Normal view

Received before yesterday

என் பெயர்

 ’ஆய்வு ஒருங்கிணைப்பு மைய’த்திற்கு மாலை ஏழு மணிக்கு நான் வந்து சேர்ந்தபோது டாக்டர் ஹரிஹர சுப்ரமணியமும், டாக்டர் முகமது ஜலீலும்...

The post என் பெயர் appeared first on சிறுகதைகள்.

புத்தகக் கண்காட்சியில் இன்று 06/01/25

இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்வனம் அரங்கில் வானம் பதிப்பக உரிமையாளர் மணிகண்டனோடு அளவளாவினொம். அவருடன் நடந்து செல்கையில் திருக்கார்த்தியல் ராம் தங்கம் தம்பியைச் சந்தித்தோம். ராமும் மணியை கலாய்ப்பதில் எங்களோடு சேர்ந்து கொள்ளவே மணிகண்டன் நைசாக கழன்று கொண்டார். பிறகு நாங்கள் மட்டும் ஊர்வலத்தைத் தொடர்ந்தோம்.

விஷ்ணுபுரம் அரங்கில் ஜெயமோகனை சந்தித்தோம். அவரது சிறுகதைத் தொகுப்பான படையல் நூலில் அவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அரங்கிற்கு வெளியே ஒரு காபி குடித்தோம். கிளம்பும் நேரத்தில் என்.ஸ்ரீராமைச் சந்தித்தோம்.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் சிறியதுதான். இன்னமும் நாட்கள் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளலாம்.

நூல் வாசிப்பிற்கான நுனி

"இப்படி அபத்தமா, தப்புந்தவறுமா இங்க இருக்குன்னு சொல்லிட்டியே.... அப்ப இங்க இருந்து படிச்சு ஒரு புண்ணியமும் இல்லையா" என்று ஒரு நண்பர் வாட்சப் சேனலில் வெளியிட்டிருந்த "முதல்தர வேலைக்கு முந்துங்கள்" கட்டுரைக்கு பதிலாக கேள்விக் கேட்டிருந்தார்.

பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் வினைக்குத்தானேத் தவிர, பாவம் எழுதுபவரை ஏன் நோவானேன். ஒரு புத்தக ஆர்வலானனாகவோ, வரலாற்று தரவுகளை சரிவர புரிந்து கொள்ளும் விருப்பமுள்ளவனாகவோ எனக்கு கற்பிதங்களும் தவறுகளும் மலிந்த சூழல் ஒருவகையில் உற்சாகமான சவாலை அளிக்கின்றது.

நமக்குக் கிடைப்பவற்றைக் கொண்டு அதன் பிறழ்வுகளை சரிப்படுத்தி நமக்கான ஊட்டமிகுந்த உணவாக்கிக் கொள்வதும் நிறைவான பணிதான். உதாரணத்திற்கு அண்மையில் நான் எதிர்கொண்ட சில அபத்தங்களையும், அதற்காக படித்த புத்தகங்களையும் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

வாடிவாசல் (சி. சு. செல்லப்பா):

முதல் பதிப்பு 1959ல். சி சு செல்லப்பா ஒரு தீவிர இலக்கிய செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். தீவிரம் என்றால், இறுக்கம் கலந்த தீவிரம். அவர் நடத்திய இலக்கிய கூடுகைகளில் அவருடைய தணியா ஆர்வம் பிறரால் கேலி செய்யப்படுமளவுக்கு தீவிரமானவர். வாடிவாசல் குறுநாவலின் முதல்பதிப்பை அவர் வணிகரீதியாக வெளியிடவில்லை. அவர் நடத்தி வந்த 'எழுத்து' பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு, விலையில்லாத புத்தகமாக அனுப்பி வைத்தார். நாற்பதுகளில் அவர் எழுதிய குறுநாவல், செல்லப்பாவின் எண்பத்தியாறாம் வயதில் மறுபதிப்பு காண்கிறது. பிறகு இந்தியா டுடே தன் பத்திரிகையில் வெளியிட்டதன் மூலம் கூடிய வாசகர் பரப்பைப் பெற்றது. இப்போது தமிழில் திரைப்படமாக எடுப்பதற்கான முயற்சி நடப்பதால், எழுபது வயதான இந்த புத்தகம் பற்றி அவ்வப்போது யாராவது பேசுகிறார்கள். அதில் ஒரு சினிமா செய்தியாளர், 'வாடிவாசல் நாவலில் வரும் வைத்தி பாத்திரம் இருக்கிறதல்லவா..." என்றுப் பேச, அட இதென்ன நாம் படித்த கதைக்கும் இவர்கள் பேசும் கதைக்கும் சம்பந்தமில்லையே, என சரிபார்க்க புத்தகத்தை மீண்டுமொருமுறை தேடிப் பிடித்தேன்.



