Normal view

Received before yesterday

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும்

 

அஞ்சலி

எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும் ---

உதயசங்கர்




1970-80 களில் அதுவரை கண்டிராதவகையில் கோவில்பட்டியில் அன்றாடம் புதிய புதிய கலை இலக்கியப் பண்பாட்டு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த காலம்.. உலகப்புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியரும் கம்யூனிஸ்டுமான பிக்காசோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாட்டிலேயே கோவில்பட்டியில் கொண்டாடினோம். குவெர்னிகா, சமாதானப்புறா, போன்ற புகழ்பெற்ற அவருடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தி கோவில்பட்டியில் ஒரு புதிய இளைஞர் கூட்டம் கலை இலக்கியக்களத்தில் உருவாகியிருப்பதை அறிவித்த நிகழ்வு எனலாம். கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்ற முன்னோடிகளைப் பின்பற்றி கோவில்பட்டியில் நவீன கலை இலக்கியக்களத்தில் இறங்கியிருந்தோம். கார்ட்டூன் கண்காட்சி, யுத்த எதிர்ப்புக்கண்காட்சி, உலக சமாதானக்கண்காட்சி, என்று கண்காட்சி வடிவத்தை அரசியல் வடிவமாக்கி வெகுமக்களிடம் கொண்டு செல்வதில் கோவில்பட்டி இளைஞர்களுக்குப் பெரும்பங்குண்டு. குறிப்பாக எங்களுடைய பள்ளி, கல்லூரித்தோழர், ஓவியர்.மாரீஸ் தான் அத்தகைய புதுமைகளைச் செய்தவர். அந்த இளைஞர் படையில் எங்கள் அன்புக்குரிய சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் முன்னணியில் இருந்தார்.

கடந்த 16-03-25 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும், கதைசொல்லியும், உள்ளூர் வரலாற்றாய்வாளருமான தோழர்.இரா.நாறும்பூநாதன் தன்னுடைய 64 ஆவது வயதில் இயற்கையில் கலந்து விட்டார். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இராமகிருஷ்ணன்சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்த இரா.நாறும்பூநாதன் திருநெல்வேலியில் மறைந்த போது நெல்லை மாநகரமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. மாநிலம் முழுவதுமிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும், டி..ஜி, உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

நெல்லையில் உள்ள அத்தனை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும், குழந்தை எழுத்தாளர்களும் கண்ணீர் சிந்தினார்கள். வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் என்று தொழிற்சங்கங்கள் தங்கள் இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆளுமை மறைவின் போதும் நமக்குக் கற்றுக் கொள்ள சில செய்திகளை விட்டுச் செல்கிறார்கள். அந்த செய்திகளை அறிந்து கொள்வதும் அதைப் பின்பற்றுவதுமே நாம் அந்த ஆளுமைக்குச் செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

பள்ளிக்காலம் தொட்டே நாறும்பூநாதன் வாசிப்பில் ஆர்வமாக இருந்ததற்கு அவருடைய தந்தையார் தமிழாசிரியராக இருந்ததும், மூத்த சகோதரர்களான தோழர்.ஆர். எஸ்.மணியும் தோழர். ஆர்.குமரகுருபரனும் இடதுசாரிகளாக இருந்ததும் முக்கியக்காரணம்.. ஆரம்பக்கல்வி முடிந்து கோவில்பட்டிக்கு குடிவந்து கல்லூரி முடிக்கும் காலம் வரை கோவில்பட்டி என்ற இலக்கிய நகரம் அவருடைய ஆளுமையை உருவாக்கியதில் மிக முக்கியமான பங்கு வகித்தது. எப்போதும் வீட்டில் புத்தகங்களுடன் புழங்கிக் கொண்டேயிருந்ததால் அவருடைய சமவயது பிள்ளைகளை விட அதிகமான அறிவுக்கூர்மையும், கலைத்திறனும் ஓவியத்தில் ஆர்வமும் வாய்க்கப் பெற்றவராக இருந்தார் நாறும்பூ நாதன். நண்பர்களுடன் பேசும்போது புத்தகங்கள், கதைகள், செய்திகள், என்று உரையாடியதின் விளைவாக நண்பர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக மாற்றினார். பொதுநூலகத்தில் சந்திப்பதும் வாசிப்பதும் விவாதிப்பதும் தொடர்ந்தது. தனக்குக் கிடைத்த அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிற பெருங்குணம் நாறும்பூநாதனுக்கு பாலிய காலத்திலேயே இருந்தது. அதனால் தான் கல்லூரிக்காலத்தில் கையெழுத்துப்பத்திரிகை தொடங்கி அதில் நண்பர்களை எழுத வைத்து அழகு பார்த்தவர் நாறும்பூநாதன். அதனால் தான் 1970-கள்  காலத்தில் உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி தொட்டு இப்போது 2020 - களில்  இளம் எழுத்தாளர் ஆர்.சூடாமணி வரை எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.

1980-களில் அப்போது கோவில்பட்டியிலிருந்த எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், தேவதச்சன், கௌரிஷங்கர், சுவடி, வித்யாஷங்கர், ஓவியர்.மாரீஸ், இப்போது திரைக்கலைஞராக இருக்கும் சார்லி என்ற மனோகர், சாரதி, முத்துச்சாமி, உதயசங்கர், திடவை பொன்னுச்சாமி, ராம், அப்பாஸ், ஜோதிவிநாயகம், தமிழ்ச்செல்வன், கோணங்கி, அப்பணசாமி, போன்ற எழுத்தாளர்களுடனும் கலைஞர்களுடனும் சேர்ந்து தர்சனா என்ற நாடகக்குழுவிலும், சிருஷ்டி என்ற நாடக்குழுவிலும் பங்கேற்றார்.

அந்தக்காலத்தில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தினமும் எழுத்தாளர்களின் உரையாடல்களைக் கேட்க நட்சத்திரங்களும் காத்துக் கொண்டிருந்தன. காரசாரமான விவாதங்களையும், விமரிசனங்களையும், உரையாடல்களையும் கரிசலின் சூடான காற்று கோவில்பட்டி நகரெங்கும் கொண்டு சேர்த்தது. அத்துடன் தோழர்கள் தேவப்பிரகாஷ், சுவடி, பாலு, ஜவஹர், இசக்கிமுத்து, ஆகியோருடன் அரசியல் விவாதங்களையும் தத்துவ உரையாடல்களையும் நடத்தவும் செய்தார் நாறும்பூநாதன்.

1981- ஆம் ஆண்டு வங்கிப்பணியில் சேர்ந்ததிலிருந்து வங்கி ஊழியர் சங்கத்தில் தோழர்.பால்வண்ணம் தலைமையில் தொழிற்சங்கப்பணிகளில் தீவிரமாக இயங்கவும், இடது சாரி இயக்கங்களில் பங்கெடுத்தார். 1986-ல் நெல்லைக்கு மாற்றலாகிப் போனபிறகு அவருடைய ஆளுமை பன்முகங்களில் ஒளிவீசியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச்செயலாளராகப் பொறுப்பேற்று நெல்லையில் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தினார். 1990 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15, 16, 17, ஆகிய தேதிகளில் நெல்லையில் நடந்த தமுஎசவின் ஐந்தாவது மாநில மாநாட்டின் பொருளாளராக இருந்தார் நாறும்பூநாதன். பல வகைகளில் அந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மாநாடு. தெருக்கூத்துக்கலைஞர் ஓம் முத்துமாரி, சு.வெங்கடேசன், கவிஞர்.லட்சுமிகாந்தன், பவா.செல்லத்துரை போன்ற ஆளுமைகள் பங்கேற்ற முதல் மாநாடு. நான்கு நாட்களும் கலை இரவுகள் நடந்த மாநாடு. முதன்முதலாக கிராமியக்கலைஞர்கள் பங்கெடுத்த மாநாடு. நெல்லை மாநகரத்தையே ஜோல்னா பையர்களின் நகரமாக்கிய மாநாடு. அந்த மாநாட்டின் வெற்றிக்குப் பின்னால் நாறும்பூநாதனின் கடுமையான உழைப்பு இருந்தது.

அதன்பிறகு தமுஎகச வில் மாநிலக்குழு உறுப்பினராக, மாநிலச்செயற்குழு உறுப்பினராக, மாநிலத்துணைச்செயலாளராக, மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தார். அமைப்பை உருவாக்குவதிலும், அமைப்பைத் தொடர்ந்து இயங்கவைப்பதிலும் கவிஞர்.கிருஷியுடன் சேர்ந்து அயராது முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

நெல்லையில் இருந்த தொ.மு.சி.ரகுநாதன், தி..சி., டேவிட் பாக்கியமுத்து, ஆர்.எஸ்.ஜேக்கப் வண்ணதாசன், சுகா, போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் அன்றாடம் பேசிப்பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி வந்த பண்பாட்டு ஆய்வாளர். தொ.. வுடனான நட்பு அவருக்குள் புதிய படைப்புப்பொறிகளைத் தூண்டி விட்டது.

வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வில் வெளிவந்த பிறகு அவருடைய இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. முழுமையாக ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, படைப்பாளியாக, ஒருங்கிணைப்பாளராக, இளம் எழுத்தாளர்களின் நிழற்பந்தலாகப் பரிணமித்தார் நாறும்பூநாதன். அவர் தடம் பதித்த எல்லாத்துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினைச் செய்தார்.

அவர் கிட்டத்தட்ட ஐம்பது சிறுகதைகளை எழுதியுள்ள நாறும்பூநாதனின் ஆரம்ப கால கதைகளில் எளிய மனிதர்களே வலம் வருகிறார்கள். தன்னந்தனியாக தன் வாழ்வைத் தானே விலகி நின்று பார்க்கும் ஆச்சிகளும், பழைய வாழ்க்கைக்கும் புதிய மாற்றத்துக்குமிடையில் ஊசலாடும் மனிதர்களும், அங்கீகாரத்துக்காக ஏங்கித் தவிக்கும் கலைஞர்களும், மூச்சுக்காற்றாய் வாசிப்பை நேசித்து அகாலமரணமடைந்து தன் தாயின் வழியே வாசிப்பைத் தொடரும் அபாக்கியசாலிகளும், வேலையில்லாமல் நாளையும் பொழுதையும் எரிச்சலில் கழிக்கும் இளைஞர்களும், தன் கையெழுத்தைத் தானே போடமுடியாத தமிழாசிரியர்களும், அப்பாக்கள், அம்மாக்கள், குழந்தைகளுமாய் நாறும்பூநாதனின் கதைகளில் உலவுகிறார்கள். வீடும் குடும்பமும் முக்கியக்களன்களாகத் திகழ்கின்றன. பாலியத்தின் சுவடுகளைப் பின்பற்றி நிறையக் கதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்.

அவருடைய மரத்துப்போன சொற்கள் என்ற கதைத்தொகுப்பின் கதைகள் மிகுந்த கலையமைதியும் ஆழமும் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. நெல்லை வட்டாரமொழியில் மிக எளிதாக வாசகர்களைக் கட்டிப் போடும் திறன் பெற்றிருந்தாரெனலாம். தமிழ்ச் சிறுகதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்க வைத்திருக்கிறார். தட்டச்சுக்காலக்கனவுகள் என்ற குறுநாவலையும் வெளியிட்டிருக்கிறார்.

