவர்கள் தொடர்ச்சியாக வற்புறுத்திய காரணத்தால் விருப்பமில்லாமலேயே மறுமணத்துக்கு ஒப்புக்கொண்டான்.

உடனே நான்கு திசைகளிலும் ஆட்களை அனுப்பி அரசனுக்கு ஏற்ற பெண் எங்கு கிடைப்பாள் என தகவலைத் திரட்டிக்கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள் பெரியவர்கள். கிழக்குத்திசையில் சென்ற ஒருவன் பத்து பதினைந்து நாட்களிலேயே திரும்பி வந்து அரசருக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னான். உடனே அரசனின் ஆலோசனைக்குழுவினர் அவனோடு சென்று பெண் வீட்டாரிடம் பேசி முடிவு செய்துவிட்டு வந்தனர். அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்குத் திருமணம் நடந்துமுடிந்தது.

அரண்மனை வாசம் புதிதாக வந்த அரசிக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் அவளை வணங்குவதைக் கண்டு அவள் மனம் பூரித்தது. ஆரம்பத்தில் எல்லோரோடும் இயல்பாகவே பேசிப் பழகிக்கொண்டு இருந்தாள். அரசனின் பிள்ளைகளோடும் பாசமாக பேசிப் பழகினாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அனைவரிடமும் வெடுக் வெடுக்கென்று பேசத் தொடங்கினாள். அருகில் நெருங்க விடாமல் அனைவரையும் விரட்டியடித்தபடி இருந்தாள். உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் கண் முன்னால் நிற்பவர்கள்மீது எரிந்து விழுந்தாள்.

கனகவல்லியையும் கனகராஜாவையும் ஒருவித பகையுணர்ச்சியோடு பார்க்கத் தொடங்கினாள். அரண்மனையில் இருக்கும் அனைவருமே தமக்கு எதிராக சதி செய்வதாக நினைத்துக்கொள்ளத் தொடங்கினாள். பிறகு தவறு செய்ததாக சிலர் மீது குற்றம் சுமத்தி, அரசனிடம் எதையும் தெரிவிக்காமலேயே தன்னிச்சையாக தண்டனை கொடுக்கத் தொடங்கினாள்.

கனகவல்லி நாளுக்கு நாள் வளர்ந்து பெரியவளாவதைப் பார்த்து புதிய அரசி பொறாமையில் மனம் குமைந்தாள். ஒருநாள் காலையில் கனகவல்லி சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து ஒரு கோப்பையில் பழச்சாறை நிரப்பி கொடுத்தாள். அப்போது கனகவல்லி ‘சித்தி, எனக்குப் பழச்சாறு பிடிக்காது பால்தான் குடிப்பேன்’ என்று மறுத்தாள். ‘அப்படியா, அது தெரியாம சித்தி உனக்கு பழச்சாறு கொண்டுவந்துட்டேனே. சரி, போகட்டும், இன்னைக்கு ஒரு நாள் குடிச்சிடு. நாளையிலேர்ந்து பால் வைக்கறேன்’ என்றாள். வேறு வழியில்லாமல் சித்தியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவள் அந்தப் பழச்சாறை மருந்து குடிப்பதுபோல கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்துமுடித்தாள். தம்ளரை கீழே வைத்துவிட்டு உதடுகளைத் துடைத்துக்கொண்டாள். பிறகு தம்பியோடு படிப்பதற்காக ஆசிரியர் அமரும் முற்றத்துக்குச் சென்றார்.

பிறந்து சில நாட்களே ஆன ஒரு சின்னஞ்சிறு பாம்புக்குட்டியைப் பிடித்துவந்து அந்தப் பழச்சாறில் போட்டிருந்தாள் புதிய அரசி. கனகவல்லி வளர வளர, அந்தப் பாம்புக்குட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய வயிற்றில் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக அவளுடைய வயிறு ஒவ்வொரு நாளும் பெரிதாக உப்பத் தொடங்கியது. அவளும் வலியில் துடிக்கத் தொடங்கினாள்.

கனகவல்லியின் உப்பிப் பருத்த வயிற்றைப் பார்த்ததும் அவள் கருவுற்றிருப்பதாக வதந்தியைப் பரப்பத் தொடங்கினாள் புதிய அரசி. அரண்மனை முழுக்க செய்தி பரவிவிட்டது. ஒருநாள் அவளே அரசனைச் சந்தித்து திருமணமாகாமல் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணை அரண்மனைக்குள் வைத்திருப்பது கேவலம் என்று தெரிவித்தாள். பிறகு அவளை எங்காவது காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டாள்.

புதிய அரசி சொன்ன சொற்களை அரசனால் தட்டமுடியவில்லை. தன் மகளை காட்டுக்கு அனுப்பி வைப்பதைத் தவிர அரசனுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் அப்பாவே தன் அக்காவைக் காட்டுக்கு அனுப்பிவைக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்துகொண்ட கனகராஜா, அக்காவை விட்டு தன்னால் தனியாக இருக்கமுடியாது என்று தெரிவித்தான். அதனால் அரசனின் வேலையாட்கள் இருவரையும் கண்களைக் கட்டி ஒரு குதிரை மீது ஏற்றி அழைத்துச் சென்று காட்டுக்குள் தொலைவான ஒரு பகுதியில் இறக்கிவிட்டு வந்துவிட்டனர். கண்கட்டை அவிழ்த்துப் பார்த்த கனகவல்லியும் கனகராஜாவும் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பித் தவித்தனர்.

இருவரும் தன்னந்தனியாக காட்டில் அலைந்து திரிந்தனர். பகல் நேரங்களில் மரங்களும் புதர்களும் அடர்ந்த பாதைகளில் நடந்து பொழுதுபோக்கினர். ஆங்காங்கே அலைந்து திரியும் மான்களையும் குரங்குகளையும் பார்த்து துன்பத்தை மறந்தனர். மரங்களில் கனிந்து தொங்கும் பழங்களைப் பறித்து பசியைப் போக்கிக்கொண்டனர். குளங்களில் நிறைந்திருக்கும் தண்ணீரை அருந்தி வேட்கையைத் தணித்துக்கொண்டனர். இரவு நேரங்களில் மரத்தடிகளில் சருகுகளைக் கூட்டி மெத்தைபோல பரப்பிவிட்டு அதன் மீது படுத்துறங்கினர்.

தனிமையில் தவம் செய்யும் வயதான பெரியவர் ஒருவர் அந்தக் காட்டில் வசித்துவந்தார். ஒருநாள் அவர் அதிகாலையில் குளிப்பதற்காக குளத்தங்கரையை நோக்கி வந்தபோது மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்த கனகராஜாவையும் கனகவல்லியையும் பார்த்தார். மனித நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதியில் குழந்தைகள் இருவரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க அவருக்கு வியப்பாக இருந்தது.

அவ்விருவரையும் எழுப்பி அவர்களைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். இருவரும் காட்டை வந்தடைந்த கதையை மனமுருகும் வகையில் விவரித்தனர். அதைக் கேட்டு அந்தப் பெரியவரின் மனம் இளகியது. நீராடி முடித்துவிட்டுத் திரும்பியபோது இருவரையும் தம்மோடு அழைத்துச் சென்றார். அவர்கள் பசியாறுவதற்கு தம்மிடம் இருந்த பழங்களைக் கொடுத்தார். தன் குடிசையிலேயே தங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்துகொடுத்தார்.

அந்தக் குடிசையை இருவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி அழகுபடுத்தினர். சுற்றுப்புறங்களையும் சுத்தமாக்கி தொலைவில் இருந்து பார்க்கும்போதே வீடு பளிச்சென்று தெரியும் வகையில் உருமாற்றினர். வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களை பல இடங்களில் தேடியலைந்து சேகரித்து எடுத்துவந்து பழைய குடிசையை புதிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் கட்டினர். தோற்றம் மாறிய வீட்டைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட பெரியவர் அவர்கள் இருவரையும் மனம் திறந்து பாராட்டினார். வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார்.

பத்தாண்டுகள் கனகராஜாவும் கனகவல்லியும் அந்தப் பெரியவரின் பராமரிப்பிலேயே கழித்தனர். அவர் அவ்விருவருக்கும் நல்ல முறையில் கல்வியைக் கற்பித்தார். நீதி நூல்களின் கருத்துகளையெல்லாம் விளக்கிச் சொன்னார். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நல்ல கருத்துகளைக் கொண்ட கதைகளை மனத்தில் பதியும் விதத்தில் கூறி மகிழ்ச்சியோடு இருக்கும் வகையில் செய்தார்.

காலம் வேகவேகமாக கரைய இருவரும் வாலிபப்பருவத்தை அடைந்தனர். மதுநுட்பம் வாய்ந்த அவ்விருவரையும் பார்த்து பெரியவரும் மகிழ்ச்சியுற்றார்.

வழக்கமாக அதிகாலையிலேயே உறக்கத்திலிருந்து எழுந்து நீராடுவதற்குச் செல்லும் பெரியவர் ஒருநாள் விடிந்து நீண்ட நேரமாகியும் எழாததைக் கண்டு திகைத்த கனகவல்லி அவருக்கு அருகில் சென்று குரல் கொடுத்து எழுப்பினாள். அப்போதும் அவரிடமிருந்து எவ்விதமான அசைவும் தென்படாததால் தொட்டு அசைத்து எழுப்ப முயற்சி செய்தாள். அவர் உடல் அசைவற்று உருண்டது.

அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற கனகவல்லி தன் தம்பி கனகராஜாவைச் சத்தம் போட்டு அழைத்தாள். அழைப்புக்குரலைக் கேட்டு ஓடோடி வந்தான் கனகராஜா. மூக்கின் அருகில் விரல்வைத்துப் பார்த்துவிட்டு மூச்சு நின்றுவிட்டதை அவன் உறுதி செய்தான். இருவரும் அந்தப் பெரியவரின் உடலுக்கருகில் நீண்ட நேரம் அமர்ந்து மனவேதனையோடு அழுதனர். பிறகு வீட்டுத் தோட்டத்துக்கு அருகிலேயே அவருடைய உடலைப் புதைத்தனர். அந்த இடத்தில் ஒரு பூச்செடியை நட்டு வளர்க்கத் தொடங்கினர்.

ஒரு நாள் காட்டில் திரிந்துகொண்டிருந்த நாலைந்து எருமைகளை அவர்கள் அழைத்துவந்து தம் வீட்டருகில் கட்டிவைத்தனர். ஒவ்வொரு நாளும் கனகவல்லியே அவற்றை மேய்ச்சலுக்கு புல் நிறைந்த பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று திரும்பினாள். கனகவல்லியின் பராமரிப்பில் எருமைகள் நன்றாக வளர்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு ஓர் எருமை ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. கன்றுக்குட்டி முற்றத்தில் துள்ளித்துள்ளி ஓடுவதைப் பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கினாள் கனகவல்லி. கன்றுக்குட்டி தன் தாயிடம் பாலருந்துவதைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பரவசமாக இருந்தது.

ஒருநாள் மாலை எருமையிடம் கன்றுக்குட்டி அருந்தியதுபோக எஞ்சியிருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் பால் கறந்தாள் கனகவல்லி. பிறகு ஒரு பானையில் அந்தப் பாலை ஊற்றி காய்ச்சினாள். அடுப்பில் பால் கொதித்துக்கொண்டிருந்தபோதே, சோர்வின் காரணமாக அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. அடுப்புக்கு அருகிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

பாத்திரத்தில் இருந்த பால் நன்றாகக் கொதித்துப் பொங்கி தரையெங்கும் வழிந்தோடியது. பாத்திரத்தில் எஞ்சியிருந்த பால் சுண்டத் தொடங்கியது. சுண்டிய பாலின் இனிய நறுமணமும் தரையெங்கும் பரவித் தேங்கியிருந்த பாலின் மணமும் சேர்ந்து வீடெங்கும் பால்மணம் பரவியது.

அந்த இனிய மணம் அவளுடைய வயிற்றிலிருக்கும் பாம்பு வரைக்கும் எட்டியது. பால் மணத்தை நுகர்ந்த பிறகு அந்தப் பாம்புக்கு எப்படியாவது பாலை அருந்தவேண்டும் என்னும் ஆவல் பிறந்துவிட்டது. உடனே, மெதுவாக அவளுடைய வயிற்றிலிருந்து வெளியேறி ஊர்ந்துசென்றது.

அதே நேரத்தில், அதுவரைக்கும் காட்டில் எங்கோ அலைந்து திரிந்துகொண்டிருந்த கனகராஜா கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்தான். கூடத்தில் ஓரமாக தரையில் தன் அக்கா படுத்து உறங்குவதையும் அடுப்பைச் சுற்றி பால் தேங்கி நிற்பதையும் அதை நோக்கி ஒரு பாம்பு செல்வதையும் அவன் பார்த்தான். உடனே அவன் வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லாதவனாக வேகமாகப் பாய்ந்து சென்று அப்பாம்பை தன் கையிலிருந்த கத்தியை எடுத்து துண்டுதுண்டாக வெட்டினான். பிறகு அத்துண்டுகளையெல்லாம் கூட்டி எடுத்துச் சென்று வேறொரு அறைக்குள் வீசிவிட்டு, அந்த அறையைப் பூட்டிக்கொண்டான்.

சத்தம் கேட்டு விழித்தெழுந்த கனகவல்லி ‘ஐயோ என்னை அறியாமல் தூங்கிவிட்டேனே. அடுப்பில் பால் வைத்திருந்தேனே? என்ன ஆனது?’ என்று பதற்றத்தோடு கனகராஜாவிடம் விசாரித்தாள். வீடு முழுதும் வெள்ளம்போல வழிந்தோடி பரவியிருக்கும் பாலைப் பார்த்து அவள் அஞ்சினாள். நடந்ததையெல்லாம் கனகராஜா அவளிடம் விரிவாக எடுத்துக் கூறினான். கடைசியாக, பாம்புத்துண்டுகளை வெட்டி வீசிய அறையைக் காட்டி, அதை ஒருபோதும் திறக்கக்கூடாது என்றும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிவைத்தான். அவள் உம் உம் என்று தலையசைத்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். அப்போதுதான் தன் வயிறு எவ்விதமான எடையுமில்லாமல் பிற பெண்களுக்கு இருப்பதுபோல மெலிந்திருப்பதையும் பல ஆண்டுகளாக தன்னை வருத்திவந்த வலியும் வேதனையும் மறைந்துவிட்டதையும் உணர்ந்தாள்.

அறைக்கதவைத் திறக்கமாட்டேன் என தன் தம்பிக்கு வாக்களித்திருந்தாலும் கனகவல்லியுடைய ஆழ்நெஞ்சில் பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்க்கும் ஆவல் எழுந்தது. இத்தனை ஆண்டுகள் தன் வயிற்றில் இருந்த பாம்பை ஒருமுறை பார்க்கவேண்டும் என அவள் நினைத்தாள். ஒருபக்கம் தம்பிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்று அவளுக்குத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் என்னதான் இருக்கிறது என்பதை நேருக்குநேர் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் அவளை ஒவ்வொரு நாளும் சுண்டியிழுத்தது. கடைசியில் அவளுடைய ஆவலே வெற்றி பெற்றது.

ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகவல்லி மெதுவாக பூட்டப்பட்ட அந்த அறையின் முன்னால் சென்று தன்னிடமிருக்கும் சாவியை எடுத்து கதவைத் திறந்தாள். அந்த அறைமுழுதும் ஒரு மல்லிகைக்கொடி அடர்ந்து பரவியிருப்பதையும் மல்லிகைப்பூ மலர்ந்து மணம் பரப்பியிருப்பதையும் அவள் பார்த்தாள். மல்லிகையின் மணம் மயக்கமூட்டுவதாக இருந்தது. அக்கணமே அவள் மல்லிகைக்கொடிக்கு அருகில் சென்று, கொடியில் பூத்திருந்த மல்லிகைப்பூக்களைப் பறித்துக்கொண்டு வந்து வாசலுக்கருகில் நின்றிருந்த மரத்தடியில் அமர்ந்து ஒரு மாலையாகத் தொடுக்கத் தொடங்கினாள்.

காட்டில் அலைந்து திரிந்த கனகராஜா அந்த நேரத்தில்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தான். தம்பியைப் பார்த்ததும் தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் அணிவிக்க அவள் விரும்பினாள். ‘கனகராஜா, இங்கே வா. உனக்காக ஒரு மாலை தொடுத்திருக்கிறேன். உனக்கு இதை அணிவிக்கிறேன்’ என்று சொன்னபடி நெருங்கி வந்தாள் கனகவல்லி.

