Normal view

Received before yesterday

மதுரை சித்திரைத் திருவிழா வீதிநாடக வடிவில்: “ஊர் கூடித் தேர் இழு”

திருவிழாக்காலங்களில் நாடகங்கள் போடுவதைப் பார்த்திருக்கிறோம். திருவிழா குறித்தே வீதி நாடகம் ஒன்றைப் பார்த்த கதையைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். மதுரை சித்திரைத் திருவிழா தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பெருந்திருவிழா. இந்தத் திருவிழாவை மையமாகக் கொண்டு “ஊர் கூடித் தேர் இழு” என்ற வீதி நாடகத்தை திகழ் குழவினர் நிகழ்த்தி வருகின்றனர்.

சமீபத்தில் பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் பவளவிழாவை முன்னிட்டு மார்ச் 23 மற்றும் மார்ச் 24 என இரண்டு நாட்கள் முறையே பாளையங்கோட்டையிலும் மதுரை தியாயராசர் கல்லூரியிலும் இந்நாடகத்தை நடத்தினர். பாளையங்கோட்டையில் இந்நாடகத்தின் 50வது அரங்கேற்றம் என்பதும் கூடுதல் சிறப்பு. மார்ச் 2024இல் சென்னையில் ஊர்கூடித் தேர் இழு முதல் அரங்கேற்றம். அதைத்தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர், சென்னை, செங்கல்பட்டு, ஆனைக்கட்டி, பெங்களுரு, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருப்பூர், கொல்லம், திரிச்சூர், எர்ணாகுளம் ஒரு வருடத்தில் இருபது ஊர்களில் 50 காட்சிகளை நிகழ்த்தியுள்ளனர் திகழ் குழுவினர்.

திருவிழாக்கள் கொண்டாட வேண்டியதன் அவசியம், மதுரை சித்திரைத் திருவிழாவின் தனிச்சிறப்பு, அழகர் வைகை எழுந்தருளும் காரணம், மீனாட்சி திருக்கல்யாணம், திருமலை மன்னர் சித்திரைத் திருவிழாவை ஒருங்கிணைக்கக் காரணம், பதினெட்டாம்படிக்கருப்பு கதை இவைதான் இந்த நாடகத்தின் மையக்கரு. இந்நாடகத்திற்கான கதையை நந்தகுமார் எழுதியிருக்கிறார். பெலிக்ஸ், சஹானா, நந்தகுமார் என மூன்றுபேரும் இந்த வீதிநாடகத்தை நிகழ்த்துகின்றனர்.

தேங்கா எண்ணெய் (தென்னா), கடலை எண்ணெய் (கண்ணா), மண்ணெண்ணெய் (மன்னா) என மூன்று பேரும் தங்கள் பெயர்களை வைத்துக்கொண்டு பட்டயக்கிளப்புகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதிமத வேறுபாடின்றி அனைவரும் பார்க்கும் வகையில் இந்த நாடகத்தை நிகழ்த்துகின்றனர். ஒரு மணிநேர கால அளவில் மிகச்சுவையாக சித்திரைத் திருவிழா கதையை எடுத்துரைக்கின்றனர். பார்வையாளர்கள் தன்னை மறந்து உற்சாகமாக சிரிக்கும் வகையில் கதைப்போக்கும் வசனங்களும் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய விசயம். மூவரின் நடிப்பும் அட்டகாசம். யாரைப் போற்றுவதெனத் தெரியாத அளவிற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் ஐயாவின் அழகர்கோயில், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஐயாவின் மாமதுரை மற்றும் சித்திரவீதிக்காரனின் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை இந்த மூன்று புத்தகங்களும் இந்த வீதிநாடகம் உருவாக்க உதவியாக இருந்ததை நாடக இறுதியில் குறிப்பிடுகின்றனர். என் ஆசான்களோடு நானும் திருவிழாக்களின் தலைநகரம் எழுதியதால் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பை மதுரை வழங்கியிருக்கிறது. நன்றி.