முகநூல் என்ற சமூக ஊடகத்தில் முதலிலிருந்தே அனுபவப்பதிவுகள், பழைய கால நினைவுகளின் துளிகள், வரலாற்றுச்செய்திகள், இதுவரை யாரும் கவனித்திராத சாமானியர்களின் விசித்திரங்கள், கண்டுகொள்ளப்படாத சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களென்று பல்வேறு வகைமைகளில் நாறும்பூநாதன் எழுதிக் கொண்டு வந்தார். அந்தப் பதிவுகளைத் தொகுத்து கண்முன்னே விரியும் கடல் என்ற தலைப்பில் இலக்கிய உலகில் முதன்முறையாக நூலாகக் கொண்டு வந்தவர் நாறும்பூநாதன். பிறகு யானைச்சொப்பனம் என்ற நூலையும் கொண்டு வந்தார். தமிழ் நாட்டில் முதலும் முடிவுமாக முகநூல் நண்பர்களின் சந்திப்பை, “ தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர் நாறும்பூ நாதன்.

அதன்பிறகு வேணுவன மனிதர்கள், பரணி வாசம், கனடா பயணம், திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். அதில் குறிப்பாக திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூல் திருநெல்வேலியின் கடந்த கால வரலாற்று முக்கியத்துவத்தையும் சாதனைகளையும் காத்திரமாகப் பேசி நூல். அந்த நூலுக்காக 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை .வே.சா. விருதை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

வங்கியில் பணிபுரியும் போது வங்கி ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 1,  ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 2, கடன் எத்தனை வகைப்படும்? ஒரு தொழிற்சங்கப்போராளியின் டைரிக்குறிப்புகள் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

மெல்ல மெல்ல நெல்லையின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் சரித்திர ரகசியங்களையும், தூசி படிந்து, அழுக்கடைந்து யாரும் கண்டுகொள்ளாத அல்லது கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வெளிச்சம் பாய்ச்சினார். சாராள் டக்கர் கல்லூரி, சுலோசன முதலியார் பாலம், கிளாரிந்தா அல்லது பாப்பத்திக்கிணறு, பார்வையற்றோருக்கான முதல் பள்ளி, செவித்திறன் குறைந்தோருக்கான முதல் பள்ளி, பாரதியாரின் அப்பா சின்னச்சாமி ஐயரின் பெதப்புரம் ஸ்பின்னிங் மில்  என்று தொடர்ந்து எழுதியெழுதி நெல்லையைப் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் நாறும்பூநாதனிடம் கேட்டால் போதும் என்ற அளவுக்கு நெல்லையின் அடையாளமாக உயர்ந்தார்.

உள்ளூர்ச்சமூகத்துடன் இப்படித் தொடங்கிய உரையாடல் அவரைத் தமிழகமெங்குமுள்ள பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அறிமுகப்படுத்தியது. புத்தகக்கண்காட்சி நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல புதுமையான முன்மாதிரியான இன்னும் சொல்லப்போனால் சென்னை புத்தகக்கண்காட்சியிலேயே செய்யத்துணியாத பல காரியங்களை முன்னெடுத்தவர் நாறும்பூநாதன்.

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க புத்தகக்கண்காட்சி நடைபெற்ற பத்து நாட்களும், இருபத்திநான்கு மணி நேரமும் மாணவர்கள், வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள், பார்வையற்றோர் வரை ஒரே இடத்தில் தொடர்ந்து வாசித்த நிகழ்வானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிகழ்வாக மாறியது.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருதுகளில் மூன்றில் ஒரு பங்கு விருதுகள் நெல்லை மாவட்ட எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்துக் கொண்டுமிருக்கிறது. அந்த எழுத்தாளர்களை தினமும் மரியாதை செய்யும் நிகழ்வையும், அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தையும் அவர்களைப் பற்றிய கண்காட்சியையும் ஏற்பாடு செய்ய வைத்தவர் நாறும்பூநாதன்.

புத்தகக்கண்காட்சி மேடைகளில் நினைவுப்பரிசாக நெல்லை மாவட்டத்தின் கலைச்சின்னங்களையே வழங்கும் யோசனையைச் சொன்னதோடு மட்டுமில்லாமல், கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி மலையில் நெல்லை மாவட்ட விலங்கான வரையாடு சிலை கம்பீரமாக நின்று கொண்டிருக்க வழிசெய்தவர் நாறும்பூநாதன்.

புத்தகக்கண்காட்சி நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தமிழ் எழுத்தாளர்களை உரையாட வைக்கவும், அவர்களைக் கொண்டு பயிலரங்குகளை நடத்தவும் திட்டமிட்டவர் நாறும்பூநாதன்.

நவீன நாடகங்களை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியதும், சிறார்களுக்கான திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்ததும் நாறும்பூநாதன் தான். இப்படி எல்லாவகையிலும் முன்மாதிரியாகப் புத்தகக்கண்காட்சியை நடத்துவதில் முனைப்புடன் இருந்தது மட்டுமல்ல அதற்காக உடல்நலனையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்தவர் நாறும்பூநாதன்.

நெல்லைமாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துகிற நோக்கில், ஒரு நூற்றாண்டு கால நெல்லை மாவட்டச்சிறுகதைகளைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலக்கவிதைகள், ஒரு நூற்றாண்டு காலக்கட்டுரைகள், பெரிதினும் பெரிது கேள் என்ற சிறார்களுக்கான நூல் என்று தொகுப்பு நூல்களைத் தொகுத்து மாநிலத்துக்கே முன்மாதிரியாகச் செய்தவர். இப்போது அதைத் தொடர்ந்து விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இத்தகைய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்களென்றால் நாறும்பூநாதனின் இலக்கிய அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள முடியும். 

எப்போதும் இலக்கியத்தை முன்னிறுத்துபவராக, எல்லோரையும் பங்கெடுக்க வைப்பவராக, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மீது பேரன்பு கொண்டவராக இருந்தவர் நாறும்பூநாதன்.

பொதுவெளியிலும் ஒரு இடதுசாரியாகத் தன்னுடைய சமூகக்கடமையைச் செய்தார். ஆட்டோ டிரைவர் கோபி கொலைசெய்யப்பட்ட துயரமான சம்பவத்துக்குப் பிறகு நிர்க்கதியாக நின்ற அவருடைய குடும்பத்துக்கு குடும்பநல நிதி சேகரிப்பதில் முன்னின்றவர். அந்தக் குழந்தைகளின் கல்விக்காக உதவிகள் செய்தார்.

பரியேறும்பெருமாள் திரைப்படத்தில் நடித்த கணியான் கூத்துக்கலைஞர் தங்கராஜ் அவர்களுக்கு தமுஎகச நாட்டுப்புறக்கலைச்சுடர் விருது வழங்கிய போது அவரைத் தேடிச் சென்ற நாறும்பூநாதன் வீடின்றி தவித்த தங்கராஜின் நிலை கண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு அவருக்கு புதிதாக வீடு கட்ட அரசு உதவி பெற்றுக் கொடுத்தார். அத்துடன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த அவருடைய மகளுக்கு ஆட்சியர் அலுவலகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார்.

நாங்குநேரியில் சாதிவெறி காரணமாக சின்னத்துரை என்ற மாணவன் சகமாணவர்களால் வெட்டப்பட்ட கொடூரம் நடந்தபிறகு நாறும்பூநாதன் அவனைச் சந்தித்து ஆறுதல் கூறி வேண்டிய உதவிகள் செய்ததோடு, திருநெல்வேலியில் வீடு பார்த்துக் கொடுத்து அவன் பள்ளியில் சேர்வதற்கும் உதவிகளைச் செய்தவர். அதுமட்டுமல்ல வீட்டு வாடகையையும், பள்ளிக்கல்விச் செலவையும் செய்தார்.

இப்படி இலக்கியவாழ்விலும் பொது வாழ்விலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நாறும்பூநாதன் என்ற ஆளுமை. ஒற்றுமை, ஒருங்கிணைந்த தன்மை, அனைவரையும் சமமாகப் பாவித்தல், அக்கறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தமிழ்ச்சமூகத்தை அறிவுச்சமூகமாக மாற்றுவதற்கான முன்முயற்சிகள், என்று தான் வாழ்ந்த நகரத்திலுள்ள பொதுச்சமூகத்துடன் உரையாடிக் கொண்டேயிருந்தவர் நாறும்பூநாதன் என்றால் மிகையில்லை. சமூகத்துக்காக, இலக்கியத்துக்காக நெல்லை மாவட்டம் மட்டுமில்லை தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் நிர்வாகத்துடன் இணைந்து பங்களிப்பு செய்து கொண்டிருந்தவர் நாறும்பூநாதன்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்தவர், எப்போதும் சிரித்த முகத்துடன், யாரையும் கடியாதவராக, அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக சகமனிதர்கள் மீது குறிப்பாக இளைய தலைமுறை மீது அக்கறை மிகுந்த மிகச்சிறந்த மாமனிதராக எழுத்தாளர்.நாறும்பூநாதன் இருந்தார். அவர் நாம் பின்பற்றுவதற்கு ஏராளமான வழிமுறைகளைக் காட்டிச் சென்றிருக்கிறார். அந்த வழிகளைக் கண்டடைவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவை..நெல்லை மாவட்டத்தில் இப்படியொரு ஆளுமை இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் அப்படியொருவர் வருவாரா என்பதும் உறுதியில்லை.

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும்.

செவ்வணக்கம் தோழர்.எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்

நன்றி - புத்தகம் பேசுது

அஞ்சலி: மஹாத்மனின் இரகசியப் பயணம்

மஹாத்மன் இறந்துவிட்டார். அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் […]

அரசர், அர்ச்சகர், இறைவாக்கினர்

ஐரோப்பிய அரசுகளுக்கு முதன்மை குருவாகவும் பல நேரங்களில் நேரடி அரசியல் முடிவுகளை எடுக்கவும் சக்தி கொண்டிருந்த போப் பதவி இன்று மதத் தலமை என்று சுருங்கிவிட்டது. எனவே அவரது செயல்களும் சொற்களும் அடையாளத் தன்மை (Symbolic) கொண்டவையாகவே அமைந்துவிட்டன. ஆனாலும் அவை முக்கிய அடையாளங்கள். பிரான்சிஸ் எனும் பெயரைத் தேர்ந்து கொண்டதிலிருந்தே அவர் எளிமையின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்.

அ. ரெங்கசாமிக்கு அஞ்சலி

28 January 2025 at 16:26
ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது. “அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள். “எப்போது?” என்றேன். என் சொற்கள் உலர்ந்துவிட்டன. “மதியம் இரண்டு மணிக்கு,” என்றார். நான் மணியைப் பார்த்தேன். மாலை 5. நான் அப்போது வெளியில் […]

ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்



காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும்  கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள்.

எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா.செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (2025 மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின,

பா.செ‘யின் படைப்புலகம் சார்ந்தே உரைத் தலைப்புகள். அவரது அல்புனைவுகளில் பெண்ணியம் மற்றும் சமூகப் பங்களிப்புகள் பற்றிப் பேசினார், இதே தலைப்பு தனக்கும் பொருந்தக் கூடியவரான கமலாலயன். சில பதிவுகளைப் பகிர்ந்தபோது சில மணித்துளிகள் தொடர்ந்து பேச இயலாமல் உறைந்தார். குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிராக 1960களில் ஏற்பட்ட எழுச்சியில் ஒரு தளநாயகராகவே பா.செ பங்களித்தது பற்றிச் சொல்லி வந்தவர், தமிழக வரலாற்றின் அந்த மகத்தான அத்தியாயம் இலக்கியப் புனைவுகளில் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டபோது அடுத்த சொற்களுக்காகத் தவித்தார். தனது தொழிற்சாலை அனுபவங்கள், உயரரிகாரியின் எச்சரிக்கை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்றவர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த நினைவுகளையும் பா.செ கட்டுரைகள் கிளறிவிட்டதைத் தெரிவித்து, அத்தகைய பல போராட்டங்கள் புனைவுகளாக்கப்படாமல் இருப்பதன் வேதனையை ஒரு படைப்பாளிக்கே உரிய உறுத்தலுணர்வுடன் வெளிப்படுத்தினார்.


பா.செ புனைவுகளில் நடமாடும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்திப் பேசினார், உண்மை வாழ்க்கையின் அத்தகைய மனிதர்களைத் தேடும் உந்துதலை இளம் எழுத்தாளர்களுக்கு எப்போதும் வழங்குகிறவரான ச.தமிழ்ச்செல்வன். பா.செ வாழ்க்கையோடு கலந்த பாட்டியும் அம்மாவும் கரிசல் கிராமங்களின் உயிரோட்டமான பெண்களும் அவருடைய சிறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அவர்களின் பாடுகளையும் வலிகளையும் அழுகைகளையும் எவ்வளவு துல்லியமாகக் கவனித்து உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லிவந்தவர், ஒரு கதையில் சித்தரிக்கப்படும் அவலச் சூழலைப் பகிர்ந்தபோது கண்ணீர் முட்டிக்கொள்ள, பேச்சைத் தொடர முடியாமல் தடுமாறினார். தண்ணீர் எடுத்துக்கொடுக்கப்பட்ட பிறகு, அதைப் பருகிவிட்டு, மனதை ஆற்றிக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உரையைத் தொடர்ந்தார். நம் வீடுகளில், பக்கத்து வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இப்படிப்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறோமே, இதே போலக் கவனித்திருக்கிறோமா என்ற குறுகுறுப்பை அவையினருக்குக் கடத்தினார் என்றால் மிகையில்லை.


சங்கத்தின் மாவட்டச் செயலாளர், நாடகக் கலைஞர் அசோக் சிங் நினைவுரையாற்றினார். பா.செ வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகளாக அல்லாமல், பா.செ பேச விரும்பிய பண்பாட்டுத் தளப் போக்குகளை நினைவில் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய சிந்தனையை முன்வைத்தார். மொழி உள்பட எந்தவொரு பண்பாட்டு அடையாளத்தையும் நாம் எதிர்க்கவில்லை, ஆதிக்கத்தைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்றார். 

வரவேற்புரையோடு, தேர்ந்தெடுத்த தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரையாகவும் சுருக்கமாக வழங்கினார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு. இந்தத் தலைப்புகளைத் தேர்வு செய்ததே அவர்தான் என்று தெரியவந்தது. தலைப்புகளை மட்டுமல்ல, யாரிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று தேர்வு செய்ததிலும் அவருடைய அனுபவமும் அக்கறையும் பொதிந்திருக்கின்றன.


நன்றி நவில வந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர்களில் ஒருவருரான வழக்குரைஞர் அஜிதா, எழுத்தாளர், களச் செயல்பாட்டாளர் என்பதற்கெல்லாம் முன்பாக பா.செ தனது மாமா என்று தெரிவித்தார். பற்பல வாழ்க்கை நிலைகளுக்கு மாறினாலும் வர்க்க அடிப்படையில் எளிய மக்களின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் மாறாமல் நின்றார். அவரது கதாபாத்திரத் தேர்வுகளும் மொழிப்போராட்டம் புனைவாக்கப்படாதது பற்றிய மனக்குறையும் சேர்ந்து, பணியும் பணியில் சந்திக்கும் மக்களும் சார்ந்த எழுத்தாக்கங்களில் இனி தானும் ஈடுபடும் உறுதியை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தினார்.


எண்ணிய எண்ணியாங்கு எய்தலாகும் என்ற நம்பிக்கையோடு அரங்கில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் முற்போக்குச் சிந்தனையாளர், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். 

மானுட மாண்பும் வர்க்க உணர்வும் வேறு வேறு அல்ல,  ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர்த்திய நிகழ்வு எனப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அங்கிருந்து விடைபெறும்போதே உதித்திருந்தது.

- நன்றி அசாக்

ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்- டாக்டர். இல. மகாதேவனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு



மே காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை.  நான் இட்டிருந்த தலைப்பு 'மகாதேவன் எனும் எரிநட்சத்திரம்'. 




 "ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொழுது நவீன மருத்துவத்தில் இறைத் தன்மை இல்லையா? போலியோ குணமாக்கப்பட்டதே? சின்னம்மை குணமாக்கப்பட்டதே? அப்பொழுது ரிஷிகளும் சித்தர்களும் எங்கு இருந்தார்கள்? என்ன செய்தது ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும்? ஆதலால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், மனிதனை மதித்தல், நோயாளி குணமாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமைக் கொடுத்தல், நான் என்ற அகங்காரத்தைத் தள்ளி வைத்தல், இறப்பின் உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்தல்- இவையே இந்த சிக்கலை கடக்க நம்முன் உள்ள தீர்மானமான வழியாகும். மனிதன் மாற வேண்டும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் மாறலாம், நம் பார்வையை மாற்றிக் கொள்ளலாம். நெளிவுசுளிவுடன் நடக்க பழகலாம்." - டாக்டர். இல. மகாதேவன், 'முதற்கால்' நூலிலிருந்து 


பாரதியை பற்றி எண்ணும்போதெல்லாம் அவனொரு எரி நட்சத்திரம் என தோன்றும். கூடவே பாரதியை எளிதாக ‘அவன்’ என உரிமைகொண்டாட முடிவதற்கு என்ன காரணம் எனும் கேள்வியும் எழும். புதுமைப்பித்தனையும் இப்படி அழைக்க முடியும். ஆனால் மௌனியையோ சுந்தரராமசாமியையோ நகுலனையோ அப்படி  ஏக வசனத்தில் அழைக்க முடிவதில்லை. முதன்மை காரணம் பாரதியும் புதுமைப்பித்தனும் இளமையான உருவத்துடனே நம் மனதில் பதிந்துவிட்டார்கள். சுராவையோ நகுலனையோ மௌனியையோ எண்ணுமாபோது அவர்களுடைய முதிர்ந்த தோற்றமே மனதில் உதிக்கும். எரிநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வு. சில நொடிகளே தென்படும். ஆனால் கண்டவருக்கு அது வாழ்நாள் அனுபவம். தனது முழு ஆற்றலையும் எரிபொருளாக்கி எரிந்து அழியும். இதற்கு நேரெதிரானது அகல்விளக்கு. நின்று நிதானமாக எரியும். நெருங்கி வருபவற்றுக்கு ஒளிவழங்கும். மானுட அறிவு செயல்பாடு இவ்விரு சரடுகளால் ஆனது. இரண்டுக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ளது. எரிநட்சத்திரம் கனவுகளின், இலட்சியங்களின் பிரதிநிதி. அகல்விளக்கு தற்கணத்திகற்கானது. பயன்மதிப்பு கொண்டது. அகல்விளக்கின் தன்மையும் பொருந்தும் என்றாலும் எனது ஆசிரியர் ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனை எரிநட்சத்திரம் என்றே வகைப்படுத்துவேன். ஆயுர்வேதத்திற்காக தனது ஊனையும் உயிரையும் அளித்தவர்.  கலைஞர்களுக்குரிய தத்தளிப்பும் கொந்தளிப்பும் கொண்ட ஆளுமை அவர்.  இலக்கியவாதியாக இருந்திருந்தால் பித்தும் படைப்பூக்கமும் கொண்ட பாரதி புதுமைப்பித்தன் பிரமிள் வரிசையில் இயல்பாக பொருந்தி போயிருப்பார் என தோன்றியதுண்டு. அறிஞர்களுக்குரிய அறிவு பரப்பும் கலைஞர்களுக்குரிய படைப்பூக்கமும் ஒருசேர அமைந்த அரிய ெஆளுமை. 



