துக்கம்: விழிப்பின்வழி உற்றறிதல் - பன்னீர் செல்வம்
மனித இனம் இதுவரை தோற்றுவித்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் துக்கம் குறித்தும் அதிலிருந்தான மீட்பு குறித்தும் வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கின்றன. உதாரணமாக, மார்க்சிய தத்துவம் மானுட துக்கத்துக்கான காரணம் வர்க்க பேதம் என்கிறது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான அமெரிக்காவின் அரசியல் சாசனம் இன்பத்தை நாடிச்செல்வதற்கான உரிமை (Pursuit of Happiness) குறித்து பேசுகிறது.
இந்தியாவின் பழமையான தரிசனங்களில் ஒன்று சாங்கியம். சாங்கிய தத்துவம் துக்கத்தின் ஊற்றுமுகத்தை அடிப்படையாக வைத்து அதனை மூன்றாகப் பிரிக்கிறது. நம் இயல்புகளால், மனத்தால், செயல்களால் அதன் விளைவுகளால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் துக்கம் முதல்வகை. சுற்றத்தால், சமூகத்தால், அமைப்புகளால், அரசால் விளையும் துக்கம் இரண்டாம் வகை. பேரியற்கையின் இயக்கத்தால், மானுட அறிதல்களுக்கு அப்பாற்பட்ட காரண-காரிய வலைப்பின்னல்களின் பிரம்மாண்டத்தால் விளையும் துக்கம் மூன்றாவது.