கொழுகொழு வாசகர்களுக்கு…
வாழ்க்கையில் சிலவற்றை முழுதாக வெளிப்படுத்த முடியாது. உணர மட்டுமே முடியும் என்பது என் எண்ணம். அதில் காதலும் ஒன்று. அதை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் முடிவெடுத்தது எல்லாம் பரீட்சார்த்தமான முயற்சி அன்றி வேறெதுவும் இல்லை. கொழுகொழுவை எனது வாட்ஸப் சேனலில் தொடர்ந்து முப்பத்தைந்து நாள்கள் எழுதினேன். முடிவடைந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம், ஏழரை மணி ஆனால் ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது. அது கொழுகொழு முடிந்துவிட்டதால் மட்டும் வரவில்லை. நீங்கள் வாசித்துவிட்டு அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலும் தந்த உற்சாகம், சட்டென்று சோப்பின் குமிழி போல் மறைந்ததும் காரணம். ஒன்றை ஆரம்பிக்கத் தான் மனம் ஆயிரம் சப்பைக்கட்டு சொல்லும்.ஆரம்பித்து செயலில் இறங்கிவிட்டால் அது பழக்கமாகிவிடும். பழக்கத்தை நிறுத்துவது அத்தனை லேசுப்பட்ட காரியமில்லை. ஆகையால், ஏழரை மணிக்கு விரைவில் ஒரு வழி செய்துவிடுவேன். உங்களுடன் தொடர்பில் இருக்க இவ்வழி பிடித்து இருக்கிறது. இது எனக்கும் எனது எழுத்துக்கும் அவசியம்.
கொழுகொழுவுடன் பயணம் செய்த அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கொழுகொழுவை தட்டிச் சரி செய்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை செய்து, முற்றுப்பெறப் போகும் பணி அல்ல இது. ஆனால் முதல் சுற்றை முடித்துவிட்டேன். முழுமையாகச் சரி பார்த்துவிட்டால், அப்படியே பதிப்பகத்தாருக்கு அனுப்பிவிடவேண்டும். கொழுகொழு புத்தகமாக வந்துவிடும். ஆனால், எப்போது வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.
The post கொழுகொழு வாசகர்களுக்கு… appeared first on Naseema Razak.