வாழ்க்கையில் சிலவற்றை முழுதாக வெளிப்படுத்த முடியாது. உணர மட்டுமே முடியும் என்பது என் எண்ணம். அதில் காதலும் ஒன்று. அதை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் முடிவெடுத்தது எல்லாம் பரீட்சார்த்தமான முயற்சி அன்றி வேறெதுவும் இல்லை. கொழுகொழுவை எனது வாட்ஸப் சேனலில் தொடர்ந்து முப்பத்தைந்து நாள்கள் எழுதினேன். முடிவடைந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம், ஏழரை மணி ஆனால் ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது. அது கொழுகொழு முடிந்துவிட்டதால் மட்டும் வரவில்லை. நீங்கள் வாசித்துவிட்டு அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலும் தந்த உற்சாகம், சட்டென்று சோப்பின் குமிழி போல் மறைந்ததும் காரணம். ஒன்றை ஆரம்பிக்கத் தான் மனம் ஆயிரம் சப்பைக்கட்டு சொல்லும்.ஆரம்பித்து செயலில் இறங்கிவிட்டால் அது பழக்கமாகிவிடும். பழக்கத்தை நிறுத்துவது அத்தனை லேசுப்பட்ட காரியமில்லை. ஆகையால், ஏழரை மணிக்கு விரைவில் ஒரு வழி செய்துவிடுவேன். உங்களுடன் தொடர்பில் இருக்க இவ்வழி பிடித்து இருக்கிறது. இது எனக்கும் எனது எழுத்துக்கும் அவசியம்.
கொழுகொழுவுடன் பயணம் செய்த அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கொழுகொழுவை தட்டிச் சரி செய்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை செய்து, முற்றுப்பெறப் போகும் பணி அல்ல இது. ஆனால் முதல் சுற்றை முடித்துவிட்டேன். முழுமையாகச் சரி பார்த்துவிட்டால், அப்படியே பதிப்பகத்தாருக்கு அனுப்பிவிடவேண்டும். கொழுகொழு புத்தகமாக வந்துவிடும். ஆனால், எப்போது வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.
நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை.
41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது.
சாம்பு உடனே பர்ர்ர்ரென்றான். சற்று நேரம் சிற்சிறு வெடிப்புகளாக தனக்குள்ளே சிரித்து அடங்கினான்.
1896-ஆம் ஆண்டு ஐப்பசி மாதம், ஒரு தெளிவான வளர்பிறை ஏகாதசி ராத்திரியில், பஞ்சநதீஸ்வரக்ஷேத்ரம் என்ற திருவையாற்றிலிருந்து, திருநெய்த்தானம் என்ற தில்லைஸ்தானத்துக்குப் போகும் வழியில் காவிரிக்கரையை ஒட்டி, ஒரு எட்டுக்கால் கல் மண்டபத்தினுள் அம்மூவரும் அமர்ந்திருந்தார்கள். நிலா உச்சிக்கு வந்துவிட்டிருந்தது. அதைச்சுற்றிய ஒளிவட்டத்தில் வானம் இளநீலமாக வெளுத்துக் காணப்பட்டது. அவர்களுக்கு நடுவே சிறிய கண்ணாடிக் குடுவைக்குள் மண்ணென்னை வாசத்தைக் கமழவிட்டபடி திரிவிளக்கு நீலமாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வேளையின் நீண்ட வெள்ளி நிழல்களுக்கு மத்தியில் அது வெளிச்சமென்றே தோன்றவில்லை.
மீனாட்சிநாதன் காவிரியை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முன்னால் இருந்த லோட்டாவை அவன் தொடவே இல்லை என்பதை ராமுடு கவனித்தார். அவன் முகத்தைப் பார்த்தார். வெள்ளி வெளிச்சத்தில் நதி உருகிப் பெருகிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒளி அவன் முகத்தில் ஆடியது. அவன் முக அங்கங்களும் பழைய உருகிய வெள்ளியால் ஆனதுபோலத் தோன்றியது.
தொண்டையை இடரிவிட்டு, “சாப்ட்றா,” என்றார். தன் அருகே இருந்த கூஜாவை எடுத்துத் தன்னுடைய கோப்பையில் இன்னொரு சிறிய மிடரை விட்டுக்கொண்டார். இரவின் நிலா வெளிச்சத்தில் அந்தத் திரவம் செம்பருத்திப் பூவிதழின் சொகுசான மென்மையோடு வளைந்து உள்ளே விழுந்தது.
“டேய் உனக்கு?”
அவர்களில் இளையவனான சாம்பு என்கிற சாம்பசிவன் இளித்துக்கொண்டே தன் சிறிய சொம்பை நீட்டினான். வாங்கித் தூக்கிப்பிடித்து மளமளவென வாயில் அருவி மாதிரி விட்டுக்கொண்டு சொம்பை கீழே இறக்கினான். அவன் உடல் சிலிர்த்தது. இரண்டு முறை உலுக்கிக்கொண்டு ஒரு காதை பலமாக சிலமுறை அடித்தான். கழுத்தை ஒடித்தான். பிறகு சமநிலைக்கு வந்த நிலைகடிகாரம் போல் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரை நோக்கி வாஞ்சையாக புன்னகைத்தான்.
“பட்டனத்துல கம்பெனிக்காரன்னுட்ட வாங்கினது,” என்றான் சாம்பு. “எப்படி?” அவன் குரல் சறுக்கிச் சறுக்கி வந்தது.
தில்லைஸ்தானம் ராமுடு மிகச்சிறிய மிடரைப் பருகி இலேசாக பின்னால் சாய்ந்திருந்தார். “இந்த மாதிரி ஒரு ராத்திரில்ல இந்த வாயில வாங்கிக் கண்ண மூடினா உள்ளுக்குள்ள வெள்ளியும் சுவர்ணமுமா ஜாலம் ஆடுதேறா.”
“நெருப்பு இல்லையாண்ணா? அக்னி…” என்றான் சாம்பு. ஒரு முறை விக்கினான்.
“கம்பெனிக்காரனுக்கு எல்லாமே கெம்பு தான்,” என்றார் ராமுடு. ஏதோ உச்சிலிருந்து இறங்கிவருவது போல் மிதந்து வந்தது அவர் குரல். “உடுப்பும் செகப்பு. தோலும் செகப்பு. வடிச்சுக் குடிக்குறதும் செகப்பு, பிடிச்சு கட்டிக்கிட்டு வந்திருக்கானே, அந்தத் தடிச்சப் பொம்மனாட்டியும் செகப்பு…”
சாம்பு பெரிய நகைச்சுவையை கேட்டது போல ஹாஹாஹாவென்று சிரித்தான். மீனாட்சி அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“அவனுக்கு எல்லாமே கெம்பும், தங்கமும் தான்,” ராமுடு தொடர்ந்தார். “நாமதான் ராத்திரி, வெள்ளின்னு இப்படி கருப்ப விழுந்து விழுந்து மோகிக்கறோம். நமக்கு கிருஷ்ணனும் கருப்பு. ராமனும் கருப்பு. ஆவாடு மேகவர்ணுடு. ஈவாடு ஹரிதவர்ணுடு.”
மீனாட்சி சாம்புவைப் பார்த்து புன்னகைத்தான். “டேய் மீனாட்சி, தெலுங்கு வர ஆரம்பிச்சுருத்துறா,” சாம்பு ரகசியமாக கிசுகிசுத்தான். களிப்பில் அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன.
“நா கொடுக்கா. ஈ நதியொக்க ஆ மேகமு, ஆ ஹரிதபர்வதமு கூட ராத்ரிதேவிக்கி சிருஷ்டிகளு. ஏமி தெல்ச்றா நீக்கு ? இந்த மாதிரி ஒரு ராத்திரில அதோ அந்த மேகத்துக்குள்ள என்ன நடக்குதுன்னு நினைக்கற? மலையில, இதோ, இந்தக் காவேரில்ல, என்ன நடக்குதுன்னு நினைக்கற? ரஜதகேளி…”
சாம்பு கிளுகிளுவென்று சிரித்தான். அவன் கண்கள் சிவப்பாக மின்னின. “ராமுடுண்ணா. உமக்கு அந்த ஆட்டமெல்லாங்கூட தெரிஞ்சுபோச்சா?” என்றான். அவன் முகம் நன்றாக சிவந்திருந்தது அந்த வெளிச்சத்தில் தெரிந்தது.
தில்லைஸ்தனம் ராமுடு பதில் கூறாமல் புன்னகைத்து அவன் கண்களை நோக்கியவாரே உதட்டை மட்டும் நனைப்பது போல் அந்தத் திரவத்தின் இன்னொரு சிறிய மிடரை பருகினார்.
“போட்டும்டா, வேளை வரட்டும்,” என்றார் ராமுடு. அவர் கண்கள் மின்னின.
“அப்படீன்னா ஒரு கதை. சொல்லுங்கோண்ணா. யார் அந்த நிறஞ்சவ? திருவாரூர் நாகரத்தினமா? புதுக்கோட்டை அம்மிணியா? இல்ல நீங்க சொல்வேளே, பழைய தஞ்சாவூர் ரமாவாணி, அவ பேத்தி பாலா…மணியா?” அவன் நாட்டியமாடுவதுபோல் அபினயம் பிடிக்க மீனாட்சிநாதன் சிரித்தான்.
தில்லைஸ்தானம் ராமுடு வெற்றிலைச்செல்லத்தைத் திறந்தார். கொட்டைப்பாக்கு, புகையிலை, ஜவ்வாது என்று கலவையான வாசனைகள் எழுந்தன. இரண்டு தாள் வெற்றிலையைப் பிரித்து சுண்ணாம்பைத் தடவி இதற வஸ்துக்களை பக்குவமாக அடுக்க ஆரம்பித்தார். பையன்கள் இருவரும் அவர் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்ணை காரியத்திலிருந்து ஏற்றாமல் அவர் சொன்னார்.
“டேய்… எத எடுத்தாலும் பொம்மநாட்டிப் பேச்சுக்குக் கொண்டுப்போ, கொண்டுப்போன்னு உள்ள இருக்குற நாய் குரைச்சுக்கிட்டிருக்குற பிராயம் உனக்கு. அது வாசம் கண்டிருச்சு, கடிக்கற வரையிலும் விடாது. அது அப்படித்தான். ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ… மூத்தவனா, முன்னும்பின்னும் விஷயங்களத் தெரிஞ்சவனா சொல்றேன். பெண்டுக்காரி எவள்ட்டையும் அப்படி ஒண்ணும் ஒரு விசேஷமும் கிடையாது. இது சத்தியம். பொறிச்சு வெச்சுக்கோ.
“உனக்குள்ள இருக்குற நாய்க்குத் தீனிப்போட உனக்கு ஒருத்தி வேணும். அந்தத் தீனியவே விதவிதமா கல்பனை பண்ணீண்டு முகமும் வாசனையும் கொடுத்து அதையே சுத்திச்சுத்தி வர. தன் வாலையே சுத்திச்சுத்திக் கடிக்க முடியாம தவிக்குற ஸ்வானசிருஷ்டி தான் மனுஷன்னு விட்டலதாசர் பாட்டுல ஒரு வரி உண்டு.
“இதோ, இந்த ராத்திரியில வெள்ளி ஓடித் துள்ளி விளையாடிப் போறாளே, இந்த காவேரிய உண்மையில ஒரு வாட்டிப் பாத்தாச்சுன்னா வால் நிமிர்ந்துடும். அதுக்கப்பறம் எந்தப் பொண்ணும் நிறையாது. பொண்ணு என்ன. இந்த மண்ணுல எதுவுமே நிறையாது. கனுகொண்டவாடுனிகி ஷாபம் என்று என்னுடைய குருநாதர் சொல்வார். கண்டுட்டவனோட சாபம். அம்பு பட்டுத் திரை கிழியறா மாதிரி அது.” ராமுடு இன்னொரு மிடரை அருந்தி கண்களை மூடினார். உள்ளே கண்கள் உருண்டுகொண்டிருந்தன.
2
அவர் பேசி நிறுத்திய மௌனத்தில் ஆற்றொழுக்கின் ஓசை கூடி வந்தது. மீனாட்சிநாதன் ஆற்றைப் பார்த்தான். ஆறு மொத்தமும் ஒரே மூச்சு போல் மௌனமாகப் பெருத்துத் தணிந்தது. அங்காங்கே சிறிய அலைகள் எழுந்து ஏதோ சொல்ல வருவதுபோல் துள்ளின. ஆனால் பேச நிற்கவில்லை. வெள்ளி கலந்து கலந்து ஒழுகிச்சென்றது. ஒலியும் காட்சியும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்வது போல் இருந்தது. மௌனத்தை நிறப்ப ஆற்றிலிருந்து மண்டபத்துக்குக் காற்று எழுந்து வருவது போல் தோன்றியது அவனுக்கு. ராமுடு கண்ணைத் திறந்தார். முன்னே தயராக இருந்த வெற்றிலையை பக்குவமாக மடித்து பொட்டலமாக்கி வாயிலிட்டுக்கொண்டார். அவர் அதைச் சவைக்கும் ஒலி எழுந்தது.
சாம்பு அவரைப் பார்த்தான். சாம்புவின் முகம் நன்றாகக் கனன்று கண்களில் சிவப்பு வரிகள் பழுத்துத் தெரிந்தன. அவன் கொழுத்தக் கன்னத்தில் இதழோரம் சற்றே கீழிறங்கியது.
“அண்ணா, ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைச்சுக்கப்படாது.”
கேளு, என்பது போல் கைக்காட்டினார் ராமுடு.
“இதைச் சொல்றேளே, உங்களுக்குப் பொம்மனாட்டி அனுபவம் இருந்திருக்கா?” என்றான். மீனாட்சி துணுக்குற்று அவனை நோக்கினான். இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
பெரியவர் சாம்புவின் கண்களை பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வெற்றிலையை குதப்பும் ஓசை ஏறிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் எழுந்து மண்டபத்தின் மறு ஓரத்துக்குச் சென்று கீழே குனிந்துத் துப்ப வெற்றிலைச்சாறு வளைந்து சென்றது. ராமுடு வேட்டியை இறுகி ஏற்றிவிட்டுக்கொண்டு வந்தபோது மீனாட்சி அவர் அமர்ந்திருந்த பாயைத் தட்டி அவர் இடத்தை அமைத்துக் கொடுத்தான்.
ராமுடு அமர்ந்தார். பேசவில்லை. தூரத்தைக் கண்ட அவர் முகம் நிலவொளியில் உறைந்ததுபோல் இருந்தது. வயதோடிய முகத்தில் சுருக்கங்கள் ஆழமாகத் தெரிந்தன. வெற்றிலைச்சாற்றால் உதடு கருத்துக் கல் போல் தோன்றியது. அவர் பேச வாய் திறந்த போது கற்சிலை ஒன்று வாய்த்திறக்கும் உணர்வு மீனாட்சிக்கு ஏற்பட்டது. தன்னை அறியாமல் பின்னால் அகன்றான்.
“சாம்பு, நா துடுக்கா…” என்றார். சீவலும் புகையிலையும் வெற்றிலையும் உட்கொண்டதில் அவர் குரலில் ஓர் ஆழம் உருவாகியிருந்தது. “நான் தில்லைஸ்தானம் ராமுடுவாக்கும். நன்றாகக் கேட்டதா? என் பெயர் தில்லைஸ்தானம் ராமுடு. தில்லைஸ்தானம் ராமைய்யர் இல்லை. தில்லைஸ்தானம் ராமைய்யா பிள்ளை இல்லை. டேய், நான் ராமைய்யனாவோ ராமைய்யா பிள்ளையாகவோ பிறந்திருந்தேன்னா இந்த நடுஜாமத்துல ஏன் உங்கக்கூட உக்காந்து கங்காசாகரத்த மாந்தீண்டிருக்கப்போறேன்?
“நாய்ப்பிறவின்னு சொன்னேனில்ல? எங்கப்பா தில்லைஸ்தானம் ராகவய்யரைப் பத்தி அதத் தாராளமாவே சொல்லலாம். என்னடா பெத்தத் தகப்பன இப்படிச் சொல்றானேன்னு நினைக்க வேண்டாம். எம் பிறப்புக்கு மட்டும் என்ன, நாய்க்குணம் குறைச்சலா? அந்த அந்தஸ்துல சொல்றேன். மனுஷ பிறப்புடா, சாம்பா, மனுஷப் பிறப்பு.
“அப்பாவுக்கு அம்மா மேல பெரிய ஆசை. ஊர் ஒலகத்துல இல்லாத ஆசை. அம்மா தில்லைஸ்தானம் ராஜலட்சுமி. அற்புதமா பாடுவோளாம். புதுக்கோட்டை சமஸ்தானத்துல பதக்கம் வாங்கியிருக்கா. அப்பேற்பட்ட எங்க அம்மா இரண்டு வருஷத்துக்கு எனக்குத் தாலாட்டுப் பாடுறதத்தவிர குரலே எடுக்கலன்னு பெரியம்மா சொல்வள். எனக்கு நினைவில்ல. எனக்கு மூணு ஆண்டு நெறையறத்துக்கு முன்னாடியே போயிட்டா.
“இந்த மாதிரி இக்கட்டுல சாதாரணமா என்ன அம்மா வழியிலேயே விட்டுற்றது தான் வழக்கம். அங்க போயிருந்தா என் வாழ்க்கை அந்த மாதிரி இருந்திருக்கும். ஆனா சொன்னேனே? ஆசை. அப்பா சண்டப்போட்டு என்னைத் தூக்கீண்டு அவர் அகத்துக்கே வந்துட்டர். என்னோட பெரியம்மா – சிவகாமு பெரியம்மான்னு தான் அவ முக்தியாறவரை அவள நான் கூப்பிடறது – வேத்துபுத்தி இல்லாதவள். அவள் நாலு பிள்ளைக்கும் ஆறு பொண்களுக்கும் போடற அதே மோறுஞ்சாததையும் புளிஇஞ்சியையும் எனக்கும் ஒரு ஓரமா வைப்பள். ஆனால் போகப்போக பிள்ளைகளுக்கு நான் இருந்தது ஒத்துக்கல. அக்காக்களுக்கு கலியாணப்பேச்சு வந்தபோது தொடங்கினது. மொதல்ல தீட்டுக்கொட்டாய்க்குப் பக்கமா தங்கிக்கச் சொன்னாங்க. அப்புறம் வைப்பறையில பாய விரிச்சுப் படுக்கலாம்னு வந்தது. ரொம்பப் பாதகமில்லை, பாத்துக்கோ. டேய் தேவடியாப் பயலேன்னு கூப்பிட்டா ஓடி வரணும். கொடுத்த வேலையெல்லாம் செய்யணும். வயலுக்கும் சந்தைக்கும் அலையணும். இதுத்தவிர வீட்ல தினப்படி. மாடுகளுக்கு தண்ணிக்காட்டி, சாணி அள்ளி, வெட்டவெளியில அடுப்ப மூட்டி ஆமணுக்கு எண்ணையெடுத்து, சீயக்காயக் குத்திப் பொடிச்சு… பெண்டுகளுக்கு அதுனால என்ன ரொம்பப் பிடிக்கும். அவங்க வேலையெல்லாம் நானே செய்வேன், பாரு?
“அப்பா ரொம்ப நாள் இல்ல. ஏதோ ஒட்டுவியாதி தான். சீக்கிரமே படுத்துட்டர். எனக்குப் பன்னிரெண்டு இருக்கறப்ப போயிட்டார். பெரியம்மாவும் ரொம்ப நாள் தங்கல. அப்பறம் சித்தம் போக்கு சிவம் போக்கு தான். ஆத்தங்கரை மண்டபத்துல தங்கறது நாள்ப்பாடு வாரப்பாடுன்னு தொடங்கி ஒரு நாள் அண்ணா நீ அங்கேயே தங்கிக்கோன்னு சொல்லிட்டான். ஆனால் வயித்தக் காயப் போடல, அது மட்டுக்கும் பிழைச்சேன். காலையில வீட்டுக்குப் போனா வேலை. ஒரு வேளைச் சோறு. அப்புறம் மண்டபவாசம் தான். கோயில் மண்டபம். இல்ல ஆத்தங்கரை மண்டபம். திருவிழாவுல பந்தல் கட்டுறது, பூக்கட்டுறதுன்னு கிடைச்ச வேலைகளைச் செய்வேன். பாட்டும் நாயனமும் கேட்டுகிட்டு எங்கெயாவது நின்னுட்டிருப்பேன். பாகவதர் உபன்யாசத்துல போய் உட்காருவேன். இல்ல கோயில் மண்டபத்துல சதிர்க்கச்சேரி நடந்தா ஓர் ஓரமா நின்னு வேடிக்கைப் பார்ப்பேன்.