பாளையங்கோட்டையில் மார்ச் 23 ஊர்கூடித் தேர் இழு நாடகத்தை நிகழ்த்தவிருப்பதாக நந்தகுமார் தெரிவித்தபோது நானும் செல்லத்திட்டமிட்டேன். பசுமை நடை நண்பர் சேவற்கொடி செந்திலும் உடன்வர இருவரும் காலை இரயிலில் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டோம். இரண்டரை மணிநேரப் பயணம் உரையாடலோடு கடந்தது. நெல்லையில் இறங்கி பொருநைக்கரையை நோக்கிப் பயணமானோம். பொருநையின் படித்துறை மற்றும் மண்டபங்களை பார்ப்பதற்காக சென்றோம். சுலோச்சன முதலியார் பாலத்தில் இறங்கி ஆற்றை நோக்கி நடந்தோம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை பறைசாற்றும்விதமாக ஓவியங்களை வரைந்துள்ளனர். ஒவ்வொரு ஓவியத்தையும் அற்புதமாக வரைந்துள்ளனர். அதைப்பார்த்துவிட்டு ஆற்றிலுள்ள மண்டபத்தை நோக்கி நடந்தோம். உச்சிவெயிலில் மண்டபம் குளுமையாக இருந்தது. கொஞ்சம் சுத்தமாக இருந்தது. உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆற்றின் மறுகரையில் படித்துறையும் இன்னும் கொஞ்சம் மண்டபங்களும் தெரிய அதைப்பார்க்க மீண்டும் பாலம் ஏறிச்சுற்றிவந்தோம்.

படித்துறை மண்டபங்களை நோக்கி நடந்தோம். ஆற்றுக்குள் மாடன் கோயில்கள் பங்குனி உத்திரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். மண்டபத்திற்கு அருகில் சென்றால் எல்லாம் சிதிலமடைந்து குப்பைச் செடிகள் மண்டிக் கிடக்கிறது. காண்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆற்றில் கால்நனைத்தபடி அமர்ந்துவிட்டு பாளையங்கோட்டைக்கு பேருந்து ஏறினோம்.

பாளையங்கோட்டையில் எச்சமாக உள்ள கோட்டையைப் பார்க்க பேருந்து நடத்துனரிடம் வழிகேட்டால் தெரியவில்லை என்றார். இறங்கிவிசாரித்துக் கொள்ளலாம் என பாளை மார்க்கெட்டில் இறங்கிவிட்டோம். நல்ல வெயில். ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்திருப்போம். அரசு அருங்காட்சியகம் செல்லும் வழி என்ற பதாகையைப் பார்த்தோம். சரி, வந்த வேலையைப் பார்ப்போம் என அங்கு சென்றோம்.

அரசு அருங்காட்சியகத்தில் நாடகக்குழுவினரை சந்தித்தோம். ஏற்கனவே ஓரிருமுறை நாடகம் பார்க்கச் சென்றிருந்ததால் அவர்களுக்கும் நம்மைத் தெரிந்திருந்தது. மேலும், நந்தகுமார் பசுமை நடைப் பயணங்கள் வழியாக நண்பராகிவிட்டார். வெயிலுக்கு அருங்காட்சிய கல்மண்டபம் கொஞ்சம் இதமாக இருந்தது. ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் சிறைவைத்தது இங்குதான். (அருங்காட்சியகம் குறித்து அடுத்த பதிவில் காணலாம்)

தொ.ப. பவளவிழாவை சிறப்பிக்கும் விதமாக அவருடைய சிறப்பான மேற்கோள்களை பதாகைகளாக திகழ் குழவினர் அமைத்திருந்தனர். நாடக நடிகர்கள் மட்டுமல்லாமல் திரைக்குப்பின்னால் இயங்கக்கூடிய மற்ற கலைஞர்களையும் சந்தித்தோம். நான்குமணிப்போல தொ.ப.வின் இல்லத்திற்குச் சென்றோம். தொ.ப.வின் துணைவியாரைச் சந்தித்தோம். அவரிடம் உரையாடி அருங்காட்சியகம் திரும்பினோம்.

