Normal view

Received before yesterday

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது. பொதுவாகவே மலேசியத் தமிழர்கள் மத்தியில் ‘டேவான் […]

அவளின் சிரிப்பு – க. மாரியப்பன்

மொழிபெயர்ப்புச் சிறுகதை : தெலுங்கிலிருந்து தமிழுக்கு

அவளின் சிரிப்பு

தெலுகு படைப்பு : ஶ்ரீசுதா மொதுகு
தமிழாக்கம் : க. மாரியப்பன்

                னால் முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன? யார் முடிவு செய்கிறார்கள், எப்படி முடிவு செய்கிறார்கள்? அன்றைக்கு நீ அப்படி முடிவெடுத்து வராமலிருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது அல்லவா! எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டாய் பூர்ணா?

                ஹாஸ்பிட்டல் காரிடாரில் தூரமாக எறியப்பட்டதாகத் தெரிந்த மரமேசையை நோக்கி நடந்தேன்.

                                                                                —            —            —

                வாழ்க்கையின் சிறந்த தருணம் என்னவென்று தெரியுமா! உன்னவர்கள் என்று யாரை நீ நினைத்தாயோ அவர்கள் உன்னை விட்டுப் போனால் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சுவிடுவது. அப்படி இருக்கும்போது சுதந்திரத்தை அனுபவிப்பவது நன்றாக இருக்கும். வேறு யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை அதில் அடங்கியிருக்கிறதா? அவ்வளவு தொலைநோக்குப் பார்வை தேவைதானா? இன்னும் எனக்கு மட்டும் மிச்சிமிருக்கிற காலம் எவ்வளவு?

                சமையலைறையிலிருந்து டீ வாசனை மிதந்து வந்தது. அதற்கு முன்பு டீயோடு கலந்து பூர்ணாவின் வாசனையும் கலந்து வரும். வெறும் டீ வாசனை நன்றாக இருந்தது.

                பூர்ணா போய்ப் பத்துநாட்கள் ஆகின்றன. மனிதர்கள் விட்டுவிட்டுப் போய்விட்டால் உள்ளே ஏதாவது காலியாகுமா? வரும்போது உள்ளே மெல்ல மெல்ல உள்ளே நுழைகிறார்கள். வெளியேறும்போது உள்ளே அவர்கள் விட்டுச் சென்ற சூனியமே நிரம்பியிருக்கிறது நிஜமே, அவர்கள் நிரப்பியது எதாவது இருந்தால், உள்ளே எதற்கு இவ்வளவு சூனியம்! பூர்ணா வருவதற்குமுன் நன்றாகவே இருந்தது. சார்ந்து இருப்பதனாலேயே எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். என்னவொரு மகிழ்ச்சி துக்கமே!

                ராமம் கத்தினான். அவன் ஏதோ சொல்கிறான் இப்படிப்பட்ட யோசனைகளில் உள்ளபோது, சில சமயங்களில் ஒரு விஷயமாக இருக்கும். ஒருமுறை அவனின் கத்தல் எவ்வளவோ கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவனை எங்காவது விட்டுவிடவேண்டும் என்று தோன்றியது.

                ஒரு வாரம் புதிதாக ஏதோ சுதந்திரம் வந்ததுபோல் இருக்கிற நாட்கள் செல்லச்செல்ல வலது கை போய்விட்டதுபோல் தோன்றியது.

                என்ன குறை வச்சேன் பூர்ணாவுக்கு? உண்மையில் ஏதாவது செய்தேனா?

                எப்படிப் பார்த்தேன்? ஒரு சமையல்காரிதானே! ருசியாகச் சமைப்பது மட்டுமின்றி, நம் தேவை எப்பொழுது என்ன இருக்கிறதோ பார்த்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுப்பவள், வெறும் சமையல்காரி ஆகிறாளா? கௌரமாகத்தான் நடத்தினேன் அல்லவா! எப்பொழுது பணம் கேட்டாலும் அதிகமாகவே கொடுத்தேன், ஒருமுறை கேட்காமலும்கூடக் கொடுத்தேன். அது சரி போதுமா? போதாது! கல்யாணத்துக்கு வாங்குற மாதிரி வாங்கணுமா, சினிமாவுக்கு, ஊர் சுற்றிவிட்டு வருதற்கா?

                கல்யாணத்துக்காகவா இதையெல்லாம் செய்தேன்? அவளுக்கு எதற்கு செய்யணும்? எப்பொழுதாவது கல்யாணமானது உண்டா? முழுச் சுதந்திரம் கொடுத்தேன் இல்லையா! எதற்காகக் கொடுத்தேன்? இதைக் காட்டிலும் செய்வதற்கு என்ன இருக்கிறது, என்ன வேண்டுமோ அவற்றைச் செய்தேன். அவளை நான் எதும் அபியூஸ் செய்தேனா? ‘’திட்டுவது அடிப்பது மட்டுமே அபியூஸா, வீட்டில் இன்னொரு மனுஷி இருக்கிறாள் என்ற பிடிப்பே இல்லாமல், தன்னுடன் வாழும் மனுஷியை உடன் வைத்துக் கொண்டு புறக்கணிப்பதைவிடப் பெரிய அபியூஸ் என்ன இருக்கிறது?” என்றாள் அவள். அது என்ன, அது எனக்கு நானே செய்துகொள்கிற செல்ப் அபியூஸ் அல்லவா! உண்மையில் அதெல்லாம் அவள் செய்து கொண்டதாலேயே. “ஆனால் அதற்கு முன்பு மட்டும் நீ மனுஷியாக எப்பொழுது பார்த்தாய்?” என்பதுபோல் கேள்வி கேட்பதுபோல் அவள் பார்க்கும் நேரடிப் பார்வை, பயத்தைத் தந்தது.

                அவளென்றால் சரி, ஆனால் பூர்ணா எதற்கு சென்றாள்?

                அவள் சென்றபொழுதுகூட இவ்வளவு வலிக்கவில்லை. பூர்ணா சென்றதுதான்…

                “போகிறேன்” என்று எவ்வளவு சிம்பிளா சொன்னாள்! எப்படி அப்படி உன்னால் போக முடிகிறது? ஆனால் அவளைத் தடுக்க எனக்கு என்ன அதிகாரமிருக்கிறது?

                “இன்றிலிருந்து பூர்ணா இங்கேயே இருப்பாள்” என்றாள் அவள் செல்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பு. அவளின் பேச்சுக்கு எப்பொழுதும் எதிர்த்தும் சொன்னதில்லை, தலையாட்டியதும் இல்லை. வழக்கமாகப் பஜாரில் எதிர்ப்படுகிற பத்து மனிதர்களில் ஒருவராகத் தெரிந்தாள் பூர்ணா. மறுபடியும் பார்க்கவேண்டும் என்று நினைக்கும்படியான சிறப்பு எதுவும் அவளிடம் தெரியவில்லை.

                ஒருசமயம் அவள் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டாள். உடல்நிலை சரியில்லாமல் திரும்பி வந்தாள். எங்கும் போக முடியாதா இல்லையென்றால் நான் எப்பொழுதும் அவளைக் கவனித்துக் கொள்வேன்  என்று நினைக்கிறாளோ என்று எனக்குத் தெரிவில்லை. அவளுக்கு எந்த மூலையிலோ ஒரு நேசம் இருந்தே ஆகவேண்டும்.

                ஏன் இருக்க வேண்டும்? நான் எப்பொழுதும் அவளை மறுக்கவில்லை. அதற்காக அவளை நெருங்க முயற்சித்ததும் இல்லை. அப்படிச் சென்றதற்கு எப்பொழுதாவது வருத்தப்பட்டு, பச்சதாபம் படுவாள் என்று நம்பினேன். விசித்திரமாகச் சிலநாட்கள் சுற்றிவிட்டு உன்னிடம் வருவது உன் அதிர்ஷ்டம் என்பதாக இருந்தது அவளின் நடத்தை. என்ன செய்தாலும் மன்னிக்கிற நேசம், இவ்வளவு விசாலமான இதயத்தின் பெருந்தன்மையைப் பார்த்துக்கூட எதையும் பொருட்படுத்தாமல் அவள் வருவதே என் அதிர்ஷ்டம் என்று எப்படி இப்படி நடந்து கொள்கிறாள். புரியவில்லை. அவளை சிறுமைப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு நானே பாதாளத்தில் இருப்பதுபோல் எதற்குத் தெரிகிறதோ எனக்குத் தெரியாது. நீயே எனக்கு ஆதாரம் என்று எப்பொழுதும் என் தோளைப் பிடித்துக்கொண்டு அழுவது எதற்கு, கண்ணீரால் என் கால்களைக் கழுவுவது எதற்கு?

                எப்பொழுதோ ஒருமுறை “அனில், நீ எதற்கு என்னைப் பொறுத்துக் கொள்கிறாய்? என்ற பொழுது அவளின் கண்களில் அளவற்ற கருணை. அவள் நெஞ்சின்மேல்  தலை வைத்துக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் எதற்கு அப்படிச் சாய்ந்து கொள்ளவேண்டும்? ஒவ்வொரு முறையும் அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், “நீ இப்படி இருக்காத, நீ எது நிஜமோ அப்படியே இரு” என்று. கோபம் தள்ளிக் கொண்டு வந்தது. எனக்குள் அவ்வளவு கபடம் இல்லையென்று தூக்கியெறியத் தோன்றியது.

                ‘’உனக்கு நான் என்ன குறை வைத்தேன்’’ என்று கேட்கத் தோன்றிய பொழுது, என்னால் என்ன கொடுக்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். என் அறைக்குள் யாரையும் உள்ளே வராதபடி வெளியே வைத்திருக்கிறேன் அல்லவா! அப்புறம் அவர்கள் மட்டும் எத்தனை நாட்கள் இருப்பார்கள், அவளை வரவிட்டிருக்கிறேன். மூச்சுவிடமுடியவில்லையென்று சென்றுவிட்டாள். அது என் தப்பா? ஒரு மனுஷியை நேசிப்பது, ஆதரவளிப்பது, துணையாக இருப்பது, இவற்றையெல்லாம் நான் எப்படிச் செய்ய முடியுமோ அப்படியே செய்தேன். அவள் எதிர்பார்த்தபடி எப்படி இருக்க முடியும்? வெளியேறுவது அவளின் சுதந்திரம் அவ்வளவுதான். துவேஷம், காதல், வலி, பக்தி ஏதோ ஒன்று அவளைச் சூழ்ந்திருக்கிறதா எதற்கோ?

                பூர்ணா வந்ததும் நான் குறைவு என்ற பாவனையை என்னிலிருந்து நீக்கினாள். நானும் ஒரு மனிதன்தான் என்று உணர்ந்தேன். என்னவோ! மனிதர்கள் இரக்கமானவர்கள், அப்படியே மோசம் செய்பவர்களும் கூட. குடித்துவிட்டு லேட்டாக வந்தாலும் டேபிள்மேல் சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்று தயாராக இருக்கும். மனிதர்களே இருப்பதில்லை பேசுவதற்கு.

                இரண்டோ மூன்றோ டிரஸ்கள் இருந்தன பூர்ணாவிடம். மிகவும் தெரிவது சிவப்பு வண்ண டிரஸ். அவள் எப்பொழுதும் பூர்ணாவைப் பெரிதாக அதட்ட நினைத்தது கிடையாது. எப்பொழுதாவது “ஓ ராஜகுமாரி எங்கே சென்றாய்?” என்றாள்.

                அவள் சென்றுவிட்டாள், மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு. நான் கவலைப்பட்டேனா! அப்புறம் திரும்பமுடியாத தூரத்திற்குச் சென்றதற்குக் கவலைப்பட்டேன். சில நாட்களுக்கு முன்பு அவள் சொன்னாள் “நான் இல்லாவிட்டாலும் பூர்ணா இங்கேயே இருப்பாள். குறைந்தபட்சம் பூர்ணாவையாவது போகவிடாமல் பார்த்துக்கொள்” என்று. “சமையல்காரி, அவளைக்கூடச் செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமா!” என்றேன் கோபமாக. எதிர்த்து என்னைப் பார்த்தாள். ‘உன்னைக் கவனித்துக் கொண்டு துணையாக இருக்கும் மனுஷியைக் காட்டிலும் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும்? பூர்ணாவை இழந்துவிடாதே அணில்” என்றாள்.

                ‘இவ்வளவு காதலித்த நீயே சென்றுவிட்டாய், இனி பூர்ணா எதற்கு? நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்த நான் இவ்வளவு சூன்யமாவது எதற்கு.

                அப்பொழுது வந்தான் ராமம். அதென்னவோ அவன்கூட அவள் முன்பு எதுவும் கத்துவதில்லை. அவளுக்காகப் பக்தியோடு பிரார்த்தனை செய்தான் கொஞ்சநேரம். என் அருகில் வந்தபொழுது சிரிப்பு, நான் ஒருவனே என்பதுபோல் இருந்தது அவனின் பார்வை. பூர்ணாவோடு இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தது கிடையாது. இவனை விடப் பூர்ணாவே குணம்.

                வர வர பூர்ணாவின் மீது ஆதாரப்படுவது அதிகமாகியது. அவள் போனதும் பூர்ணாவும் சென்றுவிடுவாள் என்று நினைத்தேன். போகவில்லை, இருந்தாள். எனக்காக இருக்கிறாள் என்ற ஆனந்தமும் கூட, எனக்காக இல்லை போக்கிடம் இல்லாததால் இங்கே இருக்கிறாள் என்று தோன்றியது.

                ஓருவேளை எப்படித் தொடங்கியதோ அதிகாரம், விருப்பத்தோடு என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற ஒருவன் பரிதாபப்படுவது சாதாரண விசயமா! பூர்ணாவிற்கு மட்டும் விருப்பங்கள் இருக்காதா? அவற்றை முழுவதுமாகக் கொன்றுவிட்டு இருக்கிறாள். ஒரே வீட்டில் இருக்கிறோம். நினைப்பவர்கள் என்னமும் நினைத்துக் கொள்ளட்டும். அது தேவையற்றது. நான் கருணை காட்டினேன். அவள் கையைப் பிடித்துக் கொண்டு நிஜமாகவே என் விருப்பத்தைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரித்தாள். உடல் அருவருக்கும்படியாக, உள்ளே பயத்தை உண்டாக்கினாள். அந்தச் சிரிப்பில் அலட்சியம், எதிர்ப்பு, நிசப்தம். ‘எதற்கு இப்படிச் சிரித்தாய்’ என்று கேட்கிற தைரியம், அவளைப் பிடித்திருக்கிற விருப்பம் நின்று விட்டது.

                பூர்ணா சென்றுவிட்டாள். ராமம் என்னைச் சுற்றி வருகிறான். அவனுக்கு இப்பொழுது சாப்பாடு போடுபவர்கள் யாரும் இல்லை. நான் வைத்தால் சாப்பிடுவதும் இல்லை. அவன் என்னைப் போலவே, இல்லையென்றால் வெளியே பூனை போல நடந்து கத்திக்கொண்டு சுற்றுகிறான். அவன் பூனைதான். பூனைக்கு விசுவாசம் இருக்கும் என்பார்கள். இவன் என்ன சாப்பிட கூட இல்லாமல் விசுவாசத்தைப் பிரகடனப்படுத்துகிறான்! ஒருவேளை அவனுக்குள் ஒரு நிஜமான மனிதன் இருந்திருக்கலாம். எனக்குள் பூனையின் கத்தல். நான் விசுவாசம் அற்றவனா?

                பூர்ணா எங்கே சென்று விட்டாள்? யார் இருக்கிறார் அவளுக்கு?

                பத்து நாட்கள் என்பது ஒன்பது மாதங்கள் ஆனது. ராமம்கூட நடுவில் அவளைப் போலவே சென்று வந்தான். அவனோடுகூட ஒரு சின்னப் பூனைக்குட்டி. அவனின் குட்டியோ என்னமோ, பொத்து பொத்தென்று இருந்தது. உண்மையில் ஆண் பூனைகள் அவற்றின் குட்டிகளை நினைவில் வைத்துக்கொள்ளுமா என்ற டவுட் வந்தது. அவைகளுக்குப் பால் ஊற்றுகிறேன். செலவு செய்கிறேன். ராமம் எங்கு சென்று வந்தாலும் என்னைவிட்டுப் போகாமல் இருக்கிறான். குட்டிப்பூனை என்னைச் சுற்றிச்சுற்றி வருகின்றது. கொஞ்சம் கர்வமாக உணர்ந்தேன். நான் அவற்றுக்கு உணவளிக்கிறேன் என்று.

                ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கதவைத் தட்டுகிற ஓசை. எதிரில் பூர்ணா, பெரிய வயிறோடு. பார்த்ததும் ஆவேசம் வந்தது. “இங்க எதுக்கு வந்த?” விக்கல் கேட்கிறது. இந்த ராத்திரியில் வந்தாள். குட்டிப்பூனை என் காலைச் சுற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒதுங்கிக் கொண்டேன்.

                கோபமாக இருந்தது. நாளை காலையிலேயே சென்றுவிடு என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எதற்கு கோபம். யாருடனோ சென்றாள். தனியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்தாள். ச்சீ! வெட்கம் கெட்ட ஜென்மம். இப்படி நினைப்பதில் ஏதோ திருப்தி இருந்தாலும், எதற்கோ மிகவும் திருப்தியற்று இருந்தது.

                காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தபொழுது அதே டீ வாசனை. எத்தனையோ நாட்களாக மறந்துபோன டீ வாசனை. ராமத்தின் அலறல் சத்தம் பலமாகக் கேட்டது. இப்படிப்பட்டதை வீட்டில் வைத்திருந்தால் உலகம் என்ன நினைக்குமோ என்னவோ…! உலகத்தைப் பார்க்காமல் கையைப் பிடித்துக்கொள்வது பரவாயில்லையா அப்புறம்!

                இந்தக் கர்ப்பம் யாரால் வந்தது என்று கேட்கவேண்டுமென்று நினைத்தேன். பூர்ணாவின் முகத்தில் ஒளியின் பின்னால் காணப்படும் மெல்லிய இருள் தெரிந்ததுபோல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இந்தப் பெண் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எங்கெங்கேயோ சுற்றி வழியில்லாமல் மறுபடியும் இங்கே வந்தாள். இவளை எதற்கு நான் பார்க்க வேண்டும்? கேள்விகள் அருகிலேயே நின்றுவிட்டன. பூர்ணா எங்கேயும் செல்லவில்லை. நான் ஊகித்ததுபோல எனக்கு எதிர்படுவது அதிகமாகியது.

                ராமம் குட்டிப்பூனையை விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டான். இரண்டு நாட்கள் தேடினேன். எதிர்பார்த்தேன். பூனைகள் செத்துப் போனால் அன்றி எஜமானின் அருகில் வராமல் இருப்பதில்லை’ என்றாள் பூர்ணா. ஆமாம் அவை பூனைகள். அதே மனிதர்கள் என்றால் அவசரம் ஏற்பட்டால் தவிர வர மாட்டார்கள். வார்த்தை தொண்டையிலேயே நின்று விட்டது. ஆனால் நான் யாருக்கு எஜமானன்? ஒருவருக்கு நான் வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு எஜமானன் ஆகிறேனா? கொடுக்க முடியாததையும் நிரப்ப முடியாதையும் பூர்ணா தந்துள்ளாள், ராமம் செய்த வேலையை மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் போக்கிடம் இல்லாமல் வந்தார்கள் என்று மனம் என்னை ஆட்டுவித்தது. ஆம், அந்த மனம்தான் எல்லாவற்றுக்கும் எஜமான்.

                பூர்ணா அடியெடுத்து வைத்ததால் வீடு வீடு மாதிரி இருந்தது. வெறுமையெல்லாம் எதனாலே நிரம்பியது. அந்தக் காற்றில் ஏதோ உயிர்ப்பு. ராமம் இல்லாத வெறுமை பெரிதாகத் தெரியவில்லை.

                                                                                —-           —-           —-

                “இந்தப் பாரத்தில் கையெழுத்துப் போடு”

                “எதுக்கு?”

                “ஆப்ரேஷனுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்று”

                நான் எதற்கு செய்ய வேண்டும்? நான் யார் பூர்ணாவிற்கு? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது? அவள் பூர்ணாவைக் கொண்டு வந்து என்னிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். கையெழுத்திட்டேன்.

                “பீ பாசிட்டிவ் ப்ளட் குரூப்ல பேசினோம். பொண்ணு ரொம்பப் பலவீனமா இருக்குறா, சின்ன வயசுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வெள்ளை ஆடையில் ஒளிர்கிற நர்ஸ்.

                அவ்வளவு சின்னவளா பூர்ணா! நாற்பது வயது நிரம்பியவளைப் பார்க்க மிகவும் சின்னவளா? அவ்வளவு சின்னவளா இருந்தா வயிறைத் தள்ளிக் கொண்டு எப்படி வந்தாள்! இப்பொழுதாவது கேட்கவேண்டும் இந்தக் குழந்தை யாருடையதென்று.

                அழுகை கேட்டது. புதிய அழுகை, உலகத்தை அறிமுகப்படுத்தும் அழுகை. வெள்ளை ஆடை அணிந்து கொண்டிருக்கிற நர்ஸ் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட குழந்தையை எடுத்துக் கொண்டு சிரித்தபடி கைகளில் வைத்துச் சொன்னாள் “பாப்பா பிறந்திருக்கு சார்! உங்களுக்கு வாழ்த்துக்கள்”

                பாப்பா கையை இறுக்க மூடி வைத்திருந்தது.

                தூரத்தில் எங்கேயோ ராமம் குட்டிப்பூனையை அழைத்து வந்து என்னை நோக்கிக் கத்துகிற கத்தல் கேட்கிறது. குட்டிப்பூனை கத்துகிற மெல்லிய கத்தல்.

                பாப்பா அழுகையை நிறுத்தியது. கைவிரல்களைச் சிறிதாக விரித்தது. கண்கள் சிமிட்டி  வெளிச்சத்தைப் பார்த்தது. மென்மையான உதடுகளின்மேல் உதயமாகிற ரகசிய பாஷையைப் பிரமிப்பாகப் பார்த்தேன். பரவசமான அவளின் சிரிப்பு. அவளின் சிரிப்பே அது. ஆமாம் அவளின் சிரிப்பே.

                “சார், இந்தப் பாரத்தில் தாய் தந்தை விவரங்களை நிரப்புங்கள்” என்றாள் நர்ஸ் வந்து.

                சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்தேன்.

                முடிவுகளை வெறும் காலம் மட்டும்தான் முடிவு செய்கின்றது.

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2) – அகமது கனி

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2)

மலையாளப் படைப்பு : ஜெயசீலன்
தமிழாக்கம் : அகமது கனி

குறவன் குறத்தி

வடக்கன் பாட்டுகளில் காணப்படுகிற குறவனும் குறத்தியும்தான் இந்த பொறாட்டுகளில் குறிப்பிடப்படும் குறவன் குறத்தி ஆவார்கள். கை பார்த்து குறி சொல்வதில் இவர்களுக்கு பிரத்தியேகமான திறமை இருக்கிறது. குறவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண வழக்கம்தான். இரண்டு மனைவிகளும் மேடைக்கு வருவார்கள். குறவருக்கு சித்தனர் என்கிற பேரும் உண்டு. பண்டைக் காலத்தில் சமண மதம் ஏற்றுகொண்ட ஆதி திராவிடர்கள்தான் குறவர்கள். கேள்விக்காரனுடைய கேள்விகள் மூலமாக குறவனுடைய மனைவிகளின் எண்ணம் வெளிப்படுகிறது. குறவனே சொல்லுகிறான்: எனக்கு இரண்டு மனைவிகள் இளங்குடியும் முதுகுடியும். இரண்டு மனைவிகளைக் கட்டினால் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்விக்காரனுடைய கேள்விக்கு குறவனிடம் பதில் இருக்கிறது.

இருகுடி கெட்டியராளுகளெ ஞான்
ஓரோன்னாயிட்டும் செய்திடாம்
வேலர்க்கில்லே ரண்டாளச்சா
வள்ளியென்னும் தைவானயுமாயி
பரமசிவனில் பார்யமாராயி   
சிரசில் வச்சு நடந்நிட்டில்லே 
கங்காதேவிய சிரசிலிருத்தி                                                                 பார்வதிதேவியக்கூட நடத்தி
இந்திரனில்லே நாலாளச்சா
ஊர்வசி மேனக ரம்ப திலோத்தம
பதினாறாயிரமெட்டும் ஸ்த்ரீகளெ
கிருஷ்ணன் கெட்டிவலிச்சிட்டில்லே?

இதையெல்லாம் சொல்கிற குறவனுக்கு குறத்தி மேலே சந்தேகந்தான். அவர்கள் இருவருக்கும் இடையேயான தர்க்கத்தின் முடிவில் குறத்திக்கும் சொல்வதற்கு விசயம் இருக்கிறது.

உத்தமியாயிட்டாணும் பெண்ணும்                                                   
லோகத்தில் இல்லா நாணு                                                                 
கத்தி எறியுந்ந தீபமாணே                                                        
சத்தியமாமல்லோ

(மற்ற பொறாட்டுகளைப் போல இங்கேயும்) குறவனுக்கு பரிபூரணமான திருப்தி இல்லாவிட்டாலும் கடைசியில் அவர்கள் ஒன்றுசேர்கிறார்கள்.

கவரனும் கவரச்சியும்

பறைச்சி பெற்றெடுத்த பன்னிரு குலத்திலே ஞானியும் வாக்குரைப்பவருமான பாக்கனாரின் வழித்தோன்றல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிற — பாலக்காடு மாவட்டத்திலே மலவர்க்கக்கார் (மலையர்) என்ற பெயரில் இருக்கும் இவர்கள் — பணத்தாலும் சமூக அந்தஸ்த்தாலும் கீழ்த்தட்டில் வசிக்கும் மக்களாகிய கவரர்கள்.

பாலக்காட்டின் மலையோரப் பிரதேசங்களிலும் உள் பிரதேசங்களிலும் நிறைய கவர குடில்கள் உண்டு. கூட்டமாக வசிப்பதுதான் இவர்களது விருப்பம். காட்டுக்குப் போய் மூங்கில் வெட்டி அதை பிரித்து காயவைத்து, தட்டி, வட்டி, முறம், முதலியன முடைந்து விற்றுப் பிழைப்பதுதான் அவர்களது வாழ்வாதாரம். தென்னிந்தியாவிலுள்ள திராவிட மொழிகளின் கலவைதான் இவர்களின் பேச்சுவழக்கு.