“முடிஞ்சதும் அவங்ககிட்ட போய், பெரியம்மா, சித்தி, நான் தில்லைஸ்தானம் ராஜலட்சுமி மகன் ராமன், என்பேன். ஆனால் அவங்களுக்கு அப்பா என்னை எல்லா முறைகளையும் மீறி அப்படிக் கூட்டிக்கொண்டு போனதுல கோபம். இல்லியே? நீ பெரியக்கோயில் தெரு ராகவைய்யர் ஆத்மஜன் ராமுடு தானே? என்று வெகு சாமர்த்தியமா திருப்பிவிடுவாங்க. நான் கோபியும் தரிக்கல, பூணூலும் அணியலன்னு அவங்கக் கண்ணுக்குத் தெரியாமலா இருந்தது? ஆனால் அக்ரகாரத்தில் எப்போதும் ஒரே விளி தான். ‘போகம்வாளுனிக்கொடுக்கா!’ திருவிழாவுல பந்தல் கட்டுறது, பூக்கட்டுறதுன்னு எங்கியா போய் நுழைஞ்சுக்குவேன். ஒரு கட்டத்துல வயல்ல இறங்கினேன். வேதக்காரங்க கிட்டக் கூடி போயி கொஞ்ச நாள் இருந்தேன். சக்கரம் கொஞ்சம் சேர்த்தேன். ஆனால் எங்கெயுமே ரொம்ப தூரம் உள்ளப் போக முடிஞ்சதில்லை.
“இந்த நிலையில எனக்குப் பெண்டுன்னு ஒருத்தி எப்படி வரவா? எனக்கு அகமும் இல்ல. குடும்பமும் இல்லை. வம்சமும் இல்லை வழியும் இல்லை. பொம்மனாட்டி அனுபவம் மட்டும் எப்படிக் கிடைக்கும்?” தில்லைஸ்தானம் ராமுடு அதைச் சாதாரணமாகச் சொன்னார்.
சாம்புவின் வாய் இலேசாகத் திறந்திருந்தது. “அப்போ தாசிகள்? இத்தன தாசிக்கதை சொல்றேள், நான் நினைச்சேன்…”
“எப்படி? என்னுடைய அம்மாக்கள் இல்லையா அவங்க?” ராமுடு புன்னகைத்தார். “என்னோட அப்பாவும் அண்ணன்களும் அந்த பந்தத்த நிலைநாட்டத் தங்களால் முடிஞ்சதையெல்லாம் செஞ்சாங்க. பகலில் அவர்களைப் பார்க்கவேண்டும். கோபிநாமமும் தோரணையுமா. ஹரி நாம ஜபம். ஆச்சாரியர்கள் சேவை. வேத பாராயணம். சாஸ்திரோக்தம், சம்பிரதாயம். ஆனால் பகல் விழுந்து போச்சுன்னா அங்க உள்ளது வேற ஆளு. ராவணனும் ஹிரண்யனும் நரகாசுரனும் அரிதாரமில்லாமலேயே பார்க்கலாம்.”
3
சாம்பு அவர் உருவத்தைப் பார்த்தான். கருத்த, ஒற்றை நாடித் தேகம். கலைந்த நரைத்தத் தாடி. மொத்தமும் பரதேசிக் கோலம். ஆனால் கண்கள் மட்டும், பெரிய புருவங்களுக்கடியில், இரு கங்குகளென. அவருக்குப் பின்னால் நதி வெள்ளி மின்ன ஓடியது.
திடீரென்று, “அண்ணா, பேசாம நீங்க என்னோட பட்டனத்துக்கு வந்திருங்கோ. அங்க நீங்க இருக்க நான் இடம் பண்ணித்தரேன்,” என்றான். மீனாட்சி திரும்பிப் பார்த்தான்.
ராமுடுவின் புன்னகை விரிந்தது. “சரிதான்… வரணும்,” என்றார். பிறகு, “ஏன், அங்க இப்படியெல்லாம் இல்லையோ?” என்றார்.
நிழல்கள் நீளத் தொடங்கியிருந்தன. நிலவு மேற்குப்பக்கமாகச் சாயத் தொடங்கியிருந்தது. ராமுடு கூஜாவை எடுத்தார். திரவத்தை மூன்று குடுவைகளிலும் சமபங்காக அளந்து பிரித்தார். இந்த முறை எல்லோருமே குடித்தார்கள். நிதானமாக, சாயுஜ்யமாக.
“அங்க நீ என்ன படிப்பு படிக்கற?” மீனாட்சிநாதன் சம்புவைக் கேட்டான்.
“பி.ஏ.ஹிஸ்டரி. சரித்திரம்.”
“அதுக்கு என்ன உத்யோகம் கிடைக்கும்?” என்றான் மீனாட்சிநாதன் சந்தேகமாக.
“ஏன், சர்க்கார் உத்யோகமே கிடைக்குமே?”
“சரி. நீ முதல்ல படிப்ப முடிச்சு என்ன உத்யோகத்துக்குப் போறியோ போ. விவாகமும் நடக்கட்டும்,” என்றார் ராமுடு. “அப்புறம் நான் வரேன். பட்டனத்துலையும் என்ன தான் இருக்குன்னு பார்த்திடுவோம்”
“உங்க வெற்றிலையும் காவிரியும் இல்லாம தவிச்சுப் போயிட மாட்டீங்க?” என்று மீனாட்சி கேட்டான்.
ராமுடு யோசித்து, “அதுவும் உண்மை தான்,” என்று தலையை ஆட்டினார். யோசிக்கும்போது தலையை உருட்டி ஆட்டுவது அவர் வழக்கம். காவிரியைப் பார்த்தபடி மெல்ல தன் பானத்தைப் பருகினார். அவர் குரல் இயல்பாக பாடலுக்குள் புகுந்தது.
‘ஸாரி வெடலின ஈ காவேரி சூடரே!’
அவர் மேலே பாடுவார் என்று சாம்பு ஆர்வமாகப் பார்த்தான். ஆனால் அந்த ஒரு வரியை தனக்குள் என்பது போல் முணுமுணுத்தாரே தவிர, பாடவில்லை.
“டேய் மீனாட்சி, கொடுக்கா,” திடீரென்று சிந்தனை அறுந்தது போல் மீனாட்சிநாதனிடம் திரும்பினார் ராமுடு. “நாங்க இரண்டு பேரும் பட்டனத்துக்குப் போயிட்டா நீ மட்டும் இங்க என்னடா பண்ணுவ? நீயும் பேசமா வந்துடு.”
“அங்க ஏதாவது பழைய வீட்டுப் பரன்ல பனையோலை அடுக்கிக் கெடக்குன்னு சொல்லுங்கோ, வந்துருவான்,” என்றான் சாம்பு.
மீனாட்சி சிரித்து குனிந்து நெளிந்தான். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, கிராப்பு வெட்டின தலை, கோடு மீசை. என்றாலும் அவன் முகத்தில் ஒரு பெண் சாயல் இருந்தது.
“என்னடா சொல்றாறு உங்க ஐயறு? ஏண்டா அவருக்கு இந்த பொழப்பு? ஏதோ சவுண்டி பிராமணன மாதிரி. கண்டவாளோட பரன்ல்லையும் செத்த பழசையெல்லாம் போய் நோண்டீண்டு… அதுல அப்படி என்னடா இருக்கு? ஏதாவது அபிச்சாரம் பிடுச்சுண்டா என்னத்துக்காறது?” என்றான் சாம்பு.
“அது பழசு இல்லியாடா?” மீனாட்சி அதைச்சொல்ல சிரமப்பட்டான். காற்றில் அவன் விரல்கள் அலைந்தன. “அத்தன பழசா ஒண்ணு இருக்குன்றதுலியே அதுக்கு ஒரு இது இருக்கு. இதுன்னா…ஒரு வசீகரணம். அதாவது…காலம்ன்னு ஒண்ணு இருக்கில்ல… காலத்தோட அழுத்தம் ஒவ்வொண்ணையும் மங்கி உதிர்த்திட்டிருக்கு. அதை மறைய வச்சிட்டிருக்கு. ஆனா அத்தன மங்கலோடையும் சிதிலத்தோடையும் இது மட்டும் மறையாம இருக்கு… மறையாம இருக்குறது மட்டும் தான் நம்ம கையில கிடைக்குது. அது மறையாம இருக்குங்கறதே அத காலத்த மீறின ஒரு ஒளியோட தூக்கிக் காட்டுது…”
“ம்,” என்றார் ராமுடு. அவர் விரல்களைக் கோத்துத் தாடையை அதன் மேல் வைத்திருந்தார். மீனாட்சியை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார்.
மீனாட்சி சொன்னான். “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.”
சாம்பு “அபிச்சாரமே தான்,” என்றான். “இதுக்கு பொம்பள சகவாசமே தேவலைண்ணா. பொம்மனாட்டி மோகம் நீங்க சொல்றா மாதிரி மூணு நாளோ, முப்பது நாளோ. அவனவனுக்குத் தலையில எழுதின கணக்கு. இதென்ன ஜன்மஜன்மாந்தரமா பின்னாடி வர விஷயமால்ல படறது? டேய், உங்க ஐயருக்கு இப்ப என்ன அறுபது இருக்குமா? அந்த முதலிக்கு?”
“ஆதீனத்துல உள்ள சிவமூப்புகள் பலத்துக்கும் இப்ப இந்த பித்து தான் பிடிச்சிருக்குன்னு கேள்வி,” என்றார் ராமுடு.
“போடா. நான் அவர பட்டனத்துக்கு வரச் சொன்னா, நீ என்னடா ஒண்ணும்மே தெரியாத பழங்காலத்துக்குக் கூட்டிப் போகப் பாக்கற?” என்றான் சாம்பு.
“நீயும் காலேஜுல சரித்திரம் தானடா படிக்கற?”
“இந்த மாதிரி பழங்குப்பையெல்லாம் அதுல ஒண்ணும் கிடையாது பாத்துக்கோ. நாங்க படிக்கறது நவீன சரித்திரம். மாடர்ன் ஹிஸ்டரி.”
மீனாட்சி பெருமூச்சு விட்டான். “அது இருக்கலாம்டா. ஆனா எனக்கு இங்க இந்த மதியொளியில காவிரிய பாத்துட்டிருக்கறது தான் பிடிச்சிருக்கு. ராமுடு அண்ணா சொன்னது தான் சரி. எனக்கு இங்கிலீஷ்காரனோட பகட்டும் வெளிச்சமும் ஒண்ணும் பிடிக்கல. இந்த இருட்டு தான் எனக்கானது. பழைய சுவடிகளப் பார்க்கும்போதும் அது இத்தனை நாள் இருந்த இருட்டு தான் முதல்ல மனசுல தோணுது. எத்தனைப் பழைய வார்த்தைகள்! அதெல்லாம் ஒரு மனுஷக் குரல் சொல்லி எத்தனை நூறு ஆண்டு ஆகியிருக்கும்! உதட்டக் குவிச்சு அதைச் சொல்றப்ப நெஞ்சு பதைக்குதுடா.”
“அதுக்காக? எல்லாரும் உன்னை மாதிரி பித்துப்பிடிச்சு இருப்பாங்கன்னு நினைப்பா?” என்றான் சாம்பு. ராமுடு நீட்டிய கட்டிலிருந்து இரண்டு தாள் வெற்றிலையை பெற்றுக்கொண்டான். “உனக்கு தோது ஆனாலும், இல்லன்னாலும், காலச்சக்கரம் முன்னால ஓடீண்டு தாண்டா இருக்கப்போறது. எங்க புரொஃபெஸர் த மார்ச் ஆப் ஹிஸ்டரின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. படை மாதிரி அப்படியே அடுச்சுட்டுப் போயிட்டிருக்கும் நம்மள.”
“ஆமா. குடியானவங்கள்ளாம் வேதக்காரனாக்கிட்டிருக்கு அந்தப் படை,” என்றார் ராமுடு.
“நீங்களும் வேதக்காரனாகலாமேண்ணா?” என்றான் சாம்பு.
“ஆகலாம் தான். தஞ்சாவூருல்ல மாதாகோவில்ல ஒரு வேதக்கார பாகவதர்ட்ட கொஞ்சநாள் பாட்டுப்படிச்சேன். அவரு என்ன வேதம் மாறச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருந்தாரு. அப்புறம் அவங்க ஈசனோட மாதாவும் நம்ம தள்ளையப் போலன்னு சொன்னாங்க. ஹெஹெ. சரிதான், இவன் நம்ம சகோதரன், சாமியில்லன்னு இருந்துட்டேன்.”
“காலேஜுல என்னையும் பாதிரிமாரெல்லாம் எங்கக்கிட்ட வந்துடு வந்துடுன்னு சொல்றா,” சாம்பு சொன்னான். தன் குடுமியை தொட்டு, “குறைஞ்சது இதை எடுக்க வைக்கணும்னு ஆனமுட்டும் பிரயத்தனப் படறா. ம்ம்ஹும், மாட்டவே மாட்டேன்னுட்டேன். அப்பாக்கு நான் பட்டனத்துக்கு படிக்கப் போனதுல அதான் பெரிய பயம். டேய், மூத்தப் பிள்ளைடா, நீதான் சம்ஸ்காரம் பண்ணனும், அனுஷ்டானம் மறந்துடாதேடான்னு ஒரே பிலாக்கணம்.”
“அப்புறம் என்னத்துக்கு பட்டனம் அனுப்பினாராம்?”
“அது என்னவோ. நீ என்ன காலத்துக்கும் இங்க என்ன மாதிரி மரக்கால்ல நெல்ல அளந்துண்டு குடியானவனோட போறாடீண்டு காலம்தள்ளப்போறியான்னும் அவரே தான் கேட்டார். அவருக்கு நான் வெள்ளைக்கார சர்க்காருல சேரணுமாம். சூட்டு போடணுமாம். இங்கிலீஷ் பேசணுமாம். பட்டனத்துல விட்டத்துலருந்து தேளு விழாத மச்சுவீடு கட்டணுமாம்.”
“உனக்கு என்ன தோணுது?”
“எனக்கு பட்டணம் தான் பிடிச்சிருக்கு. இனிமே எல்லாமே பட்டனம் தாண்டா. பட்டனத்துல என்னென்ன வந்திருக்குன்னு நினைக்கற? உறஞ்சுபோன உன் சுவடிகளையே நீ பாத்துக்கிட்டிரு. அங்க இன்னும் கொஞ்சநாள்ல தூரதேசத்து மனுஷாள்ளாம் பண்றத இங்க இருந்தபடியே பார்க்கறபடிக்கி ஒரு சாதனம் வரப்போறதாம். ஒரு திரை. அதுல மனுஷா ஆடுவாளாம், பாடுவாளாம், பேசுவாளாம், இன்னும் பலதும் செய்வாளாம்… ”
“இது மட்டும் அபிச்சாரம் இல்லையா?” என்றான் மீனாட்சி.
“சரி, அபிச்சாரம் தான். ஆனா உன் அபிச்சாரத்துக்கு என் அபிச்சாரம் தேவலை. இது புதுவித அபிச்சாரமில்லையா?”
“டேய் கவிராயா, நான் உன்ன மாதிரி இதெல்லாம் உக்டார்ந்து யோசிக்கற ஆளு இல்லடா,” என்றான் சாம்பு. “அப்பாவுக்கு அந்த பயம் நிறையவே இருக்கு. சுக்ரீவன் வந்து வாலிய அடிச்சுட்டுப் போனா மாதிரி இந்த இங்கிலீஷ்காரனோட அலை நம்மளை அடுச்சுத் தூக்கீண்டு போய்டப்போறதுடான்னு அப்பப்போ சொல்றார்.”
“போகட்டுமே?” என்றார் ராமுடு. பின்னால் நதியின் மாறாத சலனம் கேட்டது. “இது கலியில்ல?” அண்ணனும் தம்பியும் மல்லாடணும்னு இருந்தா ஆடட்டும். வல்லவனுக்கு ஜெயம். பழசோட கசடெல்லாம் போகட்டும். ஒரு புது காலம் திரண்டு வரட்டும். போராட்டமும் ரத்தமும் கண்ணீரும் தான் அதுக்கான வழின்னா நாம என்ன செய்றது? அதுக்குக் குறைச்சலான போராட்டத்தையும் ரத்தத்தையும் கண்ணீரையுமா இந்தக் கலி நம்ம ஒவ்வொருத்தர்ட்டையும் வாங்கிக்கிட்டிருக்கு?”
சாம்பு அவரைப் பார்த்தான்.
“உன் தகப்பனாருக்கு பத்து வயசுல விவாகம் ஆகியிருக்கும். உனக்கு இப்போ பதிநேழு. மனசு பூராவும் பொம்பள நினைப்பு. இன்னும் உனக்கு விவாகம் பண்ணாம ஏன் உங்கப்பா தாமதிக்கறார்? ஏன் உன்ன பட்டனத்துக்கு படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அனுப்பறர்?” என்று தொடர்ந்தார் ராமுடு. “ஆசைடா. மனுஷ மனசு உள்ள புழுமாதிரி அவனுக்கே தெரியாம துளை போட்டுட்டிருக்கற ஆசை… அதோட வக்கிரத்துக்கும் வசீகரத்துக்கு அளவே இல்லை. காலம்பூராவும் அதுமேல நின்னுக்கிட்டு வாலியும் சுக்ரீவனும் தொடர்ந்து துவந்தம் பண்ணிட்டிருக்காங்க. அவங்க துவந்தம் நடக்கற களம் வேறெங்குமில்ல, மனுஷ மனசு தான்.”
நதியின் மூச்சுக்காற்று போன்ற அதன் சிலம்பும் ஓசை மட்டும் கேட்டது. சாம்புவின் முகம் ஆழ்ந்த சிந்தனை போன்ற பாவனையில் உறைந்திருந்தது. அது அவனுக்கு அத்தனைப் பழக்கமில்லை என்று அவன் முகம் காட்டியது.
“ராமுடு அண்ணா… ஆனா சுக்ரீவன் அவனா ஜெயிக்கலல்ல? வாலிய ராமபாணம் தாக்கி அவன் விழுந்ததனாலத்தானே சுக்ரீவன் ஜெயமானான்?”
ராமுடு சாம்புவைப் பார்த்தார். அவர் கண்களில் ஏதோ அறியாத யுத்தமொன்றில் வெற்றிபெற்றதுபோல் சிறிய ஒளிப்புள்ளிகள் தெரிந்தன.
“ஆமாம். ஒவ்வொரு யுத்தத்திலேயும் ராமனுக்கு ஓர் இடம் உண்டு,” என்றார் தில்லைஸ்தானம் ராமுடு. “ராமபாணத்துக்கு ஓர் இடம் உண்டு.”
4
மீனாட்சி அவரைப் பார்த்தான். “உங்களுக்கே ராமஜபம் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்,” என்றான்.
ராமுடு அவனை ஏறிட்டுப் பார்த்தார். “இருக்கலாம்,” என்றார். “எனக்கு எந்த கர்மாவும் கிடையாது. பக்தியும் கிடையாது. ஏன், மரியாதையும் கிடையாது. அப்பாவையும் அண்ணாக்களையும் பார்த்தே தெளிஞ்சுகிட்டேன் – பகவான் நாமம் பகல்ல எங்க இருக்கு, ராத்திரில்ல எங்க இருக்குன்னுட்டு. கார்த்தால காவேரியில முங்கி அவள்ட்ட வாங்கிப்பாங்க. சாய்ங்காலம் முங்குறப்ப நீயே பத்திரமா வெச்சுக்கோம்மான்னு திருப்பிக் கொடுத்துறுவாங்க. இல்லன்னா போற இடத்துல அதைவேற எங்க செறுகிறது? இது அவங்க ஜபமாலையில ஒரு மணி நகர்ந்தாமாதிரி.”
அதுவரை இல்லாத திடீர் கசப்பு மீனாட்சிநாதனை ஏதோ செய்தது. “அண்ணா, அப்படீன்னா நீங்க ஏன் விடாம நாமம் சொல்றீங்க?” என்றான் மீனாட்சி.
ராமுடு தோள்களைக் குறுக்கி தூரத்தில் மின்னிக்கொண்டிருந்த காவிரியைப் பார்த்தார். “என்ன சொல்லட்டும்? மீனாட்சிநாதா, நீ ஏன் பழைய ஏடுகளையும் சுவடிகளையும் ஓலைகளையும் தேடித் தேடி அலையற? அந்த பழைய குப்பையில என்ன கிடைக்கும்ன்னு நினைக்கற? உனக்கு ஏதோ கிடைக்குதில்ல?” என்றார்
மீனாட்சி யோசித்தான்.
