Normal view

Received before yesterday

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட சுட்டி உலகத்தில், குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் பரிந்துரைகள் உள்ளன. எனவே பெற்றோர் தம் குழந்தைகளின் விருப்பம் ரசனைக்கேற்ப நூல்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.

‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறந்த குழந்தைப் பாடல்கள் உள்ளன. குழந்தைகள் தமிழை எளிதாக உச்சரித்துப் பழக, இந்தப் பாடல்கள் உதவும்.

நான்காம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து, ஐந்தாம் ஆண்டில் நுழையும் சுட்டி உலகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம். 

The post சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து! first appeared on சுட்டி உலகம்.

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஏழைமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை போன்று உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கவும் இலக்கியம் சிறந்த பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)” என்பதை இந்த 2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகத் (Theme) தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதிலும், குறிக்கோள்களை அடைவதிலும் இலக்கியம் சிறப்பான பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கருப்பொருள் உறுதி செய்கிறது.    

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

The post உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025 first appeared on சுட்டி உலகம்.

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் கதைச் சுருக்கம்:- கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது காதல் கொள்கிறாள். கடலில் இருந்தால் அவளுக்கு 300 ஆண்டுகள் மரணமில்லை. ஆனால் அவள் தனது களங்கமில்லாத அன்புக்காக மரணமில்லா வாழ்வைத் துறந்து கரையேறத் துணிகிறாள். அவள் மீன் உடலில் இருக்கும் வாலுக்குப் பதிலாக. கரையில் நடக்க அவளுக்குக் கால்கள்  தேவைப்படுகின்றன. மந்திரவாதியிடம் தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து அதற்குப் பதிலாகக் கால்களைப் பெறுகின்றாள். எனவே அவளால் பேசவோ பாடவோ முடியாது. இளவரசன் அவள் காதலை ஏற்றுக் கொண்டானா? அவளைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக் கதை. மிகவும் நெகிழ்ச்சியான கதையிது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025 first appeared on சுட்டி உலகம்.

தலையங்கம்-மார்ச் 2025

அன்புடையீர்!

வணக்கம். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வை நல்லவிதமாக எழுதி முடித்து எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!

இந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுப் பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன. வாட்சப்பில் மகளிர் நாளுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.

பெண்கள் புதுப்புடைவை, நகைகள் வாங்கி இந்நாளைக் கொண்டாடினர். ஆனால் அடிப்படையில் இது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் இன்றைய தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை, இந்நாள் வலியுறுத்துகிறது. மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை, அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

1910இல் சர்வ தேச மகளிர் தினத்தை முதன்முதலில் கிளாரா ஜெட்கின் என்பவர் அறிவித்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்கள் போராடி போராடித் தான் வாக்குரிமை பெற்றனர். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வி கற்கத் தடையிருந்தது. பெண் கல்விக்காகப்  போராடிய சாவித்திரி பாய் பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அதற்காக அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்று பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் போராடிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்ணியம் பேசுவோர் ஆண்களுக்கு எதிரிகள் அல்ல. பெண்களையும் தங்களுக்குச் சமமாக நடத்த வேண்டுமென்பதே பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கை.

பெற்றோர் பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பதை, ஆண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சொல்லி வளர்ப்பது அவசியம். பெண்ணைச் சக உயிராய்ப் பாவித்து, அவர்களின் உணர்வுகளை மதித்துத் தோழமையுடன் நடத்த வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டியது, இக்காலத்தின் கட்டாயம்.

20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இயற்பியல் மேதையாகக் கொண்டாடப்படும் ஐன்ஸ்டீன் மார்ச் மாதம் பிறந்தவர். ஒளி மின் விளைவைக் (Law of the Photoelectric effect) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், குவாண்டம் எந்திரவியல்(Quantum Mechanics) சார்பு கோட்பாடு (special theory of relativity)ஆகியவற்றில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் 1921இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியை இவருக்கு மிகவும் பிடிக்கும். “வருங்காலத் தலைமுறைக்கு இவர் தாம் ரோல் மாடல்’ என்று காந்தியைப் புகழ்ந்தவர் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே மாணவர்களின் அறிவியல் சிந்தனையைத் தூண்டி அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். குழந்தைகள் எதிர்காலத்தில் பன்முகத்திறமை உள்ள ஆளுமைகளாகத் திகழ இளம்வயது முதலே வாசிப்பைத் துவங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற நூல்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பல்வேறு புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுத்து அவர்கள் படைப்புத் திறமையை வெளிக்கொணர வேண்டும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம்-மார்ச் 2025 first appeared on சுட்டி உலகம்.

❌