டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள் - பொன். மகாலிங்கம்
டுடன்காமுன் கல்லறைச் சுவரைத் துளையிட்டுப் பார்த்த முதல் காட்சியில், பசுவின் தலையைப் போன்ற தோற்றத்தோடு கூடிய, உயரமான ஈமச்சடங்குப் படுக்கையும், ஏராளமான பெட்டிகளும் சின்னச் சின்ன நாற்காலிகளும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்ட பெட்டிகளும் தெரிந்தன கார்ட்டருக்கு. டுடன்காமுன் கல்லறையின் இரண்டாவது நுழைவாயில் தடுப்புச் சுவர் முழுமையாக உடைக்கப்பட்டது 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகம், இந்தத் தேதி நவம்பர் 29 என்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். இரண்டாவது தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே போனதும், கட்டுக்கடங்காத ஆர்வத்தில் எதையும் எடுத்துப் பார்த்து இடம் மாற்றிவிடவில்லை கார்ட்டர். முதலில், கல்லறைக்கு உள்ளே மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொன்றாகப் படம் எடுத்துப் பதிவு செய்தார்.
![]() |
டுடன்காமுன் சிலையுடன் கட்டுரையாசிரியர் |
ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கமிட்டு அந்த எண்ணோடு சேர்த்துப் படங்களைப் பதிவு செய்தார். எந்தப் பொருள், எந்தத் திசையில், என்ன நிலையில் இருந்தது என்பது, கார்ட்டருக்கு மிகவும் முக்கியம். அது, பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். கல்லறையில் இருந்த பெரிய பொருள்கள் அனைத்திலுமே டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். பெரும்பாலான சிறிய பொருள்களிலும்கூட பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.