Normal view

Received yesterday — 7 June 2025

நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன்


(நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி : 11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர். நாலடியார், அறிவுடைமை, 243 சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம். காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி...

The post நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது...

The post ? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1                                                                                                         சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்)...

The post கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

Received before yesterday

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! “எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று எனமறுமை நோக்கின்றோ அன்றேபிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே” திணை – பாடாண்துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம். வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது. “பாணன் சூடிய பசும்பொன் தாமரை” எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள். பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர்...

The post சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3                2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம். மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார். மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி...

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 அல்ல! அல்ல! அல்ல! இந்தியாவெங்கும் சமற்கிருத எதிர்ப்பு காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. பிற மொழிகளில் உள்ள  சமற்கிருத அறிஞர்களே, சமற்கிருதத்தின் பொய்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். பிராகிருத மொழியினர் எந்த அளவிற்குச் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம். பிராகிருத காவியத்தை வணங்குவோம் ! அம்மொழியில் கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம் சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்! யார் அம்மொழியில் காவியம் படைத்தார்களோ அவர்களையும் கொளுத்துவோம்.! – பேராசிரியர் முனவைர் ப.மருதநாயகத்தின், ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும்...

The post 60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன்


(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 சனாதவாதிகளால் பாராட்டப்படும் சந்தோகிய உபநிடதம், “(கடந்த பிறவியில்) இவ்வுலகில் நற்செயல்கள் செய்தவர்கள் அதற்கேற்ப நல்ல பிறப்பை அடைகிறார்கள். அவர்கள் பிராமணராகவோ, சத்திரியராகவோ அல்லது வைசியராகவோ பிறக்கிறார்கள். ஆனால், இவ்வுலகில் கெட்ட வேலைகளைச் செய்தவர்கள், நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவர்களாகவோ பிறந்து அதற்கேற்ப கெட்ட பிறப்பை அடைகிறார்கள்.” என்கிறது. செய்யும் கருமத்திற்கேற்ப உயர் பிராமணனாகவோ ‘இழி சூத்திரனாகவோ’ பிறப்பான் என்பதை இது கூறுகிறது. இத்தகைய உடநிடதத்தைத்தான் சிறப்பானதாக மதிப்பிற்குரிய மேதை கூறுகிறார். முதலில் உபநிடதம் பொருளைப் பார்ப்போம். உபநிசத்து என்னும்...

The post 57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன்


(காலணிகளைக் கவினுற அமைத்தனர் – தொடர்ச்சி)   வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3                                                                                                                கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை  பிற நாட்டார்க்கு வந்துள்ளது....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன் appeared first on அகர முதல.

54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56.    சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு  : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்

கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை” 

கானல்வரி பக்கத்தில் புத்தகத் திருவிழாக்களை ஒட்டி வகைமை வாரியான நூல் பரிந்துரைகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறோம். 

நாளை (06-09-2024) தொடங்கவிருக்கும் மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் முதல் நவீனம் வரையிலான நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் அடங்கிய பட்டியலை இங்கு பதிவிடுகிறோம். இப்பட்டியல் ஆரம்பகட்ட மற்றும் நடுத்தர வாசகர்கள் பயன்பெறுதற் பொருட்டு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நூற்பட்டியலைப் பரிந்துரைத்து உதவிய காலச்சுவடு அய்யாசாமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

படங்களைத் தொடர்ந்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்

1) கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் – எம்.எஸ்)

2) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் – சுந்தர ராமசாமி )

3) மஹ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

4) மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

5) கடல்புரத்தில் – வண்ணநிலவன்

6) ஈரம் கசிந்த நிலம் – சி.ஆர்.ரவீந்திரன்

7) தண்ணீர் – அசோகமித்திரன்

8) சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

9) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

10) நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

11) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

12) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

13) நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

14) பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்

15) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

16) ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

17) புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

18) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

19) புனலும் மணலும் – ஆ.மாதவன்

20) அஞ்சு வண்ணம் தெரு – தோப்பில் முஹம்மது மீரான்

21) அமிர்தம் – தி. ஜானகிராமன்

22) மாதொருபாகன் – பெருமாள்முருகன்

23) வெல்லிங்டன் – சுகுமாரன்

24) அஜ்னபி – மீரான் மைதீன்

25) சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

26) காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், (தமிழில், கே.நல்லதம்பி)

27) பால்யகாலசகி – வைக்கம் முஹம்மது பஷீர், (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

சிறுகதைகள்

28) சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

29) குதிரைக்காரன் – அ. முத்துலிங்கம்

கட்டுரைகள்

30) மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

31) கோவில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி

32) உய்யடா உய்யடா உய் – இசை

33) கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

34) பதிப்புகள் மறுபதிப்புகள் – பெருமாள் முருகன்

35) மயிர்தான் பிரச்சினையா – பெருமாள் முருகன்

36) சாதியும் நானும் – பெருமாள் முருகன் (ப. ஆ)

37) பதிப்பும் படைப்பும் – கண்ணன்

38) நகலிசைக் கலைஞன் – ஜான்சுந்தர்

39) பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

40) நடந்தாய் வாழி காவேரி – சிட்டி, தி.ஜானகிராமன்

41) அந்தக் காலத்தில் காபி இல்லை – ஆ.இரா.வேங்கடாசலபதி

42) எனது இந்தியா – ஜிம் கார்பெட், (தமிழில் -யுவன் சந்திரசேகர்)

43) என்கதை – கமலாதாஸ், (தமிழில் – நிர்மால்யா)

44) கவர்ன்மென்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தி, (தமிழில் – பாவண்ணன் )

45) நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை, (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

46) திருடன் மணியன்பிள்ளை -ஜி.ஆர்.இந்துகோபன், (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

47) ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில்,குளச்சல் மு.யூசுப்)

48) ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் – ஆ.சிவசுப்பிரமணியன்

49) கிழக்கும் மேற்கும் பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் – மு.இராமனாதன்

50) காலந்தோறும் பெண் – ராஜம் கிருஷ்ணன்

The post கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை”  appeared first on Kaanalvari.

நெஞ்சுறுதி கொண்ட எங்கள் அம்மா!

23 April 2025 at 21:08
Sivagamasunthary. Siva Thiyagaarajah, அம்மாவின் தையல் மெஷின்,
சிவா தியாகராஜா (சிவகாமசுந்தரி)
Siva Thiyagarajah (Sivagamasunthary)
(23.04.1934-18.05.2022)

ருக்குள் பலரும் மொறிஸின் அம்மா, மயூரனின் அம்மா, சுந்தரியம்மா என்றெல்லாம் அவரை அன்பாக அழைப்பார்கள். மொறிஸூக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. மயூரனுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. தான்பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக இருந்த எங்கள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு உன்னதமான அம்மாவாக இருந்தார்.

காணும் போதெல்லாம் நெஞ்சு நிறைந்த அன்பை எங்களில் சொரிந்து கொண்டிருந்த அம்மா! நாம் துவளும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து எம்மை உயிர்ப்புடன் செயற்பட வைத்துக் கொண்டிருந்த அம்மா! பசியோடு நாம் அவரின் வீடுதேடிச் செல்லும் போதெல்லாம் பரிவோடு உணவளித்த அம்மா! கண்ணை இமை காப்பது போல் எம்மைக் காத்திட்ட அம்மா! தான் பெற்ற பிள்ளைகள் போல் கட்டியணைத்து எமக்கு ஆறுதல் தந்த அம்மா!

அம்மாவைப் பற்றி இன்னுமின்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் போராட்டம் ஒரு கொரில்லாப் போர் வடிவிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. அச்சமயம் அதற்கு ஆதரவு தருவதற்கு பலரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவ் வேளையிலும் தைரியமாக, நம்பிக்கையோடு எங்களை வாரியெடுத்தணைத்து மலர்ந்த முகத்தோடு உபசரித்து, தன் பாசத்தைக் கொட்டி உணவளித்து ஆதரித்த அம்மா!

மாவீரன் டேவிட் அண்ணை அம்மாவைத் தேடி எப்போது வந்தாலும் “எணை பசிக்குது… சாப்பாடு தாணை” என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்து விடுவார். கடற்புலி வெங்கடேசனும் அப்படித்தான். சிலவேளைகளில் சாப்பாடு அங்கே முடிந்திருக்கும். வேறு யாராவது போராளிகள் வந்து சற்றுமுன்னர்தான் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால் அது பற்றி அவர் எதுவுமே சொல்லாமல் அடுத்த சமையலுக்கு அவசரமாக அடுப்பை மூட்டுவார். மொறிஸின் இளையக்கா(சந்திரா), பிரபாக்கா, தங்கை பாமா (பாமாச்சி) எல்லோரும் தமது பசியினைக் காட்டிக் கொள்ளாமல் எங்களை உபசரித்து அன்பாக அளவளாவிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பல சமயங்களில் அங்கு சாப்பாடு இருக்காது. ஆனால் அம்மாவோ இருப்பவற்றையெல்லாம் கொட்டி அவசரமாகச் சமைத்து வந்து எமக்குப் பறிமாறத் தொடங்கி விடுவார்.

நான் எத்தனையோ தடவைகள் மிகுந்த களைப்புடன் மொறிஸின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பெடியளுக்காகவே வாங்கி வைத்திருக்கும் கொர்லிக்ஸ், போன்விற்றா எல்லாம் கலந்து, சுவையான தேநீர் தயாரித்து வந்து என்னிடம் தருவார் அம்மா. நாங்கள் பசிக்களையோடு இருக்கக் கூடாது என்பதில் அம்மா எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

இந்திய இராணுவக்காலத்தில் மொறிஸ் வீடு எப்போதும் இராணுவ அட்டகாசங்களில் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டேயிருக்கும். அங்கு போகவே உறவினர்களும் அயலவர்களும் அச்சப் படுவார்கள். ஆனால் அட்டகாசங்கள் முடிந்து அங்கிருந்து இராணுவம் வெளியேறிய மறுகணமே நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவோம். அம்மா அடுத்த கணமே மகிழ்ச்சியோடு எங்களுக்குச் சமைக்கத் தொடங்கி விடுவார். எவ்வளவு இராணுவக் கெடுபிடிகள்,ஊரடங்குகள் இருந்தாலும் அம்மாவின், முகம் நிறைந்த புன்னகை எப்போதும் போல எங்களை உற்சாகமாக வரவேற்கும்.

நாங்கள் சில நாட்கள் அங்கு செல்லவே முடியாமல் எங்காவது ஒளிந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ தடவைகள் வந்திருக்கின்றன. அச் சமயங்களில் எங்களைத் தேடி யாராவது வருவார்கள். “வந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள்” என்று அவர்களிடம் அம்மா தூது அனுப்பி விட்டிருப்பார்.

எண்பதுகளின் நடுவில் மொறிஸ், மயூரன் குடும்பத்தினர் இராணுவக் கெடுபிடிகள் தாளாமல் யாழ்ப்பாணத்திற்குப் போய் விட்டார்கள். அப்போது அவர்கள் மொறிஸின் அப்பாவின் உத்தியோக மனையில் குடியிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருந்தோம்.

நீண்ட மாதங்கள் அம்மாவையும் அவரின் குடும்பத்தினரையும் காணாமல் நாங்கள் உள்ளூரப் பெருந் துயருற்றிருந்தோம்.

கடைசியாக, மொறிஸ் 1989இல் வீர மரணமடைந்த கொடுந் துயரமான நிகழ்வுகள் யாவும் நடந்து முடிந்த பின்னர், நான் யாழ்ப்பாணத்தில் சில இரகசிய விடுதலைப் பணிகளிற்காக நியமிக்கப் பட்டிருந்தேன். இந்திய இராணுவத்துடன் இணைந்து மாற்றியக்கங்களும் எம்மைத் தேடியலைந்து கொண்டிருந்த நேரமது.

ஒரு நாள்,மொறிஸ் குடும்பத்தினர் குடியிருந்த யாழ்ப்பாண வீட்டை சைக்கிளில் கடந்து செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்கேற்பட்டது. அப்போது, ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்காமல் கடந்து செல்ல என் மனம் இடம் தரவில்லை. அம்மாவையும் இளையக்கா, பாமாச்சி எல்லோரையும் ஒரு தடவையேனும் கண்டு ஒரு வார்த்தையாவது பேசி விட்டுப் போகலாமே என்றெண்ணி, என் மனம் என்னை அந்த வீட்டின் பக்கம் இழுக்கத் தொடங்கியது.        

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டினைச் சுற்றி இராணுவ முகாம்களும் சென்றிப் பொயின்ற்றுகளும் நிறைந்து வழிந்திருந்தன. எவருமே போக அச்சப்படும் அந்த இடத்தில் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே மனசு அஞ்சியது.

நான் சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தேன். வாசலுக்கு வந்த அம்மா கண்கள் விரிய வியப்போடு என்னைப் பார்த்தார். அடுத்த கணமே மகிழ்ச்சி பொங்க, புன்னகையோடு, இரகசியக் குரலில் என்னை வரவேற்றார். உடனேயே ஓடிச் சென்று சுடச்சுடப் புட்டும், கத்தரிக்காய்க்குழம்பும் முட்டைப்பொரியலும் கொண்டு வந்து தந்து “களைச்சிருக்கிறாய் அப்பு. முதல்ல சாப்பிடு. பிறகு கதைக்கலாம்” என்றார்.

எனக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து பொங்கியது. நான் பொங்கிய கண்ணீரைத் துடைக்கவில்லை. எனக்கு ஏற்கெனவே பசி.  தலை சுற்றுவது போல் உணரத் தொடங்கியிருந்த நான் கைகளைக் கழுவிவிட்டு மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அந்நேரம் அவ்வுணவு எனக்கு அமிர்தம் போலத் தோன்றியது. அம்மா என்னைப் பரிவோடு பார்த்தபடி இருந்தார்.