சல்லிக்கட்டு காளை அடக்குதல் பற்றி அக்காலத்தில் தமிழில் பல கதைகள் வெகு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. பெருமாள் முருகனின் முகவுரையில் அவற்றின் ஒரு வரிசையையும் குறிப்பிட்டிருக்கிறார். கிரா-வின் கோபல்லபுரத்து மக்கள் பற்றிய விரிவான பதிவுகளிலும் சல்லிக்கட்டைப் பற்றி படித்த நினைவிருக்கிறது.

ஒரு செருக்களன் போல அந்த சல்லிக்கட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் செல்லப்பா. அவ்வளவு இயல்பாகவும், புதுவகையாகவும் சொல்லப்பட்ட கதை. இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு நின்று பேசப்படக் கூடிய எழுத்து.

கதையின் நாயகனான பிச்சிக்கு இணையாக மருதனும், தகவல் சுரங்கமான கிழவனும் ஜமீந்தாரும், அம்புலியும் விரவி நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும், கூட நின்று சல்லிக்கட்டைக் கண்டுகளிக்க வந்திருந்த சனத்தையும் சேர்த்து எதிர்நாயகனாக ஜமீந்தாரின் காரி தாவிக் குதித்து விட்டது.

தில்லானா மோகனாம்பாள்:
(கலைமணி (எ) கொத்தமங்கலம சுப்பு)

வாடிவாசல் போன்ற ஆக்கங்கள் சென்று சேராத வாசகர் பரப்பை இந்த்த் தொடர்கதை சென்றடைந்தது. அன்றைய தமிழ் பெரும்பத்திரிகைகளுக்கு புதிய வாசகர் பரப்பை பல இடங்களிலும் உண்டாக்கிக் கொடுத்த பெருமையும் இதற்கு உண்டு. நாதஸ்வரக் கலைஞன், நாட்டியக் கலைஞர் என்கிற வெகுஜனக் கலையின் மாந்தர்களை முதன்மை வாசகர்களாகக் கொண்டதில் இதன் வாசகப் பரப்பு பெரியதாக விரிவடைந்தது.



ஒரு பேட்டியில் ஓர் எழுத்தாளர், 'தில்லானா மோகனாம்பாள், நாவலை திரைப்படமாக எடுத்தபோது, முலக்கதையின் சம்பவங்களை முன்பின்னாக மாற்றி சாமர்த்தியமாக செய்திருந்தார் ஏபிஎன்' என்று குறிப்பிட, மேலேக் குறிப்பிட்டிருந்த அதேக் குழப்பம் மீண்டும் ஏற்பட்டது. நாம் படித்த புத்தகத்தைத்தானா இவர்களும் குறிப்பிடுகிறார்கள் என.

அவர் குறிப்பிட்டிருந்தபடி இந்தத் தொடர்கதை இரண்டாயிரம் பக்கங்கள் எல்லாம் இல்லை. ஆனால் அப்படியானதொரு திட்ட வரைவு இருந்திருக்க முகாந்திரம் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் முதல் பாகத்தை சுப்பு எழுதி முடித்துவிட்டார். பெருவாரியான வரவேற்பு இருந்ததால், இரண்டாம் பாகத்தைத் தொடங்கியும் விட்டார். முதல் பாகத்தில் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் இடையே இருந்த காதல் பிரச்னைகள் பெருமளவிற்கு தீர்ந்து, அவர்களுடைய கல்யாணமும் நிச்சயம் ஆகிவிடுவதால், சுப்பு புதிய களமாக சண்முகசுந்திரம் மீது கோர்ட் கேஸ் என்று கதையை வளர்க்கத் தொடங்கினார். இசைக் கச்சேரிகளால், முன்னதாக ஈர்க்கப்பட்டிருந்த வாசகர் தரப்பு, இந்தக் கோர்ட்டுக் கச்சேரிகளால் அதிகம் வசீகரிக்கப்படவில்லை. அதனால் சுப்பு இரண்டாம் பாகத்தை நானூறு பக்கங்களுக்கு பக்கமாக முடித்துக் கொண்டார். ஆக, இரு பாகங்களாக வந்த புதினத்தின் அளவு ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கும் குறைவுதான்.

இந்த நூலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், மிகக் கச்சிதமாக நாவலின் முதல் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் வரும் உச்சக்காட்சியான மைனர் நாகலிங்கம் கடத்தும் பகுதிதான் (இது இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுவது) சிக்கலுக்கும் மோகனாவுக்குமான திருமணத்திற்கு முந்தைய பகுதி.

ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தும் ஏபிஎன், மூலக்கதையிலிருந்து முன்பின்னாக மாற்றி திரைக்கதை செய்திருந்தார் என்பதற்கு எந்தவித நிரூபணமும் கிடைக்கவில்லை.

