Normal view

Received before yesterday

ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

அண்ணாகண்ணன்

நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

மலைசூழ் கோவைப் பதிவாழ்க

மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
நலம்சேர் கோவைப் பதிவாழ்க
முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
அணிசேர் கோவைப் பதிவாழ்க

வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
வளம்சேர் கோவைப் பதிவாழ்க
செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
எழில்சேர் கோவைப் பதிவாழ்க
குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

– அண்ணாகண்ணன்

பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

அண்ணாகண்ணன்

சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

#Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

அண்ணாகண்ணன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.
83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.
யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.
பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.
யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.
இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும்.

காரன் / காரி வேர்ச்சொல்

அண்ணாகண்ணன்
புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.
வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.
இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம்.

கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

அண்ணாகண்ணன்

அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி

இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?

சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு

சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.

அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க

மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.

பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.

அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.

பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.

பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

லப்பர் பந்து – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.

விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.

இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.

விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.

ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.

அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.

வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.

தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.

வேட்டையன் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.

படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.

மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.

பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.

தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.

துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.

படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.

கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.

அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.

யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.

எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?

இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.

சாகசத்தின் மறுபக்கம்

அண்ணாகண்ணன்

உயிரைப் பணயம் வைத்து, சாகசம் நிகழ்த்தினர் மேலே – அதை
உயிரைப் பணயம் வைத்து, கண்டு களித்தனர் கீழே

சூர்யகிரண் விமானப் படை அணிவகுப்பு மேலே
சூரிய கிரணங்கள் குவிந்தன எங்கள் தலைமேலே

புகை கக்கின வானூர்திகள் உச்சியிலே
அனல் கக்கிய நேரமும் அதே உச்சியிலே

விர்ரென விரைந்து பறந்தன விண்ணிலே
சுர்ரெனத் தலை வலித்தது மண்ணிலே

வித்தைகள் பலவும் காட்டினர் விண்மீது – அந்த
விந்தைகள் கண்டு, சுருண்டு விழுந்தனர் மண்மீது

அண்ணாந்து பார்த்து வியந்தனர் ஆகாயத்தில் – ஓர்
அடியெடுத்து வைக்கப் பயந்தனர் பேராபத்தில்

பறந்து பறந்து வீரம் காட்டினர் விண்ணிலே
நடந்து நடந்து கால்கள் தொய்ந்தன மண்ணிலே

மனங்களை ஸ்தம்பிக்க வைக்கும் முயற்சி தான்
மொத்தமும் ஸ்தம்பித்துப் போனதே கொடுமை தான்

எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் என்பார் ஒருபுறம்
எல்லா இன்னல்களையும் அனுபவித்தோம் என்பார் மறுபுறம்

எங்கள் மேல் பிழையே இல்லை என்பார் ஒருபுறம் – வெளியே வந்த
எங்கள் மேல் தான் பிழை என உணர்ந்துவிட்டனர் மக்கள்

கூட்டம் கூடும் இடங்களுக்கு இனிச் செல்லமாட்டேன் – ஒரு
குடுவை நீரில்லாமல் வெளிச் செல்லமாட்டேன்

ஓடாய்த் தேய்ந்து உறுதி எடுத்தனர் மக்கள்
பாடாய்ப் பட்டுப் பாடம் படித்தனர் மக்கள்

லிம்கா சாதனை எனக்கு இப்போது தேவையில்லை – ஒரு
லிம்கா பானம் கிடைத்தால் அது நிரம்பப் பரவாயில்லை

அங்குமிங்கும் பறப்பதைக் காண ஆனந்தமே – போக்குவரத்தில்
ஓர் அங்குலம் நான் முன்னகர்ந்தால் அது பேரின்பமே

தேசம் வளர்ந்திருப்பதை அறிய மகிழ்ச்சி தான் – இப்போதைக்கு
வீடுபோய்ச் சேர்ந்தால் அதுவே எனக்கு நிம்மதி

#airshow #chennaiairshow

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

கொட்டுக்காளி – இந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் கடைசி 13 நிமிடங்கள் மட்டுமே கதை. இதற்கு முந்தைய 76 நிமிடங்களும் இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கான நீண்ட பயணத்தைச் சலிக்கச் சலிக்கக் காட்டியிருக்கிறார்கள்.

பெண் வேற்றார் ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், அந்த வேற்றார் ஏதோ மருந்து மாயம் செய்து பெண்ணை வசப்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவள் நம் பேச்சைக் கேட்கவில்லை என அவள் குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

மருந்து மாயத்தால் விளைந்த காதலைச் சாமியார் அழிக்கிறாராம். அந்த நினைவுகளே இல்லாமல் செய்துவிடுவாராம். அதன் பிறகு அவள் குடும்பத்தினர் சொல்லும் ஆணை விரும்பத் தொடங்கிவிடுவாளாம். இதற்காக வேறு ஒருவரை விரும்பும் அன்னா பென்னை இந்தச் சாமியாரிடம் அழைத்து வருகிறார்கள். அவளுக்குச் சூரியைத் திருமணம் முடிக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் விருப்பம்.

