Normal view

Received before yesterday

"தொல்காப்பிய விருதாளர்" மும்பை கு. இரெ. சீனிவாசன்

 

மும்பை கு.  இரெ. சீனிவாசன் 

[கு.  இரெ. சீனிவாசன் மும்பையில் வாழும் தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். மும்பையில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியில் இணைந்து, பின்னர் வங்கித் தேர்வெழுதி, எழுத்தராக - மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து ‘‘கனிந்த கனவுகள்என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்]. 

மும்பை மாநகரம் தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்விடமாக உள்ளதை அண்மையில் மும்பை சென்றிருந்தபொழுது அறிய முடிந்தது. மும்பையில் தமிழர்கள் பன்னெடுங்காலமாகத் தங்கி, பணியாற்றியும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தமிழமைப்புகள், பள்ளிகள் பலவற்றை உருவாக்கியும் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். எனினும் தாயகமாம் தமிழகத்துடன் தொடர்பில் இருந்து, நல்லுறவைப்பேணி வருகின்றனர். தமிழறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரைத் தமிழகத்திலிருந்து அழைத்துத் தங்கள் தமிழ்ப்பற்றைப் புதுப்பித்தவண்ணம் உள்ளனர். அத்தகு மும்பைத் தமிழ் அன்பர்களுள் கு.ரெ.சீனிவாசன் குறிப்பிடத்தகுந்தவர். கே. ஆர். சீனிவாசன் என்ற பெயரில் நன்கு அறிமுகமான இப்பெருமகனார் பன்மொழி அறிஞராகவும் எழுத்தாளராகவும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இவரின் தமிழ்ப்பற்றையும், எழுத்துத் திறனையும் எழுத்தாளர் சு. குமணராசனார் வழியாக அறிந்து அவர்தம் வாழ்வியலைப் பதிந்துவைக்க முனைகின்றேன். 

கு. இரெ. சீனிவாசன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

கு. இரெ. சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊரினர். இவர்தம் பெற்றோர்  கு. இரா. இரெங்கநாயலு, இராதா ருக்மணி அம்மையார் ஆவர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற குடும்பமாக இவரின் குடும்பத்தினர் விளங்கினர். 26.10.1948 இல் பிறந்த இவர் தம் பிறந்த ஊரான அய்யம்பேட்டைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அவ்வூர்க் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையிலான கல்வியையும் பெற்று, தஞ்சாவூர் பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். 

1969 இல் மும்பை சென்று, அங்கு வாழ்ந்த காந்திய நெறியாளரான இரெ. முருகையா அவர்கள் நடத்திய “சேவக்” அச்சகத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் வங்கிப் பணிக்குரிய தேர்வெழுதி, எழுத்தராகப் பணியில் இணைந்து, மேலாளராகப் பணியுயர்வு பெற்றவர். அவ்வகையில் மும்பைத் தேனா வங்கியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு உழைத்தவர். 

கு. இரெ. சீனிவாசன் 10.06.1981 இல் ஞானாம்பாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். ஞானாம்பாள் அவர்கள் வள்ளலாரின்  நன்னெறிக் கருத்துகளில் பேரீடுபாடு கொண்டவர். இவர்களுக்குக் கார்த்திக் என்னும் பெயருடைய மகன் உள்ளார். இவர் சென்னையில் பணியாற்றி வருகின்றார். 

எழுத்துப் பணி 

கு. இரெ. சீனிவாசன் வங்கி மேலாளராகப் பணியாற்றினாலும் தமிழின் மீதான ஈடுபாட்டுடன் விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, சௌராட்டிரம் ஆகிய மொழிகளை அறிந்தவர். இவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மும்பை மற்றும் தமிழகத்து ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்து இதழ்களான கல்கி, கலைமகள், அமுதசுரபி, சௌராட்டிர மணி, மொதிரெத்து,   மும்பை இதழ்களான தமிழ் இலெமுரியா, தென்னரசு, மும்பை துடிப்பு, மராத்திய முரசு, போல்டு இந்தியா முதலான இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரு. ஸ்ரீநிவாஸ் லட்சுமன் அவர்களால் (திரு. ஆர். கே.  லட்சுமன் அவர்களின் புதல்வர்) ஆங்கிலத்தில் Dreams to Reality என்ற தலைப்பில் எழுதப்பட்ட. நூலினைத் தமிழில் ‘‘கனிந்த கனவுகள் என்ற பெயரில் கு. இரெ. சீனிவாசன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் சிறுவர் படைப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்ற  நவநீத் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்துள்ளது. 

தமிழ்ப் பணிகள் 

மும்பையின் கோரேகான் தமிழ்ச் சங்கம் 1976 முதல் புத்துயிர் பெற்று, இயங்கி வருகின்றது. சற்றொப்ப 30 ஆண்டுகள் இத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து கு. இரெ. சீனிவாசன் பணியாற்றியவர். தற்போது துணைத் தலைவராகவும் இவரின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

    7000 மாணவர்களைக் கொண்டுள்ள விவேக் வித்யாலயா, மற்றும் கல்லூரியை நடத்துகின்ற விவேக் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்.    சிறிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயன்ற அளவில் சமூகத் தொண்டினையும் செய்துவருபவர். 

