தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் வழங்கும் ஆய்வு உதவித்தொகை பற்றிய விவரங்களைப் விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை முடிந்த பின்னர், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனத்தின்கண் விரியும். முனைவர் பட்டம் படிக்கலாமா என்ற யோசனை அகத்தினூடே எட்டிப் பார்க்கும் பொழுது, பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்ற எண்ணம் அதனைத் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போடும்.
‘இன்னும் எத்தனை வருஷம்தான் படிப்ப? வேலைக்குப் போற எண்ணம் இல்லையா? பணம் சம்பாதிக்காமல் என்ன பண்ற?’ போன்ற கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மீது வளைத்து வளைத்துத் தொடுக்கப்படும் கணைகளாகும்.
ஆய்வுத்தேடலுக்கான செலவினங்களுக்கும், முனைவர் பட்டம் பயிலும் போது ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் நிவர்த்திச் செய்து கொள்ளவும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அவசியமாகிறது. அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதனை ஒப்பிடும் போது, கலைப்புல ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையும் குறைவு; நிறுவனங்களும் குறைவு.
தமிழ் ஆய்வு மாணவர்கள் பெரும்பாலானோர் JRF மட்டும்தான் ஆய்வு உதவித்தொகை என்ற எண்ணம் பூண்டுள்ளனர். JRF- க்கு இணையான உதவித்தொகை வழங்கும் பல நிறுவனங்கள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுலகில் உள்ளன.
தமிழில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோர் ஏதேனும் ஓர் உதவித்தொகையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தைத் தார்பரியமாகக் கொண்டு, ஆய்வு உதவித்தொகை வழங்கும் சில நிறுவனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
1) UGC NET – JRF
பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1989-ம் ஆண்டுமுதல் தேசிய தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு இரண்டு தாள்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தாள் 1 பொதுத்தாள். இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பாடம் சார்ந்தது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். Cut off மதிப்பெண்கள் அடிப்படையில் NET தேர்ச்சி பெற்றவர்களும் , JRF தேர்ச்சி பெற்றவர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.
JRF பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆய்வு உதவித்தொகையாக 37,000 ரூபாயும், HRA-க்காக குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகிறது. இதர செலவினங்களுக்கு (contingency) ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பின்பு, SRF தகுதி உயர்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.
தேசிய தகுதித் தேர்வில் JRF கட் ஆப்பை நூலிழையில் நழுவ விட்டவர்களுக்கு NFOBC, NFSC பெல்லோசிப்கள் வழங்கப்படுகின்றன. தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் NFOBC, NFSC தகுதிப் பட்டியல்கள் வெளியாகின்றன. இத்தொகையும் JRF-SRF -க்கு நிகரான உதவித் தொகையைக் கொண்டது.
2) ICSSR – ஆய்வு உதவித்தொகை
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) சமூக அறிவியல் துறைகளில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோருக்கு மாதம் ரூ.20,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும், இதர செலவினங்களுக்காக (contingency) ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.
ICSSR உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெளியாகின்றன. விண்ணப்பதைப் பூர்த்திச் செய்து பதிவு செய்தால் போதும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சில மாதங்களில் ICSSR தளத்தில் வெளியாகும்.NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மைசூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் யுஜிசியின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயில்பவர்களுக்கு மாதம் ரூபாய் 20,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 தருகிறது.
அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 30 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய மொழிகள் துறைகளின்கீழ் அடங்கும் குறிப்பிட்ட சில புலங்களை மொழி நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ளது.இப்புலங்களில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயிலும் பெண் ஆய்வாளர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு இத்திட்டம் பொருந்தும். ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குடும்பத்தில் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது. JRF-SRF க்கு இணையான தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
5) மத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வு உதவித்தொகை (CURF)
இந்திய அளவிலான மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 8,000 வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்து ஆண்டுகள்.
பல்கலைக்கழக அளவிலான தகுதித் தேர்வின் மூலமாகவும், தேசியத் தகுதித் தேர்வின் மூலமாகவும் இந்த உதவித் தொகை பெற ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(நன்றி – திரு.விக்னேஷ், ஆய்வு மாணவர்)
6) முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை (CMRF)
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகையினை அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகளில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் (TRB)நடத்துகிறது.