மீண்டும் வாசிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு சுவாரசிய பத்தி. சண்முகசுந்தரத்தை கைது செய்ய போலி கேஸ் கொடுத்த, வைத்தி, அவர்களுடைய திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக வருகிறார். அங்கே அவரைப் பிடித்து கேள்விக் கேட்கும்போது, தப்பிக்க பேசும் சமத்கார உரையாடல் பகுதி:

"என்ன வைத்தி, இவ்வளவு கெடுதலும் பண்ணிட்டு, இங்கே வேற எப்படிய்யா வரத் தோணிச்சு உனக்கு?"
"சட்டம் வேற, சம்பந்தம் வேற சார். ஜார்ஜ் ஃபிஃப்த் சக்ரவர்த்தியும், கெய்சரும் சண்டைதான் போட்டுக்கிட்டாங்க. அரண்மனையிலே ஒரு ஃபங்க்ஷன் வந்திடுத்து. ப்ளட் ரிலேஷன் இருக்குப் பாருங்கோ. க்வீன் விக்டோரியாக்கு குழந்தை பிறக்கும்போது ஹீ (Kaiser Wilhelm II) 
இஸ் த ஃபர்ஸ்ட் மேன்"

"என்னப்பா ஜெர்மனிக்கு போயிட்டே"

"வேர்ல்ட் இஸ்டரி தெரியனும் சார். ஊரிலே சொல்றாங்க. இஸ்ட்ரி வேண்டாம். ஜியாக்ரஃபி வேண்டாம். அப்படின்னுட்டு. அவன் என்ன பண்ணான். கெய்சர் அரண்மனைத் தோட்டத்திலே மீன் பிடிச்சிட்டிருந்தான். விக்டோரியாவுக்கு குழந்தை பிறந்திடுத்துன்னு சொன்னவுடன இரண்டு மீனை எடுத்து தங்கக் கிண்ணத்துல போட்டு அனுப்பிட்டான். பாவம் பிரசவிச்சவங்க சாப்பிடட்டுமேன்னு. ஆமா இங்க கல்யாணத்தில யாரு சமையல்? சாப்பாடு எப்போ "

அப்படியே உலக விஷயங்களைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டே தடாலடியாக சாப்பாட்டு விஷயத்திற்கு தாவிவிடுகிறார். திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நாகேஷ் இது போன்ற சவடால் பேச்சுகளுக்கு கொடுக்கும் உயிரூட்டத்துடன் இதைக் கற்பனை செய்து பார்த்தால் சிரிப்புத் தாங்காது.

இதே உரையில் போனசாக, ஏபிஎன் -இன் திருவிளையாடல் படத்தை பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினார் என்று வேறு குறிப்பிட்டார். பாவம் பரஞ்சோதி நாயனார். அவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் மதுரையைச் சுற்றி சிவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஏபிஎன்னின் திருவிளையாடல் திரைப்படம்.

உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் கூட அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணமும், பரஞ்சோதி நாயன்மாரின் திருவிளையாடல் புராணமும் வேறு என்று சுட்டிக் காட்டவில்லை.

ஒருபுறம் சைவ மரபின் தனித்துவத்தை மழுங்கடித்துக் கொண்டிருக்க, இப்புறமோ சைவ மரபின் எந்த அடிப்படையும் தெரியாமல் ஒரு சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது.

கான்சாகிப் சண்டை:
(பதிப்பாசிரியர்: நா. வானமாமலை)

சிவகங்கை கும்மி, கட்டபொம்மன் கதைப்பாடல், ராமப்பையன் அம்மானை - போன்ற நாட்டுப்புற கதைப்பாடல்கள் வழியேத்தான் நாம் சில வரலாற்றுப் போர்களைப் பற்றியும், அந்த அரசர்கள் பற்றியும் முதன்மையான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.




புகழ்பெற்ற மருது சகோதரர்களுக்கு தபால்தலை வெளியிட இந்திய அரசு முன் வந்தபோது, அவர்களுடைய வரலாற்று பெருமைக்கு முதன்மையான அத்தாட்சியாக இருந்தவை நாட்டுப்புற கதைப்பாடல்கள்தான்.

ஏதோ ஒரு பதிவில் "கட்டபொம்மன் ஒரு வழிபறி கொள்ளைக்காரன். திரைப்படங்கள் வாயிலாக கட்டபொம்மனை ஒரு விடுதலைப் போர் வீரனாக்கி விட்டார்கள்" என்றபோது சற்று திகிலாக இருந்தது. ஒருவேளை நமக்குத் தெரியாமல் ஏதோ வரலாற்றுத் தகவலை அகழ்வாயுகளில் வெளிக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா, நா வானமாமலையின் நாட்டாரியல் திரட்டுகள் மீது மிகுந்த கவனம் கொண்டிருந்தவர். அவருடைய உந்துதலின் பெயரில்தான், 'மருதநாயகம்' என்கிற திரைப்படத்திற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தொடங்கிய சில காலத்திலேயே, நமது தமிழ்ச்சூழலில், குறிப்பாக திரைத்துறையை சார்ந்த சில செல்வாக்கு மிகுந்தவர்களிடையே ஒவ்வாமையை உண்டாக்கி விட்டது. காரணம் கான் சாகிபின் வரலாறு அப்படியான மேல்கீழாக்கங்கள் கொண்டது. ஒரு புறம் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்ற கமாண்டர் யூசுப்கான். நாட்டார் கதைப்பாடலில் 'கம்மந்தான்' என்று குறிப்பிடப்படுகிறான்.