கவரனின் வரவு கானம்…….

ராராரீ ராரிரோ ராரிரங்காளி
ரூராரீ ரூரிரோ ரூரிரங்காளி
என்னங்களெ மேதி என்னெ பிரிந்தோடி
எல்லியோயுட்டாத்து
ஐதாறு திங்களாத்து பணித்தரம்
மாறோடி ஓயிற்றுட்டாத்து
பெரியிச்சேரி கஞ்ஞிவய்க்கோடி
அக்கியொந்நுமில்லாடா

புன்னப்பாற வட்டயிலோப்பயம்
விதறுகடி ஓயிற்றுட்டாத்து
விதறுகடிந்தப்போ நானும் விளுந்தப்போ
 ஆளெக்கொல்லி வந்திற்றுட்டாத்து

ஆளெக்கொல்லி என்று சொல்லப்படுவது பணத்தைக் குறிப்பதாகும். மூங்கில் மரத்தை வெட்டும்போது அதனுள்ளிருந்து நாணயங்கள் உதிர்ந்து விழுந்தன. ”ஆளெக்கொல்லி”யாகிய (அப்)பணத்தைக் கண்டு நான் பயந்தோடி வந்தேன்.

ஆனால், வீட்டில் வந்து பார்க்கும்போது கஞ்சி காய்ச்ச ஒரு மணி அரிசி கூட இல்லை. பின்னர், கூப்பன்2 கடைக்குப் போய்ப் பார்த்த போது அங்கிருந்து கடன் கிடைக்கவில்லை.இனி என்ன செய்வதென்று அறியாமல் கவரன் கலங்குகிறான்.

கவரனுடைய இந்தக் கற்பனையிலிருந்து மனித வாழ்க்கையின் சில தத்துவங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. கவரனும் கவரச்சியும் சேர்ந்து பரியாணம்பற்ற திருவிழா பார்க்கப்போனதும், யானை மிரண்டோடிய நேரத்தில் ஆள் கூட்டத்தில் அவர்கள் பிரிந்ததும், அப்புறம் கவரச்சியே கண்டுபிடிக்கிற சிரமத்திற்கிடையில்தான், கவரன் இங்கு வந்தடைந்ததும் சொல்லப்படுகிறது. கவரச்சியைப் பார்க்கும்போது உண்டாகிற சண்டைக்கு வித்தியாசம் இருக்கிறது. கவரன் கோபப்படும்போதும் கவரச்சி பக்குவமாக பேசுவதைப் பார்க்கலாம். கதைகளும் சிறுகதைகளுமாய் நேரம் நீண்டுபோகிற பொறாட்டுகளிதான் இது.

தொட்டியன் தொட்டிச்சி

அறுவடையோடு தொடர்புடைய பாலக்காட்டிற்கு வந்துசேர்கிற சில மக்கள் கூட்டங்கள் உண்டு. ஒரே நேரத்திலே வியாபாரமும் பிச்சையெடுப்பதும் இவர்களுடைய நோக்கமாக இருக்கும். சோப்பு,சீப்பு, கண்ணாடி, ரிப்பன் போன்றன எல்லாம் விற்று நடப்பார்கள். சில நேரங்களில் இவையெல்லாம் வேண்டாமென்று வைத்துவிட்டு பிச்சையெடுக்க இறங்குவார்கள். பச்சை குத்துவதும் கைரேகை சோதிடம் பார்ப்பதும் இவர்களின் பிழைப்பின் ஒரு பகுதி. சாதாரண மிதுனப்பொறாட்டில் இருக்கிற (தம்பதி) பிரிவும் கேள்விக்காரன் காண்பித்துக் கொடுப்பதும் இந்தப் பொறாட்டிலும் உண்டு. அதற்கு அப்புறம் உள்ள சண்டை மிக வித்தியாசமானதாக இருக்கும். கணவன் மனைவி பிணக்கும் அதன் பின்னரான வாக்குவாதங்களுக்கும் முடிவில் உலகத்தைப் பற்றி சிந்திப்பதும் தத்துவம் பேசுவதும் இந்தப் பொறாட்டுகளியை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும். தொட்டிச்சி அரங்கத்திற்கு வருகிறாள். தொட்டியனும் உண்டு. தொட்டியனுடைய கேள்வி …. .

தொட்டியன்: ஊருக்குப் போகலாமா புள்ள
தொட்டிச்சி: நா வர்றதில்ல
தொட்டியன்: காரணமென்ன?
தொட்டிச்சி: சண்ட
தொட்டியன்: என்ன சண்ட?
தொட்டிச்சி: எங்கேள்விக்கு பதில் சொல்லு.
பூமிக்கு முன்னே பிறந்ததாரு?
தந்தையில்லாத புத்திரனாரு?
பாலகணபதியப்பெற்றதாரு?
சிறகில்லாத பட்சியெது?
வேரில்லாத மரமெது?
இதுக்கு உத்தரம் சொல்லியே தந்தால்
பத்தினி நான் உன்கூட வருவேன்.

தொட்டியன்: பூமிக்கு முன்னே பிறந்தது ஜாம்பவான்
தந்தையில்லாது பிறந்தது விஷ்ணுபகவான்
பாலகணபதி தன் மாதாவு பார்வதி
சிறகில்லா பட்சி ஆத்மாவுதானே
வேரில்லா மரம் ஆகாசந்தானே
இப்படியாக்குமது அதுக்கெல்லாம் உத்தரம்
பத்தினி எங்கூட வருவாயடி

தொட்டியனுடைய பதிலில் திருப்தியாகி அரங்கிலிலுள்ள சபையோர்களை வணங்கி தொட்டியனும் தொட்டிச்சியும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சக்கிலியன் – சக்கிலிச்சி

இது ஒரு நீண்ட பொறாட்டுகளி ஆகும். சக்கிலியர்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குடியேறியவர்களாவார்கள். இவர்கள் தமிழும் தெலுங்கும் பேசுவார்கள். செருப்பு தயாரிப்பது இவர்களது தொழில்.

தப்பட்டை என்கிற வாத்தியக் கருவி கொட்டுகிற வழக்கமும் உண்டு. மேலும் காளை இறைச்சியையும் எருமை இறைச்சியையும் இவர்கள் உண்ணுவார்கள். அதனாலே சக்கிலியனைப் பார்த்த கேள்விக்காரன், அயித்தம் (அசுத்தம் மற்றும் தீண்டாமை) இருக்கிறது என்று சொல்கிறான். அதனை எதிர்த்து சக்கிலியன் கேள்வி கேட்கிறான்.

சக்கிலியன் : எதனாலே அயித்தம்?
கேள்விக்காரன்: செத்த மாடு, புழுத்த மாடு தின்கிறதாலே அசுத்தம்.
சக்கிலியன் : அசுத்தமானது எங்கு இருக்கிறது சாமி?
கேள்விக்காரன்: மனசுக்குள்ளே இருக்கிறது.
சக்கிலியன் : மனசுக்குள்ளே இருக்கிற அயித்தம் எப்படி போகும் சாமி?
கேள்விக்காரன்: ஆற்றிலே போய் வீழணும்.
சக்கிலியன் : ஆற்றிலே முழுகியது தேகமா, மனசா சாமி?
கேள்விக்காரன்: தேகம்.
சக்கிலியன் : அப்போது தேகத்தில் இருக்கிற அயித்தம் எப்படிப் போகும் சாமி?.. அது போகாது சாமி? அது ஒரு நினைப்புதான்!

பிறகு, சக்கிலியனுடைய பாட்டிலும் மனிதனின் பிறப்பு முதல் அவனது வளர்ச்சியில் உண்டாகிற மாற்றங்களும் ஜாதி என்கிற பெயரில் உண்டாக்குகிற தப்புகளும் சொல்கிறான். ஆணும் பெண்ணும் அல்லாத மற்றொரு ஜாதி பூமியில் இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறான். சக்கிலியன் சக்கிலிச்சியுடைய விவாதம் வேதாந்தமாகவும் தத்துவமாகவும் இருக்கிறது.

மண்ணான் – மண்ணாத்தி

மண்ணானும் மண்ணாத்தியும் என்கிற பொறாட்டில் இருக்கிற தள்ள மண்ணாத்தி பொறாட்டு பற்றித்தான் சொல்கிறார்கள்.

தள்ள மண்ணாத்தியும் ஆசானும் அருள்வாக்குரைப்பவரும் அரங்கத்திற்கு வருகிறார்கள். பாலக்காட்டுக்காரர்களுக்கு பழக்கமான இந்த அருள்வாக்கு சொல்பவர்கள் ஈழுவர்களும் செறுமக்களும் ஆவார்கள். அருள்வாக்கு சொல்பவர்களை இங்கு தம்பாட்டி என்று சொல்வார்கள். தம்பாட்டி உடல்குலுக்கி அருள்வாக்கு உரைப்பார். கையில் வாளெடுத்து தம் தலையில் வெட்டப்போவார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசான் சொல்கிறார்: தம்பாட்டி கையினாலே தாங்கித்தான் வெட்டுவார்.

அப்போது அருள்வாக்குரைப்பவர் சொல்வார் – வேகமாய் வெட்டினால் என் மண்டை பிளந்துவிடாதா? மகனே, மனைவியும் நான்கு பிள்ளைகளும் உண்டு.. உனக்குத் தெரியாதா?

அருள்வாக்குரைப்பவரிடம் தங்கள் துன்ப துயரங்களும் போக்க வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். கல்லையும் நெல்லையும் பிரித்துக் கொடுப்பதுபோல் வாழ்க்கையில் துன்ப துயரங்களை தீர்த்துக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

அப்போது, “நீங்கள் ஒரு கோழிக்குஞ்சை விடுங்கள்” என்று அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்.

கடைசியில், ”நான் இல்லாத நேரத்தில் – என் வீட்டில் பண்ட பாத்திரங்கள் திருடுபோயிருக்கின்றன. களவாடிக்கொண்டு போனது யாரென்று சொல்லுங்கள்” என்கிறார்கள். அதற்கு அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்: அது தெரிந்தால் நான் இங்கு எதற்கு வேசங்கட்டி உட்கார்ந்திருக்கேன்”.

அருள்வாக்குரைப்பவர், தன் கையில் உள்ள வாளை வீசி எறிகிறார். பகுத்தறிவான சிந்தனை மூடநம்பிக்கைக்கு எதிரான அடியாய் இங்கு மாறுகிறது. திறமையுள்ள ஆட்டக்காரர்கள் தம் மனோதர்மத்தை பயன்படுத்தை இந்த ஆட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்.

(தொடரும்)

கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று? : ஷாராஜ்

தைவான் நாட்டுப்புறக்கதை மொழிபெயர்ப்பு

கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று?

ஷாராஜ்
(தமிழாக்கம்)

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நதிக்கரை ஓரமாக லின் ஃபுஹாய் என்னும் படகோட்டி வசித்து வந்தார். இக்கரையிலிருந்து அக்கரைக்கு பயணிகளைக் கடத்திவிடுகிற வேலையில் அவருக்கு சிறிய தொகை கட்டணமாகக் கிடைக்கும். அதை வைத்து வாழ்ந்து வந்தார்.

பயணம் தொடங்குவதற்கு முன்பு அவர் தனக்கு எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று சொல்வதில்லை. பயணம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்கள் எவ்வளவு கொடுத்தாலும் நன்றியோடு ஏற்றுக்கொள்வார். அது சிறிய தொகையாக இருந்தாலும் சரி; பெரிய தொகையாக இருந்தாலும் சரி. கட்டணம் தராமல் போய்விட்டாலும் கோபித்துக்கொள்ளவோ, வருத்தப்படவோ மாட்டார். பயணிகளை ஆற்றைக் கடத்திவிடுவதை சேவையாகக் கருதி மகிழ்ச்சியோடு செய்துவந்தார்.

ஒரு நாள் படகில் அமைதியாக அமர்ந்து வாடிக்கையாளர் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது தாவோ துறவி ஒருவர் வேகமாக வந்தார். படகில் தாவி ஏறி, படகோட்டியை அவசரப்படுத்தினார்.

“மிக முக்கியமான வேலை. என்னை விரைவாக அக்கரைக்குக் கொண்டு செல்!”

லின் ஃபுஹாய் வேகமாகத் துடுப்பு வலித்து அக்கரையை நோக்கி படகைச் செலுத்தினார்.

ஆனால், மறு கரையை நெருங்கவிருக்கும்போது துறவி பதற்றத்தோடு சொன்னார்: “அடக் கடவுளே! அவசரமாகக் கிளம்பி வந்ததால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். தயவுசெய்து திரும்பவும் அக்கரைக்குக் கொண்டு செல்!”

படகோட்டி படகைத் திருப்பி மறு கரையை நோக்கிச் செலுத்தினார்.

கரையை நெருங்க இருந்த சமயம் துறவி, “நான் மறந்துவிட்ட அந்தப் பொருள் அவ்வளவு முக்கியமானது ஒன்றும் அல்ல. ஆகவே, மீண்டும் அக்கரைக்கே செல்ல விரும்புகிறேன். படகைத் திருப்பு” என்றார்.

படகோட்டி அப்போதும் மறுப்போ, குறையோ சொல்லாமல் மீண்டும் படகைத் திருப்பி அக்கரையை நோக்கிச் செலுத்தினார்.

அக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இப்போது யோசித்துப் பார்த்தால், இன்று நான் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை என்று புரிகிறது. அந்தக் காரியத்தைப் பிறகு வந்து பார்த்துக்கொள்கிறேன். படகைத் திருப்பி, ஏறிய இடத்திலேயே என்னை விட்டுவிடு.”

அப்போதும் எதுவும் சொல்லாமல், சிறு முகச்சுளிப்பு கூட காட்டாமல், படகோட்டி மீண்டும் படகைத் திருப்பி இக்கரையை நோக்கி வந்தார்.

இக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இவ்வளவு தூரம் வந்தாயிற்று. வந்த காரியத்தை இன்றே முடித்துவிட்டுச் செல்வதுதான் சரியாகப் படுகிறது. எனவே, மீண்டும் அக்கரைக்குப் படகைச் செலுத்து.”

துறவி மீண்டும் மீண்டும் இப்படியே இக்கரைக்கும் அக்கரைக்குமாக படகோட்டியை அலைக்கழித்துக்கொண்டிருந்தார். பல முறை அவர் இவ்வாறு செய்தும் படகோட்டி அதில் சலிப்படையவோ, கோபம் கொள்ளவோ இல்லை.  அவரது முகத்தில் எரிச்சல் அடைந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை.

முடிவில், படகு பயணம் தொடங்கிய இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கீழே இறங்கிய துறவி, படகோட்டிக்குக் கட்டணம் கொடுக்காமல், நன்றி கூட தெரிவிக்காமல், தனது வழியில் விரைந்து சென்றுவிட்டார்.

லின் ஃபுஹாய் அது பற்றியும் வருத்தப்படவில்லை. அவர் மீண்டும் தனது படகில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்தத் துறவி திரும்பவும் வந்தார். படகோட்டியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “நான் உன்னை பலத்த தொந்தரவுக்கு ஆட்படுத்திவிட்டேன். ஆனால, நீ நல்லிதயம் கொண்ட மனிதன். அதனால் எனது தொந்தரவுகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டாய்” என்றார்.

“பயணிகளை அக்கரைக்குக் கடத்திவிடுவது எனது கடமை. அதனால் உங்கள் செயல் எனக்கு எந்த விதத்திலும் தொல்லையாக இருக்கவில்லை.” படகோட்டி பணிவோடு சொன்னார்.

“நான் உனக்குக் கட்டணம் செலுத்தாமல் போய்விட்டேன். நன்றி கூட தெரிவிக்கவில்லை. அப்படியிருந்தும் நீ என்னை அழைத்து பணம் கேட்கவில்லை. அதில் உனக்கு வருத்தமோ, என் மீது கோபமோ இல்லையா?”

“இல்லை. பயணிகள் எனக்கு கட்டணம் கொடுத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் அதற்காக வருந்துவதில்லை. ஒரு படகோட்டியாக எனது கடமையைச் செய்கிறேன்.”

“நீ மகத்தான மனிதன்!” பாராட்டிய துறவி, “நீ எனக்காகச் செய்த வேலைக்குக் கட்டணம் தர என்னிடம் பணம் இல்லை. ஆனால், உனது சேவையைப் பாராட்டும் வகையில் எனது எளிய அன்பளிப்பாக இந்த மாந்தரீகக் கல்லை வைத்துக்கொள்!” என்று ஒரு சிறிய மாவரைக்கும் கல்லைக் கொடுத்தார்.

அதைச் செயல்படுத்தும் விதத்தையும் கூறினார்.

அந்த மாந்தரீகக் கல், எதைக் கேட்டாலும் கொடுக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது. “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!”  என்ற மந்திரத்தை உச்சரித்தால் அந்தக் கல் தானாகத் திரும்பி, மாவரைப்பது போல முன்னோக்கி சுழலத் தொடங்கும். அப்போது நாம் எதைக் கேட்கிறோமோ, அதை இடையறாது கொடுத்துக்கொண்டே இருக்கும். போதும் என்று ஆனதும், “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! கிழக்கு – மேற்கு, இடது – வலது” என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். உடனே அதன் சுழற்சியும், பொருள் வருவதும் நின்றுவிடும்.

லின் ஃபுஹாய் துறவிக்கு நன்றி தெரிவித்து மாந்தரீகக் கல்லைப் பெற்றுக்கொண்டார்.

அன்று மாலை வீடு திரும்பிய அவர், தனது குடிசையில் மங்கலான லாந்தர் வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு அந்த மாந்திரீகக் கல்லின் முன்பாக துறவி சொன்ன முதல் மந்திரத்தை உச்சாடனம் செய்தார். அந்தச் சிறிய அரைக்கும் கல் தானாகத் திரும்பி மாவரைப்பது போல சுழலத் தொடங்கியது.

“காலை முதல் நான் எதுவும் சாப்பிடவே இல்லை. மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு வயிறு நிறையுமளவு அரிசி உணவு கொடு!”

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லில் இருந்து அரிசி உணவு வரத் தொடங்கியது. போதிய அளவு உணவு வந்ததும் இரண்டாவது மந்திரத்தை உச்சாடனம் செய்தார். உணவு வருவது நின்றுவிட்டது. உணவை வயிறார உண்டு மகிழ்ந்தார்.

இந்த வகையில் அவருக்கு அந்த மந்திரக் கல்லிடம் கேட்டதெல்லாம் கிடைத்தது. அதன் மூலம் விரைவிவ் பணக்காரராகவும் ஆனார்.

எனினும் தனது படகோட்டும் தொழிலைக் கைவிடவில்லை.  தொடர்ந்து மக்களுக்கு இலவசமாகப் படகோட்டி வந்தார். மந்திரக் கல் மூலமாகக் கிடைக்கும் செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்கவும் செய்தார்.

வருடங்கள் கழிந்தன. அவருக்கு வயோதிகம் ஆயிற்று. படகோட்டும் வேலையைச் செய்ய இயலவில்லை. எனவே, தக்க சம்பளம் கொடுத்து, வாங் என்னும் பெயருள்ள ஒருவனைப் படகோட்டியாக நியமித்தார்.

வாங் மந்த புத்திக்காரன். அவனுக்கு லின் ஃபுஹாய் போல பணக்காரராக ஆகவேண்டும் என்று ஆசை. அதனால் அவரிடமிருந்து மாந்தரீகக் கல்லைத் திருடிக்கொண்டு சென்றான்.

அந்தக் கல்லை வைத்து எப்படி பணக்காரனாக ஆவது என்று அவனுக்குத் தெரியவில்லை. படகில் வந்த பயணிகள் சிலர் இப்போது சந்தையில் உப்புக்கு அதிக விலை என்று பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. மந்திரக்கல் மூலம் உப்பு பெற்று, அதை விற்று பணக்காரனாக ஆகலாம் என எண்ணினான்.

படகில் அமர்ந்துகொண்டு மந்திரக் கல்லை எடுத்து, “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!”  என்ற மந்திரத்தை உச்சரித்தான்.

அந்தக் கல் திரும்பி, மாவரைப்பது போல சுழல ஆரம்பித்தது.

“எனக்கு உப்பைக் கொடு!” அதனிடம் கட்டளையிட்டான்.

மந்திரக் கல்லிலிருந்து தூய்மையான உப்புப் படிவங்கள் வெளி வரலாயிற்று.  படகு நிறையட்டும் என்று காத்திருந்தான். படகு உப்பால் நிரம்பியது.

மந்திரக் கல்லின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான மந்திரத்தைச் சொல்ல முயற்சித்தான். அவனுக்கு அப்போது அந்த மந்திரம் மறந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் ஞாபகத்துக்கு வரவே இல்லை.

மந்திரக் கல்லிலிருந்து உப்பு கொட்டிக்கொண்டே இருந்தது.

“மந்திர கல்லே…! உப்பைக் கொட்டுவதை நிறுத்து! நிறுத்து!!” கூச்சலிட்டான்.

அது நிறுத்தவில்லை. உப்பை வாரி வாரிக் கொட்டிக்கொண்டே இருந்தது.

இதனால் எடை கூடி, படகு நதியில் மூழ்கலாயிற்று. அதோடு சேர்ந்து அந்தப் படகோட்டியும் நீருக்குள் மூழ்கினான்.

அப்போதும் மந்திரக்கல் இடைவிடாமல் மேலும் மேலும் உப்பைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அந்த உப்புக் குவியலுக்கு இடையே அகப்பட்டு படகோட்டி வாங் இறந்துவிட்டான்.

அதன் பிறகும் மந்திரக் கல் உப்பை வெளியிடுவதை நிறுத்தவில்லை. ஓயாமல் அதிலிருந்து வந்துகொண்டிருக்கிற உப்பினால் அந்த நதி நீர் உப்பு நீராக ஆயிற்று.

அந்த நதி கடலில் சென்று கலப்பதாலும், தொடர்ந்து அந்த நதியிலிருந்து உப்பு நீர் வந்துகொண்டிருப்பதாலும்தான் கடல் நீர் உப்பு நீராக ஆகிவிட்டது.

*******

மனிதனுக்கு சாத்தியமாகிற ஞானப்பரிணாம உளவியல்

17 October 2023 at 14:39

Psychology of Man’s possible evolution

 

உளவியலை பற்றி பேசவேண்டும். ஆனால், நான் சொல்லும் உளவியல், நீங்கள் இந்த பெயரில் அறிந்து வைத்திருப்பதற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதை முன்னதாகவே எச்சரித்து விடுகிறேன்.

தொடங்குவதற்கு முன்னால், கிட்டதட்ட வரலாற்றில் இப்போதுள்ள அளவிற்கு உளவியலானது இவ்வளவு கீழ்நிலையில் இருந்ததில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். உளவியல், அதன் தொடக்க கால தொடர்பு அறுந்து, அதன் அர்த்தங்களை இழந்துவிட்டது. இதனால், உளவியல் என்பது என்ன? அவை கற்றுணர்த்துவது என்ன? என்பதை வரையறை செய்யக்கூட முடியாத நிலை இப்போதுள்ளது.

உளவியல் சில சமயங்களில் “புதுமையான அறிவியல்” என்றழைக்கப்படுகிறது. இது தவறு. உளவியல் மிகத்தொன்மையான அறிவியல். துரதிர்ஷ்டவசமாக, அதன் மிக முக்கியமான அம்சங்களில் அது ஒரு மறக்கப்பட்ட அறிவியல்.

உளவியலை எவ்வாறு நாம் வரையறுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள, நவீன காலம் தவிர்த்து உளவியல் எவ்வாறாக இருந்து வந்துள்ளது என்பதை அவசியம் உணர வேண்டும். உளவியல் எப்போதும் அதன் அசலான பெயரில் இருந்ததில்லை. ஒன்று அல்லது பல காரணத்திற்காக உளவியல் எப்போதுமே தவறான அல்லது இரகசிய போக்குடனே இருந்து வந்துள்ளது. அதாவது, மதம், அரசியல் அல்லது ஒழுக்க நன்னெறி சார்ந்த வெவ்வேறு அடையாளங்களோடு, எளிதில் அடையாளம் காணமுடியாதபடி பயன்படுத்தப்பட்டது.

 

பல்லாயிரம் வருடங்களாக உளவியல், தத்துவத்தின் கீழ் இருந்தது. இந்தியாவில் அனைத்து விதமான யோகங்களின் சாரம் உளவியல் தான். அவை ஆறு தத்துவ தரிசனங்களாக விவரிக்கப்படுகிறது. சூஃபி போதனைகளும் உளவியல் ரீதியானைவை தான். ஒருவிதத்தில் ஓரளவிற்கு மதம் சார்ந்ததாகவும் ஓரளவு மீபொருண்மையானதாகவும் கருதப்படுகிறது. ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டங்களில் கூட, உளவியல் தொடர்பான பல படைப்புகள் தத்துவம் என்று குறிப்பிடப்படுகின்றன.  தத்துவத்தின் உட்பிரிவுகளான தர்க்கம், அறம், அறிதிறன், அழகியல், மனித மனத்தின் அல்லது புலன்களின் செயல்பாடுகளை குறித்தபோதிலும், உளவியல் தத்துவங்களை விட தாழ்ந்ததாகவும் மற்றும்  மனித இயல்பிற்கு அதிக முக்கியத்துவமில்லாத பக்கங்களோடு, கீழான நிலைகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.

 

தத்துவம் என்ற பெயரில் அதன் இருப்புக்கு இணையாக, மதத்தோடு நீண்ட காலமாக இணைப்பிலுள்ளது. இதனால், மதமும் உளவியலும் ஒரே மாதிரியானவை அல்லது மதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பின் உண்மைநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்று அர்த்தமில்லை. ஆனால், நாமறிந்த ஒவ்வொரு மதமும் நிச்சயமாக உளவியல் போதனைகளாகவும் பல பயிற்சிகளுடன் இணைக்கப்பட்டதாகவே வளர்ந்திருக்கிறது. எனவே மதத்தின் ஆய்வுகள் பெரும்பாலும்  உளவியல் ஆய்வுகளை அதனுள் உள்ளடக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

 

பல்வேறு நாடுகளின் மரபுவழி மத இலக்கியங்களில் உளவியல் பற்றிய சிறந்த படைப்புகளும் உள்ளன. தொடக்ககால கிருத்தவத்தில் “ஃபிலோகாலியா” என்ற பொதுப் பெயரில் வெவ்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களின் தொகுப்புகள் இருந்தன. கிழக்கு தேவாலயத்தில், குறிப்பாக துறவிகளின் பயன்பாட்டிற்காக, நம் காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

உளவியல், தத்துவம் மற்றும் மதத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில், அது கலை வடிவத்திலும் இருந்தன. கவிதை, நாடகம், சிற்பம், நடனம், கட்டிடக்கலை கூட உளவியல் அறிவைப் பரப்புவதற்கான வழிமுறையாக இருந்தன. உதாரணமாக, கோதிக் கதீட்ரல்கள்(Gothic Cathedrals) உளவியல் தொடர்பில் அதன் முக்கிய பொருளில் இருந்தன.

