Normal view

Received before yesterday

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

By:Para
5 June 2025 at 05:38

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

பாவை என்று சொல்லாதே என்னை!

2 June 2025 at 18:14

சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு – வ.ந.கிரிதரன்

Paavai Entru Sollathe Ennai – Kavithaikal

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின்   கவிதைத்தொகுப்பு “பாவை என்று சொல்லாதே என்னை” – மனஓசை வெளியீடு.  72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  புகலிடத்  தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன்.  எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின்  (செல்வி  சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி.  இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இணைந்து, போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.

ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்) பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள்,  யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்  பெற்றுள்ளன.

தொகுப்பின் ‘என்னுரை’ சந்திரவதனாவின்  எழுத்துலகப் பயணத்தைச் சுருக்கமாக விபரிக்கின்றது. இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைக்கு இவர் அனுப்பிய கவிதை அந்நாளில் பிரபல ஒலிபரப்பாளராக விளங்கியவர்களில் ஒருவரான இராஜேஸ்வரி சண்முகத்தின் பாராட்டைப் பெற்று ஒலிபரப்பானதாக (1981) ‘என்னுரை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரி பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில்தான் அந்த ‘வயல்வெளி’ என்னும்  கவிதை ஒலிபரப்பானது.  நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் பலரின் அடித்தளமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இருந்திருக்கின்றது.  இவரது சகோதரி சந்திரா இரவீந்திரனின் எழுத்துலகப் பயணமும் 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையிலேயே  ”ஒரு கல் விக்கிரகமாகிறது”  என்னும் சிறுகதை மூலம் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதை அவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதியிருந்தார்.

அதே சமயம் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியவர் இவரது தந்தையாரான தியாகராஜாவே என்பதையும் ‘என்னுரை’ எடுத்துக்காட்டுகின்றது. சிறுவயதிலேயே தியாகராஜா அவர்கள் நாட்குறிப்பேடொன்றினைச் சந்திரவதனாவுக்கு வழங்கி அவரது அன்றாட அனுபவங்களை எழுதும்படி தூண்டியிருக்கின்றார். அதுவே பின்னர் அவரது எழுதுலகப் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இச்சமயத்தில் வீடெங்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்,  நூல்களால் நிறைத்திருந்த என் தந்தையாரின் நினைவுகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே என் எழுத்தார்வத்துக்கும்  தீனி போட்டது.

இத்தொகுப்பின் “பாவை என்று சொல்லாதே என்னை” என்னும்  பெயரைப் பார்த்ததும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிதைகளை மையமாகக் கொண்டு இத்தொகுப்பு அமைந்திருக்குமென்று எண்ணினேன். தொகுப்பு அதனைப் பொய்ப்பிக்கவில்லை. பல கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கின்றன.  இத்தொகுப்பு பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதோடு, நனவிடை தோய்தல்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்நினைவிடைத் தோய்தல்கள் சந்திரவதனா தன் வாழ்வில் சந்தித்த பல்வகை அனுபவங்களை, இழப்புகளை, அவற்றால் எழுந்த  நீங்கா நினைவுகளை  வெளிப்படுத்துகின்றன. அவரே ‘என்னுரை’யின் இறுதியில் கூறுவதுபோல் அவரது  ‘உணர்வுகளின் வடிகால்கள்’ அவை.

தொகுப்பின் தலைப்புக் கவிதை “நான் ஒரு பெண்“. இதன் வரிகளே ‘பாவை என்று சொல்லாதே என்னை’  

‘பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை!’

இக்கவிதை வரிகள் அனைத்தும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை.

‘வீணை என்று
சொல்லாதே என்னை.
நீ மீட்டுகையில் நாதமிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மெளனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை!’

‘பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை!’

இவ்விதம் ஆணாதிக்க சமுதாயமொன்றில் விடுதலைக்காக ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையின் இறுதி வரிகள் அன்புடன் கூடிய மென் உறவுக்காக ஏங்கும் ‘பெண் என்று மட்டும் எண்ணு என்னை, அது போதும் எனக்கு!’ என்று  முடிகிறது.