கனகவல்லியின் கையில் இருந்த மாலையையும் கண்ணுக்கு முன்னால் திறந்திருந்த அறைக்கதவையும் பார்த்த அவனால் என்ன நடந்திருக்கும் என்பதை எளிதாக ஊகிக்கமுடிந்தது. உடனே பின்வாங்கி நகர்ந்து அந்த மாலையைத் தன் கழுத்தில் சூட்டவேண்டாம் என்று கனகவல்லியிடம் கெஞ்சினான். ஆனால் அவன் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்கும் மனநிலையில் கனகவல்லி இல்லை. என்ன சொன்னாலும், அதை மறுத்து கனகராஜாவிடம் எதிர்விவாதம் செய்தாள். அவனுக்கு அந்த மாலையைச் சூட்டி அழகு பார்க்கவேண்டும் என்பதில் கனகவல்லி உறுதியாக இருந்தாள்.

தன் சகோதரியின் மன உறுதியையும் விருப்பத்தையும் பார்த்த கனகராஜா ‘இந்த மாலையை எனக்கு அணிவிக்கவேண்டும் என்பதில் நீ உறுதியாக இருந்தால், நான் சொல்வதைக் கேள். மாலையை எனக்குச் சூட்டும் முன்பாக, இதோ இந்த மூன்று கூழாங்கற்களை வாங்கிக்கொள். இந்த மாலையை எனக்குச் சூட்டிய பிறகு ஒருவேளை ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்தால், அந்தக் கூழாங்கற்களை என் பெயரைச் சொல்லி அழைத்தபடி அடிப்பதுபோல வீசு’ என்றான்.

‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்றாள் அவள். அவன் கொடுத்த கூழாங்கற்களை கைநீட்டி வாங்கி வைத்துக்கொண்டாள். ‘இந்த மாலையை உனக்காகவே தொடுத்தேன். உனக்கு அணிவித்து அழகு பார்க்கவேண்டும் என்பதுதான் என் ஆசை’ என்று புன்னகைத்தபடியே மாலையை கனகராஜாவின் கழுத்தில் அணிவித்தாள்.

அடுத்த கணமே கனகராஜா பாம்பாக மாறிவிட்டான். அவள் அணிவித்த மாலை தரைமீது சுருண்டிருக்க, அந்தச் சுருளிலிருந்து ஊர்ந்தபடி ஒரு பாம்பு வந்து தலையசைத்தது.

தன் கண்முன்னாலேயே ஒரே கணத்தில் தன் தம்பி பாம்பாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துநின்றுவிட்டாள் கனகவல்லி. மிகப்பெரிய ஒரு பிழையைச் செய்துவிட்டதாக நினைத்து குற்ற உணர்ச்சியால் வருத்தமுற்றாள். ஒரு கணம் என்ன செய்வது என்பது புரியாமல் குழப்பத்தோடு அந்தப் பாம்பையே அச்சத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

தம்பி கொடுத்த கூழாங்கற்களையும் அவன் சொன்ன வாசகத்தையும் அக்கணத்தில் முழுக்கவே மறந்துவிட்டாள் கனகவல்லி. அந்தப் பாம்பு மெல்ல மெல்ல அறையிலிருந்து ஊர்ந்து வெளியேறி காட்டை நோக்கி செல்லத் தொடங்கியது. என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் அவளும் அந்தப் பாம்பின் பின்னாலேயே சென்றாள்.

சிறிது தொலைவு வரைக்கும் சென்ற பாம்பு, ஒரு மரத்தடி வரைக்கும் சென்று அங்கிருந்த ஒரு புற்றில் புகுந்தது. கலக்கத்தோடு அவள் அந்தப் பாம்பின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். அந்தப் பாம்பு வெளியே வரும் தருணத்துக்காகக் காத்திருந்தாள்.

அந்நேரத்தில் அந்தப் பிள்ளைகளின் தந்தையான அரசனும் சேவகர்களும் காட்டில் வேட்டையாடிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். காட்டு வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து என்ன என்று விசாரிப்பதற்காக அவளுக்கு அருகில் சென்றான் அரசன்.

தன் கண் முன்னால் அழகான சிற்பமென நின்றிருக்கும் இளம்பெண்ணைப் பார்த்து அரசன் மனம் மயங்கினான். அவள் தன் மகள் என்பதையே அவனால் கண்டுணர முடியவில்லை. யாரோ ஒரு பெண் என நினைத்துக்கொண்டான். துரதிருஷ்டவசமாக அவளுக்கும் அவருடைய முகம் நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் அந்நிய ஆடவர் என்றே அவளும் நினைத்து ஒதுங்கி ஒதுங்கிச் சென்றாள்.

அவளை நெருங்கிய அரசன் அவளைத் தன்னோடு வருமாறு சொன்னான். அவள் அருகிலிருந்த புற்றைச் சுட்டிக்காட்டி தன் சகோதரன் பாம்பாக மாறி அந்தப் புற்றில் இருப்பதாகவும் அவன் இல்லாமல் தன்னால் எங்கும் வரமுடியாது எனவும் தெரிவித்தாள். உடனே அரசன் தன்னோடு வந்திருந்த ஆட்களில் ஒருவனை அழைத்து அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று பாம்பு பிடிக்கவல்ல ஒரு பாம்பாட்டியைக் கண்டுபிடித்து அழைத்துவருமாறு கேட்டுக்கொண்டான். ஒரு நாழிகைக்குப் பிறகு அவன் ஒரு பாம்பாட்டியைத் தன் குதிரையில் அமரவைத்து அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினான்.

அரசன் பாம்பாட்டியிடம் அருகிலிருந்த புற்றைச் சுட்டிக்காட்டி அதற்குள் சென்றுவிட்ட பாம்பை உயிரோடு பிடித்துத் தருமாறு சொன்னான். பாம்பாட்டியும் ‘அப்படியே செய்கிறேன் சாமி’ என்று வணக்கம் சொல்லிவிட்டு புற்றுக்கு அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த மகுடியை எடுத்து மெதுவாக இசைக்கத் தொடங்கினான்.

மகுடியோசை காடெங்கும் நிறைந்தது. புற்றிலிருந்து பாம்பு வெளியேறி வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டான்.

அவர்கள் எல்லோருமே அரண்மனைக்குச் சென்றனர். அரண்மனையை நெருங்கியதும் கனகவல்லிக்கு எல்லாப் பழைய விஷயங்களும் நினைவுக்கு வந்துவிட்டன. குழந்தைப்பருவத்திலிருந்து ஆடிப் பழகிய இடங்களை ஒவ்வொன்றாக ஆசையோடு பார்த்தபடி வந்தாள்.

அரசன் அவளை நெருங்கி தன்னை மணந்துகொள்ளுமாறு மன்றாடத் தொடங்கினான். அவன் பேச்சை மறுப்பதுபோல தலையசைத்தபடி ‘உங்கள் விருப்பம் நிறைவேற வாய்ப்பில்லை. என்னை உங்களுக்குத் தெரியவில்லையா? நான் உங்கள் செல்லமகள். நான் சிறுமியாக இருந்தபோது கனகவல்லி கனகவல்லி என்று எத்தனை முறை செல்லமாக அழைத்து மகிழ்ந்திருப்பீர்கள். எல்லாம் மறந்துவிட்டதா அப்பா? ஒருமுறை என்னை நன்றாகப் பாருங்கள். அப்போது புரியும் உங்களுக்கு. அம்மா இறந்த பிறகு துக்கத்தில் மூழ்கியிருந்த நீங்கள் அத்துக்கத்திலிருந்து மீண்டெழுந்து வரவேண்டும் என்பதற்காக அரண்மனையில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டு வந்த சிற்றன்னை என் மீது வீண்பழி சுமத்தி என்னையும் தம்பியையும் உங்கள் கண்முன்பாகவே இந்த அரண்மனையை விட்டு விரட்டியடித்தாள். அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அப்பா?’ என்று அழுதுகொண்டே கேட்டாள்.

கனகவல்லியின் சொற்களைக் கேட்டு ஒரு கணம் அரசன் உறைந்து நின்றுவிட்டான். பிறகு அவள் சொன்னதையெல்லாம் மனத்துக்குள் அசைபோட்டபடி அவளையே நீண்டநேரம் உற்றுப் பார்த்தபடி நின்றான். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மடையை உடைத்துக்கொண்டு பாயும் வெள்ளமென நினைவுக்கு வரத் தொடங்கின.

‘கனகவல்லியா நீ?’ என்று கண்ணீர் சொரிந்தபடி அவளை நெருங்கினான்.

‘கனகவல்லி, என்னை மன்னித்துவிடு மகளே? உனக்கு நான் செய்த பாவமெல்லாம் போதாது என அதைவிட பெரிய பாவம் செய்ய இருந்தேன். தக்க தருணத்தில் என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மன்னித்துவிடு மகளே’ என்று கைகுவித்து மன்னிப்பை யாசித்தான்.

‘அப்பா, எல்லாம் என் விதி அப்பா. என் விதிதான் நீங்கள் அப்படியெல்லாம் செய்வதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. அதையெல்லாம் மறந்துவிடு அப்பா’ என்றாள்.

ஆனந்தக்கண்ணீர் வழிய நின்றிருந்த அப்பாவையும் மகளையும் அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்திருந்த ராஜாவுக்கு அப்போதுதான் மகனுடைய நினைவு வந்தது. ‘தம்பி கனகராஜன் எங்கே மகளே? நீங்கள் இருவரும் இணைந்துதானே காட்டுக்குச் சென்றீர்கள்’ என்று கேட்டான்.

அப்போதுதான் கனகவல்லிக்கு தம்பியின் நினைவு வந்தது. விளையாட்டுத்தனமாக அவனுடைய கழுத்தில் மாலை சூட்டச் சென்றபோது அவன் சொன்ன சொற்களும் கொடுத்த கூழாங்கற்களும் அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தன.

அவசரமாக பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையைச் சுட்டிக் காட்டி, ‘அப்பா, இந்தப் பெட்டிக்குள் பாம்பாக இருப்பவன்தான் தம்பி கனகராஜா’ என்றாள்.

சொல்லிக்கொண்டே பெட்டியின் மூடியைத் திறந்தாள். உள்ளே சுருண்டிருந்த பாம்பு மெல்ல மெல்ல கூடையிலிருந்து வெளியேறி கனகவல்லியின் காலருகில் சென்றது. கனகவல்லி தன் கையிலிருந்த மூன்று கூழாங்கற்களையும் இறைவனை நினைத்தபடி அந்தப் பாம்பின் மீது அடிப்பது போல வீசி ‘கனகராஜா, எழுந்து வா’ என்றாள். மறுகணமே, பாம்பு மறைந்துவிட, அந்த இடத்தில் கனகராஜா நின்றிருந்தான்.

‘மகனே கனகராஜா’ என்று கைகளை விரித்தபடி சென்று மகனை அணைத்துக்கொண்டான் அரசன். அவன் வயதில் சிறியவனாக இருந்தபோதும் அரண்மனைச் சம்பவங்கள் அனைத்தும் அவனுக்கு நினைவில் இருந்தன. அதனால் அவனும் ‘அப்பா’ என்று ஆசையாக அழைத்தபடி அவனுக்கு அருகில் சென்றான். அரசன் தன் பிள்ளைகளை ஆசையோடும் பாசத்தோடும் அணைத்துக்கொண்டான்.

‘அப்பா சித்தி எங்கே?’ என்று கேட்டாள் கனகவல்லி. அதைக் கேட்டதும் அரசன் பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

‘அவளைப்பற்றி நான் என்ன சொல்வேன் மகளே. ஏதோ ஆசையினால் அவள் என்னைத் திருமணம் செய்துகொண்டாளே தவிர, அவளுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. உங்களையெல்லாம் காட்டுக்கு விரட்டிவிட்ட பாவத்தால்தான் தனக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் போய்விட்டது என சொல்லிச் சொல்லி புலம்பிக்கொண்டே இருந்தாள். காசிக்குப் போய்வந்தால்தான் என் பாவம் தொலையும் என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள் உன் சித்தி. என்ன பாவம் செய்தாய் நீ என்று கேட்டால் ஒரு பதிலும் சொல்லமாட்டாள். ஆனால் காசி காசி என்று ஒரு நாளைக்கு நூறு தரம் சொல்லிக்கொண்டே இருப்பாள். வியாதிக்கு அப்படியும் ஒரு மருந்து இருக்கலாம். அனுப்பிவையுங்கள் என்று அரண்மனை வைத்தியரும் சொன்னார். அவளுக்குத் துணையாக அவர்தான் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திரும்பி வர இன்னும் சில மாதங்கள் ஆகும்.’

அரசன் சொல்லிக்கொண்டிருந்தபோதே அரண்மனை முழுக்க ஏராளமானவர்கள் கூடிவிட்டனர். எல்லோரும் பார்க்கும் வகையில் கனகவல்லியையும் கனகராஜாவையும் தனக்கு அருகில் நிற்கவைத்து ‘ஒரு காலத்தில் புத்தி தடுமாற்றத்தால் நான் வெளியேற்றிய என் பிள்ளைகளை இப்போது இறைவன் எனக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இனி இவன்தான் உங்கள் இளவரசன் கனகராஜா. இவள்தான் உங்கள் இளவரசி கனகவல்லி’ என்று அறிமுகப்படுத்தினான்.

எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ‘வாழ்க இளவரசர். வாழ்க இளவரசி’ என்று வாழ்த்தினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து, உரிய காலத்தில் வெயிலும் இருந்ததால், அந்தப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக வளர்ந்திருந்தது. செல்வ வளர்ச்சி இருந்ததால், அரண்மனையில் வசித்துவந்த ராஜாவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

திடீரென அந்தப் பிரதேசத்தில் எலிகள் பெருகின. வீடுகள், தோப்புகள், வயல்வெளிகள் எங்கெங்கும் எலிகள் உலவத் தொடங்கின. பார்க்கிற இடங்களிலெல்லாம் எலிகள் சுதந்திரமாக நடமாடின. அதனால் எரிச்சல் கொண்ட மக்கள் கைக்குக் கிடைத்த தடியை எடுத்து எலிகளைக் கொன்றனர். சிலர் கல் வீசிக் கொன்றனர். அப்போதும் எலிகளின் பெருக்கத்தைத் தடுக்கமுடியவில்லை.

ஒருநாள் அனைவரும் கூடி அரண்மனைக்குச் சென்று ராஜாவைச் சந்தித்து எலித்தொல்லையைப்பற்றி எடுத்துரைத்தனர். அனைவருடைய புகார்களையும் பொறுமையாகக் கேட்ட ராஜா, எலித்தொல்லையிலிருந்து கிராமங்களைக் காப்பாற்ற வெகுவிரைவிலேயே ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து அனுப்பிவைத்தார்.

மக்கள் புறப்பட்டுச் சென்றபிறகு ராஜா, அவருடைய அமைச்சர்களை அழைத்து எலிகளை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் அரண்மனையிலும் எலி நடமாட்டம் இருப்பதாகவும் வேலைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் வேட்டையாடிக் கொன்று வீசுவதாகவும் கூறினர். அப்படியென்றால் எலிப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும் என்று அவசரப்பட்டார் ராஜா.

எலிகளைத் தேடித்தேடி கொல்வதற்கு ஒரு தனிப்படை உருவாக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார் ஒரு அமைச்சர். அதிக எலிகளைக் கொல்பவர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பைச் செய்தால், மக்களே எல்லா எலிகளையும் கொன்றுவிடுவார்கள் என்று மற்றொரு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இப்படி ஆளாளுக்கு ஒரு ஆலோசனை வழங்குவதும் அடுத்தவர்கள் உடனடியாக அத்திட்டத்தில் உள்ள குறையைக் கண்டுபிடித்து சொல்லி நிராகரிப்பதுமாக நேரம் சென்றுகொண்டே இருந்தது.