தத்துவத்திற்கு முந்தைய பழங்காலங்களில், இப்போது நாம் அறிந்திருக்கும் மதமும் கலையும் தனி வடிவம் பெற்றிருந்தது, உளவியல், எகிப்து மற்றும் பண்டைய கிரேக்கத்தின் மர்மங்களும் அதன் புதிர் சார்ந்த வடிவமாக இருந்தன.

 

பின்னர், மர்மங்கள் மறைந்த காலத்திற்கு பின், உளவியல் என்பது குறியீட்டு போதனைகளின் வடிவத்தில் இருந்தது. அவற்றில் சில மதங்களுடன் இணைக்கப்பட்டன. சில இணைக்கப்படாதவைகளான, ஜோதிடம், ரசவாதம், மாந்திரீகம் மற்றும் நவீனமான மேசன்ரி, அக்கல்ட், ப்ரம்மஞானம் போன்ற துறைகளோடு உளவியல் இணைப்பிலிருந்தது.

 

இங்கு அவசியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில், இவ்வாறு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இருக்கும் உளவியல் அமைப்பை, அதன் கோட்பாடுகளை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.

 

  1. முதலாவதாக, மனிதனின் உத்தேசிப்பில் அல்லது தன் கற்பனையால் மனிதனை கண்டுக்கொள்ளும் உளவியல் அமைப்பு. அதாவது, விஞ்ஞான உளவியல்.

 

  1. இரண்டாவது, மனிதன் என்னவாக இருக்கிறானோ, எவ்வாறாக பார்க்கப்படுகிறானோ அந்தப்பார்வையில் அல்லாமல், மனிதன் என்னவாக “ஆக” முடியும் என்கிற பார்வையில் அறிய முற்படும் அமைப்பாகும். அதாவது, அவனால்  சாத்தியப்படும் உளபரிணாமத்தின் பார்வையில் ஆக முடிகிற உளவியல்.

 

யதார்த்தத்தில் மேற்சொன்ன இரண்டாவது அமைப்பே அசலானவை. இதுவே பழைமையானதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறக்கப்பட்ட உளவியலின் தொடக்கத்தை விளக்கவும் முடியும்.

 

“மனிதனின் கற்றுணர்தலை” தன்னால் சாத்தியப்படும் உளப்பரிணாமத்தின் பார்வையில் புரிந்துகொள்ளும்போது தான் உளவியல் என்றால் என்ன? எனும் கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள முடியும். உளவியல் என்பது மனிதனுக்கு சாத்தியமான உளப்பரிணாமத்தின் கொள்கைகளும், விதிகளும், உண்மைகளுமாகும்.

இங்கு, இந்த விரிவுரையில், மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பேசுவேன். நம்முடைய முதல் கேள்வியென்னவென்றால், “மனிதனின் உளப்பரிணாமம்” என்றால் என்ன? இரண்டாவது, அதற்கென சிறப்பு நிலைகள் அவசியமா?

 

மனிதனின் மூலத்தை பற்றியும் அவனது முந்தைய பரிணாமத்தை பற்றியும் உள்ள நவீன பார்வைகளை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு மனிதனின் மூலத்தை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. இதை முதலில் நாம் உணர வேண்டும். மனிதனின் பௌதீகமான அல்லது மனரீதியிலான மெய்யான பரிணாமச் சான்று  என எதுவுமில்லை.

 

இதற்கு மாறாக, மனிதகுலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதாவது, பத்து அல்லது பதிணைந்தாரயிரம் ஆண்டுகளாக, “ஒரு உயர்ந்த வகையான மனிதனின் குறியீடுகளை நாம் கண்டுகொள்ள முடிகிறது. அவற்றின் இருப்பை பழங்கால சிலைகளின்,  நினைவுச்சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் நிலை நாட்டமுடிகிறது. அவற்றை இப்போதுள்ள மனிதனால் பின்பற்றவோ, திரும்ப செய்யவோ முடியாது.

நமது அடிப்படை கருத்து என்னவென்றால், நாமறிந்த மனிதன் என்பவன் முழுமையடைந்த இருப்பை கொண்டவன்( a completed being) அல்ல. இயற்கை அவனை ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை வளர்க்கிறது. அதன் பின் அவனை விட்டு விலகிவிடுகிறது. பிறகு தன் சொந்த முயற்சியால் வளரலாம், அல்லது அவன் எப்படி பிறந்தானோ அது போலவே வாழலாம், இறக்கலாம். மேலும் வளர்ச்சிக்கான திறனையும் இழக்கலாம்.

 

இந்த விஷயத்தை பொருத்தவரை மனிதனின் உளபரிணாமம் என்பது குறிப்பிட்ட சில உள்ளார்ந்த அம்சங்கள் மற்றும் குணங்களின் அடிப்படையில் இன்னும் விருத்தியடையாமல் இருக்கிறது, அது தண்ணியல்பாகவும் வளராது என்று அர்த்தப்படுகிறது.

 

அனுபவமும் அவதானிப்பும் எதை காட்டுகிறது என்றால், இவ்வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகிறது. அதாவது, மனிதன் தன்னளவிலான கடும் முயற்சியினாலும், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிநிலையை எட்டியவரின் உதவியினாலும், குறைந்தபட்சமாக இது சம்மந்தமான முறை சார்ந்த அறிவாவது கொண்டிருக்க வேண்டும்.

ஆக, முயற்சியில்லாமல் இவ்வுள பரிணாமம் என்பது சாத்தியமில்லை. பிறகு, எட்டியவரின் உதவியின்றியும் இது சாத்தியமில்லை.

 

இவ்வளர்ச்சி பாதையில் மனிதனானவன் “வேறுபட்ட இருப்பில்”(different being) ஆக வேண்டும். அதே சமயம் நாம் எந்த நோக்கத்தில், எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதராலும், இந்த வகையான வளர்ச்சி நிலையை பெறவோ வேறுபட்ட இருப்பாக ஆகவோ முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இது தனிப்பட்ட ஒரு மனிதனின் விசாரமாவதால் ஒட்டுமொத்த மனித குலத்தின் உளபரிணாமத்திற்கு அரிதான ஒன்றாகிறது. இதை சொல்லும் போது விசித்திரமாக தோன்றலாம். உண்மையில் மேலும் மேலும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

 

இதனை தொடர்ந்து நமக்கு இயல்பாக பல கேள்விகள் எழலாம்.

 

வேறுபட்ட இருப்பு நிலை என்றால் என்ன?

 

இப்பரிணாம வளர்ச்சியின் வழியில் மனிதன் ஒரு வேறுபட்ட இருப்பாக ஆவது என்றால் என்ன?

 

என்ன விதமான உள்ளார்ந்த அம்சங்களை, குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்ள முடியும்? இதனை எப்படி செய்ய முடியும்?

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

இது என்ன அநீதி?

 

இந்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் கூற முயற்சிக்கிறேன். முதலில் கடைசி கேள்வியிலிருந்து தொடங்குகிறேன்.

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

 

பதில் மிக சுலபமானது. ஏனெனில், அவர்களுக்கு அது தேவைப்படவில்லை.

ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது மற்றும் அதைப் பற்றிய நீண்டகால ஆயத்தமில்லாமல் அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

 

இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு மனிதன் வேறுபட்ட இருப்பாக மாற, அவன் அதை மிக நீண்ட காலமாக விரும்ப வேண்டும். புற சூழ்நிலையின் அதிருப்தி காரணமாக எளிதில் கடந்துவிடும் மந்தமான ஆசைகள் போதுமான தூண்டுதலை உருவாக்காது.

 

மனிதனின் இப்பரிணாமமானது அவன் எதை பெறப் போகிறான்; அதற்காக அவன் என்ன  கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அவனது புரிதலை பொறுத்தது.

 

ஒரு மனிதனுக்கு இவ்வுளப்பரிமாணம் தேவையில்லையெனில், அதற்கு அவசியமான எந்த முயற்சியும் செய்யவில்லையெனில், அவன் ஒருபோதும் வளர்ச்சியடையப் போவதில்லை. ஆக, இதில் எந்த அநீதியும் இல்லை. மனிதன் தான் வேண்டாததை ஏன் பெற வேண்டும்? தான் என்னவாக இருக்கிறானோ அதில் திருப்தியடைந்த மனிதனை வேறுபட்ட இருப்பிற்கு கட்டாயப்படுத்துவது தான் அநீதியாகும்.

 

இப்போது வேறுபட்ட இருப்பின் பொருள் என்ன என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த கேள்வியை குறித்து உள்ள தரவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால், மனிதன் தான் வேறுபட்ட இருப்பாக மாறும்பட்சத்தில் இப்போதிருந்திராத பல புது குணங்களையும், ஆற்றலையும் பெறுகிறான் என்ற கூற்றை காணமுடியும். இது மனிதனுக்கு  உள்ளார்ந்த வளர்ச்சியொன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் அமைப்புகளில் காணக்கிடைக்கும் பொதுவான தரவுகளாகும்.

 

ஆனால், இவை போதுமானதல்ல. இந்த புதுவிதமான ஆற்றல் குறித்த மிக விரிவான விளக்கங்களும் அவை எப்படி தோன்றுகின்றன, எங்கிருந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு எந்த வகையிலும் உதவாது.

நாமறிந்த சாதாரண கோட்பாடுகள் தவறவிட்ட இணைப்பு ஒன்றுண்டு.  அதாவது, மனிதனுக்கு தெரியாத மற்றும் தன்வசமில்லாத எந்தவொரு புது அதிகாரத்தையும் அல்லது ஆற்றலையும் பெறுவதற்கு முன்னதாகவே தனக்கு அது பற்றி தெரிந்ததாகவும், அது தன் வசமுள்ளதாகவும், அதனை உபயோகபடுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று நினைப்பது தான்.

இதுவே தவறவிட்ட இணைப்பும், மிக முக்கியமான புள்ளியுமாகும்.

பரிணாமத்தின் வழியில், முன்னர் விளக்கியது போல, கடும் முயற்சியினாலும், உதவியினாலும் ஏற்கனவே தன் வசமிருப்பதாக எண்ணும் தன்மைகளை மனிதன்  அதனை பெற வேண்டும். ஆனால், அவன் இது பற்றி தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.

மனிதன் ஏற்கனவே தன்வசமிருப்பதாக கற்பனை செய்கிற, புதிய மற்றும் எதிர்பாராததுமான சக்தியையும், அதிகாரத்தையும் பெற முடிவதை  என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள, மனிதன் அவனைப்பற்றிய பொதுவான அறிவிலிருந்து தொடங்க வேண்டும்.

இங்கு நாம் ஒரு முக்கியமான உண்மையை நோக்கி வருகிறோம்.

மனிதன், அவனுக்கு தன்னை தெரியாது. அவனுடைய வரம்புகள் என்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது. அவனுடைய சாத்தியங்கள் பற்றி தெரியாது. உண்மையில், அவனுக்கு எந்த அளவிற்கு தன்னை தெரியாது என்பதும் அவனுக்கு தெரியாது.

மனிதன் எத்தனையோ இயந்திரங்களை கண்டுபிடித்திருக்கிறான். அதில் ஒரு சிக்கலான இயந்திரத்தை பயன்படுத்த, அதை கட்டுப்படுத்த சில காலம் மிக கவனமாக அதை ப்பற்றி தெரிந்துகொள்ளாமல் அந்த இயந்திரத்தை கட்டுப்படுத்தவோ, பயன்படுத்தவோ முடியாது என்பதையும் மனிதன் அறிவான். ஆனால், இந்த அறிவை அவன் தனக்கு பயன்படுத்துவதில்லை. ஏனெனில், மனிதன் கண்டுபிடித்த எந்த இயந்திரத்தையும் விட அவனே மிகவும் சிக்கலான இயந்திரமாவான்.

 

அவன் தன்னைப்பற்றி எல்லாவிதமான தவறான முடிவுகளை அபிப்பிராயங்களை கொண்டுள்ளான். முதலில் உண்மையிலேயே அவன் ஒரு இயந்திரம் என்பதை உணரவில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம் என்று சொல்வதற்கான பொருள் என்ன?

 

அதாவது, தனக்குள்ளும் புறமும் சுதந்திரமான செயல்பாடு என எதுவும் அவனுக்கில்லை. புறநிலையின் தாக்கங்களால் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் ஒரு இயந்திரம் அவன். அவனுடைய சிறு சிறு அசைவுகளும், செயல்களும், வார்த்தைகளும், கருத்துக்களும், உணர்ச்சிகளும், மனநிலையும் என எல்லாமும் புறநிலையின் தாக்கங்களாலேயே உருவாக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், கடந்தகால அனுபவங்களின் குறிப்பிட்ட சில நினைவுகளை தன்னளவில் கொண்டுள்ள, குறிப்பிட்ட ஆற்றல் இருப்பைக் கொண்டுள்ள மனிதன் போல் செயல்படும் ஒரு தானியங்கி.

 

இதிலிருந்து மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இதை அவன் உணர்வதில்லை. மேலும், எதையும் செய்யக்கூடிய திறன் இருப்பதாக தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். இப்படி சொல்லிக்கொள்வது தான் முதல் தவறாகும்.

 

மனிதனால் எதுவும் செய்ய முடியாது. அதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தும் அவன் செய்வதால் தான்  நடக்கிறது என்று மனிதன் நினைக்கிறான். ஆனால், மழை, குளிர் எப்படி நிகழ்கிறதோ அதுபோலத் தான் நிகழ்கிறது.

ஆங்கில மொழியில் மனிதனின் தனிப்பட்ட செயல்கள் தொடர்புடைய வாய்மொழி வடிவங்கள் இல்லை. இருப்பினும், மனிதன் சிந்திக்கிறான், படிக்கிறான், மனிதன் எழுதுகிறான் நேசிக்கிறான், வெறுக்கிறான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அவை தானாக நிகழ்கின்றன.

மனிதனால் தன் சொந்த சித்தத்தில், சிந்திக்கவோ, பேசவோ, அசையவோ கூட முடியாது. பொம்மலாட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இழுக்கப்படுவது போல இங்கும் அங்கும் இழுக்கப்படுகிறான். அவன் இதை புரிந்துக்கொள்வானெனில், தன்னைப்பற்றி மேலதிகமாக கற்றுக்கொள்ளலாம். அதனூடாக, அவனுக்காக அனைத்தும் மாறத்தொடங்கலாம். இதை அவன் உணர்ந்துகொள்ளவோ, தன்னுடைய மொத்தமான இயந்திரத்தனத்தின் உண்மையை புரிந்துகொள்ளவோ முடியவில்லை எனில், இந்த உண்மையை ஏற்க விரும்பவில்லை எனில், அவனால் தன்னைப்பற்றி எதுவும் கற்றுக்கொள்ளவோ தெரிந்துகொள்ளவோ முடியாது. எதுவும் அவனுக்காக மாறப்போவதில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம். ஒரு விசித்திரமான இயந்திரம். தான் ஒரு இயந்திரம் என்பதை சரியான சூழ்நிலையில், சரியாக கையாளுகிற முறையில் அறிந்து கொள்ள முடியும். இதை முழுமையாக உணர்ந்துவிட்டால், தான் இயந்திரமாக இருப்பதை முடிவிற்கு கொண்டு வரலாம்.

 

முதலில், மனிதன் என்பவன் ஒன்றல்ல. அவன் “பல”வாக இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவனிடம் நிரந்தரமான அல்லது மாற்றமுடியாத “நான்” என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறாக இருக்கிறான். ஒரு கணத்தில் ஒருவனாகவும், மற்றொரு கணத்தில் இன்னொன்றாகவும், மூன்றாவதில் மூன்றாக, கிட்டதட்ட முடிவேயில்லாமல் வெவ்வேறானவனாக இருக்கிறான்.

இந்த ஓர்மை அல்லது “அவன் ஒருவன் தான்” எனும் மாயை முதலில் அவன் ஓர் உடலாக இருப்பதாலும், பிறகு அவனது பெயராலும், மூன்றாவதாக புகுத்தப்பட்ட இயந்திரத்தனமான பழக்க வழக்கங்களினாலும், பிறகு கல்வியினால் பெறும் போலச் செய்தலினாலும் இம்மாயை உருவாகிறது. மேலும், ஒரேமாதிரியான உடல் உணர்ச்சிகளை கொண்டிருப்பது, ஒரே பெயரை கேட்பதும், அதேபோல முன்பிருந்த பழக்கங்களும், மனப்போக்கும் தன்னை கவனிக்கும்போது மாறாமல் இருப்பதனால், தான் “ஒன்றாக” எப்போதும் மாறாமல் இருப்பதாக நம்புகிறான்.

உண்மையில், மனிதனுக்கு “ஓர்மை” இல்லை. கட்டுப்படுத்தும் நிரந்தர “நான்” என்றவொன்று இல்லை.

 

ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு உணர்ச்சியும், ஒவ்வொரு ஆசையும், ஒவ்வொரு விருப்பும், வெறுப்பும் தனித்தனியே ஒருவொரு ‘நான்’. இந்த “நான்”கள் எந்த வகையிலும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாக இல்லை. ஒருங்கிணைவதும் இல்லை. அவை ஒவ்வொன்றும் புறசூழ்நிலையின் மாற்றங்களை பொறுத்திருக்கிறது.

 

அவற்றில் சில “நான்”கள் இயந்திரத்தனமாக சில “நான்”களை பின் தொடர்கின்றன. மேலும் சில “நான்”கள்  மற்ற “நான்” களால் தோன்றுகின்றன. ஆக, மொத்தமாக ஒரு ஒழுங்கோ, அமைப்போ இதில் இல்லை.

சில “நான்”கள் ஒரு குழுவாக இயல்பாகவே இணைந்தவைகளாக இருக்கின்றன. இதைப் பற்றி பின்னர் பேசுவோம். இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு குழுவாக இணைகிற “நான்” களெல்லாம் தற்செயலான தொடர்புகளின் மூலமாகவும், தற்செயல் நினைவுகளின் மூலமாகவும் அல்லது கற்பனையான ஒற்றுமைகளின் மூலமாக மட்டுமே இணைகின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்த “நான்”கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தில் நமது மூளையின், மனதின் அல்லது அறிவுத்திறனின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே குறிக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் மொத்தமான பிரதிநிதித்துவதாய் ஆகிறது.

 

ஒரு மனிதன் ‘நான்’ என்று சொல்லும் போது மொத்தமான ‘தன்னை’ சொல்வதாக அர்த்தப்படுத்துகிறது. ஆனால், உண்மையில் அவன் இப்படியே அர்த்தப்படுத்தி நினைத்தால் கூட அது கடந்து விடும் எண்ணம், கடந்துவிடும் மனநிலை, கடந்துவிடும் ஆசை மட்டுமே. ஒருமணி நேரத்தில்  தான் இது தான் என்று சொன்னதையே முற்றிலும் மறந்துவிடுவான். அதே முடிவில், எதிர்க்கருத்தை, எதிர்பார்வையை வெளிப்படுத்துவான்.

மிக மோசமான விஷயம் என்னவென்றால், மனிதன் தன்னை நினைவு வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில், தானாக வெளிப்பட்ட கடைசி “நானை”யே “தான்” என நம்புகிறான். அதாவது, அடுத்த நான் வெளிப்படும் வரை, கடைசி “நான்” நீட்டிக்கும் வரை. ஒவ்வொரு சமயத்தில் வெளிப்படும் “நானை” தான் என நம்புகிறான். சில சமயங்களில் முந்தைய நானிற்கும் பிந்தைய நானிற்கும் தொடர்பில்லாத போது முந்தையதின் விருப்பங்களை பிந்தைய “நான்” முந்தையதின் கருத்தை அல்லது விருப்பத்தை வெளிப்படுத்தாது.****

 

இப்போது இரண்டு கேள்விகளின் பக்கம் வருவோம்.

வளர்ச்சி என்றால் என்ன? மனிதன் வேறுபட்ட இருப்பில் ஆக முடிவது என்றால் என்ன? அல்லது என்ன விதமான மாற்றம் மனிதனில் சாத்தியமாகும்? மற்றும் எப்படி, எப்போது இந்த மாற்றம் தொடங்கும்?

தற்போது தன்வசமில்லாத, ஆனால் தன்னிடம் இருப்பதாக மனிதன் எண்ணும் சக்தியாலும், திறனாலும் மாறத்தொடங்கும் என்று ஏற்கனவே சொல்லபட்டது.

அப்படியென்றால், சக்திகளையும் திறன்களையும் பெறுவதற்கு முன், தன்னிடம் இருப்பதாக எண்ணும் சக்திகளுக்கான திறன்களுக்கான பண்புகளை மனிதன் தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்.

வளர்ச்சியானது தன்னை பொய்ப்பிப்பதின் அல்லது தன்னை ஏமாற்றிக் கொள்வதின் அடிப்படையில் துவங்குவதில்லை. மனிதன்  தன்னிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரிய வேண்டும். ஏற்கனவே விளக்கியது போல எந்த சிறப்பம்சமும், பண்புகளும் தன்வசமில்லை என்பதை அவன் உணர வேண்டும். அதாவது, தன்னிடம் இருப்பதாக எண்ணும் தனித்தன்மை, ஓர்மை, நிரந்தர “நான்” மற்றும் இன்னும் கூடுதலாக பிரக்ஞையும், சொந்த சித்தமும்.

இது மனிதனுக்கு அவசியம் தெரிய வேண்டும், ஏனெனில் தன்னிடம் சிறப்பம்சங்கள் வசமிருப்பதாக அவன் நம்பும் வரை, அதனை பெறுவதற்கு சரியான முயற்சியை, உழைப்பை செலுத்த மாட்டான். எப்படியென்றால், தன்னிடம் ஏற்கனவே இருப்பதாக ஒரு மனிதன் எண்ணிவிட்டால், ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கவோ, அதற்காக பெரிய விலை கொடுக்கவோ மாட்டான். அது போல.

இந்த தன்மைகளில் மிக முக்கியமானதும், மிகவும் தவறாக வழிநடத்துவதானது “பிரக்ஞை”(consciousness) என்பதாகும். பிரக்ஞை என்பதின் அர்த்தம் குறித்த  மனிதனது புரிதல் மாறும் போது தான் அவனில் மாற்றம் தொடங்கும்.

பிரக்ஞை என்றால் என்ன?

பெரும்பாலான சமயம், சாதாரண மொழியில் பிரக்ஞை என்பது சிந்தனைத்திறனுக்கு இணையாக மன செயல்பாடுகள் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்தப்படுகிறது.

உண்மையில் பிரக்ஞை என்பது குறிபிட்ட வகையான மனிதனின் “விழிப்புணர்வு”, மன செயல்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது. அதாவது, தன்னைப்பற்றிய விழிப்புணர்வு, தான் யார், எங்கிருக்கிறான் என்ற விழிப்புணர்வு, மேலும் தனக்கு என்ன தெரியும், தனக்கு என்ன தெரியாது என்ற விழிப்புணர்வு, இன்னும் பல.

ஒரு மனிதன் கொடுக்கப்பட்ட தருணத்தில் பிரக்ஞையோடு இருக்கிறானா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். இது நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய உளவியலின் ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் நிரூபிக்கப்பட்டது, அதாவது, தன்னோடு தொடர்புடைய குறிப்பிட்ட சில விஷயங்களை மனிதன் தன்னால் மட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

பிரக்ஞை குறித்த கேள்வியோடு பார்க்கும்போது, அதன் அர்த்தமாவது ஒரு மனிதன் தான் ஒரு தருணத்தில் தன் பிரக்ஞை இருக்கிறதா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். அப்படியென்றால், மனிதனுடைய பிரக்ஞையின் இருப்பையும் இல்லாமையையும் புறவயமான செயல்பாடுகளின் அவதானிப்புகளை கொண்டு நிரூபிக்க முடியாது.

இந்த உண்மையை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால், இதனுடைய முக்கியத்துவம் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஏனென்றால்,  பிரக்ஞையை மனதின் செயல்பாடுகளாக, மனதின் செயற்தொடர்ச்சியாக இணைத்தே எப்போதும் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன், தான் பிரக்ஞையில் இல்லை என்பது வரையுள்ள தருணத்தின்  இந்த புரிந்துணர்வை உணர்கிறான் எனில், அதன் பிறகு இந்த உணர்வை மறந்துவிடுவான் அல்லது பிறகு இந்த உணர்வை ஞாபகப்படுத்துவான். இதற்கு பெயர் பிரக்ஞை அல்ல. இது ஒரு உறுதியான புரிந்துணர்வின் ஞாபகம் மட்டுமே.

இப்போது அனைத்து நவீன உளவியல் சிந்தனைப்பள்ளிகளும் தவறவிட்ட மற்றுமொரு உண்மையின் பக்கம் இங்கே உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அதாவது, மனிதனின் “பிரக்ஞை” அதன் பொருள் என்னவாகினும், அது எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பிரக்ஞை இருந்தாலும் இல்லாவிட்டாலும். பிரக்ஞையையின் உச்ச தருணங்கள் நினைவுகளை தோற்றுவிக்கின்றன. மற்ற தருணங்களை மனிதன் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் விட மனிதனின் பிரக்ஞையானது தொடர்ச்சியான விழிப்புநிலை கொண்டது எனும் மாயையை உருவாக்குகிறது.

 

சில நவீன உளவியல் பள்ளிகள் பிரக்ஞையை முற்றிலுமாக மறுக்கின்றன. அத்தகைய சொல்லாடலின் அவசியத்தையும் மறுக்கின்றன. ஆனால் இது வெறுமென தவறான புரிதலின் தான்தோன்றித்தனமாகும்.