இதை அந்தச் சாமியார் எப்படிச் செய்கிறார் என்று காட்டுகிறார்கள். பெண்ணின் முன்கழுத்து, பின்கழுத்து, வயிறு, அடிவயிறு, பின்னிடுப்பு என உடல் முழுவதும் அழுத்திப் பிடிக்கிறார். திருநீறு பூசித் தடவுகிறார். எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில், கழுத்தில், தொப்புளில் வைக்கிறார். வாயில் குழல் வைத்து ஊதுகிறார். உச்சந்தலையில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்க்கிறார். கடைசியாக, சேவலைப் பலி கொடுக்கிறார். உங்கள் பெண்ணிடத்தில் இருந்த மருந்தை அகற்றிவிட்டேன். இனி நீங்கள் அடித்து விரட்டினாலும், இவள் உங்கள் காலடியில் கிடப்பாள் என்கிறார்.

இவர் செய்வதைப் பார்த்தாலே இவர் போலி சாமியார் என்று தெரிகிறது. இதைப் பார்க்கும் சூரி, அன்னா பென்னை இவரிடத்தில் காட்ட வேண்டுமா என யோசிக்கும் இடத்தில் படம் நிறைவடைகிறது.

போலி சாமியார் எனத் தலைப்பு வைத்து, இந்தப் படத்தை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம். இவர் மருந்தை எடுத்த பெண்கள், உண்மையிலேயே தங்கள் காதலை மறந்துவிட்டார்களா என ஆராய்ந்திருக்கலாம். போலி சாமியாரின் தந்திரங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கலாம். காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாம். இப்படியெல்லாம் செய்திருந்தால், சமூகத்துக்கும் இவற்றை நம்பும் மக்களுக்கும் எத்தகைய பயன் விளைந்திருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல், முதல் 76 நிமிடங்கள் ஷேர் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருப்பதைக் காட்டுகிறார்கள். இது சுவாரசியமாகவும் இல்லை. சமூகத்திற்குப் பயன் உள்ளதாகவும் இல்லை. வாழ்வியலைக் காட்டுகிறோம் என்றாலும் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, நேயர்களுக்குச் சலிப்பையே தரும். இதன் மூலம் பல்லாயிரம் பேரின் நேரத்தை வீணடித்துவிட்டார், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்.

கொட்டுக்காளி என்ற பெயர், நன்றாக இருக்கிறது. சேவல், இதில் ஒரு பாத்திரமாகவே உடன் வருகிறது. அன்னா பென், வெறித்த பார்வையோடு உணர்வுகளை அலட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இயல்பாக நடத்திருக்கிறார். ஆனால், காதல் பாடலை முணுமுணுத்த காரணத்துக்காக, அன்னா பென்னையும் உடன் வந்தவர்களையும் அவர் அடித்து வெளுப்பது, பலவீனமான காட்சி. அதற்கு உரிய காரண வலு, அதில் இல்லை.

இதைக் கலைப் படம் என்பதைவிட, ஆர்வக் கோளாறு எனலாம்.

ஹடினெலன்டு – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.

படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.

இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.

படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?

இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.

தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?

படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?

படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.

முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.

உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன்

இன்று உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ள கோவி. செழியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

படத்தில்: கோவி செழியன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி

நாங்கள் மூவரும் 2011ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெற்றோம்.

திமுகவில் வாரிசு அரசியல் கோலோச்சினாலும் உழைக்கும் தொண்டர்களுக்கும் உயர்வு உண்டு என்பதைக் கோவி.செழியனின் நியமனம் காட்டுகின்றது.

தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்

அண்ணாகண்ணன்

நுகர்வோர் ஆணையிட்ட பொருள்களைக் கொண்டு சேர்க்கும் (டெலிவரி) துறையில் ஒரு புது நிறுவனத்தின் பெயரைக் கண்டேன். பின்னால் பெரிய பெட்டியுடன் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஓட்டி வந்தார். அருகில் உள்ள வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்திருந்தார். அந்த இளைஞரிடம் பேசினேன். ஆச்சரியம், அவர் 12ஆம் வகுப்புப் படிப்பதாகக் கூறினார்.

இன்னும் 18 வயது ஆகியிருக்காதே. இந்த நிறுவனத்தில் எப்படிச் சேர்ந்தீர்கள் என்று கேட்டேன். என் அண்ணனின் சான்றிதழ்களைக் கொடுத்துச் சேர்ந்துவிட்டு, அன்றாடப் பணிகளை நான் எடுத்துச் செய்கிறேன் என்றார். பள்ளி முடிந்த பிறகு, மாலையில் இவ்வாறு டெலிவரி செய்யப் போவதாகக் கூறினார்.