திடீரென்று வெளியில் ஏதோ சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நான் பரபரப்பானேன்.

“நீ… சாப்பிடப்பு. நான் போய் என்னெண்டு பார்த்துக் கொண்டு வாறன்” என்றார் அம்மா.

நான் “இப்பப் போக வேண்டாம்” என்று கையைக் காட்டித் தடுத்தேன்.

ஆரியகுளச் சந்திப்பக்கம் கேட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைத் தொடர்ந்து இராணுவ `றக்´ ஒன்று வேகமாக அவர்களின் வீட்டைக் கடந்து போனது. எனக்கு நெஞ்சு திக்கென்றது. நான் உயிரோடு இருக்கும் கடைசித் தருணம் அதுதான் என நினைத்தேன்.

வீட்டின் பின்புறம் யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய இராணுவமுகாம். பின்வழியாக நான் ஓடித் தப்பவே முடியாது.

சத்தங்கள் மெல்ல மெல்லக் குறைந்ததும் அம்மா  வெளியில் இறங்கி, கேற்வாசல் வரை போய் வீதியை இருபுறமும் பார்த்து விட்டு வந்தார்.

“இப்பச் சந்தடி ஒண்டும் இல்லை. எல்லாரும் போயிட்டான்கள். றோட் வெறிச்சோடிப் போய்க் கிடக்கு” என்றார்.

நான் கைகளைக் கழுவிவிட்டு, தண்ணீரை மடமடவென விழுங்கியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு “போட்டுவாறன் அம்மா..” என்றேன். என் வாய்க்குள்ளிருந்து சத்தம் வர மறுத்தது. கண்கள் என்னையும் மீறி, பொங்கி வழியத் தயாராக இருந்தன.

அம்மா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார் “எல்லாம் நல்ல படி நடக்கும் அப்பு. தைரியமாய், கவனமாய் போயிட்டு வா” என்று. அதுதான் நான் அம்மாவைக் கண்ட கடைசி நாள்!

இப்போது எங்கள் அன்பு அம்மா மேலை நாடொன்றில் எங்கள் மண்ணை நினைந்த படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். நானோ அவரை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலையில் வேறொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் மேல் அம்மா வைத்திருந்த அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் இத்தனை அழிவுகளின் பின்னும் இத்தனை இழப்புகளின் பின்னும் இத்தனை துயரங்களின் பின்னும் என்னை இன்னும் உயிரோடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறதென்று நான் நம்புகிறேன்.

விடுதலையே தன் உயிர்மூச்சென எண்ணி எங்கள் எல்லோருக்குமாகவே வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் அன்பு அம்மா இன்னும் நெடுங் காலம் நீடூழி வாழ வேண்டும்!

உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் பரிவுக்கும் நெஞ்சுறுதிக்கும் முன்னால் நான் என்றும் தலை வணங்கி நிற்கிறேன் அம்மா!

-றியோ நிலவன்
 மார்கழி 2020

விடுதலைப்புலிப் போராளிகளில் ஒருவரான றியோ நிலவன் அவர்கள் எழுதிய இம் மாண்புரை அம்மாவின் “பெருநினைவின் சிறு துளிகள்” நூலில் இடம் பெற்றது.

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

நண்பர் அரவிந்தன்


எதிர் 

பிளாட்பாரத்தில்

இறந்து

இருண்டு கிடக்கும்

எலியின்

வாலருகே 

மினுங்கிக்கொண்டிருக்கிறது

அன்பைவிடச்

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங் என்ற ஓசையோடு

சாலையில் கால் வைக்க முடியவில்லை

முன்னும் பின்னும்

முரட்டு வாகனங்கள்

இடைவேளை இன்றி

ஒரு நாள்

ஒரு நூற்றாண்டு

பல நூற்றாண்டுகள்

திடீர் இடைவெளியில்

குறுக்காக ஓடி,

ஏறினேன்.

எதிர் பிளாட்பாரத்தில்

தவறிக் கிடக்கும்

நீர்த் தாவரத்தின்

கசிவில்

மினுங்கிக் கொண்டிருக்கிறது,

அன்பை விட

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங்

என்ற ஓசையோடு. 

- தேவதச்சன்


தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார். 

அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் என்ன? அன்புக்கும் மரியாதைக்கும் இடையில் உள்ள பாலம் எது? 

நாகரிகம் என்று எனக்குப் பதில் கிடைக்கிறது. 

அன்புக்கும் நாகரிகத்துக்கும் இடையே உள்ள பாலம் அருளால்  கட்டப்படுகிறது என்று கருதுகிறேன்.

அன்பெனும் எலும்பில் இன்னும் விலங்குத் தன்மையின் ரத்தமும் நிணமும் உலராமல் இருப்பதாலேயே அன்பு எப்போதும் கொலைக்கருவியாகும் வாய்ப்புகளை நாம் பார்த்துவருகிறோம்.   

மரியாதை என்பது அதனால் எலும்பாக அன்புக்கும் தூரத்தில் உலர்ந்த மணல்பரப்பில் கிடக்கிறதென்று நினைக்கிறேன். 

மரியாதை துளியும் இல்லாத இடத்தில் அபரிமிதமான அன்பு நஞ்சுதான். அறிவாலும் அருளாலும் சலிக்கப்படாத அன்பு பேராயுதமாக மாறக்கூடிய வாய்ப்புடையது. 

அன்பு உலர்ந்தபின்னர் மனிதர்கள் சேர்ந்து ஓரளவு சமாதானத்துடன் உய்வதற்கு உயவுப்பொருளாக மரியாதையே இருக்க இயலும்.

சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வடமாநிலம் ஏதோவொன்றில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்னதானத்தில், உணவுக்காக வந்த முஸ்லிம் கிழவியிடம் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உணவளிக்க முடியுமென்று உணவுகொடுக்காமல் துரத்தும் வீடியோ ஒன்று மிகுந்த மனத்தொந்தரவை அளித்தது 

பசியைத் தவிர வேறு பிணியே இல்லை என்றும் உணவைத் தவிர வேறு கடவுளே இல்லையென்ற போதத்தையும் விதைத்த, சீவ காருண்யத்தையே ஒழுக்கமாகப் பார்த்த வள்ளலார் போன்ற ஞானிகள் பிறந்த மண்ணிலிருந்து இதுபோன்ற வெறுப்புக் குரல்கள் தேசமெங்கும் கேட்கத் தொடங்கியிருக்கும் வேளையில் அன்பென்ன? அருள் என்ன? அறிவுதான் என்ன? மரியாதை என்ன? என்பதையெல்லாம் நாம் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

ஒரு இனத்தின் மேல் கொண்ட வெறுப்பால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை சித்திரவதை முகாம்களில் பறிகொடுத்த யூத இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தேசம் ஒன்று, ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனக் குழந்தைகள் மீது கொலை பாதகத்தை ஏவிவிட்டு, ஒண்டி இருப்பதற்குக்கூட ஒரு மூலையை அனுமதிக்காமல் துரத்திக் கொன்று கொண்டிருக்கும் காட்சிகளை தினசரிப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது இந்தக் கையாலாத காலத்தில்

 அன்பென்ன? அருள் என்ன? நாம் இதுவரை வந்தடைந்திருக்கும் அறிவென்ன? தத்துவம்தான் என்ன? கற்றுக் கொண்ட மரியாதைதான் என்ன? என்பதை குற்றவுணர்வோடு பரிசீலிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

000

சுந்தர ராமசாமி நாகர்கோவில் பாம்பன் விளையில் வருடம்தோறும் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்பில், எனது 19 வயதில் கல்லூரிப் பட்டப்படிப்பின் முதலாண்டில் அரவிந்தன், அறிமுகமானார். அப்போது இந்தியா டுடே ஆசிரியர் குழுவில் இருந்தார். யோகா உடற்பயிற்சியைச் சொல்லிக் கொடுக்கும் அளவு தேர்ந்தவர் என்பதால் அரவிந்தனின் உடல்வாகும் முகமும் கூட பெரிதாக மாறவில்லை என்பதே எனது எண்ணம்.

கொஞ்சம் ஒடுங்கியிருந்த முகம் சமீப பத்தாண்டுகளில் பூசியுள்ளது மட்டும் மாற்றம் என்று நினைக்கிறேன்.

குற்றாலத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டறை தொடர்பில் அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்று இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. பெர்முடாஸ் அணிந்து இன்று வயோதிகர்களாகியிருக்கும் அன்றைய இளம் எழுத்தாளர்கள் பட்டறையில் பங்கேற்றது அதிர்ச்சிகரமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கலக உடை என்று பெர்முடாஸுக்கு நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில். சுபமங்களாவில் வந்த ஒரு சிறுகதையையும் அக்காலகட்டத்தில் படித்திருக்கிறேன். அரவிந்தனுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியும் கமலா அம்மாவும் அக்கறையுடன் அரவிந்தனது மணப்பெண் தேடல் குறித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமி ஆசிரியராகக் கொண்டுவந்த காலச்சுவடை நிறுத்தி 2,3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனும் லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் சேர்ந்து திரும்ப காலச்சுவடைக் கொண்டுவந்த போது அதன் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். காலச்சுவடு பதிப்பகமாக, வர்த்தக நிறுவனமாக கிளைவிட்ட போது, எனது இயல்பின் அடிப்படையில் நான் அங்கிருந்து படிப்படியாக விலகி வெகுதூரம் வந்துவிட்டேன். சுந்தர ராமசாமி என்ற முதல் ஆசிரியரின் மீதான அபரிமிதமான மரியாதை, அவர் எங்கள் ஆளுமைக்கு அளித்த ஊட்டம், கமலா அம்மாவும் அவர்கள் வீடும் அந்தக் காலகட்டத்தில் கொடுத்த அடைக்கலம் மட்டுமே இப்போது எனக்கு சுந்தர விலாஸுடனான ஞாபகத் தொடர்பு.

அரவிந்தன் அப்போது தொடங்கி இப்போதுவரை காலச்சுவடின் ஓர் அங்கமாக இருக்கிறார். காலச்சுவடு கண்ணனுக்கும் நண்பர்களாகிய எங்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், புகார்கள், பரஸ்பரமாகப் பகிர்ந்துகொண்ட வன்மங்கள் எல்லாவற்றையும் அரவிந்தன் அறிந்தாலும், அவற்றில் அவரது தரப்பை எங்களிடம் பகிர்ந்துகொண்டாலும் ஒருபோதும் என்னை விலக்க முயன்றதில்லை.எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அவர் எளிதில் பெரிய நிலைப்பாடுகளுக்குப் போகக்கூடியவர் அல்ல.   

000

 எனது பட்டப்படிப்பு முதலாண்டின் இறுதியிலேயே முறிந்து டிஎம்இ படிப்பதற்காக திருக்கழுகுன்றத்துக்கு வந்து படித்து முடித்து திருநெல்வேலியில் ஓராண்டு இருந்துவிட்டு வேலைக்காக தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அன்னம்மாள் மேன்ஷனுக்குக் குடியிருக்க வந்தபோதுதான் அரவிந்தன் எனக்கு நெருக்கமானார். வேலை தேடும் முகாந்திரத்தில் தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்து சென்னைக்கு வந்துவிட்டேன் என்பதைச் சொன்ன இடங்களில் ஒன்று அரவிந்தன் வேலை பார்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இந்தியா டுடே அலுவலகம்.

கவிதா முரளிதரன், முரளியோடு சேர்ந்து அரவிந்தன் எனக்கு தேநீர் வாங்கித் தந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டுக்கும் வரலாம் என்று சொன்னார்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி அயோத்தியா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் திரும்பும் வீதியில் அரவிந்தன் திருமணமாகி ஸ்ரீதேவியுடன் இருந்த வீட்டில் தளவாய், அஜயன் பாலா போன்ற நண்பர்கள் மாலைகளில் கூடுவது வாடிக்கையாக இருந்தது. சினிமா இயக்குனரும் நண்பருமான தி ஜா பாண்டியராஜன் எழுதிய சில சிறுகதைகளும் இந்தியா டுடேவில் பிரசுரமானது. ஸ்ரீதேவியின் சமையலில் சில வேளைகள் சாப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த கை அவருடையது.

அரவிந்தனின் வீட்டில் தளவாய், அஜயன் பாலா சிறுகதைகளை புத்தம்புதிதாக எழுதி கொண்டுபோய் கொடுத்து சில கதைகள் சுடச்சுட இந்தியா டுடேயில் பிரசுரமாவது நடந்திருக்கிறது. அப்போது இந்தியா டுடேயில் சிறுகதை வருவது மிகவும் பெருமிதமாக கருதப்பட்டது. ஆதிமூலம், ஆர் பி பாஸ்கரன் தொடங்கி மாரிமுத்து வரையிலான நவீன ஓவியர்களின் ஓவியத்தை பிரத்யேகமாக வாங்கி அந்தச் சிறுகதைகளைப் பிரசுரிப்பது வழக்கமாக இருந்தது. இந்தியா டுடேயில் வந்த சிறுகதைகளுக்கு ஒரு தனிமதிப்பை உருவாக்கியதிலும் இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களின் உள்ளடக்கத்திலும் அதன் ஆசிரியராக இருந்த வாஸந்தியோடு அரவிந்தனுக்கும் முக்கியப்பங்கு இருந்தது. லா.ச.ரா, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, சூடாமணி, அம்பை, கி.ரா,அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை நிறைய சிறந்த சிறுகதைகள் எனது மாணவப் பருவத்தில் அறிமுகமானது இந்தியா டுடே வழியாகத் தான்.   

ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புத் தொகையும் அப்போதைய பொருளாதாரத்தில் மிகவும் அதிகமான தொகை. நான் அந்த ஆயிரத்து 500 ரூபாய்க்காகவே சில சிறுகதைகளை எழுத மிகவும் பிரயத்தனப்பட்டு முயன்றிருக்கிறேன். இந்தியா டுடேயில் சிறுகதை வருவதைக் கனவாகவும் கண்டிருக்கிறேன். எனது கதை எதுவும் பிரசுரமாகும் தகுதியை அடையவில்லை. இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் அரவிந்தன் என்னிடம் வாங்கிப் பிரசுரமான எனது ஆரம்பகாலத்து நல்ல கவிதைகளில் ஒன்றான ‘அம்மா நீங்கிய அறையில்’ கவிதைதான் பரவலாக என்மீது கவனத்தை ஏற்படுத்தியது. 

000

என் அம்மாவிடம் சென்னைக்குப் போய் வேலை தேடிவிடலாமென்று சொல்லி வந்துவிட்டேனே தவிர ஒரு வேலை கிடைப்பது அத்தனை எளிதாக இல்லை. அரவிந்தன் மூலமாகத்தான் ஒரு டேட்டா எண்ட்ரி அலுவலகத்தில் பணி கிடைத்தது. 

அப்போதுதான் அரவிந்தனுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. 

000

டேட்டா எண்ட்ரி வேலை பறிபோனபின்னர் 1999 வாக்கில் சுட்டி விகடனில் சேர்ந்தபின்னர்…படிப்படியாக அரவிந்தனுடன் எனக்கு தொடர்பு குறைந்துவிட்டது…மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் நமது சென்னை பத்திரிகையை அவர் நடத்திக் கொண்டிருந்தபோது நானும் நிலையான வருவாய் இன்றி 50 நாட்களுக்கு மேல் ஒரு முறை சம்பளம் தரும் விசித்திர நிறுவனமான தி சன்டே இந்தியனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக அரவிந்தனுடன் மீண்டும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுபகுணராஜன் நடத்திய காட்சிப்பிழை பத்திரிகையின் பணிக்காகவும் அரவிந்தனின் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம்.

இந்தப் பருவத்தில் ஏற்பட்ட பணிரீதியான உறவுகள், உரையாடல்கள் மீண்டும் ஒரு நெருக்கத்தை எட்டிய இரண்டாண்டுகளில்தான் இந்து தமிழ் திசை பத்திரிகை தொடங்குவதைப் பற்றி என்னிடம்அரவிந்தன் சொன்னார். என் சுய விவரத்தை எனது அடுத்த தெருக்காரராக இருந்த அசோகமித்திரன் கேட்டு வாங்கி அவர் மகனிடம் கொடுத்திருந்த நிலையில் அரவிந்தன் முக்கியமான பொறுப்பேற்பதாகச் சொல்லி எனக்கு நம்பிக்கையை அளித்து, அழைத்தும் சென்றுவிட்டார்.

அரவிந்தன் ரெஃபரென்ஸ் செய்தபின்னர் ஆங்கில இந்துவைச் சேர்ந்தவர்கள் தீவிரமான நேர்காணல் செய்தபின்னரே என்னைத் தேர்ந்தார்கள் என்றாலும் அரவிந்தன் செய்த உதவியே எனது பொருட்படுத்தத்தக்க 10 ஆண்டு பத்திரிகைப் பணிக்கு ஆதாரமாக இருந்தது. கவிஞனாக என் அடையாளமே தெரியாமல் எனது கட்டுரைகளால் அடையாளம் காணும் பல வாசகர்களை நான் இந்து தமிழ் திசை வாயிலாகவே பெற்றேன.

இந்து தமிழ் திசையில் அரவிந்தன் பொறுப்பு வகித்த இணைப்பிதழ் பிரிவிலேயே தான் எனக்கு பணி. ஆனாலும், அரவிந்தனுடன் கூடுதல் உரிமையையும் அதனால் கூடுதல் விமர்சனத்தையும் சொல்லக்கூடியவனாகவே பக்குவமற்றே நடந்திருக்கிறேன். அவரது எல்லைக்குட்படாத விஷயங்களையும் அவரைப் பொறுப்பாக்கி நான் கடிந்திருக்கிறேன். ஒருநாள் கூட நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் நடவடிக்கையிலோ இறங்கியதேயில்லை. 

அவர் எடிட்டோரியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தபோது அந்த முடிவு என் நலன் தொடரபில்லாததாக இருந்தாலும் அந்த முடிவு சரியல்ல என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறினேன. அவர் என்னுடைய தரப்பைக் கேட்டாலும் அந்த முடிவில் உறுதியாக இருந்தார். பத்து நாட்கள் அதுதொடர்பில் எங்களுக்குள் உரையாடல் நடந்துகொண்டேயிருந்தது. ஆனால் அவர் வழிக்கு வரவில்லை. நான் அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் தொடர்ந்தேன். ஒருநாள் முதல் மாடியிலிருந்து படியில் அதைப்பற்றி பேசிக்கொண்டே இறங்கும்போது திட்டமேயில்லாமல ஒரு காரியத்தைச் செய்தேன். அங்கே காமிரா இல்லை என்பதை மட்டும் பார்த்து அவர் கால்களில் விழுந்தேன். தயவுசெய்து இந்த முடிவை நடைமுறைப்படுத்தாதீர்கள், சரியாக வராது என்று. அரவிந்தன் என்னப்பா என்னப்பா என்று கூறி போய்விட்டார். ஆனால் எனது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே மாட்டேன். எனது நடத்தையிலேயே இல்லாத ஒரு திருப்பம் அரவிந்தனிடம் நான் செய்த செயல். நான் ஒருவரைக் காயப்படுத்துவேன். இல்லையெனில் கசந்து விலகுவேன். ஆனால் எனது நலன் அல்லாத ஒன்றுக்காக திடுக்கென்றுதான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.

அது விஷயமும் அல்ல.

அவரது முடிவையே தொடர சகல உரிமையும் அதிகாரமும் இருந்தும் தனது அதிகாரத்தை எனக்காக அவர் செயல்படுத்தவில்லை. அரவிந்தனின் மேன்மை அதுதான்.

தனது நலனுக்காக மற்றவர்களின் வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்களை, அவர்களது கருத்துகளை துச்சமாகக் காலில் போட்டு மிதிக்கும் மேலதிகாரிகளைத் தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.

இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்புகளில் சில இணைப்புகளுக்கு பெயர் வைத்தது அரவிந்தன்தான். ஆனந்த ஜோதி அவர் வைத்த பெயர்தான். இந்தியா டுடே இலக்கிய மலர் அனுபவத்தில் சீரியசான வகையில் தீபாவளி மலர்களை கனமான உள்ளடக்கத்துடன் கொண்டுவந்ததில் அரவிந்தனின் பங்கேற்பு முக்கியமானது. புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை கிராபிக் கதையாக ஆக்கலாம் என்று போகிற போக்கில் நான் கூறியதை தொடர்ந்து சட்டகங்களுக்கு வசனங்களை எழுதச் சொல்லி ஓவியர் மருதுவிடம் பணித்து அதைக் காரியமாக்கினோம். ஒரு பெரிய கட்டமைப்பிலேயே அதுபோன்ற வேலைகளை நம்மால் சாத்தியமாக்க இயலும். 

குடி, சிகரெட் என்று எந்தப் பழக்கமும் இல்லாததாலோ என்னவோ சோர்வைக் காட்டிக் கொள்வதைக் கூடுமானவரைத் தவிர்ப்பார். யோசனைகள், திட்டங்களைக் கொட்டிக் கொண்டே இருப்பது மூச்சுமுட்டும். 

மொழிபெயர்ப்பை தட்டச்செழுத்தரின் வேகத்துடன் செய்யக்கூடியவர். எனது மொழிபெயர்ப்புத் திறன் மேம்பட உதவிய வெகுசிலரில் ஒருவர் அரவிந்தன்.  

 அரவிந்தனுடன் வேலை பார்த்த 8 ஆண்டு காலப்பகுதியும் நான் கண்ணியமாக மரியாதையோடு நடத்தப்பட்ட காலமாக நன்றியுடன் என்னால் சொல்லமுடியும்.

நட்பு மற்றும் அன்பின் இதத்தை வேறு வேறு இடங்களிலிருந்து கொண்டு பராமரிப்பது வேறு. அதிகாரத்தில், வேலை ரீதியாக உயர்நிலையில் இருந்துகொண்டு படிநிலையில், கீழேயுள்ள உயிரை – அதுவும் என்னைப் போன்ற சிக்கலான ஒரு நபரை - மதிப்போடு நடத்துவது என்பது மிக அரிதானது.  

000

இந்து தமிழ் திசை காலகட்டத்தில்தான் அவர் பயணம், பொன்னகரம் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இரண்டையும் கையெழுத்துப் படியாகவே எனக்குக் கொடுத்தார். 

நான் அந்த இரண்டு நாவல்களையுமே மிகப் பழைய ஒரு மனம் எழுதியது என்று கடுமையாக விமர்சித்தேன்.

நேர்ப்பேச்சில் என்னிடம் வெளிப்படும் கூர்மையான விமர்சனம் படைப்பையும் தாண்டி நபரைக் கீறிவிடக்கூடியது என்பது மிகத் தாமதமாக இந்த வயதிலேயே எனக்குப் புரிகிறது. அரவிந்தனையும் நான் பல சமயங்களில் கீறியிருக்கிறேன். அவர் அதைப் பெருந்தன்மையாகவே கடந்திருக்கிறார்.

முதல் நாவலை விமர்சித்த பிறகும் இரண்டாவது நாவலையும் படிக்க கொடுத்தார். 

அந்த விமர்சனங்கள் எதையும் வேலை மீது காட்டியதில்லை. 

000

எந்திரங்களால் உருவாக்கப்படும் இசை மனிதனின் ஆழமான உணர்ச்சிகளை எப்படித் தொடுகிறது என்று ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி வியக்கிறார். சத்தம் எப்போது சந்தமாகிறது? மொழியும் ஒருவகையில் அப்படித்தான். ஒரே காலகட்டத்தில் பொதுவான சொற்களனிலிருந்து எடுத்து படைக்கப்படும் மொழி ஒருவரிடம் எப்படி தற்காலத் தன்மையைப் பெறுகிறது? ஒருவரிடம் ஏன் பழையதாக இருக்கிறது?

உள்ளடக்கத்திலா? விமர்சனத்திலா? பார்வையிலா? அனுபவத்தைப் பார்க்கும் தொலைவிலா? மனத்தடையின்மையிலா? அராஜகத்திலா? கொந்தளிப்பிலா? கொதிப்பிலா? 

சத்தம் எங்கே சந்தமாகிறது?

அன்பு எங்கே அருளாகவும் மரியாதையாகவும் நீதியாகவும் மாறுகிறது?

அரவிந்தனின் நிதானத்துக்கும் பெரிதாக அதிர்வுறாமல் தோன்றும் தன்மைக்கும் அவரது படைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதாவென்று பரிசீலிக்க வேண்டும்.

பாலசரஸ்வதியின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய டக்ளஸ் நைட்டின் நூலை மொழிபெயர்த்தது, அரவிந்தனின் நினைவுகூரத்தக்க சாதனைகளில் ஒன்று. புதுமைப்பித்தனுக்கு இணையான ஒரு கலை சாதனையாளரை எனக்கு மறக்க இயலாமல் ஆக்கியதற்கு நான் அரவிந்தனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். 

000   

எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க காலவகையிலும் இடவகையிலும் தொலைவு தேவையாக உள்ளது என்ற சுந்தர ராமசாமியின் வாக்கியத்தைச் சொல்லி எனது உரையை நிறைவு செய்கிறேன். 19 வயதில் அறிமுகமான தளவாயுடன் அப்படித்தான் எனது உறவு கனிந்திருக்கிறது.

அரவிந்தனையும் அப்படிப் பார்க்க அனுமதித்த காலத்துக்கு சலாம். 

தேங்க் யூ அரவிந்தன். 

எனது கௌரவமான சென்னை வாழ்க்கையின் ஒரு அங்கம் நீங்கள். உங்களுக்கு எனது பிரியமும் அன்பும்.

இராப்பகல் இல்லாத இடத்தில் இருக்கும் வெண்ணிலா, அன்பு வெறுப்பு இரண்டுமற்ற இடத்தில் சுடரும் வெண்ணிலாதான் போல.

(டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நடத்திய அரவிந்தன் 60 நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட உரை)

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

வாக்குகள் சீட்டாக இருந்த காலம்

வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அல்லர். அவர் அமெரிக்கர், தொழில்நுட்ப ஜாம்பவான்- எலான் மஸ்க்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும்போதோ சீர்திருத்தும்போதோ உள்ளேயிருக்கும் ‘சிப்பு’களில் நிரல்களை ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக எழுதிவிடலாம் என்பது நாள்பட்ட குற்றச்சாட்டு. கொந்தல் சாத்தியங்கள் சமீபகாலங்களில் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இப்போது எலான் மஸ்கே சொல்லுகிறார்.