மற்ற சிந்தனைப்பள்ளிகளில் பிரக்ஞை என்ற பெயரில் அழைப்பார்கள் எனில், பிரக்ஞையின் நிலைகள் குறித்து பேசுவார்கள் எனில், அவற்றை எண்ணங்கள், உணர்வுகள், திடீர் உந்துதலாக, உணர்ச்சிநிலைகள் அர்த்தப்படுகின்றன. இவையெல்லாம் மனசெயல்பாடுகளுடன் பிரக்ஞையையை கலக்கும் தவறை அடிப்படையாகக் கொண்டது. அது பற்றி பிறகு பேசுவோம்.

உண்மையில், நவீன சிந்தனைக்கு பெரும்பாலான விஷயத்தில் இன்னும் இந்த பழைய முறையையே கையாளுகின்றன, அதாவது, பிரக்ஞைகளுக்கென தனி நிலைகள் இல்லை என.

உண்மை என்னவெனில், பிரக்ஞை புலப்படக் கூடிய, அவதானிக்க முடிகிற அளவில் தான் உள்ளது. நிச்சயமாக புலப்படுகிற, ஒருவர் தன்னை கவனிக்கிற முடிகிற ஒன்று தான்.

 

முதலாவது, அதற்கான கால அளவு: எவ்வளவு நேரம் பிரக்ஞையோடு இருந்தார் என்பதற்கான கால அளவு.

 

இரண்டவது, தோன்றுதலின் நிகழ்வு என்னிக்கை: எத்தனை முறை ஒருவர் பிரஞையோடு இருக்க முடிந்தது.

 

மூன்றாவது, அதன் எல்லையும், ஊடுருவலும்:  ஒருவன் என்ன அல்லது எதைப்பற்றிய பிரக்ஞையில் இருந்தான். இது மனிதனின் வளர்ச்சியோடு மிகவும் மாறுபடுகிற ஒன்று.

 

மேற்சொன்னதில் முதல் இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டால், பிரக்ஞையின் சாத்தியமான பரிணாமத்தின் கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

மிக முக்கிய உண்மையுள்ள இந்த கருத்து பழைய உளவியல் பள்ளிகள் நன்கு தெரிந்தே வைத்திருந்தன. உதாரணமாக, பிலோகாலியா(Philokalia) போன்ற உளவியல் பள்ளி. ஆனால், ஐரோப்பிய தத்துவமும், கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக உள்ள உளவியலும் இதனை முற்றிலுமாக தவறவிட்டிருக்ருகிறது.

 

பிரக்ஞையை பிரத்யேக முயற்சியின் மூலம், பிரத்யேக கற்றலின் மூலம்  தொடர்ச்சியானதாகவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது உண்மை.

 

பிரக்ஞையை எப்படி பயில முடியும் என்பதை நான் விளக்க முயற்சிக்கிறேன்.

 

ஒரு கை கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் கவனிக்க முயற்சித்து, ‘நான் மீரான்’ ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்ற எண்ணத்தில் கவனம் செலுத்துங்கள். வேறெதைப்பற்றியும் எண்ணாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். வெறுமென கைகடிகாரத்தை ஓட்டத்தையும், உங்களையும் கவனியுங்கள். உங்கள் பெயர், உங்கள் இருப்பு மற்றும் நீங்கள் இருக்கும் இடம் ஆகியவற்றை கவனியுங்கள். மற்ற எண்ணங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.

 

நீங்கள் இந்த சோதனையில் விடாப்பிடியாக இருப்பீர்களானால், இதை இரண்டு நிமிடங்களுக்கு செய்ய முடியும். இதுவே நீங்கள் பிரக்ஞையுடன் இருக்க அதிகபட்ச வரம்பு. இதே சோதனையை மீண்டும் நீங்கள் முயற்சித்தால் முதல்முறை செய்ததை விட கடினமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஒரு மனிதன் தன் இயல்பு நிலையில் பெரும் முயற்சியுடன் “தன்னிலை” பற்றி இரண்டு நிமிடத்திற்கும் குறைவாகவே பிரக்ஞையில் இருக்க முடியும் என்பதை இச்சோதனை காட்டுகிறது.

 

இச்சோதனையை சரியாக செய்யும்பட்சத்தில் “மனிதன் தன்னைப்பற்றிய பிரஞையில் இல்லை.” என்ற முக்கிய முடிவிற்கு ஒருவர் வருவார்.

 

தான் பிரக்ஞையில் இருப்பதான மாயையை நினைவுகளும், எண்ணங்களின் செயல்பாடுகளும் உருவாக்குகின்றன.

 

உதாரணத்திற்கு, ஒரு மனிதர் திரையரங்கிற்கு செல்கிறார். அது அவருக்கு பழக்கமானது எனில், அவர் அங்கு இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு  பிரக்ஜையோடு இருப்பதில்லை. இருப்பினும், அவர் அங்கு நடக்கும் விஷயங்களை பார்க்க முடியும், அவதானிக்க முடியும், அல்லது அங்கு நடக்கும் நிகழ்ச்சியை விரும்பி கண்டுகளிக்கவோ, விரும்பாமலோ இருக்க முடியும. மேலும், அங்கு சந்தித்த மக்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும், இன்னும் பல.

 

அவர் வீடு திரும்பிய பிறகு, தான்  திரையரங்கில் இருந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறார். நிச்சயமாக, தான் பிரக்ஞையோடு  இருந்ததாக நினைக்கிறார். ஆக, அவருடைய பிரக்ஞை குறித்து எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இன்னும் அவர் உண்மையாக, சிந்தித்து, அவதானித்து செயலாற்ற முடியும் போது அவரது பிரஞை முற்றிலுமாக இல்லாமலிருக்கும் என்பதை அவர் உணர்வதில்லை.

 

பொது விளக்கத்தில், மனிதனுக்கு சாத்தியமாகும் பிரக்ஞை நிலைகள் நான்கு. அவையாவன, உறக்க நிலை(sleep), விழிப்பு நிலை(waking state), சுய-பிரக்ஞை நிலை(self-consciousness), புறப்பிரஞை நிலை(Objective Consciousness) ஆகும்.

 

ஆனால், இந்த நான்கு பிரஞை நிலைகளும் அவனுக்கு சாத்தியமாயினும் உண்மையில் மனிதன் இரண்டு நிலைகளில் மட்டுமே வாழ்கிறான். வாழ்க்கையில் அவனது ஒரு பகுதி உறக்கத்தில் கடந்து விடுகிறது, மற்றொரு பகுதியை விழிப்பு நிலை என்றழைக்கலாம். இருந்தாலும், யதார்த்தத்தில் அவனது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் சிறிதளவிலான வித்தியாசம் தான் உள்ளது.

 

சாதாரண வாழ்க்கையில், மனிதனுக்கு objective consciousness பற்றி ஒன்றும் தெரியாது, மற்றும் இந்த பாதையில் எந்தவொரு பயிற்சியோ சோதனைகளோ சாத்தியமில்லை.

 

மூன்றாவது நிலையான, சுயப்பிரக்ஞை நிலை. இது தன்வசம் உள்ளதாக நம்புகிறான். மனிதன் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். இருப்பினும், உண்மையில் மிக அரிதான தருணங்களில் மட்டும் தான் அவனால் பிரக்ஞையோடு இருக்க முடியும். இருந்த போதிலும் அவனால் அதை இனங்காண முடியாது. ஏனெனில், அதன் அர்த்தமென்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது.

 

பிரக்ஞையின் சில துண்டு அனுபவங்கள் விதிவிலக்கான சில தருணங்களில் வரும். உச்சமான உணர்ச்சி வசப்படும் நிலைகளில், ஆபத்தான தருணங்களில், புதிய அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில் அல்லது சில சமயம் சாதாரணமான தருணங்களில் குறிப்பிட்டு எந்த நிகழ்வும் நடக்காத போது வரும்.

 

ஆனால், அவனது சாதாரண நிலையில் மனிதனுக்கு அதன் மீது எந்த அதிகாரமும் இல்லை.

 

 

வழக்கமான நினைவு அல்லது நினைவின் தருணங்களை பொருத்தவரை, உண்மையில் நாம் பிரக்ஞையிலிருந்த தருணங்களை மட்டுமே நினைவாகக் கொள்கிறோம். இவ்வாறு இருப்பதை நாம் உணர்வதில்லை.

 

நினைவு என்றால் என்ன, நாம் கொண்டுள்ள வெவ்வேறு வகையான நினைவுகள் பற்றியும் பிறகு விளக்குகிறேன்.

 

இப்போது உங்கள் கவனத்தை, உங்கள் நினைவு பற்றி உங்கள் சொந்த அவதானிப்பின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்.

 

அப்போது உங்கள் விஷயங்களை நீங்கள் வெவ்வேறு விதங்களில்  நினைவில் கொண்டுள்ளீர்கள் என்பதை கவணிப்பீர்கள்.

 

சிலவற்றை நீங்கள் தெளிவாக நினைவில் வைத்திருப்பீர்கள், சில மிக தெளிவில்லாத மங்கலான நினைவாக இருக்கும். சில உங்கள் நினைவிலேயே இருக்காது. அவை நடந்தது என்பது மட்டும் தெரியும்.

 

உண்மையில் எவ்வளவு குறைவாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரும் போது வியப்படைவீர்கள். ஏனெனில், நீங்கள் பிரக்ஞையோடு இருந்த தருணங்கள் மட்டும் ஞாபகத்தில் இருப்பதால் இது இவ்வாறு நடக்கிறது.

 

ஆக, மூன்றாவது நிலை பற்றி சொல்லும் போது, மனிதனுக்கு அவ்வப்போது நிகழ்கிற சுயப்பிரஞையின் தருணங்கள், அதனோடு வரும் சூழ்நிலைகளின் தெளிவான நினைவுகளை விட்டு செல்கிறது என்று சொல்லலாம். ஆனால், அவனுக்கு அதன் மீது எந்த ஆதிக்கமும் இல்லை.

 

புறசூழ்நிலையின் கட்டுப்பாடாலும், உணர்ச்சி நிலைகளின் நினைவுகளாலும் தானாக வந்து தானாக செல்கிறது.

 

ஒரு கேள்வியெழுகிறது. அதாவது இந்த சன நேர பிரக்ஞை தருணங்களின் மீது அதிகாரத்தை பெறுவது சாத்தியமா? அதாவது, அடிக்கடி தூண்டுவதும் அல்லது அதை நீட்டிக்க செய்வதும் அல்லது நிரந்தரமாக்குவதற்கான அதிகாரத்தை பெறுவது சாத்தியமா?

 

இன்னொரு வார்த்தையில் சொன்னால் பிரக்ஞையிலேயே இருப்பதற்கு சாத்தியமா?

 

இது முக்கியமான புள்ளியாகும்.  இந்த புள்ளியையே கோட்பாட்டினளவில் கூட விதிவிலக்கின்றி நவீன உளவியல் பள்ளிகளால் முற்றிலுமாக தவறவிடப்பட்ட புள்ளியாகும். இதனை நம் பயில்தலின் தொடக்கத்திலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

 

சரியான முறைகளின் மூலமும், சரியான உழைப்பின் மூலமும், அவை உணர்த்தும் அனைத்தையும் கொண்டு மனிதனால் தன் பிரக்ஞையின் மீதான அதிகாரத்தை பெற முடியும். பிரக்ஞையில் இருக்கவும் முடியும். தற்போதைய நிலையில் அவை எதை உணர்த்தும் என்பதை நாம் கற்பனை கூட செய்யவில்லை.

 

இம்முக்கியமான கருத்தை புரிந்து கொண்ட பிறகே உளவியலைப் பற்றி தீவிரமாக பயில்வதற்கு சாத்தியமாகும்.

 

இப்பயில்தலை நம் பிரக்ஞை நிலைக்கான தடைகள் பற்றிய விசாரணையிலிருந்து தொடங்க வேண்டும். ஏனெனில், குறைந்தபட்சமாக சில தடைகளை நீக்குவதன் மூலமாக மட்டுமே நம் பிரக்ஞை வளரத்தொடங்கும்.

 

பின்வரும் உரைகளில் இந்த தடைகள் பற்றி பேசுவேன். மிகப்பெரும் தடையாக இருப்பது நம்மை பற்றியுள்ள நம் அறியாமையும், நமக்கு நம்மைப் பற்றி குறிப்பிட்ட எல்லைவரை ஓரளவிற்காவது தெரியும் என்பதும், நாம் நம்மை குறித்து உறுதியாக இருக்க முடிகிறதும் ஆகும்.  உண்மையில் நம்மைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது மற்றும் சிறு விஷயங்களில் கூட நாம் நம்மை  குறித்து உறுதியாக இருக்க முடிவதில்லை.

இப்போது நாம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது உளவியல் என்பது “தன்னைப் பயிலுதல்”(self-study) என்பதாகும். இது உளவியலின் இரண்டாவது வரையறை.

 

ஒருவர் விண்ணியலைப் பயில்வது போல, ஒருவர் உலவியலைப் பயில முடியாது. அதாவது, தண்ணிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பயில முடியாது.

 

அதே சமயம், ஒரு புதிய மற்றும் சிக்கலான இயந்திரத்தை பயில்வது போல் “தன்னை பயில வேண்டும்.

 

இந்த இயந்திரத்தின் பாகங்கள்  தெரிந்திருக்க வேண்டும், அதன் மைய செயலப்பாடுகளையும், சரியாக இயங்குவதின் நிலைகள் குறித்தும், தவறாக இயங்கும் காரணத்தையும், இன்னும் தனித்துவமான மொழிபயன்பாடுகளின் துணையில்லாமல் விளக்க முடியாத பல விஷயங்களும் இந்த இயந்திரத்தை பயில்வதற்கு அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

 

மனித இயந்திரமானது ஏழு விதமான வெவ்வேறு செயல்பாடுகளை கொண்டது.

 

  1. சிந்தனை செயல்பாடு(Thinking function).
  2. உணர்ச்சி செயல்பாடு(emotional function).
  3. உந்துணர்வு செயல்பாடு( instinct function)(உடலின் அனைத்து உள்ளார்ந்த செயல்பாடுகளும்).
  4. நகர்வு செயல்பாடு(moving function)(அனைத்து புறச்செயல்பாடுகள், அசைதல், நகர்தல், இன்னும் பல).  
  5. பாலுணர்வு செயல்பாடு(Sex Function)(ஆண், பெண்ணுடைய அனைத்து வெளிப்பாடுகளும்).

 

இந்த ஐந்தைத் தவிர இன்னும் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. இந்த செயல்பாட்டிற்கு சாதாரண மொழியில் சொற்கள் இல்லை. அது உயர்நிலை பிரக்ஞையில் மட்டும் தோன்றக்கூடிய தாகும்.

 

ஒன்று, உயர்நிலை உணர்ச்சி செயல்பாடு. இது சுயப்பிரக்ஞை(self-consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

மற்றொன்று உயர் மன செயல்பாடு. இது  புறப்பிரக்ஞை(Objective Consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

 

இந்த நிலை பிரக்ஞையில் நாம் இல்லாததால் இதன் செயல்பாடுகளை பயிலவோ, சோதனை செய்யவோ முடியாது, மற்றும் இதை எவர் அடைந்துள்ளாரோ, எவர் அனுபவித்துள்ளாரோ அவரிடமிருந்து நேரடியற்ற முறையில் மட்டுமே அது பற்றி கற்றுக்கொள்ள முடியும். வெவ்வேறு நாடுகளின் மதங்களில் தொடக்க கால தத்துவ இலக்கியத்தில் பிரக்ஞையின் உயர்நிலைகளுக்கும் உயர் செயல்பாடுகளுக்கும் பல குறிப்புகள் உள்ளன.

 

இக்குறிப்புகளை புரிந்து கொள்வதில் கூடுதல் சிக்கலுள்ளது. இந்த குறிப்புகளில் பிரக்ஞையின் உயர்நிலைகளை பிரித்தறிவதில் குறைபாடுகள் உள்ளன.

 

சமாதி நிலை அல்லது ஆனந்த நிலை அல்லது உள்ளார்ந்த ஒளிர்வு நிலை அல்லது சமகால எழுத்துக்களில் பிரபஞ்சப் பிரக்ஞை(cosmic consciousness) என்றழைக்கப்படும் நிலைகள் மேற்சொன்ன இரண்டு நிலைகளில் ஒன்று அல்லது மற்றொன்றை குறிக்கிறது. சில சமயம் சுயப் பிரக்ஞையின் அனுபவத்தை குறிக்கிறது. சில சமயம் புறப்பிரக்ஞையை குறிக்கிறது.

 

இடைநிலையான சுயப் பிரக்ஞையை விட புறப்பிரக்ஞை நிலை பற்றி முடிவு செய்கிற தரவுகள் அதிகமுள்ளன. இது விசித்திரமாக தோன்றலாம். இருப்பினும், முந்தையது வந்த பிறகு தான் பிந்தியது வரும்.

 

தன்னைப்பயில்தலை முதல் நான்கு செயல்பாடுகளான சிந்தனை(Thinking), உணர்ச்சி(Emotional), உந்துணர்வு(Instintive), நகர்வு(Moving) செயல்பாடுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

 

பாலுணர்வு செயல்பாடுகளை பின்னதாகத் தான் பயில முடியும். மேற்சொல்லப்பட்ட நான்கு செயல்பாடுகளை போதுமான அளவு புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் தான் முடியும். சில நவீன கோட்பாடுகளுக்கு மாறாக, பாலின செயல்பாடுகளை உண்மையில் பின்னறிய வேண்டியதாகவே உள்ளது. அதாவது, முதல் நான்கு செயல்பாடுகள் முன்னதாக முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு அவற்றால் நெறிப்படும் போது பிற்காலத்தில் தோன்றுவதாகும்.

 

அதே சமயம், பாலுணர்வு செயல்பாடுகளில் ஒழுங்கின்மையோ, வழக்கத்திற்கு மாறான தீவிர சிக்கல்களிருந்தால், சுய-விருத்தியை, ஏன் தன்னைப்பயில்தலையும் சாத்தியப்படாமல் ஆக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, இப்போது நான்கு முக்கிய செயல்பாடுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிந்தனை செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு ஒரு தெளிவிருப்பதாகவே எடுத்துக்கொள்கிறேன். இங்கே அனைத்து செயல்பாடுகளும் இங்கே சேர்க்கப்படுகின்றன: மனப்பதிவுகளை உணர்தல், கருத்துக்கள் மற்றும் சித்தரிப்பின் உருவாக்கம், காரண காரிய அறிவு, ஒப்பிடுதல், ஏற்பது, புறக்கணிப்பது, சொற்கள், பேச்சு, கற்பனையின் உருவாக்கம் இன்னும் பல.

 

இரண்டாவது செயல்பாடு/உணர்ச்சிகள்: மகிழ்ச்சி, துன்பம், பயம், வியப்பு, இன்னும் பல. உணர்ச்சிகள் எண்ணங்களிலிருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பது குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தாலும், இது குறித்த உங்கள் அனைத்து கோணங்களையும் சரிபார்த்துக் கொள்ள உங்களுக்கு இந்த அறிவுரையை நான் வழங்கத்தான் வேண்டும்.

 

சாதாரணமான நம் பேச்சுக்களிலும் சிந்தனையிலும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கலக்கிறோம். ஆனால், “தன்னை பயில்வதற்கான” தொடக்கத்திற்கு எது எது எதனோடு தொடர்புடையது  என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.

இவ்விரண்டு செயல்பாடுகளை தொடர்ந்து அடுத்ததான உந்துணர்வு மற்றும் நகர்வு செயல்பாடுகள். இதை புரிந்து கொள்வது நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், எந்தவொரு உளவியல் அமைப்பிலும் இந்த செயல்பாடுகளை சரியான விதத்தில் விளக்கப்படவோ, பிரிக்கவோ இல்லை.

இந்த “உந்துணர்வு” என்னும் சொல், பொதுவாக தவறான அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எந்த அர்த்தமுமில்லாமல்  உபயோகத்திலுள்ளது. குறிப்பாக,  உந்துணர்வை பொதுவாக புறவயமான செயல்பாடுகளாக சொல்லப்படுகிறது.  உண்மையில், அவை, சில சமயம் உணர்ச்சி செயல்பாடுகளாகவும், நகர்வு செயல்படுகளாகவும் உள்ளது.

 

மனிதனின் உந்துணர்வு செயல்பாடுகள் அதனுள்ளாகவே நான்கு வெவ்வேறு பிரிவுகளாக உள்ளன.

 

முதலாவது அனைத்து உள்ளார்ந்த இயக்கம், அனைத்து உடல் சார்ந்த செரிமானம், உணவு உட்கொள்ளல், சுவாசம், இரத்த ஓட்டம், அனைத்து உள்ளுறுப்புகளின் இயக்கம், புது செல்களின் உருவாக்கம், கழிவு நீக்கம், சுரப்பிகளின் இயக்கம் இன்னும் பல.

இரண்டாவது, ஐம்புலன்களின் உணர்வுகளான  பார்த்தல்,கேட்டல்,முகர்தல்,சுவைத்தல், தொடுதல்,மற்றும் சுமை உணர்வு, வெப்ப உணர்வு, வறட்சி அல்லது குளிர் உணர்வு, இன்னும் பல. மகிழ்ச்சியான அல்லது வெறுப்பூட்டுகின்ற அணைத்து சாதாரண உணர்வுகளும்.

 

மூன்றாவது, அனைத்து உடல் சார்ந்த உணர்சிகள், அதாவது, அனைத்து உடல் சார் உணர்வுகள் ஒன்று மகிழ்ச்சியாகவோ, வெறுப்பாகவோ இருக்கும். அணைத்து விதமான வலிகள், பிடிக்காத சுவை, பிடிக்காத மனம்,மற்றும் மகிழ்வூட்டுகிற உடல் சார்ந்த உணர்வுகளான பிடிக்கின்ற சுவை, மனம் இன்னும் பல.

 

நான்காவது, தன்னியல்பான செய்கைகள், இன்னும் சிக்கலான, சிரிப்பு, கொட்டாவி, மற்றும் அனைத்து விதமான உடல் சார்ந்த நினைவுகளான, சுவை, மனம், வலி,முதலியவை உண்மையில் உள்ளார்ந்த தன்னியல்பு செய்கைகள்.

நகர்வு செயல்பாடுகள், அணைத்து வெளிப்புற இயக்கங்களான, பேசுதல் நடத்தல், உண்ணுதல் மற்றும் அது சார்ந்த நினைவுகள். கீழே விழும் பொருளை எந்த யோசனையுமின்றி பிடிப்பது போன்றவை சராசரி மொழி பயன்பாட்டில் உந்துணர்வு செயல்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவை நகர்வு செயல்பாடுகள் சார்ந்தவையாகும்

நகர்வு செயல்பாடுகளுக்கும் உந்துணர்வு செயல்பாடுகளுக்குமான வேறுபாடுகள் மிகத்தெளிவாகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. அதாவது, அணைத்து உந்துணர்வு செயல்பாடுகளும் விதிவிலக்கின்றி இயல்பானதும், அதனை உபயோகப்படுத்த அல்லது கற்றுக்கொள்வதற்கு எந்த அவசியம்மும் இல்லை என்பதையும்

இன்னொரு புறம், எந்த நகர்வு செயல்பாடுகளும் இயல்பானது அல்ல. அதை ஒரு குழந்தை நடக்கப்பழகுவதை போல அல்லது ஒருவர் எழுத, வரைய பழகுவதைப் போல அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த சாதாரண நகர்வு செயல்பாடுகள் தவிர சில விசித்திரமான நகர்வு செயல்பாடுகளும் உள்ளன. அவை மைந்த இயந்திரத்தின் உபயோகமற்ற வேலைகளை குறிக்கின்றன. மேலும், இயற்கையின் அல்லது இயல்பின் நோக்கமும் அல்ல. ஆனால், மனிதனின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. மற்றும் பெருமளவிலான அவனது ஆற்றலை உபயோகிக்கிறது. அதாவது, கனவுகளின் உருவாக்கம், கற்பனை, பகற்கனவு, தனக்குத்தானே பேசுதல், பேச வேண்டும் என்பதற்காகவே பேசுவது மற்றும் கட்டுக்கு உட்படாத, கட்டுப்படுத்த முடியாத  அனைத்து பொதுவான வெளிப்பாடுகளும் இதில் அடங்கும். இந்நான்கு செயல்பாடுகளான, சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, மற்றும் நகர்வு செயல்பாடுகளின் அணைத்து வெளிப்பாடுகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நம்மில் அவதானிக்க வேண்டும். இவ்வகையான சுய-அவதானிப்பு என்பது, அதாவது, பிரக்ஞையின் நிலைகளை, அதன் பலவிதமான செயல்பாடுகளை சரியான முறையில் கையாளும் போது, அவை “தன்னை பயில்தலின்” அடிப்படையாக அமைகிறது. இதுவே, உளவியலின் தொடக்கமாகும்.

 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்பாடுகளை அவதானிக்கும் போது, அதே நேரத்தில் செயல்பாடுகளோடு தொடர்புடைய பிரக்ஞை நிலைகளையும் அவதானிப்பது உபயோகமாக இருக்கும்.

முதலில் மூன்று பிரக்ஞை நிலைகளான உறக்கம், விழிப்பு நிலை மற்றும் சுயப்பிரக்ஞை நிலைகளை எடுத்துகொள்வோம். பிறகு, நான்கு செயல்பாடுகளான சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, நகர்வு செயல்பாடுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம்.

நான்கு செய்லபடுகளில் எல்லாமும் உறக்க நிலையில் தாமாக வெளிப்பட்டு விடுகின்றன. ஆனால்,அவற்றின் வெளிப்பாடுகள் ஒழுங்கில்லாத அல்லது நம்பத்தகுதியில்லாததாகவும் இருக்கும். அவற்றை நாம் எந்த வகையிலும், வழியிலும் உபயோகிக்க இயலாது. அவை தாமாக தோன்றி தாமாக மறையும்.

