ராவணக் கற்பு
24 December 2022 at 11:26
1
தூர தேசமோ
அருகிருக்கும் சிற்றுரோ
வாகனப் பயணங்களின்
வலியும் அசதியுமாய்
வீடடைந்து கால் நீட்டி
வெயிலை வெறிக்கையில்
சின்னஞ்சிறு பறவை
பல ஊர் வானம் கடந்து
கீச்சிட்டபடி பறக்கிறது
அடுத்தொரு வானத்திற்கு
இறகுகளுக்கு இளைப்பாறல்
பறத்தல் தான் போலும்.
*
2
தந்தை தோளிலிருந்து
இறங்கிய நாள் முதல்
பாரம் சுமக்கத் தொடங்கி
சுயம் தொலைத்தவன்
மற்றொரு தோளுக்கான
கண்ணாமூச்சி ஆட்டம்
வாழ்நாள் ஏக்கமாகக்
கண்களில் ஒளிந்திருக்கும்
பாரங்கள் இறக்கி வைத்த
ஒரு புனித நன்னாளில்
அவனைச் சுமக்கின்றன
நான்கு தோள்கள்.
*
3
சிறிய வீட்டிற்குள்
தவறி நுழைந்து விட்ட
பட்டாம்பூச்சி ஒன்று
படபடத்து முட்டி மோதுகிறது
யன்னல் திறந்த கணம்
வெடித்த பலூனில்
அடைந்திருந்த காற்றாக
எகிறிச் சிறகடிக்கிறது
இந்த உடலின்
எந்தச் சன்னல் திறந்தால்
வெளியேறிப் பறக்கும்
உயிர் பட்சி!
*
4
பறவைகள் பரிதாபம் கொள்ளும்
இறகுகள் இல்லாதவனென்று
நாய்கள் நக்கலாய்ச் சிரிக்கும்
நான்கு காலற்ற ஊனமென்று
நீரில் நீந்திக் களிப்பவனிடம்
மீனும் பாவப்படும் செதில் இல்லையென
தாவரம் கூட நினைக்கலாம்
நடந்தே சாகும் நரகப் பிறவியென
மனிதன் சொல்லிக் கொள்கிறான்
படைப்பில் உசத்தி என்று.
*
5
சொர்க்கமே என்றாலும்
கிடைத்த பின்
அலட்சியம் வருகிறது
காரணம் கேட்டால்
கிடைத்த பின்பே
அறிதல் வருகிறது
உண்மையில்
எதுவும்
சொர்க்கமில்லை.
*
6
பத்து மூளைகளாலும்
இருபது கண்களாலும்
காதலித்தவனுக்கு
ஓருடலால் காமம் கொள்வதா
இயலாத காரியம்?
அது ராவணக் கற்பு!
*
7
எந்தக் குழந்தையாவது
'எப்போது கல்யாணம்' என்கிறதா?
எந்தக் குழந்தையாவது
'என்ன சம்பளம்' எனக் கேட்குமா?
எந்தக் குழந்தையாவது
'ஏதாவது விசேசமா' என இளிக்கிறதா?
எந்தக் குழந்தையாவது
'அவனோடு இவளுக்கு தொடர்பு' என கதைக்கிறதா?
அடுத்த வீட்டினரிடம்
சாக்லேட் கேட்ட குழந்தையிடம்
'இது இங்கிதம் இல்லை'
என அறிவுரை சொல்வோரே!
*
8
நேரமின்மை மனமின்மை
வேறு பணி உடல் பிணி
சோர்வு களைப்பு
இன்னும் எத்தனையோ
புனைப் பெயர்கள்
சோம்பலுக்கு
செயலுக்கு
ஒரே செல்லப் பெயர் -
வெற்றி.
*
9
இத்தனை வலி தந்து
பிறந்த பிள்ளையை
எத்தனை வெறுக்க வேண்டும்
அன்னை!
இத்தனை வலி தந்து
பெற்றவளை
எத்தனை விலக வேண்டும்
பிள்ளை!
பிறவியே முரண்!
*