1982-இல் கேரளத்தின் பரவூர் இடைத் தேர்தலில் மெல்லப் புகுந்தது இந்த இயந்திரம். அன்று முதல் நாளது வரை இதைக் குறித்த ஐயங்களுக்குக் குறைவில்லை. விளக்கங்கள், உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள்- எவையும் நின்றபாடில்லை. இதற்கிடையே, இந்த இயந்திரம் படிப்படியாகக் கால் பரப்பி, புத்தாயிரமாண்டில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

நாம் அளிக்கிற வாக்குதான் இயந்திரத்தில் பதிவாகிறதா, பதிவாகிற வாக்குதான் எண்ணப்படுகிறதா என்று அறிந்துகொள்ள இந்த இயந்திரத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. தில்லுமுல்லு நடந்தால் கண்டறிய முடியாது. ஆகவே, வழக்காடவும் முடியாது. அதனால் இதைக் கறுப்புப் பெட்டி என்று அழைப்பவர் உண்டு. இதற்காக ஒரு காகிதச் சரிபார்ப்பு (Voter Verified Paper Audit Trial- VVPAT) முறை வந்தது. ஒருவர் வாக்களித்ததும் அது ஒரு காகிதத்தில் அச்சாகி கண்ணாடிச் சில்லின் வழி வாக்காளருக்கு ஒரு சில நொடிகள் காட்சி தரும். பிறகு அதை இயந்திரம் விழுங்கி விடும். இந்தக் காகித வாக்குகளை வாக்குச் சீட்டுகளாகக் கருதி அவற்றையே எண்ணலாம். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு இயந்திரத்தில் எத்தனை காகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதையாவது எண்ணலாம். அந்த எண்ணிக்கையை இயந்திரத்தில் பதிவாகியிருக்கிற  எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கலாம். 2016 மாநிலத் தேர்தல்களில் சில தொகுதிகளில் ஆணையம் இதைச் செய்து பார்த்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரேயொரு வாக்குச் சாவடியில் மட்டும் இந்தச் சோதனை நடந்தது. இந்த மாதிரியின் அளவு நிகழ்தகவு (propablity) சித்தாந்தத்தின்படி மிகக் குறைவு என்றனர் வல்லுநர்கள். ஆனால், ஆணையம் கேட்கவில்லை. பெரும் செலவில் வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட VVPATஆல் குறிப்பிடத்தக்க பலன் என்னவென்று தெரியவில்லை. ஆட்டம் தொடர்கிறது.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லாத ஒரு காலம் இருந்தது. வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்கிற வேறுபாடில்லாமல் எல்லா நாடுகளும் பயன்படுத்துகிற வாக்குச்சீட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டில் இருந்த காலம். அப்படியான காலத்தில், ஒரு தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் நான் தலைமை அலுவலராகப் பணியாற்றினேன். இந்த இயல் அதைப் பற்றியது.

ஆர்வெல்லின் ஆண்டில் நடந்த தேர்தல்

ஆண்டு: 1984. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. அக்டோபர் மாதம் இந்திரா காந்தி சுடப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு எஞ்சி இருந்தது. என்றாலும் ராஜீவ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி. அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தமிழகத்திலும் ஆட்சிக் காலம் ஓராண்டு இருந்தது. எம்.ஜி.ஆரும் ராஜீவை அடியொற்றி  சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. எதிரணியில் திமுக- ஜனதா -கம்யூனிஸ்ட் கூட்டணி.

நான் மதுரையில் ஓர் அரசுத் துறையில் பணியாற்றினேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தேன். அரசின் பழுப்புக் காகிதத்தில் நியமன ஆணை வந்தது. ‘145- சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அதனைச் சார்ந்த 24-மதுரை பாராளுமன்றத் தொகுதி, ஆகியவைகளுக்கு 24.12.1984-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு வாக்குச் சாவடியில் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.’  (விருப்பம் தெரிவிக்காத சிலருக்கும் ஆணை வந்தது, அது வேறு.) வாக்குச் சாவடி  விவரம் பிற்பாடு இன்னொரு ஆணை  வழியாக வந்தது- ’52- சாந்தி வித்யாலயா நடுநிலைப் பள்ளி, விளாங்குடி’. வாக்குச் சாவடி எண்ணும் தொகுதி எண்களும் முக்கியமானவை. காரணம் எனக்குப் பின்னால் தெரிய வரும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு தலைமை அலுவலர் தவிர ஐந்து அலுவலர்கள். எல்லோருக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பத்து நாட்கள் நகரின் மூன்று-நான்கு இடங்களில் சாவடி எண்களின் வரிசைப்படி வகுப்புகள் நடந்தன. எங்கள் வகுப்பு கே.கே.நகர், சுந்தரம் திரையரங்கில் (இப்போது ஜாஸ் அர்ஸ் சினிமாஸ்) நடந்தது. மதுரை நகரின் வட்டாட்சி அலுவலர்களில் ஒருவர் வகுப்பை நடத்தினார். ஓர் ஆவணப்படமும் திரையிட்டார்கள்.

ஐவர் அணி

எங்கள் அணியில் முதல் அலுவலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். இரண்டாமவர் வேளாண் பொறியியல் துறையில் வரைவாளர். மூன்றாமவர் பள்ளிக் கல்வித் துறையில் கணக்காளர். நான்காமவர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியர். ஐந்தாம் அலுவலர் வனத்துறையில் எழுத்தர். எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருந்தன. அவை சற்றுப் பின்னால் வரும். என்னைத் தவிர எல்லோரும் நடுத்தர வயதினராய் இருந்தனர். எல்லோரும் ஆண்கள். ஏனெனில், வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள். அதே பள்ளியில் பெண்கள் சாவடியும் இருந்தது. அதில் அலுவலர்களும் வாக்காளர்களும் பெண்கள்.

வாக்குப் பதிவிற்கு முன்பு

தேர்தலுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை. தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களைத் தலைமை அலுவலரிடம் கையளித்தார்கள். எம் சாவடிக்கான பொருட்கள் பாத்திமா கல்லூரியில் வழங்கப்பட்டது.  பொருட்களின் பட்டியல் பெரிது. அவற்றில் முக்கியமானவை:

-வாக்குப் பெட்டிகள், அவற்றைப் பொதிய கித்தான் பைகள், முறுக்கு நூல், மென் கம்பி, நாடா, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச் சீட்டுகளைத் தள்ளிவிட மரத் தள்ளுகோல்.

-அழியாத மை, நெகிழிக் குச்சி (மை தீட்ட), கந்தைத் துணி (வாக்காளரின் கைகளில் எண்ணெய்ப் பசை இருந்தால் துடைக்க).

-வாக்குச் சீட்டுப் புத்தகங்கள். இதில் அடிச்சீட்டும் இருக்கும். வாக்குச் சீட்டைக் கீழித்தெடுக்க இரும்புச் சட்டம்.

-தாள்கள், படியெடு தாள் (Carbon Paper), பேனா, குண்டூசி, பசை, பிளேடு, மையுறி தாள்.

-அலுவலர் அடையாள அட்டைகள், முகவர் அனுமதிச் சீட்டுகள்.

-வாக்குச் சீட்டில் குறியீடு செய்வதற்கான குறுக்கை அம்புக்குறியுள்ள ரப்பர் முத்திரை, எல்லா வாக்குச் சீட்டுகளின் பின்புறமும் பதிப்பதற்கான பிரித்தறி முத்திரை (இதில் வாக்குச் சாவடியின் எண்ணும் தொகுதி எண்ணும் இருக்கும்; எங்களது முத்திரைகள் சட்டமன்றத்திற்கு 52/145, நாடாளுமன்றத்திற்கு 52/24), மையொற்றுப் பெட்டகம் (ink pad).

-சுவரொட்டிகள்

-25க்கும் மேற்பட்ட படிவங்கள், உறைகள்

எனக்கு உதவியாக முதல் அலுவலரும் வந்தார். அவரிடம் ஸ்கூட்டர் இருந்தது. என்னிடம் சைக்கிள். இருவருமாக எல்லாப் பொருட்களையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

சாவடி அமைக்கப்பட்டிருந்த நடுநிலைப் பள்ளி ஒரு ஓட்டுக் கட்டடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. துப்புரவாக இருந்தது. இரண்டு வகுப்பறைகளை இணைத்து ஒரு வாக்குச் சாவடி ஆக்கி இருந்தார்கள். அலுவலர்களுக்கான மேசை- நாற்காலி, முகவர்களுக்கான இருக்கை எல்லாம் கிரமமாக இருந்தது. இரண்டு  வாக்களிப்பு மேசைகள். அவை சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று பக்கமும் கனமான வெள்ளை அட்டையால் மறைப்பு இருந்தது. பெண்கள் சாவடியிலும் இதே விதமான ஏற்பாடுகள். இந்த வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகளை வேறு அறைகளுக்கு மாற்றியிருந்தார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் முந்தின தினமே வந்து பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ததாக எங்களை வரவேற்பதற்காகக் காத்திருந்த பள்ளி ஆசிரியர் சொன்னார்.

பெண்கள் சாவடியின் தலைமை அலுவலருக்கு உதவியாக அவரது கணவர் வந்திருந்தார். இருவரும் பொருட்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். எங்கள் அணியின் முதல் அலுவலரும் விடைபெற்றுக் கொண்டார். அவர்களுக்கு வீட்டில் பிள்ளைகள் இருந்தார்கள், வேலைகள் இருந்தன. இப்போது இரண்டு சாவடிப் பொருட்களுக்கும் நான்தான் ராக்காவல். இரண்டு சாவடிக்கும் சேர்த்து ஒரு காவலர். முன்னாள் ராணுவ வீரர். அவரும் முந்தின நாள் வந்துவிட்டார். அவரது சீருடை விரைப்பாக இருந்தது. அதிலும் விரைப்பான சல்யூட் ஒன்றை எனக்கு வழங்கினார். அதை முறையாக அவருக்குத் திருப்பித் தர எனக்குத் தெரியவில்லை. காவலரும்  என்னுடன் பள்ளியில் தங்கினார். நான் ஒரு பயணப் பொதியில் மாற்று உடை, விரிப்பு, துண்டு, சோப்பு, சீப்பு முதலானவற்றை அடைத்துக்கொண்டு போயிருந்தேன். காலைக் கடன்களுக்கு என்ன செய்ய? பள்ளியில் ஒரு கழிவறை இருந்தது. பள்ளிக்கு அருகாமையில் ஒரு பொதுத் தண்ணீர்க் குழாய் இருந்தது. காலை ஆறு மணி முதல் தண்ணீர் வரும். பெண்கள் ஆறரை மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு முன்னர் குளித்துவிடுங்கள் என்று உள்ளூர்க்காரர் ஆலோசனை வழங்கினார். நாங்கள் அவ்விதமே செய்தோம்.

வாக்குச் சாவடி, தொகுதி முதலான விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும்,  பெரிதாக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மாதிரிச் சுவரொட்டிகளையும் சாவடிக்கு வெளியே ஒட்டினோம்.

சமயநல்லூர் சட்டமன்ற இடத்திற்கு அதிமுகவும் திமுகவும் மோதின. அதிமுகவின் சார்பாக ஏ.சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். திமுக வேட்பாளார் எஸ்.செல்வராஜ். பின்னாளில் கலைஞர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், அப்போதைய எம்.பி.யான ஏ.ஜி.சுப்பராமனுக்கு டிக்கெட் கொடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் வேட்பாளர், நிறைவாழ்வு வாழ்ந்து சமீபத்தில் விடை பெற்றுக்கொண்ட என்.சங்கரய்யா. நான்கு கட்சிகளின் முகவர்களும் வாக்குப் பதிவு தொடங்கும் முன்னரே வந்தனர். வாக்குப் பதிவு  அலுவர்களும் வந்தனர்.

எல்லா வாக்குச் சீட்டின் பின்னாலும் தலைமை அலுவலர் ஒப்பமிடவேண்டும். ஒரு புத்தகத்தில் 50 சீட்டுகள் இருக்கும். நான் நான்கு புத்தகங்களில் முன்னதாக ஒப்பமிட்டு வைத்தேன். வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை முகவர்களிடம் காட்டிய பிறகு அதை மூடித் தாழிட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்களை முகவர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள் குறித்துக்கொள்ளலாம்.

வாக்குப் பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்னரே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றனர். காவலர் வரிசையை ஒழுங்குபடுத்தினார். வாக்குப் பதிவு குறித்த நேரத்தில் தொடங்கியது. போலிசார் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தனர்.

அலுவலரின் பொறுப்புகள்

வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பது முதல் அலுவலரின் பணி. வாக்காளர் அடையாள அட்டை புழக்கத்தில் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வாக்காளர்கள் பொதுவாக கட்சிகள் வழங்கும் அலுவல் சார்பற்ற அடையாளச் சீட்டைக் கொண்டு வருவார்கள். அதில் வாக்காளரது பெயர், பட்டியலில் அவரது தொடர் எண், பகுதி எண், சாவடி எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டு இல்லாமலும் வரலாம். அவர்களிடம், பெயர், முகவரி விவரங்களைக் கேட்டறிந்து பட்டியலில் அவரது பெயரைக் கண்டறிய வேண்டும். பிறகு முதல் அலுவலர் வாக்காளரின் பெயரையும் மற்ற விவரங்களையும் உரத்த குரலில் அறிவிப்பார். முகவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அப்போது தலைமை அலுவலர் இடையிட்டு விசாரிக்க வேண்டும். தலைமை அலுவலர் மனநிறைவு கொண்டால் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதில் முகவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை அதற்கான படிவத்தில் பதிவு செய்யலாம். வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை வாக்காளர் ஏற்கவில்லையென்றால் அவர் பிறிதொரு படிவத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

வருகை தந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் முதல் அலுவலர் குறித்து வைக்க வேண்டும். வாக்குப் பதிவு முடியும் முன்பு மூன்று முறை தேர்தல் அதிகாரியின் பிரதிநிதிகள் இந்த விவரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அலைபேசியும் கணினியும் இணையமும் இல்லாத காலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும்போதே பதிவான வாக்குகளின் கணக்கை ஆணையம் அறிவித்தது.

இரண்டாம் அலுவலரின் பணி அடையாள மை இடுவது. அரை நிமிடம் மை அழியாமல் இருக்கிறதா என்பதையும் இவர் கவனித்துக்கொள்வார்.

மூன்றாம் அலுவலரிடம் சட்ட மன்ற வாக்குச் சீட்டு இருக்கும். முதல் அலுவலர் பெயரையும்  விவரங்களையும் அறிவிக்கும் போது, பகுதி எண்ணையும் தொடர் எண்ணையும் அடிச்சீட்டின் பின்புறம் குறித்து வைப்பார். அதில் வாக்காளரின் ஒப்பம் அல்லது பெருவிரல் ரேகையைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் முனையில் பிரித்தறி சின்னம் (52/145) பதிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை தொடர் எண்களின் வரிசைப்படி வழங்கினால் முகவர்கள் குறிப்பிட்ட வாக்காளர் பெறும் வாக்குச் சீட்டின் தொடர் எண்ணைக் கணிக்கக் கூடும். இதைத் தடுப்பதற்குப் பயிற்சியின்போது ஒரு தந்திரம் சொல்லித்  தந்தார்கள்.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுப் புத்தகங்களை தயாராக வைத்துக்கொண்டு சீட்டுகளை வரிசை மாறி வழங்க வேண்டும்.

