மானுட பேரவலத்தைப் பேசும் அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம் -பேரா. சு. செல்வகுமாரன்
“வீட்டின் முன்பக்க அறையில் இருந்த
அப்பாவின் ஈசிச் செயர்
பின்பக்க அறையில் கிடந்தது“
மானுட பேரவலத்தைப் பேசும்
அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம்
பேரா. சு. செல்வகுமாரன்,
மாநிலக்கல்லூரி
[email protected]
சமகாலத் தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கியமானது பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது. நாள்தோறும் விதவிதமான கருத்தாக்கங்களை, சிந்தனை முறைகளை, வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் புதிய படைப்பாக்கங்கள் கவிதை, கதை, புதினம் என வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் படைப்பாக்கத் தன்மையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், இவற்றின் வரவு தமிழின் மொழி, இலக்கியம், பண்பாட்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதான வளர்ச்சி நிலையினை உடையதாகவே பார்க்க முடிகிறது.

அந்த வகையில் அ.சங்காியால் எழுதப்பட்டுள்ள ‘வருக்கெச்சக்கெ’ புதினம் தமிழகத்தின் தென் எல்லையான குமரி மாவட்டத்தின் மேற்குப்புறம் சார்ந்த நிலவியல் சூழலில் ஒரு இந்து நாடார் சமூகக் குடும்பத்தின் வாழ்வியலை அறிமுகம் செய்வதின் வழி தன் பயணித்தலின் வெற்றியைக் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
“பத்மா” எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பேசப்படும் இந்தப் புதினத்தில் பத்மாவினுடைய தந்தையாகச் செல்லையாவும், தாயாக அன்னலட்சுமியும் விளங்குகின்றனர். பத்மாவின் சகோதரிகளாக ரோசாவும், ஷீலாவும், அண்ணனாக சிதம்பரமும், தங்கைகளாக மாலாவும், லலிதாவும் குடும்பம் சார்ந்த கதாப்பாத்திரங்களாக இயங்குகின்றனர். இத்தோடு முதன்மைப் பாத்திரமான பத்மாவின் உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் என கதையினை யதார்த்தமாக நகர்த்திச் செல்கின்ற பல துணைமைப் பாத்திரங்களோடும் புதினம் இயங்குகின்றது.
இந்தப் புதினத்தைப் பொறுத்தமட்டில் வெறுமனே ஒரு புனைவாக்கம் என்று சொல்வதைவிட, வட்டார எழுத்துமுறை சார்ந்த அல்லது இனவரைவியல் எழுத்து முறை சார்ந்த அல்லது சுயகதை சொல்லல் முறை சார்ந்த ஒரு புதினம் என்று சொல்வதற்கான அடிப்படைப் பண்புகளை இது பெரிதும் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். மானுட வாழ்வில் ஒவ்வொருவரின் வாழ்வும் அல்லது அந்த ஒவ்வொருவரின் வாழ்வின் பின்னணியாக இயங்குகின்ற குடும்பமும் வேறுபட்ட சூழல்களால் கட்டமைவதனைக் காணலாம். அந்த வகையில் வருக்கெச் சக்கெ புதினத்தின் முதன்மைப் பாத்திரமான பத்மாவின் குடும்பப் பின்னணி அவளது தந்தை வழி தாத்தாவான பொன்னு பூ என்பவரால் இனம் காட்டப்படுகிறது. தனது தாத்தாவைப் பற்றிப் பத்மா சொல்கிற போது,
“பொன்னு பூ, அப்பாவோட அப்பா பெயர். அவர் அந்த ஊர் குட்டி ராஜா மாதிரி. இவரு தன்னோட பெரிய பொண்ணுக்குச் சம்மந்தம் பண்ணினது ஒரு பண்ணையார் என்கிறதுக்காக சாரட்டு வர, மேலெ வெளெயிலேருந்து கீழெ வெளெவர ஆறடி ரோடு வெட்ட அந்த சித்திரைத் திருநாள் மகாராஜா அனுமதி வாங்கி செஞ்சிருக்காரு.