இறுதியாக ஒரு பிராணியைக் கொல்ல இன்னொரு பிராணியை வளர்ப்பதுதான் சிறந்த வழி என்று ஒருவர் தெரிவித்தார். எலிகளை அதிக அளவில் உண்ணும் உயிர் பாம்புகள் என்பதால், எங்கெங்கும் பாம்புகள் நடமாட்டம் இருக்கும்வகையில் பார்த்துக்கொண்டால், மிக விரைவிலேயே எலிகளை ஒழித்துவிடலாம் என்றும் தன் திட்டத்தை விரிவாக உற்சாகத்துடன் தெரிவித்தார். அனைவருக்கும் அத்திட்டம் புதுமையாகத் தோன்றியதால், உடனடியாக அத்திட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். ராஜாவும் அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

உடனடியாக வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் பாம்பாட்டிகளை அணுகி, தம் பிரதேசத்துக்கு ஏராளமான பாம்புகளைக் கொண்டுவர ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார் ராஜா. ஒருசில நாட்களிலேயே ஏராளமான பொருட்செலவில் பாம்புகள் அந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.

எல்லோருடைய வீட்டுத் தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் புதர்களிலும் தோப்புகளிலும் குளக்கரைகளிலும் பாம்புகள் உலவத் தொடங்கின. கண்ணுக்குத் தென்பட்ட எல்லா எலிகளையும் தேடிக் கொன்று தின்றன. நெடுங்காலமாக எலித்தொல்லையால் அவஸ்தைப்பட்டுவந்த கிராமத்தினர் ஒரே வாரத்தில் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக நடமாடினர். தக்க நேரத்தில் புதுமையான திட்டத்தை வகுத்து எலித்தொல்லையை ஒழித்த ராஜாவை எல்லோரும் பாராட்டினர்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஊர்மக்கள் வேறொரு பிரச்சினையை எதிர்கொண்டனர். எல்லா இடங்களிலும் பாம்புகள் நடமாட்டம் பெருகத் தொடங்கியது. வீடுகளின் பின்கட்டுகளில், தோட்டங்களில், சாக்கடையோரங்களில், மரத்தடிப் பொந்துகளில், புதர்களில் என எங்கெங்கும் பார்க்கும் இடங்களில் எல்லாம் பாம்புகள் ஊர்ந்து செல்வதை அனைவரும் பார்த்தனர். பல நேரங்களில் வீட்டில் உள்ள சமையலறைகளிலும் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் பாம்புகள் நுழைந்து சுதந்திரமாகத் திரியத் தொடங்கின. பல குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பெரியவர்களும் பாம்புக்கடியால் உயிர் துறந்தனர்.

அனைவரும் கூட்டமாகச் சென்று ராஜாவைச் சந்தித்து பாம்புப் பிரச்சினையைப்பற்றி எடுத்துரைத்தனர். பலர் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தனர் என்னும் செய்தியைக் கேட்டு ராஜா மிகவும் வருத்தமடைந்தார். உடனே, பாம்புப் பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர்களை அழைத்து ஓர் ஆலோசனைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினார்.

பாம்புகளை உடனடியாக அழிக்க, கீரிப்பிள்ளைகளை வளர்க்கலாம் என்று ஒருவர் ஆலோசனை வழங்கினார். சிலர் அத்திட்டத்தை சரியான திட்டமென்று சொன்னாலும், சிலர் அத்திட்டத்தை மோசமான திட்டமென்று சொல்லி, நிராகரித்தனர். அதனால் ஒருநாள் முழுதும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றாலும் முடிவை எட்டாமலேயே கூட்டம் முடிவடைந்தது.

அடுத்தநாள் அதிகாலையில் ராஜா படுக்கையறையிலிருந்து எழுந்தபோது, தன் படுக்கைக்குக் கீழேயும் குளியலறையிலும் பாம்புகள் உலவுவதைப் பார்த்து திகைத்துவிட்டார். பாம்புகளை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் நேரிடையாகவே உணர்ந்தார். பாம்புக் கூட்டத்தை ஒழிப்பது தொடர்பான திட்டம் எந்த முடிவையும் எடுக்காமலேயே ஒவ்வொரு நாளும் கூடுவதும் கலைவதுமாக இருந்தது.

நேருக்கு நேர் பாம்புகளைப் பார்த்துவிட்ட ராஜா, தன் படுக்கையறையில் படுத்துறங்க மிகவும் அஞ்சினார். அதனால் உதவிக்கு சில ஆட்களை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினார். புறப்படும்போது தன்னோடு தன் மகனையும் அழைத்துக்கொண்டு சென்றார். ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதி பாதுகாப்பாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே பணியாட்களிடம் சொல்லி, அங்கே ஒரு கூடாரத்தை அமைக்கும்படி சொன்னார். இரவு வேளையில் அவர் அங்கேயே உறங்கினார். கூடாரத்துக்கு வெளியே காவலர்கள் காவல் காத்தனர்.

ராஜா தன் மகனிடம் மரத்தால் செய்யப்பட்ட ஒரு வாளைக் கொடுத்து, ஓய்ந்திருக்கும் நேரங்களில் எல்லாம் பிற வீரர்களிடம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யும்படி சொன்னார். அவனும் தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தொடர்ந்து பயிற்சி செய்தான். ஒவ்வொரு நாளும் அவனுடைய பயிற்சி நேரம் பெருகிக்கொண்டே போனது. அவனுக்கும் அப்பயிற்சியில் ஆர்வம் இருந்ததால், மிக விரைவிலேயே அவன் வாள் பயிற்சியின் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டான். உண்மையான வாளை ஏந்தி சண்டையிடும் அளவுக்கு அவன் போதுமான திறமையை வளர்த்துக்கொண்டான்.

ஒருநாள் ஒரு பெரிய மரத்தடியில் ஒரு கட்டிலில் ராஜா படுத்திருந்தார். அப்போது அம்மரத்திலிருந்து ஒரு பெரிய நாகம் இறங்கி வந்தது. அது ராஜநாகம். நாகங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கக்கூடிய நாகம். ஏழு தலைகளிலும் சிறிய அளவிலான மகுடங்கள் காட்சியளித்தன. அம்மகுடமே பிற நாகங்களிடமிருந்து அந்த நாகத்தை வேறுபடுத்திக் காட்டியது.

ராஜநாகம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று ராஜாவின் அருகில் சென்றது. அக்கம்பக்கத்தில் ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ராஜாவை நெருங்கிச் சென்றது. தன் ஏழு தலைகளிலும் இருக்கும் கண்களால் உறங்கிக்கொண்டிருந்த ராஜாவையே உற்றுப் பார்த்தது.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ ராஜாவின் மகன் கத்தியை வீசியபடி வந்து தன் அப்பாவுக்குப் பக்கத்தில் நின்றான். அந்த ராஜநாகத்தின் ஏழு முகங்களையும் நோக்கி பளபளவென மின்னும் தன் கத்தியைத் திருப்பி ‘எதற்கும் தயார்’ என்பதுபோல நின்றான். நடப்பது எதையும் அறியாமல் ராஜா மரத்தடியில் நிம்மதியாக குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார்.

இளவரசனின் உறுதியைப் புரிந்துகொண்ட ராஜநாகம் ‘என்னைக் கொல்லவேண்டாம்’ என்று ஒரு கோரிக்கையை வைத்தது. உடனே இளவரசனும் ‘உன் கோரிக்கையை நான் ஏற்கவேண்டும் என்றால் நீயும் என் கோரிக்கையை ஏற்கவேண்டும்’ என்று சொன்னான்.

‘உன் கோரிக்கை என்ன?’ என்று கேட்டது ராஜநாகம்.

‘உன் வம்சத்தைச் சேர்ந்தவர்களால்தான் நாங்கள் இப்படி அரண்மனையைவிட்டு வெளியேறி இங்கே வந்து தங்கியிருக்கிறோம். என் தந்தைக்கும் எனக்கும் இங்கிருக்கும் வீரர்களுக்கும் எங்கள் பிரதேசத்தில் வசிக்கும் எங்கள் மக்களுக்கும் நீயும் உன் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருநாளும் எவ்விதமான துன்பத்தையும் கொடுக்கக்கூடாது. யாரையும் கடிக்கக்கூடாது. யாரையும் அச்சுறுத்தக்கூடாது’ என்றான் இளவரசன்.

வெகுநேரம் யோசனையில் மூழ்கியிருந்த ராஜநாகம் மெல்லிய குரலில் ‘என்னைப் பொறுத்தவரையில் நான் உன் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். மற்றவர்கள் சார்பில் என்னால் அந்த உறுதியைக் கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை’ என்று சொன்னது.

‘ஏன்?’

‘அவர்கள் எந்த அளவுக்கு என் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.’

‘ஏன்? நீதானே அவர்களுக்கெல்லாம் ராஜா.’

‘உண்மைதான். ஆனால் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர்களுடைய சுதந்திரத்தைப் பொறுத்தது அல்லவா?’

‘அந்தப் பாம்புகள்தான் எங்கள் பிரதேசத்தில் ஏராளமான பேர்களைக் கொன்றுவிட்டன. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதா?’

‘அவர்களுடைய ராஜா என்கிற முறையில் அவர்களுக்கு எடுத்துரைக்க நான் கடமைப்பட்டவன் என்னும் கருத்தில் மாற்றமில்லை. ஆனால் இதுவரையில் அவர்கள் சுதந்திரமாகவே இயங்கிப் பழகியவர்கள். திடீரென ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கொண்டுவருவது சிரமம். அதுதான் யோசனையாக உள்ளது. அது மட்டுமில்லாமல், அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் நான் இல்லை’

‘என்ன சொல்கிறாய் நீ? நீ சொல்வதன் அர்த்தம் புரிந்துதான் பேசுகிறாயா? நீதானே அவர்களின் ராஜா?’

‘நீ சொல்வது உண்மைதான். நான்தான் அவர்களின் ராஜா. என் பிரச்சினையே அதுதான். இங்கே பார், இந்த ஏழு தலைகளைச் சுமந்துகொண்டு என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. ஒருவரிடமும் பேசவும் முடியவில்லை. ஏழு தலைகளிலும் கடுமையான வலி இருக்கிறது. தீராத அந்த வலியால் என்னால் தூங்கக்கூட முடியவில்லை. யாரிடமும் பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் நான் இல்லை.’

‘தலைவலியா? அப்படியென்றால் கஷ்டம்தான். தலைவலி இருக்கும்போது பைத்தியம் பிடித்தமாதிரி இருக்கும் என்பதும் ஒருவரிடமும் மனம் திறந்து பேசவும் முடியாது என்பதும் உண்மைதான். என்னால் அந்த வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தலைவலிக்கு எந்த வைத்தியமும் செய்துகொள்ளவில்லையா?’

‘ஒரு வைத்தியரைப் பார்த்தேன். இங்கிருந்து ஏழு ராஜ்ஜியங்களுக்கு அப்பால் இருக்கிற எட்டாவது ராஜ்ஜியத்தில் ஒரு இளவரசி இருக்கிறாளாம். அவளுடைய வாய்க்குள் ஒரு மலர் இருக்கிறதாம். அந்த மலரை எடுத்துவந்து கொடுத்தால் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று சொன்னார். நான் இருக்கும் நிலையில் அந்த மலரைத் தேடி எப்படிச் செல்லமுடியும்?’

‘உன்னால் செல்லமுடியாமல் இருக்கலாம். உனக்காக உன் கூட்டத்தில் இருக்கும் வேறொருவர் முயற்சி செய்து எடுத்துவரலாமே?’

‘வரலாம்தான். ஆனால் அந்த அளவுக்கு எனக்காக உதவி செய்கிறவர்கள் யாருமில்லை. யாரிடமும் கேட்பதற்கு வழியில்லை.’

‘ஏன்?’

‘ஒரு பேச்சுக்குத்தான் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டவர்களாக தம்மைக் காட்டிக்கொள்வார்கள். உண்மையில் ஒவ்வொருவருமே தத்தம் எண்ணப்படி நடப்பவர்கள். என் சொல்லைக் காது கொடுத்துக் கேட்பவர்கள் யாருமே இல்லை. என் சொல்லால் அவர்களில் யாருக்காவது கொஞ்சமாவது ஆதாயம் இருக்கிறது என்று கருதினால் காதுகொடுத்துக் கேட்பார்கள். இல்லையென்றால் தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்பதுபோல சென்றுவிடுவார்கள். எல்லாமே ஒரு நடிப்புத்தான்.’

ராஜநாகம் சொன்னதைக் கேட்டு இளவரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது.

அவன் அமைதியில் மூழ்கியிருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட ராஜநாகம் ‘நீ நினைத்தால் எனக்கு உதவி செய்யலாம்’ என்று சொன்னது.

‘என்னால் என்ன செய்யமுடியும்?’ என்று குழப்பத்தோடு கேட்டான் இளவரசன்.

‘எனக்காக இங்கிருந்து எட்டாவதாக உள்ள பிரதேசத்துக்குச் சென்று அந்த இளவரசியைச் சந்தித்து அந்த மலரைக் கொண்டுவரவேண்டும். அதனால் உனக்கும் ஒரு நன்மை இருக்கிறது. அந்த இளவரசி மிகமிக அழகானவள். உனக்கு ஏற்றவளாக இருப்பாள். அவளுக்கும் உன்னை மிகவும் பிடித்துவிடும். நீ அவளையே திருமணம் செய்துகொள்ளலாம். அந்த மலரினால் என் தலைவலியும் நீங்கிவிடும்.’

‘எல்லாம் சரி. அதனால் இந்தப் பிரதேசத்துக்கு என்ன பயன்?’

‘பிற பாம்புகளிடம் நான் உனக்காக மன்றாடிக் கேட்டுக்கொள்வேன். எப்படியாவது அவர்களையெல்லாம் இந்தப் பிரதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு வெளியேறிவிடுவேன்.’

‘அந்தப் பாம்புகள்தான் உன் சொல்லுக்குக் கட்டுப்படாது என்று நீயே சொன்னாயே?’

‘உண்மைதான். ஆனால் என்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்வேன். என்னை நம்பு. எலிகள் நிறைந்த இன்னொரு பிரதேசத்தைப்பற்றி எனக்குத் தெரியும். அதைப்பற்றி எடுத்துரைத்து எப்படியாவது அவர்களுடைய மனத்தை மாற்றி இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுவேன். எப்படியாவது அந்த மலரைக் கொண்டுவந்து என்னுடைய தலைவலியைப் போக்கு.’

ராஜநாகத்தின் குரல் இளவரசனின் நெஞ்சில் இரக்கத்தைத் தூண்டியது. ஒருகணம் யோசித்த பிறகு ‘சரி, என்னால் ஆன முயற்சியைச் செய்து பார்க்கிறேன்’ என்றான்.

‘ரொம்ப நன்றி. உன் உதவியை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்.’

‘உனக்காகத்தான் நான் இங்கிருந்து செல்கிறேன். நான் திரும்பி வரும்வரை இந்த இடத்தை நீதான் பாதுகாக்கவேண்டும். ஒரு பாம்பால் கூட இந்த இடத்துக்கோ இங்குள்ள என் அப்பாவுக்கோ, மற்றவர்களுக்கோ எவ்விதமான துன்பமும் வராமல் நீ பார்த்துக்கொள்ள வேண்டும்.’

‘அந்த வாக்குறுதியை நான் உனக்கு அளிக்கிறேன். நீ நம்பிக்கையோடு சென்று வா.’

அந்தப் பிரதேசத்துக்குச் செல்லவேண்டிய திசைவிவரங்களையெல்லாம் ராஜநாகத்திடமிருந்து தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான் இளவரசன். பிறகு அந்தத் திசையை நோக்கி அக்கணமே புறப்பட்டுச் சென்றான்.

அவன் பயணம் செய்த பாதை கடினமான பாதையாக இருந்தது. வழியில் கிடைத்த கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, ஏரி குளங்களில் நீரருந்தி தாகத்தைப் போக்கிக்கொண்டு கிடைத்த இடங்களில் உறங்கி எழுந்து மனம் சோர்வுறாமல் பல நாட்கள் நடந்துகொண்டே இருந்தான்.

ஒருநாள் அவன் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றைக் கடப்பதற்கு ஒரு படகுத்துறையும் இருந்தது. மறுகரைக்குச் சென்றால்தான் பயணத்தைத் தொடரமுடியும். படகின் வரவுக்காக அவன் ஆற்றங்கரையில் காத்திருந்தான்.