ஆர்க்காடு நவாபின் ஆளுகையிலிருந்த தென்னிந்தியப் பகுதியில் பாளையக்காரர்களுக்கு வரிவசூலிக்கும் பாத்தியதை பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பிறகு கிழக்கிந்திய கம்பெனி நவாபிடமிருந்து மொத்த வரிவசூலிக்கும் உரிமையையும் குத்தைகைக்கு எடுத்துக் கொள்ள, பாளையக்காரர்களிடமிருந்து வரிபெற்றுச் செல்லும் பொறுப்பில் யூசுப்கான் அமர்த்தப்பட்டான். பூலித்தேவர், கட்டபொம்மு நாயக்கர் (நமக்கு பெரிதும் அறிமுகமான ஜெகவீர் கட்டபொம்முவின் பாட்டனார் இவர்) போன்றவர்களுடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தவன் யூசுப்கான். இதற்காக மதுரை நகரின் சுபேதராக பதவி உயர்வு கிடைத்தது.

சிவகங்கை பாளையக்காரனான தாண்டவராயனோடு மோதல் ஏற்பட, தாண்டவராயன் ஆர்காடு நவாபின் நம்பிக்கையைப் பெற்று கான் சாகிபின் பதவிக்கு வேட்டு வைக்கிறான். இதனால் கோபமடைந்த கான்சாகிப் தானே மதுரையின் நாயகமாக முடிசூட்டிக் கொள்கிறான். இப்படித்தான் 'மருதநாயகம்' என்கிற வரலாற்று சித்திரம் உருவாகியிருக்கிறது.

இப்போதும் இளையராஜா இசையில் ஒலிக்கும் மருதநாயக திரைப்படத்திற்கென எடுக்கப்பட்ட பாடலின் தொடக்க வரிகள் "பொறந்தது பனையூர் மண்ணு...." இந்த நாட்டார் கதைப் பாடலிலிருந்து பெறப்பட்டதுதான்.

"மதனதுரை கானுகதை பாட
வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி
கள்ளரை கருவறுத்த தீரன்
கனமான மதுரை நகராண்டிடுஞ் சூரன்"

என்று போகிறது பாடல் வரிகள்.

திரைப்படமெடுக்கவென இந்த நாட்டுப்புற கதைப்பாடல்கள் பேசப்பட்டதால், சில வணிக பத்திரிகைகள், ஒரு தொடராக கான்சாகிப்பின் வாழ்க்கையைப் பற்றி எழுதின.

வரலாற்றுப் பார்வை மட்டும் கொண்டு அகடெமிக்கலாக பாளையக்காரர்களின் காலத்தின் தெற்கத்திய நகரங்களின் கதைகளை ஒரு ஆய்வுநூலாக செய்தால் அது மிகப் பிரமாதமான ஒரு தொகுப்பாக அமையும்.

அனல் காற்று (ஜெயமோகன்)

இதுவும் ஓர் எழுத்தாளரின் பேட்டியில் கேட்ட அபத்தம்தான். தமிழ் புதினங்களிலிருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய உரையாடலில், பேசியவர் அழுத்தந் திருத்தமாக, "அனல் காற்று கதையை படமாக்கக் கூடாதுன்னு நான் சொல்லிட்டேன். அது இன்செஸ்ட் காதல் பற்றிய கதை. நாயகன் தன் சித்தியைக் காதலிக்கிறது போல வரும். தமிழ்ச் சமூகத்தில் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள்?" என்று சொல்லிக் கொண்டே போக, எதிரில் பேட்டி எடுத்தவர் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த முறை எனக்குக் குழப்பமே எழவில்லை. ஏனென்றால், இந்த நாவலையும் தன்னுடைய வழக்கம் போல, ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில்தான் எழுதும்போது வெளியிட்டிருந்தார். ஒரு பொருந்தாத உறவிற்கும், புதியதாக முளைத்த காதலுக்கும் இடையே உழலும் நாயகனின் தடுமாற்றம்தான் கதையின் மையம். பொருந்தாதக் காதல் என்பது, கணவனை இழந்த மத்திம வயது பெண் ஒருவர் மீது இளம் வாலிபன் கொள்வது. அப்பெண்ணின் ஆளுமை மீதான மயக்கம் உலர்ந்து, அந்த உறவின் பொருந்தாமையை உணர்ந்த நிலையில், வேறொரு காதல் அவனுக்கு நிகழ்கிறது.