டாக்டர் இல. மகாதேவன், லக்ஷ்மண சர்மாவிற்கும் சந்த்ராவிற்கும் ஜனவரி 19, 1969 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி சாரதா. ஒரே மகள் சந்த்ரா இப்போது இளநிலை ஆயுர்வேதம் பயின்று வருகிறார். இவருடைய தாத்தா ஒய். மகாதேவ ஐயர் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். நாகர்கோவில் அருகேயுள்ள தெரிசனம்கோப்பு எனும் ஊரில் உள்ள டாக்டர். ஒய். மகாதேவ ஐயரின் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் முதன்மை மருத்துவராக இருந்தார். சென்னை வெங்கட்ரமணா கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத பட்டப்படிப்பை 1992 ஆம் ஆண்டு முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரியில் காய சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார். கேரளாவில் உள்ள பங்கஜ கஸ்தூரி கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.  தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறந்த அறிவியல் எழுத்துக்கான தேசிய விருதை ஆயுஷ் துறை மத்திய அமைச்சர் ஸ்ரீ பாத் யஷோ நாயக்கிடமிருந்து பெற்றுள்ளார். தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார். அவருடைய ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ தமிழக அரசின் சிறந்த புத்தக பரிசை வென்றுள்ளது. காலச்சுவடு வெளியீடாக வந்த 'உணவே மருந்து' நூலுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஆயுர்வேத மருத்துவர்களுக்கான உச்ச விருதான ‘தன்வந்தரி’ விருது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. சாரதா ஆயுர்வேத மருத்துவமனை இளம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான பயிற்சி களமாகவும் திகழ்கிறது.  ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ மாணவர்களும் இளம் மருத்துவர்களும் மகாதேவனிடம் பயின்றுள்ளனர். தமிழகம் கேரளம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட அவரிடம் பயின்றுள்ளனர். ஆறுமாதம் வரை தெரிசனங்கோப்பில் இலவசமாக தங்கி பயிலலாம். அதற்கு பிறகு தொடர விரும்புபவர்களுக்கு மாதச்சம்பளம் உண்டு. இணையத்திலும் பல்வேறு தேசிய சர்வதேசிய கருத்தரங்குகளிலும் பங்கேற்று செறிவான உரைகள் ஆற்றியுள்ளார். சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தின் முகங்களில் ஒருவர் என சொல்லலாம். ஏப்ரல் எட்டாம் தேதி இரவு இருதய நோய் காரணமாக மரணமடைந்தார். ஃபிப்ரவரி மாத இறுதியில் அடுத்தடுத்து அவரது தந்தையையும் தாயையும் இழந்திருந்தார். மகாதேவனின் மரணம் அவரை அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. தனிப்பட்ட முறையில் என்னால் அவரது மரணத்தை செரித்துக்கொள்ள இயலவில்லை. அந்த வாரத்தில் அவரை சந்திப்பதாக இருந்தேன். சரக சம்ஹிதையின் மெய்யியல் பகுதி சார்ந்த நூல் ஒன்றும் சித்த மருத்துவர் கு. சிவராமனுக்கும் மகாதேவனுக்குமிடையிலான உரையாடல் நூலொன்றும் என அவருடன் சேர்ந்து இரு நூல்களை எழுதும் திட்டமிருந்தது. அவரது தாத்தா ஒய். மகாதேவ ஐயரின் மரணத்தை பற்றி சொல்லும்போது "உடலைப் பொருட்படுத்தாமல், வெறி பிடித்த மாதிரி உழைத்ததினால் வந்த நிலை என்று சொல்லலாம்" என குறிப்பிடுகிறார். மேற்சொன்ன காரணம் மகாதேவனின் மரணத்திற்கும் பொருந்தும். அவரை நேர்காணல் செய்வதற்காக நாகர்கோயிலில் இறங்கி 5 மணிக்கு தெரிசனம்கோப்பு சென்று சேர்ந்த போது வாசல் பகுதியில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் எட்டு மணி வரை வாசிப்பது அவரது வழக்கம். தனது வாசிப்பு முறையைப் பற்றி கூறும்போது “இப்போது ஒரு புது நோயாளி வருகிறார், புது பரிசோதனை முறை வருகிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்கிறேன். எல்லா பெரிய கருத்தரங்குகளிலும் உரையாற்ற அழைக்கிறார்கள், அதை புதியமுறையில் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தொடர் வாசிப்பு தேவை. ஆயுர்வேத பட்ட மேற்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியுள்ளதால் அதற்காகவும் வாசிக்கிறேன். இதற்கு பிறகு இந்த நோய்க்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து?  பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்படாத சில நாட்டு மருத்துவ முறைகள்  உள்ளன. அதில் என்ன சிகிச்சை கூறப்பட்டுள்ளது? இப்படி நான் பலவற்றுடன் ஒப்பிட்டுப் படிக்கும் போது தான் அறிதல் முழுமையடைகிறது. இதில் பட்ட மேற்படிப்புக்கு மட்டும் தான் பாடம் வருகிறது. 70 % நடைமுறைக்கு பயனளிக்க கூடியதைத் தான் படிக்கிறோம். இது மருத்துவம் சார்ந்த படிப்பு. இப்போது 50 % சித்த மருத்துவம் தான் வாசிக்கிறேன். 15 % நாட்டு மருந்து சார்ந்த புத்தகங்கள், குமரி மாவட்ட மருத்துவப் புத்தகங்கள், 10% ஆயுர்வேதம், 20% ஆங்கில மருத்துவப் புத்தகங்கள், தொடக்கக் காலங்களில் நிறைய ஆயுர்வேதப் புத்தகங்கள் படித்ததினால் அதை குறைத்து கொண்டேன்.” என கூறுகிறார்.‌   ஆயுர்வேதம், சித்த மருத்துவம், குமரி மாவட்ட நாட்டு மருத்துவ முறைகள், நவீன மருத்துவம், இலக்கியம் என பலதரப்பட்ட வாசிப்பு அவருக்கு உண்டு. கருத்தரங்குகள், வகுப்புகள் என தொடர் பயணங்கள். மருத்துவ ஆலோசனைக்கு அமர்ந்தாரெனில் எப்படியும் நாளைக்கு நூறு புற நோயாளிகளை காண்பார். உள்நோயாளிகளை நாளுக்கொருமுறையோ இருமுறையோ பார்ப்பார். இத்தனைக்குமிடையே சுமார் 16000 பக்கங்கள் ஆயுர்வேதம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  


நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனில்லை. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராக கருதிவந்துள்ளேன். அவ்வளவாக பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மை புகலிடம். சமாளிக்க சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். என் முடியும் முடியாது முயன்று பார்க்கலாம் என தெளிவாக சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரை தங்களது ஆசிரியராக கருதுதிறார்கள். எனது தனிப்பட்ட துயரத்திற்கு பெரிய பொருளேதும் இல்லை. மகாதேவனின்  எத்தகைய ஆளுமை, அவரது பங்களிப்பு என்ன? ஆகிய கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இந்த கட்டுரை. 

ஆயுர்வேத உலகில் அவர் அறிமுகமான புதிதில் ஒரு கலகக்காரராகவே அறிமுகமானார். சமஸ்கிருத பாடமுறையை அடிப்படையாக கொண்டது ஆயுர்வேதம். மகாதேவன் நடைமுறை பயன்பாடை கருத்தில் கொள்ளாத பண்டித மரபை கடுமையாக விமர்சித்தார். “ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருத நாட்டம் அவசியமானதுதான். ஆனால் சமஸ்கிருதத்திற்குள் ஆழ்ந்து மூழ்கி தம்மை இழந்துவிட்டால் சிகிச்சையில் நாட்டம் குறைந்து பின்தங்கி விடுவார்கள். அவர்களுக்கு புத்தக அறிவு அளிக்கும் ருசியே போதையாகிவிடும். மருந்து செய்பவர்களின் வலி, மருந்து கிடைக்காததன் வலி, நோய் குணமாகவில்லை என்பதால் வரும் ஏக்கம் என இவை எதையும் அவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் அவர்களின் பாண்டித்தியத்திற்கு கல்லூரியில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவார்கள். சமஸ்கிருத அறிவு ஆயுர்வேதத்திற்கு நடைமுறை பயன்பொருட்டே முக்கியமானது என்பதை மறந்துவிடுவார்கள். பதார்த்த விஞ்ஞானம் போன்ற அடிப்படை பாடங்களை நூலறிவை கொண்டு எளிதாக நடத்தியே காலம்கடத்திவிடுவார்கள். மருத்துவத்தை தொழிலாக கொண்ட நாம் அப்படி இருக்க முடியாதே.  இரவு இரண்டு மணிக்கு, நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,  எழுப்பி, இரத்தம் கசிகிறது, என்ன செய்வது என கேட்பார்கள்.” மிக தெளிவாக ஆயுர்வேத கோட்பாட்டுவாதிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையேயான வேறுபாடை முன்வைக்கிறார். இவ்வகையான விமர்சனங்கள் தொடக்க காலத்தில் ஆயுர்வேத தூய்மைவாத தரப்பினால் அவர் தீவிரமாக எதிர்க்கப்பட காரணமானது. மேடையுரைகளில் அவர்களை கிண்டல் செய்தார். தீவிரமாக விமர்சித்தார். நேர்காணலிலிருந்து ஒரு உதாரணத்தை சுட்டுவதாக இருந்தால், இந்த பதிலை எடுத்துக்கொள்ளலாம் “சில வேதப் பாரம்பரிய பிராமணர்கள் வினோதமான சில கருத்துக்களை சொல்வார்கள். எனக்கு அவற்றில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்கா போய் கர்மா செய்தால், அந்த கர்மாவிற்கு பலன் கிடையாது. பஞ்சகச்சம் கட்டவில்லையென்றால் அந்த ஆற்றல் பூமிக்குப் போய்விடும். இப்படி பல கதைகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போய்க் கடுக்காய் கொடுத்தால் எந்த நாட்டு நோயாளிக்கும்  பேதி போகும். நேர்வாளம் கொடுத்தால் பேதி போகத் தான் செய்யும். மதனபலம் (மலங்காரைக்காய்) கொடுத்தால் வாந்தி வரத் தான் செய்யும்.” மகாதேவன் என பெயர் குறிப்பிடாமல் எங்கள் வகுப்புக்களில் அவருக்கான மறுப்புகள் சில வேளைகளில் கிசுகிசுப்பாகவும் சில வேளைகளில் வெளிப்படையான எரிச்சலுடனும் சொல்லப்பட்டன. சாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையே அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்றார்கள். நவீன மருத்துவ நோக்கை ஆயுர்வேதத்திற்குள் பொருத்தி பார்ப்பது பெரும் பிழை, தேவையில்லாத குழப்பத்தையே விளைவிக்கும் என்றார்கள். மாணவர்கள் அவரை நெருங்கினால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அஞ்சினார்கள். ஆனால் இவை எங்களுக்குள் மகாதேவன் மீதான ஈர்ப்பை பெருக்கியதே அன்றி குறைக்கவில்லை. நவீன‌‌ மருத்துவம் குறித்து அவர் கொண்டுள்ள பார்வை பிற ஆயுர்வேத பட்டதாரிகளிடமிருந்து வேறானது.‌  “ஆயுர்வேதத்தை முழுமையாக, நன்றாகப் படித்த, குண சித்தாந்தங்களை புரிந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் நான் நவீன மருத்துவத்தை ஊன்றி அறியத்தொடங்கினேன். நான் நேரடியாக நவீன மருத்துவத்தை கற்க தொடங்கி இருந்தால் குழம்பிப் போய் இருப்பேன். சமூகத்திற்குப் பெரிய தீங்கு விளைவிப்பவனாக மாறி இருப்பேன். இப்பொழுது ஸ்டேட்டின் (Statin) சாப்பிட்டால்  கல்லீரலில் சுரக்கும் நொதிகள் கூடி கெண்டைக்கால் வலி ஏற்படுகிறது. கால்சியம் சேனல் தடுப்பான்களை (calcium channel blockers) சாப்பிட்டால் கால் வீக்கம் வருகிறது. அம்லோடிஃபினோ (amlodipine), நிஃபிடிஃபினோ (Nifedipine) (உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்)  சாப்பிட்டு காலில் வீக்கத்துடன் ஒருவர் வருகிறார் என்றால் ஆயுர்வேத மருத்துவருக்கு இது பற்றி தெரிவதில்லை. சோபம் (வீக்கத்தை முதன்மை குறியாக கொண்ட நோய்)  என்று நினைத்து புனர்னவாதி கஷாயத்தில் சந்திரபிரபா சேர்த்து கொடுத்து, இரவு இரண்டு ஸ்பூன் தசமூல ஹரிதகி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் எழுதியது சரி; தவறல்ல; ஆனால் நோய் காரணம் ஆங்கில மருந்தில் வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. மருந்தை மாற்றி விட்டு வேறு ஒரு நவீன மருந்தை பரிசீலனை செய்து இருந்தால் நோயாளி குணமாகி இருப்பார். இந்த மாதிரி தவறுகள் நவீன மருத்துவமும்  படித்தவர்களுக்கு வராது” என்கிறார். ஆயுர்வேதத்தை தர்க்கப்பூர்வமான மருத்துவமுறையாக மட்டும் காணும் குறைத்தல்வாத நோக்கையும் அவர் ஏற்கவில்லை என்பதே அவரை மேலும் முக்கியமானவராக ஆக்குகிறது. “ஆயுர்வேதம் என்பது நம்முடைய மெய்யறிவு சார்ந்த ஒரு சாத்திரம். அபர வித்யையில் இருந்து பர வித்யைக்கு (பர வித்யை என்பது பிரம்மத்தை அறிவதற்கான கல்வி. அபர வித்யை என்பது உலகியல் தளத்தில் உள்ள பிற அறிவுத்துறைகள்) கொண்டு போகக் கூடிய சாத்திரம் அதாவது உலக அறிவில் இருந்து மெய்யறிவுக்கு தயாராக்கும் வகையில்  நம்  ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சீராக்குகிறது” என தெளிவாக ஆயுர்வேதத்தை வீடுபேறுக்கான மார்க்கத்தின் ஒரு பகுதியாக சுட்டுகிறார்.  முழுமையான ஆயுர்வேத வைத்தியனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “சிவ வாக்கியர்,  தாயுமானவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு, வசன கவிதைகள், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை ஏற்கனவே ஆழ்ந்நு படித்துள்ளேன். முன்பு வாசித்ததை தான் இப்பொழுது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புராணங்களைம், ஸ்மிருதிகளைம் வாசிப்பதை  நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போதும் பட்டினத்து பிள்ளையார் திரட்டு, மெய்ஞான திரட்டு போன்றவை எல்லாம் வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு சரகம், சுஸுருதம், வாக்பட்டமும் மட்டும் தான் ஆயுர்வேதம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. முழுமையை எய்த முடியாது” என கூறுகிறார்.  

