Normal view

Received before yesterday

நுண்கதைகள்

8 October 2024 at 01:32

      அம்மாவின் வயிற்றுக்குள்

அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை கண்களைத் திறக்கவே கூடாது என்று முடிவெடுத்தது. யாரோ அதைத் தூக்குவதையும் எங்கேயோ போவதையும் அதனால் உணர முடிந்தாலும், அது கண்களை மட்டும் திறக்கவேயில்லை. தான் தான் அம்மாவின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தது. தன்னைப் பிரிந்து தன் உடன் பிறந்தவர்கள் கவலைப்படுவார்களா, தன்னால் மட்டும் தனியாக அம்மாவின் வயிற்றுக்குள் எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் யோசித்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அதற்கு வழக்கமான சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை. புதுவிதமான மெல்லிய சப்தம், புதுவிதமான வாசனை. கண்களை திறக்கலாமென முடிவெடுத்து மெல்ல கண்களைத்திறந்தது. நிறைய மரங்கள், செடிகள் கொடிகள் பூச்சிகள் என இருந்தன. அம்மாவின் வயிற்றுக்குள்ளும் ஒரு உலகம் இருக்கிறது போல என நினைத்துக்கொண்டது. மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தபோது அதற்கு பழக்கமான வாசனை அதை ஈரத்தது.மெல்ல அதை நோக்கிச் சென்றபோது அங்கே அதன் உடன்பிறந்த குட்டிகள் உறங்கிக்கொண்டிருந்தன. ஒருவேளை தான் அம்மாவின் வயிற்றுக்குள் போவதைப் பார்த்து வந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டது. இன்னும் சற்று தூரத்திலிருந்து ஒரு குரல். அது அம்மாவின் குரல். ‘மியாவ்’ என்று கத்திக்கொண்டே குட்டிகளை நோக்கி நடந்து வந்தது. குட்டிக்கு ஒரே ஆச்சர்யம். அம்மா தன் வயிற்றுக்குள்ளேயே எப்படி வந்ததென்று.

       மூர்த்தி

“டேய்… மூர்த்தி…” என்ற செண்பகத்தின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அந்த ஆடு. செண்பகம், இறந்த போன தன் மகனின் நினைவாக அந்த ஆட்டுக்குட்டிக்கு மூர்த்தி என்று பெயர் சூட்டினாள். அதனாலேயே மற்ற ஆடுகளைக் கட்டிலும் அதற்குத் தனி கவனிப்பு இருந்தது. மூர்த்தி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டான். கடன்காரர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவன் மனைவி தன் குழந்தைகளுடன் பிழைக்க நகரத்திற்குச் சென்றுவிட்டாள். இப்போது கடன்காரர்களைச் செண்பகம் தான் சமாளித்து வருகிறாள். அவர்களுக்குச் செண்பகத்திடம் இருக்கும் ஆடுகளின் மீதுதான் கண். கடனுக்கு ஆடுகளைத் தந்துவிடும்படி அவளை நச்சரித்தனர். அவளுடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற அந்த ஆடுகள் மட்டுமே அவளிடம் இருந்தன. ஐந்து ஆடுகள். அதுமட்டும் தான் இப்போது அவள் உறவுகள். அது மூர்த்தி எப்போது அவள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டுமென்று நினைத்தாள். செண்பகத்தால் ஒரு கட்டத்திற்குக் கடன்காரர்களைச் சமாளிக்க முடியவில்லை. ஆடுகளை அவர்களிடம் கொடுத்துவிட முடிவெடுத்தாள். அவர்கள் வண்டி எடுத்துக்கொண்டு வந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். மூர்த்தி அவர்களைக் கண்டு மிரண்டது. தப்பித்து ஓடியது. ஓடும்போது சாலையில் வந்துகொண்டிருந்த வண்டியில் அடிப்பட்டுத் துடிதுடித்து இறந்தது. செண்பகம் அடித்துக்கொண்டு அழுதாள். “மூர்த்தி ரோசக்காரன். ரெண்டாவது வாட்டியும் மானத்தக் காப்பாத்திக்க செத்துட்டான்” என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