“சொல்லு.”
மீனாட்சி சொன்னான். “ஒரு சுவடியில சின்னச்சின்னதா, உருண்டு நீண்டு எழுத்து பொறிச்சிருக்கிறதுங்கறது… ஏதோ பழைய மாயாலோகத்துக்கான துவாரத்தோட சாவித்துளை மாதிரில்ல. பூதங்களோட, வித்யாதரர்களோட, கின்னரகந்தர்வ புருஷர்களோட, யக்ஷினிகளோட உலகம் அந்தப்பக்கம் இருக்கு. வசீகர சௌந்தர்ய உலகம் ஒண்ணு. சில சமயம் அந்த எழுத்துருக்கள் மேல கண்ண ஓட விடறப்ப, அந்தப்பக்கத்துலெருந்து கண்கள் என்னைப் பார்க்கறா மாதிரி இருக்கு,” என்றான். சரியாகச் சொன்னோமா என்று சாம்புவைத் திரும்பிப் பார்த்தான். அவன் ராமுடுவை பார்த்துக்கொண்டிருந்தான்.
“ராமநாமமும் அந்த மாதிரித்தான்,” ராமுடு சொன்னார். “எனக்கு ராமனோட பராகிரமங்கள் மேலையோ, அவன் உருவத்துமேலையோ விசேஷமான மோகலெல்லாம் ஒண்ணும் கிடையாது. இதோ, இங்க கும்பகோணம் தொட்ட வழுவூர் இருக்கு. அங்க உள்ள ராமனுக்குப் தினப்படி கைங்கரியம் பண்ற ரங்கநாத பட்டனுக்கு அடியேன் ஒரு உபகாரம் செய்ய வேண்டி வந்தது. அதுக்கு பரோபகாரமா அவன் ஒரு வாட்டி எனக்கு அந்த ராமனை நிர்மால்யம் எடுக்கற வேளையில் யாருக்கும் தெரியாம திறந்து காட்டினான். அந்த உருவத்தைப் பார்த்தா உள்ளுக்குள்ள ஏதாவது ஆகுமோன்னு நினைச்சேன்.
“பேரழகான உருவம் தான். உங்களால நினைக்கவே முடியாத அழகுன்னு கல்பனைப் பண்ணிக்கோங்களேன்… ஆனால் என்ன அழகுன்னாலும், ஒரு மனுஷ தேகத்தை பார்க்கறோம்ன்ற உணர்வு மட்டும் விட்டு அகலவே இல்ல. அந்த உணர்வ என்னால ஒரு நொடிக்கூட மறக்க முடியல. இங்க ஆத்தங்கறைக்கு உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல. பெருமாளுக்கு பாட்டாலும் இசையாலும் கைங்கரியம் பண்ணின அடியார்களெல்லாம் அந்த உருவத்தைக் கண்டு கண்ணீர் மல்கியிருக்காங்க. ஆனா எனக்கு அப்படி ஒண்ணும்மே நடக்கல. ஒரு மாதிரி வெறுமனே இருந்தது உள்ளுக்குள்ள. போயும் போயும் இந்த மனுஷரூபத்தையா நைச்சியமா அழகுபடுத்திக் கொண்டுவந்து கோயில்கொண்டு நிறுத்தணும், அப்படீன்னு.
“டேய் பயலே, நரதேகம்ங்குறது ஆடியில புதுப்புனலா வர்ர காவிரி மாதிரி. புதுசாத்தான் வருது. ஆனால் வெள்ளம் எறங்கி வர வர ஆவணிக்குள்ள எத்தனை அழுக்கையும் சீலத்தையும் கொண்டு வர்ரது? டேய், இந்த நிலா வெளிச்சத்துல இந்த நதி மினுங்குற மினுக்கப் பார்த்து நாம மயங்கலாம். விடியும்போது எறங்கி “நர்மதா சிந்து காவேரி”ன்னு முங்கி எழலாம். ஆனால் உள்ளுக்குள்ள என்ன இருக்கு? அதை ஒருமுறை பார்த்தவன் மறக்க முடியுமா? அப்படிப்பட்ட நரதேகத்திலேயா தெய்வ ரூபம் இருக்கு?
“இங்க எத்தனை பஜனை கோஷ்டிகளுக்கு தம்பூரா மீட்டியிருக்கேன், சப்ளா தட்டியிருக்கேன். ராமா ராமா ராமான்னு ஒரே ஆராவாரமா, களேபரமா இருக்கும். பேறு தான் பஜனை, கோஷ்டிகானம். ஆனா அசப்புல என்னவோ தன் குரல ஒசத்தினா தன்னோட பக்தி மட்டும் ராமனுக்குத் தனியா தெரியும்ன்னு ஒவ்வொருத்தனும் நினைச்சுப் பாடற ஒரு ஏற்பாடு. அதுக்கு பிரம்மமுகூர்த்தத்துல முழிக்கணும், முந்தாநாள் ராத்திரி விரதம்ன்னு கணக்கு. முந்தாநாள் பகல் அவங்க சாப்பிடற சாதத்துக்கும் நெய்க்கும் கணக்கு இருக்கா? அதுக்கு முந்தானாள் ராத்திரி தலைமறைவா உண்ட மத்யம் அதுக்குள்ள மூத்திரத்திலும் மலத்திலும் பிரிஞ்சு வந்திருக்குமா? இதெல்லாத்தையும் உருவத்துல தாங்கிக்கிட்டு ஓங்கித்தாங்கி நடந்து வர்ரது. பகலெல்லாம் ராமா ராமா ராமான்னு கைத்தட்டும் கூப்பாடும். எச்சில் தெறிக்க, உடம்பெல்லாம் வெப்பநீரும் வேர்வையும் சொட்ட, தோள்ல தொங்கற துளசிமாலையும் கற்பூரமும் அந்த கந்தத்தைத் தாங்க முடியாம மறைக்க… அப்படியே வீட்டுக்குப் போயி பாரியாள் மேல விழுந்து அவ சதையில பூசி பஜனைப் பலனை சகதர்மிணியோட பகிர்ந்த திருப்திய அடஞ்சு… சுபம், மங்களம். நா கொடுக்கா, இவா சொல்ற ராமனை பக்தியுடன் நினைத்துக்கொள்ள எனக்கு எந்தக் காரணமும் இல்ல.
“ஆனா என்னுடைய குருநாதர் அந்தப் பெயரை எனக்குக் கொடுத்துவிட்டார். அவர் எனக்குக் கையளிச்ச ஒரே விஷயம் அந்த நாமம் மட்டும் தான். அதை என்னால விட முடியல. எங்கியோ பொறுக்கின கல்லச் சும்மா உள்ளங்கையில திருப்பிக்கிட்டே இருக்கறா மாதிரி அந்த பெயரச் சொல்ல ஆரம்பிச்சேன்.
“தொடங்கினப்ப உருட்டி உருட்டித்தான் சொன்னேன். ஏன் சொல்றேன்னே தெரியாம சொன்னேன். ஆனால், பயல்களா, யோசித்துப்பாருங்க. அது எத்தனைப் பழைய பெயர்! ஆதிகவி வால்மீகி முப்பத்துமூணு கோடி முறை சொன்னதாக ஐதீகம். அதிலேயும் அவர் ராமா ராமா என்று சொல்லல்ல. மாறா மாறான்னு தான் சொன்னார். மாறனோட பெயர்! மாறனோட பெயர் ராமனோட பெயரோட பழசு இல்லையா? மாறன் ராமனுக்கு ஒரு நொடி மூத்தவன் இல்லையா? ஏன்னா மாறனோட பெயரைச் சொல்லப்போனதுல தான ராமனோட பெயரே வால்மீகிக்கு வந்தது?
“நானும் ஒரு கட்டத்துல மாறா மாறான்னு சொல்ல ஆரம்பிச்சேன். ராத்திரியெல்லாம் மாறா மாறான்னு சொன்னா பகல்ல ராமா ராமான்னு மாறிடாதான்னு ஒரு ஆசை. ராத்திரி பழமா இருக்குறது பகல்ல சாராயமா வடிச்சு வர்ரதில்லையா? டேய் சாம்பா, பொம்பளை அனுபவமில்லியான்னு கேட்டியே? ஆமாண்டா, எனக்கு பொம்பளை தேகம்ன்னா என்னன்னு தெரியாது. அதுக்குன்னு மாறனத் தெரியாதுன்னு இல்லை. மாறனத் தெரியாதவன் ஒரு மனுஷன் இல்லை இந்த உலகத்துல. ஆனா எனக்கு அவன் தம்பி ராமனைத் தெரியாது. எங்கிட்ட இருக்கப்பட்டது அந்தப் பெயர் மட்டும் தான்.
டேய் மீனாட்சி, அந்தப் பெயரும் சுவடியில பொறிச்ச ஒரு பழைய வார்த்தைன்னு புரிஞ்சுக்கோ. அந்தச்சுவடி நம்ம சித்தம் தான். அந்த இரண்டு எழுத்து மட்டும் தான் அந்தச் சுவடியில செதுக்கப்பட்டிருக்கு. ஆனா எத்தனை ஆழமான செதுக்கு! நீ சொல்றா மாதிரி அதோட கண்ணுக்குள்ள ஒவ்வொரு நாளும் நோக்க வேண்டியதுதான். ஒரு நாள் அது திரும்ப நம்ம கண்ணப் பார்க்கும்ன்ற நம்பிக்கையில. பாத்துக்கிட்டிருக்கேன், ஒவ்வொருநாளும் பாத்துக்கிட்டிருக்கேன். இதுதான் என் அனுபவம்.”
“நீங்க ரொம்ப அனாச்சாரமான சமாச்சாரங்களா பேசறேள்!” சாம்பு இடைமறித்தான். “ராம விக்ரகத்துல ராமர் எங்க இருக்காருன்னு உங்களுக்குத் தெரியலன்னா உங்க பார்வை சரியானதில்லன்னு அர்த்தம். இத்தனக்கோடிப் பேர் பூஜிக்கற பகவான் உங்களுக்கு மட்டும் தெரியிலன்னா உங்கள்ளத்தான் குறை.”
ராமுடு அவனை பேசாமல் பார்த்தார். “இருக்கலாம்,” என்றார்.
“சரி, ராமனோட பெயருக்குப் பின்னால ராமன்னு ஒருத்தன் இருக்காங்கற நம்பிக்கை மட்டும் எங்கிருந்து வருது உங்களுக்கு? அந்த நம்பிக்கை இல்லன்னா, நீங்க ராமனோட பெயரைக் கூட சொல்லாண்டாமே?”
“லேதுறா. ராமன் இருக்கான். இதை நம்பிக்கைன்னு சொல்லல்ல. கண்ணு பார்க்கற பார்வையா சொல்லல. பாம்பு பக்கத்துல இருந்தா மூக்கு எப்படியோ அறியுறதுல்ல? அந்த மாதிரி சொல்றேன்.
“நா கொடுக்கா, என் குருநாதர் சொல்வார். நம்மளால ராமனக் காண முடியாது. அனால் சில சமயம் அவனோட அம்பைக் கண்டுற முடியும். புராணத்துல வருமே? மரத்துக்குப் பின்னாலெருந்து காத்து மாதிரி சீழ்க்கையூதிகிட்டே வந்து சரியான இடத்துல தெச்சு நிக்குற ராமபாணம். அந்த ராமபாணத்தப் பார்க்குறப்ப நமக்குத் தெரியும். அங்க ராமனோட கை இருக்குன்னு. ராமனோட கை தெரிஞ்சிருச்சுன்னா ராமன் ரொம்ப தூரமாவா இருக்கப்போறான்?”
5
நதி வெள்ளி கரைந்து சென்றது. எழுந்துவந்த வாற்றில் மீனாட்சிநாதனின் தலைமுடி அசைந்தபோது அதன் இழைகள் வெள்ளி கொண்டு மின்னின. நிலாவெளிச்சத்தில் அவன் முகம் கருமையிலிருந்து நீண்ட ஒரு தாமரைமொட்டெனத் தோன்றியது. நிறைந்துக், கூம்பி, எந்நேரமும் நீர்த்தெறிக்க அலர்விரியும் என்பது போல்.
“அண்ணா.”
‘ம்?”
“நான் பார்த்திருக்கேன்.”
“என்னடா?”
“நீங்க சொல்லவர்ரது எனக்குப் புரியுது,” அவன் குரல் இலேசாக நடுங்கியது.
மீனாட்சிநாதன் சொன்னான். “இரண்டு வருஷத்துக்கு முன்னால கபிஸ்தலத்துக்குப் பக்கத்துல ஒரு சதுர்வேதிமங்கலத்துல உள்ள ஒரு பழைய அகத்துல நிறைய சுவடிகள் இருக்குன்னு கேள்விப்பட்டுப் போனோம். நானும், ஐயரும், ஆதீனத்திலெருந்து சிவனடியார் பிள்ளையும், பக்கிரிசாமி முதலின்னு ஒரு சினேகிதனும்.
“அந்த வீடே மொத்தமும் கைவிடப்பட்டிருந்தது. அதுல இருந்தவ ஒரே ஒரு மூதாட்டி. சீத்தம்மான்னு பேரு. அவங்களுக்கு நிலம் உண்டு, ஆனால் தாயாதிகள் யாரோ அதுக்கு உரிமை எடுத்துட்டாங்க. இவங்களுக்கு கொஞ்சூண்டு நெல்லும் காய்கறியும் மட்டும் அப்பப்ப அனுப்பிவைப்பாங்கன்னு ஏற்பாடு. அது எப்ப வரும்ன்னு சொல்ல முடியாது. பட்டினி தான். நாங்க சுவடிகள தேடறோம்ன்னு எபப்டியோ கேள்விப்பட்டு அத வித்தா நாலு சக்கரம் கிட்டலாம்னு செய்தி சொல்லி அனுப்பினாங்க. போனோம்.
“ஐயரு சொன்னாரு. இதுல ஒண்ணும் காணறதுக்கில்ல. இத அடுக்கி ஒரு வழிக்குக் கொண்டு வர அளவுக்கு நேரமோ செல்வமோ நம்மக்கிட்டக் கிடையாதுன்னு. அவர் அப்படியே கிளம்பச் சித்தமா இருந்தாரு. சிவனடியார் பிள்ளைக்குத்தான் மனசு கேட்கல. கொஞ்சமாவது பார்ப்போம்ன்னு கெஞ்சினாரு.
“அவங்க பேசிக்கிட்டிருந்த சமயத்துல விடாம நானும் பக்கிரியுமா சும்மா ஒவ்வொண்ணையா எடுத்து நோக்க ஆரம்பிச்சோம். ஒரு கால் மணிநேரம் தான் இருக்கும். பக்கிரி கண்ல தான் அது மொதல்ல பட்டது. ‘என்னடா இது?’ன்னான்.
“அந்த ஓலையில, மேற்புறம் இடதுபக்கமா, பிள்ளையார்ச்சுழி போடுவோமே, அந்த இடத்துல, ஒரு துளை. பூச்சி அரிச்சது தான். ஆனால் பூச்சி எப்பவும் அரிக்குறது போல பொடுசா இல்லாம, அழுத்தமா ஒரு சின்ன பொட்டு வைச்சா மாதிரி இருந்தது.
“அந்த ஓலையப் படிச்சேன். அண்ணா, அது நாங்க தேடிட்டிருந்த நாகசூடாமணி காப்பியத்தோட நூன்முகச் செய்யுள். வேறொரு சுவடியில இருந்த மேற்கோளோட சரியா பொறுந்தியிருந்தது. போய் காண்பிச்சோம். ஐயறு பதறிட்டாறு. டேய், இது போட்டத் துளை மிச்சதுல இருக்கும் பாருன்னார்.
“அந்த நாள் முழுக்க அந்த ஓலைகளை பிரிச்சு அறிஞ்சோம். மாலைக்குள்ள காப்பியமே கையில கிடைச்சிருச்சு. மொத்தம் ஏழு கட்டா எழுநூத்து நாற்பத்தஞ்சு ஓலைகள். சேர்த்து அடுக்கியிருந்த ஏதோ காலத்துல பூச்சி மொத்தத்துலேயும் துளை போட்டு மறுபக்கத்துக்கு போயிருக்கு. கண்ணுக்குத் தெரியாத கோணி ஊசி மாதிரி கண்ணுக்குத்தெரியாத திரியால ஏடுகளை தைச்சிருக்கு.
“‘ஒரே தாய்க்குப் பிறந்த ஏழு பையனுங்க உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் அவ பேரைச்சொன்னா இணையுறா மாதிரி இந்தத்துளை எல்லா சுவடிகளையும் சேர்த்திடுச்சுடா,’ என்றார் சிவனடியார் பிள்ளை. அப்போ ஐயர் என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா? அது ஏழு மரத்தைத் துளைச்சுட்டுப் போன ராமர் சரம், என்றார். அப்படித்தான் நாகசூடாமணி காப்பியத்த எங்க ஐயா கண்டுபிடிச்சு பதிப்பிச்சாரு.”
மீனாட்சிநாதன் சொல்லி முடித்தான். தீவிராமாகவும் உணர்ச்சிகரமாகவும் அதுவரை காற்றை நிறைத்த அவன் குரல் ஓய்ந்த இடத்தில் வெறுமை குடிகொண்டது. சாம்பு அவனைக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ராமுடு பெருமூச்சு விட்டு கூஜாவில் இருந்த கடைசி பங்கு திரவத்தை மூன்று பாகமாகப் பிரித்து ஊற்றினார். மீனாட்சி அதை வெறுமனே பார்த்தான். சாம்புவும் குடிக்கவில்லை. ராமுடு மட்டும் தன் வழக்கத்தின் படி ஒரு சிறு மிடரை அருந்திச் சாய்ந்து கண்ணை மூடினார்.
“பயலுகளா, இப்போ ஒரு பெத்த வார்த்தை சொல்லப்போறேன். மன குருகாரு, அவர் சொன்ன வார்த்தை. வாடுக்கி நாதபிரம்ம சுவாமி மீதா சால பக்தி. சால பிரேமா. அன்னி சௌஜன்யமு. வாரு – எவரு? திருவையாறு நாதபிரம்ம ரிஷிகாரு – ஶ்ரீராமன குறிச்சி செப்பாரு. ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய.
“நா கொடுக்கா, இந்த உலகத்துல எது வேணாலும் பொய்யாப் போகலாம். ஆனால் ராமனோட பேரும், அவன் சொல்லும், அவன் அம்பும், அவன் மாங்கல்யத்த தரித்தவள் மேல கொண்ட காதலும் பொய்ப்பிச்சே போகாது. இது என்னோட குருநாதரோட வாக்கு. அவரோட குருநாதர் அவருக்குக் கொடுத்த வேதம். இந்த உலகத்துல நாம பிடிச்சுக்கக்கூடிய பற்றுன்னு எதுவுமில்ல. எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.”
6
திடீரென்று அவர் குரல் உசந்தது.
“ஜகத்து சாரா ராம் கீ சர்கா மே
பீன் ஹுஆ ஜீனி சதரியா!
முதல் வரியை ஓங்கலாக, நீட்டி, இழுத்துப் பாடினார். ஆனால் பீன் ஹுஆ, என்ற இரண்டாம் வரிக்கு வந்த போது அவர் குரல் தாழ்ந்தது.
அப்படியே ‘ஜீனி’, ‘ஜீனி’, ‘ஜீ…னி’ என்று வெகுநேரம் வெண்ணையை வழிப்பது போல் கொஞ்சி, வருடி, மெல்ல இறகு போல் இறங்கி வந்து நிறுத்தினார் – ‘ச-த-ரி-யா’. மீனாட்சிநாதனுக்கு அந்த வார்த்தை சீனி… சீனி… என்று இனித்தது.
அவருடைய குரலை மீனாட்சி முன்னால் கேட்டிருந்தாலும் அந்த நைந்துபோன உடலுக்குள் அத்தனைப்பெரிய குரல் எப்படி இருக்க முடியும் என்ற துணுக்குறலை அவன் மீண்டும் அடைந்தான். சாம்புவைப் பார்த்தான். அவன் வாய் திறந்திருந்தது. மந்திரித்து விட்டதுபோல் இருந்தது அவன் முகம்.
ராமுடு ஓங்கிப் பாடத் தொடங்க, செல்லப்பெட்டியில் அவர் கை தானாக தாளம் தட்ட ஆரம்பித்தது.
“ராம் பாண் சே பீன் ஹுஆ ஹே
ஜகத்து சாரா கா ஜீனி சதரியா!
ராம் நாம் சே லிகா ஹுஆ ஹே
மானூஷ் கா லிக், ஜீனி சதரியா!