இன்னமும் ஒரு பத்தாண்டில் கலை நுகர்ச்சி என்பதே ஏறக்குறை காட்சி ஊடகமாக மட்டுமே என்கிற நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.

அப்போது, இது போன்ற பிழையான தகவல்கள், அபத்தமான உரைகள், அரைகுறை உளறல்கள் என்று ஏதாவது நம்மை புத்தக வாசிப்பை நோக்கி நகர்த்தும் என்றாலே அதுவே புத்தக சூழலுக்கு அளிக்கப்படும் பெரும் பேறு எனலாம். நூல் வாசிப்பின் நுனியாக எது இருந்தால் என்ன. அதைப் பற்றிக் கொண்டு ஒரு புத்தகத்திற்குள் புகுந்து கொள்ள வேண்டியதுதான்.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

ஆசையை அறுக்கும் பெருந்துன்பம்

 


(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'ஜெயமோகன் -100' நிகழ்ச்சியில் 8ம் அமர்வில் “போதி” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)

ஜெயமோகனின் எழுத்துலகம் என்னைப் போன்ற இணையத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.  அவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், பெருநாவல்கள், காவியங்கள் என பெரும்பாலானவற்றை இணையம் வழியே வெளியான சூட்டிலே வாசித்து விடலாம்.  இணைய வாசகர் பரப்பை மிக அற்புதமாக தன் எழுத்திற்கு கையாண்டவர்களில் ஜெயமோகன் மிகவும் முக்கியமானவர்.  இத்தனைக்கும் அவர் கட்டணச் சுவர் இல்லாமல் தன் இணையதளத்தை அனைவருக்குமானதாக வைத்திருக்கிறார்.  இன்றைய இணைய வெளியில் இப்படியொரு தளம், இலக்கிய வெளிக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சாதனை எனலாம்.

'போதி' சிறுகதை, ஓர் ஆன்மிக மடத்தின் முழு வார்ப்பை, அவற்றின் மேன்மையுடன் விவரித்துக் காட்டுகின்றது.  இடையே ஒரு சிறு முரண், அக்கதையின் இறுதி திருப்பத்தை முள்ளென பொதிந்து வைத்திருக்கிறது.  புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என நம்பப்படுவது போல், இந்த திருவதிகை ஆதீனம், கதைசொல்லிக்கு ஒரு ஞானத்திறப்பை விளைவிக்கின்றது.  எப்படியான ஞானத்திறப்பு என்றால், பூரண விசுவாவியாக இருந்தவன், அவிசுவாவியாகி மடத்தை விட்டு ஓடிப் போகிறான்.  அவிசுவாவியானவன் மீண்டும் மடத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது.  அவனைப் போன்ற எண்ணற்றோர் அந்த மடத்திற்கு வந்து தங்கிவிட்டு தொலைந்து போயிருக்கக் கூடும்.  கதை சொல்லியே தன் லௌகிக வாழ்க்கையில் தொலைந்து போய், அந்த மடத்தைத் தேடி வந்தவன்தான்.  மடத்தின் லௌகீகம் அவனை மீண்டும் புற உலகிற்கு விரட்டி விடுகிறது.

மடத்தின் வாயிலில் ஓர் ஆலமரம் இருக்கிறது.  முதன்முதலாக அந்த மடத்தில் அடைக்கலம் தேடி வந்தவனுக்கு அந்த ஆலமரம் ஒரு பெரும் பிரமிப்பை அளிக்கிறது.  இப்போது திரும்பி வரும்போது அந்த ஆலமரம் பிரமிப்பை அளிக்கவில்லை.  ஏனென்றால், அந்த ஆல் அளித்த ஞானம் அவ்வுணர்வுகளை கடந்து செல்ல வைத்திருக்க வேண்டும்.  மடத்தின் முகப்பு நவீனமாகியிருந்ததும் அவனுக்கு ஏற்பட்ட அந்த பழைய பிரமிப்பைத் தணித்திருக்கலாம். 

மகா சந்நிதானத்தை மிகக் குறைந்த வரிகளில் விவரிக்கிறார்.  பெரும் சுமையென ஜடாமுடி.  நரைகலந்த தாடி.  கழுத்தில் பல்வேறு உருத்திராட்ச மாலைகள்.  கையில் யோகதண்டம்.  தழைய கட்டிய காவி வேட்டி.  சிம்மம் போல் நடந்து வருகிறார்.  அருகில் நெஞ்சுவரை ஏற்றி கட்டிய வேட்டியுடன் காறுபாறு.  கிரகஸ்தனாக வந்து சேர்ந்த இவனுக்குப் பேட்டி அளிக்கிறார்.  முதல் சந்திப்பிலேயே குரு மகா சந்நிதானத்தின் யானைக்கால் வியாதியை கவனிக்கிறான் இவன்.  இவனுடைய மனதை குரு சந்நிதானம் துல்லியமாகவே கணித்து விடுகிறார்.  "என்னை பெரிய ஞாநியென நினைத்து வந்திருப்பாய்.  நான் ஒரு ரோகியெனத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்திருப்பாய்" என்று சொல்லி சிரிக்கிறார்.  