நான்காம் அலுவலர் இதே பணிகளைச் செய்து நாடாளுமன்றச் சீட்டை வழங்குவார்.

ஐந்தாம் அலுவலரிடம்தான் வாக்குச் சீட்டில் பதிக்க வேண்டிய குறுக்கை முத்திரை இருக்கும். இவர் மேசையின் மீதுதான் வாக்குப் பெட்டிகளும் இருக்கும். இவர் இரண்டு வாக்குச் சீட்டுகளையும் வாங்கி பிரித்தறி சின்னம் வெளித்தெரியும் விதமாக நீள வாக்கிலும் குறுக்கிலும் மடிப்பார். பிறகு சட்டமன்ற வாக்குச் சீட்டைப் பிரித்து அதனையும் முத்திரையையும் வாக்காளரிடம் கொடுப்பார். வாக்காளர் வாக்களிக்கும் அறைக்குச் சென்று முத்திரையைப் பதித்து, பிறகு சீட்டை மடித்து அலுவலரின் முன்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். அடுத்து நாடாளுமன்ற சீட்டுக்கும் இதே நடைமுறைதான்.

வாக்குப் பதிவுக்குப் பின்

அன்றைய தினம் 800 வாக்குகளுக்கு மேல் பதிவாயின. குறித்த நேரத்தில் வாக்குப் பதிவும் முடிந்தது. வாக்குப் பெட்டியைப் பூட்டி அரக்கு வைக்க வேண்டும். முகவர்கள் விரும்பினால் அதில் அவர்களது முத்திரையைப் பதிக்கலாம். நான்கு முகவர்களும். பித்தளை முத்திரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். இளகி வரும் அரக்கின் சூடு ஆறுவதற்கு முன்பு தங்கள் முத்திரையைப்  பதித்தார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முகவர்கள் இந்த முத்திரைகளைப் பரிசோதிக்கலாம்.

அடுத்து ஒரு முக்கியமான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தச் சாவடிக்காக முந்தின நாள் நான் பெற்றுக்கொண்ட  வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், நீக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்கள் (இருந்தால்) இவ்ற்றை ஒரு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து பதிவான வாக்குகளின்  எண்ணிக்கையை கணக்கிட்டு அதையும் பதிய வேண்டும்.

இது வாக்குப் பெட்டியில் காணப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையாக இருக்கும். இந்தப் படிவத்தில் தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களுக்கு வழங்க வேண்டும். இதைப் பெற்றுக்கொண்டு முகவர்கள் விடை பெற்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது இதை சரிபார்க்கலாம்.

தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட படிவங்களை நிரப்பி அவற்றுக்கான உறையில் இட வேண்டும். எல்லாப் படிவங்களிலும், உறைகளிலும் தொகுதி எண்ணையும் சாவடி எண்ணையும்  நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கான மதிப்பூதியம் ரொக்கமாக என்னிடம் தரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டனர். இப்போது  வாக்குப் பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகள், ஏராளமான உறைகள், திருப்பி அளிக்க வேண்டிய வாக்குச் சாவடிப் பொருட்கள் எல்லாவற்றையும்  முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு இரண்டு சாவடிகளின் தலைமை அலுவலர்களும் ஒரு காவலரும் காத்திருந்தோம். உள்ளுர்க்காரர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இரவு 9 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் வந்து, எங்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் முறையாகப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றிரவு தல்லாகுளம் வைத்தியலிங்கா லாட்ஜூக்கு சைக்கிளில் திரும்பியபோது நகரமெங்கும் வீட்டிற்குள்ளும் வீதிகளிலும் தேர்தல் பேச்சாகவே இருந்தது. 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பற்றி தனது ‘India After Gandhi’ நூலில் ராமசாந்திர குஹா ஓர் இயலே எழுதியிருக்கிறார். 2,24,000 வாக்குச் சாவடிகள், 20 இலட்சம் வாக்குப் பெட்டிகள், 56,000 தலைமை அலுவர்கள், 2,80,000 துணை அலுவலர்கள், 2,24,000 போலிஸ் என்று பலர் இயங்கிய தேர்தல் அது. 1984 தேர்தலில் இன்னும் அதிகமான மனித வளம் பயன்பட்டிருக்கும். அதில் எனது பங்கு ஓர் அணிலைக்கால் குறைவாக இருக்கலாம். என்றாலும் நிறைவாக இருந்தது. வாக்கு இயந்திரம் வந்த பிற்பாடு அதைக் குறித்த சர்ச்சைகள் மேலெழும்போதெல்லாம் எனக்கு சமயநல்லூர் நினைவுக்கு வரும்

2024 தேர்தலில் பதிவான வாக்குகளை ஆணையம் பல நாட்கள் தாமதமாகத்தான் அறிவித்தது. அதுவும் தொகுதி வாரியாக அறிவிக்கவில்லை. கணினி இல்லாத காலத்திலேயே பதிவான வாக்குகளின் கணக்கை தொகுதி வாரியாக அடுத்த நாளே துல்லியமாக அறிவித்தது அந்நாளைய ஆணையம்.

Association of Democratic Return (ADR) என்கிற அமைப்பு, 2024 தேர்தலில், இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணப்பட்ட வாக்குகளையும் ஒப்பிட்டது. 543 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே இவை ஒத்துப் போயின. 362 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தன. மொத்தம் கூடுதல்: 5.5 லட்சம் வாக்குகள்! 176 தொகுதிகளில் குறைவாக இருந்தது. மொத்தம் குறைவு: 38,000 வாக்குகள். ADR வழக்குத் தொடுத்திருக்கிறது.

சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் கணக்கு அடங்கிய படிவத்தை இணையதளத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரியது ADR. ஆணையம் மறுத்துவிட்டது. காகிதச் சரிபார்ப்பும் (VVPAT) முறையாக நடப்பதில்லை. இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய உரையாடல் நடந்த வண்ணம் இருக்கிறது. இவையெல்லாம் இந்த இயந்திரத்தின் மீதும் ஆணையத்தின் மீதும் நமது நம்பிக்கையைக் குறைக்கிறது.

வாக்குச் சீட்டுகள் நம்பகமானவை. ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தலைமை அலுவலரின் ஒப்பம் இருக்கும். சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளைத் தொடர் எண்களோடு சோதிக்கலாம். வாக்காளர் அளிக்கிற வாக்குதான் எண்ணப்படுகிறது என்பதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளலாம். உலகின் பல ஜனநாயகங்கள் இன்றளவும் வாக்குச் சீட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. நாம் வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்புகிற காலம் வரும். இந்த ஐயங்கள் அப்போது இல்லாமலாகும்.

(அனுபவம் தொடரும்)

[email protected]

The post காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

நினைவுகள் நெய்திடும் மௌனம் : சியாம்

31 May 2025 at 18:38
June 01, 2025 ஆனந்தி நினைவுகளில் கூட நிச்சயமின்மையின் சாயல் படிந்தவளாகவே இருக்கிறாள். நினைவுகளில் ஆனந்தியும் பிறரும் மௌனம் பூணுகிறார்கள். அவர்கள் மௌனம் பூணும் இடங்களை ஆனந்தி மொழிபெயர்த்துவிட்டால் அவளது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? நிச்சயமின்மையிலிருந்து மௌனமும், மௌனத்திலிருந்து நிச்சயமின்மையும் சதா பிறந்துகொண்டே இருக்கிறதா?

மானுட பேரவலத்தைப் பேசும் அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம் -பேரா. சு. செல்வகுமாரன் 

வீட்டின் முன்பக்க அறையில் இருந்த
அப்பாவின் ஈசிச் செயர்
பின்பக்க அறையில் கிடந்தது

மானுட பேரவலத்தைப் பேசும்
அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம்

பேரா. சு. செல்வகுமாரன்,
மாநிலக்கல்லூரி
[email protected]

சமகாலத் தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கியமானது பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது. நாள்தோறும் விதவிதமான கருத்தாக்கங்களை, சிந்தனை முறைகளை, வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் புதிய படைப்பாக்கங்கள் கவிதை, கதை, புதினம் என வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் படைப்பாக்கத் தன்மையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், இவற்றின் வரவு தமிழின் மொழி, இலக்கியம், பண்பாட்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதான வளர்ச்சி நிலையினை உடையதாகவே பார்க்க முடிகிறது.

அந்த வகையில் அ.சங்காியால் எழுதப்பட்டுள்ள ‘வருக்கெச்சக்கெ’ புதினம் தமிழகத்தின் தென் எல்லையான குமரி மாவட்டத்தின் மேற்குப்புறம் சார்ந்த நிலவியல் சூழலில் ஒரு இந்து நாடார் சமூகக் குடும்பத்தின் வாழ்வியலை அறிமுகம் செய்வதின் வழி  தன் பயணித்தலின் வெற்றியைக் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

“பத்மா” எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பேசப்படும் இந்தப் புதினத்தில் பத்மாவினுடைய தந்தையாகச் செல்லையாவும், தாயாக அன்னலட்சுமியும் விளங்குகின்றனர். பத்மாவின் சகோதரிகளாக ரோசாவும், ஷீலாவும், அண்ணனாக சிதம்பரமும், தங்கைகளாக மாலாவும், லலிதாவும் குடும்பம் சார்ந்த கதாப்பாத்திரங்களாக இயங்குகின்றனர். இத்தோடு முதன்மைப் பாத்திரமான பத்மாவின் உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் என கதையினை யதார்த்தமாக நகர்த்திச் செல்கின்ற பல துணைமைப் பாத்திரங்களோடும் புதினம் இயங்குகின்றது.

       இந்தப் புதினத்தைப் பொறுத்தமட்டில் வெறுமனே ஒரு புனைவாக்கம் என்று சொல்வதைவிட, வட்டார எழுத்துமுறை சார்ந்த அல்லது இனவரைவியல் எழுத்து முறை சார்ந்த அல்லது சுயகதை சொல்லல் முறை சார்ந்த ஒரு புதினம் என்று சொல்வதற்கான அடிப்படைப் பண்புகளை இது பெரிதும் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். மானுட வாழ்வில் ஒவ்வொருவரின் வாழ்வும் அல்லது அந்த ஒவ்வொருவரின் வாழ்வின் பின்னணியாக இயங்குகின்ற குடும்பமும் வேறுபட்ட சூழல்களால் கட்டமைவதனைக் காணலாம். அந்த வகையில் வருக்கெச் சக்கெ புதினத்தின் முதன்மைப் பாத்திரமான பத்மாவின் குடும்பப் பின்னணி அவளது தந்தை வழி தாத்தாவான பொன்னு பூ என்பவரால் இனம் காட்டப்படுகிறது. தனது தாத்தாவைப் பற்றிப் பத்மா சொல்கிற போது,

“பொன்னு பூ, அப்பாவோட அப்பா பெயர். அவர் அந்த ஊர் குட்டி ராஜா மாதிரி. இவரு தன்னோட பெரிய பொண்ணுக்குச் சம்மந்தம் பண்ணினது ஒரு பண்ணையார் என்கிறதுக்காக சாரட்டு வர, மேலெ வெளெயிலேருந்து கீழெ வெளெவர ஆறடி ரோடு வெட்ட அந்த சித்திரைத் திருநாள் மகாராஜா அனுமதி வாங்கி செஞ்சிருக்காரு.

பெரிய பொண்ணுக்கு சாரட்டுன்னா, இரண்டாவது பொண்ணுக்கு பிளசர் கார் வந்திருக்கு. மூணாவது பொண்ணு கலியாணத்துக்கு பிளசர் கார்களே அணிவகுத்திச்சாம். இப்படி மூணு பொண்ணுகளையும் மூணு பணக்கார மாப்பிள்ளைங்களுக்கு கட்டிக் குடுத்தவரு” (ப-5) 

என்பதாக அவரது வளமை பேசப்படுகிறது. இத்தகையதொரு பொருளாதாரப் பின்னணி இருந்திருந்தாலும் அவர் செய்த ஆடம்பரச் செலவுகள் அவரைப் பெரும் கடன்காரனாக்கிக் குடும்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. இச்சூழலில் பொன்னு பூ மனம் தளர்ந்து இறந்து போகிறார். அவரது அஸ்தியினை வணங்க தலைகுனிந்த அவரது மனைவியும் அஸ்தியிலே விழுந்து இறந்துபோகிறார். இந்நிலையிலிருந்து பத்மாவின் தந்தை செல்லையாவின் பயணம் புதிதாய்த் தொடங்குகிறது. என்றாலும் பத்மாவின் தந்தை செல்லையாவின் தொடக்ககாலம் வளமையானதாக இருந்திருந்ததால் கல்வி, வர்மம், சோதிடம், சிலம்பம் என்பவற்றோடு தமிழ், ஆங்கில மொழிப்புலமையும், நேர்மை நியாயத்தைத் தன்னகத்தே கொண்ட தனித்துவமான ஒருவராகவே புதினம் அவரைப் பெரிதும் இனம் காட்டுகின்றது.

ஆக பத்மாவின் பாரம்பரியமானது பொருளாதாரம், சமூகமதிப்பு என்பதான உயர் குடும்பத் தன்மையுடைய பின்னணியைக் கொண்டிருந்தாலும் முதல் தலைமுறையின் வாழ்வு தளர்ச்சியிலேயே முடிவுறுகிறது. அந்தக் கண்ணியில் இருந்து உருவாகும் செல்லையா, தான் விரும்பிய அன்னலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இருவரின் கூட்டு உழைப்பினாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பினாலும் தலை நிமிர்கிறது. எனினும் செல்லையா குறித்த பல பதிவுகள் அவரை ஒரு மகோன்னதமானவராய்த்தான் இனம் காட்டுகின்றன. அறவழி நடத்தல், பக்தி, தேசபக்தி, வாசிப்பு, பிறருக்கு வழிகாட்டுதல், துயரங்களை எதிர்கொண்டு விடுதலை நோக்கிப் பயணித்தல் என அவை புதினமெங்கும் நீட்சி அடைகின்றது. 