அப்போது ஒரு இலை படகுபோல மிதந்துபோவதையும், அந்த இலை மீது ஏராளமான எறும்புகள் இருப்பதையும் பார்த்து வியப்பில் மூழ்கினான். நீரோட்டத்தில் மிதந்தபடி சென்ற இலை கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு பாறை மீது மோதவிருப்பதை அவன் பார்த்தான். பாறை மீது இலை மோதினால், அந்த வேகத்தில் இலை நிலைகுலைந்து கவிழும் என்பதையும் அதன் மீது அதுவரை நம்பிக்கையோடு பயணம் செய்துவந்த எறும்புகள் நீருக்குள் மூழ்கிவிடும் என்பதையும் அவன் மனம் உணர்ந்தது. அக்கணமே அவற்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவன் நினைத்தான். உடனே தாவி அடியெடுத்து வைத்து, பாறையில் இலை மோதுவதற்கு முந்தைய கணத்தில் அதைத் தன் கையில் ஏந்திக்கொண்டான். மெதுவாக கரைக்குத் திரும்பி இலையைக் கீழே வைத்தான். எல்லா எறும்புகளும் உயிர்பிழைத்தன.

‘எங்களை உயிர்பிழைக்க வைத்ததற்கு மிகவும் நன்றி’ என்று எல்லா எறும்புகளும் ஒரே குரலில் கூறின.

கீச்சுக்கீச்சென்ற எறும்புகளின் பேச்சு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ‘ரொம்ப மகிழ்ச்சி. சென்று வாருங்கள். நான் படகுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று சொன்னான் இளவரசன். ‘சென்று வாருங்கள். நீங்கள் செல்லும் காரியம் வெற்றியடைய எங்கள் வாழ்த்துகள்’ என்று ஒரே குரலில் எல்லா எறும்புகளும் கூறின. அவனும் புன்னகை மாறாத முகத்துடன் எல்லா எறும்புகளையும் பார்த்து ‘நன்றி நன்றி’ என்று சொன்னான்.

‘உங்களுக்கு வழியில் ஏதேனும் பிரச்சினை வந்தால் ஒருகணம் எங்களை மனத்தில் நினைத்துக்கொள்ளுங்கள். உடனே நாங்கள் அங்கு வந்து எங்களால் ஆன உதவியைச் செய்வோம்.’

எறும்புகளின் கூற்று அவனுக்கு விசித்திரமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியோடு ‘தேவைப்படும்போது அவசியம் அழைக்கிறேன்’ என்று சொல்லி விடை கொடுத்தான். அவன் அதுவரை எதிர்பார்த்த படகு வந்ததும் ஏறி மறுகரைக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தான்.

காட்டுவழியில் அவன் விசித்திரமான ஒரு காட்சியைக் கண்டான். உடல்பருத்த ஒருவன் குறுக்கில் மல்லாந்து படுத்திருந்தான். திறந்திருந்த அவன் வாயில் ஒரு பெரிய மரம் வேர்விட்டு வளர்ந்திருந்தது. அவன் புரளவும் முடியாமல் நகரவும் முடியாமல் படுத்த நிலையிலிருந்தே ஏதேதோ ஓசைகளை எழுப்பி கைகளை அசைத்துக்கொண்டிருந்தான்.

அவன் எழுப்பிய ஓசையைக் கேட்டு இளவரசன் அவனுக்கு அருகில் சென்றான். அவன் தன் கண்ணசைவாலேயே தனக்கு உதவி செய்யும்படி இளவரசனிடம் கேட்டுக்கொண்டான். அவனுடைய அரைகுறையான சொற்கள் வழியாக அவனுடையை கதையைப்பற்றிக் கேட்டபோது அவன்மீது இரக்கம் பிறந்தது.

வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் உறங்கும் பழக்கம் கொண்டவன் என்றும் உறக்கத்தில் அவன் வாய் தன்னிச்சையாக திறந்து திறந்து மூடும் என்றும் அவன் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டான். அவ்விதமாக ஒருநாள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது வானத்தில் பறந்துசென்ற ஏதோ ஒரு பறவை வாய்க்குள் எச்சமிட்டுவிட்டுச் சென்றுவிட்டது என்றும் அதன் விளைவாக ஒரு மரம் முளைத்து வளர்ந்துவிட்டது என்றும் தன் உடலை அசைக்கமுடியாதபடி அது செய்துவிட்டது என்றும் சொல்லிப் புலம்பினான். வேதனையின் துன்பத்திலிருந்து தன்னை எப்படியாவது காப்பாற்றும்படியும் கேட்டுக்கொண்டான்.

அவனுடைய மன்றாடும் குரலைக் கேட்டதும் இளவரசனின் நெஞ்சில் கருணை பிறந்தது. எந்த விதத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று யோசித்தான். மரத்தை வேரோடு சாய்த்தால்தான் அவனைக் காப்பாற்றமுடியும் என்பதை அவன் புரிந்துகொண்டான். அதன் தொடக்கமாக ஒவ்வொரு கிளையாக உடைத்து அகற்றவேண்டும் என்பதையும் புரிந்துகொண்டான்.

‘பயப்படாதே, நான் உன்னைக் காப்பாற்ற என்னால் ஆன முயற்சியைச் செய்கிறேன்’ என்று அவனுக்கு வாக்குறுதி அளித்தான் இளவரசன். பிறகு உயர்ந்து வளர்ந்திருக்கும் அம்மரத்தில் ஏறி உச்சிக்கிளைக்குச் சென்றான். ஒவ்வொரு கிளையாக ஒடித்து முரித்து கீழே வீசத் தொடங்கினான். உச்சிக்கிளை, பிறகு அதை அடுத்து விரிந்திருக்கும் கிளைகள், அதன் பிறகு அவற்றைத் தொடர்ந்து விரிந்திருக்கும் கிளைகள் என ஒவ்வொன்றாக முரித்து முரித்துச் சாய்த்தான்.

பொழுது சாயும் வேளையில் எல்லாக் கிளைகளையும் சாய்த்துவிட்டான். இப்போது அடிமரம் மட்டுமே எஞ்சியிருந்தது. தன் மொத்த வலிமையையும் பயன்படுத்தி, அதையும் அசைத்துப் பிடுங்கி கீழே வீழ்த்தினான். மரம் முழுவதும் அகற்றப்பட்டதும் தன் கை கால்களை எளிதாக அசைத்தபடி புரண்டு எழுந்து நின்றான் அம்மனிதன். இளவரசன் முன்னால் தலைவணங்கி நன்றி சொன்னான்.

‘நல்லது. நான் ஒரு முக்கியமான வேலையைச் செய்துமுடிப்பதற்காக சென்றுகொண்டிருக்கிறேன். இனியாவது கவனமாக இரு’ என்று சொன்னான் இளவரசன்.

அவன் சொன்னதை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அம்மனிதன் இளவரசன் செய்த உதவியை என்றென்றும் மறக்கமாட்டேன் என்றும் என்றாவது ஒருநாள் அவனுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் தன்னை நினைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அப்போது அவன் எதிரில் தோன்றி வேண்டிய வேலைகளைச் செய்துகொடுப்பேன் என்றும் தெரிவித்தான். பிறகு வணக்கம் சொல்லி இளவரசனுக்கு விடைகொடுத்தான்.

பல நாட்கள் தொடர்ச்சியாக நடந்த பிறகு, ஒருவழியாக இளவரசி வசிக்கும் எட்டாவது பிரதேசத்தை அடைந்தான். அரண்மனையின் இருப்பிடம் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

அப்போது அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கெங்கும் பாடல்களும் நடனங்களும் அரங்கேறியபடி இருந்தன. மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. என்ன காரணம் என்று புரியாமல் அவன் சில கணங்கள் திகைத்து நின்றான். பக்கத்தில் நின்றிருந்தவர்களிடம் அதைக் குறித்து விசாரித்தான். அவர்கள் அன்று இளவரசிக்கு சுயம்வரம் நிகழவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்வதற்காக பல நகரங்களிலிருந்து பல இளவரசர்கள் வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

சரியான தருணத்தில்தான் தான் அங்கு வந்திருப்பதாக இளவரசன் நினைத்துக்கொண்டான். அந்த சுயம்வரத்தில் தானும் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். ஒருவேளை அந்தச் சுயம்வரத்தில் அவள் தன்னைத் தேர்ந்தெடுக்காமல் போனால் அந்த வலியும் வேதனையும் தாங்கமுடியாததாக இருக்கும் என்றும் அவனுக்குத் தோன்றியது. அதுமட்டுமின்றி, இவ்வளவு தொலைவு பாடுபட்டு வந்ததற்குப் பலன் இல்லாமலும் போகும் என்றும் தோன்றியது.

மனம் தளராத இளவரசன் அரண்மனைக்குள் சென்று அரசனைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தான். அவன் பெயர், பிரதேசம் போன்ற விவரங்களைக் குறித்துக்கொண்ட அரசனின் ஆட்கள், சுயம்வரக் கூடத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.

கூடத்தில் அவனைப்போலவே பலர் வந்து நிறைந்திருந்தனர். சுயம்வரத்தில் மூன்று போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்த அரசன் முதல் போட்டிக்கான நிபந்தனையை முதலில் தெரிவித்தான்.

மூடப்பட்டிருந்த ஒரு பெரிய கூடத்தின் முன்னால் எல்லாப் போட்டியாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். கூடத்துக்குள் அரிசிமூட்டைகளும் தானியமூட்டைகளும் கலந்து அடுக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றைத் திறந்து பார்க்காமல் தனித்தனியாக பிரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு இளவரசனுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு இளவரசனாக உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி வந்தனர்.

மலரைத் தேடி வந்த இளவரசன் மட்டுமே எஞ்சியிருந்தான். ‘இப்படி ஒரே கூடத்தில் எல்லா மூட்டைகளையும் கலந்து எதற்காக அடுக்கினீர்கள்? இந்தப் போட்டிக்காக இப்படி அடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?’ என்று தன் முன்னால் நின்றிருந்த அமைச்சரிடம் கேட்டான்.

‘அரிசிமூட்டைகளை அடுக்க ஒரு கூடமும் தானிய மூட்டைகளை அடுக்க இன்னொரு கூடமும் இந்த அரண்மனையில் இருக்கின்றன. ஆனால் அறுவடை நிகழ்கிற சமயத்தில்தான் ஒரு கூடத்தில் பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அதனால் எல்லா மூட்டைகளையும் ஒரே கூடத்தில் அடுக்கிவைத்துவிட்டோம். மூட்டைகளைச் சுமந்துவந்த வண்டிகள் மீண்டும் அறுவடைக்களத்துக்குச் செல்லவேண்டிய நெருக்கடி இருந்ததால் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைத்துவிட்டு வேகவேகமாகச் சென்றுவிட்டனர். இதனால் இரண்டு விதமான மூட்டைகளும் கலந்துவிட்டன’ என்று விளக்கினார்.

எல்லோரும் தோற்றுவிட்டதால், அப்போட்டியில் வெற்றி பெறவேண்டியது மிகமுக்கியம் என்று அவன் நினைத்தான். அவனைக் கூடத்துக்குள் அனுப்பிவைத்துவிட்டு அமைச்சர் கதவுகளை மூடினார்.

கூடத்துக்குள் சென்ற இளவரசன் தன் முன்னால் குவிந்திருந்த மூட்டைகளைப் பார்த்து ஒரு கணம் மலைத்து நின்றான். ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தான். எல்லாம் ஒன்றுபோலவே காட்சியளித்தன. இவற்றை எப்படிப் பிரித்தெடுப்பது என்று நினைத்துக் குழம்பினான்.

திடீரென அவனுக்கு வழியின் சந்தித்த எறும்புகளின் நினைவு வந்தது. இத்தருணத்தில் அவை உதவக்கூடும் என அவனுக்குத் தோன்றியது. உடனே அவற்றை நினைத்து வேண்டினான். கண்மூடி கண் திறப்பதற்குள் அவன் முன்னால் எறும்புக்கூட்டம் தெரிந்தது.

மகிழ்ச்சியோடு போட்டி விவரத்தை அந்த எறும்புகளுக்குத் தெரிவித்தான் இளவரசன். ஒவ்வொரு மூட்டையிலும் சின்னஞ்சிறிய ஓட்டைகளை உருவாக்குவதாகவும் அவற்றிலிருந்து சிந்தும் பொருளை வைத்து நெல்லா, தானியமா என்று தெரிந்துகொள்ளமுடியும் என்றும் எறும்புகள் கூறின. அவனுக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியது. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் நேரக் கட்டுப்பாட்டை எறும்புகளிடம் அவன் தெரிவித்தான். தலையாட்டிக்கொண்டே எறும்புகள் உற்சாகமாக தம் வேலையைத் தொடங்கின. அவ்வெறும்புகளுக்கு உதவுவதற்காக பல மூலைகளிலிருந்து எறும்புகள் தோன்றி சாரைசாரையாக வந்து மூட்டைகளை நெருங்கிச் சென்றன.

எறும்புகள் உருவாக்கிய பொத்தல் வழியாகச் சிதறிய ஒன்றிரண்டு மணிகளை வைத்து இளவரசன் அரிசிமூட்டை எது, தானியமூட்டை எது என்பதை எளிதாகத் தெரிந்துகொண்டான். ஒவ்வொன்றையும் தனித்தனி மூலைகளில் பிரித்து அடுக்கத் தொடங்கினான். எறும்புகளின் உதவியால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவன் அந்த வேலையைச் செய்துமுடித்தான்.

கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த இளவரசனை, அங்கு கூடியிருந்த அனைவரும் வியப்போடு பார்த்தனர். மலர்ந்திருந்த அவன் முகத்தைப் பார்த்ததுமே அவன் வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். வேகவேகமாக உள்ளே சென்று பரிசோதித்த அமைச்சரின் ஆட்கள் அனைத்தும் சரியாக வகைப்படுத்தப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

உடனே அரசருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரும் கூடத்துக்கு விரைந்துவந்து சோதித்துப் பார்த்தார். வெற்றி பெற்ற இளவரசனைப் பாராட்டிவிட்டு அன்றிரவு அரண்மனையிலேயே தங்கி ஓய்வெடுக்குமாறும் இரண்டாவது போட்டியை அடுத்தநாள் காலையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

விருந்தினர் மாளிகையின் அறையொன்றில் இளவரசன் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் இரண்டாவது போட்டிக்காக ஆட்கள் வந்து இளவரசனை அழைத்துச் சென்றனர். அரண்மனையின் இன்னொரு திசையிலிருந்த வேறொரு கூடத்துக்கு அவனை அழைத்துச் சென்றனர். அதுவும் பூட்டப்பட்டிருந்தது. அங்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் இளவரசன். அங்கு நின்றிருந்த அமைச்சர் அந்தக் கூடத்தில் ஏராளமான உணவு வகைகளும் மோரும் உள்ளன என்றும் ஒரே நாளில் அவை அனைத்தையும் உண்டுமுடிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

கூடத்தைத் திறந்து இளவரசனை மட்டும் தனியாக உள்ளே அனுப்பிவிட்டு, மீண்டும் கதவுகளைப் பூட்டிக்கொண்டனர் காவலர்கள். விதவிதமான உணவு வகைகளைப் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் இளவரசன். உணவின் மணம் மயங்கவைத்தது.

திடீரென வரும் வழியில் சந்தித்த பருத்த மனிதனின் நினைவு வந்தது. உடனே அவனை நினைத்து சில கணங்கள் கண்களை மூடினான். அடுத்த கணமே அவன் அங்கு தோன்றி என்ன உதவி வேண்டும் என்று கேட்டான். அந்த மனிதனிடம் இளவரசன் நடந்த எல்லாச் செய்திகளையும் தெரிவித்தான். கவலைப்படாதீர்கள் என இளவரசனை அமைதிப்படுத்திய அவன் ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிடத் தொடங்கினான். வெகுவேகமாக ஒவ்வொரு பாத்திரமாக காலியாகத் தொடங்கியது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவன் எல்லா உணவுவகைகளையும் சாப்பிட்டு முடித்தான் அவன். பெரிய அண்டாவில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த மோரையும் குடித்து முடித்து ஏப்பம் விட்டான். இளவரசன் அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவைத்தான்.

குறிப்பிட்ட நேரம் முடிவடையும் வரையில் உள்ளேயே அமர்ந்திருந்தான் இளவரசன். கதவைத் திறந்து வேலைக்காரர்கள் உள்ளே வந்து அழைத்தபோதுதான், உண்ட களைப்பில் அடியெடுத்து நடக்கமுடியாதவனைப்போல அவர்களுடைய தோள்களைப் பற்றி அடிமேல் அடிவைத்து வெளியே வந்தான் இளவரசன்.