கு. இரெ. சீனிவாசனின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 25.01.2025 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ் இலெமுரியா அறக்கட்டளை விழாவில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது - 2024” வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.


 கு. இரெ. சீனிவாசன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு வாழ்த்தி மகிழ்கின்றேன்.

மு.இளங்கோவன், கு. இரெ. சீனிவாசன்

மும்பையில் நடைபெற்ற தொல்காப்பியத் திருவிழா!

 

முகப்புப் பதாகை

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு. இளங்கோவன்



மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு.இளங்கோவன்

    மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பியத் திருவிழா  2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு தமிழமைப்புகளின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெரிய அளவில் வருகைபுரிந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “இலெமுரியா” நிறுவுநர் சு. குமணராசன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் தொல்காப்பியக் கண்காட்சியும், இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழாவும் இரண்டுநாள் நடைபெற்றன.  

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொல்காப்பியக் கண்காட்சியைத் திறந்துவைத்து, அமைப்பாளர்களைப் பாராட்டினார். மேலும் தொல்காப்பியத்தின் சிறப்புகளை எடுத்துரைத்துத் தலைமையுரை ஆற்றினார். காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் கலந்துகொண்டு மும்பையிலிருந்து வெளிவந்து, இடையில் நின்றுபோன தமிழ் இலெமுரியா இதழின் சிறப்புகளை எடுத்துரைத்து, மீண்டும் இந்த இதழைக் கொண்டவர வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். 

பொறியாளர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. 

மு. இளங்கோவனைச் சிறப்பிக்கும் மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள். அருகில் சு. குமணராசன், முனைவர் சேது குமணன்.

மாணவர்களுக்குத் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டி இந்த நிகழ்வை ஒட்டி  நடைபெற்றது. மும்பையில் பயிலும் தமிழ் மாணவர்கள் அறிவார்ந்த தலைப்புகளில் உரையாற்றிப் பரிசுகளைப் பெற்றனர். மேலும் பார்வையாளர்களுக்கான தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் அரங்கினரை மகிழ்ச்சிப்படுத்தின. பிறமொழியைக் கலவாமல் தூய தமிழில் பேசியவர்களுக்குப் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அரங்கில் உரையாற்றியவர்கள் பயன்படுத்திய பிறமொழிச் சொற்களுக்கு உரிய தனித்தமிழ்ச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வின் ஒரு கூறாகப் பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் மும்பைத் தமிழ்ப்பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன், மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), சூ. ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

அறிஞர் சீனிவாசன் அவர்களுக்குத் தொல்காப்பிய விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுதல்.

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் சீனிவாசன் அவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் உருவா விருதுத்தொகையுடன் தொல்காப்பிய விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் எட்டுத்தொகை என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லைப் பைந்தமிழ், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் எட்டுத்தொகை நூல்களின் சிறப்புகளை மிகச் சிறப்பாகக் கவிதையில் பாடினர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட முனைவர் இ. வளனறிவு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் அரங்க. மல்லிகா தொல்காப்பியம் - பொருளதிகாரம் என்ற தலைப்பிலும் உரையாற்ற்றினர். 

இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியாகப் பரிசுபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், தமிழ்த்தொண்டு, சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

கண்காட்சியைப் பார்வையிட்டோர்(குழுப்படம்)


தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி

தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி


கண்காட்சியைப் பார்வையிடுவோர்


மாணவர்களின் நாட்டியம்

தொல்காப்பியம் குறித்து உரையாற்றிய அரங்க. மல்லிகா, இ. சூசை, மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள்


பரிசுபெறும் மாணவர்கள்

பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற மாணவி

மும்பை இலெமுரியா அறக்கட்டளை நடத்தும் தொல்காப்பியத் திருவிழா!

 

 

மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளை தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு, தொல்காப்பியத் திருவிழாவினை 2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் மும்பையில் நடத்துகின்றது. 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழா நடைபெற உள்ளது. முதன்மை நிகழ்வுகளாகத் தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி, கருத்தரங்கம், கவியரங்கம், நூல்கள் வெளியீடு நடைபெறுகின்றன. தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் திரு. த. சிவானந்தன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் தொல்காப்பியத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் இ.ஆ.ப., மகாராட்டிர மாநிலத்தின் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் ந. இராமசாமி இ. ஆ. ப., மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), திரு. சூ. ஜெயகுமார் இ. கா. ப.,  காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் திரு. சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து முனைவர் இ. வளனறிவு, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் அரங்க. மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். 

முனைவர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளன. 

எட்டுத்தொகைக் கவியரங்கத்தில் கவிஞர் இசாக் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெறும் கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லை பைந்தமிழ், புலவர் கார்த்தியாயிணி ஆகியோர் கவிதை பாடுகின்றனர். 

மாணவர்கள் பங்கேற்கும் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது. 

அனைவரையும் மும்பை, இலெமுரியா அறக்கட்டளை அன்புடன் அழைக்கின்றது.









 

❌