நாற்குணம்” என்னும் கவிதையில் பெண்ணை அடிமையாக்கியோர் நாணப் போராடுகின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிப் பெண் போராளிகள். இருந்தும்,
‘சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை.
ஆணாதிக்கமும் அடக்குமுறையும்
முற்றாக ஒழியவுமில்லை!’

தொலைக்காதே உன்னை”  என்னும் கவிதை
‘பெண்ணே! நீ, கிளர்ந்தெழு!
அழுவதை மறந்திடு.
போரிடவும் துணிந்திடு!’
என்று பெண்களை நோக்கி  அறைகூவல் விடுக்கிறது.

வழக்கம்போல் அடுப்படிக்குள்”  என்னும்  கவிதை
‘அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற் நினைப்பை
கொளுத்தி எறிந்தவள் மாலதி’

என்று சமையற்காரியாய், போகப்பொருளாய் இருப்பதுதான் பெண்ணின் வரைவிலக்கணம் என்னும் நிலையை மாற்றியவள் பெண் போராளியான மாலதி என்று கூறும் கவிஞை கவிதையைக் கீழுள்ளவாறு முடிக்கின்றார்.

‘…கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்..
அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல..!’

மாலதி போன்ற பெண் போராளிகளின் இருப்புக் கூட  சமுதாயத்தில் பெண்ணின் நிலையை மாற்றவில்லையே என்று இங்கு கவிஞை வேதனைப்படுகின்றார்.  

களிக்கும் மனங்களே கசியுங்கள்” என்னும் கவிதையை இயக்கத்துக்கு உதவும்படி  வேண்டும் பிரச்சாரக் கவிதையாகக் கருதலாம்.

புற்று நோய்”  என்னும் கவிதை அலுலகத்தில் கூட பணி புரியும் பெண்ணொருத்திக்கு புற்றுநோய் காரணமாக அவளது மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கின்றார்கள். அப்பெண்ணுக்கு அது தரும் வேதனையை எடுத்துரைக்கும் கவிதை. அக் கவிதை ஆணாதிக்கச் சமுதாயத்தில் மார்பகத்தை வெறும் உறுப்பாக உணராமல், போகப்பொருளாகக் கருதும் நிலையும் அப்பெண்ணின் துயரத்துக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது. இதன் மூலம் இக்கவிதையும் பெண் விடுதலைக்கவிதைகளில் ஒன்றாக இனங்காணப்பட முடியும்.

உனக்காய் வாழ்‘ என்னுங் குறுங்கவிதையும்
‘பெண்ணே!
ஊருககாய் வாழாதே!
உனக்காய் வாழ்!’
என்று பெண்ணை எழுச்சி கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.

இன்னுமொரு குறுங்கவிதை “உனதாய்” அது
‘உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்!’
என்று அறிவுரை கூறுகிறது.

உனக்கு விடுதலை வேண்டும்‘ கவிதை
‘பெண்ணே!
உனக்கு விடுதலை வேண்டும்!’
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது.
கலாச்சாரம், பண்பாடு, அம்மா, அம்மம்மா வழிமுறையில், சமூகச் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணுக்கு முதலில் அவளிடமிருந்து விடுதலை வேண்டும் என்கின்றது.

ரணம்” கவிதை
‘உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதும்…
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை!’
என்று தன்னை உணர்ந்து சுயபரிசீலனை செய்த பெண்ணொருத்தியின் உளநிலையினை வெளிக் காட்டுகிறது.

பால்வினை” என்னும் இன்னுமோர் குறுங்கவிதை
ஏழ்மையினால், மனிதர்களின் இச்சையினால், சூழ்ச்சியினால், பால்வினைக் கிணறுகளுக்குள் தள்ளப்பட்டு, உடல்களுடன் உள்ளங்களும் ஊனமான பெண்களைப்பற்றி வருந்துகிறது.