மாலை கொஞ்சம்கொஞ்சமாக கூட்டம் வரத்தொடங்கியது. தொ.ப.வின் மகள் விஜயலட்சுமி அவருடைய மகனுடன் வந்திருந்தார். அவருடன் அய்யாவைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம் நானும் செந்திலும். நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர்கள், தொ.ப.வின் நண்பர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். நாடகம் நடத்துவதற்கு ஏற்றதாக அந்த திறந்தவெளி அரங்கு அமைந்திருந்தது.

தொ.ப.வின் தென்புலத்து மன்பதையும் என்னுடைய திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூலையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். நிறையபேர் இரண்டையும் வாங்கிச் சென்றது மகிழ்ச்சி. நாடகம் ஆறரை மணியளவில் தொடங்கியது. நாடகத்தின் கதை மற்றும் சிறப்புகளை மேலே பார்த்தோம். சிறுவர்கள் உற்சாகமாகப் பார்த்தனர். நிறைவாக இந்த நாடகத்திற்கான தோல்பாவைகளை வரைந்துதந்த தோல்பாவைக்கலைஞர் முத்து சந்திரராவ் அவர்களுக்கு நினைவுப்பரிசாக புத்தகங்களும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது. மீனாட்சியம்மன் மற்றும் அழகரை தோல்பாவையில் அற்புதமாக இந்நாடகத்திற்காக வரைந்தளித்திருக்கிறார்.

நாடகம் முடிந்ததும் வந்திருந்தவர்கள் நாடகக்கலைஞர்களை வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டிருந்தனர். நாங்களும் ஒன்பது மணிவரை அங்கிருந்தோம். பிறகு அருகிலிருந்த தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு இரயில் நிலையத்திற்குச் செல்ல பேருந்து ஏறினோம். திருநெல்வேலி பெரியார் நிலையத்தில் இறங்கி அருகிலிருந்த உணவகத்தில் சாப்பிட்டு இரயில் ஏறினோம். தொ.ப.வின் பிறந்தநாளான மார்ச் 24 அன்று தொடங்கும்வேளையில் மதுரை வந்தோம்.

மார்ச் 24 அன்று மாலை தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் நாடகம் பார்க்க என் மனைவியோடு சென்றேன். அரங்கம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. மீண்டுமொருமுறை நாடகம் பார்த்து உற்சாகமானேன். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், பேராசிரியர் சுந்தர்காளி ஐயாவும் வந்திருந்தனர். பசுமை நடை நண்பர் ரகுநாத்துடன் உரையாடிவிட்டு புறப்பட்டோம். ஊர்கூடித் தேர் இழு நாடகத்தை மதுரை விழாவில் நிகழ்த்தியபோது பாதியிலே மழைவந்துவிட்டது. மீண்டுமொருமுறை பார்க்கும் வாய்ப்பு மதுரையிலே அமைந்தது. இந்நாடகம் நிகழ்த்த 20க்கு 20 இடம் போதும் என்கிறார்கள். ஊர் கூடித் தேர் இழுக்க திகழ் குழுமத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கான இணைப்பு கீழேயுள்ளது: https://www.instagram.com/thigazhproductions/

அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எங்கள் ஊரில் ஆதியில் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு 1921.  இப்போது நடுநிலைப்பள்ளியாக இருக்கிறது. அந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழா போனவாரம் வெள்ளிக்கிழமை (21 மார்ச் 2025) கோலாகலமாக நடந்தது. 