பெரிய பொண்ணுக்கு சாரட்டுன்னா, இரண்டாவது பொண்ணுக்கு பிளசர் கார் வந்திருக்கு. மூணாவது பொண்ணு கலியாணத்துக்கு பிளசர் கார்களே அணிவகுத்திச்சாம். இப்படி மூணு பொண்ணுகளையும் மூணு பணக்கார மாப்பிள்ளைங்களுக்கு கட்டிக் குடுத்தவரு” (ப-5)
என்பதாக அவரது வளமை பேசப்படுகிறது. இத்தகையதொரு பொருளாதாரப் பின்னணி இருந்திருந்தாலும் அவர் செய்த ஆடம்பரச் செலவுகள் அவரைப் பெரும் கடன்காரனாக்கிக் குடும்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. இச்சூழலில் பொன்னு பூ மனம் தளர்ந்து இறந்து போகிறார். அவரது அஸ்தியினை வணங்க தலைகுனிந்த அவரது மனைவியும் அஸ்தியிலே விழுந்து இறந்துபோகிறார். இந்நிலையிலிருந்து பத்மாவின் தந்தை செல்லையாவின் பயணம் புதிதாய்த் தொடங்குகிறது. என்றாலும் பத்மாவின் தந்தை செல்லையாவின் தொடக்ககாலம் வளமையானதாக இருந்திருந்ததால் கல்வி, வர்மம், சோதிடம், சிலம்பம் என்பவற்றோடு தமிழ், ஆங்கில மொழிப்புலமையும், நேர்மை நியாயத்தைத் தன்னகத்தே கொண்ட தனித்துவமான ஒருவராகவே புதினம் அவரைப் பெரிதும் இனம் காட்டுகின்றது.
ஆக பத்மாவின் பாரம்பரியமானது பொருளாதாரம், சமூகமதிப்பு என்பதான உயர் குடும்பத் தன்மையுடைய பின்னணியைக் கொண்டிருந்தாலும் முதல் தலைமுறையின் வாழ்வு தளர்ச்சியிலேயே முடிவுறுகிறது. அந்தக் கண்ணியில் இருந்து உருவாகும் செல்லையா, தான் விரும்பிய அன்னலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இருவரின் கூட்டு உழைப்பினாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பினாலும் தலை நிமிர்கிறது. எனினும் செல்லையா குறித்த பல பதிவுகள் அவரை ஒரு மகோன்னதமானவராய்த்தான் இனம் காட்டுகின்றன. அறவழி நடத்தல், பக்தி, தேசபக்தி, வாசிப்பு, பிறருக்கு வழிகாட்டுதல், துயரங்களை எதிர்கொண்டு விடுதலை நோக்கிப் பயணித்தல் என அவை புதினமெங்கும் நீட்சி அடைகின்றது.
தனது நிலம் சார்ந்த கடும் உழைப்பு, வியாபாரங்கள், சிறந்த குணங்களெனப் பலவற்றாலும் உயர்ந்த செல்லையாவின் குடும்பவாழ்வும் பின்னாளில் சக மனிதர்களின் கெடுசெயல்களாலும், அன்றைய அரசு கொண்டுவந்த பட்டணம் கால்வாய்த் திட்டம் அவரது தோப்பின் வழியாக வந்ததன் விளைவாகவும் பேரிழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. தொடர்ந்து தனது முதல் இரண்டு பெண் மக்களின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திட அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், திருமணத்திற்குப் பிறகு தனது மகன் கேளாதார் பேச்சைக் கேட்டு தனிக் குடும்பமாக மாறிக்கொள்வதாலும் குடும்பம் பொருளாதாரம், மன அமைதியின்மையினால் தளர்ச்சியுறுகிறது.