அவன் அந்த மடத்தில் தங்கியிருந்த காலந்தொட்டும், அவனுக்கு மகா சந்நிதானத்திற்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது.  மடத்தின் பொக்கிஷமான ஏட்டு சுவடிகள்தான் அதற்கு பாலம்.  சிவஞானபோதத்துக்கு இருபத்தியேழு உரைகள் இருக்கின்றன அந்த ஏட்டுச் சுவடிகளில்.  சங்கீத சாஸ்திரம், வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம், இலக்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும்.  அவை எவற்றையும் யாரும் பொருட்படுத்தியதில்லை.  கதையில் முதலில் அறிமுகமாகும் சின்ன சந்நிதானம் வரவு செலவு கணக்கில் முனைப்பாக இருக்கிறார்.  

குரு சந்நிதானத்துடனான உரையாடல் மிகவும் லயிப்புடன் செல்கிறது.  கவிதை வாசிக்கும் மனநிலையைப் பற்றி குரு சந்நிதானம் கிண்டலாக சொல்கிறார்.  ஆனால் அவர் கண்கள் பித்தேறி மினுக்குகின்றன.  ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடிக்க வேண்டும் என்கிறார் திடமாக.  சந்நியாசம் என்பதை பொறுப்பைத் துறப்பதுதானே.  சொல்லப் போனால், அந்த சந்நியாச மடத்தில் இப்போது முற்றும் துறந்த சந்நியாசி கதைசொல்லிதான்.  

ஒரு தீவிர சைவ சித்தாந்தவாதிக்கு அதுதான் முழுமையான வழி.  வைணவத்துடன் நெருக்கமாக இருந்தாலும் அது அயல் மதம்தான்.  இவை இரண்ட்டையும் இணைத்து பார்க்கும் விவேகாநந்தரை அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கிறார் குரு சந்நிதானம்.  "“மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழுமையடையவே முடியாது" எப்பேர்ப்பட்ட ஞானம் இது.  இந்தக் கதையை அப்படியே சுருக்கி இந்த இரண்டு வரிகளில் வைத்து விடுகிறார் கதாசிரியர்.  

புத்தக அறிவு கொண்டவனுக்கோ ஆன்மிகப் பசி.  ஆன்மிக குருவுக்கோ புத்தகப் பசி.  மடத்தின் சேகரிப்பில் இருக்கும் கிரந்தங்களை படியெடுத்து புத்தகங்களாக பிரசுரிக்கும்படி குரு இவனைக் கேட்கிறார்  

குரு சந்நிதானத்தின் பித்து மனம், அறிவு தீட்சண்யம், புலமை அனைத்தையும் தாண்டி அவருடைய ரோகம் இவனை அலைக்கழிக்கிறது.  ரோகத்தை சமாளிக்க குரு சந்நிதானத்திற்கு அபின் கஞ்சா பெதடின் என்று போதை மருந்துகள் தேவைப்பட்டன.  கட்டை விரலில் புண் உண்டான போதே வைத்தியர் அந்த விரலை எடுத்து விட வேண்டும் என பரிந்துரைக்கிறார்.  ஆனால் அங்கஹீணனாக மடத்து அதிபதி இருக்க முடியாது என்பதால் குரு சந்நிதானம் அந்த ஆம்புட்டேஷனை ஏற்கவில்லை.  அந்த விஷம் கால் முழுவதும் பரவி சீழ்பிடித்து இருக்கிறது இப்போது.  

இந்த பின்னணி புரிந்தவுடன், கதை சொல்லியால் அங்கே தங்க முடியவில்லை.  இன்னொரு தளத்தில் அவன் குரு சந்நிதானத்திற்கு மிக அமைதியான இறுதி வாழ்க்கை அமைய வேண்டுமென ஆழமாக விரும்புகிறான்.  அருகிலிருந்து சிசுருஷைகள் செய்து அவரை கடைத்தேற்ற அவன் மனம் துடிக்கிறது.  

அவனுடைய அதே ஆழ்மன பிணைப்பை குரு சந்நிதானமும் பிரதிபலிக்கின்றார்.  'எங்கும் போய்விடாதே.  யாருக்கும் என் மீது அன்பில்லை.  என்னைத் தூக்கி சாத்தி விட துடிக்கிறார்கள்' என்று ஏதேதோ சொல்கிறார் அவனுடனான இறுதி சந்திப்பின்போது.  

அவை எதுவும் அவனை பயமுறுத்தவில்லை.  சொல்லப் போனால், குரு சந்நிதானத்திற்கு பணிவிடை செய்ய அவன் மனம் முழு சித்தமாகவே இருந்தது.  ஆனால் அவன் மனதை புரட்டிப் போட்டது குரு சந்நிதானம் தன்னுடைய உடல் உபாதை எப்படி உண்டானது என்று விவரித்த கடைசி செய்தி.  

