Normal view

Received before yesterday

அனுப்பினால் போகாத பணம்

14 May 2025 at 13:30
UPI

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) கடந்த சில வாரங்களாக அவ்வப்போது செயல்படாமல் போகிறது. இதனால் நாடு முழுவதும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஏப்ரல் 12-ம் தேதி ஏற்பட்ட செயலிழப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் நடந்த மிக நீண்ட நேரச் செயலிழப்பாகக் கருதப்படுகிறது. அன்று சுமார் ஐந்து மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. 

UPI

இதன் காரணமாக, இந்தியாவின் மென்பொருள் நிதி சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள பணப்பரிவர்த்தனை இடைமுகம் அடிக்கடி ஏன் செயலிழக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். 

எப்படிச் செயல்படுகிறது?

இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) உருவாக்கிய பணப்பரிவர்த்தனை இடைமுகம், எளிய இரண்டு கட்ட அங்கீகார செயல்முறையின் மூலம், ஒரு நபருக்கும், வங்கிகளுக்கும் இடையே பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இந்த அமைப்பு செயல்பட முதலில் வங்கிகள் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை ஒரு பதிவு செய்யப்பட்ட திறன்பேசி எண்ணுடன் பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி (PSP) உடன் இணைக்க வேண்டும். 

ஒவ்வொரு ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமும் தேசிய கொடுப்பனவு கழகத்தால் வழிநடத்தப்படுகிறது. இது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான வங்கி தகவல்களைக் குறியாக்கம் செய்து பாதுகாப்பாகப் பரிவர்த்தனை விவரங்களை வாடிக்கையாளரின் வங்கிக்கு அனுப்புகிறது. எனவே தேசிய கொடுப்பனவு கழகத்திடம் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த குறியாக்கத் தகவல்களை வங்கிகள் பெற முடியாது இதனால் பரிவர்த்தனைகள் தோல்வியடைகின்றன. 

நீண்ட நேரச் செயலிழப்புக்கான காரணம்

பொதுவாக ஒரு பரிவர்த்தனைக்குப் பின் பயனாளியின் வங்கியிலிருந்து உறுதிப்படுத்தல் வராதபட்சத்தில் வங்கிகள் பரிவர்த்தனை சரிபார்ப்புக் கோரிக்கையை அனுப்புகின்றன. இது பெரும்பாலும் பயனாளி வங்கியின் சேவையகம் செயல்படவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். தேசிய கொடுப்பனவு கழகத்தின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கையை அனுப்ப வேண்டும். 

ஆனால் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் நீண்ட நேரம் செயல்படாமல் இருந்ததற்கு இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகள் மிக அதிக அளவில் அனுப்பப்பட்டதே காரணமாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி வங்கியின் பதில்கள் வருமுன் பலமுறை இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகளை அனுப்பி தேசிய கொடுப்பனவு கழகத்தின் சேவையகத்தில் அதிகமாய் சுமை ஏற்க வைத்தன. இந்த பெரிய அளவிலான சிக்கலே நீண்ட நேரச் செயலிழப்புக்கு வழிவகுத்தது. 

தேசிய கொடுப்பனவு கழகம் இந்த பிரச்சனையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலியின் உறுதிப்படுத்தல் அம்சத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லியது. அதைத்தொடர்ந்து பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வு கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் விரைவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அதற்குள் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம், உலகிலேயே மிக வலுவான மென்பொருள் பரிவர்த்தனை அமைப்பாக இருந்தாலும் சமீபத்திய செயலிழப்புகள்,  சேவை வழங்கும் வங்கிகள் விதிகளைக் கடைப்பிடிக்காததில் உள்ள பிழைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. வங்கிகள், சேவை வழங்கும் செயலிகள் மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் இடையே சிறந்த ஒத்துழைப்பு மற்றும் நேரடி கண்காணிப்பு அம்சங்களை உறுதி செய்தால்தான் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுக அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.

  • சத்யா கோபாலன்

The post அனுப்பினால் போகாத பணம் appeared first on செல்லினம்.

❌