இந்த உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கலைத் துறைகளில் 60 மாணவர்களும், அறிவியல் துறைகளில் 60 மாணவர்களும் வழங்கப்படுகிறது.கலைத்துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும், அறிவியல் துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் இதரச் செலவினங்களுக்காக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
மேலும், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
7) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT)
செவ்வியல் இலக்கண-இலக்கியங்கள் அல்லது அதனோடு தொடர்புடைய புலங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு, மாத உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு இரண்டாண்டுகள். இதர செலவினங்களுக்கான தொகை ஆண்டுக்கு ரூபாய்.18,000.
இந்திய அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முனைவர்பட்டம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல்-மே மாதங்களில் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தளத்தில் வெளியாகின்றன.
அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 50 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறை செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் முனைவர் பட்டம் பயில மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
முனைவர் பட்டம் பதிவு செய்த முதல் ஆறுமாதங்களுக்கு மாதம் 20000 வீதம் ஆய்வு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 25,000 ஆகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 30000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.
(நன்றி – திரு.பிரதீப், ஆய்வு மாணவர் )
9)SRM பல்கலைக்கழகம்
SRM பல்கலைக்கழகம் காட்டங்குளத்தூரில் தமிழ் ஆய்வுத்துறை இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிப்போருக்கு மாதம் ரூ.31,000 வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.
(நன்றி – திரு.கமலக்கண்ணன், உதவிப் பேராசிரியர்)
மௌலானா ஆசாத் ஆய்வு உதவித் தொகை, ராஜீவ்காந்தி தேசிய உதவித் தொகை போன்ற திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மத்திய அரசால் கைவிடப்பட்டன.
மேற்சொன்னவை தவிர, தமிழ்நாடு அளவிலான பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. இவற்றை ஆய்வு மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுதல் இன்றியமையாதது.
ஆய்வாளர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வணிக நோக்கத்தை மட்டுமே தார்பரியமாகக் கொண்டு செயல்படுவதால் “அரிமாநோக்கு” இதழில் பல குளறுபடிகள் நடந்தேறியுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC), கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் Consortium for Academic and Research Ethics (CARE) என்ற அமைப்பை உருவாக்கியது. பல்கலைக்கழக, கல்லூரி அளவில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்தவும், இதழ்களின் மோசடிகளைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு(CARE) துறை வாரியாகக் குறிப்பிட்ட சில இதழ்களுக்கு மட்டும் “UGC- CARE இதழ்கள்” என்ற அங்கீகாரம் வழங்கியது.
பல்கலைக்கழகங்களிலும் உறுப்புக் கல்லூரிகளிலும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் CARE இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற முறை சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. தற்போது ISSN எண் கொண்ட ஆய்விதழில் கட்டுரை வெளியிட்டால் போதும் என நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், இன்றளவும் சில தனியார் கல்லூரிகள் NIRF தகுதியை மேம்படுத்திக் கொள்ள, UGC CARE இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என ஆய்வு மாணவர்களை நிர்பந்திக்கின்றனர்.
தமிழ்ப் பாடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட UGC CARE இதழ்களாக அரிமா நோக்கு, காலச்சுவடு, உங்கள் நூலகம், பெயல், மணற்கேணி, வரலாறு, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், தமிழியல் (journal of tamil studies) போன்றவை உள்ளன.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த 2007 முதல் அரிமாநோக்கு இதழானது வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது, அரிமாநோக்கு என்ற பெயரில் ஒரே பதிவெண்ணைக் கொண்ட(ISSN) மூன்று இதழ்கள் உலாவுவதால், எது உண்மை? எது போலி? என்பது புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பியுள்ளனர்.
எனவே, அரிமாநோக்கு பெயரில் வரும் இதழ்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டினோம்.
இந்த இணைய இதழ் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர். இந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிடுவதற்கு ரூபாய் 3300 பெறப்படுகிறது.
2023ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 2025 வரை 214 கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஒரு கட்டுரைக்கு 3300ரூ. என்ற கணக்குப்படி பார்த்தால், இதுவரை 7,06,200 ரூபாயை போலி இதழைக் கொண்டு மோசடி செய்து கல்லா கட்டியுள்ளனர்.
