Normal view

Received before yesterday

மூன்று குறுங்கதைகள்

 


1. பழையன கழிதல் புதியன புகுதல்

ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால் அந்த ஊர் அவர்கள் இதுவரை பார்த்திராத அழகில் ஒளிவீசியது.

கடந்தகாலம் மட்டுமல்ல எதிர்காலமும் தெரிந்தது.

அந்த மின்னலில் எல்லோரும் குளித்தார்கள். அந்த மின்னலை எல்லோரும் அருந்தினார்கள். அந்த மின்னலை எல்லோரும் சாப்பிட்டார்கள்.

அவர்களை மின்னலாக மாறினார்கள். மின்னல் அவர்களாக மாறியது. பிறகு எல்லாம் பழைய மாதிரி ஆகிவிட்டது.

 

2.

ஒளி

என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பெண்ணைச் சந்தித்தேன். தேவதையின் அத்தனை அம்சங்களும் அவளிடமிருந்தன. அவளுடைய ஒளிவீசும் புன்னகை என் ஆன்மாவில் சுடரேற்றியது. நான் ஒளியாக மாறினேன். என்னைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எல்லோரையும் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல மாறிவிட்டேன். என்னைப் பார்த்த எல்லோரிடமும் சுடரேற்றினேன்.

எல்லோரும் தேவதைகளானார்கள். குழந்தைகளுக்கு மாயாஜாலக்கதைகளைச் சொன்னார்கள். பறவைகளைப் போலப் பறந்து திரிந்தார்கள் குழந்தைகள்.

வயதான பெரியவர்கள் மேகங்களைப் போல மிதந்தார்கள்.

என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத அந்தப் பெண்ணுக்கு இதெதுவும் பிடிக்கவில்லை. அவளுடைய ஒளிவீசும் புன்னகை மாறியது. இருளின் குகையென அவள் கண்கள் இருண்டன.

என்னிடமிருந்த ஒளியை அந்தக் கருந்துளைகளால் உறிஞ்சினாள். நான் கரிக்கட்டையானேன்.

 ஆனால் பாவம்! நான் ஒரு போதும் சந்தித்திராத அந்தப்பெண் அறியாள். என்னுடைய ஒளி இப்போது மக்களின் ஒளி.

 

3.

புல்ஷிட்

அவன் ஒரு திரைப்படம் பார்த்தான்.

அதில் இறந்தவர்கள் நடித்திருந்தார்கள். எல்லாரும் அவனுக்குத் தெரிந்தவர்கள். அவனுடைய நண்பர்கள் இருந்தார்கள். அவனைப் பிடிக்காதவர்களும் இருந்தார்கள். அவனைப் புகழ்ந்தவர்களும் இருந்தார்கள். இகழ்ந்தவர்களும் இருந்தார்கள். அவன் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனைக் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனுடைய பள்ளிநண்பர்கள் இருந்தார்கள். கல்லூரி நண்பர்கள் இருந்தார்கள்.

எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

முதலில் புரியாவிட்டாலும் பிறகு புரிந்து விட்டது.

அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவனும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனும் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்தான்.

அந்தத் திரைப்படம் பல விருதுகளைப் பெறுமென்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.

அவனுக்குத் தெரியும். அது வெறும் புல்ஷிட்...

நன்றி - புக் டே

 

 

கசுமலா காக்காவுக்கும் , பூனைக்குட்டிக்கும் சண்டை

 


கசுமலா காக்காவுக்கும், பூனைக்குட்டிக்கும் சண்டை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,

“ நீ ஏன் இப்படிக் கருப்பாய் இருக்கிறாய்? “

என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும் பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது. கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.

பூனைக்குட்டி வெயிலில் உடம்பை நீட்டி படுத்துக் கிடந்தது. தன்னைத் தானே நக்கிக் கொடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டே,

“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே உறங்குவேன்..” என்று சொன்னது.

சின்னுவும், நாய்க்குட்டியும், கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று காக்கா கேட்டது. நாய்க்குட்டி,

“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான் இங்கிலீஷ்..” என்று சொன்னது.