புதினம் பொது வாழ்வியல் சார்ந்து பேசினாலும் குறிப்பாகக் குமரி மாவட்ட இந்து நாடார் சமூகம் சார்ந்த வாழ்க்கை வட்டச் சடங்குகளையும், அவர்களின் நிலம் சார்ந்த கடின உழைப்பையும், பனை உணவுசார் தொழில்நுட்பங்களையும் அதற்குப் பரிசாக, மண்சார் விளைச்சல்களை வாரி வழங்கும் இயற்கை அன்னையின் செயல்பாடுகளையும் புதினம் காட்சிப்படுத்துகிறது. வகை வகையான கிழங்குகள், காய்கறி வகைகள், மா, பலா, வாழை எனப் பழவகைகள், செடி கொடிகள், மரங்கள், முயல், ஆடு, மாடு, கோழி என விலங்குகள் பறவைகள் குறித்த சித்திரிப்புகள் மிகப் பிரமாண்டமாகப் புதினத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. காச்சில் கிழங்கின் விளைச்சலைப் பற்றிப் பதிவு செய்கிறபோது,
“அந்தக் காச்சில் கிழங்கு வள்ளியெல்லாம் பட்டுப் போயிருந்துச்சு அதெ மொதல்லெ பிச்சாக்கத்தியாலெ அறுத்து பெறகு மூடு இருக்கிற எடத்திலே நாலு பக்கமா பிக்காசியாலெ வெட்டி மண்ணெ கையாலே வாரி பக்காவாட்லெ போட்டான். பெறவு கொஞ்சம் கொஞ்சமா வெட்டுகத்தியாலே மண்ணெக் குத்தி வார வார பெரிய பண்ணிக் குட்டியாட்டும் அந்தக் கெழங்கு ஒண்ணரையடி ஆழமா பருத்து இருந்துச்சி. அவ்வளவு பெரிய கெழங்கப் பார்த்ததும் கொச்சப்பாவு அசந்து போய் இங்க வாங்க வந்து பாருங்கள் என்று ஆச்சரியத்தோடு கத்தினான். அப்பாவும் மகளும் ஓடிப்போய் பார்த்து அடேயெங்கப்ப எவ்வளவு பெரிசு? வாயெப் பெளந்தாள் பத்மா.
சின்னதா ஒரு கெழங்கு நட்டதா இவ்வளவு பெரிசா வளந்திருக்கு? என்று ஆச்சரியப்பட்டு நின்றாள்.” (பக் -187-188)
மேலும், முதலாளி, தொழிலாளிகளிடையே காணப்படும் வேறுபாடற்ற சமத்துவ நடைமுறைகளையும் பனையேறும் தொழில் செய்யும் பாலையா, தோட்ட வேலை செய்யும் கொச்சப்பாவு கதாபாத்திரங்கள் போன்ற நமக்கு புலப்படுத்துவனாக உள்ளன. இவை குமரி மாவட்டத்துக்கான தனித்தன்மையாகக் கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தச் சமத்துவத்திற்கு அய்யா வைகுண்டசாமியின் செயல்பாடுகளின் தாக்கமும் ஒரு காரணமாகலாம்.