ஓர் இடத்தில் டெலிவரி செய்தால் தனக்கு 28 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 40 டெலிவரி செய்தால் 1120 கிடைக்கும் என்றார். சுவிக்கி, ஸொமேட்டோ போன்று உணவும் டெலிவரி செய்வது உண்டு. அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு எனக் கொடுக்கிறார்கள் என்றார். அது சற்றே குறைவாக இருக்கும் என்றார்.

பெரிய டெலிவரி நிறுவனங்களுக்குக் கீழே அவர்களின் பணிகளை எடுத்துச் செய்ய, சிறு நிறுவனங்கள் பலவும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. இவர்கள், துணை ஒப்பந்தம் (சப்-கான்ட்ராக்ட்) மூலம் பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். இப்படி உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய, ஆட்கள் அதிகம் கிடைப்பதில்லை. எனவே தான் அவர்கள் வாகனம் வைத்திருக்கும் துடிப்பான பள்ளி மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே மாதம் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடிவதைத் திறமை என்பதா? இதைத் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதா? இப்படிச் சம்பாதிக்க வேண்டிய குடும்பச் சூழல் இருக்கிறது எனக் கருதுவதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

போட்டோகிராப் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

அண்ணாகண்ணன் யோசனைகள் – 55

அண்ணாகண்ணன்

முன்னர் ஒரு யோசனை தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு நெல்மணிக்கும் பருப்புக்கும் விளைபொருளுக்கும் அது விளையும் இடத்திலேயே குறியீடு கொடுத்து, பின்தொடர வேண்டும் என்பதே என் யோசனை. ஒரு பொருள் எங்கே, எப்போது விளைந்தது, பயிரிட்டவர் யார், எந்த எந்த விற்பனையாளர்கள் வழியே வாடிக்கையாளரை அடைகிறது, வாடிக்கையாளர் வீட்டில் அது எவ்வளவு காலமாக இருக்கிறது என யாவற்றையும் கண்டறிய வேண்டும். அது இயற்கை உரத்துடன் அல்லது செயற்கை உரத்துடன் வளர்ந்ததா? அதன் மேலே செயற்கைச் சாயம் பூசப்பட்டள்ளதா? விளைபொருளின் தரம் என்ன? அது கெட்டுப் போகாமல் இருக்கிறதா? என அறிய வேண்டும். ஒரு ஸ்கேன் செய்தாலே அதன் மரபணுச் சோதனை நிகழ வேண்டும். அந்தப் பொருளின் உண்மை விவரங்கள், நுகர்வோருக்குத் தெரிய வேண்டும்.

ஒரு பொருளின் வடிவம் மாறும்போது, இந்தக் குறியீடு அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய்யாக மாறும்போது தரப் பரிசோதனை செய்து, வேறு குறியீடு உருவாக்கலாம். இத்தகைய சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளையும் விளைபொருள்கள் கொண்டிருக்கலாம்.

காய்கறி, பழம், கீரை உள்ளிட்டவை எப்போது பயிரிடப்பட்டன என்பதுடன் எப்போது அறுவடை செய்யப்பட்டன? எந்த இடத்திலிருந்து இங்கே வந்திருக்கின்றன? என்றெல்லாம் அறிய வேண்டும். இப்போது, இந்த யோசனையைக் கஞ்சாவுக்கும் விரிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

கஞ்சா வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்திப் பலரும் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம். இந்தச் சிக்கலைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு கஞ்சா இலைக்கும் செடிக்கும் அடையாளக் குறியீடு உருவாக்க முடிந்தால், அதன் வரலாறு முழுவதையும் அதிலிருந்து எடுத்துவிட முடியும். அது எங்கே பயிரானது, எந்த இடங்களுக்குப் பயணித்தது என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறியலாம். இன்னார் வீட்டுக்கு அது எப்போது வந்தது என்பது வரை பின்தொடரலாம். குறிப்பிட்ட நாளில் அது வந்தது எனில், அது எப்படி வந்தது, யார் மூலம் வந்தது என்பதையும் ஒரு மோப்ப நாயின் உதவியுடன் கண்டறியலாம்.

மேலும், கஞ்சா வைத்திருந்தார் என்பது ஒரு பகுதி குற்றச்சாட்டு தானே? அந்தக் கஞ்சாவை அவர் யாரிடமிருந்து, எப்போது, எப்படிப் பெற்றார் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தகவல் இல்லாவிட்டால், குற்றத்தை நிரூபிப்பது எப்படி? கஞ்சா விற்றவருக்குத் தண்டனை பெற்றுத் தருவது எப்படி? எனவே, மேற்சொன்ன வேரினைத் தேடல், காவல் துறைக்கும் பெருமளவு உதவும்.