 

விழிப்பு நிலை பிரக்ஞையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நமக்கு தக்கவாறு அவை நமக்கு உதவும். பல பிரமைகளை உருவாக்கக்கூடியதாக இருப்பினும் அதன் முடிவுகள், அவதானிப்புகளை ஒப்பிட்டு சரிபார்த்து, நேர்படுத்த முடியும். நம் சாதாரண நிலைகளில் நம்மிடம் எதுவுமேயில்லை. ஆக, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாம் இந்த “நிலை”யில் கண்டுகொண்ட தவறான அவதானிப்புகள், தவறான கோட்பாடுகள், தவறான முடிவுகளின் அளவை அறிந்திருக்கும் பட்சத்தில் நம்மை நாம் நம்புவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஆனால், மனிதன் அவனுடைய அவதானிப்புகள் அவனைப்பற்றிய கோட்பாடுகள் எத்தனை ஏமாற்றுதனமானது என்பதை அவன் உணர்வதில்லை. மேலும், தொடர்ந்து அதனை நம்புபவனாகவும் இருக்கிறான். இந்த ஒன்று தான் மூன்றாம் நிலை பிரக்ஞையான சுய-பிரக்ஞை நிலை அனுபவத்தின் தொடர்போடு தாமாக வெளிப்படும் செயல்பாடுகளை, அதன் அரிதான தருணங்களை அவதானிப்பதிலிருந்து மனிதனை தடுக்கிறது.

இவை எல்லாம் எதை சொல்கிறது என்றால், நான்கு செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மூன்று பிரக்ஞை நிலைகளில் ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது என்பதாகும். ஆனால், பிரக்ஞை நிலைகளோடு தொடர்புறும் நான்கு செயல்பாடுகளின் வேறுபாட்டை கருதுவதற்கு முன், மனிதனின் பிரக்ஞையும், மனிதனின் செயல்பாடுகளும் வேறுபட்ட நிகழ்வு, இயல்பும் வேறுபட்டது, வேறுபட்ட காரணங்களை சார்ந்தது மற்றும் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று இருக்கும் என்பதை அவசியமாக புரிந்து கொள்ள வேண்டும். “பிரக்ஞை இல்லாமல் செயல்பாடுகளும் இருக்கும். செயல்பாடுகள் இல்லாமல் பிரக்ஞையும் இருக்கும்.”  

***

(தொடரும்..)

ஹபீப் ஹாதி. A. Y.

The post மனிதனுக்கு சாத்தியமாகிற ஞானப்பரிணாம உளவியல் appeared first on வனம்.

கடவுளை மன்னித்தல் – க்ளாரிஸ் லிஸ்பெக்டர்

17 October 2023 at 14:39

[க்ளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலைச் சேர்ந்த எழுத்தாளர். ஜியோவானி பொண்டியாராவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. செய்தித்தாளில் வாராவாரம் க்ரோனிக்கிள்ஸ் என அவர் எழுதிய குறிப்புகள், நினைவோடைகள், கதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட எழுத்துகளின் தொகுப்பில் இடம்பெற்ற ஒன்று Forgiving God. இதைக் கதையாகவோ, நினைவுக் குறிப்பாகவோ வாசிக்கலாம்.]

 

 

   கோப்பகாபனா நிழற் சாலையில் கட்டடங்களை, கடலை, நடைபாதையிலிருக்கும் மக்களைப் பார்த்தபடி குறிப்பாக எதையும் என்றில்லாமல் எதையோ யோசித்தபடி உலாவிக்கொண்டிருந்தேன். என் கவனம் சிதறியிருக்கவில்லை, இலகுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. மிக அரிதான ஒரு நிலையில் இருந்தேன்: சுதந்திரமாக. எல்லாவற்றையும் ஓய்வான மனநிலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் காண்கிறேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். என் சுதந்திரம் சுதந்திரத்தை இழக்காமலேயே இன்னும் காத்திரமானது. முதலாளி தன் பொருட்களைப் பார்ப்பது போலல்ல, நான் கண்ட எதுவும் என்னுடையதல்ல, நான் அவற்றை என்னுடையதாக்கிக்கொள்ள விழையவுமில்லை. ஆனால் நான் பார்த்தவற்றால் மிக திருப்தியடைந்ததாக உணர்ந்தேன்.

நான் அதுவரை அறிந்திராத ஒரு உணர்வை அப்போதுதான் உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், பூமியாகவும் உலகமாகவும் இருக்கும் கடவுளின் தாயாக உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், துளியும் அகங்காரமோ பெருமையோ இல்லை, துளியும் மேன்மையுணர்வோ சமத்துவமோ இல்லை, நான் மொத்த இருப்பின் தாயாகிவிட்டேன். இவையெல்லாம் நான் உண்மையிலேயே உணர்வது, ஒரு போலி உணர்வெழுச்சி இல்லை, எனும்போது கடவுள் என்னால் நேசிக்கப்பட தன்னை அளிப்பார், எந்த பெருமையும் சிறுமையும் இல்லாமல், எந்த சமரசங்களும் தேவைப்படாமல், என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்க எடுத்துக்கொள்ளும் நெருக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். இந்த உணர்வு எனக்குப் புதிது, ஆனால் எனக்கு அதில் சந்தேகங்கள் இல்லை, அதற்கு முன் எனக்கு இந்த உணர்வு தோன்றவில்லை என்றால், அது தோன்றியிருக்க முடியாது என்பதால்தான். நான் கடவுள் என்றழைப்பதை ஆழ்ந்த அமைதியான அன்புடன், மரியாதையும், பயத்துடன், பணிவுடன் நேசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரை தாயைப் போல் நேசிப்பது குறித்து எனக்கு யாரும் சொல்லியிருக்கவில்லை. இந்த தாய்ப்பாசம் கடவுளைக் குறைத்துவிடவில்லை, அவரை இன்னும் மேன்மையானவர் ஆக்கியது, உலகத்தின் தாயாக இருப்பது என் அன்புக்கு சுதந்திரம் அளித்தது.

அப்போதுதான் நான் ஒரு செத்த எலியை மிதித்தேன். உயிரோடிருப்பதன் பயங்கரத்தில் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன; ஒரு நொடியில் பயத்தாலும் பதட்டத்தாலும் சிதறிப்போனேன், என்னுள் துளைத்தெழும் அலறலை அடக்கப் போராடினேன். என்னைச் சுற்றியுள்ள யாரையும் கவனிக்காமல், கிட்டத்தட்ட ஓடிச்சென்று ஒரு விளக்குக் கம்பத்தில் சாய்ந்து நின்றேன். கண்களை இறுகமூடி இதற்கு மேல் எதையும் பார்க்க மறுத்தேன். ஆனால் அந்த செத்த எலி காட்சி என் மனதில் பதிந்துவிட்டிருந்தது: பெரிய வாலுடன் ஒரு செம்பழுப்பு நிற எலி, அதன் நகங்கள் நசுங்கியிருந்தன, அமைதியாக செத்துப்போய் கிடந்தது, செம்பழுப்பாக. எனது அடக்கமுடியாத எலிப் பயம்.

தலையிலிருந்து கால் வரை நடுங்க, எப்படியோ நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். முழுக்க குழப்பமும் பயமும் நிறைந்திருக்க தொடர்ந்து நடந்தேன். என் முகபாவம் குழந்தைத்தனமாக இருந்தது, என் ஆச்சரியம் அப்படிப்பட்டது. இரண்டு உண்மைகளுக்கு இடையிலான தொடர்பை அறுக்க முயன்றேன்: நான் சில கணங்கள் முன் உணர்ந்ததும், இந்த எலியும். ஆனால் பயனில்லை. காலத்தால் சமீபத்திருந்ததாலாவது அவை தொடர்பு கொண்டிருந்தன. தர்க்கங்களிலின்றி அவை தொடர்புகொண்டிருந்தன. ஒரு எலிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருக்கலாம் என்பதை யோசித்து மருண்டேன். என்னில் அருவருப்பு நிரம்பி வழிந்தது: திடீரென்று தோன்றிய அன்பிடம் என்னால் என்னை ஒப்புக்கொடுக்க முடியவில்லையா? கடவுள் என்ன சொல்ல முயல்கிறார்? எல்லாவற்றிலும் ரத்தம் உள்ளது என்று நினைவூட்டப்பட வேண்டிய ஆள் இல்லை நான்! அந்த ரத்தத்தை கண்டுகொள்ளாமல் செல்பவள் அல்ல, அதை ஒப்புக்கொள்பவள், நேசிப்பவள். ரத்தத்தை மறக்க அனுமதிக்காதபடி என்னுள் நிறைய ரத்தம் இருக்கிறது. ஆன்மீகம், லௌகீகம் போன்ற சொற்களுக்கு என்னைப் பொருத்த வரை எந்த பொருளும் இல்லை. அப்படி ஒரு எலியால் என்னை பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதுவும் நான் மறைவுகளின்றி எளிதாய் பாதிக்கப்படும் நிலையில் இருந்த ஒரு கணத்தில்! என்னை சிறு வயதில் இருந்து துரத்தி வரும் பயங்கரத்தை நீங்கள் யோசித்திருக்க வேண்டும்; இந்த எலிகள் என்னை ஏற்கனவே கேலி செய்திருக்கின்றன, துன்புறுத்தியிருக்கின்றன. பழங்காலங்களில் இருந்து இந்த எலிகள் என்னை வெறுப்புடன் பொறுமையின்று தின்று வருகின்றன! எனவே, இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா? நான் எதையும் கேட்காமல், எதையும் வேண்டாமல், தூய அப்பாவித்தனமான அன்புடன் நேசித்தபடி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்க, கடவுள் தன் எலியால் என்னை எதிர்கொள்கிறார். கடவுளின் கொடூரம் என்னை காயப்படுத்தியது, ஆங்காரமூட்டியது. கடவுள் ஒரு கொடூரன். கனத்த இதயத்துடன் நடந்தேன். நான் சிறுவயதில் அனுபவித்த ஏமாற்றங்களைப் போல இந்த ஏமாற்றமும் ஆற்றுப்படுத்த முடியாததாக இருந்தது. குழந்தைமையின் அநீதிகளிலிருந்து தப்பிக்க முடியாமல் சீக்கிரமே வளர்ந்துவிட்ட குழந்தை நான். நான் தொடர்ந்து நடந்தபடி மறக்க முயன்றேன். என் மனம் முழுக்க பழிவாங்கல்தான் இருந்தது. ஆனால் எல்லாம்வல்ல இறைவனை நான் என்ன பழிவாங்கிவிட முடியும், என்னை நசுக்க ஒரு எலியை நசுக்க வேண்டியிருக்கும் கடவுளை? சாவுள்ள ஒரு மனிதனாக என்னிடமிருந்ததெல்லாம் என் பாதுகாப்பின்மைதான். பழிவாங்கும் வெறியில் என்னால் அவரை எதிர்கொள்ளவும் முடியவில்லை. அவர் எங்கு ஒளிந்திருப்பார், அவரை எங்கே காண்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஏதாவதொன்றை வெறுப்புடன் பார்த்தால், நான் அவரைக் கண்டுகொள்வேனா? அந்த எலியில்?… அந்த சாளரத்தில்?… அந்த சாலையோரக் கற்களில்? என்னைப் பொறுத்தவரை, அவர் இனிமேல் இல்லை! என்னுள், அவரைக் காணவில்லை!

அப்போதுதான் எனக்கு பலவீனர்களின் பழிவாங்கல் நினைவு வந்தது: இதுதானா அது? சரிதான், நான் என் மௌனத்தைக் களைந்து எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று பின் அவரது ரகசியங்களை வெளிப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்று தெரியும், ஆனால் நான் பேசப் போகிறேன். எதையும் சொல்லாதே, அன்பிற்காக, எதையும் சொல்லாதே! அவரது வெட்ககரமான ரகசியங்களை உனக்குள்ளே வைத்துக்கொள்! – ஆனால் நான் பேசுவதென்று முடிவெடுத்துவிட்டேன்… எனக்கு நடந்ததை விளக்கப் போகிறேன். இந்த முறை நான் அமைதியாயிருக்க மாட்டேன், அவர் எனக்குச் செய்ததை வெளிக்காட்டுவேன். அவரது பெயரைக் கெடுப்பேன்.

யாருக்குத் தெரியும்… ஒருவேளை உலகமும் ஒரு எலிதானோ, நான் தயாராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்… நான் பலமானவள் என்றெண்ணியதால், நான் அன்பை ஒரு கணிதக் கணக்காக்கிவிட்டேன். கணக்கு தவறாகிவிட்டது. புள்ளி புள்ளியாக புரிந்ததை அடுக்குவதை, முட்டாள்தனமாக, நேசித்தல் என்று நம்பினேன். தவறான புரிதல்களை சேர்ப்பதன் வழியாகவே ஒருவர் அன்பை அடைய முடியுமென்பதை காணத் தவறிவிட்டேன். பாசத்தை உணர்ந்ததால், அன்பு எளிதென்று நினைத்துவிட்டேன். சிரத்தையான அன்பின் மேல் எனக்கு விழைவு தோன்றவில்லை, சிரத்தை என்பது தவறான புரிதலை ஒரு சடங்காக்கி, அதை காணிக்கையாக்கும் என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டேன். ஆனால் முரண்டு பிடிப்பது என் சுபாவம், எப்போதும் சண்டை போடத் தயாராக இருப்பேன். எப்போதும் என் வழியில் போகத்தான் முயல்வேன், நான் இன்னும் விட்டுக்கொடுக்க கற்கவில்லை. மனதின் ஆழத்தில் எனக்கு நான் எதை நேசிக்கத் தேர்ந்தெடுக்கிறேனோ அதைத்தான் நேசிக்க வேண்டும், நேசிக்கவென்று இருப்பதை நேசிக்க வேண்டாம். ஏனெனில் நான் இன்னும் நானில்லை, எனது தண்டனை இன்னும் தானாக இல்லாத ஒரு உலகத்தை நேசிப்பது. நான் எளிதில் காயப்பட்டுவிடுவேன். நான் அடம்பிடிப்பவள் என்பதால், இந்த விசயங்களை எனக்கு நேரடியாகச் சொல்லவேண்டுமோ. நான் எனக்கு சொந்தமானவற்றை விட்டுக்கொடுக்க மாட்டேன், அதனால்தான் ஒரு நகைமுரணோடு அந்த எலி எனக்கே வேண்டுமா என கேட்கப்பட்டது போல. ஒரு செத்த எலியை என் கையில் எடுக்க முடிந்தால்தான் என்னால் எல்லாவற்றின் தாயாக முடியும். சாவான சாவில் சாகாமல் என்னால் அந்த செத்த எலியை எடுக்கவும் முடியாது. எனவே தான் அறியாத, காணாதவற்றைக் கண்மூடித்தனமாக போற்றும் ‘எனது ஆவி கடவுளை பெருக்கிக் காட்டுவதாக’ எனும் பிரார்த்தனையை மனதில் கொள்கிறேன். என்னை தூரமாக்கி வைக்கும் சம்பிரதாயங்களைக் கைக்கொள்கிறேன், ஏனெனில் சம்பிரதாயங்கள் என் எளிமையைக் காயப்படுத்தவில்லை என் பெருமையை காயப்படுத்துகின்றன. பிறந்ததில் நான் கொள்ளும் பெருமையே உலகோடு என்னை நெருக்கமாக உணரச் செய்கிறது – என் இதயத்திலிருந்து வெளியே கேட்காத அலறல்களை உண்டாக்கும் இந்த உலகோடு. நான் இருப்பதைப் போலவே எலியும் இருக்கிறது, ஆனால் என்னாலோ எலியாலோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாதோ, தூரம் எங்களை சமமாக ஆக்குகின்றது. ஒரு எலியின் மரணத்தைக் கோரும் என் இயல்பை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த குற்றங்களும் புரியவில்லை என்பதாலேயே என்னை நான் மிக மென்மையானவளாக கருதிக்கொள்கிறேன். அவற்றை அடக்கிக் கொள்வதால், என் அன்பை அப்பாவித்தனமானதாக கருதுகிறேன். முதலில் எனதிந்த கட்டுக்கடங்காத ஆன்மாவை பீதியின்றி பார்க்க முடிந்தால்தான் என்னால் அந்த எலியையும் எதிர்கொள்ளமுடியுமோ. எல்லாவற்றிலும் எனது சுயம் கொஞ்சமாக இருக்கும் இந்த பழக்கத்தை உலகிடம் பகிர வேண்டுமோ. எனது சொந்த இயல்பின் பரிமாணங்களையே நேசிக்க முடியாவிட்டால் நான் எப்படி உலகின் பிரம்மாண்டத்தை நேசிப்பேன்? நான் தீயவள் என்பதால் கடவுள் நல்லவர் என்று கற்பனை செய்யும் வரை, நான் எதையுமே நேசிக்க மாட்டேன்: அது வெறுமனே என்னை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் வழி. என்னை முழுதாக ஆராயாமல், நான் என் எதிர்மறையை நேசிக்கத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அதை கடவுள் என்றும் அழைக்கிறேன். என்னோடு வாழப் பழகிக்கொள்ளாத நான், எனக்கு எந்தத் துன்பங்களும் அளிக்காதே என்று உலகைக் கேட்கிறேன். என்னை எனக்கு சமர்ப்பிப்பதில் மட்டுமே வெற்றி பெற்ற நான், (நான் என்னைவிட மிக மிக பிடிவாதக்காரி), எனக்கு என்னைவிட வன்முறை குறைவான பூமியை வழங்கிக்கொள்ள முடியுமென நம்பினேன்.

நான் என்னை நேசிக்கவில்லை என்பதால் மட்டும் கடவுளை நேசிக்கும்வரை, நான் வெறும் தாயக்கட்டைதான், என் பெருவாழ்க்கையெனும் ஆட்டம் ஆடப்படாது. நான் கடவுளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்வரை, கடவுள் இருக்க மாட்டார்.

***

-வயலட்

The post கடவுளை மன்னித்தல் – க்ளாரிஸ் லிஸ்பெக்டர் appeared first on வனம்.

தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் வந்தேன் – மார்க்வெஸ்

17 October 2023 at 14:38

ஒரு வசந்தகால மழைநாளின் பிற்பகலில் பார்சிலோனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மரியா லூ செர்வாண்டேவின் வாடகைக்கார் மோனக்ராஸ் பாலைவனத்தில் பழுதடைந்தது. அழகும் அறிவும் நிறைந்த இருபத்திஏழு வயது மெக்சிகப் பெண்ணாகிய அவள் சில வருடங்களுக்கு முன்பு கேளிக்கை அரங்க கலைஞராகச் சற்றுப் புகழும் பெற்றிருந்தாள். ஜரகோசாவில் சில உறவினர்களைச் சந்தித்துவிட்டு, அன்று மாலையில் அவள் தனது கணவனைச் சந்திக்க இருந்தாள். அவன் ஒரு காபரே மாயவித்தைக்காரன். புயலுக்கு நடுவே அவளைக்கடந்து சென்ற கார்களையும் ட்ரக்குகளையும் நிறுத்த ஒருமணிநேரமாக சைகைகள் காட்டி பரிதவித்துக்கொண்டிருந்தாள். இறுதியில் ஒரு பழையபேருந்தின் ஓட்டுநர் அவள்மீது இரக்கம் கொண்டான். ஆனால் தான் நெடுந்தூரம் செல்லப்போவதில்லை எனவும் அவன் எச்சரித்தான்.

“அதனால் பரவாயில்லை. ஒரு தொலைபேசியைக் கண்டடைந்தால் போதும் எனக்கு,” என்றாள் மரியா.  

அது உண்மைதான். ஏழு மணிக்கு முன்பாகத் தன்னால் வீட்டிற்கு வரமுடியாது என்பதைக் கணவனிடம் தெரிவிக்க மட்டுமே அது அவளுக்குத் தேவைப்பட்டது. அந்த ஏப்ரலில் ஒரு மாணவி போல மேலங்கியும் பீச் ஷூவும் அணிந்திருந்த அவள் சின்னாபின்னமடைந்த சிறு பறவை போல் தோற்றமளித்தாள். அந்த எதிர்பாரா இடரினால் அதீத பதட்டமடைந்திருந்த அவள் கார் சாவியைக் கையில் எடுக்க மறந்திருந்தாள். ராணுவத்தின் கண்டிப்பான பாவனையுடன் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் இவளுக்கு ஒரு துண்டையும் போர்வையையும் கொடுத்து தன் இருக்கையில் இடம் அளித்தாள். சிதறியிருந்த மழைத்துளிகளைத் துடைத்து விட்டு அங்கே அமர்ந்த மரியா போர்வையைப் போர்த்திக்கொண்டு சிகரெட்டைப் பற்றவைக்க முயன்றாள். ஆனால் அவளது தீப்பெட்டி ஈரமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அந்தப்பெண் இவளுக்கு நெருப்பை அளித்துவிட்டு இவளிடம் இன்னமும் நனையாமல் இருந்த சிகரெட்டுகளில் ஒன்றைக் கேட்டாள். புகைத்தபடியே தன் துயரத்தைக் கொட்ட எண்ணிய மரியா மழைச்சத்தத்தையும் பேருந்தின் இரைச்சலையும் மீறத் தன்குரலை உயர்த்தினாள். ஆனால் உதட்டின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து மரியாவை இடைமறித்தாள் அப்பெண்.

’’அவர்களெல்லாம் உறங்குகிறார்கள்’’ எனக் கிசுகிசுத்தாள். அவளது தோள்பட்டையின் பின்புறம் மரியா எட்டிப்பார்த்தபோது, அறுதியிட முடியாத வயதுகளில் பல்வேறு ஸ்திதிகளில் பேருந்து முழுக்க பல பெண்கள்அவளைப் போலவே போர்வையைப் போர்த்தியபடி உறங்குவதைக் காண முடிந்தது. அவர்களது அமைதி அவளையும் தொற்றிக்கொள்ளத் தன் இருக்கையில் சுருண்டுகொண்டு மழையின் சத்தத்தில் மூழ்கிப்போனாள் மரியா. அவள் எழுந்த போது இருட்டியிருந்தது; கடுங்குளிர்ச்சியான தூறலாக புயல் உருமாறியிருந்தது. தான் எவ்வளவு நேரம் தூங்கினோம், இவ்வுலகின் எந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது குறித்தெல்லாம் அவளுக்கு எதுவும் புரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த பெண் மிகுந்த விழிப்புடன் காணப்பட்டாள்.

நாம் எங்கு இருக்கிறோம்?’ என மரியா வினவ

வந்து விட்டோம்,’ எனப் பதிலளித்தாள் அப்பெண். மிகப்பெரிய ஓர் இருண்ட கட்டடத்தின் கல்பாவிய முற்றத்திற்குள் பேருந்து நுழைந்தது, பிரம்மாண்ட மரங்களடங்கிய ஒரு வனத்திற்குள் இருக்கும் பழைய கன்னியர்மடம் போல அக்கட்டிடம் காட்சியளித்தது. அப்பெண்கள் பேருந்தில் அசைவின்றி அமர்ந்திருப்பது முற்றத்திலிருந்த மங்கிய வெளிச்சத்தினூடாகத் தெரிந்தது. ஒரு மழலையர் பள்ளியின் குழந்தைகளுக்கான கட்டளைகள் போன்ற தொனியுடன் அந்தக் கண்டிப்பான பெண் அவர்களைப் பேருந்தில் இருந்து இறங்கும்படி பணித்தார். அவர்கள் அனைவரும் மூதாட்டிகள். சோம்பல்மிகுந்த அவர்களது அசைவுகளை அந்த முற்றத்தின் அரைவெளிச்சத்தில் காணும்போது, கனவில் வரும் உருவங்கள் போல் தோன்றினர். பேருந்திலிருந்து இறுதியாக இறங்கிய மரியா அவர்களைக் கன்னியாஸ்திரிகள் என எண்ணிக் கொண்டாள். பேருந்தின் கதவருகே வந்த சீருடை அணிந்த சில பெண்கள் அவர்களை இறக்கிபோர்வையைத் தலைமேல் ஏற்றிவிட்டு ரே வரிசையாக நிறுத்திய போது மரியாவிற்கு எதுவும் புரியவில்லை. ஒத்திசைவும் கண்டிப்புமான கைதட்டல் ஓசையினால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். தன்னுடன் இருக்கையைப்பகிர்ந்து கொண்ட பெண்ணிடம் போர்வையைத் தந்துவிட்டு விடை பெற மரியா எத்தனித்த போது, முற்றத்தைக்கடக்கும்வரை அதை உபயோகப்படுத்திவிட்டு அங்கே உள்ள பொருட்கள் வைப்பு அலுவலகத்தில் அதைத் தந்து விடும்படி அவள் அறிவுறுத்தினாள்.

’’அங்கே தொலைபேசி இருக்கிறதா?’’ என மரியா வினவினாள்.

’’ஆமாம், அவர்கள் அதன் இடத்தை உனக்குக்காட்டுவார்கள்,’’ என அவள் பதிலளித்தாள்.

அவள் இன்னொரு சிகரெட் கேட்டபோது நனைந்திருந்த தன் முழுப்பெட்டியையும் மரியா அவளிடம் தந்தாள். ‘’போகிற வழியில் உலர்ந்து விடும் என்றாள். படியில் நின்றபடி, ‘நலம் பெறுக’ என உரக்கக்கத்திய அப்பெண் வேறெதையும் தொடர்ந்து பேச இயலாதபடி பேருந்து கிளம்பிச்சென்றிருந்தது.

கட்டிடத்தின் கதவைநோக்கி மரியா ஓடத்துவங்கியபோது சப்தமான கரவோசை மூலம் ஒரு தாதி அவளை நிறுத்த முயன்று பின் ‘’நில் என்று சொன்னேன்’’ எனக்கண்டிப்புடன் கத்தினாள். போர்வைக்குள்ளிருந்து நிமிர்ந்துபார்த்த போது, மிகக் கண்டிப்பான இரு விழிகளையும்,தப்பிக்கவே முடியாதபடி வரிசையை நோக்கிச் சுட்டுகிற ஒருவிரலையும் கண்டாள். அதற்கு அடிபணிந்தாள். கட்டிடத்தை அடைந்தவுடன் குழுவிலிருந்து பிரிந்த அவள் அங்கிருந்த பணியாளரிடம் தொலைபேசி எங்கே என வினவினாள். தோளில் லேசாகத் தட்டி அவளை வரிசைக்குத் திருப்பிய ஒரு தாதி இனிமையான குரலில்,

‘’இங்கே அழகி, தொலைபேசிக்கு இவ்வழியாகச் செல்லவேண்டும்’’ என்றாள்.