உடனே அரசருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரும் கூடத்துக்கு விரைந்துவந்து எங்கெங்கும் தலைகீழாக உருண்டு கிடந்த வெற்றுப் பாத்திரங்களைப் பார்த்தார். பிறகு வெற்றி பெற்ற இளவரசனைப் பாராட்டிவிட்டு அறைக்குச் சென்று அன்றிரவு நன்கு உறங்கி ஓய்வெடுக்குமாறும் இறுதிப்போட்டியை மறுநாள் காலையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

மறுநாள் விடிந்தது. காலை உணவை முடித்துக்கொண்ட பிறகு இளவரசனைச் சந்திக்க அமைச்சர் வந்தார். ஊர் எல்லையில் ஆராய்ச்சி மணியைப்போல ஒரு பெரிய மணி அமைக்கப்பட்டிருப்பதாகவும், தனியொரு ஆளாக அங்கு நடந்து சென்று அதை அசைத்து ஓசையெழுப்பவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்போட்டியில் தோற்றுவிட்டால், முதலில் வென்ற இரு போட்டிகளிலும் அவன் தோற்றதாகவே அறிவிக்கப்படுவான் என்றும் அவர் தெரிவித்தார். விதிக்கு உடன்பட்ட இளவரசன் ஊர் எல்லையை நோக்கி நடந்துசென்றான்.

நீண்ட நேரம் நடந்த பிறகு அவன் எல்லையை அடைந்தான். அங்கு வடிவமைக்கப்பட்டிருந்த மணியின் உருவத்தைப் பார்த்து அவன் மலைத்து நின்றுவிட்டான். ஏறத்தாழ ஒரு சிறிய குன்றைப்போன்ற உயரத்தில் அந்த மணி வடிவமைக்கப்பட்டிருந்தது. சில கணங்கள் அதையே கண்கொட்டாமல் பார்த்து நின்றான். அவ்வளவு உயரமான மணியின் நடுவில் ஒரு பெரிய பனைமரத்தைப்போல அதன் நாக்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் நுனியில் பிணைக்கப்பட்டிருந்த இரும்புக்கயிறு தொட்டுத் தூக்கமுடியாதபடி எடையோடு இருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் நீண்ட நேரம் அந்த மணியைச் சுற்றிச்சுற்றி வந்தான் இளவரசன். உணவை உண்டு உதவிய மாமனிதனை மீண்டும் நினைத்துக்கொண்டான். அவனைத் தவிர அத்தருணத்தில் தனக்கு யாரும் உதவமுடியாது என்று அவனுக்குத் தீர்மானமாகத் தெரிந்தது.

அவன் நினைத்ததுமே ஆஜானுபாகுவான தோற்றத்துடன் அந்த மனிதன் வந்து நின்றான். தன் கண்முன்னே குன்றென எழுந்து நின்றிருக்கும் மணியைக் காட்டி போட்டி விவரத்தை அவனிடம் சொன்னான் இளவரசன். ‘அதற்கென்ன, அடித்து ஓசையெழுப்பிவிடலாம்’ என்று சொன்னபடி அசைந்து அசைந்து அந்த மணியின் நாக்கு தொங்கும் இடத்துக்குச் சென்றான். ஒரு சாதாரண கயிற்றைத் தொட்டு எடுப்பதுபோல அதை எடுத்து அசைத்தான். மணியின் சுவர்களின் அது முன்னும் பின்னுமாக மோதி டண்டண்ணென்ற ஓசை அலையலையாக எழுந்தது. அவனுடைய வலிமையைப் பார்த்து வியந்தபடி பேச்செழாமல் நின்றான் இளவரசன்.

எல்லாத் திசைகளிலும் ஓசை பரவத் தொடங்கியதும் பெரிய உடல்கொண்ட மனிதன் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றான். மணியோசையைக் கேட்டதும் அரண்மனையிலிருந்து வீரர்கள் புறப்பட்டு வந்து இளவரசனை அழைத்துச் சென்றனர். அமைச்சர் அவனைப் பாராட்டி அரசனிடம் அழைத்துச் சென்றார்.

இளவரசனை அரசர் தழுவி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த அரங்கத்திலேயே அவனுக்கும் இளவரசிக்கும் திருமணம் செய்துவைத்தார். ஒன்றிரண்டு நாட்கள் அங்கு தங்கி விருந்துண்ட பிறகு, இளவரசியை அழைத்துக்கொண்டு தன் சொந்த பிரதேசத்துக்குப் பயணமானான் இளவரசன்.

அந்தப் பயணத்தில் இருவரும் உரையாடிக்கொண்டே சென்றபோதும், அதுவரை தன்னிடம் இளவரசி ஒருமுறை கூட சிரிக்கவே இல்லை என்பதை உணர்ந்தான் இளவரசன். அது அவனுக்கு புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது. ஒரு பெண்ணால் சிரிப்பே இல்லாமல் எப்படிப் பேசமுடிகிறது என நினைத்து அவன் குழப்பத்தில் மூழ்கினான். சிரிப்பே இல்லாமல் பேசுகிற ஒருத்தி தன் வாய்க்குள் ஒரு மலரை எப்படி வைத்திருக்கமுடியும் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அந்த மலர் இல்லாமல் ராஜநாகத்தை எப்படி எதிர்கொள்வது என்றும் அதற்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்றும் யோசித்தான்.

இறுதியாக எது நிகழ்ந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியோடு தன் பயணத்தின் நோக்கத்தைப்பற்றி இளவரசியிடம் மனம் திறந்து விரிவாகச் சொன்னான். தன் ராஜ்ஜியத்தில் எலித்தொல்லை அதிகரித்ததையும் அது மாறி பாம்புத்தொல்லை அதிகரித்ததையும் அதனால் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்ததையும் தானும் தன் தந்தையும் காட்டில் கூடாரம் எழுப்பித் தங்கியதையும் ஏழுதலை கொண்ட ராஜநாகத்தைச் சந்தித்ததையும் அது தன் தலைவலியைப்பற்றி எடுத்துரைத்ததையும் அதைப் போக்குவதற்கான மலரை எடுத்துச் செல்வதற்காக இளவரசியின் ராஜ்ஜியம் வரைக்கும் வந்ததையும் விரிவாகவே எடுத்துரைத்தான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட இளவரசி எந்த மலரும் தன்னிடம் இல்லை என்று ஒரே வரியில் பதில் சொன்னாள். அந்தப் பதிலைக் கேட்டு இளவரசன் ஏமாற்றத்தில் ஆழ்ந்தான்.

‘ஒருவேளை ராஜநாகம் உங்களை ஏமாற்றித் திசைதிருப்பி ராஜ்ஜியத்தைவிட்டு வெளியேற்றுவதற்காக இந்தக் கட்டுக்கதையைக் கிளப்பியிருக்கும் என்று தோன்றுகிறது’ என்றாள் இளவரசி.

இளவரசியின் கூற்று அவனைக் குழப்பியது. ‘என்ன சொல்கிறாய் நீ? ராஜநாகம் என்னை ஏமாற்றிவிட்டது என்றா சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘நீங்கள் மட்டுமே அந்த நாகத்தை துணிவோடு எதிர்த்து நின்றீர்கள். அதனால் உங்களை அச்சூழலிலிருந்து அகற்றிவிட்டால் ராஜ்ஜியத்தில் இருப்பவர்களையெல்லாம் அழித்துவிடலாம் என அது திட்டமிட்டிருக்கலாம் அல்லவா?’

இளவரசியின் கூற்றை அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு கணம் அமைதியாக இருந்தான்.

‘அப்படிச் செய்வதன் மூலம் அது எதைச் சாதிக்க நினைத்திருக்கும்?’

‘ஒருவேளை உங்கள் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி நாகங்களின் ராஜ்ஜியமாக மாற்றிக்கொள்ளக்கூடத் திட்டமிட்டிருக்கலாம்.’

அதைக் கேட்டு ஐயோ என்று தலையில் கை வைத்துக்கொண்டான் இளவரசன். அதைக் கண்டு இளவரசியும் துயரம் கொண்டாள்.

‘நான் சொல்வதுபோல நிகழ்ந்திருக்கும் என நினைக்கவேண்டாம். அப்படி ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது என்பதால் நான் அப்படிச் சொன்னேன். தவறாக நினைக்கவேண்டாம்’ என்று பேச்சைத் திசைதிருப்பினாள்.

அதைக் கேட்டு சற்றே அமைதி கொண்டான் இளவரசன். ஆயினும் அவனால் தொடர்ந்து உரையாட முடியவில்லை. மெளனமாகவே இருந்தான்.

அவனைப் பார்க்கப் பார்க்க இளவரசிக்குப் பரிதாபமாக இருந்தது. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறானே என நினைத்தாள். அவன் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் எதை எதையோ பேசத் தொடங்கினாள். அவள் சொல்வதையெல்லாம் அவன் உம் கொட்டி கேட்டுக்கொண்டு வந்தானே தவிர, அவன் முகம் மலரவில்லை.

அவனை உரையாடவைக்கும் விதமாக ‘உங்களிடம் ஒன்று கேட்பேன். உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டாள் இளவரசி. என்ன என்பதுபோல இளவரசியின் கண்களை நோக்கினான் இளவரசன்.

‘கூடத்தில் கலந்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சரியாக இனம்கண்டு எப்படிப் பிரித்தீர்கள்? கூடம் நிறைய வைக்கப்பட்டிருந்த உண்வுவகைகளை எப்படி ஒரே ஆளாகச் சாப்பிட்டு முடித்தீர்கள்? பனைமரம் போல நீண்டிருந்த மணியின் நாக்கை அசைத்து எப்படி ஓசையெழுப்பினீர்கள்?’ என்று கேட்டாள்.

அந்தக் கேள்விகளைக் கேட்ட பிறகு, அவளிடம் உண்மையைச் சொல்ல அவன் விரும்பினான். அப்போதாவது தன் மனபாரம் குறையாதா பார்க்கலாம் என அவன் நினைத்தான்.

உடனே தொண்டையைச் செருமிக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் துணை நின்றவர்களைப்பற்றியும் அவர்களுக்கு தான் உதவியதைப்பற்றியும் விரிவாக ஒரு கதை சொல்வதுபோலச் சொன்னான். அவன் சொல்லச்சொல்ல அனைத்தையும் பொறுமையாகக் கேட்டாள் இளவரசி. அவன் கதையை விவரித்த விதம் அவளுக்குள் ஒருவித கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது. மகிழ்ச்சியில் அவன் தோளோடு தோள் உரச நெருங்கி உட்கார்ந்தாள்.

இறுதிக்கதையை அவன் சொல்லி முடித்த தருணத்தில் அவள் மிகவும் இயல்பாக கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். அந்தச் சிரிப்பைக் கேட்டு அவன் ஆனந்தம் கொண்டான். அவள் மேலும் மேலும் வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் கதையை இழுத்துச் சொன்னான். அவள் மனம்விட்டுச் சிரித்த கணத்தில் எதிர்பாராத வகையில் அவள் வாய்க்குள்ளிருந்து பளிச்சென்ற நிறத்துடன் மூன்று மலர்கள் விழுந்தன. அவற்றை தன் கைகளில் ஏந்திப் பெற்றுக்கொண்டான் இளவரசன். ‘பார்த்தாயா, மலர்’ என்று அவளிடம் காட்டிப் புன்னகைத்தான். அவளும் அந்த மலர்களை நம்பமுடியாத வியப்புடன் தொட்டுப் பார்த்தாள்.

‘உன் சிரிப்பில் அந்த மலர் ஒளிந்திருக்கிறது என்பது அந்த ராஜநாகத்துக்குத் தெரிந்திருக்கிறது’ என்றான் இளவரசன். அவன் சொற்களைக் கேட்டதும் இளவரசி மீண்டும் சிரித்தாள்.

ஒருவழியாக இளவரசன் தன் ராஜ்ஜியத்தை அடைந்தான். காட்டில் தன் கூடாரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தான். கூடாரத்துக்கு வெளியே கட்டிலில் ராஜா உட்கார்ந்திருந்தார். காவலர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.

‘மகனே, எங்கே போய்விட்டாய் நீ? உன்னைக் காணாமல் நான் தவித்துப்போய்விட்டேன்’ என்று கண் கலங்கினார் ராஜா. இளவரசன் நடந்த விஷயங்களையெல்லாம் சொல்லி இளவரசியை அறிமுகப்படுத்தினான். இருவரும் ராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இளவரசன் கூடாரத்துக்கு வெளியே இருந்த மரத்துக்கருகில் சென்று ராஜநாகத்தை அழைத்தான். ‘ராஜநாகமே, வெளியே வா. உன் தலைவலியை நீக்கும் மலரைக் கொண்டுவந்துள்ளேன்’ என்றான். அடுத்த கணமே மரத்திலிருந்து ராஜநாகம் இறங்கிவந்தது. அவன் தன் கையிலிருந்த மலர்களை ராஜநாகத்தின் முன் வைத்தான். ராஜநாகம் தன் ஏழு தலைகளும் அந்த மலர்கள் மீது படும் வகையில் குனிந்து புரண்டது.

‘ஆகா, என் தலைவலி போய்விட்டது. பெரிய பாரம் இறங்கியதுபோல இருக்கிறது’ என்றது ராஜநாகம். ‘மிக்க நன்றி இளவரசே. மிக்க நன்றி’ என்று உடலை நெளித்து வணங்கியது.

இளவரசன் புன்னகையோடு அந்த நன்றியை ஏற்றுக்கொண்டான். ஒருகணம் இளவரசியின் பக்கம் திரும்பி ‘பார்த்தாயா?’ என்பதுபோல புன்னகைத்தான்.

பிறகு ராஜநாகத்தின் பக்கம் திரும்பி ‘நான் உனது கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன். இப்போது நீ உனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உன் கூட்டத்தாரை அழைத்துக்கொண்டு இந்த ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்றான்.

‘இப்போதே செல்கிறேன்’ என்று சொன்னபடி தன் ஏழு தலைகளும் நிலத்தில் பதிய ஒருமுறை குனிந்து இளவரசனை வணங்கியது ராஜநாகம். பிறகு உடலை வளைத்துத் திரும்பி ஊரில் வசிக்கும் பிற பாம்புகளுடன் உரையாடி அழைத்துச் செல்ல வேகவேகமாக ஊர்ந்து சென்றது.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும் appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவளமீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.

தங்கைக்கு மணம் முடித்து அனுப்பிய பிறகு, அடுத்த ஆண்டில் மூத்த சகோதரனுக்குத் திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் இரண்டாவது சகோதரனுக்குத் திருமணம் நடந்தது. மேலும் ஓராண்டுக்குப் பிறகு அவர்களுடைய செல்லத் தம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. தம் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக வீடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியான இல்லறத்தின் அடையாளமாக ஒவ்வொரு சகோதரனுக்கும் அடுத்தடுத்து ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாமார்களைப்போலவே மூன்று சகோதரர்களும் இணைபிரியாது ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

அவர்களுடைய ஓயாத உழைப்பின் விளைவாக அக்குடும்பத்தில் செல்வம் குவிந்தது. அவர்கள் மூவருமே தம் நேர்மையின் காரணமாக, அக்கிராமத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக விளங்கினர். அவர்கள் தொடங்கிய ஒவ்வொரு வணிகமும் அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.

மூன்று சகோதரர்களுமே கட்டிளங்காளைகளாக இளமைத்துடிப்போடு கிராமத்தை வலம் வந்தார்கள். அந்தக் குடும்பத்துக்கு இணையான தகுதியோடு அந்தக் கிராமத்திலும் சுற்றுவட்டாரத்திலும் ஒரு குடும்பம்கூட இல்லை. அதனால் அந்த இளைஞர்களுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மூன்று சகோதரர்களும் கவலையில் மூழ்கினார்கள்.

கிராமத்தில் தம் வயதையொத்த இளைஞர்கள் அனைவரும் திருமணம் முடித்து ஜோடிஜோடியாக திரிந்து மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மூன்று இளைஞர்களுக்கும் ஒருவித ஏக்கம் பிறந்து அவர்களை வாட்டியது. திருமணமாகாமை அவர்களுக்கு ஒருவித மனக்குறையை அளித்தது.