ஆசையே துன்பங்களுக்கு காரணம். ஆனால் ஆசையற்று இருக்கும் ஆசை பெருந்துன்பத்திற்கு காரணம்.   




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

ராஜம்மாளின் பேத்தி . . .

13 February 2022 at 09:40

திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன். 

‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.

வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார். 

ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.  வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.

இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது. 

பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச்  சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும். 

இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . .  அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார். 

பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல்  மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார். 

‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.

அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.

அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார். 

‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’

பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான். 

The post ராஜம்மாளின் பேத்தி . . . appeared first on வேணுவனம்.

கோவிட் காலம்

21 June 2020 at 10:33

பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது. 

இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).

எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன். 

‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’

ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின. 

இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.

பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.  

இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.

75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.

கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.

‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.

‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’

‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’

இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.

‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.

இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.

The post கோவிட் காலம் appeared first on வேணுவனம்.

'சியமந்தகம்' நூல் வாங்க


நண்பர்களுக்கு வணக்கம்.

ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம்.


Account Holder: SRINIVASA GOPALAN

Account Type: Savings

Bank: HDFC Bank

Branch: Vannarpettai, Tirunelveli

A/c No. 50100171907983

IFSC code: HDFC0000636

GPay: 7019426274

UPI: 7019426274@apl


மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.


தொடர்புக்கு: 70194 26274

மின்னஞ்சல்: [email protected]


சியமந்தகம் - ஓர் அறிமுகம்

தொடர்பு எல்லைக்கு அப்பால் வசித்தல்

By:Para
28 March 2025 at 05:21

Pa Raghavan

ஜெயமோகனின் இந்தக் குறிப்பும் இதன் கீழே தரப்பட்டுள்ள இளங்கோ கிருஷ்ணனின் குறிப்பும் மிகவும் முக்கியமானவை. சொல் ஊன்றிப் படித்துப் பாருங்கள். சமூக ஊடகங்களின் மீது கலைஞர்களுக்கு வரக்கூடிய இயல்பான விலகலும் அச்சமும் சந்தேக உணர்வும் சேதாரங்கள் சார்ந்த வருத்தமும் புரிந்துகொள்ளப்படக்கூடியவைதாம். படைப்பூக்கத்தைக் கெடுக்கும் எவ்வித சக்தியானாலும் விட்டு விலகிச் சென்றுவிட விரும்புவதே எந்தக் கலைஞனும் விரும்பக் கூடியது.

ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதர கலைஞர்கள் செயல்படுவதற்கான இடமல்ல. மாறாக, செய்தவற்றை, செய்பவற்றைப் பற்றிய தகவல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. அதற்காக அவற்றைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் வேறு வழியில்லை. ஓர் எழுத்தாளன், சிறுபான்மை சமூகத்தவரான வாசகர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ள உதவும் ஒரே வழி அதுதான். அதை எதற்கு மூடி வைக்க வேண்டும்?

எழுத்தாளன் என்பவன் ஒரு மனிதனும் கூட. அவன் ஒரு மகன். கணவன். தந்தை. வேலை பார்த்து சம்பளம் வாங்கும் ஊழியன். அதிகாரி. அறிவாளி. அசடன். மூடன். ஞானி. சோம்பேறி. தலைவன். தொண்டன். நண்பன். எதிரி. நல்லவன். கெட்டவன். வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப, மனநிலைக்கேற்பத் தயாரித்து அணிந்துகொள்ளும் முகங்களில் ஒன்றாக இதனையும் கருத முடிந்துவிட்டால் போதும். சிக்கலே இல்லை. சமூக வெளியில் கலைஞன் ஒரு வேடிக்கை பார்ப்பவன் மட்டுமே.

நான் சமூக வெளியை எப்படிக் கையாள்கிறேன்?

1. மிக நிச்சயமாக ஒரு ஷோ-கேஸாக மட்டும்.

2. இளைப்பாறலுக்காக மட்டும்.

3. மொழி சார்ந்த சில எளிய பயிற்சிகளைச் செய்து பார்க்க மட்டும்.

4. பொது மனநிலையை அவ்வப்போது மென்மையாகக் கிளறிப் பார்த்து, விளைவுகளைக் கவனிப்பதற்கு மட்டும்.

5. நான் வாழும் காலம் எவ்வாறெல்லாம் உருமாறி வருகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மட்டும்.

தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

அதேபோல, மறுமொழிகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தத்தக்க எதிர்வினை என்பது எப்போதாவது வருவது. அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கிறேன். மற்றபடி அருமை, சூப்பர், கண்கள் பனித்தன வகையறாக்களை அப்படியே விட்டுவிடுகிறேன். இதை அகம்பாவமாகக் கருதும் பலர் என்னை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். அது குறித்தும் கவலை கொள்வதில்லை. மிக மிகச் சிறிய இவ்வாழ்வில் நாம் செயலாற்றுவதற்கான நேரம் அதனினும் சொற்பமானது. அதையும் இப்படி வீணடிப்பது பாவமென்றே கருதுகிறேன்.