இருண்ட தாழ்வாரத்தினுள் மற்ற பெண்களுடன் சேர்ந்து நடந்தாள் மரியா. ஒரு பொதுப் படுக்கையறைக்கு எல்லோரும் வந்து சேர்ந்ததும் இவர்களிடமிருந்த போர்வைகளைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்குமான படுக்கையை நிர்ணயித்தனர் தாதிகள். மனிதாபிமானம் கொண்ட மேலதிகாரியாய் இருக்கக்கூடும் என மரியாவிற்குத் தோன்றிய ஒரு ஒரு தாதி வரிசையாக ஒவ்வொரு பெண்ணிடமும் வந்து தனது பட்டியலிலிருக்கும் பெயரோடு அவர்களது சட்டையில் குத்தப்பட்டிருந்த அட்டையில் இருக்கும் பெயர்களை ஒப்பிட்டுச் சரிபார்த்தாள். மரியாவிடம் வந்தபோது அவளிடம் அடையாள அட்டை இல்லை என்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தாள்.

தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கு வந்தேன்’’, என்றாள் மரியா.

தனது கார் நெடுஞ்சாலையில் பழுதடைந்த விஷயத்தை மிக அவசரமாக விவரித்தாள். கேளிக்கை நிகழ்வுகளின் மாயவித்தைக்காரனாகிய தன் கணவன் அன்றைய நள்ளிரவிற்கு முன் செல்ல வேண்டிய மூன்று நிகழ்வுகளுக்காக பார்சிலோனாவில் தனக்குக் காத்திருப்பதாகவும், தன்னால் சமயத்திற்குச் சென்று அவனுடன் இணைய முடியாதென்பதைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினாள். அப்போது கிட்டத்தட்ட ஏழுமணி ஆகியிருந்தது. அவள் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்ப வேண்டும் என்றும் இவளுக்குத் தாமதமாவதால் அவன் அனைத்தையும் ரத்து செய்து விடுவானோ எனஅஞ்சுவதாகவும் தெரிவித்தாள். அவள் கூறுவதை தாதி கவனமாகக் கேட்பது போல் தோன்றியது.

’’உன் பெயர் என்ன?’’ என வினவினாள்.

ஆசுவாசமைடந்த மரியா தன் பெயரைத் தெரிவித்தாள். ஆனால் பலமுறை பட்டியலைச் சரிபார்த்தும் அவளால் அதனைக் கண்டறிய முடியவில்லை. துணுக்குற்ற அவள் இன்னொரு தாதியிடம் வினவ அவள் பதிலேதும் கூறாமல் தோள்களைக் குலுக்கினாள்.

ஆனால் நான் தொலைபேசியை பயன்படுத்த மட்டும்தான் இங்கு வந்தேன் என்றாள் மரியா.

’’கண்டிப்பாக இனியவளே,எனக் கூறிய மேற்பார்வையாளர் நம்பமுடியாத அளவு அப்பட்டமான இனிமை கொண்ட குரலில் ‘’நீ நலமாக இருக்கிறாய் என்றால் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இப்போது வேண்டாம், நாளை’’ என்றபடி அவளைப்படுக்கைக்கு அழைத்துச் சென்றாள்.

பேருந்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஏன் ஒரு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இருப்பதுபோல் நடந்தார்கள் என்பதன் காரணம் அப்போது தான் மரியாவிற்குப் புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் மயக்கமருந்து அளிக்கப்பட்டிருந்தது, தடிமனா கற்சுவரும் இறுகிய படிகளும் கொண்ட அக்கட்டிடம் உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவமனை. திகைத்த அவள் படுக்கையறையிலிருந்து தப்பியோட முயல, முன்கதவை அடையும் முன்பாகவே பெருத்த உருவம் கொண்ட ஒரு தாதி தன் பெரிய கையினால் அவளைத் தாக்கி தரையில் தள்ளி நகரமுடியாமல் இறுக்கிக் கொண்டாள். அச்சத்தில் செயலற்றுப்போன மரியா பக்கவாட்டிலூடாக அவளைப் பார்த்தாள்.

’’கடவுளின் பொருட்டு கருணை கொள்ளுங்கள். இறந்துபோன என் அம்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இங்கே தொலைபேசியைப் பயன்படுத்தத்தான் வந்தேன்.’’

ஆனால் எந்தவிதமான கெஞ்சல்களும் சீருடை அணிந்த அந்த வெறிபிடித்தவளை அசைக்கப் போவதில்லை என்பதை அவளது முகத்தைக் கண்டவுடனேயே மரியா புரிந்து கொண்டாள். தனது அதீதமான வலிமைக்காகவே ஹெர்குலினா என அழைக்கப்படுபவள் அவள்.கட்டுப்பாடிழந்த நோயாளிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அவளது பனிக்கரடிக் கைகள் தவறுதலாகக் கொலை செய்வதற்குப் பெயர் போனவை. இருவர் அவளால் கொல்லப்பட்டபோது முதல் சம்பவம் விபத்தென நிறுவப்பட்டது. இரண்டாவது சம்பவம் அவ்வாறு நிறுவப்படுவதற்கான தெளிவான தரவுகளைக் கொண்டிராததால் அடுத்த முறை தீவிரமான விசாரணைக்குள்ளாக்கப்படுவாள் என எச்சரித்து விடுவிக்கப்பட்டாள். ஸ்பெயின் முழுவதிலுமுள்ள பல்வேறு மனநல மருத்துவமனைகளின் சந்தேகத்திற்கிடமான விபத்துகளின் வரலாற்றில் இந்தப் பாரம்பரிய மேல்தட்டுக் குடும்பத்தின் கருப்பு ஆடிற்குப் பங்குண்டு என்கிற ஒப்புக்கொள்ளப்பட்ட கதை நிலவி வந்தது.

அந்த முதல் இரவில் மரியாவைத் தூங்க வைக்கும்பொருட்டு அவர்கள் அவளுக்கு ஊசியிட வேண்டியிருந்தது. அதிகாலைக்கு முன்பு, சிகரெட் பிடிக்க வேண்டுமென்கிற ஏக்கம் அவளுள் எழுந்த போது அவளது மணிக்கட்டும் கணுக்காலும் படுக்கையின் உலோகக் கம்பியுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அவள் கத்தியபோதும் ஒருவரும் வரவில்லை. பார்சிலோனாவில் அவளது கணவன் அவளைப்பற்றி எந்த விவரமும் கண்டறிய இயலாமல் இருந்தபோது தனது துயரத்தில் மூழ்கி உணர்வற்றுப்போயிருந்த அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

நினைவு திரும்பியபோது எவ்வளவு நேரம் கடந்திருந்ததென்பதை அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உலகம் அன்பின் உறைவிடம் போலக் காட்சியளித்தது. தட்டைப்பாத நடையும் ஆற்றுப்படுத்தும் புன்னகையும் கொண்ட முக்கியஸ்தராகிய ஒரு நபர் தன் கரத்தின் திறம்மிக்க இரு அசைவுகளால், உயிருடன் எஞ்சியிருப்பது குறித்த அவளது மகிழ்ச்சியை மீட்டுக்கொணர்ந்தார். அவர்தான் அந்த மருத்துவமனையின் இயக்குநர்

அவரிடம் எதுவும் பேசுவதற்கு முன்பாக, அவருக்கு வணக்கம் கூறுவதற்கும் கூட முன்பாக மரியா அவரிடம் சிகரெட்கேட்டாள். ஒன்றைப் பற்றவைத்து, அத்துடன் கிட்டத்தட்ட நிரம்பியிருந்த ஒரு முழுப் பெட்டியையும் கொடுத்தார். மரியாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை

உன் இதயத்தில் இருப்பதனைத்தையும் நீ அழுது தீர்க்கவேண்டிய நேரம் இது. கண்ணீர் தான் ஆகச்சிறந்த மருந்துஎன மிக மென்மையான குரலில் கூறினார் மருத்துவர்

எந்த வெட்கமுமின்றி மரியா தன்னை அவரிடம் முழுமையாக இறக்கிவைத்தாள். புணர்தலுக்குப் பிறகான வெறுமையான பொழுதுகளில் தன் விளையாட்டுத்தனமான காதலர்கள் எவரிடமும் அவளால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. அவளுக்குச் செவிமடுத்தபடியே தன் விரல்களால் அவளது கூந்தலைக் கோதியும், அவள் சீராக சுவாசிக்க ஏதுவாக அவளது தலையணையைச் சரி செய்தும், அவளது பிரச்சினைகளின் இழைகளினூடாகத் தன் ஞானத்தால் வழிநடத்தியும் அவள் ஒருபோதும் நினைத்திடாத இனிமையுடன் அவர் நடந்து கொண்டார். கூடப்படுப்பதை ஒரு பரிசாக எதிர்பாராமல் இதயபூர்வமாக அவளுக்கு ஒரு ஆண் செவிமடுத்துப் புரிந்துகொள்கிற அதிசயம் அவள் வாழ்விலேயே முதன்முறையாக அப்போதுதான் நடந்தேறியது. நீண்ட ஒரு மணி நேரத்தின் இறுதியில் தன் ஆன்மாவின் ஆழம் வரை வெளிப்படுத்திய பின் அவள் தன் கணவனுடன் தொலைபேச அனுமதி கோரினாள்

தன் பதவியின் அத்தனை கம்பீரத்துடனும் எழுந்து நின்றார் மருத்துவர். “இப்போது வேண்டாம் இளவரசியே“, என்றபடி இதுவரை ஒருபோதும் அவள் உணர்ந்திராத மென்மையுடன் அவளது கன்னத்தைத் தட்டினார். “நேரம் வருகையில் எல்லாமும் நடக்கும்என்றுவிட்டு கதவினருகே சென்றவர், பாதிரியார் போல் ஆசீர்வதித்து தன்னை நம்பும்படி கூறியபின் எப்போதைக்குமாக அவளிடமிருந்து மறைந்துபோனார்

அதே நாளின் பிற்பகலில் ஒரு வரிசை எண் அளிக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய அவளது இருப்பிடம் மற்றும் அடையாளம் பற்றிய சில மேம்போக்கான குறிப்புகளுடன் அந்த மன நல மையத்தில் மரியா அனுமதிக்கப்பட்டாள். அவ்விவரத்தின் பக்கவாட்டில் மருத்துவர் தன் கையாலையே அவள் குறித்த தனது மதிப்பீட்டினைக் குறித்திருந்தார்: கலக்கமடைந்திருக்கிறார்.

மரியா கணித்தது போலவே, அவளது கணவன் ஹார்டாமாவட்டத்திலுள்ள தங்களது நடுத்தர அடுக்கத்திலிருந்து தனது மூன்று நிகழ்ச்சிகளுக்காக அரை மணி நேரம் தாமதமாகக் கிளம்பியிருந்தான். பிரச்சனைகள் எதுவுமற்று, அன்புடன் அவர்கள் இணைந்திருந்த அந்த இரண்டாண்டு வாழ்வில் அவள் தாமதித்திருப்பது இதுதான் முதல் முறை. அந்த வார இறுதியில் ஒட்டுமொத்த மாகாணத்தையும் மூழ்கடித்த கடும் மழைதான் அதற்குக் காரணமாயிருக்கும் என அவன் ஊகித்தான். வெளியே கிளம்பும் முன்பாகத் தன்பயணம் பற்றிய விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்து கதவில் செருகினான்.

குழந்தைகளனைவரும் கங்காரு உடையணிந்திருந்த முதல் நிகழ்ச்சியில் அவன் தனது மிகச்சிறந்த மாயமீன் ஜாலத்தைக் காட்சிப்படுத்தாமல் தவிர்த்தான். அவளது உதவியின்றி அவனால் அதனைச் செய்ய இயலவில்லை. அவனது இரண்டாவது நிகழ்ச்சி சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு தொண்ணூற்று மூன்று வயது மூதாட்டியின் வீட்டில் இருந்தது. கடந்த தனது முப்பது பிறந்தநாள்களையும் முப்பது வெவ்வேறு மாயவித்தைக்காரர்களுடன் கொண்டாடியது குறித்துப் பெருமிதப்பட்டாள் அவள். மரியாவின் இன்மையினால் அதீதமாய்ச் சங்கடமடைந்திருந்த அவனால் மிகச்சிறிய மாயாஜாலங்களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை. ரம்லாஸ் தெருவின் ஒரு காஃபி க்ளப்பில் தினசரி இரவு அவன் நிகழ்த்துகிற ஜாலங்களின் இன்றைய நிகழ்வாக சில பிரெஞ்சு சுற்றுலாவாசிகளுக்கு சில சுவாரஸ்யமற்ற ஜாலங்களை நிகழ்த்திக்காட்டினான். மாயாஜாலங்களில் நம்பிக்கை இல்லாத அவர்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிற்குப் பிறகும் வீட்டிற்கு அவன் தொலைபேசியை அழுத்திக் காத்திருந்தபோது பதிலளிக்க மரியா இல்லாமல் ஏமாறநேர்ந்தது. இறுதியாக அழைத்த பிறகு, அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதென்கிற கவலையை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை

பொது நிகழ்வுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் பாஸியோ தி கிரேஸியா சாலையில் பனைமரங்களுக்கூடாகச் செல்கையில் வசந்தத்தின் பேரழகைக்கண்ட போதுதான் மரியா இல்லாமல் இவ்வுலகம் எப்படியிருக்கும் என்னும் அச்சம் நிறைந்த எண்ணம் அவனை அதிரச்செய்தது. அவன் எழுதிய குறிப்பு இன்னமும் கதவிலேயே செருகியிருப்பதைக் கண்டதும் அவனது இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. மிகுந்த கவலையடைந்த அவன் பூனைக்கு உணவிடவும் மறந்தான்

ஒருபோதும் அவனது உண்மையான பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இப்போது இதை எழுதும்போதுதான் உணர்கிறேன்; பார்சிலோனாவில் நாங்கள் அனைவரும் அவனது தொழில்சார்ந்த பெயரைத்தான் அறிந்திருந்தோம். மாயவித்தைக்காரன் ஸாடர்னோ. விநோதமான குணநலம் கொண்ட அவன் சமூகத்தொடர்பிலும் பின்தங்கியிருந்தான்; ஆனால் அவனிடம் இல்லாதிருந்த விவேகமும் வசீகரமும் மரியாவிடம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. மனைவியைக்காணோமென நள்ளிரவுக்குப்பின் தொலைபேசுவது பற்றியெல்லாம்  ஒருவன் எண்ணவே முடியாத மாபெரும் புதிர்களடங்கிய இச்சமூகத்தினுள் அவள்தான் அவன் கரங்களைப் பற்றி வழிநடத்தியிருந்தாள். எனவே வீட்டிற்கு வந்தவுடன் ஜரகோசாவிற்குத் தொலைபேசியதோடு அவன் நிறுத்திக்கொண்டான்மரியா பிற்பகலிலேயே விடைபெற்றுவிட்டாள் என எந்த அதிர்ச்சியுமற்ற ,உறக்கத்திலாழ்ந்த ஒரு முதியவளின் குரல் மட்டும் பதிலாகக்கிட்டியது. அதிகாலையில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே அவன் உறங்கியிருந்தான். ரத்தம்படிந்த கந்தலான திருமண உடையில் மரியா இருப்பது போன்ற ஒரு குழப்பமான கனவினைக் கண்டவுடனே, இம்முறை மரியா இப்பெரிய உலகத்தை அவளின்றி அவன் எதிர்கொள்ளும்படியாகத் தனித்து விட்டுவிட்டு எப்போதைக்குமாகப் பிரிந்துசென்றுவிட்டாள் என்கிற உறுதியான அச்சத்துடன்தான் எழுந்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவன் உள்ளிட்ட மூன்று ஆண்களை அவள் கைவிட்டிருந்தாள். அவர்கள் சந்தித்து ஆறு மாதத்திற்குப் பிறகு, அன்ஜூர் மண்டலத்தில் ஒருவேலைக்காரியின் அறையில் மிருகத்தனமான புணர்ச்சிகளின் வேதனையில் இன்பம் துய்த்த காலத்தில் மெக்சிகோ நகரில் அவனைக் கைவிட்டாள். விவரிக்க முடியாதபடி தீவிரமாய்ப் புணர்ந்த ஓர் இரவுக்குப் பின்பான காலையில் மரியா அங்கிருந்து நீங்கியிருந்தாள். தனது முந்தை திருமண மோதிரங்கள் உள்ளிட்ட அவளது அனைத்து உடைமைகளையும் விட்டு விட்டுச் சென்றிருந்தஅவள், அந்த ஆக்ரோஷமான புணர்தலின் சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கில்லையென எழுதிய ஒரு கடிதத்தையும் அவற்றுடன் விட்டிருந்தாள். சட்டப்படியான வயது வரம்பை எட்டும் முன்பே அவள் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டஉயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழனாகிய முதல் கணவனிடம்தான் அவள் சென்றிருப்பாள் என ஸாடர்னோ நினைத்தான். (காதலற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்றிருந்தாள்.) ஆனால் இல்லை, அவள் தன் பெற்றோரிடம் சென்றிருந்தாள். எந்தவிலை கொடுத்தேனும், எவ்வித நிபந்தனைகளுமின்றி, நிறைவேற்றுமளவிற்கு அவனே இன்னும் தயாராகாத வாக்குறுதிகளையும்கூட அளித்து தன்னுடன் வரும்படி வேண்டினான். ஆனால் தகர்க்கவே இயலாத உறுதியுடன் அவள் பதிலளித்தாள். “தற்காலிகமானவை, நீண்ட காலத்தியவை என காதலில் இரு வகை உண்டுஎனத் தொடங்கியவள்,நம்முடையது தற்காலிகமானதுஎனக் கருணையின்றி முடித்தாள். அவளதுஉறுதி அவனைத் தோல்வியை ஒப்புக்கொள்ளும்படி செய்தது. ஆனால் மிகுந்த பிரயாசையுடன் அவளை அவன் மறந்த ஓராண்டிற்குப் பிறகு கல்லறைத் திருநாளின் அதிகாலையில் தனது அனாதையான அறைக்குத் திரும்பியபோது வரவேற்பறையின் நீளிருக்கையில் ஒரு மணப்பெண்ணைப் போல முழு வெள்ளை கவுனும் ஆரஞ்சுப்பூக்களாலான கிரீடமும் அணிந்தபடி மரியா படுத்திருந்தாள்.

மரியா அவனிடம் உண்மையைக் கூறினாள். அவளுடன் திருமணம் நிச்சயமாகியிருந்த, மனைவியை இழந்து குழந்தைகளுமின்றி வாழ்ந்துவந்த செல்வந்தன் கத்தோலிக்க தேவாலயத்தில் இவளை மேடையிலேயே அலங்காரங்களுடன் காத்திருக்க வைத்துவிட்டு காணாமல் போயிருந்தான். எப்படியாயினும் வரவேற்பினை நடத்திவிடலாம் என அவளது பெற்றோர் எடுத்த முடிவிற்கு அவளும் உடன்பட்டாள். மரியாச்சி பாடல் குழுவினருடன் பாடி ஆடிய அவள் பின்னரே நிலைமையை உணர்ந்தாள்.வருத்தத்திலும் பச்சாதாபத்திலும் ஸாடர்னோவைத் தேடி நள்ளிரவில் கிளம்பினாள்.

அவன் வீட்டில் இல்லை. ஆனால் வழக்கமாக முற்றத்தில் அவர்கள் மறைத்து வைக்கிற பூந்தொட்டிக்குக் கீழிருந்து சாவியை எடுத்துக்கொண்டாள். எவ்வித நிபந்தனைகளுமின்றித் தன்னை ஒப்புக்கொடுப்பது இப்போது அவளது முறையாக இருந்தது. “இம்முறை எவ்வளவு காலம்?” என அவன் வினவியபோது வினிஸியஸ் டி மொரேஸின் வரியினால் அதற்குப் பதிலளித்தாள்: ”ஒரு காதலால் எவ்வளவு காலத்திற்கு நீடிக்க முடிகிறதோ அவ்வளவு காலத்திற்கு அது நித்தியமானது.” இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் அது நித்தியமாய் இருந்தது.

ரியா பக்குவமடைவது போல் தோன்றியது. நடிகையாவது குறித்த தனது கனவுகளைத் துறந்த அவள், வேலையிலும் படுக்கையிலும் தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டாள். கடந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் ஒரு மாயவித்தைக்காரனின் நிகழ்விற்கு பெர்பினன் சென்று திரும்பும் வழியில் பார்சிலோனாவிற்கும் முதல்முறையாகச் சென்றிருந்தனர். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் ஹார்டாவின் கேடலோனியன் பகுதியில் ஒரு அடுக்ககத்தை வாங்கி கடந்த எட்டு மாதங்களாக இங்கே வசித்து வருகின்றனர். அது சந்தடி நிறைந்த இடமாக இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, என்றாலும் ஐந்து குழந்தைகள் வசிக்கும் அளவிற்கான இடம் தாராளமாக இருந்தது. கடந்த வார இறுதியில் ஒரு வாடகைக் கார் அமர்த்தி ஜரகோசாவில் இருக்கும் உறவினர்களைச் சந்திக்க அவள் கிளம்பும்வரை அங்கே மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது. திங்கள் இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருந்தாள் அவள், அந்த வியாழனின் விடியற்காலை வரை அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

அதற்கடுத்து வந்த திங்களில் மரியா வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்த காரின் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. “அவளைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனக்கூறிய ஸாடர்னோ, அவளை ஜரகோசாபகுதியில் தேடும்படி தெரிவித்தான். ஒருவாரத்திற்குப் பின்னர் வீட்டிற்கு வந்த ஒரு காவல் அதிகாரி மரியா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தொலைவில் க்யாடிஸ் என்கிற இடத்திற்குச் செல்லும் பாதையில் கார் சிதிலமடைந்து கிடந்ததாகக் கூறினார். கார் திருட்டுப் பற்றி அவளுக்கு வேறெதுவும் தெரியுமா என அறிய விரும்புவதாக அவர் கேட்டார். பூனைக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஸாடர்னோ நிமிர்ந்துகூடப் பாராமல், தன் மனைவி தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்பதோ யாருடன் சென்றிருக்கிறாள் என்பதோ தனக்குக் கிஞ்சித்தும் தெரியாதென்பதால் காவல் அதிகாரி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறினான்.  அதீதமாக வெளிப்பட்ட அவனது உறுதி அவரைச் சங்கடத்திற்குள்ளாக்கவே, தன் கேள்விகளுக்காக மன்னிப்புக் கோரிக் கொண்டார். இந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

மரியா மீண்டும் தன்னைப் பிரிந்து செல்லக்கூடும் என்னும் ஐயம் ஸாடர்னோவைக் கடக்யூஸ் குறித்து சிந்திக்கச் செய்தது. படகுச் சவாரிக்காக ஈஸ்டரின்போது ரோஸா ரெகஸ் அவர்களை அங்கே அழைத்திருந்தார். ஃப்ரான்காயிஸத்தின்*(Francoism) அந்திமத்தில், மாரிடிம் விடுதியின் காஷ்ஸ் டிவைன்*(gauche divine) மதுக்கூடத்தில் இருந்த ஆறுபேருக்கான தேனிரும்பு மேஜைகளில் ஒன்றைச் சுற்றி நாங்கள் இருபதுபேர் நெருக்கியடித்து நின்றிருந்தோம். மரியா அன்றைய நாளின் தனது இரண்டாவது சிகரெட் பெட்டியைக் காலி செய்து முடித்தபோது அவளது தீப்பெட்டியும் தீர்ந்து போயிருந்தது. ரோமானிய கைச்சங்கிலி அணிந்திருந்த மென்ரோமங்கள் கொண்ட ஒரு மெலிந்த கை அந்தக்கூச்சல் மிகுந்த கும்பலுக்கிடையே நீண்டு அவளுக்கு நெருப்பளித்தது. நிமிர்ந்து பாராமல் நன்றி கூறினாள் மரியா, ஆனால் மாயவித்தைக்காரனான ஸாடர்னோ அவனை நிமிர்ந்து பார்த்திருந்தான் – நன்கு சவரம் செய்த, மெலிந்த இளைஞனாகிய அவன் அதீதமாய் வெளிறியிருந்தான், கரிய குடுமி அவனது இடுப்புவரை தொங்கியது. வசந்தகாலப் பருவக்காற்றின் ஆக்ரோசத்தைச் சமாளிக்க அந்த மதுக்கூடத்தின் ஜன்னல் பலகைகள் திணறிக்கொண்டிருக்க அவன் பருத்தியாலான மலிவான அங்கியும் எளிமையான செருப்பும் அணிந்திருந்தான்.

அடுத்ததாக அவர்கள் இலையுதிர்க்காலத்தின் பிற்பகுதியில்  பார்சிலோனா கடற்கரையில் ஓர் உணவுக்கூடத்தில்தான் சந்தித்துக்கொண்டனர். அப்போதும் அவன் அதே போன்ற ஒரு எளிமையான ஆடையையே அணிந்திருந்தான், ஆனால் குடுமிக்குப் பதிலாக நீண்ட தாடியைக் கொண்டிருந்தான். பழைய நண்பர்கள் என்பது போல அவர்களுக்கு முகமன் கூறிய அவன் மரியாவை முத்தமிட்ட போது அவள் பதிலுக்கு முத்தமிட்ட விதம் அவர்கள் நீண்டகாலமாக ரகசியமாகச் சந்தித்துவரக்கூடும் என்னும் சந்தேகத்தை ஸாடர்னோவில் விதைத்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர்களது வீட்டின் குறிப்பேட்டில் ஒரு புதிய பெயரையும் அலைபேசி எண்ணையும் மரியா எழுதியிருப்பதைக் கவனித்தான். இரக்கமற்ற பொறாமை அவை யாருடையவை என்பதை அவனுக்குத் தெளிவாக்கிது. இவர்கள் வாழ்வின் இடையில் நுழைந்திருந்தவனின் வாழ்க்கைமுறை அதனை நிரூபணம் செய்தது: இருபத்தி இரண்டு வயதாகிய அவன் ஒரு செல்வந்தனின் ஒரே மகன். நவீன அங்காடிகளுக்கு ஜன்னல் அலங்காரம் செய்து தருபவனாகிய அவன் இருபால் புணர்ச்சியில் விருப்பமுடையவன் என அறியப்பட்டிருந்தான். அதோடு, மணமாகிய பெண்களை ஆற்றுப்படுத்துவதைத் தொழிலாகச் செய்கிறவன் என்னும் விதமாகவும் பெயர் பெற்றிருந்தான். ஆனால் மரியா வீட்டிற்குத் திரும்பி வராத தினம் வரை ஸாடர்னோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அதன்பிறகு தினமும் காலை ஆறுமணியிலிருந்து மறுநாள் அதிகாலை வரை முதலில் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறையும் பின்னர் தொலைபேசிக்கு அருகில் செல்லும்போதெல்லாமும் அந்த எண்ணிற்கு அழைக்கத் தொடங்கினான். யாரும் அதற்குப்பதிலளிக்கவில்லை என்னும் நிஜம் ஸாடர்னோவின் இழப்பினை ஆழமாக்கியது.