இரண்டு தலைமுறைகளுக்கு அண்ணனாகவும் ஆசானாகவும் திகழ்ந்த புலவர் காந்தி பாஸ்கரன், திருமிகு சகாய பாத்திமா, சங்கரலிங்கம் உள்ளிட்ட முன்னாள் ஆசிரியர்கள்  கலந்துகொண்டுள்ளனர். கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மேனாள் மாணவர்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்நாள் மாணாக்கர் நானாவிதத் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

மரக்கன்றுகள், எழுதுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. புரவலர்களுக்கு விழாவில் நன்றிபாராட்டியிருக்கிறார்கள்.  

அலுவலர் பெருமக்கள் வழிகாட்டுதலை வழங்கியதோடு விழாவில் கலந்துகொண்டும் சிறப்பித்துள்ளார்கள்.

ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சத்துணவுப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக இவ்விழாவை முன்னின்று நடத்திமுடித்திருக்கிறார்கள். ஊர்ப் பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்கள்.

அரசு இத்தகைய நூறாண்டு கடந்த பள்ளிகள் எல்லாவற்றையும் விழாக் கொண்டாடப் பணித்திருக்கிறது போல. பல ஊர்களிலும் நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்திருப்பதை அறியமுடிகிறது.

அனைவருக்கும் நன்றி. 

விழாவின்போது பள்ளியில் முன்னர் நடந்த போட்டி ஒன்றின் விடைத்தாள்களை தொகுத்து சிறிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பி.டி.எப் இணைப்பு இங்கே: எறும்புச் சிட்டுகளும் நீர்மூழ்கி வாத்துகளும்

இந்த பள்ளியிலும் அருகிலுள்ள அரசுப் பள்ளியிலும் முன்னர் நடந்த சில விழாக்களைப் பற்றிய பதிவுகள்:

‘பகல் வீடு’ வெளியீடு

சுற்றுச் சூழல் சார்ந்த போட்டிகள்

‘பொதும்பில் புலவர்கள்’ வெளியீடு

படங்கள்: ரகுநாத்

ஜெயமோகனுக்கு நன்றி!

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட வாசகர் ஒருவர் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்களை பரிந்துரைக்கச் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் தனது தளத்தில் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார். ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாம்ராஜின் கொடைமடம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் , எஸ். அர்ஷியாவின் பொய்கைக்கரைப்பட்டி, ஏழரைப்பங்காளி வகையறா நாவல்களை குறிப்பிட்டிருப்பதோடு நரசய்யாவின் ஆலவாய் கட்டுரை நூலையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியில் மதுரையைக் குறித்து எழுதிவரும் என்னைக் குறித்து எழுதியுள்ள வரிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தன.

சித்திரவீதிக்காரன் என்பவர் ஓர் இணையப்பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். மதுரை பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு பிடிக்கும் எழுத்து. மதுரை பற்றிய தகவல்கள், வாசிப்புக்குறிப்புகள் என்று விரிவாக எழுதிக்கொண்டே இருக்கிறார். 

ஜெயமோகன் எழுதிய கொற்றவை, விஷ்ணுபுரம், காடு, வெள்ளையானை போன்ற நாவல்களை வாசித்திருக்கிறேன். அவரது கொற்றவை எனக்கு மிகவும் பிடித்த நாவல். வெள்ளையானை நாவல், மத்தகம் குறுநாவல் குறித்து பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா குறித்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

யுவன் சந்திரசேகர் நூல் குறித்த எனது பதிவுகள், வெள்ளை யானை நாவல் குறித்த எனது பதிவுகளின் இணைப்புகளை அவரது தளத்தில் முன்னரே கொடுத்திருக்கிறார். தமிழ் விக்கியில் சில கட்டுரைகளிலும் சில பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையின் சித்திரம் என்ற அவரது இந்தப் பதிவு பெருங்கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறது. ஜெயமோகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிறார் திரைப்படங்கள்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிறார்களுக்கான திரைப்படங்களை ஜனவரி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை வேளைகளில் திரையிட்டு வருகின்றனர். The Red Balloon, Children of Heaven, Fly Away Home படங்கள் திரையிடப்பட்டன. திரையிடலுக்குப் பிறகு படம் குறித்த உரையாடல்களும் நடைபெற்றன. படம்பார்த்த சிறார்களும் பெற்றோர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பையும் வழங்கிவருகிறார்கள். பேராசிரியர் பிரபாகர் அய்யா திரைப்படங்களை காணும் கலையை இந்த உரையாடல்கள் வாயிலாக கற்றுக்கொடுப்பதாக உணர்கிறேன்.