தனது நிலம் சார்ந்த கடும் உழைப்பு, வியாபாரங்கள், சிறந்த குணங்களெனப் பலவற்றாலும் உயர்ந்த செல்லையாவின் குடும்பவாழ்வும் பின்னாளில் சக மனிதர்களின் கெடுசெயல்களாலும், அன்றைய அரசு கொண்டுவந்த பட்டணம் கால்வாய்த் திட்டம் அவரது தோப்பின் வழியாக வந்ததன் விளைவாகவும் பேரிழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. தொடர்ந்து தனது முதல் இரண்டு பெண் மக்களின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திட அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், திருமணத்திற்குப் பிறகு தனது மகன் கேளாதார் பேச்சைக் கேட்டு தனிக் குடும்பமாக மாறிக்கொள்வதாலும் குடும்பம் பொருளாதாரம், மன அமைதியின்மையினால் தளர்ச்சியுறுகிறது.

புதினம் பொது வாழ்வியல் சார்ந்து பேசினாலும் குறிப்பாகக் குமரி மாவட்ட இந்து நாடார் சமூகம் சார்ந்த வாழ்க்கை வட்டச் சடங்குகளையும், அவர்களின்  நிலம் சார்ந்த கடின உழைப்பையும், பனை உணவுசார் தொழில்நுட்பங்களையும் அதற்குப் பரிசாக, மண்சார் விளைச்சல்களை வாரி வழங்கும் இயற்கை அன்னையின் செயல்பாடுகளையும் புதினம் காட்சிப்படுத்துகிறது. வகை வகையான கிழங்குகள், காய்கறி வகைகள், மா,  பலா, வாழை எனப் பழவகைகள், செடி கொடிகள், மரங்கள், முயல், ஆடு, மாடு, கோழி என விலங்குகள்  பறவைகள் குறித்த சித்திரிப்புகள் மிகப் பிரமாண்டமாகப் புதினத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. காச்சில் கிழங்கின் விளைச்சலைப் பற்றிப் பதிவு செய்கிறபோது,

“அந்தக் காச்சில் கிழங்கு வள்ளியெல்லாம் பட்டுப் போயிருந்துச்சு அதெ மொதல்லெ பிச்சாக்கத்தியாலெ அறுத்து பெறகு மூடு இருக்கிற எடத்திலே நாலு பக்கமா பிக்காசியாலெ வெட்டி மண்ணெ கையாலே வாரி பக்காவாட்லெ போட்டான். பெறவு கொஞ்சம் கொஞ்சமா வெட்டுகத்தியாலே மண்ணெக் குத்தி வார வார பெரிய பண்ணிக் குட்டியாட்டும் அந்தக் கெழங்கு ஒண்ணரையடி ஆழமா பருத்து இருந்துச்சி. அவ்வளவு பெரிய கெழங்கப் பார்த்ததும் கொச்சப்பாவு அசந்து போய் இங்க வாங்க வந்து பாருங்கள் என்று ஆச்சரியத்தோடு கத்தினான். அப்பாவும் மகளும் ஓடிப்போய் பார்த்து அடேயெங்கப்ப எவ்வளவு பெரிசு? வாயெப் பெளந்தாள் பத்மா.

சின்னதா ஒரு கெழங்கு நட்டதா இவ்வளவு பெரிசா வளந்திருக்கு? என்று ஆச்சரியப்பட்டு நின்றாள்.” (பக் -187-188)

மேலும், முதலாளி, தொழிலாளிகளிடையே காணப்படும் வேறுபாடற்ற சமத்துவ நடைமுறைகளையும் பனையேறும் தொழில் செய்யும் பாலையா, தோட்ட வேலை செய்யும் கொச்சப்பாவு கதாபாத்திரங்கள் போன்ற நமக்கு புலப்படுத்துவனாக உள்ளன. இவை குமரி மாவட்டத்துக்கான தனித்தன்மையாகக் கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தச் சமத்துவத்திற்கு அய்யா வைகுண்டசாமியின் செயல்பாடுகளின் தாக்கமும் ஒரு காரணமாகலாம்.

மேலும், ஈத்தவிளை அம்மாவி அதாவது அத்தை, அம்மும்மு அதாவது பாட்டி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் வழி உறவின் ஆழங்களும் ஆங்காங்கே இனங்காட்டப்பட்டுள்ளன. ஓரிடத்தில் பாட்டியைப் பற்றி குறிப்பிடுகிற போது,

“இந்த அம்மும்மெ கொணத்தெ அம்மாகிட்டப் பார்க்கலாம். இருக்கிறதெ வச்சு வாழுற கொணம், தன்னாலெ முடிஞ்சவரெ உழச்சு சந்தோஷமா, அன்பா அரவணச்சு குடும்பத்தெக் கொண்டு போறதுன்னு அடிக்கிக்கிட்டே போகலாம்.” (ப-218)

ரோசா அக்காவின் திருமணத்தில் மாப்பிள்ளையின் உயரம், நிறம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும், இன்ன பிற நிகழ்வுகளின் வாயிலாகவும் பெண் மனம் சார் உளவியலைப் பத்மாவின் மூலமாக அ.சங்கரி முன்னெடுத்தள்ளமையும் கவனத்திற்குரியது. ஒரு முறை  அடுத்த வீட்டில் வசித்து வந்த முண்டத்தா மூத்தம்மெ இறந்த போது பத்மாவோ அவளது சகோதரிகளோ மூத்தம்மையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அது அந்தக் காலகட்டத்தின் சூழல். அதனைப் பத்மா மூலமாக உரையாடல் செய்யும் அ.சங்கரி,

“இரண்டு வீடுகளுக்கு நடுவே ஒரு சுவருதேன். அவுங்க தொழுவத்திலேருந்து கூப்பிட்டா கேட்கும் தூரம். நம்ம தொழுவத்திலே நிக்கிறவங்களெப் பார்க்கவும் முடியும். இப்படியாப்பட்ட நெருக்கமுள்ள மூத்தம்மே இப்ப இல்லெ. இனிமேலே பார்க்கவே முடியாது. இல்லக்கா. நமக்கு கடைசியா பார்க்கக்கூட முடியில்லெ. என்ன துர்பாக்கியம். ஒரே சுவருக்கப்புறம் போக முடியா சூழல்ல இருக்கிறோமே அக்கா. நம்ம மூத்தம்மெ இப்படி வேகமா போயிடுச்சேணு கண்ணீர் சிந்த அக்காவிட்டெ சொல்லி அழுதாள், பத்மா. ரோசா அவ ஆதங்கத்தெச் சொல்லத் தொடங்கினா.” (ப -270)

என்பதாக அந்தக் காலகட்டத்தில் பெண் சமூகத்தைப் பற்றிக்கிடந்த புற இருளினை, அவலத்தைப் புதினம் அடையாளப்படுத்துகின்றது

 இப்படியாக வெவ்வேறு தளத்திலிருந்து வேறுபட்ட பல விஷயங்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டாலும் அந்தக் குடும்பத்தில் பத்மாவின் தொடர் ஓட்டம் கல்வியில் தீவிரக் கவனம் செலுத்திப் பயணிப்பதாக இருக்கிறது. காதல், திருமணப் பேச்சுகள், குடும்பச் சிக்கல்கள், கல்வி நிறுவனங்களின் தொலைவு போன்ற எல்லா விதமான தடைகளையும் தாண்டி பத்தாம் வகுப்பினை முடித்து, பிரீ டிகிரியினையும் முடித்து மாநிலம் கடந்து திருவனந்தபுரம் சென்று முதுகலைத் தமிழ் பயின்றதோடு அங்கேயே முனைவர் பட்டம் வரையிலுமாக படித்துக் கல்லூரிப் பேராசிரியராக உயரும் நிலையினைக் காணமுடிகிறது. இது நாடார் சமூகப் பெண் ஒருவரின் தனித்த அல்லது ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் வளர்ச்சிக்குக் கல்வியின் அவசியம் அடையாளம் காட்டப்படுவதாக உள்ளது. குறிப்பாக இது பொதுவான மைய நீரோட்டங்களில் ஒன்றாகப் பார்க்கத்தக்கது. மேலும் பத்மாவின் அப்பாவும், ஊர் மக்களும் சாதி, மதம், காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பாளர்களாக விளங்கினாலும் கல்வியின் வழி உயர்நிலை அடைந்த பத்மாவால் தான் கற்ற கல்வி மற்றும் அணுகுமுறையால் இன்னொரு மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசனைக் காதலித்து அம்மா அப்பாவின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டதென்பதும் ஒரு பெண்ணின் பயணித்தலின் வெற்றியாகக் கொள்ளத்தக்கது. 

பல்வேறு விஷயங்களை இந்தப் புதினம் பேசியிருந்தாலும் மனைவி, மக்கள் என ஒரு ஆலமரமாய், ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்த செல்லையா குடும்பத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முதல் மூன்று பெண்மக்கள் திருமணமாகி வெளியே சென்று விடுகிறார்கள். ஆண்மகனும் திருமணமாகித் தன் மனைவி மக்கள் எனத் தனிக் குடித்தனம் அமைத்துக் கொள்கிறான். அடுத்த திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பத்மா கல்வியையும் காதலையும் கைக்கொண்டபடி திருச்சி வயலூரில் வேலை பாா்த்தபடி தன் அறவழிப் பயணத்தை மேற்கொள்கிறாள். கடைசி மகள் லலிதாவின் திருமணம் பத்மாவின் தனித்த கவனிப்பு இருந்தாலும் “ஏழையாய்ப் பிறந்தாலும் இளையவராய்ப் பிறக்கக்கூடாது” என்பதற்கேற்ப சூழல்கள் அமைகிறது.

மீதமிருந்த சொத்துக்களில் முதன்மையானவை மருமகளின் தூண்டுதலாலும், செல்லையாவின் நேர்கொண்ட அறவழிப் பயணித்தலாலும் மகன் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.

“எல்லா சொத்துக்களையும் உயில் எழுதி வைத்துவிட்டு வந்து கையிலிருந்த பொம்மையைப் பறிகொடுத்த குழந்தை மாதிரி கண்ணில் நீர்நிறைந்து நின்றதை மனைவியும் மகளும் பார்த்தனர்.” (ப -377)

ஆக, வீட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கைக்கொண்டு திரிந்த தந்தை, தாயின் அதிகாரம் பிடுங்கப்பட்டுக் காற்றில்லாத பலூனைப் போலச் சமூக மதிப்பற்ற மனிதர்களாக மாற்றப்படுகின்றனர். எத்தனை வேலைகள் இருந்தாலும் மகிழ்ச்சியால் பூ மரமாய் பூத்திருந்தவீடு வெறுமனே கட்டைச் சுவர்களாக மகிழ்வற்ற நிலையில் பொலிவிழந்து போகிறது. இந்தப் பேரவலத்தை நூலாசிரியா் அ.சங்கரி இனம் காட்டும் இடங்கள் முக்கியமானவையாகும்.

“வீட்டின் முன்பக்கம் இருந்த அப்பாவின் ஈசிச்செயர் பின்பக்க அறையில் கிடந்தது” (ப-367) 

இப்படியாக ஒடுக்கப்பட்டு அல்லது புறம்தள்ளப்பட்டு விளிம்புநிலைக்குள்ளான தந்தையின் அவஸ்தையைப் புதினம் முதன்மைப்படுத்திப் பேசியிருக்கிறது. இது பல வீடுகளில் இன்று நடப்பதாக இருந்தாலும் படைப்பு வழி அதிகம் பேசப்படாத ஒன்று என்ற நிலையிலும் இந்தப் புதினம் கவனத்திற்குரியதாகிறது. மேலும் தந்தையின் மீதான கரிசனம் மிக்க ஒரு படைப்பாகப் புதினம் காட்டப்பட்டாலும், தந்தை செல்லையாவும் இறந்து போக வீட்டில் கணவன் தன் பெயரில் உயில் எழுதி வைத்திருந்த 27 சென்ட் நிலத்தோடும் வீட்டோடும் அம்மா குடியிருக்க வேண்டிய அவலமும் உணர்த்தப்படுகிறது.

“மனித வாழ்வில் அடிமேல் அடி விழுந்தாலும் தாங்கிக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம். எதையும் எளிதாகக் கடந்து போனாலும் உள்ளுக்குள் ஏற்படும் காயங்கள் ஆழமானவை” (ப-374)

இங்குப் புதிது புதிதாய்ப் பரிணமிக்கும் புதிய தலைமுறைகளின் உருவாக்கத்தில் பல தாய் தந்தையர்கள் உணர்வுகளால் சாகடிக்கப்படுவதையும், கால ஓட்டத்தில் வாழ்வு ஒவ்வொருவரையும் அதன் விருப்பிற்கேற்பத் தூக்கி வீசுவதில் மனிதன் ஒன்றுமில்லாதவனாக ஆகிப்போவதையும் ஒருவித கழிவிரக்கத் தன்மையோடு அ.சங்கரி புதினத்தில் தன் எழுத்துக்களின் மூலம் பதிவு செய்திருக்கின்றார்.