தீராத கவலையின் காரணமாகவும் உடல்நலிவின் காரணமாகவும் திடீரென மூத்த அண்ணன் படுத்த படுக்கையானார். மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தார். ஒருநாள் மகனை அருகில் அழைத்து வீட்டுச் செய்திகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசி முடித்ததும் அவர் மகன் ‘அப்பா, நீங்க எனக்கு எதுவுமே செய்யாம போறீங்களேப்பா’ என்று உருக்கத்தோடு கேட்டான்.

அவன் எதைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறான் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் புரியாதவரைப்போல ‘நான் உனக்கு என்னப்பா செய்யலை? உனக்காக ஊரைச்சுற்றி ஏராளமான நிலங்கள், தோட்டங்கள், எண்ணற்ற ஆடுமாடுகள், தங்கம், வெள்ளி, பல தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி செல்வம்னு எல்லாத்தையும் வச்சிருக்கேனே. இதுக்கு மேல என்னடா மகனே உனக்கு வேணும்?’ என்று கேட்டார். அதைக் கேட்டு ஆழமாக ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட மகன் ‘நான் அதைப்பத்தி கேக்கலைப்பா. உன் கண்ணு முன்னால நீயே ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா நல்லா இருக்குமில்லையா? அதைத்தான் கேட்டேன்’ என்று மெதுவாகச் சொன்னேன்.

அதைக் கேட்டு அப்பாவும் பெருமூச்சு வாங்கினார். ‘ஆமாம்டா மகனே. நீ சொல்றது உண்மைதான். அந்தக் கடமையை நான் செய்யாதது தப்புதான். அதுக்காக வருத்தப்படாதே. தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அவுங்க குடும்பமும் நமக்கு நிகரான அந்தஸ்து உள்ள குடும்பம்தான். அவளுக்கு ஒரு பொண்ணு இருக்குது. அழகும் அறிவும் கொண்ட பொண்ணு. சின்ன வயசுல பார்த்திருக்கேன். அவள் உனக்கு முறைப்பொண்ணுதான். கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்னு சொல்லு. அவ தாராளமா உனக்குக் கல்யாணம் செஞ்சி வைப்பா. கவலைப்படாத’ என்றார்.

தன் மனத்தில் இருந்த பாரத்தையெல்லாம் இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளையும் முறையாகச் செய்து நல்ல முறையில் அடக்கம் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன. முதல் சகோதரர் இறந்ததுமே அவர்மீது மிகவும் பிரியம் கொண்டிருந்த இரண்டாவது சகோதரருக்கு வாழ்க்கையின்மீது பிடிப்பு போய்விட்டது. சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்குவதுமில்லை. உடல் மெல்ல மெல்ல நலியத் தொடங்கியது. விரைவிலேயே படுத்த படுக்கையானார். எந்த வைத்தியமும் பலிக்கவில்லை. ‘நல்லபடியா பார்த்து அனுப்பிவைங்க’ என்று வைத்தியரும் கைவிரித்துவிட்டுப் போய்விட்டார்.

ஒருநாள் இரவு மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தார் அவர். அப்போது தன் மகனை அருகில் அழைத்து வீடு, நிலபுலன்கள் தொடர்பான ஆவணங்களைப்பற்றிப் பேசினார்.

அவர் பேசி முடித்ததும் அவர் மகன் ‘அப்பா, நீங்க எனக்கு எல்லாமே செஞ்சிருந்தாலும், செய்யவேண்டிய முக்கியமான ஒன்னைச் செய்யாமலேயே போறீங்களேப்பா’ என்று வருத்தமுடன் கேட்டான்.

அவன் எந்தச் செய்தியை மையமாக வைத்துப் பேசுகிறான் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் புரியாதவரைப்போல ‘நான் உனக்கு என்னப்பா செய்யலை? உனக்காக ஊரைச்சுற்றி நிலம், தோட்டம், ஆடுமாடுகள், தங்கம், வெள்ளின்னு ஏராளமான சொத்துகளைச் சேர்த்து வச்சிருக்கேனே. அது போதாதா?’ என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் கொஞ்ச நேரம் மகன் மெளனமாக தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். பிறகு ஒரு பெருமூச்சுடன் ‘அப்பா, நான் அதைப்பத்தி கேக்கலைப்பா. நீங்களா ஒரு பொண்ண பார்த்து பேசிமுடிச்சி கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா நல்லா இருக்குமில்லையா? அதைத்தான் கேட்டேன்’ என்று மெதுவாகச் சொன்னான்.

அதைக் கேட்டு அப்பா வருத்தமுடன் ஒரு புன்னகையைச் சிந்தினார். பிறகு மெல்லிய குரலில் ‘நீ சொல்றது உண்மைதான். நமக்குச் சமமான தகுதியுள்ள குடும்பம் வேணும்னு தள்ளித்தள்ளி போட்டுட்டேன். என் கடமையை நான் செய்யாதது தப்புதான். அதுக்காக வருத்தப்படாதே. தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அந்த குடும்பத்துல ஒரு பொண்ணு இருக்குது. ரொம்ப அழகான பொண்ணு. அவள் உனக்கு முறைப்பொண்ணுதான். உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கேளு. அத்தை உனக்கு கட்டாயமா கட்டிவைப்பாங்க’ என்றார்.

தன் மனத்தில் இருந்த பாரத்தையெல்லாம் இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அடுத்தநாள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முறையாகச் செய்து அடக்கம் செய்தனர்.

மேலும் சில மாதங்கள் கழிந்தன. எதிர்பாராத விதமாக தென்னைமரத்தின் நிழலில் மூன்றாவது சகோதரர் நின்றுகொண்டு நிலத்தில் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். அப்போது காற்று வேகத்தில் மர உச்சியிலிருந்து ஒரு கீற்று தடாரென்று அவர் தலை மீது விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஒருபக்கம் காயம். இன்னொரு பக்கம் பயம். இரண்டும் சேர்ந்து அவரைப் படுக்கையில் வீழ்த்திவிட்டது. வைத்தியர் வந்து நாடி பிடித்து சோதித்துப் பார்த்துவிட்டு மரணம் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டுப் போனார்.

அன்று இரவு பாதுகாப்புக்காக அப்பாவின் அருகிலேயே அவருடைய மகன் இருந்தான். ஏதேதோ பழைய கதைகள் பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அவற்றின் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் அப்பாவிடம் அவர் பேசி முடித்ததும் அவர் மகன் ‘அப்பா, ஒரு குறையும் இல்லாம நீங்க எனக்கு எல்லாமே செஞ்சிருக்கீங்க. நீங்களே ஒரு பொண்ணைப் பார்த்து எனக்கு ஒரு கல்யாணம் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும். அது ஒன்னுதான் குறை’ என்று வருத்தமுடன் தெரிவித்தான்.

அதைக் கேட்டு அப்பா வருத்தமுடன் ஒரு புன்னகையைச் சிந்தினார். பிறகு மெல்லிய குரலில் ‘நீ சொல்றது உண்மைதான். நான் ஒரு கணக்கு போட்டேன். ஆனால் கடவுள் வேற ஒரு கணக்கு போட்டுட்டான். அதனால அது கைகூடாம போயிடுச்சி’ என்று சொல்லிவிட்டு த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டினார்.

சில நொடிகளுக்குப் பிறகு ‘நான் ஒரு செய்தியை சொல்றேன். அதும்படி செய் மகனே. தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அவளுக்கு ஒரு பொண்ணு இருக்குது. உனக்கு முறைப்பொண்ணுதான். கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்னு சொல்லு. அத்தை உனக்கு கட்டாயமா கட்டிவைப்பாங்க’ என்றார். மகனும் மகிழ்ச்சியோடு தலையாட்டினான்.

தன் மனத்தில் இருந்த சுமையை இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அடுத்தநாள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முறையாகச் செய்து அடக்கம் செய்தனர்.

குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்களும் அடுத்தடுத்து இறந்துபோனதால், சில புதிய பொறுப்புகளை மூன்று மகன்களும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. அவை அனைத்தும் பழகும்வரை அவர்கள் கிராமத்திலேயே இருக்க வேண்டியதாயிற்று. அதற்குள் நாலைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

இன்னும் தாமதிப்பது அழகல்ல என ஒருநாள் மூன்று சகோதரர்களுக்கும் தோன்றியது. உடனே தாம் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் தம் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தம் அத்தை வசித்துவரும் கிராமத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் இருப்பதிலேயே சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டார்கள். சிறந்த ஆபரணங்களை எடுத்து அணிந்துகொண்டார்கள்.

ஏழு பகல் ஏழு இரவு தொடர்ந்து பயணம் செய்து அவர்கள் தம் அத்தையின் ஊரை அடைந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் அவர்களுடைய அத்தை வீட்டில்தான் இருந்தார். அவர்கள் மூவரும் அத்தையிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

‘வாங்கடா, வாங்க’ என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார் அத்தை. ‘செத்துப்போன என் அண்ணன்மாருங்களே பொறந்துவந்த மாதிரி இருக்கீங்கடா’ என்று சொல்லிச்சொல்லி ஆனந்தப்பட்டார். வீட்டுச்செய்திகள், ஊர்ச்செய்திகள் அனைத்து விஷயங்களைப்பற்றியும் ஆசை தீரப் பேசினார்.

மூன்று சகோதரர்களும் குளத்துக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பினர். வந்தவர்களுக்கு வாழை இலை போட்டு, கோழி அடித்து குழம்புவைத்து விருந்து படைத்தார் அத்தை. அத்தைக்குப் பின்னாலேயே நின்று அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தபடி ஒத்தாசை புரிந்துகொண்டிருந்த அத்தை மகளை வைத்தகண் எடுக்காமல் மூன்று பேருமே பார்த்து மகிழ்ந்தனர். ‘இப்படிப்பட்ட அழகி தனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்?’ என்று ஒவ்வொருவரும் மனத்துக்குள் கற்பனையில் திளைக்கத் தொடங்கினர்.

சாப்பிட்டு முடித்ததும் பயணக்களைப்பு நீங்கும் வகையில் சிறிது நேரம் உறங்கி எழுந்தனர். பொழுது சாயும் வேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினர்.

குளத்தங்கரையிலும் கடைத்தெருவிலும் கோவில் வாசலிலும் கூடியிருந்த பெண்கள் அனைவரும் மூன்று சகோதரர்களையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர். ‘பெரிய ஊட்டுக்காரம்மாவுக்கு யோகம்தான். ஒரு மாப்பிள்ளைக்கு மூனு மாப்பிள்ளைங்க தயாரா இருக்காங்க. அவ பெத்த பொண்ணு யாருக்கு கழுத்து நீட்டப் போறாளோ தெரியலை’ என்று தமக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். அவர்கள் ரகசியமாகப் பேசினாலும் அவர்களுடைய பேச்சை மூன்று பேரும் கேட்டு மனத்துக்குள் ரசித்தபடி நடந்தார்கள்.

இரவு உணவுக்குப் பிறகு மூன்று சகோதரர்களும் வாசலில் போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தனர். அவர்களோடு அத்தையும் உட்கார்ந்து கதை பேசத் தொடங்கினார். பேச்சோடு பேச்சாக அவர்கள் வந்த காரணத்தை விசாரித்தார். அனைவருக்கும் முன்னால் மூத்த சகோதரன் ‘அப்பா சாகறதுக்கு முன்னால அத்தை பொண்ண கல்யாணம் செஞ்சிக்கடான்னு சொன்னாரு. அதனால கல்யாணம் செஞ்சிக் கொடுங்கன்னு கேக்கறதுக்குத்தான் வந்திருக்கேன் அத்தை’ என்றான்.

அவன் சொல்லிமுடிக்கும்வரை காத்திருந்த பிற இரு சகோதரர்களும் தம் அப்பாமார்கள் சாகும் சமயத்தில் சொன்ன வாசகத்தைக் குறிப்பிட்டு, தமக்கே திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

ஒரே ஒரு கணம் அவள் மனத்துக்குள் பொங்கிய மகிழ்ச்சி அடுத்த கணமே அப்படியே அடங்கிவிட்டது. ஒரு புதிய குழப்பம் தம் வீட்டைத் தேடி வந்துள்ளதாக அவளுக்குத் தோன்றியது. இருப்பதோ ஒரே மகள். மணம் செய்துகொள்ள விரும்புகிறவர்களோ மூன்று பேர். மூன்று பேருமே தன் அண்ணன் பிள்ளைகள். யாருக்குக் கொடுப்பது, யாருக்கு மறுப்பது என்று புரியாமல் அவள் மனம் போராடியது.

வெளியூருக்குச் சென்றிருந்த அத்தையின் கணவர் அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பிவந்தார். வாசலில் கட்டிலில் அமர்ந்திருந்த விருந்தினரைப் பார்த்துவிட்டு மகிழ்ந்தார். ‘உங்களையெல்லாம் பார்க்கும்போது உங்க அப்பாக்களையே பார்க்கறமாதிரி இருக்குது’ என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் உரையாடினார்.

அதுதான் தக்க சமயம் என்று நினைத்த அத்தை, அப்போது அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தைப்பற்றி கணவனிடம் எடுத்துரைத்தாள். அவர் அதைக் கேட்டு குழம்பினார். ‘நமக்கு இருப்பதோ ஒரே ஒரு பெண். மூனு பேருக்கும் எப்படி கொடுக்கமுடியும்?’ என்று கேட்டார். முடிவே இல்லாமல் உரையாடிக்கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை. இறுதியில் அத்தையின் கணவர் ‘சரி, அதைப் பத்தி ரொம்ப யோசிச்சி மனசைக் குழப்பிக்காதீங்க. தூங்குங்க. காலையில இதுக்கு ஒரு தீர்வை யோசிச்சி சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு குளிப்பதற்குச் சென்றார்.

குளித்துவிட்டுத் திரும்பிய கணவனுக்கு அத்தை உணவு பரிமாறினாள். ‘என்னங்க இது, பட்டுனு இப்படி ஒரு முடிவை சொல்லிட்டீங்க. நாளைக்கு என்ன தீர்வு சொல்லப் போறீங்க?’ என்று கவலையோடு கேட்டாள். ‘நாளைக்கு நடக்கப் போறது நல்லதாவே நடக்கும்னு நெனச்சிகிட்டு, எந்தக் குழப்பமும் இல்லாம நீயும் தூங்கு’ என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினார்.

பொழுது விடிந்தது. எல்லோரும் குளத்தங்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். ஏதேதோ ஊர்க்கதைகள் பேசியபடி சாப்பிட்டார்கள். பிறகு மூவரையும் கூடத்தில் அமரவைத்து பொறுமையாகப் பேசத் தொடங்கினார்.

‘இங்க பாருங்கப்பா, எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. உங்க மூணு பேருக்கும் அவளைக் கட்டிக்கிற உரிமை இருக்குது. ஆனா மூணு பேருக்கும் ஒரு பொண்ண எப்படி கட்டிக்கொடுக்கமுடியும்? ஒருத்திக்கு ஒருத்தன்ங்கறதுதான உலக நீதி?’ என்று சொன்னார்.

அவர் சொல்லப் போகும் தீர்வுக்காக மூன்று பேரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘உங்க மூணு பேருல யாருக்கு உயர்வான தகுதி இருக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுக்காக நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். உங்க மூணு பேருக்கும் ஆளுக்கு பத்து வெள்ளி கொடுப்பேன். நீங்க அதை எடுத்துகிட்டு புறப்படுங்க. இந்தப் பணத்தை வச்சி நீங்க எதை வேணும்னாலும் வாங்கிக்கலாம். திரும்பி வரும்போது நீங்க வாங்கிட்டு வரக்கூடிய பொருள் என்னன்னு நான் பார்ப்பேன். யாரு கொண்டுவரக்கூடிய பொருள் ரொம்பரொம்ப முக்கியமானதாவும் ரொம்ப உயர்ந்ததாவும் இருக்குதோ, அவுங்க எங்க பொண்ணு கழுத்துல மாலை போடலாம். அதுதான் திட்டம். என்ன சொல்றீங்க?’ என்று கேட்டார்.