தர்க்கப்பூர்வ மருத்துவமுறை - வீடுபேறு அடைவதற்கான சாதனை மார்க்கத்தின் ஒரு பகுதி, ஆகிய இவ்விரு துருவங்களுக்கு இடைப்பட்ட பாதையை தேர்கிறார். 



கவிஞர் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அஞ்சலி குறிப்பில் மகாதேவனை இராமானுஜருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அந்த ஒப்பீடு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டதாக தொனிக்கலாம். ஆனால் அதில் நியாயமில்லாமல் இல்லை. சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாக காண இடமுண்டு. குருகுல கல்வியில் நவீன ஜனநாயக தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேத கல்லூரிகளில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுல கல்வியில் இது சாத்தியமாயிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவு துறைகள் நவீன கல்விமுறையால் முழுமையாக கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மையுடையது தான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னோரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் இரகசியம். ஒருவித மூடுண்டத்தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழுவுக்குறி பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் என பல தடைகள். மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவம் வழி அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையது “காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி  மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும் போது தான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று திருமூலர் சொன்னது போல படித்ததைப் பகிரும் போது அனுபவம் மேலும் பெருகத் தானே செய்யும்” என குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன். 


“இளம் மருத்துவர்களுக்கு நான் கூறும் மிக முக்கியமான ஆலோசனை ஒன்றுண்டு. ஆர்வம் மேலிட சாஸ்திரத்தை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது” என கூறுகிறார். அப்படி நிறுவ முற்படுவது ஒருவகையில் அபத்தம். பண்டித மரபு நூல்களில் உள்ளவற்றை மாறா சொல் என கருதுகிறது. நிரூபனத்துக்கு அப்பாலானது என்று முன்வைக்கிறது. ஒருவர் ஏன் மருத்துவம் புரிய வேண்டும்? சாஸ்திரத்தை உண்மை என்று நிறுவுவதற்கா இல்லை நோயாளியின் நோயை தீர்ப்பதற்கா? நவீன மருத்துவத்தில் இந்த கேள்வியே எழாது. ஏனெனில் அவை சான்றை உருவாக்கிய பின்னரே நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் மரபு மருத்துவமுறைகள் களப் பயன்பாட்டிலிருந்து சான்றுகளை தொகுத்து கொள்பவை. ஆகவே மீண்டும் மீண்டும் இந்த முரண்பாடு எழும். மகாதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான தொடக்கக்கால பாடமென்பது “நான் ஆயுர்வேதத்தை காப்பதற்காக ஆயுர்வேதத்தை பின்பற்றவில்லை. நோயாளியை காப்பதற்காகவே ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறேன்.” நோயாளி மைய நோக்கை மகாதேவன் எப்படி அடைந்தார் என்பதை அவரே நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். “இது நடந்ததும் வைத்யநாதன் சாருடன் இருந்தபோது தான். ஒரு  22 வயது இளைஞன், கடும் அசதி, உடல் எடை சரசரவென குறைகிறது என  சொல்லிக்கொண்டு வந்தான். வைத்யநாதன் சார், அவனுடைய நோயை க்ஷயம் (தேகம் வற்றி போதல்) என்று கண்டறிந்து, அக்னி தீபனம் (பசியைத் தூண்டுதல்), ஸ்ரோதோ சோதனம் (நாள சுத்தி), ப்ரும்ஹணம் (உடலை தேற்றுதல்), லேசான விரேசனம் (பேதிக்கு) என சிகிச்சை அளித்தார்  சியவன பிராசம், கூஷ்மாண்டம் (வெண்பூசனி)  என ரசாயனமாக (ஆயுராவேதத்தில் ரசாயனம் என்பது ஆங்கிலத்தில் கெமிக்கல் எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. காயகல்பம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஆயுர்வேத ரீதியாக அப்பழுக்கற்ற சிகிச்சை அது. ஒவ்வொன்றையும் சரியாக செய்தார். ஆனால் ஒருநாள் மயங்கி விழுந்தான். நவீன மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சர்க்கரையின் அளவு 680 சர்க்கரை நோயின் முற்றிய நிலை (diabetic ketoacidosis- இன்சுலின் இல்லாத நிலையில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கீட்டோன்களை உடல் அதிகம் உற்பத்தி செய்து ரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கும் ஆபத்தான நிலை) இருந்தது இவர் கொடுத்த லேகியம் அனைத்தும் வீணாகப் போயிற்று. எவ்வளவு பெரிய மனிதர்? அவர் சிகிச்சையிலேயே தவறு நிகழ்ந்து விட்டதே. அது அவர் தவறில்லை அவருக்கு இது கற்றுக் கொடுக்கப்பட வில்லை.ஆகவே அவர் கணக்கில் கொள்ளவில்லை தவறிபோனது.  இப்படிப்பட்ட சூழல்களில் நவீன மருத்துவம் கற்றால் தான் இந்த தவறுகள் குறையும். நான் அப்போதே டேவிட்சன் பாட புத்தகத்தை  வாங்கிவிட்டேன்.” வைத்தியநாதன் அவரது ஆசிரியர். தனது குரு என செல்லுமிடத்திலெல்லாம் அவரை முன்னிறுத்துவார். குருவின் முறைமைகளின் எல்லையை கண்ணுற்று அங்கிருந்து தனக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்வதற்கு அபார மனத்திண்மை வேண்டும். அப்படியான தனிப்பாதை பயணத்தை ஆசிரியரின் மீதான அவமரியாதையாகவோ வெற்றியாகவோ கருதிக்கொள்பவரும் இல்லை.   



நேர்காணலில் நோயாளி மையப் பார்வை முழுமையாக துலங்கி வரும் பகுதி என இதைச் சொல்வேன். “சரக சம்ஹிதை சூத்ர ஸ்தானம் ‘மகாசதுஸ்பாதம்’ அத்தியாயத்திலேயே இந்த கேள்வி வருகிறது. இதில் மைத்ரேயர் என்பவர் ஆத்ரேயரைப் பார்த்து “பதினாறு குணங்களும் நிரம்பிய பிஷக்,(மருத்துவன்) திரவ்யம், (மருந்து) உபஸ்தா,(செவிலி) ரோகி (நோயாளி) இருந்தும், ஒழுங்காக கற்று சரியாக மருந்து கொடுக்கிறேன் ஆனால் பலனில்லை. ஒரு போலி அளிக்கும் மருந்து பலனளித்து எழுந்து நடந்துவிட்டானே? முறைப்படி நான் கற்றதற்கும் சிகிச்சை செய்ததற்கும் என்ன மதிப்பு?"   என்று கேட்கிறார். இது 20-வது அத்தியாயத்தில் வருகிறது, “மித்யாஹாதி மைத்ரேய” (குழம்பிய புரிதல் கொண்ட மைத்ரேயா) என்று பதில் சொல்லத் தொடங்குகிறார் ஆத்ரேயர். மிக பிரமாதமான பதில் அது. “ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான். அவனைத் தாண்டி செல்கிறாய். கையை கொடுக்கிறாய். அவன் எழுந்திருக்க வேண்டும் என்று தலைவிதி இருந்தால் எழுந்திருப்பான். இல்லையென்றால் அப்படியே கிடப்பான். நீ கை கொடுக்க வேண்டியது உன் கடமை. கை கொடுக்காமல் சென்றால்  அது உன் தவறு. கை கொடுப்பதுதான் சுதர்மம். 'யாவத் கண்டகதா ப்ராணா தாவத்காரியம் சிகிட்சிதம்.' பிராணன் கண்டத்தில் சென்று கொண்டிருக்கும் வரையில் சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார். வேறெந்த   மருத்துவத்தில் இப்படி சொல்லப்பட்டு  இருக்கிறது? சரகரைத் தவிர வேறு யார் இதைப் பற்றி பேசுகிறார்கள்? நீ முயற்சி செய்துக் கொண்டே இரு. இறக்கும் வரை மருந்து கொடுத்துக் கொண்டே இரு. நோய் குணமாகுகிறதோ, இல்லை குணமாகவில்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ மருந்தை கொடு. அது தானே உன்னுடைய சுதர்மம். ஒரு மருந்தை கொடு அது கேட்கவில்லையா? அடுத்ததைக் கொடு, அதுவும் கேட்கவில்லையா? அதற்கு அடுத்ததைக் கொடு. இந்த வழிகாட்டலை முழுமையாக  கடைப்பிடிக்கிறேனா, என்று சொல்ல முடியாது. 70% வரை கடைப்பிடிக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் முழுவதுமாக கடைபிடிப்பது சவாலானது. ஆனால் அடைய வேண்டிய நிலை அவர்கள் கோடிட்டு காட்டும் அந்த லட்சியம் தான். ஒரு நாள் அந்த லட்சியத்தை உறுதியாக அடைவோம். புற தேவைகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு அந்த லட்சியத்தை மட்டுமே இலக்காக கொள்ளும்போது நிச்சயம் சாத்தியமாகும்.” மகாதேவனிடம் கற்றவர்கள் இணையவழியில் அவருக்கு நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கேரளத்தில் ஆயுர்வேந பேராசிரியராக உள்ள ஒருவர் அவரது கல்லூரி பருவத்து நினைவை பகிர்ந்துகொண்டார். மகாதேவன் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் வாசியான ஒரு குடும்பம் அவரை பார்த்தே ஆக வேண்டும் என காய்ச்சலில் துவண்டு கிடக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இல்லத்திற்கு வரச்சொல்கிறார். மலம் வெளியேறவில்லை காய்ச்சல் அடிக்கிறது. நாடி நோக்கிவிட்டு உடனடியாக வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவரை காண பரிந்துரைக்கிறார். அருகிலிருந்த பேராசிரியருக்கு குழப்பம். வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுத்து பார்க்கும் சுதர்சன மாத்திரை அம்ருதாரிஷ்டம் என கொடுத்து பார்த்திருக்கலாமே என கேட்கிறார். அநேகமாக குடலில் பொத்தல் (Intestinal perforation) விழுந்துள்ளது. உடனடியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என பதில் சொல்கிறார். அவரது அனுமானம் சரி. நெடுநாளாக குடலில் டி.பி பாதிப்பு இருந்து குடல் பொத்தல் ஏற்பட்டுள்ளது. இரவு புற நோயாளிகளை பார்த்துவிட்டு நவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த குழந்தையை பார்த்து அவர்களது பெற்றோருக்கு நிலையை விளக்கிச்சொல்கிறார். மகாதேவன் எனும் மிகச்சிறந்த மனிதர் வெளிப்பட்ட தருணங்களில் ஒன்று. நோய் கண்டறிதலில் அல்லது சிகிச்சையில் ஏதும் பிழை ஏற்பட்டால் அவரால் அன்று உறங்க முடியாது. தனிப்பட்ட துயராக, தோல்வியாக வரிந்துகொள்வார். பல சமயங்களில் இதுவே மன அழுத்தத்தின் எல்லைவரை அவரை கொண்டு செல்லும். உள்ளுணர்வு என்பது மனச்சாய்வாக இல்லாமலிருக்க பெரும் அறிதலும் பயிற்சியும் வேண்டும். நோய் கண்டறிதலில், அதிலும் குறிப்பாக அரிய நோய்களை கண்டறிவதில் மகாதேவனுக்கு இணையான இன்னோரு ஆயுர்வேத மருத்துவரை நான் கண்டதில்லை. 