மேலும், ஈத்தவிளை அம்மாவி அதாவது அத்தை, அம்மும்மு அதாவது பாட்டி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் வழி உறவின் ஆழங்களும் ஆங்காங்கே இனங்காட்டப்பட்டுள்ளன. ஓரிடத்தில் பாட்டியைப் பற்றி குறிப்பிடுகிற போது,
“இந்த அம்மும்மெ கொணத்தெ அம்மாகிட்டப் பார்க்கலாம். இருக்கிறதெ வச்சு வாழுற கொணம், தன்னாலெ முடிஞ்சவரெ உழச்சு சந்தோஷமா, அன்பா அரவணச்சு குடும்பத்தெக் கொண்டு போறதுன்னு அடிக்கிக்கிட்டே போகலாம்.” (ப-218)
ரோசா அக்காவின் திருமணத்தில் மாப்பிள்ளையின் உயரம், நிறம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும், இன்ன பிற நிகழ்வுகளின் வாயிலாகவும் பெண் மனம் சார் உளவியலைப் பத்மாவின் மூலமாக அ.சங்கரி முன்னெடுத்தள்ளமையும் கவனத்திற்குரியது. ஒரு முறை அடுத்த வீட்டில் வசித்து வந்த முண்டத்தா மூத்தம்மெ இறந்த போது பத்மாவோ அவளது சகோதரிகளோ மூத்தம்மையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அது அந்தக் காலகட்டத்தின் சூழல். அதனைப் பத்மா மூலமாக உரையாடல் செய்யும் அ.சங்கரி,
“இரண்டு வீடுகளுக்கு நடுவே ஒரு சுவருதேன். அவுங்க தொழுவத்திலேருந்து கூப்பிட்டா கேட்கும் தூரம். நம்ம தொழுவத்திலே நிக்கிறவங்களெப் பார்க்கவும் முடியும். இப்படியாப்பட்ட நெருக்கமுள்ள மூத்தம்மே இப்ப இல்லெ. இனிமேலே பார்க்கவே முடியாது. இல்லக்கா. நமக்கு கடைசியா பார்க்கக்கூட முடியில்லெ. என்ன துர்பாக்கியம். ஒரே சுவருக்கப்புறம் போக முடியா சூழல்ல இருக்கிறோமே அக்கா. நம்ம மூத்தம்மெ இப்படி வேகமா போயிடுச்சேணு கண்ணீர் சிந்த அக்காவிட்டெ சொல்லி அழுதாள், பத்மா. ரோசா அவ ஆதங்கத்தெச் சொல்லத் தொடங்கினா.” (ப -270)
என்பதாக அந்தக் காலகட்டத்தில் பெண் சமூகத்தைப் பற்றிக்கிடந்த புற இருளினை, அவலத்தைப் புதினம் அடையாளப்படுத்துகின்றது
இப்படியாக வெவ்வேறு தளத்திலிருந்து வேறுபட்ட பல விஷயங்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டாலும் அந்தக் குடும்பத்தில் பத்மாவின் தொடர் ஓட்டம் கல்வியில் தீவிரக் கவனம் செலுத்திப் பயணிப்பதாக இருக்கிறது. காதல், திருமணப் பேச்சுகள், குடும்பச் சிக்கல்கள், கல்வி நிறுவனங்களின் தொலைவு போன்ற எல்லா விதமான தடைகளையும் தாண்டி பத்தாம் வகுப்பினை முடித்து, பிரீ டிகிரியினையும் முடித்து மாநிலம் கடந்து திருவனந்தபுரம் சென்று முதுகலைத் தமிழ் பயின்றதோடு அங்கேயே முனைவர் பட்டம் வரையிலுமாக படித்துக் கல்லூரிப் பேராசிரியராக உயரும் நிலையினைக் காணமுடிகிறது. இது நாடார் சமூகப் பெண் ஒருவரின் தனித்த அல்லது ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் வளர்ச்சிக்குக் கல்வியின் அவசியம் அடையாளம் காட்டப்படுவதாக உள்ளது. குறிப்பாக இது பொதுவான மைய நீரோட்டங்களில் ஒன்றாகப் பார்க்கத்தக்கது. மேலும் பத்மாவின் அப்பாவும், ஊர் மக்களும் சாதி, மதம், காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பாளர்களாக விளங்கினாலும் கல்வியின் வழி உயர்நிலை அடைந்த பத்மாவால் தான் கற்ற கல்வி மற்றும் அணுகுமுறையால் இன்னொரு மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசனைக் காதலித்து அம்மா அப்பாவின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டதென்பதும் ஒரு பெண்ணின் பயணித்தலின் வெற்றியாகக் கொள்ளத்தக்கது.