மூன்று பேரும் ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்துகொண்டனர். பிறகு அவர் சொன்ன திட்டத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

உடனே அவர் அறைக்குள் சென்று முப்பது வெள்ளிப்பணம் கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் பத்து வெள்ளிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அத்தையிடமும் மாமாவிடமும் விடைபெற்றுக்கொண்டு மூவரும் புறப்பட்டனர். கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு எட்டிப் பார்த்தபடி நின்றிருந்த அத்தை பெண்ணிடமும் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சத்திரத்தில் தங்கி மூவரும் ஊரைச் சுற்றிப் பார்த்தனர். சந்தையில் சுற்றி அலைந்தனர். எந்தப் பொருள் அபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நினைத்து தேடித்தேடிப் பார்த்தனர். எதைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு கணம் மிகமிகப் பயனுள்ளதாகத் தோன்றியது. அடுத்த கணமே அது சாதாரணமாகவும் தோன்றியது. சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறினர்.

ஊரூராகச் சென்றுகொண்டிருந்தார்களே தவிர, ஒரு முறைகூட ஒரு பொருளைக்கூட அவர்கள் வாங்கவில்லை. எது மிகச்சிறந்தது என அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலம் கடந்துவிட்டது.

ஒரு கிராமத்துச்சந்தையில் ஒரு வியாபாரி ஒரு மரத்தடியில் அழகாக மரச்சட்டங்கள் பொருத்தப்பட்ட ஒரு கண்ணாடியை எல்லோருடைய பார்வையிலும் படும்படி சாய்த்தநிலையில் விற்பனைக்காக வைத்துவிட்டு, அதற்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.

மூத்த சகோதரன் அந்தக் கண்ணாடியைப் பார்த்துவிட்டு, அதற்குப் பக்கத்தில் சென்றான். அந்தக் கண்ணாடியில் அவன் உருவம் பிரதிபலித்தது. அவன் நகரநகர, அந்த ஆடிப்பிம்பமும் நகர்ந்தது. அவன் படிமம் தெரிந்ததே தவிர, வேறு எவ்விதமான புதுமையும் தெரியவில்லை.

கண்ணாடிக்குப் பக்கத்தில் நின்றிருந்தவனிடம் ‘இந்தக் கண்ணாடி என்ன விலை?’ என்று கேட்டான். அந்த வியாபாரி ‘பத்து வெள்ளிப்பணம்’ என்றான். ‘இது சாதாரண கண்ணாடிதானே? அதற்கு ஏன் இந்த விலை சொல்கிறாய்?’ என்று கேட்டான் மூத்த சகோதரன்.

அதற்கு அந்த வியாபாரி சிரித்துக்கொண்டே ‘இது பார்ப்பதற்குத்தான் சாதாரணமான கண்ணாடி போலத் தோன்றும். ஆனால் இக்கண்ணாடிக்கு ஒரு விசித்திரமான சக்தி இருக்கிறது. அதனால்தான் அந்த விலை’ என்றான்.

‘அப்படி என்ன விசித்திரமான சக்தி? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க’ என்று கேட்டான் மூத்த சகோதரன்.

‘உலகத்திலே எல்லாக் கண்ணாடிகளும் பார்க்கிறவங்களுடைய முகங்களை மட்டும்தான் காட்டும் அல்லவா? அந்த மாதிரியான கண்ணாடிகளைத்தான் நீங்களும் இதுவரை பார்த்திருப்பீங்க. இந்தக் கண்ணாடியையும் முகம் பார்க்கிற கண்ணாடியா பயன்படுத்தலாம். அதையும் தாண்டி ஒரு வேலையைச் செய்யும். உயரமானா ஒரு இடத்துக்கு இந்தக் கண்ணாடிய எடுத்துட்டுப் போய் சாய்ச்சி வச்சிட்டு, இதுக்கு முன்னால நின்னு ஒரு முக்கியமான மந்திரத்தைச் சொன்னா போதும். உடனே, அந்த நிமிஷத்துல உலகத்துல எந்த மூலையில என்னென்ன விஷயங்கள் நடக்குதுங்கற தகவலையெல்லாம் காட்டும். அதுதான் இந்தக் கண்ணாடியுடைய சிறப்பான சக்தி.’

‘அது என்ன மந்திரம்?’

‘நீங்க இந்தக் கண்ணாடியை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்.’

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு மூத்த அண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான். இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தக் கண்ணாடியை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். ‘ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க’ என்றான்.

அதே சந்தையில் தானும் எதையாவது சிறப்பான ஒன்றைத் தேடி வாங்கிவிட வேண்டும் என நினைத்த இரண்டாவது அண்ணன் வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினான். ஒரு மரத்தடியில் ஒரு வியாபாரி வித்தியாசமான ஒரு பொருளை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அழகாகச் சீவப்பட்ட மரச்சட்டங்களையும் பலகைகளையும் இணைத்து சக்கரங்களைப் பொருத்தி உருவாக்கிய ஒரு சிறிய தேர் அவருக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது அண்ணன் அந்தத் தேருக்கு அருகில் சென்று தொட்டுப் பார்த்தான். அதன் வசீகரம் அவனைக் கவர்ந்தது. ‘இது என்ன விலை?’ என்று கேட்டான்.

‘பத்து வெள்ளி’ என்று பதில் சொன்னார் வியாபாரி.

‘மரத்தால் செய்யப்பட்ட சாதாரண தேர்தானே இது? சின்னப் பிள்ளைகள் வைத்து விளையாடுவதற்கு ஏற்ற தேர். அவ்வளவுதானே? இதற்கு ஏன் இந்த விலை?’

அதற்கு அந்த வியாபாரி சிரித்துக்கொண்டே ‘இது பார்ப்பதற்குத்தான் சாதாரணமான தேர் மாதிரி தெரியும். ஆனால் இந்தத் தேருக்கு ஒரு விசித்திரமான சக்தி இருக்குது. அதனால்தான் அந்த விலை’ என்றான்.

‘அப்படியா? என்ன சக்தி?’

‘உலகத்திலே இந்த மாதிரி செய்யப்பட்ட எல்லாத் தேர்களும் சின்னப் பிள்ளைகள் கூடி இழுத்து விளையாடக்கூடிய தேர்கள்தான். அந்த மாதிரியான தேர்களைத்தான் நீங்களும் இதுவரை பார்த்திருப்பீங்க. இந்தத் தேரையும் பிள்ளைகள் விளையாடக்கூடிய தேரா பயன்படுத்தலாம். ஆனால், அதையும் தாண்டி இந்தத் தேர் ஒரு வேலையைச் செய்யும். அதாவது, இந்தத் தேர் பலகையில உக்காந்துகிட்டு, நீங்க போகவேண்டிய இடத்தை மனசுல நெனச்சிகிட்டு ஒரு முக்கியமான மந்திரத்தைச் சொன்னா போதும். உடனே, அதே நிமிஷத்துல இந்தத் தேர் பறக்க ஆரம்பிச்சி உங்களை அந்த இடத்துல சேர்த்துடும். அதுதான் இந்தத் தேருடைய சிறப்பான சக்தி. அதனாலதான் அந்த விலை.’

‘அது என்ன மந்திரம்?’

‘நீங்க இந்தத் தேரை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்.’

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு இரண்டாவது அண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான். அக்கணமே இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தத் தேரை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். ‘ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க’ என்றான்.

இரண்டு அண்ணன்மார்களும் ஆளுக்கொரு பொருளை வாங்கிக்கொண்டதும் இளைய தம்பிக்கு தானும் இதே சந்தையில் அவர்கள் வாங்கியதைவிட சிறப்பான ஒரு பொருளைத் தேடி வாங்கவேண்டும் என நினைத்தான். சந்தையைச் சுற்றிச்சுற்றித் தேடினான். ஏதேனும் அபூர்வமான பொருள் பார்வையில் படுகிறதா என பார்த்துக்கொண்டே நடந்தான்.

ஒரு திருப்பத்தில் ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு நின்றார். அதன் வடிவமைப்பு மிகவும் விசேஷமாக இருந்தது. அவன் உடனே அதை வாங்கிவிட தீர்மானித்தான். அந்த வியாபாரியிடம் சென்று ‘இந்தக் கைத்தடி என்ன விலை பெரியவரே?’ என்று கேட்டான். அவர் உடனே ‘பத்து வெள்ளிப்பணம்’ என்றார். அந்தக் கைத்தடிக்கு அவர் சொல்லும் விலை மிக அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது. ‘இது சாதாரண கைத்தடிதானே? இதற்கு ஏன் இந்த விலை? இதை என்ன தங்கத்தாலயா செஞ்சிருக்காங்க?’ என்று கேட்டான்.

அந்த வியாபாரி அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே ‘இது தங்கத்தால செஞ்ச கைத்தடி இல்லைங்கறது உண்மைதான். ஆனால் தங்கத்தால கெடைக்கக்கூடிய நன்மையைவிட இந்த கைத்தடி அதிக நன்மையைச் செய்யும். அதனாலதான் அந்த விலை’ என்றார்.

‘அப்படி என்ன நன்மையைச் செய்யும்?’ என்று ஆர்வத்தோடு கேட்டான் இளைய தம்பி.

‘நீங்க பார்த்திருக்கிற கைத்தடியெல்லாம் புடிச்சி நடக்கறதுக்கு மட்டும்தான் பயன்படும். இந்தத் தடிக்கு அதுக்கு மேலயும் ஒரு பயன் உண்டு. யாராவது உங்களுக்கு வேண்டப்பட்டவங்க, உங்க மேல பிரியமா இருக்கிறவங்க ஏதோ ஒரு காரணத்தால தேள் கடியாலயோ, பாம்புக்கடியாலயோ, காலரா பேதியாலயோ செத்துட்டாங்கன்னு வைங்க, அப்ப இந்தத் தடியை வச்சி அவுங்கள காப்பாத்திடலாம்.’

‘அது எப்படி? செத்துப்போனவங்களை பொழைக்கவைக்கறதா? ஆச்சரியமா இருக்குதே.’

‘கழுதைப்பால்ல அஞ்சாறு சொட்டு கஸ்தூரி தைலத்தை கலந்து, அதுக்குள்ள இந்தக் கைத்தடி நுனியை வச்சி நனைச்சி எடுத்து, செத்துப் போனவங்க வாயைத் தெறந்து வாய்க்குள்ள விழறமாதிரி செஞ்சி, ஒரு மந்திரத்தை முணுமுணுக்கணும். உடனே, செத்துப் போனவங்க உயிரோடு எழுந்து உக்காந்துடுவாங்க.’

‘அது என்ன மந்திரம்?’

‘நீங்க இந்தக் கைத்தடியை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்.’

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு இளைய தம்பி மகிழ்ச்சியில் மூழ்கினான். அக்கணமே இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தக் கைத்தடியை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். ‘ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க’ என்றான்.

மூன்று சகோதரர்களும் தாம் வாங்கிய மூன்று சிறப்புப் பொருட்களோடு அத்தையின் ஊருக்குத் திரும்பி நடந்தனர்.

‘நாம ஊரைவிட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷமே முடியப் போவுது. நம்மால இப்பதான் நாம நினைச்சபடி பொருளை வாங்கமுடிஞ்சது. அத்தை ஊருல என்னென்ன நடந்ததோ, நம்ம அத்தை பொண்ணு எப்படி இருக்கறாளோ, எதுவுமே தெரியலை. என்கிட்ட இருக்கற கண்ணாடியில உலகத்துல என்ன நடக்கதுங்கற விஷயத்தை இருந்த இடத்துலேர்ந்தே தெரிஞ்சிக்கலாம். வாங்க, அந்த குன்று உச்சிக்குப் போய் நின்னு பார்க்கலாம்’ என்று சொன்னான் மூத்த சகோதரன்.

உடனே அனைவரும் அந்தக் குன்றின் உச்சியை நோக்கி நடந்தனர். அங்கே உயரமான ஒரு பாறை காணப்பட்டது. அதன் மீது கண்ணாடியைச் சாய்த்துவிட்டு, மூத்த சகோதரன் மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

சில நொடிகளில் கண்ணாடியில் காட்சிகள் தெரியத் தொடங்கின. முதலில் அத்தையின் வீட்டு முற்றமும் வாசலோரம் நின்றிருந்த மரங்களும் தெரிந்தன. முற்றத்தில் ஏராளமான உறவுக்காரர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அத்தையும் மாமாவும் ஒரு கட்டிலோரமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். கட்டிலில் அத்தை மகள் பிணமாகக் கிடந்தாள்.

அந்த நொடியே அங்கே நடப்பது என்ன என அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதையும் அத்தை மகள் இறந்துவிட்டதையும் அவர்கள் அக்கணமே புரிந்துகொண்டனர். அந்த அத்தை மகளைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்காகத்தானே இந்த அளவுக்குப் பாடுபட்டோம், அவள் இப்படி திடீரென இறந்துவிட்டால் எதிர்காலமே இருண்டுபோய்விடுமே என நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கினார்கள். எப்படியாவது ஊருக்குச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டுமே என அவர்கள் மனம் பரபரத்தது.

அப்போது இரண்டாவது சகோதரன் ‘கவலைப்பட வேண்டாம். நாம எல்லாருமே இந்தக் கணமே அங்கே போய் சேர என்னிடம் இருக்கற தேர் உதவும். தைரியமாக இருங்கள்’ என்று அமைதிப்படுத்தினான்.

‘என்னடா சொல்ற? மரத்தேருல எப்படிடா போகமுடியும்?’ என்று கேட்டான் மூத்த அண்ணன்.

‘ஆமாம்ண்ணே. நான் வாங்கி வச்சிருக்கிற தேருல அந்த வசதி இருக்குது. அதுதான் இதனுடைய சிறப்பம்சம்’ என்று பதில் சொன்னான் இரண்டாவது சகோதரன்.

இரு சகோதரர்களையும் தன்னுடைய தேரில் ஏறி உட்கார்ந்துகொள்ளச் சொன்னான். பிறகு அவனும் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான். மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

சில நொடிகளில் தேர் விண்ணில் பறக்கத் தொடங்கியது. மின்னல் வேகத்தில் மேகங்களைத் துளைத்துக்கொண்டு பறந்தது. சிறிது நேரத்துக்குள்ளேயே அவர்கள் பயணம் செய்த தேர் அத்தை வீட்டு முற்றத்தில் இறங்கியது.

தேரிலிருந்து இறங்கிய மூன்று பேரையும் பார்த்து அத்தையும் மாமாவும் ஓவென்று கதறிக்கதறி அழுதார்கள். அவர்கள் மூவரும் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அத்தை மகளை துயரத்தோடு பார்த்தார்கள். அவர்கள் விழிகளிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்தது.

‘நேத்து வரைக்கும் நல்லாதாம்பா இருந்தது. நேத்து ராத்திரி சாப்பிடற சமயத்துலகூட என்னம்மா போய்ட்டுவரேன்னு கெளம்பிப் போன மாமன்கள்ல ஒருத்தர்கூட திரும்பி வரலையேன்னு கேட்டா. காலையில தூங்கி எழுந்ததும் வாசலப் பெருக்கிட்டு சாணம் தெளிக்கறதுக்காக சாணத்தை எடுக்க தொழுவத்துக்குப் போனா. திரும்பி வரும்போது ஒரு தேள் கடிச்சிடுச்சி. ஓடிப் போய் வைத்தியரை அழச்சிட்டு வரதுக்குள்ள உயிரு போயிடுச்சிப்பா. மாமன கல்யாணம் கட்டிகிட்டு எப்படி எப்படியோ வாழணும்னு கனவு கண்டிருந்த பொண்ணு இப்படி சிலையாட்டம் பொணமா கெடக்கறாளே, பாருப்பா.’

அத்தையின் அழுகை அவர்களுடைய துக்கத்தை இன்னும் பல மடங்காகப் பெருக்கியது.

அப்போது இளைய தம்பி ‘யாரும் கவலைப்படாதீங்க. அவளைப் பொழைக்க வைக்கிற மருந்து என்கிட்ட இருக்குது’ என்று அனைவரையும் அமைதிப்படுத்தினான்.

எல்லோருடைய அழுகையும் சட்டென நின்றது. எல்லோருமே அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ‘உண்மையைத்தான் சொல்றேன். என் பேச்ச நம்புங்க’ என்றபடி அவன் தன்னிடம் இருந்த கைத்தடியை எடுத்தான்.

‘இந்தத் தடியை வச்சிகிட்டு எப்படி பொழைக்கவைக்க முடியும்’ என்று அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தோடு கேட்டனர்.