உன் பலம் உணர்ந்திடு” குறுங்கவிதை தாயகத்தில் ‘வெண்கலத்துடன் போராடிய பெண்களின் கைகள் சுடுகலன்கள் ஏந்தி நிற்கையில், புகலிடத்திலோ தமிழ்ப்பெண்கள் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் ஒளிந்திருந்து தம் வலிமை உணராமல் கண் கலங்குகின்றார்கள்’ என்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

பெண்ணே நீ இன்னும் பேதைதானே!” கவிதை
‘மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்!….
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்.
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் என்ன சொல்வார்?’ என்று கேள்வி கேட்கிறது.

இவ்விதம் தொகுப்பின் பல கவிதைகள், தொகுப்பின் தலைப்புக்கேற்பப் பெண் விடுதலையை வலியுறுத்துபவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுதந்திரம்” இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தைத் தரவில்லை. மாறாக 1958 தொடக்கம் 1983 வரையில் இனரீதியிலான வன்முறைகளைத்தாம், அடக்குமுறைகளைத்தாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாது அந்நியநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற கோழைகள் என்று தன்னை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் சந்திரவதனா.

கொழும்பு றோட்டில்” போர்ச்சூழலில் தாயகம் திரும்பிய பெண் ஒருத்திக்கு அங்கு நிலவிய பாதுகாப்புரீதியிலான அடக்குமுறைகள் ஏற்படுத்தும் பொலிஸ் ரிப்போர்ட், திடீர் சோதனைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்… என்று பல இடர்களை விபரிக்கிறது.

உயிரோடு திரும்புவேனா” புகலிடமான ஜேர்மன் நாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தந்தையைப் பார்க்கச் செல்லும் பெண்ணொருத்தி, தாய் மண்ணில் நிலவும் அனர்த்தங்கள் கண்டு தளராமல் செல்வதை எடுத்துரைக்கும் கவிதை.

இழந்த மண்ணின், இனிய இறந்த காலத்து நினைவுகளால் எழும் கழிவிரக்கத்தை வெளிக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் சில உள்ளன. அவற்றிலொன்று “சுகமான நினைவு“. சிறிது நீண்ட கவிதை. வாசிக்கையில் வாசகருக்கும் சுகமான இனியதோர் உணர்வினைத்தரும் மொழி கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.
‘செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ, செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச, பறவையினம் சிறகடிக்க, வண்டினங்கள் ரீங்கரிக்க, குயிலினங்கள் இசைபாட, மெல்லென விடிந்தது அங்கெனது காலை’ என்று இழந்த காலத்து நனவிடைதோய்தலின் இனிமையில், அதனால் விளைந்த கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் உளத்தை இக்கவிதை விபரிக்கின்றது.

நிமலராஜனே!” ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை பற்றிப் பேசும் கவிதை. பேச்சுரிமையற்ற சூழலில் நினைவாகிப் போன ஒருவராக அவரை விபரிக்கின்றது.

சந்திரவதனா செல்வகுமாரனின் அண்ணன், தம்பியர் இருவர் ஈழ விடுதலைப் போராளிகளாகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். ஒரு குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழிக்க முடியாத பெருந்துயரம். தொகுப்பின் முதல், இறுதிக்கவிதைகள் இவ்விதம் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த சகோதரர்களைப்பற்றி நினைவு கூர்கின்றன. இறுதியாக அவர்கள் நினைவுகளில்தாம் இருக்கின்றார்கள். தொகுப்பின் முதற் கவிதையான “நினைவுகள்” மூத்தக்கா என்றழைக்கும் தம்பியைப்பற்றியும், சின்ன வார்த்தைகளால் சீண்டும் அண்ணனைப்பற்றியும் நினைவு கூரும். இறுதிக்கவிதை “தம்பிமார்”, “அண்ணா!”, “தம்பியர்” பற்றிய நினைவுகளின் வெளிப்பாடு. ஒரு வகையில் இத்தொகுப்பை அவர்களுக்கான் அஞ்சலித் தொகுப்பாகவும் கருதலாம். தொகுப்பைத் தொடங்கும், முடிக்கும் வாசகர் ஒருவருக்கு அவர்களை நினைவூட்டும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு அமைந்திருக்கின்றது.