நான்காம் நாள் அந்த வீட்டினைச் சுத்தம் செய்ய வந்திருந்த ஒரு அண்டலூசியப் பெண் தொலைபேசிக்குப் பதிலளித்தாள். ”அவர் வெளியே சென்றிருக்கிறார்,” என அவள் பொதுப்படையாகக் கூறியது அவனை மேலும் பைத்தியமாக்கியது. செனோரிடா மரியா என்பவள் அங்கு எப்போதேனும் வந்தாளா எனக் கேட்காமல் ஸாடர்னோவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“மரியா என யாரும் இங்கே வசிக்கவில்லை” என்ற அவள். “அவர் மணமாகாதவர், என்றாள்.

”அதை அறிவேன்,” என்ற ஸாடர்னோ, “அவள் அங்கே வசிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது வருகிறாள்தானே?” என்றான்.

அப்பெண்மணி எரிச்சலுற்றாள்.

“முதலில் நீ யாரென்று சொல்” என்றாள்.

ஸாடர்னோ அழைப்பைத் துண்டித்துவிட்டான். இனி இது குறித்து சந்தேகம் கொள்ளத்தேவையில்லை, அதுதான் தகிக்கின்ற உண்மை என்பதற்கான இன்னுமொரு உறுதிப்படுத்தலாக அப்பெண்மணியின் மறுப்பு அவனுக்குத் தோன்றியது. அவன் நிலைகுலைந்தான். அடுத்தடுத்த நாட்களில், பார்சிலோனாவில் அவனுக்குத் தெரிந்த அனைவருக்கும் அகரவரிசைப்படி தொலைபேசத் தொடங்கினான். யாராலும் அவனுக்கு எதையும் சொல்லமுடியவில்லை, ஒவ்வொரு அழைப்பும் அவனது துயரத்தைக் கடுமையாக்கிக்கொண்டே சென்றது. ஏனென்றால், அவனது பொறாமையின் வெறித்தனம் வருத்தமற்ற இரவு ஆந்தைகளான காஷ்ஸ் டிவைன் குழுவினருள் பிரபலமாகியிருந்ததால் இவனது அழைப்பிற்கு அவனை மேலும் துயருக்குள்ளாகும்படியான பதில்களையே அவர்கள் நல்கினர். அதன்பிறகுதான் அந்த அழகான,மனம்பிறழ்ந்த, ஊடுருவ இயலாத நகருக்குள் தான் எவ்வளவு தனித்திருக்கிறோம் என்பதையும் ஒருபோதும் அவன் அங்கே மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதையும் உணர்ந்துகொண்டான். மறுநாள் காலை பூனைக்கு உணவளித்தபிறகு இறப்பிலிருந்து மீண்டு வரும்படியாகத் தன் இதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டவன், மரியாவை மறந்துவிட உறுதிபூண்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பின்பும் கூட மரியாவினால் மனநலமருத்துவமனையின் வாழ்க்கைக்குத் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியவில்லை. சிறைச்சாலையின் கரடுமுரடான மேஜையோடு பிணைக்கப்பட்டிருந்த தட்டையான தட்டில் வழங்கப்பட்ட அளவு உணவை உண்பதன் வாயிலாகவும், இருளான மத்திம கால சாப்பாட்டுக்கூடத்தின் முகப்பில் இருக்கும் தளபதி ஃப்ரான்சிஸ்கோ ஃப்ரான்கோவின் புகைப்படத்தை உற்றுநோக்கியபடியுமே அவள் உயிர்த்திருந்தாள். அதிகாலை, காலை, மாலை என ஒவ்வொரு நாளின் பெரும்பாலான நேரத்தையும் எடுத்துக்கொண்ட  காலமுறைப் பிரார்த்தனைகளுக்கு ஆரம்பத்தில் அவள் உடன்பட மறுத்தாள். புத்துணர்வுக்கான பகுதியில் பந்து விளையாடவும், மிகத்தீவிரமாக உழைத்து சக பெண்கள் உருவாக்கிய செயற்கை மலர்களை உருவாக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் மறுத்தாள். ஆனால் மூன்றாவது வாரத்திற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் அப்பெண் துறவிகளின் வாழ்வுடன் இயைந்துகொண்டாள். அதனாலென்ன, அவர்களில் எல்லாருமே அப்படித்தான் துவக்கத்தில் இருந்தார்கள் எனவும் கால ஓட்டத்தில் மற்றவர்களுடன் இணைந்துகொண்டார்கள் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

ஆரம்ப நாட்களில், சிகரெட் இல்லாத பிரச்சனை தங்கத்தின் விலைக்கு அதை விற்ற தாதியினால் தீர்க்கப்பட்டது. ஆனால் மரியாவிடமிருந்த சிறிய தொகை தீர்ந்தபிறகு அப்பிரச்சனை அவளை மீண்டும் சித்திரவதை செய்யத்தொடங்கியது. ஆனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்னும் பரிதவிப்பு தொலைபேச வேண்டும் என்னும் பரிதவிப்பிற்கிணையாக அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியதால், உடனிருக்கும் பெண்கள் குப்பையிலிருந்து எடுத்த சிகரெட் துண்டுகளுடன் செய்தித்தாள்களைக் கொண்டு உருவாக்கிய சிகரெட்டுகளில் ஆறுதல் அடைந்தாள். செயற்கை மலர்களை உருவாக்கியதன் மூலம் அவள் சம்பாதித்த குறைந்த அளவு பெடாஸ்கள் தற்காலிகமாக அவளது தேவையைத் தீர்த்தன.

ஆனால் இரவின் தனிமைதான் எல்லாவற்றையும் விடக் கொடூரமாய் இருந்தது. அவளைப்போலவே,  பெரும்பாலான பிற பெண்களும் வேறெதுவும் செய்யத் தைரியமின்றி அந்த அரையிருளில் விழித்துக்கிடந்தனர், ஏனென்றால் சங்கிலியும் பூட்டும் கொண்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் கனமான கதவினருகே காவல் காத்த இரவுச் செவிலியும் விழித்துக்கொண்டிருந்தாள். என்றாலும், துயரம் தாங்க இயலாத ஓர் இரவில் பக்கத்துப் படுக்கையில் இருக்கும் பெண்ணிற்குக் கேட்கும் அளவு சத்தத்தில்,

“நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?’ என வினவினாள் மரியா.

அருகிலிருந்தவளின் சூன்யமான குரல், “நரகத்தின் குழியில்” எனத் தெளிவாகப் பதிலளித்தது.

”இதொரு புதர்சூழ்ந்த தரிசுக்காடு எனக் கூறுகிறார்கள்,” எனப் படுக்கையறை முழுதும் எதிரொலிக்கும் குரலில் கூறியது இன்னொரு குரல். “அது உண்மையாகத்தான் இருக்கும். கோடைக்கால பௌர்ணமி இரவில் கடற்கரையோரம் நாய்கள் குரைப்பதை நம்மால் கேட்க முடியும்.”

பூட்டினோடு பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி ஒரு கப்பலின் நங்கூரம் போல ஒலியெழுப்ப கதவு திறந்தது. சட்டெனக் கவிழ்ந்த அமைதிக்கு நடுவே உயிர்த்திருந்த ஒரே ஒரு ஜீவன் போல் தோன்றிய இரக்கமற்ற பாதுகாவலர் படுக்கையறையின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு நடக்கத் தொடங்கினாள். மரியா பயத்தில் உறைந்து போனாள் – அதற்கான காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

மரியா இந்த மனநல மையத்திற்கு வந்துசேர்ந்த முதல்வாரம் தொட்டே, இரவுத்தாதி, பாதுகாவலர் அறையில் தன்னுடன் படுக்குமாறு அவளிடம் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தாள். உயிரற்ற, தொழில்முறையிலான தொனியில் துவங்கிய அவள் அந்தக் காதலுக்குப் பதிலாக சிகரெட்டுகளும் மிட்டாய்களும் அவளுக்கு எதுவேண்டுமாயினும் கிடைக்கும் என்றாள். “உன்னிடம் எல்லாமும் இருக்கும். நீதான் ராணியாக இருப்பாய்.” என்றாள் லேசான நடுக்கத்துடன். ஆனால் மரியா அதற்கு உடன்படாதபோது அவள் தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டாள்: அவளது தலையணைக்கடியில், ஆடைகளின் பாக்கெட்டுகளில், எதிர்பார்த்திராத இடங்களில் சிறிய காதல் குறிப்புகளை வைத்தாள்.  கல்லைக்கூடக் கசிய வைக்கும் விதமான இதயம் நொறுங்கும் அவசரச் செய்திகளை அவை சுமந்திருந்தன. படுக்கையறையின் இன்றைய நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பாக அவள் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகியதுபோல் தோன்றியிருந்தது.

உடன்வசிப்பவர்கள் அனைவரும் உறங்கிவிட்டார்கள் எனத் தோன்றியவுடன், மரியாவின் படுக்கையை நோக்கிவந்த தாதி அருவருக்கத்தக்க பல மென் வார்த்தைகளை அவளது செவியில் கூறியதோடு மரியாவின் முகத்திலும் பயத்தில் நடுங்கிய கழுத்திலும் விறைத்திருந்த கைகளிலும் சோர்வுற்றிருந்த கால்களிலும் முத்தமிடத்தொடங்கினாள். மரியா அசைவின்றி இருந்தது பயத்தினால் அல்ல, ஒப்புதலால் என்பதாகப் புரிந்துகொண்ட அவள் மேலும் முன்னேறினாள். அப்போதுதான் மரியா அவளைத் தன் புறங்கையால் தாக்கி அடுத்த படுக்கையில் சென்று மோதி வீழும்படி தள்ளினாள். கலவரமடைந்த அறைவாசிகள் உண்டாக்கிய கூச்சலின் நடுவே ஆங்காரத்துடன் நின்றாள் தாதி.

”தேவடியா நாயே,” எனக்கத்திய தாதி, “என் மேல் நீ பித்தாகும்வரை இந்த நரகத்தின் குழியில் நாம் சீழ்பிடித்துக் கிடப்போம்” என்றாள்.

ஜூன் மாத முதல் ஞாயிறின் காலைப்பொழுதில் அவசர நடவடிக்கைகளைக் கோரும்விதம் முன்னறிவிப்பின்றி கோடை பிறந்திருந்தது. பிரார்த்தனையின் போது புழுக்கம் தாளாத கைதிகள் தங்களது கம்பளி ஆடைகளைக் களைந்து வீசத்தொடங்கினர். பார்வையற்ற கோழிகள் போல நிர்வாணமான நோயாளிகளை செவிலியர் மேலும் கீழும் துரத்தி ஓடுவதைச் சற்று வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மரியா. குழப்பத்தின் நடுவே அவர்களது கொடூரமான அடியிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ள முயன்ற அவள் எப்படியோ ஒரு ஆளற்ற அலுவலக அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள். அங்கே தன்னை எடுக்கும்படி கெஞ்சியபடி இடைவிடாமல் ஒரு தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது.   யோசனையின்றி மரியா அதனை எடுத்துப் பேசியபோது ஒரு தொலைதூரக்குரல் புன்னகையுடன் தொலைபேசி நிறுவனத்தின் நேர அறிவிப்பினைப் பிரதி செய்ய முயன்று கொண்டிருந்தது:

“தற்போது நேரம் நாற்பத்தி ஐந்து மணிகள், தொண்ணூற்று இரண்டு நிமிடங்கள், மற்றும் நூற்று ஏழு விநாடிகள்.”

குழப்பத்துடன் ”முட்டாள்” என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே கிளம்பியபோதுதான் தான் எப்படியொரு வாய்ப்பை நழுவவிட இருக்கிறோம் என்பதை மரியா உணர்ந்தாள். தன் வீட்டின் எண்தானா என்பதைக்கூட உறுதி செய்ய இயலாத வேகத்துடன் அந்த ஆறு இலக்க எண்ணை மிகுந்த பதட்டத்துடன் டயல் செய்தாள். இதயம் படபடக்க அவள் காத்திருந்தபோது பழக்கமான அந்தத் துன்பமிகு ஓசை ஒருமுறை, இருமுறை, மும்முறை என ஒலித்து இறுதியில் தான் இல்லாத வீட்டில் வசிக்கும் தான் மிகவும் நேசிக்கும் அந்த மனிதனின் குரலைக் கேட்டாள்.

“ஹலோ?”

தன் குரல்வளையில் முடிச்சிட்ட கண்ணீர் கரையும்வரை அவள் காத்திருக்கவேண்டியிருந்தது.

“செல்லமே, அன்பே” என்றபடி பெருமூச்சுவிட்டாள்.

இப்போது கண்ணீர் அவளை முந்திக்கொண்டது. தொலைபேசியின் மறுமுனையில் சற்றுநேர பயங்கரமான அமைதிக்குப்பின், பொறாமையில் எரிகின்ற ஒரு குரல்,

“தேவடியா” எனும் வார்த்தையைத் துப்பிவிட்டு தொலைபேசியை ஓங்கி அறைந்தது.

அன்றிரவு ஆத்திரம் தலைக்கேறிய மரியா உணவகத்திலிருந்த தலைமைத் தளபதியின் சித்திரத்தைக் கிழித்து தன் சக்தியனைத்தையும் உபயோகித்து தோட்டத்தின் புறமிருந்த கறைபடிந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து  வெளியே வீசினாள். பின் ரத்தம் சூழ தரையில் விழுந்தாள். அதற்குப் பின்பும் கூட அவளைக்கட்டுப்படுத்த முயன்று தோல்வியுற்ற செவிலியரின் அடிகளை எதிர்க்கும் அளவிற்கு அவளிடம் ஆத்திரம் மிச்சமிருந்தது. ஆனால் வாசலருகே கைகட்டியபடி நின்று இவளை முறைத்துப்பார்த்த ஹெர்குலினாவைக் கண்டவுடன் மரியா அமைதியடைந்தாள். என்றபோதிலும், ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நோயாளிகளுக்கான அறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவள்மீது குளிர்ந்த நீரைப் பாய்ச்சி அடங்கவைத்து அவளது காலில் டர்பண்டைன் ஊசி ஏற்றினர். அதனால் கால் வீங்கி நடக்கமுடியாது போனதும் இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அவளுக்குப் புரிந்தது. அடுத்த வாரம் மற்ற நோயாளிகளுடன் படுக்க அனுமதிக்கப்பட்ட பிறகு அவள் பூனைப்பாதத்தில் நடந்து இரவுத்தாதியின் அறைக்கதவைத் தட்டினாள்.

தன் கணவனுக்கு தாதி தகவல் அனுப்ப வேண்டும் என்பதுதான் மரியா துவக்கத்திலேயே வைத்த கோரிக்கையாய் இருந்தது. யாருக்கும் தெரியக்கூடாது என்னும் நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்ட செவிலி, தன்னையறியாமல் ஆட்காட்டி விரலை உயர்த்தி, “எப்போதேனும் அவர்கள் இதனை அறிய நேர்ந்தால் அதன்பின் நீ உயிர்த்திருக்க முடியாது.” என்றாள்.

அதற்கு அடுத்த சனிக்கிழமை மரியாவின் மறுவருகையைக் கொண்டாடுவதற்காகவே அலங்கரித்த தனது சர்க்கஸ் வாகனத்தில் மாயவித்தைக்காரனாகிய ஸாடர்னோ மனநலம் குன்றிய பெண்களுக்கான மருத்துவமனைக்கு வருகை புரிந்தான். ஒரு போர்க்கப்பல போல் ஒழுங்கும் தூய்மையும் கொண்டிருந்த தன் அலுவலக அறைக்கு அவனை நேரடியாகச் சென்று வரவேற்ற இயக்குநர் அவனது மனைவியின் நிலை குறித்த அறிக்கையினை அன்புடன் பகிர்ந்துகொண்டார். அவள் எங்கிருந்து எப்போது எப்படி வந்தாள் என்பது யாருக்கும் தெரியாதென்றும் அவளைப்பற்றிய அதிகாரபூர்வமான விவரமே அவர் அவளைச் சந்தித்தபிறகு கூறிய விஷயங்களைக்கொண்டுதான் பதிவிடப்பட்டதென்றும் கூறினார். அதே தினத்தில் துவங்கிய இதுசார்ந்த விசாரணை ஒன்றும் முடிவேயின்றிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார் இயக்குநர். ஆனால் ஸாடர்னோவிற்குத் தன் மனைவியின் இருப்பிடம் குறித்து எப்படித் தெரிந்தது என்பதுதான் அவரை யோசனையிலாழ்த்தியிருந்தது. ஸாடர்னோ தாதியைக்காட்டிக்கொடுக்கவில்லை.

“காப்பீட்டு நிறுவனத்தினர் சொன்னார்கள்,” என்றான்.

திருப்தியுடன் தலையாட்டிய இயக்குநர், “எல்லாவற்றையும் கண்டறிய இந்தக் காப்பீட்டு நிறுவனத்தினரால் எப்படி முடிகிறதெனத் தெரியவில்லை” என்றார். ரசனையான தன் மேஜையின் மீது கிடந்த கோப்பினை ஒருமுறை பார்வையிட்ட அவர், “ஆனால் அவள் இப்போது மிகுந்த சிக்கலில் இருக்கிறாள் என்பது மட்டும் உறுதி,” என்றார்.

தன் மனைவியின் நலனின் பொருட்டு அவர் கூறக்கூடிய நடத்தை விதிகளைக் கேள்வியின்றி ஏற்பானாயின், மாயவித்தைக்காரன் ஸாடர்னோ அவளைத் தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் பார்வையிட தன்னால் அனுமதி நல்க முடியும் என அவர் உறுதியளித்தார். அடிக்கடியும் ஆபத்தானதாகவும் சமீபமாக அவளுக்கு வரத்துவங்கியிருக்கும் வலிப்பு நோய் மீண்டும் வராதபடிக்கு அவன் நடந்துகொள்ள வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியம் என்றார்.

“ஆச்சரியமாக இருக்கிறது,” என்றான் ஸாடர்னோ. மரியா சற்று முன்கோபிதான் என்றாலும் அவள் மிகுந்த நிதானமானவளும் கூட.”

கற்றரிந்தோரின் பாவனையை வெளிப்படுத்திய மருத்துவர், “பல காலமாக மறைந்திருக்கக்கூடிய சில குணங்கள் என்றேனும் ஒருநாள் திடீரென வெளிப்படுவதுண்டு. ஆனால் அவள் இங்கு வர நேர்ந்தது நல்லதாய்ப் போயிற்று. ஏனென்றால் கடும் நடவடிக்கை தேவைப்படுகிற இதுபோன்ற நோயாளிகளுக்கெனப் பெயர் பெற்றது இம்மருத்துவமனை.” அதன்பிறகு, தொலைபேசி மீது மரியாவிற்கு இருக்கக்கூடிய விநோதமான வெறிகுறித்தும் எச்சரித்தார்.

“அவளை மகிழ்ச்சிப் படுத்துங்கள்” என்றார்.

“கவலைப்படாதீர்கள் டாக்டர்,” என உற்சாகமாகக் கூறிய ஸாடர்னோ, “அதில் நான் தேர்ச்சிபெற்றவன்.” என்றான்.

ஒரு சிறைக்கூடமும் பாவ மன்னிப்புச்சாலையும் சேர்ந்தாற்போலிருந்த பார்வையாளர் அறை முன்பு மடத்தின் வரவேற்பறையாக இருந்தது. அவர்கள் இருவரும் எதிர்பார்த்திருக்கக்கூடிய குதூகலம் பொங்கும் ஒன்றாக இருந்திருக்கவில்லை ஸாடர்னோவின் வருகை. இரண்டு நாற்காலிகளும் ஒரு பூக்களற்ற ஜாடியும் கொண்டிருந்த மேஜைக்கருகே அறையின் நடுவில் மரியா நின்றிருந்தாள். பரிதாபத்திற்குரிய ஸ்ட்ராபெரி நிற ஆடையும் தர்மமாகக் கிடைத்த நைந்துபோன சப்பாத்துகளுமாக நின்ற அவள் கிளம்புவதற்குத் தயாராய் இருக்கிறாள் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு மூலையில் அவர்கள் கண்களில் பட்டும்படாமல் ஹெர்குலினா கைகட்டி நின்றிருந்தாள். தன் கணவன் உள்ளே நுழைந்தபோது மரியா அசையவில்லை, சிதறிய கண்ணாடித்துண்டுகளால் உண்டான தழும்புகளைக் கொண்டிருந்த அவளது முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அடையாளபூர்வமாக அவர்கள் முத்தமிட்டுக்கொண்டனர்.

“உனக்கு எப்படி இருக்கிறது?” என அவன் வினவினான்.

“இறுதியாக நீ இங்கே வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அன்பே. நான் செத்துக்கொண்டிருந்தேன்.” என்றாள்.

அமர்ந்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. கண்ணீர் பெருகப்பெருக, அங்கே அவள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் செவிலிகளின் மிருகத்தனம் குறித்தும் நாய்களுக்கும் தகாத உணவு குறித்தும் பயத்தினால் கண்களை மூடமுடியாமல் கிடந்த நீண்ட இரவுகள் குறித்தும் கூறினாள்.

“எத்தனை நாட்களாக நான் இங்கே இருக்கிறேன், மாதங்களா வருடங்களா என்றும்கூடத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் முந்தையதை விட மோசமானதாக இருந்தது.” என்றவள் உள்ளார்ந்து ஆழமாகப் பெருமூச்சுவிட்டபடி , “முன்புபோல் என்னால் இனி ஒருபோதும் இருக்கவே முடியாதெனத் தோன்றுகிறது” என்றாள்.

அவள் முகத்தில் சமீபமாகத் தோன்றியிருந்த தழும்புகளைத் தடவியபடியே, “அதெல்லாம் இப்போது முடிந்துவிட்டது.” என்றான் ஸாடர்னோ. “நான் எல்லா சனிக்கிழமையும் வருவேன். இயக்குநர் அனுமதித்தால் இடைநாட்களிலும்கூட வருவேன். எல்லாம் சரியாகிவிடுவதை நீயே பார்ப்பாய்.”

அச்சம் நிறைந்த கண்களால் அவனை வெறித்தாள் அவள். ஸாடர்னோ தன் நிகழ்த்துகலையின் வசீகரத்தைப் பயன்படுத்த முயன்றான். எல்லா மிகப்பெரிய பொய்களுக்கும் உரித்தான விளையாட்டுத்தனத்துடன் மருத்துவரின் பரிந்துரையை இனிய விதத்தில் கூறினான். ”அதாவது, நீ முழுதாகக் குணமாவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.” மரியா உண்மையைப் புரிந்துகொண்டாள்.

“தயவுசெய்து கண்ணே, எனக்குப் பைத்தியமென நீயும் நம்புவதாக மட்டும் கூறிவிடாதே.”

“உனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது பார்,” என்றபடி சிரிக்க முயன்றான் அவன். “ஆனால், நீ இன்னும் சிலகாலம் இங்கே தங்கினால் அது நிஜமாகவே எல்லோருக்கும் பயன் தருவதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் என்பதைக் கூறவேண்டியதில்லை.”

“ஆனால் தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கே வந்தேன் என்பதை முன்பே உன்னிடம் கூறினேனே,” என்றாள் மரியா.

அச்சம்தரும் அவளது இந்தப்பித்திற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஹெர்குலினாவை நோக்கினான். அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அவள் தன் கையிலிருக்கும் கடிகாரத்தைச் சுட்டி, சந்திப்பை முடித்துக்கொள்ளும் நேரமாகிவிட்டதெனத் தெரிவித்தாள். இடையீட்டை உணர்ந்து மரியா திரும்பிப் பார்த்தபோது ஹெர்குலினா உடனடித்தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்ட அவள் நிஜமாகவே பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணைப்போலக் கத்தத் தொடங்கினாள். எவ்வளவு அன்பாக முடியுமோ அவ்வளவு அன்பாக அவளை விடுவித்தவன் பின்னாலிருந்து குதித்து வந்த ஹெர்குலினாவின் கருணையில் அவளை ஒப்படைத்தான். மரியா செயலாற்றச் சிறிதும் வாய்ப்பளிக்காத ஹெர்குலினா, இடது கையால் அவளைத் தரையோடு அழுத்தி மறுகையால் அவளது தொண்டையைச் சுற்றி இறுக்கியபடி, மாயவித்தைக்காரனாகியஸாடர்னோவை நோக்கி,

“போ,” எனக் கத்தினாள்.

அச்சத்தில் ஓட்டமெடுத்தான் ஸாடர்னோ.

அவளைச் சந்தித்து வந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டபிறகு அடுத்த சனிக்கிழமை அவன் தனது பூனையுடன் மருத்துவமனைக்கு வந்தான். தன்னைப்போலவே அதற்கும் உடை அணிவித்திருந்தான்: சிவப்பும் மஞ்சளும் கலந்த இறுக்கமான கால்சராய், மேஜிக் நிபுணனின் தொப்பி, பறப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு கம்பளம். சர்க்கஸ் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தினுள் செலுத்திய அவன் அங்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் நீண்ட அற்புதமான தந்திரங்களைக் காட்சிப்படுத்தினான். மையத்தில் குடியிருந்த நோயாளிகள் அனைவரும் தொடர்பற்ற கூச்சல்களுடனும் ஒழுங்கற்ற கரவோசைகளுடனும் பால்கனியில் நின்றபடி அதனை ரசித்து மகிழ்ந்தனர். மரியாவைத்தவிர அனைவரும் அங்கிருந்தனர்- தன் கணவனைச் சென்று சந்திக்க மட்டுமின்றி, அவனது நிகழ்ச்சியைப் பார்க்கவும் அவள் மறுத்துவிட்டாள். ஸாடர்னோ மிக ஆழமாகக் காயமடைந்தான்.