ஓ, ஜீனி சதரியா, ஜீனி சதரியா,
ஜீனி சதரியா, ஜீனி சதரியா,
ராம் நாம் சே லிகா ஹுஆ ஹே
மானூஷ் கா லிக், ஜீனி சதரியா!
ராம் பாண் சே பீன் ஹுஆ ஹே
ஜகத்து சாரா கா ஜீனி சதரியா!”
“ஜீனி… ச-த-ரி-யா” என்ற பதத்தில் நிரவல் போல் அவர் எடுத்தபோது அது வானென்றும் நட்சத்திரங்களென்றும் நதியென்றும் வெடித்துக் கண்ணுக்குத்தெரியாதத் திவல்களாகத் தெறித்தது போல் இருந்தது மீனாட்சிக்கு. அவர் குரல் மெல்ல தாழ்ஸ்தாயிக்கு இறங்கி வந்து மறைந்தபோது அந்த அமைதியில் வானுமும் நட்சத்திரங்களும் நதியும் நீடித்திருந்ததைக் கண்டு அவன் துணுக்குற்றான். இது மாயத்தோற்றமென்பது போலவும், அப்போது கண்ட அந்தத் தெறிப்பின் கணம் தான் நிஜமென்றும் தோன்றியது அவனுக்கு.
அந்த அமைதியில் ராமுடு மீண்டு வந்து இன்னொரு மிடர் அருந்தினார். அதுவரை மலை போல் ஒங்கியிருந்த அவர் உடலில் சிறிய நடுக்கம் தோன்றியதை மீனாட்சி கவனித்தான்.
“அப்படீன்னா என்னண்ணா?” என்றான். “ஜீனி சதரியா?”
“துணி. மிக மிருதுவான, காத்து மாதிரியான துணி,” என்றார் ராமுடு. அவர் குரல் இப்போது மிகமிகத் தாழ்ந்திருந்தது. “ராமன்ற தறியில ராமபாணத்தால ராமநாமத்தோட நூலால நெய்யப்பட்டத் துணியில அவர் மைய்யால மனுஷ வாழ்க்கை எழுதப்பட்டிருக்குன்னு போகுது பாட்டு.”
“என்ன பாஷை இது?” என்றான் சாம்பு.
“இந்துஸ்தானி. நாகப்படினத்துல ஒரு முஸல்மானி பாடிக் கேட்டுக் கத்துக்கிட்டேன். ஒரு ஸ்த்ரீ.”
“ஸ்த்ரீயா?” என்றான் சாம்பு.
“பரதேசி ஸ்த்ரீ. செய்யிது தாஹிரா பீவி ‘மஸ்தானி’ன்னு பேரு. குண்ணங்குடியில இருந்த ஒரு பரதேசியோட வழிவந்தவன்னு சொன்னா. அதான் அந்தப் பேர வெச்சுக்கிட்டாளாம். அங்க அவள எல்லாரும் மாலிகான்னு கூப்பிடுவாங்க. அவ மட்டும் ‘இந்த மஸ்தானி’ன்னு தன்னச் சொல்லிக்குவா.” மிக ஆழமான இடத்திலிருந்து வந்தது அவர் குரல். “அவ கிட்டையும் கொஞ்சகாலம் இருந்து பாட்டுப் படிச்சேன். மனோன்மணிக்கண்ணியும் பராபரக்கண்ணியும் திருப்புகழும்… இப்ப சொன்னேனே, நாதப்பிரம்ம பாகவதர்? வாடுனிகி கானகளு கூடா மொதமொதல்ல அவங்கக்கிட்டத்தான் படிச்சேன். ஆ ஸ்திரிக்கி அன்னி தெல்சு,” என்றார்.
காவிரியிலிருந்து காற்று பெருக்கெடுத்து வந்தது. மீனாட்சியின் தலைமுடி பறந்தது. அவன் வேட்டி பறக்கவே பிடித்துவைத்துக் கொண்டான். ராமுடுவின் கந்தலான ஆடைகளும் பறந்தன. ஆனால் அவர் அதைத் கண்டது போலவே தெரியவில்லை.
ராமுடு பெருமூச்சு விட்டார். “இந்த ஜென்மத்துல நான் பார்க்கல. இதுவரை பார்க்க வாய்க்கல எனக்கு. ஆனால் பார்த்த ஒருத்தரை எனக்குத் தெரியும். வேணும்னா அவரோட கதைய சொல்றேன்,” என்றார்.
7
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார்:
“அடியேனோட கதை, இதோ இப்போ சொல்லிக்கிட்டிருந்தேனே, அந்த ஶ்ரீபாத பஞ்சநாத பிரம்மம்ங்கற திருவையாறு நாதபிரம்ம பாகவதர பற்றியானது. நூறு வருஷத்துக்கு முன்னால இங்கே வாழ்ந்த ஒரு சங்கீத விதூஷகர் அவர். மகானுபாவுலு.” கைக்கூப்பினார்.
“பழைய திருவையாறு ராமாமிர்த பிள்ளை, தன் கடைசி காலத்துல எங்கிட்ட சொன்ன கதை இது. அப்போ நான் சின்னப் பையன். உங்கள மாதிரி கொடுக்கன். நான் கேட்டத அப்படியே உள்ளுக்குள்ள சேமிச்சு வெச்சுகிட்டேன். இன்னிக்கி, அவர் எங்கிட்டச் சொன்ன கதைய, அப்படியே, பிசகில்லாம, வார்த்தை மாறாம, உங்கக்கிட்ட சொல்லப்போறேன்.”
மேகங்கள் எங்கிருந்தோ வந்துவிட்டிருந்தன. நிலா மறைய வெளிச்சம் குறைந்திருந்தது. விடிய சற்று நேரமே இருந்தது. இருந்தாலும் இரவு பலமடங்கு ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அந்த இருட்டிலிருந்து தில்லைஸ்தானம் ராமுடுவின் குரல் மட்டும் அடர்ந்து, ஒரு பழைய, நன்கு தெரிந்த வாசனை போல் மிதந்து வந்தது.
“நீங்க சின்னப் பசங்க, உங்களுக்குத் திருவையாறு ராமாமிர்த பிள்ளையத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. அவர் இப்போ இல்ல. இறந்து கொஞ்ச வருஷம் ஆறது. அவர், இதோ, இங்க இப்படியே காவேரிய ஒட்டிக் கிழக்கால போனா வர்ர பெரிய அரசமரத்தத் தாண்டியுள்ள மசாணத்துலதான் எரிஞ்சார். இந்த மாதிரி இராத்திரியில நீங்க கூர்ந்து கேட்டா அந்த அரசமரத்தோட நாக்குகள் பேசர செய்தியெல்லாம் கேட்கும். நாசியத் தீட்டி முகர்ந்தா அங்க இப்போ எரிஞ்சிட்டிருக்கற சிதையோட வாடைக்கூட காத்துல வரும். எனக்கு வருது. அவரை சிதைமூட்டியது நான் தான்.
“அப்படிப்பட்டவங்களுக்குப் பிறந்த ராமாமிர்தம் சின்ன வயசுலேயே பழைய திருவாலங்காடு நயினார் மாதிரி வருவார்ன்னு பேச்சு இருந்தது. ஒரு கனகம்பீரமான சாரீரத்துக்கு எல்லா சாத்தியத்தையும் இருந்த குரல். அந்த மகாபுருஷரே இந்தச் சின்ன கொடுக்கன் பாடினதக் கேட்டு அவன் காதைத் தொட்டு ஆசீர்வாதம் பண்ணினாராம். அந்த நம்பிக்கை வீண்போகாம இருக்கணும்னு ஒரு குறையும் வைக்காம அவருடைய தள்ளையும் வாத்தியார்மாரும் அவருக்குச் சாதகம் கொடுத்தாங்க.
“எல்லாம் கூடி வந்துட்டிருந்த வேளையில, உதட்டுக்கு மேல மயிர் அரும்பற காலத்துல, அவருக்குக் குரல் போச்சு. குரல் போச்சுன்னா… டேய், பயலுகளா, பாட்டுக்காரனுக்கு குஞ்சே போனாலும் பரவால்ல. ஆனா குரல் போகக்கூடாது. அதுவும் திருவாலங்காடு நயினார் பாட்டக் கேட்ட, அவரைப் பார்த்த, அவரோட கைத்தொடுகைய ஆசியா அறிஞ்ச இளசுக்குக் குரல் போறதும் உயிர் போறதும் ஒண்ணு தான்.
“பாட்டுக்காரனுக்கு குரல் உடையறதுன்றது பொம்பளையாளுக்கு மொத ராத்திரியில கன்னித்திரை உடையறாமாதிரி. தேங்காய் மாதிரி ஒரே போடுல ‘டுப்’ப்புன்னு உடையணும். விதி குறிக்கிட்டு உடையலைன்னா, வேதனை நீடிச்சு இழுக்கும். சங்கீதக்காரனுக்குக் குரல் வளைஞ்சு விளங்காமலே போயிடும்.
“அவருக்கு நடந்தது அது தான். அவருக்குள்ள சங்கீதம் புயலா அடிச்சுது. ஆனா குரல்ல ஏறாது. ஏறரா மாதிரி வரும். அப்புறம் அப்படியே போயிடும். மலை நிழலாடற பூமியில மேகம் கருக்கறா மாதிரித் திரண்டு ஒரு துளிக்கூட போடாம பசப்புக் காட்டிப் போகுமில்ல, அந்த ஏமாத்தத்த பெரியவரு தினம் தினம் அனுபவிச்சாரு.
“பாட்டும் விளங்கல. நட்டுவாங்கமும் தோது படல்ல. வாத்தியமும் கத்துக்க காலம் பிந்திருச்சு. இவரு வேதனையப் பார்க்க சகிக்காம அம்மா இறந்துட்டா. அப்புறம் அலைச்சல் தான். அவரும் கலியாணம் செய்துக்கலை. அரண்மனையில உத்யோகம் பார்த்தார். அப்போ கம்பேனிக்காரன் வந்துட்டான். பேருக்குத்தான் சிம்மாசனத்துல ராஜா, கோட்டையெங்கும் அவன் ஆட்சி தான். அப்புறம் அரண்மனை வாசம் பிடிக்காம வெலகிட்டாரு. அங்கேயும் இங்கேயும் தீர்த்தாடனம். ஒரு கட்டத்துல இதோ, இங்க நாம உட்கார்ந்திருக்கோமில்லையா, இதே மண்டபத்துல தான் அவர் வாசமிருக்கத் தொடங்கினார். சிறுசுகள் நாங்க வந்து சுத்தி உட்கார்ந்தா கதை சொல்வார். பாகவதக் கதைகள், புராணக் கதைகள். அவரே நேர்ல பார்த்த பழங்கதைகள். அந்தக் கதைகளே புராணக் கதைகளப்போலத்தான் இருக்கும்.
“அப்போதான் எங்க அண்ணாக்கள் என்ன விலக்கி விட்டிருந்தாங்க. எனக்கும் இந்த மண்டபம் தோதா இருந்தது. இந்த மாதிரி பல ராத்திரிகள இதோ, இதே மாதிரி இந்த காவேரிய பார்த்துகிட்டே திருவையாறு ராமாமிர்த பிள்ளையோடு நான் கழிச்சிருக்கேன். அவர் என்ன மகனைப் போல பார்த்ததுக்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு ராமுடுன்னு பெயர் போட்டதும் அவர் தான். சொல்லப்போனா எனக்கு ராமஜபத்த எடுத்து கொடுத்ததா சொல்றாங்களே ஒரு பரதேசி, அவர் வேறு யாரும் இல்ல, திருவையாறு ராமாமிர்த பிள்ளை தான். கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.
“அதனால, இப்போ நான் திருவையாறு ராமமிர்தம் பிள்ளையோட பெயரச் சொல்றப்ப, காவிரிக்கரையில பிண்டமிடறத் தருணத்துல தனையன் தகப்பனோட பெயர சொல்ற பாவனையோடச் சொல்றேன். அப்படி அவர் பெயரைச் சொல்றப்ப அவருடைய ஆத்மா இந்த இரா காத்துல எழுந்து வந்து இங்கே இப்படி நம்ம பக்கத்துல உட்காரவும் செய்யலாம். ஏன்னா அவருக்கு உரிமையான நீரையும் எள்ளையும் பிண்டத்தையும் கொடுக்க இந்தக் கதைய நீட்டுறதத் தவிர எனக்கு வேற வழி இல்ல. அவர் எனக்குக் கொடுத்ததெல்லாம் இந்தக் கதைகளைத்தான். என் ரத்தத்துல பலம்னும் சக்தியுன்னும் கலந்ததெல்லாம் அது மட்டும் தான். அவருக்கு பலமும் சக்தியும் கொடுக்கணும்னா இந்தக் கதைகளைத்தான் திருப்பிக் கொடுக்கணும், எங்கிட்ட வேறு ஒண்ணுமில்ல.
“அய்யோ, சின்னா, பயந்துட்டிங்களா? இது பயப்பட வேண்டிய சமாச்சாரமில்ல, ரொம்ப மங்கலமான விஷயம், பாத்துக்குங்க. ராமன் கதைய எங்கல்லாம் சொல்றோமோ அங்கெல்லாம் அனுமனுக்கு ஒரு இடத்த விரிக்கிறதில்ல? அந்த மாதிரித்தான். இந்தத் திருவையாறு ராமாமிர்த பிள்ளை இருக்காறே, அவரும் ஒரு அனுமன் தான். அனுமன் ராமனைத் தன் கண்ணால பார்த்தா மாதிரி, அவரு பஞ்சநாத பிரம்மத்தத் தன் கண்ணால பார்த்திருக்கார். இப்போது கூட அந்த மகானுபாவுலுவோட கீதங்கள அகங்ககளிலும் க்ஷேத்திரங்களிலும் தீர்த்தங்களிலும் அவரோட சீடர்கள் பாடிக்கிட்டிருக்காங்க, தெரியுமா? ராமநாமநாத வெளி, அது. அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க.
“பயல்களா, என் குருநாதர் பஞ்சநாத பிரம்மத்த மட்டும் காணல. குறைஞ்ச ஆயுசுலேயே மறைஞ்சதாகச் சொல்லப்படற அவருடைய அனுஜரான ஜப்யேச பாகவதரையும் அவர் கண்டிருக்கார். வாலி-சுக்ரீவன மாதிரியான அண்ணன்-தம்பிமார். அவங்களோட கதையத் தான் இப்போ நான் சொல்லப் போறேன்.
“காலாதீதமான கதைடா இது. ஏன்னா இது காலத்தோட கதையும் கூட. நீங்க என்னக் கேட்டிங்கல்ல, அந்த ராமபாணத்தை பார்த்ததுண்டான்னு. அதனோட கதை இது. அந்தப் புனிதமான கதையச் சொல்லத் தொடங்கறேன்.”
8
“நா கொடுக்கா, இந்தக் கதைய சங்கீதம் இல்லாம சொல்ல முடியாது. ஏன்னா நான் சொல்லப்போறது சங்கீதத்தோட கதையே தான். மனுஷ மனங்களுக்குள்ள ராமபாணத்த மாதிரி துளைப்போட்டு துளைப்போட்டு போகுதுடா சங்கீதம். இந்த ஏழேழு லோகத்தையும் மிக மிருதுவான, கண்ணுக்குத் தெரியாத துணி மாதிரி இணைக்குறது சங்கீதத்தோட இழைகளுன்னு என் குருநாதர் சொல்வார். அதைத்தான் பரதேசிகள் கண்டு பித்து ஏறிப் பாடறாங்க. அந்த வஸ்திரத்தத் தொட்டுவிட முடியாதாங்கறதுதான் ஒவ்வொரு சங்கீதக்காரனோட ஏக்கமும். கண்ணுல கட்டோட வெட்டவெளிப் பொட்டலெல்லாம் கேளாப் பாட்டுக்காக நாயா அலையணும்ன்றது அவன் விதி.
“நான் சங்கீதக்காரனில்லை. ஆனா அந்தச் சீலையோட அசைவ உணர்ந்த படுபாவி நான். இனிமே இந்த ஜென்மத்துல அந்த வாசம் என்னை விடாது. அப்பேற்பட்ட வஸ்திரத்த தொட்டவரு மட்டுமில்ல. உடலாப் போற்த்தி அதோட மடிப்புகள் படபடக்க வானத்துக்கும் பூமிக்கும் எழுந்து நின்ன மகானாக்கும், என் குருநாதர் தொண்டு பண்ணின திருவையாறு பஞ்சநாத சுவாமி என்கிற நாதபிரம்ம பாகவதர். அவர் அடியாருக்கு அடியாருக்கு அடியார் நாம.
“அவர் பாட்டப் பாடாம இந்தக் கதைய எப்படிடா தொடங்க முடியும்? ஆகவே கேளுங்க. அவருடைய பிரக்லாத விஜயமு நாடகத்தோட நாந்தி பாட்டப் பாடித் தொடங்கறேன். நம்ம கதையோட நாயகனும் அந்த காவியத்தோட பிரக்லாதனைப் போல பரம சாத்வீகன். பக்தன். ஹிரண்யனப்போல வீரதீர பராகிரமன். பகவானைப்போல அறிவுமூத்துத் தீவிழிச்செழுந்த சிம்மம்.”
நாட்டை ராகத்தின் சித்திரத்தைக் கொடுத்து எழுந்து விண்ணை முட்டியது அவர் குரல். உணர்ச்சிப் பொங்க, வீரமும் காதலும் தொனிக்க அவர் பாடினார்.
“ஜகதன்னிகி பிராண நாயகா!
ஜெய சத்குண காரகா!”
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார்:
“அப்போ திருவையாறு ராமாமிர்த பிள்ளைக்கு மனத்துல பெருத்த சங்கீதம் ஓடினாலும் தஞ்சாவூர் அரண்மனை வாத்தியக்குழுமாருக்குத் ஜால்ரா தட்டுறதைத் தவிற வேற உத்யோகம் கிடைக்கல. ஆனால் அது அரச உத்யோகம். சக்கரமும் மத்ததும் உண்டு. தவிர, அவருக்கு அரண்மனையில ஓர் இடம் இருந்தது. ஏன்னா, அப்போத்தான், அவருக்கு ஒண்ணு தொட்டு சகோதரி முறை வேண்டி இருந்த ரமாவாணின்ற ராஜதாசி, அவளுடைய சொந்த பாட்டி ரமாபங்கஜம் அதுவரை வீற்றிருந்த இடத்தப் பிடிச்சு, சரபோஜி மகாராஜாவுக்கு ஆசைக்குறியவளா மூத்திருந்தா. சகலவிதமான கலாவித்யைகள்ள பூஷ்ணனா விளங்கி அரசகோலம் தரிச்ச சரபோஜிவாரு, சாரங்கத்தைத் தூக்கீட்டு கஸ்தூரிமானுக்குப் பின்னால போல ராமச்சந்திரமூர்த்தி மாதிரி, அவ ஒத்த வார்த்தையும் தட்டவே மாட்டார்ன்னே பேச்சு இருந்தது.
“விஷயங்கள் அப்படி இருந்தப்ப ஒரு நாள், தன் இனிய பேச்சுக்காக ரமாவாணின்னும் சுகவாணின்னும் ரமாவதூதின்னு பெயர் பெற்றிருந்த அந்த இளம் நங்கையானவ, ராமாமிர்த பிள்ளைய தன்வசம் அழைச்சாள். முந்தின வாரம் அரச தர்பார்ல பாடி, தன் பாட்டுக்குப் பதக்கம் வாங்கின ஜப்யேச பாகவதர்ன்ற புது உருப்படியப் பற்றி அவ பேசின பேச்சுக்களைக் கேட்டு, ராமாமிர்தத்துக்கு கிலி உண்டாயிருச்சு. அம்மா, நீ அரண்மனைவாசமா இருக்க, நினைவிருக்கட்டும்மான்னு எச்சரிச்சாரு. அரசூர்வலமா திருவையாறு கல்யாண்மகால்ல தாமசிச்சிட்டிருந்தப்ப அங்க அந்தக் கொடுக்கன் பாடறதக் கேட்டு, இவ தான் கட்சேரி தர்பார்ல அரங்கேற்றம் ஏற்பாடு செய்தவள்ன்ற சாமாச்சாரத்த அவர் பின்னால தான் அறிஞ்சாரு.
“அவருக்கு ஏது செய்வதுன்னு தெரியல. பலதும் சிந்திச்சாரு. பிறகு காவிரியில படகேறி, திருவையாத்துக்கே பிரயாணமானாரு. அங்க பூஜ்ய பிராமணன்னும் பரம சாத்வீகன்னும் பெயர் பெற்ற பஞ்சநாத பிரம்ம பாகவதர் தங்கியிருந்த இல்லத்துக்குப் போனாரு.