சில உள்ளூர் நண்பர்கள் மகாதேவனை விட சாரதா வைத்தியசாலையில் உள்ள மற்றொரு முத்த மருத்துவரான சிதம்பரம் அவர்களை காண்பதையே விரும்புவதாக என்னிடம் சொன்னதுண்டு.‌ தொடக்கத்தில் எனக்கிது ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களது பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மகாதேவன் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து கைவிடப்பட்ட அரிய நோயாளிகளையே பார்த்து அவற்றில் நிபுனத்துவம் பெற்றுவிட்டதால் அவரால் எளிய சளி இருமலைக்கூட அதன் உச்ச சாத்தியத்திலிருந்தே சிந்திக்க முடியும். 


நோயாளி மைய நோக்கைப் போன்றே ஆயுர்வேதம் பயிலவரும் சாமானிய  மாணவர்கள் குறித்து அதிகம் சிந்தித்ததும் அவரே. குறிப்பாக தமிழக மாணவர்கள் குறித்து நிறைய கவலைப்பட்டார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் வருகைக்கு முன் பின் என தமிழக ஆயுர்வேத கல்வியை இரண்டாக பிரிக்கலாம். தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசு கல்லூரியின் வருகைக்கு பிறகு அதிகம் ஆயுர்வேதம் பயின்றனர். “நான் படித்த  காலத்தில் இரண்டு பேர் தமிழ் மாணவர்கள். மற்றவர்கள்  எல்லோரும் மலையாள மாணவர்கள்.  தமிழ் மாணவர்கள் எப்போதும் வருடா வருடம் தேர்வில் தோற்றுப் போய்விடுவார்கள். காரணம் சமஸ்கிருத அறிவு குறைவு என்பதே. அவர்களுக்கு நான் பாடம் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தான் குறிப்புகள் எழுதி சொல்லிக் கொடுத்தேன்; அவர்களை தேர்ச்சியடைய வைத்தேன்.  தமிழ் மொழியில் தான் நான் படித்தேன், எனக்கு வடமொழி ஆற்றல் குறைவு என முன்னரே சொன்ல்லியிருந்தேன். தமிழில் படித்து தான் நான் தேர்ச்சியடைந்தேன். தமிழ் மேல் எனக்கு தீராத பற்று உண்டு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆரோக்ய ரக்ஷா கல்பத்ருமம், ஸஹஸ்ரயோகம் போன்ற புத்தகங்கள் பரிச்சயம் இல்லை. மலையாளம் தெரியாதவர்கள் படிக்கட்டுமே என்று எழுதினேன். பழைய கையெழுத்து பிரதிகளை வெளியில் கொண்டு வந்தேன். எனது தமிழ் படைப்புகளில் முக்கியமானது திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம். ஆயுர்வேதத்தின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. தமிழில் புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை என்றாலும் ஆங்கில புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க தயங்குகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க நினைக்கிறார்கள். மூன்றுக்கு ஒன்று இலவசமாக வேறு  கேட்கிறார்கள். இதுதான் நிலை.” ஆயுர்வேத அடிப்படைகள் குறித்து தமிழில் அவர் எழுதிய நூல்கள் அத்தனையும் முக்கியமானவை. ஆயுர்வேத நூல்களில் முப்பெரு நூல்கள் என சரகர், சுசுருதர், வாக்பட்டர் இயற்றிய நூல்களை குறிப்பிடுவது வழக்கம். இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. உண்மையில் மகாதேவனின் ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ சமகாலத்து சம்ஹிதை நூல் என துணிந்து சொல்ல முடியும். சித்த மருத்துவத்தின் மருந்துகளை முக்குற்றங்களின் பார்வையில் அணுகி பார்க்கும் நூலும் மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ சூழலுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.


மகாதேவனால் நவீன மருத்துவர்களுடனும்  ஆக்கப்பூர்வமாக உரையாட முடிந்தது. எந்த அறிகுறிக்கு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர். அலோபதி மருத்துவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன் நல்லுறவையும் பேணினார். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என இடப்பட்ட அரசாணை குறித்து அவருக்கிருந்த பார்வை இது :- “குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என கிளம்பினால், அது ஆங்கில மருத்துவர்கள் மனதைப் புண்படுத்தும், நட்பை கெடுக்கும். இது சரி என்றால்,  ஆங்கில மருத்துவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அவர்களும் பச்சிலை மருந்தை கொடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒப்புக்கொள்வோமா?” மனதை புண்படுத்தும் நட்பை கெடுக்கும் என்பதையே முதன்மையான காரணமாக குறிப்பிடுகிறார். தமிழக சூழலில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்குமிடையே ஒருவிதமான இறுக்கம் எப்போதும் உண்டு. மகாதேவன் சித்த மருத்துவத்தை ஆழ்ந்து கற்றார். உள்ளார்ந்த மதிப்புடன் அணுகினார். இவ்விரு முறைகளுக்கிடையே முக்கியமான பாலமாக திகழ்ந்தார். இரண்டையும் இரு கண்கள் என பிரகடனம் செய்தார். சித்த மருந்துகள் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு என்பது ஆசனவாய் வழி மருந்து செலுத்தும் வஸ்தி சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் சில முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார். எத்தகைய ஆய்வுகள் தேவை எனும் கேள்விக்கு “ஆயுர்வேதத்தினுடைய ஆராய்ச்சி என்பது நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையை ஆவணப்படுத்துவதுதான். நோயாளிகளின் நோய் நிலையை சிகிச்சையின் வழி ஆவணப்படுத்துவது மிக முக்கியம்.  ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் எப்படி குணமானது என களத்தில் மேற்கொண்ட கருத்தினையும், கருதுகோளையும், செய்முறையையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியது ஆகும்” என பதிலளிக்கிறார். 


மகாதேவனின் தொடக்க கால மேடையுரைகளிலும் வகுப்புகளிலும் ஒருவித அவசரம் தொனிக்கும். இதோ இப்போது ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் அவசரம் கேட்பவரைத் தொற்றிக்கொள்ளும். அவரது பல்வேறு கருத்துக்கள் வலுவாக ஒலித்ததாலேயே சர்ச்சைக்குள்ளாகின. நாடி பார்த்து நோயறிதல், வர்ம சிகிச்சை போன்றவற்றை எல்லாம் முழுமையாக நிராகரித்தார். அவற்றை புறவயமாக அனுக இடமில்லை என்பதே அவரது வாதம். ஆனால் காலப்போக்கில் இவற்றில் அவரது பார்வை மாற்றமடைந்ததை காண முடிகிறது. “வைத்யநாதன் சார் இறப்பதற்கு முன்னால் என்னிடம் ‘ஐயாயிரம் நோயாளிகளுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்காத வரைக்கும் அடுத்தவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காதே’ என கூறினார். இந்த தகுதி மிக முக்கியமானதல்லவா? 97-லிருந்து 2007 வரைக்கும் நான் ஆற்றிய உரைகள், எழுதியவற்றில் எல்லாம் நிறைய பிழைகள் உள்ளன. ஒரு அமைதி ஏற்படாமல், முழு சிகிச்சை அனுபவம் ஏற்படாமல், சாத்திரத்தை மட்டும் படித்து, மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற அகங்காரத்தில் பேசிய பேச்சு தான் பெரும்பாலும்.  இப்போது அப்படி இல்லை. பேச்சில் நிதானம் கூடியிருக்கிறது. முடியும், முடியாது என்ற ஹித  அஹித விசேஷ (நன்மை தீமை பகுத்தறிவு) ஞானம் உள்ளது. என்னாலேயே என்னை நோக்க முடிகிறது. அதனால் நான் பழைய பதிவுகளை (ரெக்கார்டிங்கை) எல்லாம் அழித்துவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அமெரிக்காவில் ஆற்றிய உரைகள் எல்லாம் முழுவதுமே பாட புத்தகத்தில் உள்ளவை தான். இப்பொழுது மூன்று ஆண்டுகளாகப் பேசிய உரைகள் தான் உண்மை. இனிமேல் நான் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் ஆறரை லட்சம், ஏழு லட்சம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை சொல்கிறோம் என்றால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.” என்கிறார். தர்க்கப்பூர்வ முறைகளை மட்டுமே கறாராக நம்பியவர் நாடி வர்மம் போன்ற முறைகளை ஏற்றுக்கொண்டார். “இன்று இம்மரபை பேணுபவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால்  எல்லா நோய்களும் குணமாகிவிடும் என்று அதீத நம்பிக்கையுடன் பேசுவது தான். தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அடுத்தவர்களை இகழ்ந்து பேசுவதும், நம்மைத் தவிர மீதி எல்லாருமே அறிவிலிகள் என்று நம்புவதும், தெரியவில்லை என்று நாம் போய்க் கேட்டால் கேலி செய்வதும் என இன்று அம்மருத்துவமுறையை பின்பற்றுபவர்களின் மனப்போக்கே முதன்மை சிக்கல்.” என்றே வர்மம் குறித்து எண்ணுகிறார். இந்திய மருத்துவத்தில் பாலியல் சிக்கல்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவர்களைப் பற்றியும் அவருக்கு பெரிதாக அபிப்ராயமில்லை.  சிட்டுககுருவி லேகியத்தின் மகிமையைப் பற்றி கேட்கும்போது “லேகியத்தால் ஒன்றும் பெரிய பலன் இல்லை, வேண்டுமானால் வெளியில் இருக்கும் அட்டைப்படத்தினால் ஏதாவது பலன் என சொல்லிக்கொள்ளலாம்.” என தனக்கேயுரிய கிண்டலுடன் சொன்னார். தொடக்க காலத்தில் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றி சுத்திகரிக்கும் சிகிச்சை முறைகள் மீது பெரும் ஈடுபாடிருந்தது. வாந்தி எடுக்க வைக்கும் சிகிச்சை போன்றவற்றை எல்லாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் இத்தகைய கடினமான சிகிச்சை முறைகளை குறைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு உகந்த முறைகளுக்கு மாறினார். பஞ்சகர்ம சோதனை சிகிச்சைகள் இல்லாமல் உள் மருந்துகள் கொடுக்கும்போதும் அதே விளைவை ஏற்படுத்தமுடியும் எனும் இடத்தை வந்தடைந்தார். ஆயுர்வேத சாத்திரங்களின் மீது நன்மதிப்பும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து மதிப்பிட்டார். எவை பலனளிக்கிறது எவை பலனளிக்கவில்லை என்பதை வெளிப்படையாக பேசினார். 