சோலை சுந்தரப்பெருமாள் புதினத்தின் வழி கற்றல் குறைபாடுகளும் தீர்வுகளும் – மு.நளினி

சோலை சுந்தரப்பெருமாள் புதினத்தின் வழி கற்றல் குறைபாடுகளும் தீர்வுகளும்

முனைவர் மு.நளினி

இணைப்பேராசிரியர் &
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஐ.வி.இ.டி.கல்லூரி,
கௌரிவாக்கம், சென்னை-73
கைப்பேசி- 9940203960
மின்னஞ்சல்- [email protected]

மனிதநேயம் போற்றுதல், மனித உரிமைகளை மதித்தல்  போன்ற விழுமியப் பண்புகள் கற்றறிந்த சான்றோர்களிடையே முன்னெடுக்கப்படும் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களைச் சமுதாய  மைய நீரோட்டத்தில் இணைக்கும் சமூகச் செயல்பாடுகள் பரவலாக நிகழ்வதைக்  கண்ணுற முடிகிறது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சாதிமதபேதத் தகர்ப்பு போன்ற கொள்கைகள் நடைமுறை வாழ்வில் மேலோங்கி வருவதையும்,  மேலோங்க வேண்டிய இலக்கினையும்  கவனமாக ஆவணப்படுத்தும் எழுத்தாளர்களிடையே சோலை சுந்தரப்பெருமாள் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார்.  தஞ்சைக் கீழ வெண்மணி கோர நிகழ்வை ஒடுக்கப்பட்டோர் நிலையிலிருந்து பதிவு செய்யும் செந்நெல்(1990) வேளாண் உற்பத்தித் தொழிலாளர்களின் வறிய, போராட்ட வாழ்க்கையை தப்பாட்டம்(2002), மரக்கால்(2007) போன்ற  புதினங்களில் பதிவு செய்துள்ளார்.

சோலையாருடைய எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பிற நூல்களும் வண்டல்  மண் சார்ந்த மக்களின் அகவாழ்வையும் புற வாழ்வையும் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன.

வண்டல் மண் படைப்பாளர்களின் கதைகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். ‘தஞ்சை  வட்டாரத்தை வண்டல்மண் வட்டாரம் எனக்கொண்டு இலக்கியங்கள் ஆக்கம் பெற வேண்டும் எனத் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் நினைத்தார். அதன்படி 1993 – இல் வெளியிட்ட ஓர் சிறுகதைத் தொகுப்பிற்கு வண்டல் சிறுகதை எனப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து 1999- இல் தஞ்சை கதைக் களஞ்சியம் 2001- இல் தஞ்சை சிறுகதைகள் என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார்.’ (தி. நடராஜன், நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023:16).  

இச்செயல்பாடுகளினூடே மைய நீரோட்டத்தில் இணைய முற்படும் விளிம்பு நிலைமக்களில்  உடல் குறைபாடு, மனநலக் குறைபாடு உடைய மாந்தர்களின் எதார்த்த வாழ்க்கையையும் இலட்சிய வாழ்க்கையையும் புனைவாகப் படைத்து அளித்துள்ளார். அவ்வகையில் சோலையாரின்  ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ என்ற புதினம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் முதல் பதிப்பாக 1990 -இலும், நான்காம் பதிப்பாக 2015 -இலும் வெளிவந்துள்ளது.

இப்புதினத்தின்   தலைமைப்பாத்திரமான அப்புனு மனவளர்ச்சி குன்றியவனாகக்  காணப்படுகிறான். அப்புனுவின் குழந்தைப் பருவம் முதல் இளமைப்பருவம், வளரிளம்பருவம் வரையிலான நிகழ்வுகள் புதினத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மூலம் அப்புனுவின் மன வளர்ச்சிக் குறைபாடுகள்  எதிர்கொள்ளப்படும் சூழல்களும் அவற்றுக்குக் காணப்படும் தீர்வுகளும் புதினத்தில் பல இடங்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. பொதுவான உளவியல் அடிப்படையிலும் கல்விஉளவியல் அடிப்படையிலும், இச்சிக்கலைச் சமூகத்தினர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. இதனைக் குறிப்பாக உணர்த்தும் வகையில் பிற பாத்திரங்களும் படைத்துக்காட்டப்பட்டுள்ளன.  

ஆசிரியர் தேர்ந்தெடுத்த செவத்தி ஓர் உயிருள்ள படைப்பு. மனநிலை பாதிக்கப்பட்ட அப்புனுவின் வாழ்வில் அபூர்வ மலர்ச்சி தரும் செவத்தி என்ற பெண்ணின் கதை இது. அதே சமயம் அபூர்வ கனவுகளை வரித்துக் கொண்ட மருதாயி என்ற இன்னொரு பெண்ணின் கனவுகள் உடைந்து சிதறும் கதையும் இதுவே.

வாழ்வின் உயரங்களை எட்ட வேறுவழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. அவர்கள் நிலையில் வாழ்வின் உயரத்தில் நின்று வழிகாட்டுகின்ற மன அழுக்கற்ற ஓர் உயர்ந்த மனிதனின் (ராஜாமணியின்) கதையும் இதுவே.

பிள்ளைப் பாசத்திற்காகச் சாதியக் ‘கட்டுமானங்கள் தளர்வதை ஏற்றுக் கொள்ளும் சின்னசாமி ஒரு புறம். சாதிய, சொத்துடைமை அழுக்குகளில் பெற்றோரை. சகோதரனை, புறக்கணிக்கும் ஈரமற்ற சிவராமன் இன்னொருபுறம்.

இப்படி எதிர் எதிர் நிலைகளின் சந்திப்பை, மோதலை, வெற்றி தோல்விகளைச் சித்திரிப்பது உயிர் இலக்கியம் என்று ஏற்கிறார் புதுக்கோட்டை பாலா தன் மதிப்பீட்டில் (உ.ம.கு. பக்.4).

சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய எதிர்நிலைகளின் சித்திரத்தைப் படைத்துக்காட்டுவதோடு இப்பாத்திரங்களுக்கிடையே ‘அப்புனு’ ஊடாடி உறவாடுவதையும் மறுதலிக்கப்படுவதையும் புனைந்து காட்டுகிறார்.

செல்லப் பெயரிட்டு வழங்குதல்

மயக்குறு மக்களைப் பெறுதலே மிகச்சிறந்த பேறாக, படைப்புப் பலபடைத்து….(188). என்ற புறப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி பாடியுள்ளான்.

அப்புனுவுக்கு பெற்றோர் இயற்பெயராக ஏதேனும் வைத்திருக்கக்கூடும் ஆயினும் அப்பெயரால் அழைக்காமல் அவனைச் செல்லமாக அப்புனு என்று அழைத்ததே வீடுமுதல் பள்ளிவரை எல்லா இடங்களிலும் பதிவாகியுள்ளது. இதுவே இவன்மேல் பெற்றோர் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்துகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அடிப்படையில் அவர்கள் இன்னவகையான குறைபாடு உடையவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. டிஸ்லெக்ஸியா, டிஸ்ப்ராக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்கிராபியா, ஆடிட்டரி பிராசசிங் கோளாறு, காட்சி செயலாக்கக் கோளாறு, சொற்கள் அல்லாத கற்றல் கோளாறு, பேச்சின் அப்ராக்ஸியா என குறைபாடுகள் பற்றிக் கல்வி உளவியலாரும் மருத்துவரும் விளக்குகின்றனர்.

இவைபற்றிய தெளிவு அப்புனுவின் பெற்றோருக்கு இல்லையென்றாலும்  அவன்பால் கொண்ட நேசத்தால் எப்படியாவது அவனை முன்னேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆசிரியர்களிடம் பாடம் கேட்கச் சேர்த்துவிடுகின்றனர்.

அறிவுமலர்ச்சிக்குப் பாலுணர்ச்சி நிறைவேற்றம் காரணமா?

‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ புதினத்தின்  அப்புனு மனவளர்ச்சி பெறாதவன். உடல் வளர்ச்சி பெற்றவன்.

“வாழ்வின் அபூர்வ க்ஷணங்களினால் செதுக்கப்பட்டு மனிதன் சீர்மை பெறுகிறான். சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய தருணங்களை இந்தப் புதினத்தில் செதுக்கிக் காட்டுகிறார். மனவளர்ச்சி பெறாது உடல் வளர்ச்சி பெற்றுள்ள அப்புனுவின் வாழ்வில் செவத்தி நுழைவது அத்தகையதொரு அபூர்வ தருணம்.  அவனுடைய பாலுணர்ச்சிக்கு செவத்தி வடிகாலாகிறாள். இதன் மூலம் வளர்ச்சி குன்றிய அவனுடைய அறிவு மலர்ச்சி பெறுகிறது. அவன்  முழுமனிதன் ஆகிறான். பாலுணர்ச்சி ஆசை நிறைவேற்றத்தில் அப்புனு என்ற வளர்ந்த குழந்தை ஆரோக்கிய மனிதன் ஆகிறான் என்ற செய்தியில் அறிவியல் பலம் மட்டுமல்ல: கிராமத்தின் பாரம்பரிய நம்பிக்கையையும் காண்கிறோம். “

என்ற புதுக்கோட்டை பாலாவின் அணிந்துரைக் குறிப்பு பாலியல் சார்ந்த உளவியலின் சான்றாதாரங்களைக் கோருவதாக உள்ளது.

மருதாயி மஞ்சள்நீராட்டுவிழாவில் பாடல் ஒலித்தது.                  

‘மாங்குயிலே! பூங்குயிலே! சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்… (உ.ம.கு, பக்.75)

என்று ஒலி பெருக்கி ஒலிக்க அதற்கேற்ப அபிநயங்களுடன் ஆடிக்கொண்டு வந்த அப்புனு

‘யேய்! மருதைக்கு ‘கண்ணாலம் கண்ணாலம்’ என்று சொல்லியபடி மருதாயியை இழுத்துக் கொண்டு பந்தலுக்கு வந்தான்’. அப்புனுவுக்கு அகவாழ்க்கை சார்ந்த மகிழ்ச்சியான புரிதலும் அறிவும் உள்ளதை இந்நிகழ்வால் அறியலாம்.

அப்புனு தானே தன் தலையைச் சீவிக் கொள்வதும், சட்டையணிந்து கொள்வதும், பெண்களைக் கண்டால் வெட்கம் கொள்வதுங்கண்டு ‘தங்கத்தின் முகத்தில் பொலிவு கூடியது’ என்ற பதிவாலும் இக்கூற்றை உறுதிசெய்துகொள்ளலாம் (உ.ம.கு, பக்.114-115)

 மனநலம் குன்றியவருக்கும் பாலியல் வேட்கை இயல்பானது.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.
(தொல்.1169)

என்ற தொல்காப்பியர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது.

அடிப்படை அறஉணர்வு வேண்டும்

மனித பலவீனங்களைத் தனக்குச் சாதகமாக்கி, உல்லாசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பிறவிகளை நினைத்து நூலாசிரியர் கொதிப்படையும் தன்மை நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. இவ்வகையில், இப்புதினத்தில் வரும் வாஞ்சியூரான் வேளாண் மக்களிடம் அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரன். அடிப்படை அறஉணர்வு இல்லாதவன் அப்புனுவின் மருத்துவச்செலவுக்காக அவன் தந்தை சின்னச்சாமி வாஞ்சியூரானிடம் கடன்பெற்று மிகவும் அவமானப் படுத்தப்படுவதும் பின் தன் கடின உழைப்பால் பணத்தைத் திரும்பக் கொடுப்பதும் விளக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற துயரமான சூழல் இன்றைய நடைமுறையில் மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு இல்லை. மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு கல்வி, உடற்பயிற்ச்சி, மருத்துவ சிகிச்சை, தொழிற்பயிற்சி அளிப்பதோடு வேலைவாய்பிற்குரிய ஏற்பாடு என அனைத்தையும் உண்டு உரைவிட நிறுவனமாக National institute of empowerment of persons with multiple disabilities – முட்டுக்காடு, தமிழ்நாடு போன்ற நடுவணரசின் நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு மாற்றுத் திறமாளிகள் நல இயக்குநரகம், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்,  மாநில அரசின் நிறுவனங்களும்  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் உயர்வையும் மேம்பாட்டையும் வழங்கி அவர்களை நன்மதிப்பிற்குரிய குடிமக்களாக்கி, சமுதாய மைய நீரோட்டத்தில் இணைக்கின்றன.

ஒற்றுமை உணர்வு வேண்டும்

 மேலும் சாதியுணர்வு மாறவேண்டும் என்ற சிந்தனையைச் சிவராமன் போன்ற சில கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அப்புனுவின் அண்ணன் சிவராமனின்  வெறுப்புணர்வு, கோபம், அக்கறையின்மை போன்ற அணுகுமுறையால் மனவருத்தத்தை ஏற்படுத்துவதோடு, அடித்து துன்புறுத்தி உடல் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறான்.

பண்ணையாள் ஐயாவு வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குச் சென்று விருந்துண்டு வந்ததால் அப்புனுவையும் தாயையும் சிவராமன் திட்டி அடித்து துன்புறுத்தும் காட்சி, சாதி உணர்வையும் ஏற்றதாழ்வு உணர்வையும் வெளிப்படுத்துகிறது, ஆனால் உடல் உழைப்பின் அருமைப்பாட்டை உணர்ந்த அப்புனுவின் பெற்றோர் ஐயாவு வீட்டாரை வேறாக எண்ணவில்லை.

பொதுவாக மாற்றுத்திறனாளிகளிடம் சாதி உணர்வு, சமூக ஏற்றத்தாழ்வு உணர்வு தலைதூக்குவதில்லை. இவ்வுணர்வு முற்றிலும் இல்லாத சூழல் எப்பொழுதும் நிலவவேண்டும். வேற்றுமை உணர்வை அறவே தவிர்க்கவேண்டும்.  இதற்காக தன்னார்வளர் அமைப்புகள் மிகவும் நேச ஈடுபாட்டுடன் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனர். வழக்கமாக ஆண்டுதோறும் தாய்க்கரங்கள் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளை நடத்திவருவதுபோல, 28-01-2024 அன்று பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற உள்ளது. இதுபோல் பல தனியார் அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

 உலகளவில் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுவதன் மூலம் ஒன்றுபட்ட உணர்வை ஏற்படுத்தப்படுகின்றனர்.