“ராமாமிர்த பிள்ளை அங்க போனப்போ, இலட்சத்தி எட்டு நாமம் சொல்லாம விரதத்த முறிக்கமாட்டேன்னு பஞ்சநாத பிரம்மம் ஜபப் பாராயணத்துல உட்கார்ந்திருந்ததா அவர் காரியங்கள்ள சகாயமா இருந்த சாமான்ற கொடுக்கன் சொன்னான். இவரு சரின்னு திண்ணையில காத்துக்கிட்டிருந்தாரு.
“மூணு நாளா விரதம் இருந்தவரு அன்னிக்கிக் கார்த்தால தான் பகவான் நாமத்தச் சொல்லீண்டே ஊஞ்சவிருத்தியாப் போயி கொஞ்சூண்டு அரிசியும் பருப்பும் வாங்கி வந்திருந்தர். ஆனால் அதையும் உடனே பொங்க வைக்காம, நாமஜபம் முடியறவரைக்கும் அரிசி உலையில ஏறக்கூடாதுடா சாமான்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அவருடைய பாரியாள் கமலாம்பா இருந்திருந்தாள்ன்னா தன் ஏற்பாட்டுல எல்லாத்தையும் சாதிச்சிருப்பள். ஆனா அவளுக்கு தலைப்பிரசவம். பிறந்தகத்துக்குப் போயிருக்கா. இந்த விஷயமெல்லாம் சாமாவே தன் போக்குல ராமாமிர்த பிள்ளைட்ட சொன்னான்.
“சாமாவுக்குக் கொஞ்சம் புத்தி மந்தம்ன்னு இவருக்குத் தெரிஞ்சது. கொஞ்சம் போனதும் அவன் இவரப்பாத்து சிரிக்குறதும், இவர் காத்துக்கிட்டிருந்த வாசலுக்கு பக்கத்துலயே சாத்திக்கிடந்த இன்னொரு கதைவைப் போய் இவர் பார்க்கணும்றதுக்காகவே டபடபான்னு தட்டிட்டு வருதும்னு ஒரு களி ஆடத்தொடங்கினான்.
“அப்பத்தான் ராமாமிர்த பிள்ளை கவனிச்சாரு. அது ஒரே வீடு தான். ஆனால் இரண்டு வாசல் இருந்தது. இதென்ன ஏற்பாடுன்னு யோசிச்ச ராமாமிர்த பிள்ளை ஒரு மாதிரி விஷயத்த ஊகிச்சாரு. இருந்தாலும் சாமாவ அழைச்சு, டேய் சாமா, என்னடா கதவு இதுன்னு கேட்டிருக்காரு. அவன் பர்ர்ர்ருன்னு சிரிச்சு, தெரியாதாண்ணா, அது இவர் சோதரரோட கதவு, என்றான். சோதாரர் எங்கேன்னு இவர் கேட்டிருக்காரு. இண்ட்லோ லேதுன்னு சொல்லிருக்கான். அப்புறம் ஏண்டா தட்டற, என்றார். தட்டினாத்தானே திறக்கும், என்றானாம் அவன்.
அப்போ இந்த உள்ளேருந்து, சின்னூண்டு மூங்கில் குழாய ஊதினா வருமே, அந்த மாதிரி ஒரு குரல் ஒரு பாட்டெடுத்தது.
“ஆஜானுபாகுயுக ஶ்ரீஜானகிபதே!
பயோஜாக்ஷா!
ஈ ஹீனபந்த நுத சரணா!
துவாரமு தெரகொண்டிரா! – ஶ்ரீராமா
துவாரமு தெரகொண்டிரா.”
தூபவாசமும், கற்பூரமணமும் கமழ, கெஞ்சிப் பணிஞ்சு ஆசைக்காட்டின அந்தக் குரல் ராமாமிர்த பிள்ளையை வந்தடைந்தது. உயர்வான, மங்களமான மத்யமாவதி. அந்த மதுரத்துல ராமாமிர்த பிள்ளையோட மனசுல அதுவரை இருந்ததெல்லாம் கரஞ்சு போச்சு. அவருக்கும் அதைப் பாடணும்போல இருந்தது. ஆனால் தன் குரல் முனையாதுன்னு அவருக்குத் தெரியும். ஈ ஹீனபந்து–ன்ற பதம் அவருக்குக்குள்ள அலையடிச்சது. இந்த ஈனப்பிறவிக்கு இனி என்ன இருக்குன்னு தோணிடுச்சு அவருக்கு. சூடா ரெண்டு சொட்டு கண்ணீரு அவர் தொடையில விழுந்தது. நிமிர்ந்து அந்தப்பக்கம் சாத்தியிருந்தக் கதவப் பார்த்தாரு. வழியே இல்லியா, வழியே இல்லியான்னு இருந்தது அவருக்குள்ள. அப்போத்தான் இந்தக்கதவு திறந்து பஞ்சநாத பிரம்மம் வெளியில வந்தாரு.
“ஆனால் அவருடைய கண்கள்! ராமாமிர்த பிள்ளை சொன்னார், அவர் கண்கள் இந்த உலகத்துக்கே இல்லன்னு. அது நம்மைப் பார்க்கும் கண்களே இல்ல. நம்மளப் பார்க்கறப்பவும் நமக்குள்ள, நம்மள மீறி, நம்ம வழியா ஓடிப்போற எதையோ பார்க்குறா மாதிரி அவர் பார்வை துளை போடும் அப்படீன்னு சொன்னார். அன்று திண்ணையில் அமர்ந்தபடி தான் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டதாச் சொன்ன ராமாமிர்த பிள்ளை, ஆனால் அவர் கண்களில் அந்த பார்வை அகலவே இல்லை என்றார். தன்னைப் பார்க்கும் போதும் தன் வழியாக தூரத்தில் எதையோ பார்ப்பது போல அவர் வாய் சற்றே திறந்திருந்தது.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார், அன்னிக்கி அவர் கழுத்துல துளசிவிதை மாலை துவண்டு அமஞ்சிருந்தது. தோளல் அருவி மாதிரி யக்ஞோபவீதம். நார்மடிய பஞ்சக்கச்சமா கட்டிகிட்டிருந்தர். நெற்றியிலும் அதிகம் ரோமமில்லாத நெஞ்சுக்குழியிலும் கோபிக்குறி தரிச்சிருந்தாரு. நான் சொல்றதக் கேட்டு அவ்வப்போது நெஞ்சத்தொட்டு, ராமா, ராமா என்றார். பேசிக்கிட்டிருந்தப்ப அவரைத் தாண்டி அறைக்குள்ள என் கண்ணு ஒரு முறைப் பார்த்தது. அவர் மனையில் வைச்சிருந்த ராமரைப் பார்த்தேன். தூபப்புகைக்கு நடுவுல, வளஞ்ச வில்லும் குமிண் சிரிப்புமா. ஒரே ஒரு நொடி தான்.
“ராமாமிர்த பிள்ளை சொன்ன சமாச்சாரங்களையெல்லாம் பஞ்சநாத பாகவதர் கவனமா கேட்டுக்கிட்டாராம். அவர் முகம் கூம்பித் துயரம் போன்ற பாவனையில் ஆழ்ந்தது போல தெரிந்தது. அங்கே ஆடிய ஆசைவுகள ராமாமிர்த பிள்ளையால அப்போது அறிய முடியல. கொஞ்ச நேரத்துக்கு தன் நெஞ்சுக்குழியில கைய வெச்சுக்கிட்டு தூரத்துல எதையோ பார்த்துக்கிட்டிருந்தாராம். “ஹா! ராமா!” என்று அவர் ஒரு பெருமூச்சோடு கலைந்தப்ப ராமாமிர்த பிள்ளை எழுந்து கைக்கூப்பி நின்னுட்டாராம். சுவாமி, இப்ப என்ன பண்றது? நீங்களே ஒரு நல்ல வழியா சொல்லுங்கோ, என்றாராம்.
“பஞ்சநாத பிரம்மம் சொன்னாராம். ‘தம்முடு.இத்தனை ஜபமும் விரதமும் ஏன் செய்கிறேன் என்று நினைக்கிறாய்? என் சகோதரன் மனம் மாற வேண்டும் என்று தான். இத்தனை ஆண்டு காலமாக அதற்காகத்தான் பிரயத்தனப்படுகிறேன். ஆனால் இன்று வரை என்னால் அவனை அடைய முடியவில்லை,’ அவர் பேசிய உயரிய தெலுங்கையும் மீறி அவர் குரலில் இருந்த வலி தனக்குப் புரிந்தது என்று ராமாமிர்தம் பிள்ளை சொன்னார்.”
“‘எல்லாரும் நான் அண்ணா, அவன் தம்பி என்று நினைக்கிறார்கள். கிடையாது. நான் தான் தம்பி. அவன் எனக்கு ஒரு நொடி முன்னால பிறந்த அண்ணன். நானும் அவனும் எங்கள் தாயாரின் வயிற்றுல சேர்ந்து உருவான இரட்டைப் பிறவிகள். அவன் எனக்கு ஒரு நொடி முன்னால் இந்த அவனிக்குள் வந்தான். அவன் அழுத சத்தம் கேட்டு நான் உடனே வெளியில் வந்தேன் என்று என்னுடைய அம்மா சொல்வார். யார் அழுதாலும் முன்னால் முதலில் போய் நின்றுவிடுவான் இவன், என்று அம்மா எப்போதும் என்னை சற்று கிண்டலாகவே சொல்வதுண்டு.
“‘அப்பா ராமாமிர்தா, நாங்கள் ஒரே சமயம் இருவராக பிறந்துவிட்டோம் என்பதால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொருவராய் எங்களை வளர்த்தார்கள். பாகவதரான என்னுடைய அப்பா ராமபிரம்மம் பாகவத சங்கீதத்தில் என்னை ஆட்படுத்தினார். பகவான் நாமாவளியை சொல்லவும் அவற்றை பக்தியில் மூழ்கிப் பாடவும் நான் கற்றேன். ராம நாமத்தை அப்பாவிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்.
“‘ஆனால் ஜப்யேசனை என் அம்மா வளர்த்தாள். அம்மா பெயர் சீதம்மா. என் அன்னை சீதாதேவியின் பெயர் தான் அம்மாவுக்கு. சீதம்மா தரித்த அத்தனை நெருப்பும் என் சீதம்மாவுக்கும் உண்டு. அவளுடைய அம்மாவின் அப்பா காளஹஸ்தி கவி தஞ்சாவூர் கட்சேரியில் பல்லவி பாடி பதக்கம் வாங்கிய வித்வான். தன்னுடைய மகனும் அரசவையில் ஜ்வலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தன் தாத்தனிடமே அவனை விட்டுவிட்டார்.
“‘தம்முடு, எனக்கு புராண இதிகாச கதைகள் தெரியும். பாகவத சம்பிரதாயம் தெரியும். ஆனால் அவனுக்குத்தான் நாதம் கைவசமானது. ஒவ்வொரு சுவரத்தையும் ஒரு வஜ்ரமென திருப்பித் திருப்பி மெருகேற்றி அதன் ஆழங்களையெல்லாம் காண அவனால் தான் முடியும். அதன் நாகங்களையும் சூடிக்கொள்ள அவனால் தான் முடியும். சூர்யோதயத்துக்கும், சூர்யாஸ்தமனத்துக்கும், ககனத்தில் தோன்றும் ஒவ்வொரு வண்ணத்துக்கும் அவன் ராகம் பாடுவான். அதுதான் அவனுடைய சந்தியாவந்தனம்.
“‘அவன் ஒரு கந்தர்வன். நாரதரே முன் தோன்றி சுவார்ணவத்தைக் கொடுத்தார் தெரியுமா, என்று ஒரு முறை என்னிடமே வந்து செறுக்கிக்கொண்டான். என் குரலை சுருதிக்கு நிறுத்தவே எனக்கு சமயத்தில் சிரமமுண்டு. ஆனால் அவன் குரலோ நாபியிலிருந்து இடிபோல் எழும். மின்னலென இதயத்தில் தாமரையை மலரச்செய்து கண்டத்தில் நின்று பொழியும். நான் ஒன்றுக்கும் உதவாத கழுதை. அவன் புலி. நான் கைகளைக்கூட தலைக்கு மேல் தூக்க முடியாத ஹீனன். அவனோ மல்லனைப்போல் கட்டைச் சுற்றுவான். காவிரியை ஏழு முறை முன்னும் பின்னும் நீந்தி எழுவான். அப்படியே ஈர மணலில் பத்மாசனத்தில் புதைந்த்மர்ந்து சாதகம் செய்வான். என்னால் என் இருட்டரையில் அமர்ந்து இந்த விக்ரகத்தைப் பார்த்து ராமா ராமா என்று முனகுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. அவன் நினைத்தால் பலி மகாராஜாவைப்போல் இந்தப் பூவுலகையே வெல்ல முடியும். நான் என் ராமனிடம் சரணடையும் விபீஷணன். அவன் கைலாசத்தை வென்று அடக்கப் புறப்படும் ராவணன். சூரியனின் வெப்பத்தை உணராமல் அதை உரசுவேன் என்று எம்பிப்பறக்கும் அவன் ஜடாயு. அவன் மேல் என்றும் என் இறகுகளை விரித்துக் காக்கும் நான் சம்பாதி. ஒவ்வொரு நாளும் அவனால் சூடு படுபட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.
“‘வீடு அவனுக்கே வேண்டுமென்றான். சரி, பாகப்பிரிவினை செய்வோம், என்றேன். இப்போது இந்தப் பகுதியில் நான் இருக்கிறேன். அந்தப் பகுதியில், அவன். அவன் இப்போது அங்கே இல்லை… எங்கே இருக்கிறான் தெரியாது. அவன் இங்கு இருப்பதே இல்லை. எப்போதும் எங்காவது அலைந்துகொண்டிருப்பது தான் அவன் வழக்கம். உங்களைப்போல் ஊரார் வந்து அவன் பராக்கிரமங்களை சொல்வார்கள். அப்படியா என்று கேட்டுக்கொள்ளவேண்டும் நான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சொல்வேன். நான் தம்பி தான். ஆனால் விபீஷணனைப்போல் நல்வழி தெரிந்தவன். தம்முடு சொல்கிறேன். அண்ணா, இங்கே உட்கார். உன் மனதை ராமநாமத்தில் நிலைக்கச்செய். உன் உள்ளத்தில் அந்த மதியொளி போன்ற வெள்ளம் நிறவதை அறி, என்று. அவனால் ஒரு கணம் உட்கார முடியாது. பித்தன், கிராதகன்! உடனே திரிணவர்த்தன் மாதிரி சுழலென புறப்பட்டுவிடுவான்.
“‘பின்னரவில் வருவான். பைத்தியக்காரன் மாதிரி விடிவது வரை பாடிக்கொண்டிருப்பான். நீள நீள ஆலாபனைகள்… பூதாகரமான பல்லவிகள். கன ராகங்கள். குதிரைகள், யானைகள், கரடிகள், சிம்மங்கள், எல்லாம் அந்தப் பக்கம் உருமிக்கொண்டிருப்பதை நான் இங்கே ராமா ராமாவென்று நடுங்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன். இதெல்லாம் சிவனுக்கு அர்ப்பணமாம். அவன் சிவபக்தனாம். ராவணஜன்மம்! இதில் நான் என் ராமனுக்குப் பணிந்து கைங்கரியம் பண்ணுவதைப் பார்த்தால் அவனுக்கு பரிகாசம். ஜபம் என்றால் கிண்டல். உன் ராமன் அங்கேயா இருக்கிறான், என்கிறான். அவன் மட்டும் என்ன? சங்கருடு என்கிறான். லிங்கமும் கிடையாது, அபிஷேகமும் கிடையாது. கேட்டால் என் சுவரங்களில் உள்ளதுறா லிங்கம், என்று சிரிக்கிறான்! சப்தலிங்கம் இருக்கிறதாம் அவனுக்கு. துடுக்கா.
“அப்பா, நீ பக்குவக்காரனாய் தெரிகிறாய். அவன் மறுபடியும் அரண்மனைக்கு வந்தால் அவனிடம் விஷயங்களை எடுத்துப் பேசுகிறாயா?”
“இப்படித் திருவையாறு பஞ்சநாத பிரம்மம் தன்னுடைய சகோதரன் ஜப்யேச பாகவதரப் பத்திச் சொன்னத கேட்டு, மனம் கனத்துப் போயி, என்னுடைய குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை அவருக்கு வாக்குக் கொடுத்தார். சரி, உங்க சகோதரன் தர்பாருக்கு வந்தா அவர்ட்ட நல்லபேச்சு பேசி உங்கள வந்து பார்க்கும்படி சொல்றேன், என்றார். ஆனால் வாசல் திறக்கணும்னு நீங்கள் தான் அருள்கூறணும்ன்னு, புழுதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அந்த மகானுபாவுலுவின் பாததூசியைத் தன் நெற்றியில் சூடிக்கொண்டார். அவர் நெடுமூச்சுடன் சுபமஸ்து, என்று வாழ்த்தினார்.”
9
“அடுத்த நாளே ஜப்யேச பாகவதர் தர்பாருக்கு வந்தார். சிவப்புப்பட்டுல தலைப்பாகையும், கழுத்துல சரம்சரமா முத்தும் பவளமும், கச்சப்பட்டும் உத்தரீயமும் தரிச்சுகிட்டு வந்தவரு மேகத்துமேல மிதந்து இறங்கினவரா தோன்றினார். நெருங்கினா ஜவ்வாது வாசம். சிவமூலி உண்டது கண்ணு செவந்துல தெரிஞ்சுது. நெற்றியில யாரும் போடாத விதத்துல திரிபுண்டரத்துக்கு நடுவிலே நெற்றிக்கண்ணு திறக்கறா மாதிரி குறி வரஞ்சிருந்தாரு.
“ஆனால் ராமாமிர்த பிள்ளைக்கு என்ன ஆச்சரியம்னா, அத்தன கோலத்துக்கு அடியில இருந்த முகம், பஞ்சநாத பிரம்மத்துடையதே தான். அதே ஒட்டிய கன்னம். மெலிஞ்ச உசரமான தேகம். நரையோடிய தாடி. அதே பளபளப்பான கண்கள். தன்னைப் பார்க்காத, தன் வழியாக இன்னொன்றை துளைப்போட்டுப் பார்க்கும் கண்கள். ஆனால் அவரப்போல் இல்லாமல், இவர் சிவந்த தோல்ல அத்தனை மினுக்கு இருந்துது. தேகம் அவ்வளவு தேஜஸ் கமழ்ந்தது.
“அவர் வந்தபோது ராமாமிர்தம் பிள்ளை தானாப் போய்த்தன்னை அடியேன், இன்னார்ன்னு அறிமுகம் செஞ்சுகிட்டாரு. ஜப்யேச பிரம்மம் அவர் தோள்ல கைப்போடுவாருன்னு அவர் நினைக்கல. ‘நீ ரமாபங்கஜம் மகள் ஞானத்தோட மகன் தானே?’ என்று கேட்டான். ஏன் அப்படிக் கேட்டான் என்று தனக்குப் புரியாம இல்ல, என்றார் ராமாமிர்தம் பிள்ளை. இருந்தாலும் அவர் கண்களிலிருந்த அந்தப் பார்வையை அவரால் தவிர்க்க முடியவில்லை. ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், அவர் கண்கள் எவ்வளவு நீண்டு, கரிய இமைச்செறிந்து தாழ்ந்து இருந்தன என்று அத்தனை அணுக்கமாக நின்ற போது தான் தான் கண்டார், என. அவை சிவந்து, தேனின் ஒளியும் திரவத்திரட்சியும் கொண்டு ஏக்கத்துடன் அவரை நோக்கியதாக அவர் சொன்னார். பயோஜாக்ஷ, ராஜீவாக்ஷ, நனித் தாமரைக் கண்ணா என்றெல்லாம் ராமனை ஏன் பாடறாங்கன்னு என்று தனக்கு அப்போது புரிஞ்சதுன்னார் ராமாமிர்தம் பிள்ளை.
“அவர் தன்னை விடுவிச்சுக்க முயற்சி பண்ணினார். ‘யாராவது பார்த்துடப் போறாங்க,’ என்றார். ‘அதுக்கென்ன? நேனுக்கூடா ஈவாடுனொக்க சங்கீதகாருடுன்னு சொல்வேன். அதே சத்யம் கதா? நேனு நாரதுனிக்கி புத்ருடு. மீரு மனமோகினியம்மைக்கி கூத்ருடு’ என்று சிரித்தார். தன்னையும் பெண்ணுனு நினைச்சுத்தான் பேசரார்ன்னு அவர் புரிஞ்சுக்கிட்டரு. ஆனால் அது அவருக்கு வித்தியாசமா படல.