” ஏ பி சி டி ஒரு பீடி அது தான் இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து விழுந்து சிரித்தது,

“ இதுவா இங்கிலீஷ்? நான் இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “

“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக் கேட்டனர்.

“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”

என்றது பூனைக்குட்டி. அப்போது கசுமலாக்காக்கா,

“ கா காக்கா கக்கா கா கா “ என்று சிரித்தது.

  என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.

“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும் நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய் சொல்லியிருப்பாய்..”

என்று கசுமலா காக்கா பதில் சொன்னது. அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பூனைக்கு அவமானமாகி விட்டது.

நன்றி - புக் டே

கசுமலா காக்காவின் குஞ்சுகள்

 

கசுமலா காக்காவின் குஞ்சுகள்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



கசுமலா காக்காவின் முட்டைகள் பொரிந்து விட்டன என்று பூனைக்குட்டி வந்து சொன்னது. சின்னுவும், நாய்க்குட்டியும் மெகர்பா கோழியும், பூனைக்குட்டியும், கல்யாணிப்பசுவும் கசுமலா காக்காவின் குஞ்சுகளைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள். கசுமலா காக்கா மூன்று குஞ்சுகளையும் அறிமுகம் செய்தது.

மூத்தது ஷாரூக், இரண்டாவது சல்மான், மூன்றாவது பெண்குஞ்சு கஜோல் என்று பெயரிட்டன. அவை எல்லாம் குஞ்சுகளைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது கசுமலா காக்காவும் கூடவே வந்தது. அப்போது பதுங்கியிருந்த ஒரு நரி குஞ்சுகளைக் கூப்பிட்டது.

“ ஷாருக் கண்ணு நான் நரி மாமா வந்திருக்கேன்.. கதவைத் திற..” என்றது. எந்த சத்தமும் இல்லை. யார் வந்தாலும் கதவைத் திறக்கக்கூடாது என்று கசுமலா காக்கா கட்டளையிட்டு விட்டுப் போயிருந்தது.

நரி மீண்டும்,

“ சல்மான் கண்ணு கதவைத் திற..” என்றது. அப்போதும் எந்தச் சத்தமும் இல்லை.

“ கஜோல் கண்ணு நீயாவது கதவைத்திற... மாமா இப்போது அழுதுருவேன்... அழுது அழுது செத்திருவேன்..” என்றது.

“ நரி மாமா, கதவு சும்மா சாத்தியிருக்கிறது... மாமா தள்ளினால் திறந்து விடும்..” என்று கஜோல் இனிமையாகச் சொன்னபோதே நரி உள்ளே நுழைந்து விட்டது. மூன்று குஞ்சுகளையும் விழுங்கி விட்டது. உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்து உறங்கி விட்டது.

கசுமலா காக்கா திரும்பி வந்து பார்த்தவுடனேயே என்ன நடந்ததென்று புரிந்து கொண்டது. உடனே அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தது. பிறகு நரியை எழுப்பி,

“ நரி மாமாவுக்கு இராத்திரிக்குச் சோறு வேண்டுமா? கோதுமை வேண்டுமா? “ என்று கேட்டது.

கண்களைத் திறக்காமலேயே நரி அடுப்புக்கு அருகிலேயே படுத்திருந்தது.

“ எதுவானாலும் சரி.. கசுமலா காக்கா.. நான் கொஞ்சம் உறங்குகிறேன்..” என்று முணுமுணுத்தது.

கசுமலா கொதிக்கும் வெந்நீரை நரியின் உடலில் ஊற்றியது. நரி வெந்து செத்து விட்டது. நரியின் வயிற்றைக் கீறி மூன்று குஞ்சுகளையும் வெளியில் எடுத்தது

கசுமலா காக்கா குஞ்சுகளுடன் சுகமாக வாழ்ந்தது.

நன்றி - புக் டே

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

 

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



    சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி விளையாடும் இடத்திற்கு வந்து சும்மா விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது நீலகண்டன் நரிக்கு வழக்கமாகி விட்டது.. மெஹெர்பா கோழி பற்றிய எண்ணம் எப்போதும் மனதில் உண்டு. அவளைக் கொன்று சாப்பிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்? அதுதான் கவலை.