மகாதேவன் தனது ஆசிரியரும் தாத்தாவும் ஆயுர்வேதத்தை முழுக்க நம்பினார்கள் என்கிறார். இறுதிவரை நவீன மருத்துவத்தை நோக்கி செல்லவே இல்லை என்பதாலேயே அவர்களுடைய வெற்றி சதவிகிதம் அதிகம் என்கிறார். உள்ளார்ந்து அவர்கள் அளவிற்கு தனக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.  ஒருவகையில் இந்த ஐயமும் தீர்மானமின்மையும்தான் மகாதேவனின் தனித்தன்மை என்று கூட சொல்லலாம். ஆயுர்வேதம் கற்க விரும்புகிறவருக்கு என்ன சொல்வீர்கள் எனும் கேள்விக்கு இப்படியான ஒரு பதிலை தருவித்தது. “ஆயுர்வேதம் படிக்காதே என்று சொல்வேன். ஆயுர்வேதத்தை கல்லூரியில் நன்றாக சொல்லிக்கொடுக்கக்கூடும், ஆனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை. ஒரு சில மருத்துவமனைகளே வெற்றிகரமாக நடக்கின்றன. பல கல்லூரிகளில் ஈ ஓட்டுகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் கற்பதில்லை, விதியே என கடனுக்கு கல்லூரி வந்து செல்வார்கள். மூலிகைச் செடிகளை அடையாளம் காணும் அறிவு கிட்டுவதில்லை, மருந்து செய்யும் கலை வளர்வதில்லை. பத்து மாணவர்களில் இருவர் தான் வெற்றியடைகிறார்கள். மீதி எட்டு பேருக்கும் தோல்விதான். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே வேறு ஏதாவது நல்லப் படிப்பு படி என்று தான் சொல்வேன். குடும்பப் பாரம்பரியம் உள்ளது, அதை தொடர வேண்டும் என்றால் படி என்று சொல்வேன். அபரிமிதமான உற்சாகம், ஞானம், உழைப்பு உள்ளவர் வந்தால் படி என்று சொல்வேன். ஆயுர்வேதம் படிக்கவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, படித்தால் ஒரு சில நன்மைகள் விளையும், இன்றைய காலகட்டத்தில் இது கண்டிப்பாக, இன்றியமையாத ஒரு மருத்துவ சாஸ்திரம் என்று சொல்வதற்கில்லை. நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.” நேர்காணலின் இறுதி கேள்வி இது. ஏதேனும் ஒரு உச்ச புள்ளியில் நிறைவு செய்வார் எனும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எதிர்பார்க்காத வேறொரு பதிலை கூறினார். ஆயுர்வேதத்தின் கோணத்திலிருந்து சிந்திக்காமல் சாமானிய மாணவரின் கோணத்திலிருந்து  மெய்யான கரிசனத்துடன்  சொல்லப்பட்ட பதில். அந்த பதிலில் சுடரும் அறிவார்ந்த நேர்மை காரணமாகவே அது நம்மை சுடுகிறது. 



 அவரது ஆன்மிக வாழ்வு குறித்து நேர்காணலின் போது பேசக்கிடைத்தது ஒரு அரிய வாய்ப்பு. முற்றிலும் வேறு சில திறப்புகளை அளித்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் மரபில் கொஞ்சகாலம் இணைந்திருந்தார். யோகானந்தரின் சுயசரிதை நூலை அவர் படித்த கதையே சுவாரசியமானது “1987 ல் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ வரைக்கும் தினமும்  நடப்பேன். அப்பொழுது அந்த வழியில் உள்ள புத்தகக்கடை அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின்  அட்டையில்  உள்ள அவரது முகம்  என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றும். தினமும் அவரைப் பார்ப்பதற்காகவே, நடக்கத் தொடங்கினேன். தினமும் பார்க்கப் பார்க்க முகம் பெரியதாகிக் கொண்டே இருப்பது போல் தோன்றும். என்னடா இது! என்று குறுகுறுப்பு. ஒருநாள், இவர் யார்? என்ன புத்தகம்? என அப்புத்தகக் கடைக்காரரிடம் கேட்டேன், அவரும் “அது ஒரு சாமியுடைய வாழ்க்கை வரலாறு” என்று சொல்ல, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.” யோகானந்தரின் நேரடி சீடரான ராய் யூஜின் டேவிஸின் நூலை மொழியாக்கம் செய்தார். ஆனால் தனக்கென நிலையான ஒரு வழியையோ குருவையோ அவர் கண்டுகொண்டாரா என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. “ஸ்ரீவித்யா மார்க்கத்தில் இருந்தேன்; யோக மார்க்கத்தில் பயணித்தேன்; பூஜைகளை செய்தேன். கோவில் கோவிலாக அலைந்திருக்கிறேன். தான தர்மங்கள் செய்தேன். ஆனால் இவை எதிலுமே நிறைவை உணர இயலவில்லை. கர்மாக்கள் சேர்ந்து இருக்கக்கூடும். அது நமக்குத் தெரியவில்லை. குருவினுடைய திருவடியைத் தவிர வேறு மோட்சமே இல்லை.” என தனது அலைச்சலைப் பற்றி எழுதுகிறார். நான் அவருடன் உரையாடியபோது காலஞ்சென்ற திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்த சுவாமிகளை குருவாக‌ கண்டுகொண்டதாக குறிப்பிட்டார். “இன்னொரு இடத்தில் எதையும் படிக்காதே, எதையும் செய்யாதே, நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேள், ஏற்கனவே நான் எல்லாம் படித்துவிட்டேன், கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன், கூடவே வா என்கிறார். மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது, நம்பிக்கை அளிக்கிறது.  மிகவும் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போதெல்லாம் அவருடைய அருளை உணர முடிந்தது. அனுக்கிரகம் என்பது அத்ரவியம் (புலனறிதலுக்கு அப்பாலானது) ஆயிற்றே? அதை நான் எப்படி சொல்ல முடியும்? உணர்வுகளை எப்படிச் சொல்ல முடியும்? உருவம் கொடுக்க முடியுமா? இனிப்பு, இனிப்பு என்று தான் சொல்ல முடியும். நான் ஒழுக்கமாக வாழத் தொடங்கி, சரணாகதி பாவம் கைவரும் தோறும் எனக்கு அதுவரை நிகழாதது எல்லாம் நிகழத்தொடங்கியது. வெளியில் இதைச் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. என்னைப் பொறுத்தவரை உண்மை. நீங்கள் அதனை உண்மை என்று உணர்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எவ்விதத்திலும் நடக்கச் சாத்தியமில்லாததெல்லாம் நடந்தது இது உண்மை சத்தியம்.”  என்கிறார். ஆயுர்வேதத்தின் தர்க்கவழி மருத்துவம் எனும் எல்லையை கடந்த சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நாட்பட்ட தீரா நோய்களைப் பற்றி குறிப்பிடும்போது “சிகிச்சையளிக்கலாம் தான். அச்சிகிச்சை அளிப்பவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய் தீர்க்க முயல வேண்டும். டாக்டர் ஆகலாம், ஆனால் ஹீலராகி  குணப்படுத்த முடியுமா? குணப்படுத்துதல் என்பது வேறு. குணமாக்குதல் என்பதொரு வேள்வி.  முழு ஈடுபாடு வேண்டும். அதை எல்லாருக்கும் என்னால் செய்ய இயல்வதில்லை. நூறில் நான்கு பேருக்கு சாத்தியமாகிறது. பாக்கி 96 பேருக்கு நான் கற்ற பாடத்தை அடிப்படையாக கொண்ட சிகிச்சை தான் அளிக்க முடியும். சிலருக்குக் கேட்கும், சிலருக்குக் கேட்காது. சங்கல்பம் (உறுதி ஏற்றல்) செய்து கொண்டு மருந்து கொடுத்தால் பொதுவாகக் கேட்கும்.” என குறிப்பிடுகிறார். இத்தகைய அனுபவங்களை பேசும் பெரும்பாலோனோர் தர்க்கரீதியான சிகிச்சை முறைகளை கைவிட்டு முழுவதுமாக குணப்படுத்துதல் நோக்கி நகர்ந்து அதையே பிராச்சாரம் செய்வார்கள். இவை அரிய நிகழ்வு. அறிவியலின் “விளைவை மீளுருவாக்குதல்” ( repeatability of results) கோட்பாட்டுக்கு பொருந்தாதது. இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பெற்றாலும் அதை அவர் பெரிதாக முன்வைக்கவில்லை. மறைக்கவும் இல்லை. “பிரார்த்தனை செய்வது நல்லது. பிரார்த்தனையினால் ஒரு சில நோய்கள் எளிதாக குணமாகும். ஆனால் அதுவும் ஒரு சிலருக்கே நடக்கும். எல்லோருக்கும் பலனளிக்கும் என சொல்லிவிட முடியாது. ஆகவே இதை விளம்பரப்படுத்துவது தவறானது.” என இவ்வகை நம்பிக்கை சார்ந்த முறைகளின் எல்லையை வரையறை செய்கிறார். 


தொழில்முறை மருத்துவராக மகாதேவன் மருத்துவ அறங்களைப் பின்பற்றுவதில் ஒரு முன்மாதிரி. “அறத்தால் வருவதே இன்பம்- கமிஷன் வாங்க கூடாது, பரிசுப் பொருள் வாங்கக் கூடாது. கொரோனாக் காலத்தில் கொள்ளையடிக்கக் கூடாது. போடுகின்ற பில்லை முதல் நாளே சொல்லிவிட வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும். அறத்தினாலேயே இன்பம் வரும், அறத்தை கைவிட்டுவிட்டு பூஜைகளை செய்து என்ன பயன்? இறைவனை வணங்குவதினால் பலன் இல்லை.” மேற்சொன்னவற்றை அவர் இறுதிவரை பின்பற்றினார். பின்பற்றுதலே எங்களுக்கு போதனை. 