‘அதுதான் இந்தக் கைத்தடியுடைய சிறப்பு சக்தி. அதனாலதான் நான் இதை வாங்கிவந்தேன்’ என்றான் இளையவன். பிறகு ‘எனக்கு கொஞ்சம் கழுதைப்பாலும் கஸ்தூரி தைலமும் வேணும்’ என்று கேட்டான். உடனே ஆட்கள் ஓடினார்கள்.

கிழக்குத் திசையில் சென்றவர்கள் அங்கே தென்னந்தோப்புக்கு அருகில் மேய்ந்துகொண்டிருந்த கழுதையைப் பிடித்து நிறுத்தி பால் கறந்துகொண்டுவந்து கொடுத்தார். மேற்குத் திசையில் சென்றவர்கள் அங்கிருந்த வைத்தியரின் வீட்டுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லி கஸ்தூரி தைலத்தை ஒரு சின்ன புட்டியில் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

இரண்டும் வந்து சேர்ந்ததும் கஸ்தூரி தைலத்தை கழுதைப்பாலில் கலந்து நன்றாகக் கலக்கினான் இளையவன். கட்டிலுக்கு அருகில் சென்று கட்டிலின் காலடியில் புட்டியை வைத்தான். தன்னிடம் இருந்த கைத்தடியை எடுத்து, அதன் ஒரு நுனியை அந்தக் கரைசலில் நன்றாக நனைத்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

அடுத்து, அண்ணன்மார்களிடம் அத்தை மகளின் வாயைத் திறந்த நிலையில் பிடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். இரண்டு அண்ணன்களும் நகர்ந்து அத்தைமகளின் வாயைத் தொட்டு திறந்த நிலையில் அமைந்திருக்கும்படி பிடித்துக்கொண்டனர். அடுத்த கணமே கைத்தடியின் நுனியை உயர்த்தி அவளுடைய உதடுகளுக்கிடையில் வைத்து பால்துளிகள் வாய்க்குள் விழும் வகையில் பிடித்தான். நாலைந்து சொட்டுகள் அவள் வாய்க்குள் விழுந்தன.

அடுத்த நொடியே தூங்கி எழுபவளைப்போல விழிகளைக் கசக்கியபடி கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் அவள். அவள் உயிர்பெற்று எழுந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அத்தையும் மாமாவும் ‘ரொம்ப நன்றிப்பா. ரொம்ப நன்றி. சரியான நேரத்துல கடவுள் மாதிரி வந்து என் பொண்ண காப்பாத்திட்ட’ என்று சொன்னபடி இளையவனின் கையைப் பிடித்துக்கொண்டனர். துயரத்தில் மூழ்கியிருந்த வீடு ஒரு சில நொடிகளிலேயே மகிழ்ச்சி ததும்பும் வீடாக மாறியது.

கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வீட்டைவிட்டு வெளியேறினர். எல்லோரும் புறப்பட்டுச் சென்ற பிறகு, அத்தையும் மாமாவும் அத்தை மகளும் மட்டுமே அங்கே நின்றிருந்தனர். அத்தை தன் மகளைக் குளித்துவிட்டு வரச்சொல்லி திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

இளைய தம்பி பெருமை ததும்பிய முகத்துடன் அத்தையிடம் ‘அத்தை, இங்க பாருங்க. நான்தான் அவளைப் பொழைக்க வச்சேன். எனவே அவளை நீங்க எனக்குத்தான் திருமணம் செஞ்சிகுடுக்கணும்’ என்று சொன்னான்.

அதைக் கேட்டு இரண்டாவது அண்ணன் புன்னகைத்தபடி ‘அது எப்படி? அதுல ஒரு நியாயமும் இல்லையே. நாங்க எல்லோருமே பல நூறு மைல் தூரத்துக்கு அப்பால ஒரு ஊருல இருந்தோம். அவள் இறந்துபோன செய்தியைப் பார்த்ததுமே கண்ணைமூடி கண்ணைத் தெறக்கறதுக்குள்ள மின்னல் வேகத்துல நாங்க இங்க வந்து சேரறதுக்கு நான் வச்சிருந்த தேருதான் உதவியா இருந்தது. அவன் வேணும்ன்னா அவளை உயிர்பொழைக்க வச்சிருக்கலாம். ஆனால், உயிர்பொழைக்க வைக்க வசதியா சரியான நேரத்துக்கு எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தது நான்தான். அதனால அவளை நீங்க எனக்குத்தான் திருமணம் செஞ்சி குடுக்கணும்’ என்றான்.

அவன் சொல்லி நிறுத்தியதும் மூத்த அண்ணன் தொடங்கினான். ‘இங்க பாருங்க அத்தை. அவன் உயிர் பொழைக்கவச்சவனா இருக்கலாம். இங்க சீக்கிரமா வந்து சேர அவனுடைய தேர் உதவியா இருக்கலாம். நான் அதை மறுக்கலை. ஆனா, நாங்க எங்கோ கண்காணாத இடத்துல தொலைதூரத்துல ஏதோ ஒரு கிராமத்துல நடந்துட்டிருந்த சமயத்துல, இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுக்கு உதவியா இருந்தவன் நான். என்னுடைய கண்ணாடி இல்லைன்னா, இப்படி ஒரு மரணம் நிகழ்ந்ததே எங்களுக்குத் தெரியாம போயிருக்கும். நியாயப்படி அவளை நீங்க எனக்குத்தான் கல்யாணம் செஞ்சி வைக்கணும். எது செஞ்சாலும் யோசிச்சி செய்ங்க’ என்றான்.

மூன்று பேருடைய வாதங்களிலும் உண்மை இருந்ததால், அத்தையும் மாமாவும் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார்கள். எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பினார்கள். தற்சமயம் தொடரும் விவாதத்தை நிறுத்தும் வகையில் ‘அதைப்பத்தியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்கீங்க. முதல்ல குளிச்சிட்டு சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க. அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பத்தி பேசி முடிவெடுக்கலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். மூன்று பேரும் தங்குவதற்கு தனித்தனியாக அறைகளை ஏற்பாடு செய்தார்கள். அவர்களும் குளித்துமுடித்து திரும்பிய கையோடு சாப்பிட்டுவிட்டு களைப்பின் காரணமாக உறங்குவதற்குச் சென்றனர்.

அப்பாவும் அம்மாவும் மகளும் மனம் குழம்பிய நிலையில் வாசலிலேயே உட்கார்ந்து தமக்கு வந்திருக்கும் பிரச்சினையைப்பற்றி பல கோணங்களில் சிந்தித்து உரையாடிக்கொண்டிருந்தனர்.

இரண்டுமூன்று மணி நேரம் உரையாடல் நிகழ்த்திய பிறகும் அவர்களால் ஒருமித்த கருத்தை அடையமுடியவில்லை. அந்த நேரத்தில் வாசலில் ஒரு பெரியவர் வந்து நின்றார். காவி வேட்டி கட்டியிருந்தார். நீண்ட தாடியோடு நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்தார். காசி தரிசனத்தை முடித்துக்கொண்டு நடந்தே வருவதாகவும் ராமேஸ்வரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பசிக்கு உணவு கேட்டார். அத்தை அவரை திண்ணையிலேயே அமர வைத்துவிட்டு ஒரு வாழை இலையைப் பறித்து வந்து அவருக்கு உணவு பரிமாறினார்.

உண்டுமுடித்து எழுந்துவந்த பெரியவரிடம் மூவரும் ஆசி பெற்றனர். மூன்று பேருடைய முகத்திலும் கவலை படிந்திருப்பதைப் பார்த்த அவர் ‘நீங்க எல்லாருமே ரொம்ப சோகத்துல முழுகியிருக்கிற மாதிரி தெரியுதே? என்ன செய்தி? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க’ என்று கேட்டார். அவர்கள் தம் பிரச்சினையை அவரிடம் சுருக்கமாகத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டார் பெரியவர். அதே நேரத்தில் உறங்கி விழித்த மூன்று சகோதரர்களும் வெளியே வந்தனர். வந்திருப்பவரைப்பற்றி தெரிந்துகொண்டதும் அவர்களும் நெருங்கிவந்து பெரியவரின் காலைத் தொட்டு வணங்கினர். அவர்கள் சொன்னதையும் பெரியவர் கேட்டுக்கொண்டார்.

எல்லோரையும் வெளியே நின்று காத்திருக்கும்படி சொல்லிவிட்டு பெரியவர் அந்தப் பெண்ணிடம் பேசினார்.

‘ஐயா, யாராவது ஒரு ஆளைத்தான் என்னால திருமணம் செஞ்சிக்கமுடியும். இப்படி மூணு பேரும் வந்து நின்னா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்குதுய்யா’

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவள் அழுகை நீண்டுவிடாதபடி அவளை அமைதிப்படுத்திய பெரியவர் ‘சரி, நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேட்டுக்கோ. எதுவா இருந்தாலும் நீதான் முடிவெடுக்கணும். நான் ஒரு முடிவை நினைச்சி அதை உன் மேல திணிக்கிறதுல அர்த்தமே இல்லை’ என்று சொன்னார்.

‘சொல்லுங்க ஐயா’ என்றாள் அவள்.

‘எலும்பே இல்லாத ஒரு எருமை இருக்குது. கையே இல்லாத ஒருத்தன் வந்து அந்த எருமைகிட்ட பால் கறக்கறான். வாயே இல்லாத ஒருத்தன் அந்தப் பாலை வாங்கி மடமடன்னு குடிக்கிறான். இதைப்பத்தி நல்லா ஆழமா யோசிச்சி பார்த்துட்டு ஒரு முடிவை எடு.’

அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. கடகடவென அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவள் மட்டும் கதவை மூடிக்கொண்டு அறையிலேயே அமர்ந்து நீண்ட நேரமாக யோசனையில் மூழ்கியிருந்தாள்.

பொழுது சாய்ந்த வேளையில் அறையைவிட்டு வெளியே வந்தாள் அவள். முகம் கழுவி தலைசீவி பூமுடித்து திருத்தமான முகத்துடன் சமையலறைக்குச் சென்றாள். ஒரு தம்ளர் நிறைய பாலை ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அங்கே அவளுடைய பெற்றோரும் மாமா பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர்.

அவள் தம் மாமா பிள்ளைகள் முன்னால் சென்று தன்னிடம் இருந்த பால் தம்ளரை வைத்து ,’இந்தாங்க. மூணு பேரும் இந்த பாலை குடிங்க. ஆனா மூணு பேரும் ஒரே சமயத்துல, ஒன்னா குடிக்கணும். அதுதான் முக்கியமான ஒரே நிபந்தனை’ என்று சொன்னாள்.

மூன்று சகோதரர்களும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் முதலில் பார்த்துக்கொண்டனர். பிறகு அவள் பக்கமாகத் திரும்பி ‘மூணு பேரும் ஒரே சமயத்துல எப்படி பால் குடிக்கமுடியும்?’ என்று கேட்டனர்.

‘மூணு பேரும் ஒரே பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க நினைக்கிறது சரியான விஷயம்னு சொன்னா, மூணு பேரும் ஒரே தம்ளர்ல பால் குடிக்கறது மட்டும் எப்படி சரியில்லாத விஷயமாகும்’ என்று கேட்டாள் அவள். அவள் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பேசுவதற்கு வார்த்தையில்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘நீங்க மூனு பேரும் சேர்ந்துதான் என்னை காப்பாத்தியிருக்கீங்க. நான் இதோ இப்ப இங்க நின்னு பேசிட்டிருக்கறதுக்கு நீங்கதான் மூலகாரணம். இந்த உயிர் நீங்க கொடுத்தது. இது எனக்கு ரெண்டாவது ஜன்மம். நீங்க மூணு பேருமே எனக்கு ஒருவகையில பெத்தவங்களுக்குச் சமம். ஒரு அப்பாவும் பொண்ணும் கல்யாணம் செஞ்சிகிட முடியுமா? அப்படி எங்கயாவது இந்த உலகத்துல நடந்திருக்குதா? ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க.’

அவளுடைய கேள்விக்கு அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. சிலை போல அமைதியாக நின்றிருந்தனர்.

‘உங்கள்ல யாரையுமே என்னால திருமணம் செஞ்சிக்க முடியாது. தயவுசெய்து உங்களுக்குப் பொருத்தமான ஒரு பொண்ணைப் பார்த்து நீங்க கல்யாணம் செஞ்சிக்கணும்.’

அவள் சொல்லுக்கு மூன்று சகோதரர்களுமே கட்டுப்பட்டனர். அக்கணமே அவளிடமும் அத்தையிடமும் மாமாவிடமும் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.

அன்று இரவு சாப்பிடும் வேளையில் அவளுடைய பெற்றோர் அவளிடம் ‘எப்படிடி உனக்கு இந்த யோசனை வந்தது?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டனர். ‘எல்லாமே அந்தப் பெரியவர் சொன்ன யோசனைதாம்மா. அவர்தான் சரியான நேரத்துல கடவுள் மாதிரி வந்து அந்தக் குழப்பத்திலேர்ந்து விடுவிச்சார்’ என்றாள் அவள்.

‘அப்படி என்ன யோசனை சொன்னார்?’ என்று கேட்டாள் அவளுடைய அம்மா.

‘அவரு எதையும் நேரிடையா சொல்லலைம்மா. நாமே யோசிச்சி புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு புதிர் போல சொல்லிட்டுப் போயிட்டார்.’

‘அது என்ன புதிர்? தெளிவா சொல்லுடின்னா நீயும் புதிர் மாதிரி பேசறியே?’

‘எலும்பே இல்லாத ஒரு எருமை இருக்குது. கையே இல்லாத ஒருத்தன் வந்து அந்த எருமைகிட்ட பால் கறக்கறான். வாயே இல்லாத ஒருத்தன் அந்தப் பாலை வாங்கி மடமடன்னு குடிக்கிறான். இதைப்பத்தி நல்லா ஆழமா யோசிச்சி பார்த்துட்டு ஒரு முடிவை எடுன்னு சொன்னாரு.’

அவள் சொன்னதை இருவரும் தமக்குள் பலமுறை முணுமுணுத்துப் பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ‘என்னமோ விடுகதை மாதிரி இருக்குதுடி. ஒன்னுமே புரியலையே. நீ எப்படி புரிஞ்சிகிட்ட?’ என்று கேட்டாள் அம்மா.

அந்தப் பெண் அவர்களுக்குப் புரிகிற வகையில் விளக்கமாகச் சொன்னாள்.

‘அவர் சொன்ன சமயத்துல எனக்கும் எதுவுமே புரியலைம்மா. ஆனா யோசிக்க யோசிக்க எனக்கு எல்லாமே தெளிவா புரிய ஆரம்பிச்சிட்டுது. என்ன முடிவெடுக்கணும்ங்கறதைப் பத்தியும் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிட்டுது. எலும்பே இல்லாத எருமைன்னு சொன்னா வானத்துல இருக்கற மழைமேகம்னு அர்த்தம். காத்துதான் கையில்லாம பால் கறக்கற ஆளு. பூமிதான் வாயில்லாம அந்தப் பால குடிக்கிற ஆளு. மழை, காத்து, பூமி எல்லாமே சேர்ந்துதான் நமக்கு வாழ்க்கையைக் கொடுக்குது. ஒருவகையில நமக்கு பெற்றோர்கள் மாதிரி. மாமன் மகன்கள் மூணு பேருமே எனக்கு உயிர் கொடுத்த பெற்றோர்கள் மாதிரி. அவுங்க இல்லைன்னா எனக்கு இந்த மறுபிறப்பே கிடையாது. பெரியவர் கொடுத்த விளக்கத்தை அடிப்படையா வச்சித்தான் என்னால எந்தக் குழப்பமும் இல்லாம ஒரு முடிவை எடுக்கமுடிஞ்சது.’

மகளின் புத்திசாலித்தனத்தை நினைத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெருமையாக இருந்தது.

‘நான் எடுத்த முடிவு பெரிய விஷயம் இல்லைம்மா. அது சரியான முடிவுதான்னு புரிஞ்சிகிட்டு அமைதியா திரும்பிப் போனாங்களே, அவுங்க எடுத்த முடிவுதான் முக்கியமான முடிவு. நாம அவுங்களைத்தான் மனசாரப் பாராட்டணும்.’

அம்மா தன் அண்ணன் மகன்களையும் அண்ணன்களையும் ஒரே சமயத்தில் நினைத்துக்கொண்டாள். அவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு appeared first on கிழக்கு டுடே.

❌