இன்னொன்று. அல்காரித அடிப்படையில் ஃபேஸ்புக்கில் பொருத்தமில்லாத நபர்களுக்கு என் குறிப்புகள் சென்று சேரும்போது வருகிற தடாலடி மறுமொழிகள் சம்பந்தப்பட்டது. உண்மையில் அவை எனக்கு ஸ்டிரெஸ் பர்ஸ்டர். அவற்றை வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது எப்படி அனுபவிப்பேனோ அப்படி அனுபவித்து ரசிக்கிறேன்.

இந்த விஷயத்தில் நகைச்சுவை அம்சத்துக்கு அப்பால் மிகப்பெரிய லாபம் ஒன்றும் உள்ளது. நாம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்கிற எண்ணம் எல்லா எழுத்தாளர்களுக்கும் எப்போதாவது நிச்சயமாக வரும். அது கணப் பொழுது அகம்பாவமாக உருவெடுத்து நிற்கும். அப்படி அது உருவெடுக்கும்போதெல்லாம் மேற்படி அறியாத வட்டத்துப் புதிய மறுமொழிஞர்களின் சொற்கள் எனக்கு ஞானமளிக்கின்றன.

‘டேய், யார்றா நீ’ என்று தொடங்குவார்கள். சட்டென்று சாதியைத் தாவிப் பிடிப்பார்கள். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘போடா சங்கி’ என்பார்கள். அல்லது இருநூறு ரூபாய் உபி என்பார்கள். ‘யோவ் பெரிசு, அடங்குய்யா’ என்பார்கள். அவர்களிடம் உள்ளதெல்லாம் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று வசைகள்தாம். அவர்கள் வாசகர்கள் அல்லர். தினத்தந்திகூடப் படிக்காதவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒவ்வொருவருக்கும் சொரிந்துகொள்வதற்கு ஏதோ ஒரு சுவர் இருக்கும். அதற்கு முதுகையும் நமக்கு முகத்தையும் கொடுத்து நிற்பார்கள்.

உண்மையில் பெரும்பான்மை சமூகம் என்பது அதுவே. ‘என் வாசகர்கள், என் ரசிகர்கள், என் வட்டம்’ என்பதெல்லாம் வெறும் மாயை அன்றி வேறல்ல. மனிதர்களில் சிறுபான்மையினரான வாசகர்களின் கூட்டத்தில் என்னைப் படிக்கவும் ஓரிருவர் உள்ளார்கள் என்ற அளவோடு நிறைவடைந்து விலகிக்கொள்கிறேன். இந்த ஞானம் பெரிதல்லவா? இது சமூக வெளியை அன்றி வேறெங்கும் கிடைக்காது.

என்னுடைய மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இவைதாம்:

1. சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருங்கள். ஆனால் உங்கள் செயல்பாடென்பது எழுத்து சார்ந்த உங்களுடைய பயிற்சியாகவும் பரீட்சைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மனிதர்களால் நிறைந்த அவ்வெளியில் உங்களுடைய பிரத்தியேக வாசகர்கள் வந்து சேரும்வரை பொறுமை காப்பது அவசியம்.

2. விமரிசனம் செய்யாதீர்கள். அரசியல், சினிமா, புத்தகங்கள் எதுவானாலும் சரி. விமரிசன மனோபாவம் எழுத்தாளனைக் கொல்லும். செய்தே தீர வேண்டுமென்றால் சமூக ஊடகங்களில் செய்யாதீர்கள். தனியே வேறெங்காவது ரகசியமாகச் செய்துகொள்ளுங்கள்.

3. நீங்கள் எழுதிப் பார்க்க / பயிற்சி செய்யத்தான் சமூக ஊடகம். அதில் வருகிற பிறவற்றைப் படித்துப் பொழுதை நாசம் செய்யாதீர்கள். அப்படியானால் உன்னை மட்டும் நான் ஏன் படிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் எகிறும். கண்டுகொள்ளாதீர்கள். பயிற்சியாக நீங்கள் எழுதுவது சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்குமானால் திருட்டுத்தனமாகவேனும் வந்து படித்துவிட்டுப் போகத்தான் செய்வார்கள்.

4. யாருமே உங்களைப் படிக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அங்கே இருப்பது, உங்கள் பயிற்சிக்குத்தானே தவிர, அடுத்தவர் அபிப்பிராயத்துக்கல்ல.

5. இறுதியாக. கும்பல் என்றால் இரைச்சல் இருக்கத்தான் செய்யும். சாமர்த்தியம் இருக்குமானால் அதை ஒரு சிறந்த தியானப் பொருள் ஆக்கிக்கொள்ள முடியும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

❌