இவை தவிர மனம், காதல்… என மானுட வாழ்வின் முக்கியமான ஏனைய விடயங்களைப் பற்றிய கவிதைகளும் தொகுப்பிலுள்ளன.

புயலடித்துச் சாய்ந்த மரமொன்றின் குரல் “புயலடித்துச் சாய்ந்த மரம்“. அதன் இளமைப்பருவத்தில் மரத்தை அல்லும் பகலும் தழுவிக் கிடந்த தென்றல் அதன் முதுமையில் புயலாக மாறிச் சீர்குலைத்தது ஏன் என்று கேட்கின்றது. ‘கனிதரும் காலம் போய்விட்டாலும், நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே, வேரோடு சாய்த்து விட்டாயே! என்று அது வேதனையுறுகின்றது. இது மரத்தின் கவிதை மட்டுமா? அல்லது மானுடர் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும், விமர்சிக்கும் ஒரு குறியீட்டுக் கவிதையா? அர்த்தங்கள் பலவற்றை அறிந்து கொள்ள வைப்பவை எழுத்துகள். இதுவும் அவ்வகை எழுத்துகளில் ஒன்று.

சந்திரவதனா செல்வகுமாரனின் “பாவை என்று சொல்லாதே என்னை” கவிதைத்தொகுப்பு பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்புரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக் கருப்பொருட்களாகக் கொண்ட, அவை பற்றிய அவரது நினைவுகளின் திரட்டு. எளிமையான, இதயத்தை இழுத்துப் பிடிக்கும் மொழி நடை அவரது முக்கிய பலம். உருவகங்கள் அதிகமில்லாவிட்டாலும், ஆங்காங்கே உவமைகள் சில உள்ளன. எதுகை, மோனைகள் நிறைய உள்ளன. கவிதையின் அடிநாதமாய் இருப்பது அது வெளிப்படுத்தும் உணர்வு. கவிதைகள் அனைத்துமே கவிஞையின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள். போலித்தனமான வறட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் வாசிக்கையில் நெஞ்சைத் தொடுகின்றன. வாழ்த்துகள்!

வ.ந.கிரிதரன்
19.05.2025

வாசன் மலர்

By:Para
12 May 2025 at 04:30

Pa Raghavan

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.

உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.

ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.

இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.

அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?

வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.

தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.

இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''

மஹாகவி - து.உருத்திரமூர்த்தி ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.



பாயிரம்
1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.

கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.

தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.சிற்பி பாலசுப்பிரமணியம்

மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.

வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.

படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.

தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.

சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.

இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.

எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.

நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.

கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.

சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்

சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
‘‘ ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழி அவளுக்கென் வாழ்த்து
’’
என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி

அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,
‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
பாவை கல்லாகி விட்டாள்
’’
எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,

சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.

‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.

‘‘ அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
அப்பனே மகனாகி
வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று
உயர்வு ஒன்றினை
நாடலே உண்மை....
’’
என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.

கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.

மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.

மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.

‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்

மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;

‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’

நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு
’’
இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.

எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
‘‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.
’’
உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.

புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.

அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ
எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு
கவிதை:

‘‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்.
எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தனன்.... விலாவில்
ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே
’’

காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.

கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.

கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.

‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இருபுறம் கூர் எடுத் தின்னா
புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.
’’

அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்
சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.

இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.

‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
உறையின் நீங்கி உலகு வலம் வந்து
சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
கைகளில்
தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
காவியம் முடிகிற வரை எம்
சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.
’’
ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.

ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.

‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே
’’

கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.

‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.

அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:

‘‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பெரிய
பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலிலும் கல் குடியிருத் தினரே
’’
இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.

மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
அதிலே,
ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
எச்சிறிது எப்பெரிதினுக்கும்
ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.
’’
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.

மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.

அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல
மஹாகவியும் பேசுவார்:
‘‘ இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்..
’’

தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
‘‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்
’’
அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.

ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
நன்று, நன்று!
என்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
சென்றவன் மீண்டனன். சிரித்தான்
இன்று போனவன் நேற்று வந்தனனே
’’

மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.

நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,
பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.

மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.

இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.

ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - சிற்பி பாலசுப்பிரமணியம்

முன்னீடு

ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.

இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.

அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.

நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!

குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.

'வரலாற்றில் வாழ்தல்’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’

அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.

என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.

குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.

கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.

நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.

அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.

பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.

இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - எஸ்.பொ


128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது.
இதன் விலை ரூ 100.00

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''

மஹாகவி - து.உருத்திரமூர்த்தி ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.



பாயிரம்
1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.

கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.

தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.சிற்பி பாலசுப்பிரமணியம்

மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.

வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.

படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.

தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.

சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.

இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.

எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.

நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.

கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.

சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்

சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
‘‘ ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழி அவளுக்கென் வாழ்த்து
’’
என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி

அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,
‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
பாவை கல்லாகி விட்டாள்
’’
எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,

சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.

‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.

‘‘ அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
அப்பனே மகனாகி
வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று
உயர்வு ஒன்றினை
நாடலே உண்மை....
’’
என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.

கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.

மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.

மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.

‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்

மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;

‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’

நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு
’’
இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.

எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
‘‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.
’’
உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.

புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.

அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ
எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு
கவிதை:

‘‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்.
எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தனன்.... விலாவில்
ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே
’’

காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.

கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.

கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.

‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இருபுறம் கூர் எடுத் தின்னா
புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.
’’

அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்
சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.

இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.

‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
உறையின் நீங்கி உலகு வலம் வந்து
சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
கைகளில்
தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
காவியம் முடிகிற வரை எம்
சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.
’’
ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.

ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.

‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே
’’

கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.

‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.

அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:

‘‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பெரிய
பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலிலும் கல் குடியிருத் தினரே
’’
இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.

மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
அதிலே,
ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
எச்சிறிது எப்பெரிதினுக்கும்
ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.
’’
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.

மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.

அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல
மஹாகவியும் பேசுவார்:
‘‘ இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்..
’’

தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
‘‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்
’’
அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.

ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
நன்று, நன்று!
என்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
சென்றவன் மீண்டனன். சிரித்தான்
இன்று போனவன் நேற்று வந்தனனே
’’

மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.

நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,
பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.

மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.

இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.

ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - சிற்பி பாலசுப்பிரமணியம்

முன்னீடு

ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.

இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.

அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.

நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!

குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.

'வரலாற்றில் வாழ்தல்’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’

அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.

என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.

குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.

கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.

நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.

அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.

பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.

இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - எஸ்.பொ


128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது.
இதன் விலை ரூ 100.00

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.

காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.

தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.

அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\

2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை

'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்

25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.

“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.

“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது

பாரதி கேட்டார்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”

இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.


“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?

3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....

தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....

.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.

இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...

இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு..

வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.

காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.

தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.

அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\

2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை

'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்

25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.

“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.

“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது

பாரதி கேட்டார்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”

இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.


“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?

3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....

தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....

.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.

இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...

இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு..

வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 6

1970களில் வாய் மொழியாக சக கைதிகளிடம் 'பூமி மனுஷ்யா' என்னும் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். எழுதுவதற்கு காகிதங்கள் கூட தரப்படவில்லை. கழிவுக் காகிதங்களை சேகரித்து எழுதுகிறார். 1979ல் விடுதலை செய்யப்படுகிறார். 1980ல் நாவல் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. உடனடியாக அந்தப் புத்தகம் இந்தோனேசியாவில் ஜெனரல் சுகர்ட்டோ அரசால் தடை செய்யப்பட்டது. தோயர் பதினெட்டு வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார்.

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 5

மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனின் கண்கள் எதையெல்லாமோ சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவனுக்கான இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பது புரிகிறபோது, வாகனுக்குள்ளும் அந்த ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது. கதை முடிந்த பிறகும் அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத் தவிர வேறு எதையும் போர் மூலம் பெற முடியாது என்பதை உணர்த்தியபடி இருக்கிறது.

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 4

பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக் கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 3

நாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 2

அது மார்க் ட்வைன் எழுதிய Adventures of Huckklebery finn. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு புத்தகம் வரவில்லை' என்று எழுத்தாளர் எர்னஸ்டோ ஹெம்மிங்வே 1935ல் எழுதுகிறார். அமெரிக்காவின் மதிப்பு மிக்க கன்கார்டு நூலகமோ "மூர்க்கத்தனத்தையும், அநாகரீகத்தையும் பேசும் இந்த புத்தகம் சேரிகளுக்குத்தான் லாயக்கு. அறிவும் மரியாதையும் மிக்க மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல" என்று இந்த நாவல் வெளிவந்த 1885ம் ஆண்டிலேயே தடைசெய்தது.

தடை செய்யப்பட்ட நாவல்கள் -1

போர்முனையில் குண்டுகளின் சத்தங்களோடும், குதிரைகளின் குளம்படி சத்தங்களோடும் நான்கு வருடங்கள் கழிகின்றன. 1918ல் போர் முடிவடைகிறது. தனது ஊருக்குத் திரும்புகிறார். வெறுமையும், இழப்புகளும் அலைக்கழிக்கின்றன. முடிந்த வாழ்க்கை விரட்டுகிறது. இறந்துபோன நண்பர்களின் முச்சுக்காற்று இரவுகளில் அருகில் கேட்கிறது. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு போர் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். போரைப்பற்றி சிந்திப்பதை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் அது கருநிழலாய் அவர் தலைக்கு மேல் தொங்கியபடி சித்திரவதை செய்கிறது.

தடை செய்யப்பட்ட நாவல்கள்

எல்லாம் அதிகாரத்தின் பேரிலேயே நடந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.

க்ளிக் நாவல் வெளியீடு

ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத மனித உறவுகளுக்குள் சஞ்சரிக்க வைக்கிறது.. தலைமுறைகளின் கால  இடைவெளியை, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இருக்கும் தூரத்தை பேசுகிறது. சம கால ஆண் பெண் உறவுகளை ஒரு மேஜிக் ஷோ போல் நிகழ்த்தி காட்டுகிறது க்ளிக் நாவல்.

சலுகை வாரம்

By:Para
24 April 2025 at 05:35

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

ராஜம்மாளின் பேத்தி . . .

13 February 2022 at 09:40

திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன். 

‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.

வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார். 

ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.  வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.

இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது. 

பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச்  சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும். 

இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . .  அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார். 

பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல்  மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார். 

‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.

அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.

அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார். 

‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’

பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான். 

The post ராஜம்மாளின் பேத்தி . . . appeared first on வேணுவனம்.