பல்வேறு விஷயங்களை இந்தப் புதினம் பேசியிருந்தாலும் மனைவி, மக்கள் என ஒரு ஆலமரமாய், ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்த செல்லையா குடும்பத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முதல் மூன்று பெண்மக்கள் திருமணமாகி வெளியே சென்று விடுகிறார்கள். ஆண்மகனும் திருமணமாகித் தன் மனைவி மக்கள் எனத் தனிக் குடித்தனம் அமைத்துக் கொள்கிறான். அடுத்த திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பத்மா கல்வியையும் காதலையும் கைக்கொண்டபடி திருச்சி வயலூரில் வேலை பாா்த்தபடி தன் அறவழிப் பயணத்தை மேற்கொள்கிறாள். கடைசி மகள் லலிதாவின் திருமணம் பத்மாவின் தனித்த கவனிப்பு இருந்தாலும் “ஏழையாய்ப் பிறந்தாலும் இளையவராய்ப் பிறக்கக்கூடாது” என்பதற்கேற்ப சூழல்கள் அமைகிறது.
மீதமிருந்த சொத்துக்களில் முதன்மையானவை மருமகளின் தூண்டுதலாலும், செல்லையாவின் நேர்கொண்ட அறவழிப் பயணித்தலாலும் மகன் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.
“எல்லா சொத்துக்களையும் உயில் எழுதி வைத்துவிட்டு வந்து கையிலிருந்த பொம்மையைப் பறிகொடுத்த குழந்தை மாதிரி கண்ணில் நீர்நிறைந்து நின்றதை மனைவியும் மகளும் பார்த்தனர்.” (ப -377)
ஆக, வீட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கைக்கொண்டு திரிந்த தந்தை, தாயின் அதிகாரம் பிடுங்கப்பட்டுக் காற்றில்லாத பலூனைப் போலச் சமூக மதிப்பற்ற மனிதர்களாக மாற்றப்படுகின்றனர். எத்தனை வேலைகள் இருந்தாலும் மகிழ்ச்சியால் பூ மரமாய் பூத்திருந்தவீடு வெறுமனே கட்டைச் சுவர்களாக மகிழ்வற்ற நிலையில் பொலிவிழந்து போகிறது. இந்தப் பேரவலத்தை நூலாசிரியா் அ.சங்கரி இனம் காட்டும் இடங்கள் முக்கியமானவையாகும்.
“வீட்டின் முன்பக்கம் இருந்த அப்பாவின் ஈசிச்செயர் பின்பக்க அறையில் கிடந்தது” (ப-367)
இப்படியாக ஒடுக்கப்பட்டு அல்லது புறம்தள்ளப்பட்டு விளிம்புநிலைக்குள்ளான தந்தையின் அவஸ்தையைப் புதினம் முதன்மைப்படுத்திப் பேசியிருக்கிறது. இது பல வீடுகளில் இன்று நடப்பதாக இருந்தாலும் படைப்பு வழி அதிகம் பேசப்படாத ஒன்று என்ற நிலையிலும் இந்தப் புதினம் கவனத்திற்குரியதாகிறது. மேலும் தந்தையின் மீதான கரிசனம் மிக்க ஒரு படைப்பாகப் புதினம் காட்டப்பட்டாலும், தந்தை செல்லையாவும் இறந்து போக வீட்டில் கணவன் தன் பெயரில் உயில் எழுதி வைத்திருந்த 27 சென்ட் நிலத்தோடும் வீட்டோடும் அம்மா குடியிருக்க வேண்டிய அவலமும் உணர்த்தப்படுகிறது.
“மனித வாழ்வில் அடிமேல் அடி விழுந்தாலும் தாங்கிக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம். எதையும் எளிதாகக் கடந்து போனாலும் உள்ளுக்குள் ஏற்படும் காயங்கள் ஆழமானவை” (ப-374)
இங்குப் புதிது புதிதாய்ப் பரிணமிக்கும் புதிய தலைமுறைகளின் உருவாக்கத்தில் பல தாய் தந்தையர்கள் உணர்வுகளால் சாகடிக்கப்படுவதையும், கால ஓட்டத்தில் வாழ்வு ஒவ்வொருவரையும் அதன் விருப்பிற்கேற்பத் தூக்கி வீசுவதில் மனிதன் ஒன்றுமில்லாதவனாக ஆகிப்போவதையும் ஒருவித கழிவிரக்கத் தன்மையோடு அ.சங்கரி புதினத்தில் தன் எழுத்துக்களின் மூலம் பதிவு செய்திருக்கின்றார்.