“அவருடைய பற்கள் எவ்வளவு சிறியதாகவும் வெண்மையாகவும் வரிசையாகவும் இருந்ததென்றும், அவருடைய பிடி ஒரு மல்லனின் பிடியைப்போல் உறுதியாக இருந்ததென்றும் தான் அப்போது உணர்ந்ததாக ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். தன் பக்கத்துல இருந்தவரு தான் நினைச்சு வந்தவர் இல்லன்னு உணர்ந்தார். இவரிடம் என்ன பேசுவேன்னு தவிச்ச ராமாமிர்தம் பிள்ளை அவர் முகத்த நிமிர்ந்து பார்த்தபோது அவர் கண்கள் அலைவுகொண்டிருந்ததக் கண்டார். மாடத்தில் இருந்த ரமாவாணி இவரையும், இவர் அவளையும் பார்த்துட்டிருந்தாங்க.
“அன்னிக்கி ஜப்யேச பாகவதர் தர்பார்ல்ல அங்குமிங்கும் அலஞ்சு பேசுன பேச்சுக்கள ராமாமிர்தம் பிள்ளை தன் இடத்துல நின்னுட்டு பார்த்துக்கிட்டிருந்தாரு. ஒரு புயலு மாதிரி, ஒரு மலை மாதிரி, ஒரு கருத்த மேகம் நடந்து போறா மாதிரி அவர் உருவம் அங்கும் இங்கும் போய்வந்ததுன்னார். அவருக்கு எல்லாரையும் தெரிஞ்சிருந்தது. அப்போ இளசுகளா இருந்த சிவானந்தம் பிள்ளையும் வடிவேலுப் பிள்ளையும் இவர்ட்ட வந்து காலத் தொட்டுக் கும்பிட்டாங்க. வடிவேலு அப்போ கம்பெனிக்காரனுட்ட கற்றுவந்த சின்னவீணைய வாங்கிப் பார்த்தாரு. அரண்மனைக்கு மத்யம் புரந்த கங்காசாகர பட்டரக் கண்டதும் பெரிய பரிகாசம் கேட்டது போல இரண்டு பேரும் சிரிச்சு தழுவிக்கிட்டாங்க. மோதி ராவ், சம்பா ராவ், ஆனந்தரங்க முதலி, ஶ்ரீமுஷ்ணம் கேசவையங்கார், சாம்பசிவபிள்ளைன்னு அங்க இருந்த எல்லா பெரிய தலைகளையும் அவருக்குத் தெரிஞ்சிருந்தது. மகாராஜோவோட இங்கிலீஷ்கார அத்யாபகரு கூட அங்க அன்னிக்கி சாந்நித்யமா இருந்தாரு. மகாராஜாவே வந்தப்ப ஜப்யேச பாகவதர் அவருக்கு நேர்ல போய் நின்னு வந்தனம் சொல்லி வந்தாரு. ஆனால் இதெல்லாத்துக்கு நடுவுலையும் அவர் பார்வை அங்கேயும், இவ பார்வை இங்கேயுமா ஊசலாடிகிட்டிருந்தது.
“கட்சேரி ஒருங்கி வந்தது. தர்பாருல்ல சிம்மாசனத்துல சரபோஜி மகாராஜாவும், அவருக்கு நேர் எதிரா திண்டுல ஜப்யேச பாகவதரும் கொலு வீற்றாங்க. அன்னிக்கி ஜப்யேசர், அவர் புது உருப்படிகளா கோத்திருந்த ‘நௌகா நிரூபணம்’-ன்ற கேயநாடகத்திலிருந்து சில பாட்டுகள அரங்கேற்றம் பண்ணினாரு.
“இறவாவரம் பெற்ற கௌடதேசத்து மகாகவி ஜெயதேவரோட பாணியில அவர் சுந்தரத்தெலுங்குல அமைச்சிருந்த சார்தூலமும் தருவும் பாட்டும், ஶ்ரீகிருஷ்ணன் கோபிகாஸ்த்ரீகளோட யமுனையாத்துல நாவாய்ல பயணமான சரித்திரம் பற்றியானது. கதை இதுதான் – கோபிகைகள் ஶ்ரீகிருஷ்ணனை விளையாட்டா படகுல ஏத்தி அழைச்சுப் போறாங்க. குழந்தையான முகுந்தன கொஞ்சம் பயம்படுத்தி விளையாடலாம்ன்னு அவங்க நினைப்பு. ஆனா எல்லாமறிஞ்ச கிருஷ்ணன் பதிலுக்கு லீலையாடிடறான். புயல வரவழைக்கறான்.
“நதியில வெள்ளம் ஏற நாவாய் சுழலுது. அதோட அடிபாகத்துல துளை விழுத் தொடங்குது. பொட்டுப் பொட்டுப் பொட்டுப் பொட்டா, நூறு துளைகள், ஆயிரம் துளைகள். தண்ணீ உள்ள வர்ரது. ‘உங்க வஸ்திரங்களக் கொடுங்க, துளைய அடைக்கறேன்’னு ஶ்ரீகிருஷ்ணன் அவங்களோட வண்ண வண்ண வஸ்திரங்கள வாங்கி, துளைகளுக்குள்ள விட்டும் எடுத்தும் குறுக்கும் நெடுக்குமா வண்ணமயமான ஒரு நெசவப் பின்னறான். ஆடையிழந்த ஸ்த்ரீகளெல்லாம் தங்களோட துணியாலேயே பின்னிவளச்ச அந்த வண்ணநெசவுமேல நின்னபடி கிருஷ்ணனோட பார்வையிலிருந்து தங்களோட நிக்னத்த மறைச்சுக்க முயலறாங்க. அவங்களோட இனிமையான கூக்குரல்கள் கிளிகள மாதிரி எழுந்து ஒன்றை ஒன்று முட்ட, கெஞ்சிப்பாடி தயை கேட்கறாங்க. தங்க இடமிறிஞ்சு அவனோட ரட்சணைய வேண்டி நிக்கறாங்க. மனமிளகி ஶ்ரீகிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தைக் காட்டி, அவங்கள அணைச்சு பயம் போக்கி நௌகத்தக் கரை சேர்க்கறான்.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார், இந்தக் கதைக்கு அவர் தொடுத்த பாட்டுகள் ஒவ்வொண்ணிலும் சொல்லழகைக் காண்பதா, இசையழகைக் காண்பதான்னு அவருக்குத் தெரியலைன்னு. அவர் இசையறிஞ்சவர் இல்லிய்யா, தெரிஞ்சோ தெரியாமலோ அதோட நுட்பங்கள கவனிக்கற காதும் ஜிஹ்வமும் அவரு வாய்க்கப்பெற்றிருந்தாரு. ஜெயதேவரோட பாட்டுக்கள மாதிரி அவ்வளவு சிக்கலான சொற் பின்னலில்லாத மாதிரியும், ஒப்புனோக்க எளிமையா போட்டிருந்தா மாதிரியும் தோணிச்சுன்னர். ஆனா இடைப்பட்ட இடத்தையெல்லாம் இசையால பின்னிக் கோத்தாரு ஜப்யேச பாகவதர். அவர் ராமாமிர்த பிள்ளைட்ட அன்னிக்கி சாய்ங்காலம் போற வழியில சொன்னாராம், அவர் பாட்டாப் பாட முயற்சிக்குறது யமுனையில போன அந்த நௌகத்தையேதான்னு. நிறைய துளைகள் இருக்கணும், அதைத் தன் வண்ணங்களையெல்லாம் கொண்டு பின்னி நிறைக்கணும்ன்றது தான் அவர் கணக்குன்னு சொன்னார். அதிலே அவர அடிச்சுக்க ஆளே இல்லன்னார்.
“ஶ்ரீகிருஷ்ணன தன் வலையில விழவெச்சத கோபிகா ஸ்திரீகள் மமதையும் செறுக்குமா பாடினது ஜப்யேசர் தானே தன் சங்கீதத்தைப் பத்திப் பாடினா மாதிரி இருந்ததுன்னார் ராமாமிர்தம் பிள்ளை. ‘எவர் எமக்கு சமானம் இவ்வுலகில்?’ மேகம் வெடிச்சா மாதிரி அவரு தேவகாந்தாரிய பாடி நிறுத்தினப்ப கொட்டின கரகோஷமும் ஆராவாரமும் தஞ்சாவூர் ராஜதர்பார்ல அதுவரைக் கேட்ட ரகத்திலேயே இல்லன்னு ராமாமிர்த பிள்ளை சொன்னார். ‘ஆஹா!’ ‘சபாஷ்!’ன்னு தலைப்பாகைக் கட்டிய பெரியமனுஷாக்கள்ளாம் தலையசைச்சங்க. பட்டாம்பூச்சிமாதிரி பெரிய கல்லுவெச்ச மூக்குத்தியும் நெற்றயில சந்திரபிரபைக் குறியும் அணிஞ்ச மராட்டிமாரோட பெண்டுகளெல்லாம் மச்சுல ஜாலி பின்னால நின்னபடி ஆஹாகாரம் செஞ்சாங்க. விஷயஞானமுள்ள மகாராஜாவே ‘பலே’ சொன்னார்.
“ஆனா ராமாமிர்தம் பிள்ளை கண்டார். திருவையாறு ஜப்யேச பாகவதர் பாடி நிறுத்தினக் கணம், அவர் கண்ணு போனது சபாரசிகாள்ட்ட இல்ல, அங்கக் கூடியிருந்த சங்கீதக்காராட்ட இல்ல, மகாராஜா வசம் கூட இல்ல – அவர் தலைக்கு மேலே நின்ன மாடத்துக்குதான். அங்க ரமாவாணி முழுமதி மாதிரி நின்னுட்டிருந்தா.”
10
“ஜப்யேசர் படகுல ஏறிகிட்டிருந்தபோது ராமாமிர்தம் பிள்ளையும் ஓடிப்போய் இணைஞ்சுக்கிட்டாரு. படகுக்காரன் அவங்களுக்கு இடம்கொடுத்து, படக ஆத்துல செலுத்தித் துடுப்புப்போட ஆரம்பிச்சான். தண்ணி மெல்ல அலைகொடுத்துப் பிரிஞ்சது. காவிரி இரண்டுபக்கமும் நீள ஆரம்பிச்சது.
“ஆத்தொழுக்கோடு கிழக்குப்பக்கமா நகந்தது படகு. சூரியன் அவங்களுக்குப் பின்னால அணஞ்சுட்டிருந்த வேளை. மஞ்சளும் சிவப்பும் பழுப்புமா ஒவ்வொண்ணும் மாறியிருந்தது. ஆறு பொன்னா உருகிப்போச்சு. ராமாமிர்தம் பிள்ளை அவரை ஒன்றும்பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்ததக் கண்டு ஜப்யேசர் ‘என்னடா?’ என்றார். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அந்த வெளிச்சத்திலே, ஆறும் வானமும் எல்லையே இல்லாத மாதிரி நீண்ட அந்த வெளியில, ஒத்தைப் படகோட முனையில, தலையில பாகையும் கழுத்துல முத்துச்சரமும் கண்ணுல ஜ்வாலை மாதிரி ஒளியுமா, ஜப்யேச பாகவதரப் பார்க்க ஒரு ராஜா மாதிரி இருந்தாராம்.
“ஆனா தன் கடமை என்னன்னு மறக்காம தன்னை ஒருங்குதெரட்டி ராமாமிர்தம் பிள்ளை சாதுர்யமான வார்த்தை சொன்னாராம். ‘இல்லண்ணா. நீங்க உங்க தம்பி மாதிரியே இருக்கீங்கன்னு மொதல்ல நினைச்சென். அப்புறம் அப்படி இல்லன்னு தோணிப்போச்சு,’ன்னு
“ஜப்யேசைய்யர் சிரிக்க ஆரம்பிச்சார். ‘ஏன்டா, கொடுக்கா, என் சகோதரனைப் போய் பார்த்தியாக்கும்?’ என்றார்.
“‘சுத்தமான சங்கீதக்காரா யார்ன்னாலும் போய் பார்த்திருவேண்ணா,’ ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். ‘சங்கீதம்ன்னா எனக்கு உயிர்.’ அது உண்மை தான்றதுனால அவர் அதைச் சொன்னப்ப இயல்பா அவர் தேகம் நடுங்கியதுன்னும் குரல் தழுதழுத்ததுன்னும் சொன்னார். அதை ஜப்யேசர் உடனே கண்டுகொண்டதையும் உணர்ந்தாரு.
“‘ஏண்டா? பஞ்சநாத பிரம்மம் தான் உஙக்கு ஜாதியான சங்கீதக்காரனா? ம்?’
“‘அப்படீன்னு இல்லண்ணா. அவரைப் பார்த்தக் கையோட உங்களப் பார்க்க வந்தேன்ல்லையா?’
ஒரு நொடி விட்டு, ‘ரமாவாணி சொன்னா, நீங்க தர்பார்ல்ல பாடப்போறீங்கன்னு. அதான் உங்க சகோதரர ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு உங்களையும் கேட்டுடணும்னு வந்தேன்.’
ஜப்யேசர் தன்ன உன்னிப்பாக் காண்றத உணர்ந்துட்டு, ‘அவர் அனுப்பின தூதுக்கு பதில் தூது சொல்லணும். அதுக்குத்தான் இந்தப் படகிலேயே ஏறி திருவையாத்துக்குப் போறேன். பதில் கிடைச்சா உடனே சொல்லிடுவேன்’
“ஜப்யேசர் அவரை ஒரு பார்வை பார்த்துட்டு மளமளவென சிரிக்க ஆரம்பிச்சுட்டார். ‘நீ சாமர்த்தியக்காரன்தாண்டா,’ என்றார். ‘ராவணன் சபைக்கு அனுமன் தூது போனா மாதிரி நீ எங்கிட்ட வந்திருக்க, இல்லையா?’ அவர் தோளைத் தட்டி, ‘சரி, கொடுக்கா, என் சகோதரன்ட்ட போயி சொல்லு. ராவணன் கைலாச பராக்கிரமத்தையும் விட மாட்டான். சீதையையும் விட மாட்டான். இதுதான் என் பதில். நான் சொன்னேன்னு சொல்லு, போ!’
“ராமாமிர்தம் பிள்ளை அவர் பக்கத்துல நெருங்கி உட்கார்ந்தபோது. படகு இலேசா ஆடிச்சு. அவர் கெஞ்சலாக விண்ணப்பிச்சாரு. ‘இதென்னண்ணா ஒண்ணும் ஒட்டாத பேச்சு. அண்ணாவும் தம்பியும் ஒத்துமையா இருக்காம இப்படி பிளவுப்பட்டு இருந்தா எப்படி’ன்னு கேட்டாரு.
“ஜப்யேசர் ராமாமிர்தத்தை ஒரு பார்வை பார்த்து அவரை மேலும் அருகே இருத்தி, ‘ராமாமிர்தா, ஆறாத கீரல்களும் சிலது உண்டுடா இந்த லோகத்துல,’ என்றார்.
“அவருக்கு ஒரு படி கீழே அமர்ந்திருந்த ராமாமிர்தம் பிள்ளை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அஸ்தமனத்தை நோக்கி அமர்ந்திருந்த அவர் முகத்துல ஒளியாடியது. அவர் தாடி தீப்பொறிகளப்போல தெரிஞ்சது. ‘டேய் கொடுக்கா, நீ புத்தியுள்ளவன். ஆத்மாவுள்ளவன். இப்போ நான் சொல்லப்போறது இந்த லோகத்திலேயே உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன். மனம் திறந்து சொல்றேன். இத நான் இன்னொருத்தன்ட்ட சொல்ல முடியாது. ஏன் தெரியுமா? ஏன்னா நீயும் என்னமாதிரியான ஒரு சங்கீதக்காரன். திருவாலங்காடு நயினார் தொட்டெடுத்த உருப்படி தானேடா நீ? உனக்குக் குரல் போனது தெய்வங்களுக்கே அடுக்காத காரியம். வானத்துல உள்ள தெய்வங்கள் ஒவ்வொண்ணும் அதுக்கு ஒரு நாள் பதில் சொல்லும். சொல்லணும். நான் சொல்ல வைப்பேண்டா.’
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார், “ஜப்யேச பாகவதர் அப்படிச் சொன்ன போது நீங்க என்ன நினைச்சீங்கண்ணான்னு என் குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை வசம் கேட்டேன். நினைப்பு என்ன நினைப்பு? உடைஞ்சு அழுதுட்டேன்னர். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அன்னிக்கித் தெரிஞ்சது, இந்த ஜப்யேச பாகவதரவிட நயமுள்ள மனுஷன ஏழு மேல் லோகத்திலேயும் ஏழு கீழ் லோகத்திலேயும் தேடினாலும் கிடைக்காதுன்னு. அவருக்கு என்னன்னாலும் செய்றதுன்னு முடிவானேன். அன்னிக்கிப் பிடிச்சக் காலடி தான். அப்புறம் விடவே இல்ல.
“அன்னிக்கி அந்தப் படகுல, ஜப்யேச பாகவதர் ராமாமிர்தம் பிள்ளைட்ட சொன்னார்:
‘நா கொடுக்கா. என் சகோரனப் போயி பார்த்தியே, ராமா ராமான்னு உயிர வாங்கியிருப்பான் இல்லையா? ஏதோ ராமன் அவன் தனிப்பட்ட சொத்துன்ற மாதிரி. டேய், எனக்கு மட்டும் ராமனைத் தெரியாதுன்னு நினைச்சியா?எங்கப்பா ராமப்பிரம்ம பாகவதர் தன் வீட்டையும் ராமனையும் அவனுக்கு மட்டும் கொடுக்கலை. எனக்கும் கொடுத்தாரு. நாங்க எப்போ நடக்க ஆரம்பிச்சோமோ அப்போத் தொட்டே எங்கையில ராமன் விக்ரகத்தையும் அவன் கையில ராமனுக்கான தூபத்தையும் புஷ்பத்தையும் சாமரத்தையும் கொடுத்து வீட்டச்சுத்தி ஊர்வலக்கோலம் வரச்செய்து கண்டு மகிழ்வாரு.
‘அதனால தம்பிக்கு என் கையில இருந்த ராமனோட உருவம் மனசுல ஏறிடுத்து. எனக்கோ ராமன தூபப்புகையாவும் சாமரத்தென்றலாவும் மலர்வாசமாவும் மணியோசையாவும் அறிய வாய்ச்சது. அப்படி பதினாறு – முப்பத்திரெண்டு – நாப்பத்தெட்டு – அறுபத்திநாலு ராமாக்கள்… எனக்குள்ள அதெல்லாம் இருந்ததுன்னே எனக்குத் தெரியாது.
என் குருநாதர்தான் அதை எனக்குத் திறந்து தந்தாரு. குருநாதர் முன்னால என்னிக்கி மொதமொதல்லா என் குரல் தம்பூருநாதத்தோட சுருதி கூடி ‘ஆ…’ ன்னு திறந்ததோ, அன்னிக்கி ராமனோட விளிய நான் அறிஞ்சேன். ராமாமிர்தா, அந்த விளி என் கர்ணத்திலேயும் நாசியிலயும் கலந்து, என் குரல்லியே ஏறி வந்ததுன்னா நான் என்னடா பண்ணுவேன்?
‘அந்தக் குரல் மொதல்ல என்ன பயம்படுத்திருச்சுடா. ராத்திரி கனாலெல்லாம் வரும். ஆ…ன்னு… சோகமா, உள்ளுக்குள்ள ஏதோ கஷ்ட துயரமா, மூச்ச அப்படியே முட்டி அழுத்தி உள்ள நிக்குறா மாதிரி… டேய், உன் நாபியிலும் நெஞ்சிலும் ஒரு பெரிய இருட்டான அலை எழுந்து உடையாம வெறுமனே நின்னுட்டிருந்தா எப்படிடா இருக்கும்? அந்த அழுத்தம் தாங்காது போறப்பத்தான் அது திரண்டு சுருளவிழ்ச்சுக் குரல்ல ஏறிக் வந்து வெடிக்கும்… ஒரு தங்க இழையில நெருப்பு ஏறி வர்ரா மாதிரி… அது சர்வ நரம்புகளையும் சுண்டு இழுக்கற ஒரு வலிதாண்டா. அப்போ அந்த சப்தம் எப்படித் தோணும் தெரியுமா? புராணத்துல வருமே, அம்புப்பட்டு தன் இணைய இழந்துதே கிரௌஞ்சப்பக்ஷி? அதனோட குரலாட்டமா தோணும். என்னத்த இழந்தேன்னு என் குரல்ல இத்தன வலியேறித்துடா?