‘முதற்கால்’ எனும் எங்கள் நேர்காணல் நூலை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டுரையை எழுதினேன். தனிப்பட்ட நினைவுகள் பல முட்டி மோதுகின்றன. அவரது சின்ன சின்ன உடலசைவுகள் காட்சிகளாக மனக் கண்ணில் தோன்றுகின்றன. மகாதேவன் சமகால பாரம்பரிய மருத்துவ உலகின் பேராளுமை. இன்னும் இருபதாண்டுகள் இருந்திருந்தால் அவர் பல எல்லைகளை கடந்திருப்பார். எப்படி மரணமடைந்தார் என்பதற்கு தர்க்கப்பூர்வமான பதில்கள் உள்ளன ஆனால் ஏன் இறந்தார் எனும் கேள்விக்கு எந்த பதிலும் சமாதானத்தை அளிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் மாணவர்களுடன் மகாதேவன் உரையாடிய ஒரு சிறிய பகுதி அவருடைய மரணத்தையொட்டி அதிகமாக பரப்பப்பட்டது. அதில் “மகாதேவன் எனும் இந்த வடிவத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள். பிரிவு துயரத்தை அளிக்கும்” என்கிறார். 55 வயதில் எது அவரை இப்படி சொல்ல வைத்தது என தெரியவில்லை. ஆயுர்வேதம் இந்த மண்ணில் இன்னும் சில ஆண்டுகள் உயிர்ப்புடனிருந்தால், அல்லது எப்போது வரை உயிர்ப்புடன் உள்ளதோ அப்போது வரை மகாதேவனும் எங்களுடன் இருப்பார். ஆசிரியருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். 







 




தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி

விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி செம்மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் தோழர் சங்கரய்யாவும்

ராஜதாளம் . . .

19 May 2020 at 10:51

பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு’ என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாளவாத்தியக்கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும்?! ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா? ராஜாவைப் பாக்க வந்தியா? நல்லா இருக்கேல்ல?’ என்று கேட்டுவிட்டு தன் இசைப்பையைத் திறந்து அன்றைய இசைப்பதிவுக்கான வேலைகளைத் துவங்க ஆரம்பித்துவிட்டார். புருவின் குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார். தாளத்தை வடிவமைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களை கண்டக்ட் செய்யும் பணியையும் புருவையே செய்ய வைத்தார், இளையராஜா. இளையரஜாவின் இசைக்குறிப்புகளை பின்பற்றி ஒரு குழுவை இசைக்கச் செய்வதென்பது, வெறுமனே காகிதத்தில் எழுதியிருக்கும் இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து மேற்பார்வை செய்யும் சாதாரண வேலையல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, அத்தனை இசைக்கருவிகளையும் கவனித்து, அந்தந்தத் துணுக்குகளை மிகச் சரியாக இசைக்கச்செய்து, இறுதியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இளையராஜா வந்து ‘ஓகே’ சொல்லும் வரைக்குமான பணி, புருவுடையது. 

ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அத்தனை வந்திருக்காத காலத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் பாடக, பாடகிகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அதுகுறித்து இப்போதைய இசை செய்பவர்களுக்குப் புரியாது. அது அவர்களின் குறையுமல்ல. அவர்கள் இசைத்துறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கான பணிகள் அத்தனையையும் தொழில்நுட்பம் பல நூறு வடிவங்களில் செய்து கொடுக்கிறது. அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் பல நூறு கொரோனா பாடல்கள் கொரோனாவுக்கு முன்பே மக்களை வந்தடைகின்றன. ஆனால் அப்போது அப்படியல்ல. ஒரு பாடல் பதிவின் போது யாரேனும் ஒரு இசைக்கலைஞர் தவறு செய்து விட்டாலும், மறுபடியும் முதலிலிருந்து எல்லோரும் துவங்க வேண்டும். அது இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. பாடுபவர் தவறு செய்தாலும் மறுபடியும் முதலிலிருந்துதான். கேட்பதற்கு எளிதாக இருக்கும் பாடலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், நேர்த்தியும் நம் காதுகளுக்குத் தெரிவதில்லை. 

மும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். அவருடனான வெளியூர் பயணங்களில் பொதுவாக அவர் என்னிடம், ‘நாகஸ்வரம் ஏதாவது போடேன்’ என்பார். ஆனால் இரவு நேரத்தில் அவருக்கு அவரது பாடல்களை நினைவுபடுத்துகிற விதமாக சில பாடல்களை ஒலிக்கச் செய்வது என் வழக்கம். புகழ் பெற்ற சில பாடல்கள் சிலவற்றை அவர் மறந்திருப்பார். சில பாடல்களை அதன் மெட்டு, அது இடம் பெற்ற திரைப்படம், நடித்த நடிகர், இயக்குநர் இவற்றையெல்லாம் தாண்டி அதில் வாசித்த கலைஞர்களுக்காக நினைவு வைத்திருப்பார். ‘மனிதனின் மறுபக்கம்’ திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்’ பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது, முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா?’ இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன். 

‘எந்த பாட்டு?’ என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன். 

‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு?! ஞாபகம் இல்லப்பா’. 

‘அதுசரி. ஒண்ணு ரெண்டு வாசிச்சிருந்தா ஞாபகம் இருக்கும்! ஓராயிரம் பாட்டுல்ல வாசிச்சிருக்கீங்க? நீங்களாவது பரவாயில்ல. அவருக்கிட்ட ‘இவளொரு இளங்குருவி’ பாட்டை சிலாகிச்சு சொன்னா, அது யாரு படம்யா? பிரபுவாங்கறாரு’.

‘அவருக்கு அதெல்லாம் எப்படிப்பா நினைவிருக்கும்? அது பிரம்மாங்கற படம் இல்ல?’

‘ஆமா ஸார். உங்களுக்காவது ஞாபகம் இருக்கே?’

‘நல்லா நினைவிருக்கு. அதுல இன்னும் ரெண்டு மூணு பாட்டு கூட ஒரே நாள்ல முடிச்சோம். கமல் படம்தானே?’

இளையராஜாவின் இசைக்கலைஞர்கள் இப்படித்தான். அவர்கள் வாசித்த பாடல்கள் புகழ் பெற்ற பாடல்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தினம் டேக் ஓகே ஆன பிறகு அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் சம்பந்தமில்லை.

புரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து(நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு(மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே என்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா(மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து(அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை), காதல் மகராணி(காதல் பரிசு), வனிதாமணி(விக்ரம்), ஒரு காதல் என்பது(சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம்(மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே(நினைவெல்லாம் நித்யா), கண்கள் ரெண்டும் (உனக்காகவே வாழ்கிறேன்), முத்தாடுதே (நல்லவனுக்கு நல்லவன்), நான் காதலில் (மந்திரப்புன்னகை), நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்), பாட்டிங்கே(பூவிழி வாசலிலே), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்),  எனக்குத் தா (வேலைக்காரன்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்(சிங்கார வேலன்), ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்), அஞ்சலி படப்பாடல்கள், நீ மீத நாக்கு (ராக்‌ஷசுடு – தெலுங்கு), கடப்புறத்தொரு (எஸ் எம் எஸ் – மலையாளம்), கொம்புல பூவ சுத்தி (விருமாண்டி) . . . இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்’ பாடல்.

‘சதாவும், சசியும் (இளையராஜாவின் கிடார் இசைக் கலைஞர்கள்) மூச்சைப்புடிச்சுக்கிட்டு பாலு ஸாரை ஃபாலோ பண்ணி பாட்டு ஃபுல்லா ஓடிக்கிட்டே இருப்பாங்க. நானும்தான். ஆனா கடைசில மிருதங்கம் வந்து ஜாயின் ஆகும் பாரு. அதுல நான் மிருதங்கத்துக்கு பதில் சொல்லி வாசிக்கணும். இப்பக் கேட்டாலும் சந்தோஷப்படறதுக்கு பதிலா பயமாத்தான் இருக்கு. என்னா பாட்டுப்பா! இப்ப என்னை அந்தப் பாட்டுக்கு வாசிக்கச் சொன்னா ஏதாவது மிஸ் ஆனாலும் ஆகும்’.

பொதுவாக இளையராஜாவின் இசை குறித்து அடிக்கடி நானும், நெதர்லேண்ட்ஸில் வசிக்கும் திருநவேலி சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் சுப்பிரமணியமும் பேசிக் கொள்வது வழக்கம். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் சுப்பிரமணியத்தின் அபிமான கலைஞர் விஜி மேனுவல். அவரைத் தவிர புருஷோத்தமன் அவர்களின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர் விக்கி. இளையராஜாவின் இசை பற்றிப் பேசும் போதெல்லாம் எங்கள் உரையாடலில் தவறாமல் புரு இடம்பெறுவார். 

“உனக்காகவே வாழ்கிறேன் படத்துல கண்கள் ரெண்டும் பாட்டுல 7/8ல புரு ஸார் வாசிச்ச மாரி வாசிக்கதுக்கு இந்தியால இல்ல. ஒலகத்துலயே ஆள் கெடயாதுல்லா. அதுல அவர் குடுத்த flam paradiddles வேற யாராலயும் குடுக்க முடியாது. அதுலயே இன்னொரு பாட்டு, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’.

‘விக்கி. ராஜபார்வை வயலின் பந்துவராளி ஃபியூஷன்’ . . .

‘ஆகா. அதுல கடைசில வந்து டிரம்ல புரு ஸார் ஜாயின் பண்ற இடம்.  மத்த எல்லாரும் காணாமப் போயிருவாங்கல்லா.’

‘ஆமா ஆமா. ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட்லயும் புரு ஸார் நிறைஞ்சிருப்பாரே’.

‘Base drumக்கு சிறந்த உதாரணம் ஜானில செனோரிட்டா. Sammy Davis Foot steps ஸ்டைல்ல ஒரு பாட்டு உண்டே ஆனந்த் படத்துல.’

‘தொடாத தாளம்தானே?’

‘ஆமா. அதுல ரிதம்ல புரு ஸார் அவ்வளவு நேர்த்தியா வெளையாடிருப்பாரு. ஹை ஹாட் வாசிப்புல அவர் குடுத்த துல்லியம்’.

‘நான் தேடும் செவ்வந்திப் பூ இண்டர்லூட்ஸ்தானே?!’

‘ஆமா ஆமா. மடை திறந்து பாட்டுலயும் உண்டே. அவர் வாசிக்கிற Feather touch playing styleலுக்காகவே ராஜா ஸார் நூத்துக்கணக்கான பாட்டை உருவாக்கிக் குடுத்திருக்காரு.’ 

‘சந்தோஷம் இது சந்தோஷம் பாட்டைப் பத்தி சொல்லும் போது ராஜா ஸார் இதைத்தான் சொன்னார் விக்கி.’

‘படித்துறை’ திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கண்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட்,  ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் பிறந்தநாள்.

The post ராஜதாளம் . . . appeared first on வேணுவனம்.

அ. ரெங்கசாமியும் மூன்று கதைகளும்

எழுத்தாளர் அ.ரெங்கசாமி காலமாகியச் செய்தியை எழுத்தாளர் ம.நவீன் புலனத்தில் இட்டிருந்த அறிவிப்பின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். அன்றிரவே அவருக்கு அஞ்சலி செலுத்த அவருடைய வீட்டுக்கு நானும் சண்முகாவும் சென்றோம். சவப்பேழையில் கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் ரெங்கசாமி கிடத்தப்பட்டிருந்தார். கைக்கூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். பொதுவாகவே, எழுத்தாளர்களையோ ஆளுமைகளையோ நேரில் சந்திப்பதில் எனக்குச் கூச்சம் அதிகம். அப்படி…

Read more →

❌