“இது ஒரு எதிர்பார்க்கக்கூடிய எதிர்வினைதான். சீக்கிரம் மாறிவிடும்.” என ஆறுதல் கூறினார் இயக்குநர்.

ஆனால் ஒருபோதும் அது மாறவில்லை. மரியாவைப் பார்ப்பதற்கு எல்லாவகையிலும் முயன்று தோற்றபிறகு, தன்னிடமிருந்து ஒரு கடிதத்தையேனும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பரிதவித்தான், ஆனால் பலனில்லை. முயற்சிகளைக் கைவிட்ட ஸாடர்னோ, அலுவலகத்தில் அவளுக்கு சிகரெட்டுகளை மட்டும் தொடர்ந்து அளித்து வந்தான் – அவை நிஜமாகவே அவளைச் சென்றடைந்தனவா என்பதைக்கூட அவன் உறுதிசெய்துகொள்ளவில்லை. ஆனால் உண்மை அவனை ஒருநாள் தோற்கடித்தது.

மீண்டும் திருமணம் செய்துகொண்ட அவன் தன் நாட்டிற்கே சென்றுவிட்டான் என்பதன்றி அவனைப் பற்றி யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை. பார்சிலோனாவை விட்டு நீங்கும் முன்பாக, பாதிப்பட்டினியாகக் கிடந்த பூனையை ஒரு தோழியிடம் கொடுத்தான், மரியாவிற்கு சிகரெட்டுகள் அனுப்புவதற்கும் அவள் உறுதி அளித்தாள். ஆனால் அவளும் காணாமலாகிவிட்டாள். ஆனால் மழிக்கப்பட்ட தலையும், ஏதோ கீழைத்தேய அமைப்பின் ஆரஞ்சு ஆடையும், கர்ப்பமான வயிறுமாக இருந்த அவளைப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ட் இங்லெஸ் கடையில் கண்டதாக ரோஸா ரெகஸ் தெரிவித்தார். தன்னால் முடிந்தபோதெல்லாம் மரியாவிற்கு சிகரெட்டுகள் எடுத்துச் சென்றதாகவும் எதிர்பாராமல் உண்டான சில பிரச்சனைகளைத் தீர்த்துவைத்ததாகவும் அவள் தெரிவித்தாள். ஆனால் பின்பு ஒரு நாள் அங்கே சென்றபோது, அந்த சபிக்கப்பட்ட காலத்தின் மோசமான நினைவுச்சின்னம் போல நின்றிருந்த அம்மருத்துவமனையின்இடிக்கப்பட்ட சிதைவுகளை மட்டுமே அங்கே கண்டிருக்கிறாள். ஆனால் கடைசியாகச் சந்தித்தபோது, சற்றுத் தெளிவாகவும் பருமனாகவும் காட்சியளித்த மரியா அவ்வுறைவிடத்தின் அமைதியில் திருப்தி கொண்டிருந்தாள். பூனைக்கு உணவளிப்பதற்காக ஸாடர்னோ தந்த பணம் முழுவதும் காலியாகி இருந்ததால் அந்தப் பூனையையும் அவள் அன்றுதான் மரியாவிடம் அளித்திருந்தாள்.

***

 

குறிப்பு:-

Francoism: ஸ்பெயின் சர்வாதிகாரி ஃப்ரான்கோ வின் கோட்பாடுகளும் விதிமுறைகளும்
Gauche divine: புதிதாக உதயமாகியிருந்த இடதுசாரி சிந்தனை அமைப்பு.

தமிழில் இல. சுபத்ரா.

The post தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் வந்தேன் – மார்க்வெஸ் appeared first on வனம்.

பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

17 October 2023 at 14:38

தமிழில் : பெரு விஷ்ணுகுமார்

 

 

ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், ஐரிஸின் மாகாணமான உல்ஸ்டரில்உள்ள வடக்கு மாவட்டமான கவுண்டி மோனகனின் கிராமப்புறப்பகுதியைச் சேர்ந்தவராவார். 12 வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறியகாவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையைஐரிஷ் இலக்கியமறுமலர்ச்சியின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷ்-ன்மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, ஐரிஸ் கவிதைப்போக்கினை மடைமாற்றியவர்களில் பேட்ரிக் கவனாஹ்குறிப்பிடத்தகுந்தவர். மரபை மீறுதல், எளிமையான வாழ்வினைகவிதைப்படுத்துதல் போன்றவை இவரது கவிதைகளுக்கேயானசிறப்பம்சங்களாகும். மேற்க்கண்ட இந்த கவிதைகள் யாவும் பெங்குவின்வெளியீடான “collected Poems of Patrick Kavanagh” edited by Antoinette Quinn என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்.  

***

1. சமூக மனசாட்சியற்ற

 

அவர் ஒரு சமூக மனசாட்சியற்ற அகங்காரவாதி,

யாரும் அவருக்கு ஆதரவு தராதபோதும் நான் அவரை விரும்பினேன்,

அவர்தான் எனக்கு நேர்மையானவர் என்று தோன்றியது,

அவர் தான் யாராக இருக்க விரும்பாவிட்டாலும்,

அவரே எனது மீட்பர்

 

தனது எளிய ஆத்மாவுக்கு அஞ்சிக்கிடக்கும்

இந்த கும்பல்களுக்கு எதிராக

ஒரேவிதமான மனிதனை வைத்து இயக்கும் பொதுமக்களின்

மூர்க்கத்தனமான கண்களை கண்டுகொண்டவர் அவர்  

உண்மையில் அவர் பொதுசேவை என்று எதுவும் செய்யவில்லை,

அவர் அவராக வாழ்ந்தார்

 

அவரது உற்சாகம் தீவிரங்களுக்கு எதிரானது,

எப்போதும் ஊர்வலம் போக விரும்பும்

அந்த ஆபத்தான மனிதர்களோ

கொலைசெய்யவோ அல்லது வழிபடவோ

யாரையாவது தேடிக்கொண்டிருக்கிறார்கள்

எனவேதான் இறுதிவரை அவர் இயக்குநர் பதவிக்கோ அல்லது

மாநில ஓய்வூதியத்திற்கோ ஒருபோதும் தகுதி பெறவில்லை.

***

2. ஏப்ரல் மாதத்தில் ஈரமான சாயுங்காலம்

 

ஈரமான மரங்களில் பறவைகள் பாடின

வை சொல்வதைக் கேட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன

மேலும் நான் இறந்துவிட்டேன், இப்போது வேறு யாரோ ஒருவர்

வைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனாலும் அவரின் மனச்சோர்வையும் சேர்த்து பதிவுசெய்ததில்

நான் மகிழ்ச்சிடைகிறேன்

 

***

3. றியாமை

 

நான் மட்டுமே நேசித்த ஒன்றை

பெரிய கோட்டையின்கீழ் தொங்கிக்கொண்டிருக்கும்

முக்கோண மலையைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள்

அந்த சிறிய பண்ணையில்

வெள்ளை முள்வேலிகளால் கட்டுண்டவன் என்றும்

எனக்கு உலகமே தெரியாதென்றும் கூறினர்

ஆனால் நான் அறிவேன்

வாழ்க்கையில் அன்பின் வாசலானது எல்லா இடங்களிலும்

ஒரேமாதிரிதான் ன்று.

 

நான் நேசித்ததைப் பற்றி வெட்கப்படுகிறேன்

என்னிடமிருந்து அவளை தூக்கியெறிந்த நான்

அவளை ஒரு படுகுழியாக பாவித்தேன்,

அப்போதுகூட அவள் ஊதா நிறத்தில் என்னைக் கண்டு சிரித்தாள்

 

இப்போது நான் மீண்டும் அவளது முட்கள்கொண்ட கரங்களில்தான்

கிடக்கிறேன்

இந்தியக் கோடைக்காலைப் பொழுதில்

பனியானது

வெளுத் உருளைக்கிழங்குத் தண்டுகளில்மீது படுகிறது.

என்ன வயதாகிறது எனக்கு ?

 

நான் அறியேன்

எனக்கு என்ன வயதென்று,

ஆனால் மரணமடையும் வயதில்லை எனக்கு;

பெண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது

நகரங்கள் பற்றியும்கூட,

மேலும் இந்த வெள்ளை முள்வேலிகளுக்கு வெளியே

நான் செல்லாத வரை

என்னால் இறக்கவும் முடியாது

***

4. ஒரு ஆலைக்கான இரங்கற்பா

 

அவர்கள் தண்ணீர் சக்கரத்தை எடுத்துச் சென்றனர்,

ந்த சோள ஆலையின் அனைத்து இரும்புக் குப்பைகளையும்;

உள்ளே சென்றுபார்க்கும் பார்வையாளர்கள் யாருமின்றி

தண்ணீர் இப்போது அருவியாக ஓடுகிறது

ஒரு சாதாரண காட்சி அனுபவமென.

.

குளிர்ந்த ஈரமான வெளுப்பான ஒரு குளிர்கால தினம்

நடப்பவை அனைத்தும் மனதில் உயிர்ப்புடன் இருக்க:

வாசலில் அலட்சியமாகக் கிடக்கும் ஒரு மனிதனை நோக்கி

இருண்ட நீர் பாய்ந்த புல்வெளிகளோ

ஒரு நித்தியத்தின் கதையைப் பேசுகின்றன

.

பொதிகூட்டப்பட்ட அந்த சிதிலங்கள் யாவும்

பழுதடைந்த, அந்த பழைய ஆலையின் நிலத்தை

எப்போதோ கைவிட்டுவிட்டன.

தனுள்ளே கொம்புகளற்ற விலங்குகளும், அதன் பின்னால்

ஒளிந்துகொண்டிருக்கும் உள்ளூரில் நிறமூட்டப்பட்ட பேய்களும்கூட,

அந்த வெறுமையான சுவர்களில் இருந்து

இப்போது அகன்றுவிட்ட.

மறுகால் மட்டும் இன்னமும் அதன் நீர்வீழ்ச்சிகளை வளைத்து

அந்த வடிதேக்கத்தில் வீழ்த்துகிறது

இந்த பழைய காட்டுத்தனமான வீரமற்ற நிலையை

இவ்வாறு குறிப்பிட்டதுடன்,

நாங்களும் விடைபெறுகிறோம்

தற்காலிக விதிகளின் மேலான விஷயங்களுக்காக.

***

 

The post பேட்ரிக் கவனாஹ் கவிதைகள் appeared first on வனம்.

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3

80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா […]

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

27 May 2025 at 23:17
ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்? அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம் ஆ) பஸ்மாசுரன் இ) பலராமன் ஈ) ஹிரண்யகசிபு எல்லாமே சரி. என்னையும் சேர்க்கலாம். நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள். சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம். நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது. Prompt … Continue reading

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2

வல்லினம் இன்று மூன்று மொழி இலக்கியங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாக மூன்று மொழி எழுத்தாளர்களுடனான உரையாடலையும் சாத்தியப்படுத்த முனைகிறது. இது ஒரு தொடக்கம்தான். முழுமையான திட்டம் எனக் கூறிவிட முடியாது. மலேசியாவில் ஆங்கில இலக்கியச் சூழலில் மட்டுமே இயங்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உள்ளனர். சபா, சரவாக்கில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து தமிழில் நம்மிடையே எந்த அறிமுகமும் இல்லை. இந்த இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைக்க வேண்டியுள்ளது. ஆர்வமான இளம் எழுத்தாளர்களின் இணைவின் மூலமாகவே […]

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1

இன்னும் ஏழு நாட்களில் ‘முக்கோணக் கதைகள்’ நிகழ்ச்சி. வல்லினத்தின் மற்றுமொரு பெருமுயற்சி. ‘மலேசிய இலக்கியச் சூழலில் புதிய, வரலாற்றில் நிலைகொள்ளும் முயற்சிகளை வல்லினம் முன்னெடுக்கிறது’ எனும் வாசகம் கிட்டத்தட்ட தேய்வழக்காகிவிட்டது. மூத்தப் படைப்பாளிகளின் ஆவணப்பட இயக்கம், எழுத்தாளர்களின் நிழல்படத் தொகுப்பு, எழுத்தாளர்களுக்கு உரிய உரிமத்தொகை வழங்குதல், மூத்தப்படைப்பாளிகளின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தல், நவீன இலக்கியம் சார்ந்த முகாம்கள், விருதுகள் – நூல் பதிப்புகள் வழி மலேசியாவின் சமகால இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லும் […]

தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் வெ. முருகன்


முனைவர் வெமுருகன் 

[முனைவர் வெ. முருகன் தருமபுரி மாவட்டம் கூச்சனூர் ஊரினர்; ஆங்கிலப் பேராசிரியர்; தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழக நிறுவனத்திற்காக ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதியினைத் தொகுத்தவர். பேராசிரியர் வை. சச்சிதானந்தம் அவர்களின் வழியாக ஒப்பிலக்கிய ஆய்வுகள், அகராதிப் பணிகள், மொழிபெயர்ப்புத் துறைகளின் திசைகளை அறிந்தவர். செம்மொழி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக அகராதிப் பணிகளில் பணியாற்றியவர்] 

சில திங்களுக்கு முன்னர்(25.03.2025) அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அகராதி நாள் விழாவில் கலந்துகொண்டு அறிஞர்களின் உரைகளைச் செவிமடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. பேராசிரியர் . அருளி ஐயாவின் உரையும் அறிஞர் வெ. முருகன் அவர்களின் உரையும் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது.  முன்னவர் உரை தனித்தமிழின் சிறப்புரைக்கும் வகையில் செழித்திருந்தது. அடுத்து அமைந்த அறிஞர் வெ.முருகன் அவர்களின் உரை தமிழ் அகராதிகளின் நிலைகளை எடுத்துரைப்பனவாகவும், ஆக்சுபோர்டு நிறுவனத்திற்காகத் தாம் உருவாக்கிய அகராதிகளின் சிறப்புகளை எடுத்துரைப்பனவாகவும் இருந்தன. 

அறிஞர் வெ. முருகன் அவர்களை இலண்டன், இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்தியபொழுதே நேரில்கேட்டுச் சுவைத்தவன். அவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள பெரும்பணியை முன்னரே அறிந்து, அந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழ் தெரியாத என் பிறமொழி நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

இலங்கையில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் தொல்காப்பியத்தைப் பலவகை ஆராய்ச்சி நுட்பங்களுடன் பதிப்பித்தும், படிப்பித்தும் உயர்பணிகளைச் செய்திருந்தாலும் அவர்கள் தம்முடன் வாழும் சிங்களமொழி அறிஞர்களுக்குத் தொல்காப்பியத்தைச் சிங்களத்தில் பெயர்த்து அறிமுகம் செய்திருக்கலாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. யான் அறிந்தவகையில் தொல்காப்பியம் சிங்களமொழிக்கு அறிமுகம் ஆகவில்லை என்று உணர்ந்தேன்(அறிந்தோர் அறிவிப்பின் ஏற்பேன்). அதனால் என் நண்பர் தம்மிக விக்கிரமசிங்கே அவர்களுக்கு முனைவர் வெ.முருகனின் மொழிபெயர்ப்பில் அமைந்த தொல்காப்பியம் நூலொன்றை (ஆசியவியல் நிறுவனம் வெளியீடு) வாங்கிச் சென்று கொடுத்து, எம் மொழியின் இலக்கண அமைப்பைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்று பலவாண்டுகளுக்கு முன்னர் கொடுத்துவந்தேன். அந்த வகையில் தொல்காப்பியத்துக்கு மொழிபெயர்ப்புப் பெரும்பணி செய்த பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் மதிப்பும் எனக்கு உண்டு. 

பேராசிரியர் வி. முருகன் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற அறிஞர் ஆவார். தமிழ் அறிஞர்களுடன் தொடக்கம் முதல் நல்ல தொடர்பில் இருப்பவர். தம் ஆங்கில அறிவின் துணையைக்கொண்டு, தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்ற வேண்டும் என்று தம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டு உழைப்பவர். தமிழின் சிறப்பும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களின் சிறப்பும் இன்னும் உலகத்தார் ஏற்கும் வகையில் கொண்டுசேர்க்கப்படவில்லை என்பது அறிஞர் வெ. முருகனின் எண்ணமாக உள்ளது. அதற்குத் தகுந்த பணிகளைச் செய்துவரும் வெ. முருகன் அவர்களின் பணிகளுள் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, கலித்தொகையை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, தமிழுக்கு ஆக்சுபோர்டு நிறுவனம் வழியாக அகராதியை வெளியிட்டமை இவரின் வாழ்நாள் சாதனைப் பணிகளாகும். 

கொள்கைத் தெளிவும் குறிக்கோள் நோக்கும் கொண்டு தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் வெ. முருகன் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் வாழ்வியலையும் சுருக்கமாக எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். இவர் போலும் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைக்கும் அறிஞர் பெருமக்களை உலகத் தமிழர்கள் உச்சிமேல்வைத்துப் போற்றுவது முதன்மைக் கடமையாகும். 

வெ. முருகனின் தமிழ் வாழ்க்கை 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கூச்சனூர் என்னும் ஊரில் 05.06.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் வெள்ளையன், குப்பம்மாள் ஆகும். தம் ஊருக்கு அருகில் உள்ள வேப்பம்பட்டி என்னும் ஊரில் அமைந்திருந்த அரசு இடைநிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பினையும் அதனையடுத்து உயர்நிலைக் கல்வியை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றவர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவுசெய்த(1968) வெ.முருகன் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள வளனார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயில நினைத்தவர். ஆனால் அங்குப் பயில்வதற்கு இடம் கிடைக்காத காரணத்தால் தருமபுரி அரசு கல்லூரியில் இளம் அறிவியல் – கணக்குப் பாடத்தினை எடுத்துப் பயின்றவர்(1968-1971). 1971 முதல் 1973 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியர் சுந்தரராசன் தலைமையில் இயங்கிய ஆங்கிலத்துறையில் முதுகலையைப் பயின்று, பட்டம் பெற்றவர். 

தம் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு 1973 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர். அதனை அடுத்து விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி, குடியேற்றம் திருமகள் கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதலான கல்லூரிகளில் பணியாற்றியவர். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் பணியைத் தொடங்கித், துறைத்தலைவர் வரை  உயர்ந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர். 

பேராசிரியர் வெ. முருகன் தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் நோக்கிலும் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வியல் நிறைஞர் வகுப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து, ஒப்பிலக்கிய அறிஞர் சச்சிதானந்தன் அவர்களின்  மேற்பார்வையில் ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்டவர்(1976-1977). அறிஞர் வை. சச்சிதானந்தனின் நெறிகாட்டல் ஆய்வுப்பட்டத்துக்கு மட்டும் என்று அமையாமல் வாழ்நாள் முழுமைக்கும் அமைந்துவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைபுலமை பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் படிப்பு மிகுந்த உதவியாக இருந்தது. அறிஞர் தமிழண்ணல், அறிஞர் மு.சண்முகம் பிள்ளை போன்றவர்களின் நெறிகாட்டலும் நட்பும் இவரைத் தமிழின் பக்கம் திருப்பியது. பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பேராசிரியர் வெ. முருகன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தினார் (அறிஞர் அன்னி தாமசு அவர்களும் பேராசிரியர் பிரபாகர ரெட்டி அவர்களும் இவ்வாய்வில் துணைநின்ற அறிஞர்கள் ஆவர்). 

வெ.முருகன் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றிருந்தும், தமிழ் இலக்கியங்களின் அறிமுகம் நன்கு அமைந்திருந்தும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களை மொழிபெயர்க்க வேண்டுமெனில் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் செய்திகள் அறிமுகம் ஆகியிருத்தல் வேண்டும் என்ற தெளிவுடன் ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டய வகுப்புகளில் இணைந்து மொழியியல் செய்திகளைக் கற்று, உண்மைகளை அறிந்தவர். சங்க இலக்கியப் பின்புலம் இல்லாமல் தொல்காப்பியத்தை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்று சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் இலக்கியங்களையும் உரையின்றிப் படித்து நிறைபுலமை பெற்றவர். அதன் பிறகு ஈராண்டுகளுக்கும் மேல் முழுமையாக உழைத்து, தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து ஆசியவியல் நிறுவனம் சார்பில் வெளியிட்டவர். பின்னர் இந்த நூல் செம்மையாக்கம் செய்யப்பெற்று செம்மொழி நிறுவனத்தின் வழியாகவும் வெளிவந்துள்ளது அதுபோல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக இவரின் கலித்தொகை மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. 


வெ. முருகன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்து அகராதியின் விரிவாக்கப் பதிப்பிலும் பணிபுரிந்தவர். இதுவரை இவர் மொழிபெயர்ப்பிலும் ஆசிரியத் தன்மையிலும் 34 நூல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்துள்ளார். இவர் மேற்பார்வையில் எண்மர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சிப் பணிகளை நிறைவுசெய்து அளித்துள்ளார். ஆசியவியல் நிறுவனத்திலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும் சிறப்பு நிலை அறிஞராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்தம் மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி இரண்டு முறை விருதளித்துப் பாராட்டியுள்ளது. 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் 1976 ஆம் ஆண்டு தேன்மொழி அவர்களை இல்லறத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு முல்லை, பாரி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் உயர்கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். 

மொழிபெயர்ப்புப் பணியிலும் அகராதிப் பணியிலும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபட்டுத் தமிழுக்கு அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் பேராசிரியர் வெ. முருகன் என்னும் இப் பெருமகனாரைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டுதல் தலைக்கடனாகும். 




பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் அறிவுக்கொடை 

Books Published 

1. Oxford English – English – Tamil Dictionary. (1650 pages), New Delhi: Oxford

University Press, 2009. 

2. Oxford Compact English – English – Tamil Dictionary. (1000 pages), New

Delhi: Oxford University Press, 2015.

3. Oxford Mini English – Tamil Dictionary. (654 pages), New Delhi: Oxford

University Press, 2021. 

4. Oxford Dictionary of the Tamil Language (Tamil-Tamil-English). New Delhi:

Oxford University Press (under compilation) 

5. Applied Linguistic Readings of Tolkāppiyam. Central Institute of Classical

Tamil, 2023 

6. A Dictionary of Tamil Literary and Critical Terms (Tamil – English)

(6000 words). Chennai: Institute of Asian Studies, 1999. 

7. Pals Tamil e-Dictionary (Tamil – Tamil – English) (49000 words) Chennai:

Palaniappa Brothers, 2004. 

8. Pals Tamil – Tamil – English Dictionary, Chennai: Palaniappa Brothers, 2009.

9. Lexicographic Practice in Tamil: Problems and Prospects (dictionary

criticism) (370 pages) Chennai: Institute of Asian Studies, 2006. 

10. Tolkappiyam in English (with complete text, transliteration, illustrative notes

and glossary) (711 pages). Chennai: Institute of Asian Studies, 2000. 

11. Kalittokai in English (with critical introduction, text, transliteration, notes and

glossary) (738 pages), Chennai: Institute of Asian Studies, 1999. 

12. Tirukkural in English, Chennai: New Century Book House, Third Edition, 2015.

13. Narrinai in English (Editor and prose translator) (1970 pages). Chennai: Central

Institute of Classical Tamil, 2011. 

14. Paripatal in English, (prose translation), Chennai: Central Institute of Classical

Tamil 2022. 

15. Kulothungan's Journey of Man (Maanuda Yaathirai in English), Chennai: New

Century Book House, 2013. 

16. Shower of Poetry (Selected Poems of Kalaignar M. Karunanidhi) Coimbatore:

Bharathiar University, 2009. 

17. Selected Poems of Bharathidasan (in English) (310 pages) Chennai:

International Institute of Tamil Studies, 1994.

18. An Unending Ascent (Selected Poems of Kulothungan (V.C. Kulandaiswamy) in

English, for VCK Educational and Research Foundation). Chennai: Pavai

Publications, 2002. 

19. The Wandering Voice (Translation of Three Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1988.Best Translation Award winner. 

20. The Art of Drumming (Translation of a musical treatise into English) Chennai:

Institute of Asian Studies, 1989. 

21. The Dateless Muse (Translation of Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1989. Best Translation Award winner. 

22. The Unsung Melodies (Translation of Tamil ballads into English) Chennai:

Institute of Asian Studies, 1990. 

23. Contribution to Subramania Bharati (English Translation). Vols I & II. Vol.I

2016; Vol II 2017. New Delhi: Sahitya Akademi. 

24. English Grammar Just for you (with grammatical concepts and rules translated

into Tamil for the benefit of learners in Tamil medium institutions). Trans: V.Murugan, New Delhi: Oxford University Press, 2015 

Editorial Work

 

1. Editor, Narrinai in English, Central Institute of Classical Tamil, Chennai, 2011. 

2. Editor, Tolkappiyam in English, Central Institute of Classical Tamil, Chennai.

2021 

3. Editor Kalittokai in English. Central Institute of Classical Tamil, 2023 

4. Editor. Rev. G.U.Pope : Thirukkural in English (along with a non metrical verse

translation, transliteration and introduction) (850 pages). Chennai: Institute of

Asian Studies, 2018. 

5. Co-editor. Kalaignar Karunanidhi in English Translation. 12 volumes.

Bharathiar University, Coimbatore 2009. 

6. Editor, Siddha Medicine, Vols I to VII. Chennai : Tamil Valarchi Kazhagam,

2010-16. 

7. Associate Editor, The Encyclopaedia of Tamil Literature. Vol. I. Chennai:

Institute of Asian Studies, 1990 

8. Associate Editor, Journal of Asian Studies (from 1986 to 1989) Chennai:

Institute of Asian Studies. 

9. Associate Editor, Papers on Tamil Studies, Chennai: International Institute of

Tamil Studies, 1981.


*** குறிப்பு: இக் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்

என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலூம் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை

மூட்டைப் பூச்சி

நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி  ஊதி விட்டான்.

கரு

உன் ஆன்மா மிகப் பெரியது, அழகானது, பிரம்மாண்டமானது, உன்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனித மனம் உன்னில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள  முடியும். உதாரணத்திற்கு,  ஒரு கோப்பைத் கிளாஸ் தண்ணீரில் உன் விரலை வைத்து அது சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பது போல.

பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை

ன்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்," திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!" என்றான்.

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

பாட்ரிசியா  கவாலி கவிதைகள்

இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று. இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ, எனக்கு பொருட்டல்ல இன்று. இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத் தணிவித்துக் கலந்திடும் இனிமையான கவிகை மாடத்திற்குள் பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
❌