“ராமாமிர்தா… படரவிட்டத் துப்பட்டித் துணிய கட்டையால ஒடச்சு ஒடச்சு காவிரிக்கு இந்தக்கரையில உள்ள தர்பார் மகாலிலிருந்து அந்தக்கரைக்கு அரண்மனைக்காரா செய்தி சொல்றத பாத்திருக்கியா? என் குரலையும் அப்படித்தான் வளச்சு ஒடச்சு அதில ராகங்களை வரவழைச்சாரு என் குருநாதர். ராகம்ன்னா என்ன? வர்ணம். நிறம். சுத்தமான வலிய வளச்சு ஒடச்சு வண்ணமாக்கி ஜாலமாக்குறதுதாண்டா சங்கீதம். அதோ வானத்தப் பாரு. அத்தனை வண்ணங்களக் கொண்டுவர எப்பேர்பட்ட வலியோட துடிச்சுக்கிட்டிருக்கணும் அந்த ககனவெளி?
“ஆனா எத்தனை அழகுடா! டேய்… ஒண்ணு தெரிஞ்சுக்கோ… வலியில்லாம அழகு இல்ல. உனக்குத் தெரியும் அது. சாதகம்ன்றது வலி தான். வலியும் ஒரு சாதகம் தான். நீ இரண்டிலும் அனுபவமுள்ள பாவி. க்ரௌஞ்சபறவை ராமான்னு கத்தற விளி உனக்குக் கேட்காம இருந்திருக்குமாடா?
“மனுஷனா பொறந்தவன் எல்லாத்தையும் ஏதாவது ஒரு தருணத்துல குத்துற அம்புடா அது. ஆனா சிலருக்கு மட்டும் தான் அந்த விளியக் கேட்கற விதியிருக்கு. ஒரு முறை கேட்டுட்டா வேறேதையும் கேட்க முடியாதுன்ற சாபம் உண்டாயிடும். டேய் ராமாமிர்தா, எனக்குள்ள சுவாசமா போற ஒவ்வொரு மூச்சும் வெளிய வரப்போ ஏக்கம் நிறைஞ்ச அந்த விளியாத்தான் வருது. ஒவ்வொண்ணிலும் அந்த விளி தான். அந்த அம்பு என்ன மொத்தமா குத்திக்கொன்றக் கூடாதான்னு இருக்கு.
“அந்த அம்ப நான் உணராத நொடியே இல்ல. என் சகோதரன் கேட்கரான், ஏண்டா உனக்கு அரண்மனையும் சபாவாசமும் சுகிப்பிச்சுப்போச்சான்னு. ஸ்வானன், அவனுக்கு புத்தி ஒத்தைப் பாதையில போறதாக்கும். டேய் ஊர்லையும் கோட்டையிலும் சந்தையிலும் அரண்மனையிலும், இந்தச் சோழ தேசத்துல கோபுரம் எழுந்த கோயில் ஒவ்வொண்ணிலேயும் ஆறு வேளையா நடக்கற பதினாறு உபசாரத்திலேயும், வர்ணமும் வாசமுமா நம்மள ஒவ்வொரு நொடியும் வந்து குத்துறது எல்லாமே ராமசரம்தான்டா. இதை உணராதவன் என்ன ராமபக்தன்? வலியால கணம்கணமா துடிச்சிக்கிட்டிருக்குடா இங்க ஒவ்வொண்ணும். சதிருல பதமாடறாளே, மாறன் கணைகள் தூவுறான்னு. அது ராமனோட கணைகளும் தாண்டா. மாறனோட கணையத் திருப்பினா ராமனோட கணை. சங்கீதக்காரன் தன் மேல் விழுற மாறன் கணையைப் பிடுங்கித், திருப்பி, ராமன் கணையா ஏவுறான். ஏவுறக் கணத்துல அவன் முகத்துல மாறனோட அஞ்சு மலரும் படிஞ்சு அவன் மூச்ச முட்டச் செய்றது. ஆனா ‘ராமா’ன்னு அம்பு வளஞ்சு போறது.
“உளர்ரேனாடா? என்னடா பண்ணட்டும்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த வலிய வண்ணமாக்குற வித்த மட்டும் தான். வண்ணத்திலேயே மூழ்கறேன். வண்ணத்திலேயே குளிக்கறேன். வண்ணத்தையே உடம்புல பூசிக்கறேன். வண்ணங்களாலேயே கோயில் கட்டறேன். கோபுரமும் விமானமும் மேல்கலசமும், மண்டபமும் விதானமும் அலங்காரத்தூணுமா, விதவிதமா கட்டி நிறையறேன். டேய், ராமன் அவனோட அந்த பொம்மையிலேயா இருக்கான்? இதோ, இந்த வர்ணங்கள்ள இருக்கான். என் சுவரங்கள்ள இருக்கான். “சர்வேஷு ரமந்தே இதி ராமா”- ன்னு சும்மாவா சொல்லிருக்கு? ‘சமயானிக்கி தகு மாட்டலு’ அனிவாருரா மன ராமுடு. ஒரு நாள் நான் கட்டுற கோயில்கள்ள குடியமர்ந்திருக்கிற என் ராமன, ராமன்கள, நான் காண்பேன்.
“டேய் விடியும்போது காவிரிக்கரையில கிளியும் கீச்சானும் கரிச்சானும் குயிலும் கூவிப்போடற சப்தமெல்லாம் ஒவ்வொண்ணும் ஒரு வர்ணமில்லியாடா? அதை நிறஞ்சு கேட்டவன் நாரதகானம் அறிஞ்சவன். இதை என் சகோதரண்ட்ட சொன்னா பரிதாபமா பார்க்கறான். ஹீனன்… அவன மாதிரி ஹரிதாச கோலத்துல சப்ளாக்கட்டைய தூக்கீண்டு வந்து நின்னாத்தான் ஆமா, நீரு நாரதரு, உமக்கு வந்தனம்ன்னு ஏத்துக்கற ஸ்வான ஜன்மம். டேய், என் சங்கீதம்ன்றது சாமவேதாதிபதியான அந்த காளஹஸ்தீஸ்வர சங்கரனே எனக்குக் கொடுத்தது. ஹாலஹாலத்தக் கண்டத்துல நிறுத்தினவன். சர்ப்பமணிஞ்சவன். என் கண்டத்திலேயும் விஷம் இருக்குதுடா. நாக்கும், கொடுக்கும் இருக்கு. கண்ணமூடி புலன ஒடுக்கி ராமாராமான்னு ஜபம் பண்றதுக்கில்ல இந்தக் குரலும் சாரீரமும்.
“அந்த புத்திஹீனண்ட்ட நிறைய சொல்லியாச்சு. என் வழி தான் நல்ல வழி, இங்க வா, இங்க வான்னு பிடிச்சு இழுக்கறான், அந்த நல்லவன். அவன் பொம்மைய நான் ஆராதிக்கணுமாம். வெளித்தொடர்பெல்லாம் விட்டுட்டு, அவன மாதிரி ஊஞ்சவிருத்தி பண்ணி மேனி மெலிஞ்சு அங்கம் உதிர்ந்து ராமநாமாவ சொல்லி பாதம் அடையணுமாம். இப்படியே போனா ஒருநாள் ராமாராமான்னு அவன் கொஞ்சிக்களியாடற அந்த பொம்மையத் தூக்கிக் காவிரிலயே போட்டிருவேன். டேய் தூதா, பஞ்சநாதன் கிட்டப் போய் சொல்லு. அவன் பாதை அவனுக்கு. என் பாதை எனக்கு. குறுக்க வந்தான்னா அவன் ரொம்ப வறுத்தப்படுவான். இதான் என் தூது, போய்ச் சொல்லு, போ!’”
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், சூரியன் அணைஞ்சிருந்த நீலத்துல் ஜப்யேச பாகவதரோட முகம் சாம்பலும் கருப்புமா உருமாறியிருந்ததுன்னு. மலை மாதிரி அவர் பேசாமல் ஆயிருந்தார். கண்ணு சிவந்து, இங்குமங்குமா அலஞ்சிண்டு. அப்போ அலைகள் பிரிய படகு துறையணையத் தொடங்கிச்சு. துடுப்புக்காரன் படகத் திருப்பினான். திருவையாறு வந்திருச்சு.
“ராமாமிர்தம் பிள்ளை ஜப்யேச பிரம்மத்துக்கிட்ட கேட்ருக்கார். ‘அண்ணா, இதுதான் உங்கச் செய்தியா? போய் உங்க சகோதரர்ட்ட சொல்லலாமா?’ன்னு.
“அவர் உடனே, ‘ம். ஆனா இன்னிக்கி அவன் அகத்துல இருக்க மாட்டான். சத்தரத்துல தங்கிட்டு நாளைக்கு அவன் வந்ததும் சொல்லிக்கோ,’ன்னாறாம்.
“அப்போ ராமாமிர்தம் தயங்கி, ‘அண்ணா, இன்னொரு தூதும் இருக்கு,’ ன்னு சொல்லி, ‘இது அடியேனோட ஆத்மீகமான தூது,’ ன்னும் சொன்னாரு. ஜப்யேசர் ‘ம்’ – ன்னதும், ‘உங்க அரண்மனை அரங்கேற்றத்தை ஏற்பாடு பண்ணின ரமாவாணி எனக்கு சகோதரி முறையானவ. அரண்மனைவாசமா இருக்குறவ. அவ சங்காத்தம் வேண்டாம்,’ ன்னு துணிஞ்சு சொன்னாறாம்.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார். அப்போ ஜப்யேச பிரம்மம் அவரைத் திரும்பி நோக்கின பார்வையானது, தன் அகலமான இடையில, இறுக்கமான தசையில, கூறான தடியான அம்பு தெச்சக்கணம், தங்கப்புள்ளிமான் திரும்பித் தன்ன வீழ்த்தினவன நோக்குறப்போ அதோட உருண்ட விரிஞ்ச கண்ல தோன்றர பாவனைன்னு. அவர் படகுலெருந்து ஆத்துல குதிச்சுச் சரசரன்னு கரையேறி போனாரு. அவரு கால்லெருந்து ஈரம் வழிய அதை ஆவேசமா தட்டிவிட்டுட்டுப் போனாரு. அந்தியிருட்டுல மறஞ்சுபோன அவர் உருவத்தைப் படகிலேருந்து ராமாமிர்தம் பிள்ளை பார்த்துக்கிட்டு உக்காந்திட்டிருந்தாரு.”
11
“ரமாவாணி அங்க வருவான்னு ராமாமிர்தம் பிள்ளை நினைக்கல. ஆனா அடுத்தநாளே வந்தா. அரண்மனை மண்டபத்துல தங்கினவ, ராமாமிர்தம் பிள்ளைக்குச் செய்தி அனுப்பி, தர்மசம்வர்த்தியிய பிரார்த்திக்கணும், துணைக்கு வரணும்னு கேட்டுக்கிட்டா.
“ஒரு சேவகன் கூட வர, அவங்கக் கோயில நோக்கிப் புறப்பட்டப்ப, ராமாமிர்தம் பிள்ளைக்குத் தொண்டை வாயில ஏறிக்கிட்டே இருந்தது. ஆனால் வார்த்தை வரல. அவகிட்டப் பேசணும், அம்மா, உன்னக் காத்துக்கோன்னு எச்சரிக்கை பண்ணனும்ன்னு ஏதேதோ எண்ணம் நினைச்சாரு. ஆனா அந்த மங்களவதியோட அபராதமில்லாத, அபவாதம் தொடமுடியாத முகத்தைக் கண்டப்ப அவர் தொண்டை சிக்கிப்போச்சு. அன்னிக்கி அவ முழு அலங்காரமும் செய்துகிட்டிருந்தா. பூர்ணகும்பம் மாதிரி இருந்தா.
“அம்பாளக் கண்டாங்க. ரமாவாணி கண்ணை மூடி தலைக் குனிஞ்சு வேண்டிக்கிட்டா. அவ உதடு இரண்டும் சப்தமில்லாம அசைஞ்சது. ராமாமிர்தம்பிள்ளைக்கு மனசு பொங்கிப்போச்சு. இனி வருமா, இப்படி ஒரு கணம்ன்னு நினைச்சாரு. அந்தக் கணம் ஒரு கணையா அவர் நெஞ்சுல பாஞ்சது. முந்தின நாள் ஜப்யேச பிரம்மம் சொன்னத அப்போ அவரு தெளிவா அறிஞ்சாரு.
“அவங்க இரண்டு பேருமா கோயில் பிரகாரத்திலெருந்து வெளிப்பட்ட சமயம் எதிர்ப்பட்டவரை ராமாமிர்தம் பிள்ளை எதிர்ப்பார்க்கல. திருவையாறு பஞ்சநாத பிரம்மம் முழு ஹரிதாச கோலத்துல நேர்ல வந்தாரு. அவர் வாய் ஹரினாமாவா சொல்லிட்டிருந்தது. பின்னால சாமா நின்னுட்டிருந்தான்.
“ராமாமிர்த பிள்ளையப் பார்த்ததும், ‘தம்முடு? நா சோதருனிடி சூசாவா?’ன்னார். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், பகலோட பளீரான வெளிச்சத்துல ஒரு நிமிஷம் கண்ல நிழலாடறா மாதிரி ஆயிடுச்சுன்னு. முன்னால நின்னவரு பஞ்சநாத பிரம்மமா, ஜப்யேச பாகவதரான்னு குழம்பிடுச்சுன்னு. அங்க நின்னவரோட நெற்றியில கோபிநாமத்துக்கு நடுவுல சிவக்கண்ணோட மென்மையான உருவம் தெரிஞ்சா மாதிரி தோணினதாம். ஆனால் அடுத்தக் கணமே அது தோற்றம்தான்னு தெரிஞ்சதா சொன்னாரு.
“‘என்னடா?’ன்னார் பஞ்சநாத பிரம்மம். ‘பார்த்தேண்ணா, பழம் கிடைக்கல,’ன்னு மட்டும் ராமாமிர்தம் பிள்ளை சொல்லிருக்காரு. ‘இன்னொரு வாட்டிப் பேசுடா,’ன்னு அவர் சொன்னாராம். அப்போதான் ராமாமிர்தத்துக்குப் பின்னால நின்ன ஸ்த்ரீயக் கண்டிருக்காரு. ஒரு எட்டு பின்னால வெச்சாரு.
“‘என் சகொதரனுக்கு அரண்மனையில ஸ்த்ரீ சகவாசம் உண்டுன்னு சொல்றாடா, என்றார். அவர் முகத்துல நீர்க்கோலம் மாதிரி நிழல் ஆடிச்சு. அவளப் பார்க்காமலேயே, ஆமா இவ யாருன்னு கேட்டாரு.
“ராமாமிர்தம் பிள்ளை சொல்லிருக்காரு. இவ தஞ்சாவூர் ரமாபங்கஜம் பேத்தி ரமாவாணி. எனக்குச் சகோதரி முறையானவன்னு. ராமாவாணிட்ட திரும்பி, இவர் திருவையாறு ஜப்யேச பாகவதரோட சோதரர், ஶ்ரீபாத பஞ்சநாத பிரம்மம்ன்னாரு.
“பஞ்சநாத பிரம்மம் முகமே ஒரு சுடரா எரிஞ்சா மாதிரி இருந்தது. ரமாவாணி கைக்கூப்பி வந்தனம் சொன்னப்ப அது காத்துப்பட்டது மாதிரி அலைய ஆரம்பிச்சது. அவர் உதடு துடிச்சுது. கண்ணு அசஞ்சது. அவர் நெஞ்சுக்குலை ஏறி இறங்கினது ராமாமிர்தம் பிள்ளைக்குத் தெரிஞ்சது.
“ரமாவாணி அவரைப் பார்த்தபடி நின்னா. ஆனா அவ மொகத்துல எந்த அசைவும் தென்படல. அப்போ, இமை மூடித் திறந்தா மாதிரி, அவளோட மேகலையோட ஒரு மணி சிணுங்கினது. அந்த சப்தத்துல கலஞ்ச பஞ்சநாத பிரம்மம், ராமாமிர்தப் பிள்ளையப் பார்த்தாரு. அவர் கண்கள் சிவந்திருந்தன.
“‘சர்வேஷு ரமந்தே இதி ராம:,’” என்றார். அனைத்திலும் ரமிப்பதால் அவன் ராமன். ராமான்னு நெடுமூச்சு விட்டு அவங்களைக் கடந்து, அவரோட நார்மடியோட சிறுநுனிக்கூட ராமாவாணி உடலைத் தொட்டுறக்கூடாதுன்ற சிரத்தையொட, வாயிலத் தாண்டி பிரணதார்த்திஹரனும் தர்மசம்வர்த்தினியும் குடிகொண்ட கோயிலுக்குள்ள நுழைன்சாரு. பின்னாலியே சாமா போனான்.
அவர் போறதப் பார்த்து ராமாமிர்தம் பிள்ளை மெல்ல, ‘இனி ஜப்யேசனைப் பார்க்கவேணும்,’ என்றார்.
ரமாவாணி இன்னும் மெல்லமாக, ‘தேவையில்லை, அவர் இருக்க மாட்டார்,’ என்றாள். அவள் குரல் இடறியிருந்தது.
12
“அன்னிக்கி சாய்ங்காலமே ரமாவாணி படகேறி தஞ்சைக்குப் புறப்பட்டா. ராமாமிர்தம் பிள்ளை மறுநாள் ஜப்யேசரைப் பார்க்கும் உத்தேசத்தோட திருவையாற்றிலேயே தங்கிட்டார்.
“ஆனால் ரமாவாணி சொன்னது தான் உண்மையாச்சு. அவர் ஜப்யேசரைப் பார்க்கலை. மறுநாள் விடிஞ்சிட்டிருக்கற சமயத்துல, அவர் தங்கியிருந்த சத்திரவாசல் முன்னாடி சாமா நின்னுண்டு ‘அண்ணா, அண்ணா’ன்னு குரல் கொடுத்துட்டிருந்ததைக் கேட்டு ராமாமிர்தம் பிள்ளை எழுந்து வந்தாரு.
“ஜப்யேசர் சும்மா பயம் காட்டல. உண்மையிலேயே அதை சாத்தியமாக்கிருந்தார். காலமே ரெண்டு சோதரருக்கு நடுவுல வாக்குவாதம் முத்திப்போச்சாம். ‘ரமந்தே! ரமந்தே!’ – ன்னு ஒரே கூச்சலாம். அப்போ, திடீர்ன்னு கதவைத் திறந்து வெளியில வந்த ஜப்யேசர், பஞ்சநாதரோட ராமர் விக்ரகத்தைக் கொண்டு போயி காவேரிக்குள்ள தூக்கிப் போட்டிருக்கார். பின்னாலயே பஞ்சநாதன் ஓடி வந்திருக்கார். ‘டேய் கடங்காரா…’ன்னு அவர் தொரத்திட்டு வர்ரத பார்த்து, ராக்ஷசத்தனமா கெக்களிச்சுட்டு மண்டபத்து மேல ஏறி ஜப்யேசர் தலைக்குப்புற காவேரிக்குள்ள குதிச்சிருக்கார்.
“ஆவணி மாசம். ஆத்துல வெள்ளம் கரைய முட்டி ஓடியது. ‘டேய், பஞ்சநாதா, ராமன் வேணும்னா வாடா, எங்கூட தோளுக்கு தோள் நின்னு மல்லாடுடா, வாடா!’ன்னு தோள அடிச்சு குப்புற விழுந்து நீந்திப்போனாராம் ஜ்யபேசர். பஞ்சநாத பிரம்மம் ஒரு நொடி திகைச்சுப் பார்த்திருக்கார். பிறகு ‘ஹரீ!’ன்னு ஒரு விளி. அப்படியே ஆத்துக்குள்ள குதிச்சுட்டார். பின்னால ஓடி வந்த சாமா இதக் கண்டிருக்கான்.
“அவங்க இரண்டு பேரு தலைகளும் உடம்புகளும் இரண்டு இராட்சசப் பாம்புகளாட்டம் தண்ணிக்குள்ள எழுந்து எழுந்து முங்கறத அவன் கண்டானாம். பிடிச்ச பிடி விடாம, தலையும் தோளும் கையும் காலும் அலைகளுக்கு நடுவுல தெரிஞ்சதாம், மறைஞ்சதாம். பிறகு உடம்பு இரண்டும் மொத்தமா மறைய ‘ராமா!’ ‘ராமா’ன்ற விளி மட்டும் கேட்டுதாம். அதுக்கப்பறம் அந்த விளிக்கூட மறஞ்சதாம்.