       தனித்திருத்தல்

அவர் தன் மனைவியிடம் மகனை போனில் அழைக்கச் சொன்னார். அவள் மறுத்தாள். இன்னும் சொஞ்சம் நேரமாகட்டும் என்றாள். அவன் வந்தால் தங்களைத் தனியாக இருக்க விடமாட்டான் என்று சொன்னாள். அவர் சிரித்தார். இவ்வளவு காலம் நாம் தனியாகத்தானே இருந்தோம் என்றார். அவள் அதைப் பற்றி யோசித்தாள். இருந்தாலும் இப்போதும் தனியாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றாள். மேலும் நிறையப் பேச வேண்டுமென்றும் பழைய நினைவு கூட்டில் யாரோ கல்லெறிந்தது போல் ஒரே சமயத்தில் அனைத்தும் ரீங்கரித்துகொண்டு வருவதாகச் சொன்னாள். அவர் பெருமூச்சுவிட்டார். மீண்டும் மகனை அழைக்கச் சொன்னார். அவள் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. எதாவது வேண்டுமா, சமைக்கட்டுமா என்றாள். அவர் தனக்குப் பசிக்கவில்லையென்றார். வெளியே மீன் விற்கும் சத்தம் கேட்க, மீன் வாங்கட்டுமா என்றாள். உனக்கு வேணும்னா வாங்கு என்றார். அவள் வெளியே சென்று மீன் வாங்கினாள். உள்ளே வந்து அதைச் சமையற்கட்டில் வைத்துவிட்டு மீண்டும் அவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். சமைக்கலயா? என்றார். உங்களுக்குப் பசிக்கும்போது சொல்லுங்க. வறுத்துத் தரேன் என்றாள். நேரமாகுது பையனைக் கூப்பிடு என்றார். அவள் வேண்டா வெறுப்பாக எழுந்து சென்று போனை கையில் எடுத்து மகனை அழைத்தாள். அழைப்பின் இறுதியிலேயே அவன் போனை எடுத்து “சொல்லுமா” என்றான். “அப்பா போயிட்டாருடா” என்றாள்.

       வேடன்

கானகத்தின் நடுவே மரத்தின் உச்சியில் யார் கண்ணுக்கும் தென்படாதவாறு உட்கார்ந்திருந்தான் அந்த வேடன். அருகிலிருந்த கிராமங்கள் முழுக்க புலி குறித்த அச்சம் பரவியிருந்தது. ஊருக்குள் நுழைந்து ஆட்களை அடித்துக் கொன்று குவித்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வெளியே வரவே அஞ்சினர். கூட்டமாகக் கூடி மேளம் கொட்டி விரட்டிவிட்டாலும் அது மீண்டும் மீண்டும் அதே வேலையாக இருந்தது. வேடன் புலியைக் கண்டுபிடித்திருந்தான். அவன் பார்வை அசைவற்று புலியை மட்டுமே துளைத்துக்கொண்டிருந்தது. ஆனால், புலியோ வேறு ஒன்றை நோக்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு சிறிய குடில். அதன் அருகில் ஒரு சிறு பதின் வயதுப் பெண். அவள் கணவனிடம் அழுதுகொண்டிருந்தாள். சற்று முன் அவளுடன் விளையாடிக்கொண்டிருந்த மான்குட்டி தனக்கு வேண்டுமென வேண்டினாள். அவள் கணவன் சிறிதும் யோசிக்காமல் அந்த மான் சென்ற திசையை நோக்கி ஓடினான். நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்பி வரவேயில்லை. அவள் தன் மைத்துனனை அழைத்தாள். அவனைப் போகச் சொல்லி நிர்ப்பந்தித்தாள். அவன் வேண்டா வெறுப்பாக அதே திசையில் ஓடினான். இந்தப் பதின்பருவச் சிறுவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என வேடன் குழம்பினான். அவன் கவனம் முழுக்க புலியின் மீது இருந்தாலும் இதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அப்போது எதிர்பாராத ஒரு தருணத்தில் மறைவிலிருந்து ஒருவர் வெளியே வந்தார். அவருடைய முகம் வேடனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதில் அமைதியாகவும் அன்பொழுகவும் இருந்தது. அதே நேரம் புலி தன் தாக்குதலுக்குத் தயாரானது. வேடன் எச்சரிக்கையானான். அவன் கைகள் வேகமாக இயங்கின. அவன் அம்புகள் புலியின் மீது பாயத் தயாராகின. கீழே நின்றுகொண்டிருந்தவரும் புலியைப் பார்த்துவிட்டார். அவர் புலி அந்தப் பெண் மீது பாய்ந்துவிடாமல் தற்காத்து நின்றார். அவரைக் கண்டு புலி ஒரு கணம் தயங்கியது போல் வேடனுக்குத் தோன்றியது. வேடன் அம்பை எய்தினான். ஒருநொடி. அங்கே என்ன நடந்ததென்றே வேடனுக்குப் புரியவில்லை. புலி, அந்தப் பெண், அந்த மனிதர் என யாருமே அங்கே இல்லை. நீண்ட நேரம் கழித்து அந்த இரண்டு இளைஞர்களும் ஊருக்குள் வந்து அந்தப் பெண்ணைத் தேடினார். அந்தப் பெண்ணை விட்டுச் சென்ற அந்த இருவர் மீதும் வேடனும் கோபம் கோபமாக வந்தது. வேடன் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டான்.