வாழ்க்கையை வெறுத்தலோ, தற்கொலை முயற்சியோ தீர்வு ஆகா:

            அப்புனுவின் பெற்றோர் அவ்வப்பொழுது அப்புனுவின் பொருந்தாத செயல்பாடுகளால் மனம் வருந்துகின்றனர். சலிப்பும், வாழ்க்கைமீது வெறுப்பும் ஏற்படும் சூழல்கள் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி அப்புனுவின் நல்வாழ்வு மீதான நன்னம்பிக்கைத் தருணங்களும் விளக்கப்பட்டுள்ளன.

“ஏடே! அப்புனு தோப்புக்குள்ளே போடா…

பாதையில் உக்காராதே…

போதுண்டா உன்னாலே நாங்க வாங்கிக் கட்டிக்கிறது… வார்த்தைகள் அலுத்துக் கொண்டன. இது தாய் தங்கத்தின் உரையாடல் சலிப்பான குரல். (உ.ம.கு, பக்.33)

குடும்பத்தில் யாருக்கும் இல்லாத குறை அப்புனுக்கு மட்டும் எப்படி வந்தது? இதைத்தான் விதி என்பார்களோ! எனக்கும் தங்கத்திற்கும் பிறகு இவனுக்கு யார் கைக் கொடுத்து உதவப் போகிறார்கள்?” மூத்தமகன் சிவராமன். அப்புனுவை அவ்வப்போது படுத்தும் கொடுமையின் நினைவு வந்துவிட்டால் சின்னசாமிக்குத் தன் உயிர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்.  (உ.ம.கு, பக்.10)

என்ற வருணணைக்கு மாறாக நம்பிக்கையூட்டும் வகையில் பின்வரும் மனிதநேயக் காட்சியை அப்புனு ராஜாமணி உரையாடலின் மூலம் சோலையார் விளக்குகிறார்.

“அப்புனு சிலேட்டில் ‘அனா ஆவன்னர்’ என்ற இழுப்புடன் ராணாமணியின் முகத்தைப் பயத்துடன் பார்த்தான்.

“உலகத்துல எனக்கு வேற ஒரு சந்தோஷமும் இல்லப்பா.. என் கூட இருக்கிறதத் தவிர..” அவன் மனதுக்குள் விசித்தான்.  (உ.ம.கு, பக்.51)

சார்!…”

அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான். இதில் அக்கறையுடன் பார்த்தான் என்று வந்திருந்தாலும் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அன்பு, பரிவு, பாசத்துடன் அணுகவேண்டும்

அப்புனுவின் உடல் வளர்த்தியில் குறை சொல்ல முடியாது. இருபத்தைந்து வயது இளங்காளை போலத் தான் வளர்ந்து கிடந்தான். மூளை மட்டும் மிட்டாய் சப்பி சாப்பிடும் குழந்தையின் கனவுகளோடு நின்று போய் இருந்தது. இப்படிபட்ட கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளிடம் பிற குழந்தைகளைக் காட்டிலும் மிகவும் கூடுதலான அன்பு, பரிவு, பாசத்துடன் பழகவேண்டியது மிகவும் இன்றியமையாதது.  இத்தகைய மயிலிறகால் வருடிக்கொடுப்பது போன்ற மென்மையான அணுகுமுறையால் அக்குழந்தைகள் மனதில் உள்ள அச்சம் நீங்கி, நம்பிக்கை உணர்வு வெளிப்படும்.

அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகள் பலன் நல்கா

            அப்புனுவின் மேல்கொண்ட பாசத்தால் எந்தவழியிலாவது குணமாக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு மத பிரார்த்தனைகள், ஜோதிடம் பார்த்தல், குறிகேட்டல் போன்ற முயற்சிகளால் எப்பயனும் விளைவதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்புனுவின் பெற்றோர் உணர்ந்தனர். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதில் இச்செயல்பாடுகள் தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேண்டும் என்பதை சோலையார் மேல் நிகழ்சியால் பதிவுசெய்கிறார்.

உளற்சிகிச்சையில் துல்லிய சொற்பயன்பாடு தேவை

            அன்பு, பரிவு, பாச அணுகுமுறையோடு துல்லிய சொற்பயன்பாட்டு உரையாடலும் மிகவும் தேவை என்பதை பின்வரும் நிகழ்வுகளால் அறியலாம்.

மருந்து மட்டும் கொடுத்து அப்புனுவைக் குணமாக்கிட முடியாது. நாம  காட்டுகிற பாசம், பரிவு, கொடுக்கும் பயிற்சியாலதான் முன்னேற்றம் கிடைக்கும்… இதுல எங்காவது இடறினா பலன எதிர்பார்க்க முடியாது. முயற்சி செய்யுங்க. சராசரி மனுஷ வளர்ச்சிக்கு அவனா “வந்துட முடியும்…”

இப்படித்தான் அந்தப் பெரிய டாக்டர் பட்டவர்த்தனமாய்ச் சொன்னார். என்றாலும், அந்த மருத்துவமனையின் பயிற்சிகள் சின்னச்சாமிக்கு சின்னதாய் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கத்தான் செய்தது. இப்படியும் மருத்துவம் பார்க்கிறார்களா? என்று வியந்து போனான்.

“இந்த டாக்டர்களுக்குத்தான் எத்தனை பொறுமையும் கண்டிப்பும் தேவைப்படுகிறது. சொந்த தம்பியையே கவனிக்க முடியாத சிவராமன் எங்கே? சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கின்ற அந்த டாக்டர்கள்… அடேயப்பா…?” சின்னசாமியும் அவன் மனைவி தங்கமும், டாக்டர்கள் சொன்னதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் விழித்தார்கள்.

…அப்புனு! இது என்னா சொல்லு பார்க்கலாம்?” “சாக்லட்டு… சாக்லட்டு…” டாக்டர் கையை மேலே உயர்த்த உயர்த்த தாவித் தாவிக் கெஞ்சினான்.

“ஒனக்குதான். இந்தப் பெஞ்ச உன் தலையிலே தூக்கி வைப்பேன் அதோ அந்த ரூம்ல கொண்டு  போடனும். என்ன?”

அப்புனு ‘திரு திரு’ என விழித்தான்.

டாக்டரும் நர்சும் பெஞ்சைத் தூக்கி அவன் தலையில் வைத்தனர். கனமான மரபெஞ்சு அவன் தலைக்கு ஏறியது. அதன் கனத்தை அவன் உணரவில்லை; பயவுணர்வில் நடுங்கினான்.

“அப்புனு.. நான் சொல்றதக் கேட்பே இல்ல? தூக்கிக் கிட்டு போ… ம்…ம்…”

சாக்லெட்க்காக ஒரு கையை நீட்டித் தாவினான். ” இப்பத் தரமாட்டேன்… அந்த ரூம்ல கொண்டு போய் போட்டுட்டு வந்தாதான்..” என்று வழியைக் காட்டி விட்டு நின்று கொண்டார் டாக்டர்.

குறிப்பிட்ட அந்த அறைக்குள் போனவன் பெஞ்சைப் பொத்தென்று போட்டபின் பெஞ்சின் கால்கள் நொறுங்கின. பெஞ்சியின் கால்கள் ஒடிந்து போனதைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. டாக்டரிடம் ஓடி வந்தான்.

…இந்தா… சாக்லெட்…”

“அய்ய்யா…”

குஷியாகக் குதித்து வாங்கிக் கொண்டான்.

‘பக்’கென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “நல்ல பெஞ்ச உடைச்சிட்டே இல்லே…”. டாக்டர் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார்.

அப்புனு ‘தேம்ப ஆரம்பித்து விட்டான். “…ஊகூம்… அழக்கூடாது மெதுவால்ல வைக்கனும்…” தட்டிக் கொடுத்தார் (உ.ம.கு, பக். 11-13).

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் ஆசிரியரானாலும் மருத்துவாரானாலும் பெற்றோரானாலும் உடன் பழகும் சிறார் ஆனாலும் இயல்பாக எல்லோரிடமும் பேசுவது போல்  இல்லாமல் சிறப்புக் கவனத்துடன் சொற்களைத் தெளிவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு சொல்லுக்குப் பல பொருளும் பல பொருளுக்கு ஒரு சொல்லும் தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மிகுதியாகக் காணப்படும்.  

‘போடு’ என்ற தலைச்சொல்லுக்கு இருபத்தொன்பது வகையான பொருள் வழங்கப்படுவதை உரிய பொருத்தமான மேற்கோள்களுடன் க்ரியாவின் தற்கால தமிழகராதி (1992)பதிவு செய்துள்ளது. இத்தகைய விரிவான சூழற் பொருள் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்குப் புரிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எந்திரன் படத்தில் சிட்டி  ரோபோவிடம் டி. வி. யை போடு என்றவுடன் போட்டு உடைத்துவிடுவதைக் காணலாம்.  இதற்கு  தீர்வாக பெஞ்ச்சைக்  கொண்டு போய்  வை ?   டி. வி. யை இயக்கு?என்று தெளிவாகச் சுட்டலாம்.   

பாகுபாடின்றிக் குறையுடையோரையும் சமமாக நடத்துதல்

செவத்தியும் மறுதாயியும் அப்புனுவிடம் நேசமும் அக்கறையும் உடையவர்கள் செவத்தி அப்புனுவிடம் உள்ள குறைப்பாட்டைக் கருதாமல் இயல்பான எதிர் பாலினரிடம் செய்யும் குறும்புகளை அப்புனுவிடம் செய்கிறாள். அவ்வகையில் மரக்கட்டையைத் தூக்கி வரச்சொல்லும் காட்சி மேற்ச்சூட்டிய மருத்துவரின் சோதனையைப்  போல அவன் தெம்பைச் சோதிப்பதாக உள்ளது. மெல்ல மெல்ல கட்டை அப்புனுவின் தலைக்கு ஏறியது. ‘செயுச்சிட்ட செயுச்சிட்ட, என்று கையைத் தட்டிக் கொண்டு ஓடினாள் செவத்தி. அப்புனு செவத்தியின் மூலம் மனம் தெளிந்து வரும் நிலை, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களிடம்  அக்கறை காட்டினால்  அதுவே தீர்வாகி அவர்கள் குணமடைவர் எனும் நிலையும் புதினத்தில் வெளிப்படுகிறது.

அறிவே ஆற்றல்

மெல்ல மெல்ல  கற்கும் அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான் என்ற நிலையைக் காட்டிலும் மிக்க கவனத்துடன் அக்கறையுடன் ஆசிரியர் அணுகுவதே மிகவும் தேவையாகிறது.  சில பள்ளிக்கூடங்களில் கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களைத் தனிதனியாகத் தரம்பிரித்துப்  பாடம் நடத்தும் நிலை மாறி, உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாடுகள் உரிய உள்ளக கட்டுமானங்களுடன் தரமான கற்பித்தல் பயிற்சியுடன் தகுதியுடைய ஆசிரியர் பணியமர்த்தல்களுடன் நடைபெற்றால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாட்டை எய்த இயலும்.

ராஜா மணி போன்ற ஆசிரியர்கள் இருபத்தைந்து வயதாகும் அப்புனுவின் மன வயதைக் கொண்டே அப்புனுவுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஊனம், கற்றல் குறைபாடு ஆகிய காரணங்களை  முன் வைத்து குழந்தைகளிடம் காட்டும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும்.  கல்வி உளவியலில் இந்நிலையை, “மாணாக்கர்களைப் பற்றிய ஆசிரியர்க்கு அவர்கள் மீது தனிப்பட்ட செல்வாக்கு தருதல். அவர்களை நினைவில் வைத்திருந்து பெயர்கொண்டு அழைத்து, தன்னம்பிக்கையுடன் அவர்களை ஆசிரியர் அணுகலாம். உற்சாகமும் முகத்துக்கு முகம் நேர் தொடர்பும் கொண்டால், அவர்களை நன்னிலையில் உருவாக்கலாம். அறிவே ஆற்றல் என்பதை ஆசிரியர்கள் உணரவும் உணர்த்தவும் வேண்டும். மாணாக்கரின் மனங்களைப் பற்றிய அறிவு கல்விப்பயன்களை எய்தும் முறையில் கொண்டு செலுத்தத்தக்க ஆற்றலைத்   தருகின்றது.” எனும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கல்வி உளவியல் கூறும் கருத்துப் புரிதலின் அடிப்படையில் சோலையார்  ராஜாமணி பாத்திரத்தை படைத்துள்ளார் எனலாம்.

பள்ளி வயது முதலே கற்றல் குறைபாடு கொண்டு அல்லல் படுபவர்கள் பலர்.  பெரும்பாலும் கற்றல் குறைபாட்டை மூளை வளர்ச்சிக் குறைபாடு என கற்பிப்போரும் குழந்தையைப் பெற்றவரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. மனப்பாடம் செய்து ஒப்பித்தல், நினைவாற்றல் திறனுடன் விளங்குதல் மட்டுமே சிறந்த கற்றலுக்குரிய தகுதியாகா. சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்வதும் உரியநேரத்தில் உரிய வகையில் ஆற்றலுடன் செயல்படுதலும் கற்பித்தலில் அளிக்கப்படவேண்டிய மிக முக்கியமான பயிற்சிகள் ஆகும். இப்பயிற்சிகள் குறைபாடுடையவர்களுக்கேற்ப தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்படவேண்டியதும் மிகவும் இன்றியமையாதது. இவற்றோடு கட்டுரையில் குறிப்பிட்ட கற்பித்தல் செயல்பாடுகளுடன் அக்கறையுடன் கூடிய அணுகுமுறையாலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் அறிவை மேம்படுத்தலாம். அவர்களின் வாழ்விலும் ஒளியூட்டலாம்.

சான்றாதரங்கள்

  1. சுப்பு ரெட்டியார் . ந. – கல்வி உளவியல் – எஸ். வாசன் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-4 – 1961 
  2. சோலை சுந்தரப்பெருமாள்-  உறங்க மறந்த கும்பகர்ணர்கள், நான்காம் பதிப்பு : நவம்பர், 2015 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 600 098.
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
  4. தி. நடராஜன் நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023.

❌