“ஆறு கொழுத்து எழுந்தது. ஒழுகிப்போச்சு. ஆத்தொழுக்குல வேற அசைவும் இல்ல, சப்தமும் இல்ல. என்ன பன்றதுன்னு தெரியாம சாமா ரொம்ப நேரம் ‘அண்ணா, அண்ணா’ன்னு விளிச்சு நின்றிருக்கான். பிறகு சத்தரத்துக்கு வந்திருக்கான்.
“ராமாமிர்தம் பிள்ளை அங்க ஓடிப்போனார். போற வழியில வீட்ட ஒரு எட்டுப் பார்த்தார். ஒரு வேளை அந்த இடைவெளிக்குள்ள அவங்க திரும்ப வந்திருக்கலாம்ன்ற பேராசையில. ஆனா இரண்டு வாசலும் சாத்தியிருந்தது. உள்ள யாருமில்லன்னு தெரிஞ்சது.
“செய்தி தெரிஞ்சு ஊர்லேருந்தும், அரண்மனைலேருந்தும் ஆட்கள் வந்து வலைப்போட்டுத் தேடினாங்க. வள்ளமும் படகும் விட்டு அவங்கப் பேரக் கூவிப் பார்த்தாங்க. ஆனா ஒண்ணும் கிடைக்கல. இனி செய்ய ஒண்ணுமில்லனு முடிவாய்ட்டாங்க. ஐயருமார ஆறு கொண்டு போய்டுச்சுன்னாங்க.
“‘ஐயரு நல்லவர்தான். என்ன, கொஞ்சம் கிறுக்கு.’ ‘எப்பப்பாரு ராமா ராமான்னு அந்த விக்ரகத்தையே கட்டிகிட்டிருப்பாரு.’ ‘ஆமா, அதையும் யாரையும் பார்க்க விடமாட்டாரு.’
‘அதான் அவரு அண்ணன்காரனே அதை ஆத்துல கொண்டு தூக்கிப் போட்டான்.’ ‘பின்னே? தானும் வாழாம, இவரையும் வாழ விடாம செஞ்சா?’’ ‘அதுக்குன்னு? சொந்த சகோதரனோட பக்தியக் கெடுக்கறதா?’’‘அதிலும் அவர் எப்படியாப்பட்ட பக்திமான்!ச்ச!இவன்ராக்ஷசப் பிறவி.’‘இல்லடா, இவரு பெத்தவாடு. எம்படகுல போறப்பப் பாடுவாரு.’‘அவரா?’ ‘சூடரே செல்லுலாரா யமுனா தேவி, சொகசெல்ல சந்தோஷமுன…’‘டேய், இதைத்தான் நேத்து தர்பாருல்ல பாடினாரு!’‘எம் படகுலேயும் பாடினார். எனக்காக.’ ‘ஆமா, குஹனுக்கு இல்லாத ராமனா?’‘ஆனா இப்படியொரு அண்ணா-தம்பிய எங்கயும் பார்க்க முடியாதுடா. பெரியவரு ஆத்துக்குள்ள குதிச்சா பின்னாலையே சின்னவரும் குதிக்கறாரு?’ ‘ஆமா, அவரு ராமரு, இவரு பரதரு.’‘அண்ணன் பாதுகையோட வெளிவரப் போறாரோ தம்பி?’
எல்லாரும் பலமா சிரிச்சாங்க. ஆனா வேடிக்கைப் பார்க்க ஒண்ணுமில்லன்னதும் கலஞ்சு போய்ட்டாங்க.
13
“அங்கக்கூடினவங்க பேசிக்கிட்டதெல்லாம் ராமாமிர்தம் பிள்ளையோட காதில் விழுந்தது. ஆனால் அவர் மட்டும் போகல. அங்க நடந்த துன்பத்துக்கு எப்படியோ தானும் துணையாயிட்டோம்ன்ற உணர்வு அவரைப் பீடிச்சிருத்து. மூணு ராவும் மூணு பகலுமா அவர் அங்கியே காவல் நின்னாரு.
“அப்போ அவருக்கு மனசுல பஞ்சநாதரோட முகமும் ஜப்யேசரோட முகமும் மாறி மாறி வந்து நின்னது. இரண்டு பேரும் சண்ட போட்டது ராமனுக்குத்தான்னா, அவங்க சமாதானமா ஒண்ணு கூடறதும் ராமனிலத்தான் நடக்கும்ன்னு அவருக்குத் தோணிப்போச்சு. அப்போ ராமன் வந்தா எல்லா சரியாயிடும்ன்னு அவருக்கு உள்மனசுல ஓர் எண்ணம் உதிச்சதா சொன்னார்.
“மெல்ல ராமா, ராமா, ராமான்னு பாட ஆரம்பிச்சாரு. அவர் மனசுல இருந்த விஸ்தாரத்தையெல்லாம் பாட ஒத்துழைக்காத அவர் குரல் அந்த இரண்டு எழுத்தையும் அவர் மனசுல இருந்த அத்தனை உணர்ச்சியோட மாறி மாறிப் பாடினத அவர் கண்டுகிட்டாரு. எத்தனைக்காலமா சங்கீதம் ஏறாத, சங்கீதத்துக்காக ஏங்கின குரல்! அந்த உணர்வே அவரைக் கொண்டு போச்சு.
“பாடிக்கிட்டிருந்தவரு, எப்போ அந்தச் சொல்லு வெறும் வாயசைவா ஆனதுன்னும், அந்த வாயசைவு எப்போ மனசோட அசைவுன்னு ஆச்சுன்னும் தனக்குத் தெரியிலன்னாரு. சங்கீதம் அப்படி ஒரே நாதமா ஆகமுடியும்ன்னு அவருக்கு அதுவரைத் தெரியாதுன்னார். மூணு நாளும் காவேரியாத்துல வெளிச்சம் மாறினத மட்டும் பாத்துக்கிட்டே இருந்தாரு.
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னாரு, நாலாம் நாள் அதிகாலை வானம் வெளுக்கற சமயத்துல அவருக்குத் தோணிடுச்சாம். இனியும் ராமன் வரலைன்னா, தானும் போய் காவிரில கலந்துடணும்ன்னு. ஏன் அப்படித் தோணிச்சுன்னு தெரியல, தன் கால்களை யாரு அசைச்சான்னு தெரியாமலே, ஆனா எழுந்து படித்துறையில இறங்கி ஆத்துல கால வெச்சுட்டிருந்தேன்னர். காதுல சப்தமே இல்ல. வெட்டவெளியா இருந்தது உள்ளத்துல. ராமான்னு தலைக்கு மேல கைகளத் தூக்கி இறங்கப் போனார்.
“அப்போ கீழைப்பக்கமா, ஆறு வளஞ்சுபோன இடத்துல தண்ணிக்குள்ள ஏதோ நகர்வது தெரிஞ்சது. ராமாமிர்தம் பிள்ளை அசைவும் மூச்சும் நின்னு பாத்திருக்கார். ராமா?
“அந்த நொடியில, ஆத்துத் தண்ணியப் பிளந்து, ஒரு மனுஷ உடம்பு கிளம்பிப் புறப்பட்டது. படித்துறையில ஏறிப்போனது அந்த உருவம். அது ஆடையேதும் அணியல. கொஞ்சம் தூரம்னாலும் ராமாமிர்தம் பிள்ளைக்கு அது நல்லாவே தெரிஞ்சது. அந்த உருவத்தோடக் கையில பெரிய தங்க விக்ரகம் ஒண்ணு இருந்தது.
“அதுவரைத் தன்னை ஆட்டிக்கிட்டிருந்த சரடெல்லாம் அருந்து போனது மாதிரி ராமாமிர்தம் பிள்ளை உயிர்க்கொண்டு பேதலிச்சு முழிச்சார். ஓ — ன்னு அவர் காதுக்குள்ள ஓசைகளெல்லாம் முழங்க ஆரம்பிச்சது. காத்து, வெளி, ஆற்றுவெள்ளம். அங்க தூரத்துல ஒரு பாட்டு.
“திடீர்ன்னு அவரும் ஓட ஆரம்பிச்சார். படிகள்ள ஏறி ஆத்துமணல்ல அந்த உருவத்த நோக்கி ஓடினார். அதுக்குள்ள அது மணல்வெளியக் கடந்து தெருவுக்குள்ள நுழைஞ்சிடிச்சு. ஒரு ஒத்த மனுஷக் குரல் பாடின, அதிசயமும் கோலாஹலமுமான ஒரு பாட்டோட நாதம் மட்டும் அங்கிருந்து வந்தது. நெருங்கினப்ப வார்த்தையா பிரிஞ்சு அவர் காதுல ஏறத் தொடங்கினது.
கனுகொண்டினி!
“வஸ்திரமேதும் அணியாம, கையில் பஞ்சநாத பிரம்மத்தோட ராம விக்ரகத்தை பிடிச்சபடி அந்த உருவம் ஜப்யேச பாகவதரோட ஆழமான மகத்தான குரல்ல அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு ஓடிநது. ராமாமிர்தம் பிள்ளை ஓடி வந்து பார்த்தபோது அது மறைஞ்சிருந்தது. ஆனால் ஒரு மனுஷனோட புத்தம்புதிய காலடிச்சுவடு ஆற்று மணலில் தெரிஞ்சது. பாடலோட இழை எங்கிருந்தோ மிதந்து வந்தது.
‘ராமபாணம் தைத்து – அதன்
மதுரம் ஆட்கொண்டு –
கட்டுகளெல்லாம் அறுந்து – என்
பாத்திரமும் உடைந்து
கண்டுகொண்டேனே!
ராமனை –
கண்டுகொண்டேனே!
“ராமாமிர்த பிள்ளை சொன்னார். அன்னிக்கி திருவையாத்துல பாகவதர்கள் ஓர் ஊர்வலம் எடுத்தாங்க. காவேரி தான் எடுத்துக்கொண்ட பாகவதரை ஊருக்கே திரும்பக் கொடுத்ததை அவங்க அதிசயத்திலும் அதிசயம்ன்னு சொன்னாங்க. அது காவேரியோட தியாகம்ன்னு சொன்னாங்க. கரையேறி வந்தவன தியாகப்பிரம்மமுன்னும், நாதபிரம்மமுன்னும், தியாகராஜன்னும் சொல்லு பாடி ஏத்தினாங்க.
“பஞ்சநாத பிரம்மத்தோட ராமன பூரண அலங்காரம் செஞ்சு அந்த பூஜ்ய பிராமணனோட கையிலேயே கொடுத்து கொண்டு போக வைச்சாங்க. அதைத் தூக்கிப் பாட்டுப்பாடிக் கொஞ்சின ஜப்யேச பாகவதரோட கனமான, இனிமையான குரலக் கேட்க ஊராரும் சுற்றத்தாரும் திரண்டாங்க. இந்தப் புது மனுஷனுல தியாகமானது யாரு, ஜப்யேசனா, பஞ்சநாதனான்னு யாராலும் சொல்ல முடியல. ஆனால் அவன் கையில ராமன் இருந்தான்.
“வீட்டுக்குளேருந்து விடுபட்டு வெளியில இறங்கின ராமனைப்பார்க்க வீடுவீடா வந்தாங்க. பாட்டாலேயே உபசாரம் நடந்தப்பெற்ற பரமனைப் பார்க்க பாரெல்லாம் வந்தாங்க. பெண்மக்களும் ஆண்மக்களும், எளியவங்களும் ஏத்தம்பெற்றவங்களும், அறிஞ்சவங்களும் அறியாதவங்களும், எல்லாரும் அவரைக் காண வந்தாங்க. அவங்க எல்லாருமே அந்த புது மனுஷன விரும்பினாங்க. அவன் நல்ல உள்ளத்த, அவன் நயத்த, அவன் சிரத்தாபக்திய, எல்லாருக்குமாக அவன் விளம்பிய அவன் சங்கீதத்தை.
“ஆனா பயல்களா. ஊரே அவனையும், அவனை மீட்டுக்கொடுத்த ராமபாணத்தையும் கொண்டாடின அந்த நன்னாள்ல, ஒருத்தி மட்டும் கொண்டாடாம இருந்தா. தஞ்சாவூர் அரண்மனையோட அந்தப்புரத்துக்குள்ள, பஞ்சும் பட்டுமா மெத்தையிட்ட கட்டிலில படுத்து, நெஞ்சே உலையுறா மாதிரி கெஞ்சி அழுதிட்டிருந்தவ, ஏன் அழுதான்னு கேட்டா அந்த ராமனாலேயும் சொல்லியிருக்கமுடியுமா? டேய், ஒக நாம ஒக மாட ஒக பாண் ஒக பார்ய-ன்னு சொல்றா. எல்லா சக்தியுமமஞ்ச அவனோட ராமபாணத்துக்கு அவன் உயிர்மூச்சான சீதையோட கண்ணீரத் தடுக்க சக்தியில்ல. இந்தத்துளைய எது அடைக்கும்ன்னு நமக்கென்னடா தெரியும்? நாமளோ ஈனமான, தீனமான மனுஷப்பிறவி.
“அன்னிக்கி சாய்ங்காலமே அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. தியாகராஜன்னு பெயர் ஏத்தப்பட்ட நாதபிரம்ம பாகவதர் அரண்மனைப் பாட்டுக்காரராவே இனி விளங்கலாம்ன்னு. ஆனா அவர் அதை மறுத்துட்டார். ‘இனி எனக்கு என் ராமனும் இருக்கான். சங்கீதமும் இருக்கு. இந்த இரண்டும் சேர்ந்து கிடைச்சது இந்த ஜகத்துல உள்ள அத்தனை சம்பத்துகளை விடவும் எனக்குப் பெரிய நிதி,’ என்றார்.
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அதுக்கப்பறம், அவர் நாளெல்லாம் நாம ஜபமும் பூஜையும் பஜனையாவும் கழிஞ்சது. தன் ராமனைத் தூக்கிகிட்டு ஊஞ்சவிருத்தி போய், பாடி, தன்னுடைய ஒரு வேள ஆகாரத்த முடிச்சார். ஆனால் இராவெல்லாம், அவர் குரல் எழுந்து எங்கெங்கோ சஞ்சாரமாச்சு. பயலுகளா, இந்த மாதிரி வேளைகள்ள காதத் தீட்டிக் கேட்டா, பாட்டுக்களா நிறையாம பொழிஞ்ச அவர் குரல் இந்தக் காவிரி நதிக்கு மேல கேட்கும்னு ஐதீகம். காதுள்ளவனெல்லாம் அதைக் கேட்கலாம்.
“அவர் நில்லாம பாடின பாட்டுக்களையெல்லாம் அவருடைய சிஷ்யர்கள் மாறி மாறித் தூக்கம் ஒழிஞ்சு ரகசியமா நின்னு காதால கேட்டு வாயாலப் பாடி மனதால நிறுத்தி வைச்சுட்டாங்க. என் குருநாதர் திருவையாறு ராமாமிர்தம் பிள்ளை அவருக்கு சிஷ்யரில்லைன்னாலும் அவரும் அதைச் செஞ்சாறு. அவர் குரல் உசரலன்னாலும் அந்தப்பாட்டுகளை அவர் மனத்துல அறிஞ்சிக்கிட்டாரு. அவர் நினைவு கடல் மாதிரி. பயலுகளா, நீங்களும் நானும் அவர் நினைவுல மிதந்து வந்த கனவுஜீவிகள்.
“நாதப்பிரம்ம பாகவதரோட சிஷ்யர்கள் பகலெல்லாம் இந்தக் காவிரிக் கரையில நின்னு அவர் பாட்டுகள உருப்போடுவாங்க. அப்போ காவேரியே அவர் பாட்டுகள ராமா ராமான்னு எதிரொலிக்கும்ன்னு சொல் உண்டு. அது இன்னிக்கி வரை மாறாத சத்யம். இந்தக் காவேரியே அதுக்கு சாட்சி. அதுக்கு வந்தனம்.”
தில்லைஸ்தானம் ராமுடு அமைதியானார். கருக்கிருட்டில் காவேரியின் அலைச்சப்தம் ஒரே நாமத்தை மீண்டும் மீண்டும் ஜபிக்கும் குரல் போல் தோன்றியது. ஒரு சுருதி, ஓர் ஆதார ஷட்ஜம். இரவில் முனகும் ஓர் ஒற்றைக் கிரௌஞ்சப் பறவை. ராமுடு மிகமெல்லிய நாதமாக ஓர் இழை பாடினார். சுருட்டி. பிறகு சௌராஷ்டிரம்.
‘நீ நாம ரூபமுலகு நித்ய ஜெய மங்களம்’.
14
சாம்பு அவன் கனமான புருவங்களைக் கோர்த்து, தூரத்தில் நோக்கிக்கொண்டிருந்தான். ராமுடு எழுந்து மண்டபத்துக்குப் பின்னால் சென்று வந்தார். பிறகு தன் தோளைச் சுற்றிப் போத்தியிருந்தப் போர்வையை தரையில் விரித்துத், துண்டை திண்டாக உருட்டித் தலையை சாய்த்துப் படுத்தார். நிலா மேற்காக மறைந்துவிட்டிருந்தது. நதிக்கு மேல் விடிவெள்ளி பழுத்துத் தெரிந்தது. அவர் கண்களை மூடினார்.
சாம்பு அவர் பக்கத்தில் படுப்பதை தூக்கத்தில் எப்போதோ உணந்தார். அவர் மீண்டும் கண்களைத் திறந்தபோது ‘கவிராயன்’ மீனாட்சிநாதனைக் கண்டார். மூட்டுகளை கட்டிக்கொண்டு நதியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் கண்களை மூடினார்.
அவர் மீண்டும் கண்திறந்தபோது நன்றாகவே விடிந்துவிட்டிருந்தது. வானம் சிவப்பும் ஊதாவுமாகத் தோன்ற, நதி இளம் நீல நிறத்தில் புதிய சித்தாடை உடுத்திக் காட்டும் கன்னிப்பெண் போலே மெல்ல மிதந்து சென்றது. அதன் சிறிய அலைகளின் முகடுகள் வெள்ளையாக முத்துக்களாகத் தெரிந்தன.
தில்லைஸ்தானம் ராமுடு எழுந்து தன் படுக்கையைச் சுருட்டினார். அவர் விழித்ததை உணர்ந்து சாம்புவும் எழுந்தான். நீண்டநாள் பழக்கம் போலே கைகளை உரசிக்கொண்டு கண்களில் ஒற்றினான். “கராக்ரே வசதே லக்ஷ்மி…”
ராமுடு மீனாட்சியிடம், “ஏண்டா? தூங்கல?” என்றார்.
“கதைக் கேட்டா தூக்கம் வர மாட்டேங்கறது அண்ணா,” என்றான் மீனாட்சி, அவரைப் பார்த்து. எழுந்து அவருடன் ஆற்றை நோக்கிப் போனான். சாம்புவும் இணைந்துகொண்டான். அவர்கள் இறங்கியபோது ஆறு நிறைந்து சுழன்று வந்தது. அவர்களுடைய காலைச் சுற்றியது.
சாம்பு நன்றாகக் குனிந்து ஆற்றைத் தொட்டுக் கும்பிட்டான். அவன் அப்போது கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் தீவிரத்தை மீனாட்சி கண்டான். கண்கள் மூடியபடியே சாம்பு ஆற்றில் இறங்கினான். அப்போது மீனாட்சியின் முகத்தைக் கண்டு ராமுடு “என்னடா?” என்றார்.
மீனாட்சி அவரைப் பார்த்தான். “இல்லண்ணா. ஓர் எண்ணம்.”
“ம்?”
“பஞ்சநாதரையும் ஜப்யேசரையும் கோத்த ராமபாணம், அவங்க இரண்டு பேரையும் உங்க குருநாதர் ராமாமிர்தத்தோடக் கோத்தது. அவங்க மூணுப் பேரையும் அந்த ரமாவாணியோடக் கோத்தது.”
“ம்?”
“அப்படிக் கோத்துக்கிட்டே போனா என்னண்ணா வரும்?”
ராமுடு மீனாட்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆற்றில் நுழைந்தார்.
தனியாகக் கரையில் நிறுத்தப்பட்டான் மீனாட்சி. அவன் இருபக்கமும் பார்த்தான். இரண்டு பக்கமும் நீண்டு சென்றது நதி. தொடக்கமும் முடிவும் அற்றது போல். சென்றுகொண்டே இருந்தது.
அதன் தூரத்தை அவனால் மனத்தில் நிறுத்த முடியவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தவன் தான் அறியாத கணமொன்றில் பாய்ந்தான். நீரில் திளைத்தபடி திரும்பியவனின் முகத்தில் ஒரு புன்னகை குடிகொண்டிருந்தது.