The post நுண்கதைகள் first appeared on கனலி.

மூன்று குறுங்கதைகள்

 


1. பழையன கழிதல் புதியன புகுதல்

ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால் அந்த ஊர் அவர்கள் இதுவரை பார்த்திராத அழகில் ஒளிவீசியது.

கடந்தகாலம் மட்டுமல்ல எதிர்காலமும் தெரிந்தது.

அந்த மின்னலில் எல்லோரும் குளித்தார்கள். அந்த மின்னலை எல்லோரும் அருந்தினார்கள். அந்த மின்னலை எல்லோரும் சாப்பிட்டார்கள்.

அவர்களை மின்னலாக மாறினார்கள். மின்னல் அவர்களாக மாறியது. பிறகு எல்லாம் பழைய மாதிரி ஆகிவிட்டது.

 

2.

ஒளி

என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பெண்ணைச் சந்தித்தேன். தேவதையின் அத்தனை அம்சங்களும் அவளிடமிருந்தன. அவளுடைய ஒளிவீசும் புன்னகை என் ஆன்மாவில் சுடரேற்றியது. நான் ஒளியாக மாறினேன். என்னைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எல்லோரையும் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல மாறிவிட்டேன். என்னைப் பார்த்த எல்லோரிடமும் சுடரேற்றினேன்.

எல்லோரும் தேவதைகளானார்கள். குழந்தைகளுக்கு மாயாஜாலக்கதைகளைச் சொன்னார்கள். பறவைகளைப் போலப் பறந்து திரிந்தார்கள் குழந்தைகள்.

வயதான பெரியவர்கள் மேகங்களைப் போல மிதந்தார்கள்.

என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத அந்தப் பெண்ணுக்கு இதெதுவும் பிடிக்கவில்லை. அவளுடைய ஒளிவீசும் புன்னகை மாறியது. இருளின் குகையென அவள் கண்கள் இருண்டன.

என்னிடமிருந்த ஒளியை அந்தக் கருந்துளைகளால் உறிஞ்சினாள். நான் கரிக்கட்டையானேன்.

 ஆனால் பாவம்! நான் ஒரு போதும் சந்தித்திராத அந்தப்பெண் அறியாள். என்னுடைய ஒளி இப்போது மக்களின் ஒளி.

 

3.

புல்ஷிட்

அவன் ஒரு திரைப்படம் பார்த்தான்.

அதில் இறந்தவர்கள் நடித்திருந்தார்கள். எல்லாரும் அவனுக்குத் தெரிந்தவர்கள். அவனுடைய நண்பர்கள் இருந்தார்கள். அவனைப் பிடிக்காதவர்களும் இருந்தார்கள். அவனைப் புகழ்ந்தவர்களும் இருந்தார்கள். இகழ்ந்தவர்களும் இருந்தார்கள். அவன் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனைக் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனுடைய பள்ளிநண்பர்கள் இருந்தார்கள். கல்லூரி நண்பர்கள் இருந்தார்கள்.

எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

முதலில் புரியாவிட்டாலும் பிறகு புரிந்து விட்டது.

அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவனும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனும் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்தான்.

அந்தத் திரைப்படம் பல விருதுகளைப் பெறுமென்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.

அவனுக்குத் தெரியும். அது வெறும் புல்ஷிட்...

நன்றி - புக் டே

 

 

விசித்திரனின் கதைகள்


1. விசித்திரனின் கதைகள்

அவனுக்குப் பெயரில்லை. விசித்திரன் என்று எல்லாரும் அழைத்தார்கள். விசித்திரன் ஒரு நாள் கடற்கரைக்குப் போனான். எங்கும் வெள்ளை மணல்வெளி. கைகளில் மணலை அள்ளினான்.

எண்ணத்தொடங்கினான்.

எண்ணி முடித்தானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் ஆற்றுக்குப் போனான். எங்கும் நீர்மை ததும்பிக் கொண்டிருந்தது. அவனும் நீராகி விட வேண்டும் என்று நீருக்குள் மூழ்கினான்.

நீராகி விட்டானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் மலைக்குப் போனான். மலையுச்சியில் பயங்கரக் காற்று. காற்றைக் கையில் பிடித்தான். பறப்பதற்காக மலையுச்சியிலிருந்து குதித்தான்.

பறந்தானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கூட்டம் கூட்டமாய் மிதந்து கொண்டிருந்த மேகங்கள். மேகங்களாகி விட வேண்டுமென்று நினைத்தான்.

கையை நீட்டி மேகங்களை அழைத்தான்.

மேகமாகி மிதந்தலைந்தான் விசித்திரன்.

 

2.

வீட்டில் யாருமில்லை. இரவு விளக்கையணைத்துவிட்டுப் படுத்தான். திரைச்சீலைக்குப் பின்னால் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பதறியெழுந்து விளக்கைப் போட்டான்.

யாருமில்லை.

விளக்கையணைத்தான். யாரோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். விளக்கைப் போட்டான்.

யாருமில்லை.

விடிய விடிய அந்த யாரோ ஒருவனைக் கண்டுபிடிக்க விளக்கைப் போட்டு அணைத்துக் கொண்டிருந்தான்.

அவன் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்தது.

3.

அந்த எறும்பு புற்றிலிருந்து வெளியே வந்தது. அங்குமிங்கும் அலைந்தது. அப்படியும் இப்படியும் சென்றது. சுவரில் ஏறியது. கீழே இறங்கியது.

சும்மா ஒரு இடத்தில் நின்றது. ஏன் அங்கே நின்றது? தெரியாது.

திடீரென ஒரு கால்பெருவிரல் அந்த எறும்பை நசுக்கியது.

என்ன நடந்ததென்று எறும்புக்குத் தெரியாது.

யார்? ஏன்? எதற்கு?

எறும்பு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறது.

4.

எதையாவது தேடிக் கொண்டிருப்பது அவனுடைய வழக்கம். இன்றும் அப்படித்தான். அடையாள அட்டையைத் தேடினான்.

பர்சைத் தேடினான். பையைத் தேடினான். சாவியைத் தேடினான். வண்டியைத் தேடினான்.

மனைவியிடம் கேட்கலாமென்று தேடினான். குழந்தைகளைத் தேடினான். வீட்டைத் தேடினான். தெருவைத் தேடினான். ஊரைத் தேடினான். நாட்டைத் தேடினான். உலகத்தைத் தேடத் தொடங்குமுன்பாக அவன் தொலைந்தே போனான்.

நன்றி - புக் டே

குறுங்கதைகள் : அரவிந்தன் பெருமாள்

April 18, 2025 இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்.ராஜேந்திரன் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார்.அவர் வீட்டில் பார்க்க வேண்டுமென்றால் ஜன்னல் வழியாகத்தான் பார்க்க முடியும்.அதுவும் எல்லா நண்பர்களும் ஒரே நேரத்தில் அந்தச் சிறிய ஜன்னலுக்கு வெளியே நின்று பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.
❌