 

அப்படியே கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த இடத்திற்கு வந்து சென்று கல்யாணியுடன் நட்பாகி விட்டது..  எல்லா பழைய கதைகளையும் சொல்லும்.. கல்யாணிப்பசு புல் சாப்பிட எங்கு சென்றாலும், அது நரியைத் தன் முதுகில் சுமந்து செல்லும்.

அதைப் பார்த்த கதைப்பாட்டி சொன்னாள்:

 

" கல்யாணி வேண்டாம்.. அது ஒரு குள்ளநரி, அது ஏமாற்றிவிடும்..."

 

கல்யாணப் பசுவின் காதில் குள்ளநரி சொன்னது.

 

" கதைப்பாட்டிக்கு வயதாகி விட்டதல்லவா.. அதனால் அதையும் இதையும் சொல்லும்..”

 

கல்யாணிப்பசுவும் அப்படி நினைத்தாள், ஒருவேளை நீலகண்டன் நரி சொல்வது சரியாக இருக்கலாம். குள்ளநரி ஒரு சாது என்று நினைத்தாள்.

 

அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். கல்யாணிப்பசு புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. குள்ளநரி ஒரு காட்டுக் கோழியைக் கொன்று சாப்பிட்டது. நரிக்கு வயிறு நிரம்பி விட்டது.. உடனே குள்ளநரி திரும்பிப் போகலாம் என்று ரகளை செய்தது.. புல் சாப்பிட்டுக் கொண்டிருந்த் கல்யாணிக்கு பாதி வயிறு கூட நிரம்பவில்லை.. நரிக்கு கோபம் வந்தது.

 

இந்தப் பசுவின் அகங்காரத்தை இன்றுடன் முடிவுக்குக் செய்ய வேண்டும்..

     

குள்ளநரி சொன்னது.

 

" எனக்கு சாப்பிட்ட பிறகு ஊளையிடணும்..."

     

கல்யாணிப்பசு பயந்து விட்டது.-

     

"ஐயோ, வேண்டாம், குள்ளநரி,"

     

கல்யாணிப்பசு பணிவுடன் கெஞ்சினாள் –

     

" ஊளையிட்டால், சிங்கம் வரும், இல்லையா? ஒரே அடியில் என்னைக் கொன்று உடனே சாப்பிட்டு விடுமே?"

     

குள்ளநரி, அதைக் கேட்காதது போல நடித்தது. பிறகு பெரும் ஊளையிட்டது.. உடனே, காடதிர சிங்கத்தின் கர்ஜனை கேட்டது., நரியைத் தூக்கிக்கொண்டு பசு, ஆற்றில் நீந்தத் தொடங்கியது. இருப்பினும், நரி செய்த சதியை நினைத்து கல்யாணிப்பசுவுக்குக் கோபம் வந்தது.

    ஆற்றின் முக்கால்வாசி தூரம் நீந்திச் சென்றதும், பசு,

 

 "எனக்குக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது, உன் உடல் முழுவதும் காட்டுக் கோழியின் நாற்றம் வீசுகிறது"   என்றது.

 

நரி பயத்தில் கத்தியது.

 

 " ஐயோ, பசுத்தாயே, நான் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனே..”

     

கல்யாணிப்பசு அதைக் கேட்காதது போல, வசதியாக ஆற்றில் முங்கி எழுந்தது. நரி ஆற்றில் விழுந்து நிறைய தண்ணீரைக் குடித்தது. கடைசியில், கதைப்பாட்டி  சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சேர்ந்து வீசிய கயிற்றைக் கடித்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தது.

     

கரைக்கு ஏறிய நரிக்கு கதைப்பாட்டி கம்பினால் ஒரு அடி கொடுத்தார்.  பூனைக்குட்டி அதன் வாலைக் கடித்தது. நரி காட்டுக்குள் ஒரே ஓட்டம் ஓடியது. அதைப் பார்த்து, மெஹெர்பா கோழி

     " கொக்கொ கொக்கொ கொக்கொ” என்று பாடி ஆடியது.

நன்றி - புக் டே

 

 

❌