இந்த இதழ் போலி என்று தெரிந்தும் சில பேராசிரியர்கள், கல்லூரியில் தங்களது பெயரை நிலை நாட்டிக் கொள்ளத் தெரிந்தே வலையில் விழுந்திருக்கின்றனர். இந்தப் போலி இதழில் பணத்தைக் கட்டி கட்டுரையை வெளியிட்டு விட்டு, “UGC CARE” இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளேன் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த இதழ்தான் உண்மை என நினைத்து பணத்தைக் கட்டி ஏமாந்து, ஆய்வேட்டை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் பல ஆய்வாளர்கள் தவிக்கின்றனர்.
UGC தற்பொழுது இந்த இதழை Cloned journal பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், இன்றளவும் இதில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கின்றன.
பன்னிருகை வடிவேலன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“அரிமா நோக்கு இதழுக்கான ISSN எண் என் பெயரில்தான் உள்ளது. இது தொடர்பான விவரங்களை என்னுடைய இணையத்தில் பதிவிட்டுள்ளேன். இதழ் தொடர்பாக UGC-க்கும் எனக்கும் தகவல்தொடர்பு உள்ளது. இதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன” என்றார்.
இந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிட ரூபாய் 3000 வாங்குகின்றனர். நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் 57 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
ஈரோடு தமிழன்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஜெயதேவன் அவர்களை இணையாசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.
இணையாசிரியர் ஜெயதேவன் அவர்களிடம் பேசுகையில், “பன்னிருகைவடிவேலன் என்னிடம் முனைவர் பட்டம் பயின்றவர்தான். நம்ம மாணவர் என்று நம்பி அவர் பெயரில் இதழுக்கு ISSN எண் வாங்கினோம். பண விஷயத்தில் அவர் குளறுபடி செய்ததால் இதழ் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி விட்டோம். அவர் சமீபத்தில் தனியாக ஒரு இணையதளம் தொடங்கி அரிமாநோக்கு பெயரில் வெளியிட்டு வருகிறார். அரிமாநோக்கு இதழை நான்தான் UGC CARE- ல் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவுசெய்தேன். UGC-யிடம் நாங்கள் வழங்கிய ஆசிரியர் குழு பெயர் விவரத்தில் அவர் பெயர் இல்லை. ஜெராக்ஸ் கடையில் கட்டுரைகளை ஜெராக்ஸ் எடுத்து, அட்டைப் படத்தை மட்டும் கலர் ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்” என திகைக்கவைக்கும்படி சொன்னார்.
மேலும், “எங்களுடைய இதழில் வாழ்நாள் சந்தாதாரருக்கான தொகை ரூபாய் 5000. இத்தொகை செலுத்தியவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டுரை அனுப்பலாம். ஒரு கட்டுரைக்கெனத் தனியாகப் பணம் வாங்கப்படுவதில்லை. அரிமா நோக்கு இதழுக்கு ஈரோடு தமிழன்பன் ஆசிரியர். நான் இணை ஆசிரியர். எங்களுடையது தான் உண்மையான இதழ். பன்னிருகை வடிவேலனின் இச்செயல் தொடர்பாக வழக்கறிஞரை நாடியுள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக இதழின் முதன்மை ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களிடம் கேட்ட போது, “அரிமாநோக்கு இதழானது கடந்த 2007இல் இருந்து எனது தலைமையில், ஜெயதேவன் அவர்களை இணையாசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது” என்றார்.
இங்ஙனம், ஆசிரியருக்கும் – மாணவருக்கும் இடையேயான அரசியலில் சிக்கித் தவிக்கிறது ஆய்வாளர்களின் எதிர்காலம். ஆய்வாளர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வணிக நோக்கத்தை மட்டுமே தார்பரியமாகக் கொண்டு செயல்படுவதால் “அரிமாநோக்கு” இதழில் இப்படிப் பல குளறுபடிகள் நடந்தேறியுள்ளன.
இதழின் ISSN எண் ஒருவரிடத்திலும், இதழ் ஆசிரியர் குழுப்பொறுப்பு வேறொருவரிடத்திலும் உள்ளதால் எது உண்மை என்பது புரியாமல் குழம்பியுள்ளனர் ஆய்வாளர்கள். ஆயிரங்களைக் கொட்டியும் சரியான இதழில் கட்டுரைகளை வெளியிட முடியாமல், ஆய்வாளர்கள் திண்டாடுவதை UGC கவனத்தில் கொண்டு, அரிமாநோக்கு பெயரிலான போலிகளைக் களைந்து, உண்மையான இதழைத் தெளிவுபடுத்துதல் அவசியமாகிறது.