மனிதர் அனைவருக்கும் மரபணுச் சோதனை நடத்தலாம் என முன்னர் தெரிவித்திருந்தேன். வயது வந்தவர் எனில் அவரது இசைவு அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் எனில் அவரது பெற்றோரின் இசைவு பெற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகச் சேர்க்கலாம் என்றேன். இதிலாவது மனிதர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது.

ஆனால், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இதர உயிர்கள் அனைத்திற்கும் மரபணுக் குறியீடு உருவாக்குவது நீண்ட கால நோக்கில் பயனுள்ளது. கலப்படத்தைத் தவிர்க்கவும் உண்மையைக் கண்டறியவும் சில சிக்கல்களின் வேரினைக் கண்டறியவும் இந்த மரபணு அடையாளம் நமக்கு உதவும்.

இது மிகப் பெரிய பணிதான். ஆனால், செய்ய முடியாத பணி இல்லை. முயன்றால் முடியும். முயற்சி திருவினையாக்கும்.

விசேஷம் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

கிண்டியில் மிகப் பெரிய பூங்கா

அண்ணாகண்ணன்

கிண்டியில் ரேஸ்கோர்ஸிடமிருந்து திரும்பப் பெற்ற 118 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய பூங்காவும் பசுமை வெளியும் அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கே நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தில் பேருந்து நிலையத்தைக் கொண்டு வர முன்பு யோசனை தெரிவித்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து சென்றால், இதன் சுற்றுவட்டாரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, அது பரிசீலிக்கப்படவில்லை.

பூங்கா அமைப்பதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அதே நேரம் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வந்து செல்லலாம். நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். சுற்றுலாத் தலமாகவும் வளரும்.

அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, ராஜ் பவன், ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பகுதிகள், ஆயிரக்கணக்கான மரங்களுடன் பசுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இருந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.

கிண்டிக்கு அருகில் தாங்கல் ஏரி, வேளச்சேரி ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மிக அருகில் அடையாறு நதி ஓடுகிறது. அடையாற்றின் கரை முழுவதையும் நீண்ட பூங்காவாக, வனமாக வளர்த்தெடுக்கலாம். இதன் மூலம் கரைகள் பலப்படும். மண் சரிவு ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம்.

புதிதாக அமைய உள்ள ரேஸ்கோர்ஸ் பூங்காவுடன் இணைத்து, இதர பசுமை வளங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பெருந்திட்டத்தை முன்னெடுக்கலாம். கேபிள் கார் முதலானவற்றை அமைக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, இதர இடங்களை மேலிருந்தும் சுற்றிப் பார்க்கலாம்.

ரேஸ்கோர்ஸ் இடத்தில் மிகப் பெரிய கூட்ட அரங்கினை உருவாக்கலாம். சென்னையில் பெரிய அரங்குகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கலாம்.

இந்த இடத்தின் ஒரு பகுதியில், சேப்பாக்கத்தைப் போல் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கலாம்.

இந்த இடத்தினை வேறு எந்த வகையில் பயன்படுத்தலாம்? உங்களுக்கு ஏதும் யோசனை தோன்றுகிறதா?

ஜமா – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பறக்கும் முத்தம்

அண்ணாகண்ணன்

தூக்கம் வந்தால் தூங்கிவிடு
தும்மல் வந்தால் தும்மிவிடு
அழுகை வந்தால் அழுதுவிடு
சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
ஆசைப் பட்டால் அடைந்துவிடு
அதற்காய் நீயும் உழைத்துவிடு
உணர்வை அடக்கிக் குறுகாதே
ஒளித்து வைத்து மருகாதே

தெரிந்தால் தெரியும் என்றுசொல்
தெரியாது என்றால் அதையும்சொல்
புரிந்தால் புரிந்தது என்றுசொல்
புரியாவிட்டால் அதையும்சொல்
பிடித்தால் பிடித்தது என்றுசொல்
பிடிக்காவிட்டால் அதையும்சொல்
வேண்டாம் என்றால் விட்டுவிடு
வேண்டும் என்றால் மொட்டுவிடு

அப்படி நடந்தால் அதுவும்சரி
இப்படி நடந்தால் இதுவும்சரி
எப்படி நடந்தாலும் சரியேதான்
எல்லாம் நமக்கு நன்மைதான்
அதிகம் யோசித்துக் குழம்பாதே
உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
திரும்பிப் பார்க்க நேரமில்லை
வேட்டையாடு விளையாடு

காதலில் கற்பனை அதிகமப்பா
கனவைக் கலைத்து எழுந்துவா
நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
வெற்றிகளாலே நீபேசு
வேண்டியதெல்லாம் பின்தொடரும்
ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

 

————————————-

Photo by Mahdi Chaghari from Pexels

❌