அதிகாரத்தைக் கண்டும் விலக மறுக்கும் உண்மைகள் – இ.பா.சிந்தன்

12 April 2025 at 13:27
1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்சில் லூமியர் சகோதரர்கள் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒரு காட்சியில் இரயில் வருவதைப் பார்த்து, பார்வையாளர்கள் அஞ்சி நடுங்கியதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதைக் காட்டியபோது, அவர்கள் திரையைத் தாண்டி வந்துவிடுவார்களோ என்று ஒருவிதக் குழப்பத்துடனே பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே காலகட்டத்தில் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்து ஒலிபரப்பத் தொடங்கியபோது, யாரோ நேரடியாகக் காற்று வழியாகத் தங்களுடன் பேசுவதாக மக்கள் நினைத்தனர். […]

Source

இடமும் இருப்பிடமும்

By:Para
11 April 2025 at 05:08

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

கடலோடி

தமிழில் தம் துறை சார்ந்த அனுபவப்பதிவுகளை யாரும் எழுதுவதில்லை என்று நான் பல காலமாகப் புலம்பி வருபவன். ஆனால், தன் துறை சார்ந்த அனுபவங்களை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் மிக அற்புதமாக எழுதியிருப்பதை இத்தனை காலம் தாழ்த்திப் படித்தது குறித்து உண்மையிலேயே வெட்கமாக இருக்கிறது.  கப்பற்படையில் பொறியாளராகவும், அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்த்தகக் கப்பல்களில் பொறியாளராகவும் பணியாற்றி, எவருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் நரசய்யா அவர்கள். இப்போது அவருக்கு வயது 90க்கு மேல். 1972ல் வாசகர் வட்டத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல் இப்போது சிறுவாணி வாசகர் மையத்தின் சார்ப்பாக பவித்ரா பதிப்பகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக அக்காலத்தில், (ஏன் இக்காலத்திலும் கூடத்தான்) வீட்டில் கோபித்துக் கொண்டு ராணுவத்திற்குச் செல்பவர்களாகத் தான் தென்னிந்தியர்கள் இருந்தோம்.  சீக்கியர்களைத் தவிர, மற்ற அனைவரும் பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், நரசய்யா வீட்டில் அப்பாவின் ஆசியோடு கப்பற்படைக்குச் செல்வது வியப்பாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் கப்பற்படையில் 1949ல் இவர் சேரும்போது அதிகாரிகள் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்கள்தான்.  கப்பற்படையோடு சேர்ந்து இவரும் வளர்கிறார்.  இந்தியாவின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்தைக் கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். அதற்காக இங்கிலாந்தில் பயிற்சி. அயர்லாந்திலிருந்து கொண்டு வருகிறார்கள்.

கப்பற்படையின் பயிற்சிகள், கண்டிப்புகள், தண்டனைகள், அதிலிருந்து கற்றுக் கொள்பவை, அதிகாரிகளின் நடத்தை, வெளிநாட்டு அனுபவங்கள் என்று யாருக்கும் எளிதில் கிட்டாத அனுபவங்கள்.  இந்த அனுபவங்களை ஏதோ இந்தியன் நியூஸ் ரீல் என்று அந்தக் காலத்தில் போடுவார்களே, அந்த பாணியில் இல்லாமல், மிகவும் ரசிக்கத் தக்க  வகையில் எழுதியிருப்பது தனிச் சிறப்பு. பின்னாளில் வர்த்தகக் கப்பல்களில் பணி புரிந்த அனுவங்கள், அப்போது சென்ற நாடுகள், உலகின் பல்வேறு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், கப்பல்களின் வகை என்று எதை எதையோ தொட்டுத் தொட்டுச் சென்றாலும் கூட, எல்லாவற்றையும் மிகத் திறமையாக, ஒரு கோர்வையாக எழுதியிருக்கும் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. வர்த்தகக் கப்பலில் பணியாற்றும் போது, பங்களா தேஷ் விடுதலைக்கான போர் வர, மீண்டும் கப்பற்படை அழைக்கிறது. நரசய்யாவிற்கு போர் அனுபவமும் கிடைக்கிறது. நமக்கும் அந்தப் போர் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