The Red Balloon

1956இல் எடுக்கப்பட்ட The Red Balloon படத்தை முதன்முதலாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்த்தேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு அற்புதமாக படம் எடுத்திருக்கிறார்களே என்று எண்ணி வியந்தேன்.

Albert Lamorisse இயக்கிய படம். அவருடைய மகன்தான் படத்தில் வரும் சிறுவன். ஒரு கம்பத்தில் சிக்கியுள்ள பலூனை எடுக்கும் சிறுவன் அந்த பலூனை தன் கூடவே வைத்துக்கொண்டு அலைகிறான். அவனது அன்பில் அந்த பலூனும் இணைந்து அவன் கூடவே திரிகிறது. பலூனோடு அந்தப் பையன் உரையாடுவதும் அதைக்கேட்டு அந்த பலூன் நடந்துகொள்வதும் சிறப்பு. அந்த பலூன் அவனோடு ஒளிந்து பிடித்தெல்லாம் விளையாடுகிறது. அந்த ஊரிலுள்ள மற்ற சிறுவர்கள் பொறாமையோடு சிகப்பு பலூனைத் தாக்குகிறார்கள். அந்தப் பையன் பலூன் உடைந்த சோகத்திலிருக்கும்போது ஊரிலுள்ள எல்லா பலூன்களும் சேர்ந்து வந்த அந்தப் பையனைத் தூக்கிச் செல்லும் காட்சி கவிதை.

Children of Heaven

ஆனந்தவிகடனில் செழியன் எழுதியபோது Children of Heaven படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து பின்னால் அந்தப் படத்தை பார்த்தேன். Majid Majidi  இயக்கிய மிக அற்புதமான படம்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அந்த திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்த்தபோது இன்னும் பல காட்சிகள் மனதைக் கவர்ந்தன. குறிப்பாக இலந்தை அடைதின்னும் சிறுமி என்னை பால்ய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றாள். ஏழ்மையான குடும்பத்தின் அன்றாட வாழ்வை அழகாகப் பதிவு செய்த படம். அண்ணன் தங்கை இடையிலான அன்பை மிக எதார்த்தமாகப் பதிவு செய்த படம். இந்தப் படம் குறித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு நன்றி.

Fly Away Home 

Carroll Ballard   இயக்கிய Fly Away Home  தாயை இழந்த மகளை ஆற்றுப்படுத்தும் தந்தையின் அன்பை, வாத்துகளை தாய்போல பார்த்துக் கொள்ளும் சிறுமி – பின்னாளில் தந்தை மேல் கொள்ளும் பாசம், பறக்கும் சிறிய கிளைடர் விமானம் மூலம் பறவைகளை வலசைக்கு அழைத்துச் செல்லும் காட்சி என ஏராளமான சிறப்புகள். படம் பார்க்கும் நாமும் சேர்ந்து பறக்கும் அனுபவத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த மூன்று படங்களையும் என் மகள் மதுராவோடு சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்க்க முடிந்தது. நாம் தொலைக்காட்சிகளில் அன்றாடம் காணும் திரைப்படங்களிலிருந்து இந்தப் படங்கள் மாறுபட்டிருப்பதைக் குறித்து மதுராவோடு தொடர்ந்து உரையாடி வருகிறேன். கலைஞர் நூற்றாண்டு நூலகம் சிறுவர்களுக்கான நிகழ்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றி.

❌