இந்தியாவின் கடல்வணிகம், கப்பல் தொழில் பற்றிய இரு அத்தியாயங்கள் மிக முக்கியமாக என்னைக் கவர்ந்தன. பண்டைய கடல் வணிகம் பற்றி தொல்காப்பியரிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார். போஜராஜனின் யுக்தி கல்பதரு என்ற சமஸ்கிருத நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அர்த்தசாஸ்திரம், புறநானூறு, வின்சென்ட் ஸ்மித்,  கனோஜி ஆங்கரே என்று எங்கெங்கிருந்தெல்லாமோ மேற்கோள்கள் காட்டி மிகச் சில பக்கங்களில் இந்தியக் கடல் வணிகம், கப்பல்கள், கப்பற்படையின் வரலாற்றை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

வரலாறு என்றாலே நாம் அறியாத விஷயங்களின் மாபெரும் கடல் என்று தான் நான் பொருள் கொள்வேன்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நம் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய வரலாறு மட்டுமே நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால், டாடாவின் கப்பல் கம்பெனியும் பிரிட்டிஷாரால் சதி செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டிருக்கிறது. ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஜோதேந்திரரின் கப்பல் கம்பெனிக்கும் இதே கதிதான். 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி ஆரம்பிக்கப்படுகிறது. லால்சந்த், நவரோத்தம் மொரார்ஜி என்ற இருவர் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரை எதிர்த்து கப்பல் கம்பெனி நடத்துகிறார்கள். இந்திய கப்பல் வணிகத்தின் முன்னோடிகள் இவர்கள்தான். இவர்கள் பட்ட துன்பங்களை எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறார் நரசய்யா.  தேசவிடுதலைக்கு நாம் அறியாத எத்தனை எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ இன்னல்களைப் பட்டிருப்பதை அறிய மெய்யாகவே நாம் அறிந்தது கைமண்ணளவு கூட இல்லை என்பது தெரிகிறது.

160 பக்க சிறிய நூல்தான். ஆனால் மிக நேர்மையாக எழுதப்பட்ட நூல். இராணுவ அனுபவங்கள் என்றாலேயே, ஒரு வித போலி தேசபக்தி, பெருமிதம் பொங்க அவை எழுதப்பட்டு விடும் அபாயம் இருக்கும்.  இந்த நூலில்  ஒரு இடத்திலும் அவ்வாறு இல்லை என்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. நான் அப்படியே தேசத்திற்காக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, எல்லையில் பனிமழையில் வீர சாகசம் செய்தேனாக்கும் என்பது போன்ற உருட்டு ஒரு இடத்திலும் இல்லை. இராணுவக் கட்டுப்பாடு என்ற பெயரில் மேலதிகாரிகள் அடிமட்ட வீரர்களைப் பாடாய்ப் படுத்துவதைக் கண்டு கோபப்பட்டு எழுதுகிறார்.  1946ல் கப்பற்படை எழுச்சிக்கு பிரிட்டிஷ் அதிகாரிகளின் எந்த விதமான நடவடிக்கைகள் காரணமாக இருந்தனவோ, அவை 1949ல் நரசய்யா கப்பற்படையில் சேரும் காலத்திலும், அதற்குப் பிறகு அவர் பணிபுரிந்த 15 ஆண்டுகளிலும், துளியும் மாறாவில்லை. பிரிட்டிஷ்காரனோ, இந்தியனோ அதிகாரி அதிகாரியாகத் தான் இருக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

கப்பற்படைக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருந்தாலும், அதில் பணிபுரிந்த காலம் முழுவதும் நான் அதைத் திட்டிக் கொண்டே தான் இருந்தேன் என்று மிக நேர்மையாக எழுதியிருக்கிறார்.

நேர்மையாக எழுதப்படும் எந்தப் படைப்பும் காலம் கடந்து நிற்கும். பல தலைமுறை வாசகர்களாலும், மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் என்பதற்கு நரசய்யாவின் கடலோடி ஒரு நிரந்தர சாட்சி.

கடலோடி – நரசய்யா

வாசகர் வட்டத்தின் 34வது புத்தகம் – 1972

சிறுவாணி வாசகர் மையத்திற்காக பவித்ரா பதிப்பகம் 2024

பக்கங்கள் 160   விலை ரூ.180

❌